ஜெயகாந்தன், கே.ஏ. அப்பாஸ் புதினங்கள் ஓர் ஒப்பாய்வு
முன்னுரை
இருவதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பல்வேறு
வகையில் சிறுகதை, புதினம், புதுக்கவிதை என நவீன இலக்கியம் வளர்ச்சிபெறத் துவங்கியது.
இக்காலகட்டத்தில் புதின எழுத்தாளர்கள் பலரும் பல்வேறு கருத்தியல்களை முன்வைத்து உருவாக்கம்
பெற்றனர். இவர்களுள் முக்கியமானவராகக் கருதப்படக்கூடிய புதின ஆசிரியர் ஜெயகாந்தன் ஆவார்.
இவர் 1934இல் தமிழகத்தில் உள்ள கடலூர் எனும் ஊரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்
ஆவார். குழந்தைப் பருவத்தில் இவருடைய குடும்பம் மிகவும் வறுமையுற்றிருந்தது. இச்சூழலில்
ஜெயகாந்தனுக்குக் கல்வியின் மீதும் வெறுப்பு ஏற்பட்டதால் ஐந்தாம் வகுப்போடு தனது பள்ளிப்
பயணத்தை நிறுத்திக்கொண்டார். அவரது எதிர்காலத்தைக் குறித்து கவலையுற்ற அவரது தாய்மாமன்
ஜெயகாந்தனை கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் உதவியாளனாகச் சேர்த்து விட்டார். பகுதி நேரப்
பணியாளராக இருந்த ஜெயகாந்தன் நாளடைவில் முழு நேரப் பணியாளராக மாற்றம் பெற்றார்.
1953 இலிருந்து தனது எழுத்துப்
பணிகளைத் துவங்கினார். சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் முதலான இதழ்கள்தோறும்
இவரது கதைகளும் கட்டுரைகளும் தொடர்ந்து வெளிவரத்துவங்கின. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்ப்
புதின வாசகர்களால் பெரும்பான்மையாக வாசிக்கப்பட்டவரும் விமர்சிக்கப்பட்டவரும் ஜெயகாந்தன்
ஆவார். இவர் தனது புதினங்களைத் திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் ஆவார். சமூகத்தில்
நிலவுகின்ற ஏற்றத்தாழ்வுகளும் மூடநம்பிக்கைகளும் சமூகத்தில் காணப்படுகின்ற சாதி, மதத்தின்
பின்னணியில் கலைகளின் வாயிலாகவும் இலக்கியத்தின் வாயிலாகவும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன
என்பதைத் தனது புதினங்களில் விமர்சனம் செய்கின்றார். இலக்கியம் என்பது சமூகத்தில் காணப்படுகின்ற
மனித நடத்தைகளில் உள்ள தவறுகளைச் சுட்டிக் காட்டுவதோடு அதனை மாற்றுவதற்கான விமர்சனப்
பார்வையையும் முன்வைப்பதாக இருக்க வேண்டும். அதனடிப்படையில் ஜெயகாந்தன் தனது புதினப்
படைப்பாக்கத்தில் படைக்கப்பட்டுள்ள பாத்திரப் படைப்புகளைப் பற்றிக் குறிப்பிடுகையில்
‘எனது கதைகளில் வருகிற எல்லாரும் நான்தான். நான் போட்டுக்கொள்கிற வேசங்களே அவை. அவர்கள்
முழுக்க நல்லவர்களுமில்லை. முழுக்கக் கெட்டவர்களுமில்லை. எனது அனுபவங்களும் நான் வாழ்க்கையில்
சந்தித்த நண்பர்கள் பற்றியதாகவே பாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளன என்கிறார்.[1]
ஜெயகாந்தனைப் பற்றிப் பார்க்கின்ற அதே
காலக் கட்டத்தில் உருது இலக்கியத்தில் சிறந்த புதின ஆசிரியராக விளங்கியவர் க்வாஜா அஹமத்
