சனி, பிப்ரவரி 04, 2023

நெஞ்சை அள்ளும் இலக்கியத் துளிகள் - புதுக்கவிதை

 கவிஞர்கள்

பாரதியார்

1.    செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்

தேன்வந்து பாயுது காதினிலே – எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே                                                 நாடு

2.    என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்

என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்                     நாடு

3.    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவது எங்கும் காணோம்

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே                                  மொழி

4.    மாதர் தம்மை இழிவு செய்யும்

மடமையைக் கொளுத்துவோம்                                          பெண்மை

5.    ஏழை என்றும் அடிமை என்றும்

எவருமில்லை ஜாதியில்

இழிவு கொண்ட மனிதரென்பார்

இந்தியாவில் இல்லையே                                        சாதி மறுப்பு

6.    ஆயிரமுண்டிங்கு சாதி – எனில்

அன்னியர் வந்து புகலென்ன நீதி – ஓர்

தாயின் வயிற்றில் பிறந்தோர் – தம்முட்

சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ.

7.    தனியொருவனுக்கு உணவில்லையெனில்

ஜெகத்தினை அழித்திடுவோம்                               பொதுவுடமை

8.    பாதகம் செய்பவரைக் கண்டால் – நாம்

பயங்கொள்ளல் ஆகாது பாப்பா

மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்

முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா.                           வீரம்

9.    காதல், காதல், காதல்,

காதல் போயிற், காதல் போயிற்

சாதல், சாதல், சாதல்

10. காக்கை குருவி எங்கள் சாதி – நீள்

கடலும் மலையும் எங்கள் கூட்டம்

நோக்குந் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை

நோக்க நோக்கக் களியாட்டம்                                           இயற்கை

11. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே                      ஒற்றுமை

12. உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

13. பள்ளித் தளமனைத்தும் கோயில் செய்குவோம்

14. எல்லாரும் ஓர் குலம், எல்லாரும் ஓர் இனம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர்.

15. உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்

வாக்கினிலே ஒளியுண்டாகும்

16. மனதிலுறுதி வேண்டும் வாக்கினிலே

இனிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும்

17. சிந்து நதியின் மிசை நிலவினிலே

சேர நன்னாட்டிளம் பெண்களுடனே

சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்தே

தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்.

18. தேடிச் சோறுநிதம் தின்று – பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்

வாடித் துன்பம் மிக உழன்று – பிறர்

வாடப் பல செயல்கள் செய்து – நரை

கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்

கூற்றுக்கு இரையெனப் பின்மாயும் – பல

வேடிக்கை மனிதரைப் போல – நானும்

வீழ்வேன் என்று நினைத்தாயோ!

பாரதிதாசன்

1.    எங்கெங்கு காணினும் சக்தியட – தம்பி

ஏழுகடல் அவள் வண்ணமடா                                                         பக்தி

2.    பிறவியில் உயர்வும் தாழ்வும் சொல்லல் மடமை

இந்தப் பிழை நீங்குவதே உயிர் உள்ளாரின் கடமை                   சாதி மறுப்பு

3.    வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்

மணவாளன் இறந்தால் பின் மணத்தல் தீதோ?                                       மறுமணம்

4.    அருவிகள், வயிரத் தொங்கல், அடர்கொடி, பச்சைப் பட்டே

குருவிகள், தங்கக் கட்டி, குளிர்மலர், மணியின் குப்பை!                         இயற்கை

5.    காதல் இருவர்களும் – தம்

கருத்தொருமித்த பின்

வாதுகள் வம்புகள் ஏன்? இதில்

மற்றவர்க்கு என்ன உண்டு?                                                           காதல், சாதி மறுப்பு

6.    கல்வியில்லாத பெண்கள் களர்நிலம், அந்நிலத்தில்

புல்விளைந்திடலாம்! நல்ல புதல்வர்கள் விளைதல் இல்லை.