அப்பாஸ் (7 ஜூன் 1914 – 1 ஜூன் 1987) ஆவார். இவர் ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிப்பட்டில்
பிறந்தவர். இவர் புதினம், சிறுகதை, பயண நூல்கள், திரைக்கதை மற்றும் கட்டுரைகள் என பலநிலைகளில்
இலக்கியத்திற்குப் பங்களிப்புச் செய்தவர். அப்பாஸ் அவர்கள் பன்முகத் தன்மை வாய்ந்த
நிலையில் புதின ஆசிரியராக, பத்திரிக்கையாளராக, திரைப்பட விமர்சகராக, மற்றும் திரைப்பட
இயக்குநராக விளங்கியவர் ஆவார். 70க்கும் மேற்பட்ட நூல்களும் 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களும்
இவரது படைப்பக்கங்களாக விளங்குகின்றன. இவர் ‘கடைசிப் பக்கம்’ (Last Page), ‘பிலிட்ஸ்’
(Blitz), ‘ஆசாத் கலம்’ (Azad Qulam) போன்ற பத்திரிக்கைகளில் தொடர்ந்து பணியாற்றி வந்தவர்
ஆவார். பத்திரிக்கையாளராகப் பணியாற்றிய காலங்களில் உலகம் சுற்றி வந்தவர். அதோடு பிரபலங்கள்
பலரையும் பேட்டி கண்டு வெளியிட்டுள்ளார். அப்பாஸின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி எழுதப்பட்டுள்ள
நூலானது ‘நான் ஒரு தனித்தீவல்ல’ (I am not an Island) என்பதாகும். 1969 இல் பத்ம ஸ்ரீ
விருதினைப் பெற்றவர். சோவியத் யூனியன் அப்பாஸின் இலக்கியப் படைப்பிற்கு விருது வழங்கிச்
சிறப்பித்தது. கலிப் இலக்கிய விருதினை உருது அகாதெமி வழங்கிச் சிறப்பித்தது.
அப்பாஸ் தனது படைப்புகள்
குறித்து குறிப்பிடுகையில் “நான் சொல்ல விரும்புவது என்னவென்றால்; மனிதனின் அந்தரங்க
வாழ்வுக்கும், வெளிப்புற சமூக, பொருளாதார வாழ்க்கைக்கும் இடையில் ஓர் ஆழமான பொருள்
நிறைந்த சம்பந்தமும் உறவும் இருக்கிறது. உலகில், அவனது சொந்த நாட்டில், அவனுடைய சமூகத்தில்
நடைபெறும் சம்பவங்களின் பிரதிபலிப்பு அவனுடைய செய்கைகளிலும், நடையிலும் காணப்படுகிறது
– உலகத்தின் – சமூகத்தின் – நாட்டின் பொருளாதார, அரசியல், சமூக அமைப்புகள் எப்படி மாறுகின்றனவோ
அதே வகையில் மனிதனும் மாறுகிறான்.”[2]
என்பதைக் குறிப்பிடுகின்றார். இந்நிலையில்
மேற்குறிப்பிட்ட இரு புதின ஆசிரியர்களும் மொழி, மதம், வாழ்க்கை முறை மற்றும் வாழ்விடம்
எனப் பல நிலைகளில் வேறுபட்டிருந்தாலும் சமூக ஏற்றத்தாழ்வுகளைச் சுட்டிக் காட்டுவதில்
இருவரும் ஒன்றிப்போகின்ற தன்மையினைக் காணமுடிகின்றது. கம்யூனிசம் சார்ந்த சிந்தனைப்போக்கு
கொண்டவர்கள் என்பதும் காங்கிரஸ் கட்சி சார்பாளர்களாக இயங்கியவர்கள் எனும் அடிப்படையில்
படைப்பாக்க நிலையில் ஒன்றுபட்டுக் காணப்படுகின்றனர். சமூகத்தில் நிலவுகின்ற பாலினப்
பாகுபாடுகளை விமர்சிப்பதிலும் பொருளாதாரச் சிக்கல்களை எடுத்துரைப்பதிலும் சமூகத்தை
விமர்சிக்கும் நிலையிலான கருத்துக்களைத் தங்களது புதினங்களின் வழி முன்வைக்கின்றனர்
எனும் நிலையில் பின்வருமாறு இவ்விருவரது புதினங்களும் ஒப்பாய்வு செய்யப்படுகின்றன.
ஜெயகாந்தன், அப்பாஸ் புதினங்களில் ஒப்புமைக் கூறுகள்
ஜெயகாந்தன், அப்பாஸ் ஆகிய
இருவரது புதினங்களிலும் காணப்படுகின்ற ஒப்புமைக் கூறுகளை அமைப்பு அடிப்படையிலும் கருத்து
அடிப்படையிலும் பின்வருமாறு மூன்று நிலைகளில் விளக்கலாம்.
1.
புதின உத்தி முறைகள்
2.
பாலினப் பாகுபாடு
3.
பொருளாதாரச் சிக்கல்
1. புதின உத்தி முறைகள்
அப்பாஸின் புதினங்கள் பெரும்பாலும்
திரைப்பட நோக்கில் எழுதப்பட்டவை என்பதால் அவற்றில் பல இடங்களில் திரைப்பாடல்கள் இடம்பெறுவதும்
காட்சி பிரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ள முறைகளும் காணப்படுகின்றன. ஆனால் ஜெயகாந்தனின்
புதினங்கள் இவற்றிலிருந்து மாறுபட்டு அமைகின்றன. எனெனில் முழு நேர எழுத்தாளராக விளங்கிய
ஜெயகாந்தனது படைப்புகள் யாவும் முதலில் இதழ்களில் தொடர்களாக வெளியிடப்பட்டுப் பின்னர்
புதின வடிவம் பெறலாயின. சில புதினங்கள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. இந்த அடிப்படையில்
மேற்கண்டவாறு ஜெயகாந்தனது புதினங்களும் அப்பாஸின் புதினங்களும் வெவ்வேறு சூழலில் வெவ்வேறு
தேவையக் கருதி எழுதப்பட்டுள்ள தன்மையில் வேறுபட்டிருப்பினும் புதினத்திற்கான உத்தி
முறைகள் பலவற்றில் ஒன்றிப் போகின்ற தன்மையினையும் காணமுடிகின்றது.
2. பாலினப் பாகுபாடு
உ.போ.ஒ. புதினத்தில் ‘தங்கம்’ ‘வெகுநாட்களுக்குப் பிறகு தலைசீவிக்
கொண்டாள்’ என்று துவங்கும் வாக்கியத்தினைத் தொடர்ந்து அவளது வறுமை நிலை விவரிக்கப்படுகின்றது.
இளம் வயதில் ஒருவனால் ஏமாற்றப்பட்டு ‘சிட்டி’க்குத் தாயாகிறாள். மீண்டும் ஜோசியன் மாணிக்கத்தை
நம்பி மறுமுறையும் ஏமாற்றப்படுகிறாள். இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்கையில் இறந்துவிடுகின்றாள்.
ஒ.ந.நா.பா. எனும் புதினத்தில் ‘கல்யாணி’
ஒரு நாடக நடிகை ஆவாள். அவளது வாழ்க்கையே நாடகம் போல் இருப்பதை அவள் பார்க்கிறாள் என்பதைக்
குறிப்பதற்கு ஒ.ந.நா.பா. எனும் தலைப்பினைப் பொறுத்தமுற
அமைத்திருக்கின்றார். கல்யாணி தன் கணவனைவிட அதிகம் வருமாணம் ஈட்டுபவள் என்பதனால் அவளை
விட்டு ‘ரங்கா’ விலகுகிறான். சி.நே.சி.ம. புதினத்தில் ‘கங்கா’ கல்லூரியில் படிக்கின்ற நிலையில் முன்பின் அறியாத ஒருவரால்
(பிரபு) பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தப்பட்டாள் என்பதனால் அவள் சமூகத்திற்குப் புறம்பானவளாகக்
காட்டபப்டுகின்றாள். பலப் போராட்டங்களுக்குப் பிறகு தன்னைக் கலங்கமற்றவள் என்பதை நிறுவுவதற்காகத்
தன்னைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியவனைத் தேடிக் கண்டறிந்து அவனுடன் சேர்ந்து வாழ
நினைக்கின்றாள். அப்பொழுது சமூகம் வேறு ஒருவனைத் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புருத்துகிறது.