கல்வியை உடைய பெண்கள் திருத்திய கழனி, அங்கே

நல்லறிவுடைய மக்கள் விளைவது நவிலவோ நான்.                               பெண் கல்வி

7.    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு                                              மொழி

8.    சாவில் தமிழ் படித்துச் சாக வேண்டும்

என்றன் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும்.                                    மொழி

9.    கிளையினில் பாம்பு தொங்க விழுதென்று குரங்குதொட்டு

விளக்கினைத் தொட்ட பிள்ளை வெடுக்கெனக் குதித்ததைப் போல்

கிளைதோறும் குதித்துத் தாவிக் கீழுள்ள விழுதையெல்லாம்

ஒளிப்பாம்பாய் எண்ணி உச்சிபோய்த் தன்வால் பார்க்கும்                    நகைச்சுவை

10. நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்

11. ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால்

ஓர் நொடிக்குள் ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி

ஒப்பப்பரகி விடுவார் உணரப்பா நீ                                               பொதுவுடமை

12. தமிழுக்கு அமுதென்று பேர் – இன்பத்

தமிழெங்கள் உயிருக்கு நேர்                                                           மொழி

13. தன்னைப் பழித்தவனைத் தாய் தடுத்தால் விட்டுவிடு

தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாதே.                            மொழி

14. கூடத்திலே மனப் பாடத்திலே – விழி

கூடிக் கிடந்திடும் ஆணழகை

ஓடைக் குளிர்மலர்ப் பார்வையினால் – அவள்

உண்ணத் தலைப்படும் நேரத்திலே

பாடம் படித்து நிமிர்ந்த விழி தனில்

பட்டுத் தெறித்து மானின்விழி

ஆடை திருத்தி நின்றாள் அவள்தான் – இவன்

ஆயிரம் ஏடு திருப்புகின்றான்.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

1.    உள்ளத்து உள்ளது கவிதை – இன்ப

உருவெடுப்பது கவிதை

தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை

தெரிந்துரைப்பது கவிதை!

2.    ஓடும் உதிரத்தில் – வடிந்து

ஒழுகும் கண்ணீரில்

தேடிப் பார்த்தாலும் – சாதி

தெரிவதுண்டோ அப்பா?

எவர் உடம்பினிலும் – சிவப்பே

இரத்த நிறமப்பா

எவர் விழி நீர்க்கும் – உவர்ப்பே

இயற்கைக் குணமப்பா!

பிறப்பினால் எவர்க்கும் – உலகில்

பெருமை வாராதப்பா

சிறப்பு வேண்டுமெனில் – நல்ல

செய்கை வேண்டுமப்பா.                                                     சாதி மறுப்பு

3.    மங்கையராகப் பிறப்பதற்கே – நல்ல

மாதவம் செய்திட வேண்டுமம்மா                                      பெண்மை

4.    தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு – அங்கே

துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி.

5.    ஊக்கம் உடையவர்க்குத் – துன்பம்

உலகில் இல்லை அம்மா

ஆக்கம் பெருகும் அம்மா – இதை நீ

அறிய வேண்டும் அம்மா!

நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை

1.    கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது

சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்                       காந்தியம்

2.    தமிழன் என்றொரு இனமுண்டு

தனியே அவர்க்கொரு குணமுண்டு

அமிழ்தம் அவனது மொழியாகும் – அன்பே

அவனது வழியாகும்.                                                                        தமிழர்

3.    தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா

4.    வீட்டை மறந்தவன் சண்டாளன்

வேசியருக்கு அலைபவன் சண்டாளன்

நாட்டைக் காட்டிக் கொடுத்ததனால்

லாபம் அடைந்தவன் சண்டாளன்

5.    காந்திவழி உலகமெல்லாம் போற்ற வேண்டும்

சத்தியத்தை அரியணையில் ஏற்ற வேண்டும்

மாந்தருக்குள் போர்வெறிகள் மறைய வேண்டும்

மக்களிடம் அன்பறங்கள் நிறைய வேண்டும்.

6.    மான் என அவளைச் சொன்னால்

மருளுதல் அவளுக்கு இல்லை

மீன் விழி உடையாள் என்றால்

மீனிலே கருமை இல்லை

தேன் மொழிக்கு உவமை சொன்னால்

தெவிட்டுதல் தேனுக்கு உண்டு

கூன்பிறை நெற்றி என்றால்

குறைமுகம் இருண்டு போகும்.

கொத்தமங்கலம் சுப்பு

1.    பெரிய மனுஷன் புளுகினாக்க, பேப்பரிலே போடுறான்

சின்ன மனுஷன் புளுகினாக்க, செயிலுக்குள்ள போடுறான்

கன்னக் கோலு களவடிச்சா கட்டிவச்சு வாங்குறான்

கள்ளச் சந்தைக் காரங்கிட்ட, கையால் பிச்சை வாங்கிறான்.