இதனைத் தொடர்ந்து எழுதப்பட்ட புதினமான கங்கா
எங்கே போகிறாள்? எனும் புதினத்தில் யாருடனும் சேர்ந்து வாழ முடியாமல் கங்கை நதியில்
மூழ்கி இறந்துவிடுவதாகப் புதினம் எடுத்துரைக்கப்படுகின்றது.
மேற்குறிப்பிட்டவாறு ஜெயகாந்தன் புதினங்களில்
பெண்கள் முதன்மைக் கதைமாந்தராகக் காணப்படுவது போல அப்பாஸின் பெரும்பாலான புதினங்களிலும்
பெண்கள் முதன்மைக் கதைமாந்தராக விளங்குகின்றனர். அத்தகைய பெண்கள் மிகவும் தைரியம் நிறைந்தவர்களாகவும்
சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்காகப் போராடுபவர்களாகவும் விளங்குகின்றனர். ஏ.இ. புதினத்தில் ‘மாரியா’ பிரெஞ்சுப்
படைவீரர்களால் தனது குடும்பத்தினர் அனைவரையும் இழந்துவிடுகின்றாள். அதனைக் கடந்து கோவாவின்
விடுதலைக்காகப் போராடுகின்ற போராளியாகத் தன்னை மாற்றிக் கொள்கிறாள். ஒ.பு.கா.பு. புதினத்தில் ‘ஆஷா தேவி’
தனது குடும்பத்தினர் அனைவரையும் இழந்து தம்பி ஒருவனுக்காக வாழ்ந்து வருகிறாள். இந்தச்
சூழலில் தனது தம்பியை விபத்திற்குள்ளாக்கியவனான ‘கௌதம் சந்திரா’ என்பதவனின் செல்வந்தர்கள்
எனும் ஆனவத்தை ஒழித்து, மேலும் அவனது சொத்துக்களை கைப்பற்ற நினைக்கும் உறவினர்களிடமிருந்து
காப்பாற்றி கௌதம் சந்திராவையும் சமூக அக்கறை கொண்டவனாக மாற்றுகிறாள். நக்ஸலைட்டுகள் புதினத்தில் ‘கமலாசென்’, ‘அஜிதா’ போன்ற பெண்கள் தங்களுடைய நலனை விடுத்து நாட்டைச்
சோசியலிச நாடாக மாற்றுகின்ற நக்ஸலைட் இயக்கத்தில் இணைந்து போராடி வருகின்றனர். ஆண்களுக்கு
நிகராகப் பெண்களும் போராடும் குணம் உடையவர்கள் என்பதற்குச் சான்றாக விளங்குகின்றனர்.
நா.ந. எனும் புதினத்தில் இரண்டுவிதமான முரண்பட்ட நிலையில் உள்ள பெண்கள் வாழ்க்கை சித்தரிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் விஜயநகர மாநகரத்தின் இராணி ‘பூல்மதி’ மற்றொருவர் சமூகத்தால் கைவிடப்பட்ட பெண்ணான
‘சோணு’ ஆவர். இ.து.நீ. புதினத்தில் ‘கௌரி’ மற்றும் ‘சோணகி’ ஆகியோரது போராட்டம் நிரைந்த
வாழ்க்கை விளக்கப்படுகின்றது. தண்ணீர் பஞ்சத்தின் வறுமையினால் பாரதிய கிராமத்திற்குத்
தண்ணீர் கொண்டுவர வேண்டி கௌரியின் கணவன் கால்வாய் வெட்டும் பணிக்காக வெளியூர் சென்றுள்ளான்.
அவன் வறுகைக்காக தனிமையில் காத்திருக்கின்றாள் ‘கௌரி’. க.சு. புதினத்தில் ‘மம்முதா’வின் காதலன் ‘சலீம்’ இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை காரணமாகப்
பாகிஸ்தான் செல்கிறான். மம்முதாவையும் பாகிஸ்தான் வந்துவிடும்படியும் அங்கு சேர்ந்து
வாழலாம் எனவும் கூறுகிறான். நாட்டுப்பற்றின் காரணமாக மம்முதா காதலைத் தியாகம் செய்கிறாள்.
இந்தியாவிலேயே தங்குகிறாள். மேற்காணுகின்ற நிலையினில் ஜெயகாந்தன் மற்றும் அப்பாஸ் புதினங்களில்
பெண்கள் முதன்மைக் கதைமாந்தர்களாக ஒவ்வொரு நிலைகளிலும் பல்வேறு விதமான போராட்டங்களோடு
வாழ்ந்து வருகின்றனர் என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது.
3. பொருளாதாரச் சிக்கல்
சமூகத்தில் காணப்படுகின்ற பொருளாதார ஏற்றத்
தாழ்வுகளை விவரிக்கும் விதமாக ஜெயகாந்தன் மற்றும் அப்பாஸின் புதினங்கள் விளக்கப்பட்டிருக்கின்றன.
உ.போ.ஒ. புதினத்தில் ‘தங்கம்’ முன்பின்
அறியாத ஒருவனால் ஏமாற்றப்படுகின்றாள். அதனைத் தொடர்ந்து ‘சிட்டி’ எனும் ஆண் பிள்ளையைப்
பெற்று கூலி வேலை செய்து வறுமையில் வாழ்ந்து வருகின்றாள். இன்னொரு திருமணம் செய்து
கொள்ள வழியின்றி வாழ்ந்து வருகையில் மீண்டும் ஒருவனை நம்பி ஏமாற்றப்பட்டு பெண் குழந்தையைப்
பெற்றெடுக்கின்றாள். சிட்டியைப் போல அக்குழந்தையும் அநாதையாகின்றது. ஒ.ந.நா.பா. புதினத்தில் ‘கல்யாணி’ தன்
கணவன் ‘ரங்கா’வைவிட அதிக வருமாணம் பெறுவதை எதிர்க்கும் ‘ரங்கா’ அவளது நடத்தையைச் சந்தேகித்து
அவளை விட்டுப் பிரிகிறான். வா.அ.
புதினத்தில்
‘காமாட்சி’ இளம் வயதிலேயே விதவையாகிவிட்டதால் மீண்டும் திருமணம் செய்து கொள்ள இயலாத
நிலையில் வருமாணத்திற்காகப் பாலியல் தொழிலை மேற்கொள்கிறாள். ஜ.ச. புதினத்தில் வறுமையின்
காரணமாகத் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பலரும் மதம் மாறுவதும் ஆதிக்கச் சாதிகளின் அடக்குமுறைகளும்
குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. பா.போ. ‘சேசைய்யர்’ அவரது குடும்ப உறவினர்கள் அனைவரும்
ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்தநிலை மாறி, பணத்தேவையின் காரணமாக ஒவ்வொருவரும் தனக்கான தனிமை
வாழ்க்கையை வாழத் தலைப்படுகின்றனர்.
அப்பாஸ் புதினங்களை ஜெயகாந்தன் புதினங்களோடு
ஒப்பிடுகையில் இருவரது புதினங்களும் சமூகத்தில் நிலவுகின்ற பொருளாதார ஏற்றத்தாழ்வினை
வெளிப்படுத்துவதாக அமையப்பெற்றுள்ளது. அப்பாஸ் புதினங்களில் காணப்படுகின்ற பொருளாதார
அடிப்படையிலான சமத்துவச் சமூகம் குறித்துப் பல்வேறு நிலைகளில் விளக்கப்பட்டுள்ளது.
ஒ.பு.கா.பு. புதினத்தில் ‘ஆஷா’ கௌதமினுடைய
பணக்கார ஆணவத்தை மாற்றுகிறாள். மேலும் முதலாளிகள் – தொழிலாளிகளுக்கிடையான சிக்கல்கள்
குறித்தும் புதினம் விளக்குகின்றது. நக்ஸலைட்டுகள் புதினத்தில் செல்வம், பதவி,
அனைத்தையும் இழந்து போராளிகள் யாவரும் சமூகப் பொருளாதார சமத்துவத்திற்காகப் போராடுபவர்களாகச்
சித்தரிக்கப்பட்டுள்ளனர். நா.ந. புதினத்தில் பொருளாதார சமத்துவத்திற்கான
சில வரையறைகளை வகுத்துக் கொண்டு வாழும் நண்பர்கள் குறித்து அப்பாஸ் விளக்குகின்றார்.