வாணிதாசன்

1.    இடுவெயில் போல் உழைக்கும்

சேரிவாழ் ஏழை மக்கள்

கொடுவெயில் குளிர்மழைக்குக்

குந்திடக் குடிசை உண்டோ?

2.    உப்பிய வயிற்றைத் தூக்கி ஒரு பையன் ஓடிவந்தான்

சப்பிய மாங்கொட்டையோ! தலையோ! என்று ஐயம் கொண்டேன்.

3.    மக்கட்கே வானை என்றும்

மடக்கி நீ அனுப்பி வைத்தாய்!

மக்கட்கே ஓடை ஆறு

வற்றாத அருவி தந்தாய்

இக்காலத் தமிழர் பண்டை

இயல்பின மறந்தார் என்று

துக்கத்தால், மலையே ஒன்றும்

சொல்லாமல் இருக்கின்றாயோ!

4.    பிறப்பினிலே தாழ்ந்த உயிர் உயர்ந்த உயிர் இல்லை

பின்வந்த சரக்கிதுவாம்! அறிவற்று ஏற்றோம்!

பிறப்பினிலே வறுமை வந்தே உடன் தொடர்ந்ததில்லை

பின்வந்த சரக்கிதுவாம்! திருடர்களின் செய்கை

பிறப்பினிலே உயிரினங்கள் யாவையுமே ஒன்றாம்

பேச்சில்லை வறுமைக்கே கொடுவாளைத் தூக்கே!

5.    பாரதிதாசன் பெயரை உரைத்திடப்

பாட்டு பிறக்குமடா!

முடியரசன்

1.    வையம் பெற்றது தமிழ் மொழியாம் – அதன்

வழிவழி வந்தன பிறமொழியாம்

ஐயம் இல்லை உண்மையிதாம் – கண்ணே

அருமைத் தமிழே நமதுயிராம்.

2.    இடுக்கண் வருங்கால் சிரித்திடுவாய் – மன

இழுக்கெனும் மாசுகள் துடைத்திடுவாய்

வடுக்கள் நீங்கிட வாழ்ந்திடலாம் – என

வள்ளுவன் சொன்னதைப் பாடிடுவாய்.

கம்பதாசன்

1.    கண் இளைப்பாறிடத் தூக்கமுண்டு – அற்பக்

கழுதை இளைப்பாறத் துறையுமுண்டு

பண் இளைப்பாறிடத் துறையுமுண்டு

பசி இளைப்பாறிட எங்கே இடம்?

கதிரிளைப்பாறிட இரவுமுண்டு – எங்கள்

கவலை இளைப்பாறிட உண்டோ இடம்.

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

1.    ஏரெப் பிடிச்சவனும்

இங்கிலீசு படிச்சவனும்

ஏழை பணக்காரன் இப்ப

ஒண்ணுங்க – நாம்

எல்லோரும் சமத்துவமென்று

எண்ணுங்க

2.    மாடா ஒழைச்சவன் வாழ்க்கையிலே – பசி

வந்திடக் காரணம் என்ன மச்சான்?

தேடிய செல்வங்கள் வேறே இடத்திலே

சேர்வதினால் வரும் தொல்லையடி

வசதி இருக்குறவன் தரமாட்டான் – அவனை

வயிறு பசிக்கிறவன் விடமாட்டான்!

3.    சும்மா கெடந்த நிலத்தைக் கொத்தி

சோம்பல் இல்லாம ஏர் நடத்தி

கம்மாக் கரையை ஒசத்திக் கட்டிக்

கரும்புக்கொல்லையில் வாய்கால் வெட்டிச்

சம்பாப் பயிரைப்பறிச்சி நட்டுத்

தகுந்த முறையில் தண்ணீர் விட்டு

நெல்லு வெளைஞ்சிருக்கு.

4.    காடு வெளைஞ் சென்ன மச்சான் – நமக்குக்

கையும் காலுந் தானே மிச்சம்.

கண்ணதாசன்

1.    போற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரித்

தூற்றுபவர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்

ஏற்றதொரு கருத்தை எனது உள்ளம் என்றால்

எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன்! அஞ்சேன்!