ஆடைகளில் சமத்துவம், அனைவரின் வறுமாணத்தையும் பொதுவாகக் கருதுதல், கண்டிப்பாக அனைவரும்
வேலைக்குச் செல்லுதல் போன்ற கொள்கைகளைக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இ.து.நீ. புதினத்தில் தண்ணீர் பஞ்சத்தின் காரனமாக வறட்சியில் வாடுகின்ற பாரதிய
கிராமத்தின் நிலை குறித்தும் அங்கு நீர்வளத்தைப் பெருக்குவதற்குப் போராடுகின்ற ‘கங்காசிங்’,
‘கௌரி’ போன்றோர்களின் போராட்டம் நிறைந்த வாழ்க்கை விளக்கப்பட்டுள்ளது. பாபி புதினத்தில் ‘ராஜா’ செல்வந்த வீட்டுப்
பிள்ளையாக வளர்கிறான். ஏழைப் பெண்ணான பாபியை விரும்புகிறான். இதனை ராஜாவின் பெற்றோர்
ஏற்க மறுக்கின்றனர். இங்கு பொருளாதார ஏற்றத்தாழ்வு மிக முக்கியக் காரணமாக விளங்குகின்றது.
மூ.ச. புதினத்தில் ‘பிக்கு’ குப்பைகளைச்
சேகரித்து வாழ்ந்து வருபவன். அவன் சேகரித்து வருகின்ற ஒவ்வொரு பொருளுக்குமான பின்னணி
புதினத்தில் விளக்கப்படுகின்றது. மும்பை நகரத்தில் பிக்குவைச் சுரண்டி வாழ்கின்ற சேட்டுவைப்
போல் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரைச் சுரண்டி வாழ்கின்ற நிலைகுறித்து விளக்கப்பட்டுள்ளது.
இ.ஒ. புதினத்தில் திரைத்துறை சார்ந்து
காணப்படுகின்ற பொருளாதார ஏற்றத்தாழ்வு வாழ்க்கை, தொழிலாளர்கள் மீதான உழைப்புச் சுரண்டல்
முதலானவை குறித்து அறிய முடிகின்றது.
ஆய்வுப் பொருண்மை
ஒவ்வொரு புதின ஆசிரியர்களுக்கும்
கதை கூறுகின்ற முறைகளிலும் புதினத்தில் பின்பற்றப்படுகின்ற உத்திகளிலும் வேறுபாடு காணப்படுகின்றது.
அதனடிப்படையில் ஜெயகாந்தனும் அப்பாஸும் தமிழ் மற்றும் இந்தி/உருது இலக்கியத்தளத்தில்
தங்களுக்கென புதின உத்திமுறைகளின் வழி புகழ்பெற்றனர் என்பதன் அடிப்படையில் இவ்விருவரது
புதினங்களில் காணப்படுகின்ற உத்திமுறைகள் குறித்து ஒப்பிட்டு அறிவது அவசியமாகின்றது.
பாலினம் சார்ந்த பழமையான கருத்துக்களை
விமர்சனம் செய்யும் ஜெயகாந்தனும் அப்பாஸும் பெண்களுக்கான புதிய சிந்தனைகளைப் பாலினச்
சமத்துவத்தின் அடிப்படையில் விளக்க முற்படுகின்றனர். பெண்கல்வி, வேலை, பெண்களுக்கான
சமூக முன்னேற்றம் போன்றவைகளை வலியுறுத்துகின்றனர். மேலும் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட
பெண்கள் பாலியல் தொழிலாளியாகின்ற நிலையினை எதிர்த்துக் குரல் கொடுக்கின்றனர். மேலும்
சமூகத்தில் காணப்படுகின்ற பொருளாதார ஏற்றத்தாழ்வினால் ஏற்படுகின்ற வறுமை, வேலை வாய்ப்பின்மை,
சாதி, மத பேதங்கள் போன்றவைகளையும் விமர்சிக்கின்றனர். இதனடிப்படையில் ஜெயகாந்தன் மற்றும்
அப்பாஸ் ஆகிய இருவரது புதினங்களில் பாலின அடிப்படையிலும் பொருளாதார அடிப்படையிலும்
காணப்படுகின்ற சமூக ஏற்றத்தாழ்வுகள் குறித்து அறிவது அவசியமாகின்றது.
ஆய்வு நோக்கம்
Ø
ஜெயகாந்தன், அப்பாஸ் ஆகிய இருவரும் தனது புதினங்களில் பெண்கதைமாந்தர்களை முதன்மைக்
கதைமாந்தர்களாகப் படைத்துக் காட்டுவதோடு பெண்களின் மூலமான சமூக மாற்றத்தை முன்வைக்கின்றனர்.
அதோடு ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகின்றனர் என்பதை விளக்குகின்ற
விதமாகப் பாலின ரீதியாகப் பார்க்கப்படுகின்ற பாகுபாடு குறித்து இருவரது புதினங்களும்
விளக்குகின்றன. இதனடிப்படையில் இருவரது புதினங்களிலும் காணப்படுகின்ற பெண்கதைமாந்தர்கள்
குறித்து விளக்கப்படுகின்ற பாலினப் பாகுபாடு பற்றி அறிவது இவ்வாய்வின் நோக்கமாக அமைகின்றது.
Ø
உலகமயமாதல் சூழலில் நிலவுடமைச் சமூகம் மாற்றப்பட்டு பணவுடமைச் சமூகம் தோற்றம்
பெற்றது. இத்தகைய பணவுடமைச் சமூகத்தில் காணப்படுகின்ற சமூக ஏற்றத்தாழ்வுகளை ஜெயகாந்தனும்
அப்பாஸும் தங்களது புதினங்களில் வெளிப்படுத்துகின்றனர். இருவரும் கம்யூனிஸக் கருத்தியலையும்
ஏற்றுக் கொண்டவர்கள் என்பதோடு காங்கிரஸ் கட்சி சார்ந்தும் இயங்கி வந்தவர்கள் என்பதை
அறிய முடிகின்றது. இதனடிப்படையில் சமூகத்தில் காணப்படுகின்ற பொருளாதார ஏற்றத்தாழ்வினையும்
சுரண்டல் நிலையினையும் குறித்து விளக்குவது இவ்வாய்வின் நோக்கமாக அமைக்கப்படுகின்றது.
ஆய்வு வினாக்கள்
1.
ஜெயகாந்தனும் அப்பாஸும் தங்களது புதினங்களின் வழி பெண்களை எவ்வாறு முன்னிறுத்துகின்றனர்?
2.
சமூகத்தில் நிலவுகின்ற பொருளாதார ஏற்றத் தாழ்வு நிலை குறித்து தங்களது புதினங்களில்
எவ்வாறு விளக்குகின்றனர்?
3.
அப்பாஸ் புதினங்கள் ஜெயகாந்தன் புதினப் படைப்பாக்கத்தில் எத்தகையத் தாக்கத்தினை
ஏற்படுத்தியுள்ளன?
கருதுகோள்
1.
ஜெயகாந்தன் மற்றும் அப்பாஸ் புதினங்களை ஒப்பிட்டுப் பார்க்கின்ற நிலையில் இருவரது
புதினங்களிலும் பெண்கள் முதன்மைக் கதைமாந்தர்களாகக் காணப்படுகின்றனர் என்பதை அறிய முடிகின்றது.
இதில் ஜெயகாந்தனது புதினங்களில் காணப்படுகின்ற பெண்கள் தங்களது வாழ்க்கையில் ஏற்படுகின்ற
சிக்கல்களை எதிர்த்துச் சுயம்சார்ந்து போராடுபவர்களாகவும் அப்பாஸ் புதினங்களில் காணப்படுகின்ற
பெண்கள் பெரும்பான்மையோர் சமூகப் பிரச்சினைகளுக்காகப் போராடுபவர்களாகவும் விளங்குகின்றனர்.