2.    வீடுவரை உறவு, வீதிவரை மனைவி

காடுவரை பிள்ளை, கடைசிவரை யாரோ?

3.    எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும்

இல்லையெனில் இந்நாடு அழிய வேண்டும்

வல்லவனை வாழ்விக்க வந்தோமில்லை

வளமான சுதந்திரத்தை தந்தோமில்லை.

4.    போனால் போகட்டும் போடா

இந்தப் பூமியில்

நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?

5.    மழைகூட ஒரு நாளில் தேனாகலாம்

மணல் கூட ஒரு நாளில் பொன்னாகலாம்

ஆனாலும் அவையாவும் நீயாகுமா?

அம்மா என்றழைக்கின்ற சேயாகுமா?

6.    பூஜ்ஜியத்திற்குள்ளே ஒரு

ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு

புரியாமல் இருப்பவன் இறைவன் அவனைப்

புரிந்து கொண்டால் அவந்தான் இறைவன்

அப்துல் ரஹ்மான்

1.    வரங்களே

சாபங்கள்

ஆகுமென்றால்

இங்கே தவங்கள்

எதற்காக?

சுரதா

1.    தலையில் நீ வந்து வீழ்ந்தால்

சண்டையாம், தோளில் வீழ்ந்தால்

நலம்பல பெருகும் என்பர்

நான் இதை நம்பவில்லை

இலர்பலர் இந்த நாட்டில்

எண்ணற்றோர் எனவே அன்னார்

வலப்புறத் தோளில் வீழ்ந்தே

வாழச் செய் எங்கே பார்ப்போம்!

மீரா

1.    அவனது முகவாசலில்

முதுமைச் சிறுக்கி

புள்ளி வைக்கிறாள்

கோலம் போட!

கொ.ச. பலராமன்

1.    சாமியை

கும்பிடும்

மாமிக்கு

சங்கிலியில்

கவனம்

2.    பூக்காரி

பூக்குமுன்

பொட்டிழந்தாள்

பொலிவிழந்தாள்

பூவும் இழந்தாள்

இரா. வைரமுத்து

1.    மரபுக் கவிதைகள்

மண்ணில் இருந்தாலும்

விண்ணையே பார்த்துக் கொண்டிருக்கும்

மலர் வர்க்கங்கள்!

புதுக் கவிதையோ

விண்ணிலிருந்தாலும்

மண்ணையே பார்த்துக் கொண்டிருக்கும்

சூரிய சந்திரர்கள்

புதுக்கவிதை

மு. மேத்தா

1.    இலக்கணச் செங்கோல்

யாப்புச் சிம்மாசனம்

எதுகைப் பல்லக்கு

மோனைத் தேர்கள்

தனிமொழிச் சேனை

பண்டித பவனி

இவை எதுவும் இல்லாத

கருத்துக்கள் தம்மைத் தாமே ஆளக்

கற்றுக் கொண்ட புதிய மக்களாட்சி முறையே

புதுக் கவிதை!

2.    விழிகள் நட்சத்திரங்களை வருடினாலும்

விரல்கள் என்னவோ

ஜன்னல் கம்பிகளோடுதான்

 

கலாப்பிரியா

1.    அழகாயில்லாததால்

அவள் என் தங்கையாகிவிட்டாள்

2.    அவனைப் பள்ளியில் சேர்க்குமட்டும்

ஓயாமல் கேள்வி கேட்பான்

பதில்தர நான் தவிப்பேன்

அவனைப் பள்ளியில் சேர்த்த பின்னால்

ஓய்ந்தால் கேள்வி கேட்கிறேன்

பதில்தர அவன் தவிக்கிறான்.

3.    கி

யு

வி

லே

ஒரே கூட்டம்

4.    இராமன்

கல்லைத் தொட்டான்

அகல்யை வந்தாள்

வில்லைத் தொட்டான்

ஜானகி வந்தாள்

ஜானகியைத் தொட்டு

லவகுசர் வந்தார்

அவள் கற்பையே தொட்டார்

நெருப்பு வந்தது.

காமராசன்

1.    நாங்கள் நிர்வாணத்தை விற்பனை செய்கிறோம்

ஆடை வாங்குவதற்காக

நாங்கள் மன்மத அச்சகத்தின் மலிவுப் பதிப்புகள்