2.
ஜெயகாந்தன் தனது புதினங்களில் பொருளாதார ஏற்றத்தாழ்வினால் ஏற்படுகின்ற சமூக
மாற்றங்களை நேரடியாகப் பொருளாதார மாற்றங்களாக எடுத்துரைக்காமல் விழுமியங்களில் ஏற்படுகின்ற
மாற்றங்களை இணைத்துக் கூறியுள்ளார். ஆனால் அப்பாஸ் நேரடியான வகையில் பொருளாதார ஏற்றத்
தாழ்வினை விமர்சிக்கும் வகையில் புதினங்களைப் படைத்துக் காட்டியுள்ளார்.
3.
கருத்தியல் அடிப்படையிலும் நன்கு அறிந்தவர்கள் எனும் அடிப்படையிலும் அப்பாஸ்
புதினங்கள் ஜெயகாந்தனின் புதினப் படைப்பாக்கத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன.
முதன்மைத் தரவுகள்
வ.எண் ஜெயகாந்தன் புதினங்கள் வெளியான ஆண்டு
1. வாழ்க்கை அழைக்கிறது 1957
2. கைவிலங்கு 1961
3. எனக்காக அழு 1962
4. பிரம்மோபதேசம் 1962
5. யாருக்காக அழுதான் 1962
6. இலக்கணம் மீறிய கவிதை 1963
7. பிரளயம் 1964
8. கருணையினால் அல்ல 1965
9. விழுதுகள் 1965
10. பாரிசுக்குப் போ 1966
11. கோகிலா என்ன செய்து விட்டாள்?
1967
12. சமூகம் என்பது நாலு பேர் 1967
13. ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன 1969
14. ரிஷி மூலம் 1969
15. சில நேரங்களில் சில மனிதர்கள்
1970
16. சினிமாவுக்குப் போன சித்தாளு
1972
17. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 1973
18. ஜயஜய சங்கர 1977
19. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
1977
20. கங்கை எங்கே போகிறாள்? 1978
21. ஊருக்கு நூறு பேர் 1979
22. எங்கெங்கு காணினும் 1979
23. ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும்
1979
24. கரிக்கோடுகள் 1979
25. பாவம் இவள் ஒரு பாப்பாத்தி
1979
26. மூங்கில் காட்டு நிலா 1979
27. இந்த நேரத்தில் இவள் 1980
28. பாட்டிமார்களும் பேத்திமார்களும்
1980
29. அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள்
1980
30. ஒவ்வொரு கூரைக்கும் கீழே 1980
31. காத்திருக்க ஒருத்தி 1980
32. கரு 1981
33. சுந்தர காண்டம் 1982
34. ஆயுத பூஜை 1982
35. ஈஸ்வர அல்லா தெரே நாம் 1983
36. இதய ராணிகளும் இஸ்பேடு ராஜாக்களும்
1983
37. இல்லாதவர்கள் 1983
38. ஒரு குடும்பத்தில் நடக்கிறது
1983
39. ஓ அமெருக்கா 1983
40. காற்று வெளியினிலே 1984
41. கழுத்தில் விழுந்த
மாலை 1984
42. நம்ப மாட்டேளே 1984
43. அந்த அக்காவைத் தேடி 1985
44. வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி
வைத்து 1985
45. இன்னும் ஒரு பெண்ணின் கதை 1986
46. கையில் ஒரு விளக்கு 1986
47. பகலில் ஒரு வேஷம் 1986
48. உன்னைப்போல் ஒருவன் 1987
49. முன்னைப் போல 1991
வ. எண் அப்பாஸ் புதினங்கள் தமிழில்
வெளியான ஆண்டு
1. அஜந்தா (Ajanta) 1964
2. இருளும்
ஒளியும் (Diya jale saari
raat) 1967
3. இரவின்
கரங்கள் (Raat ki banhon
mein) 1969
4. பாபி (Bobby) 1973
5. ஒரு புதிய
காலை புலர்ந்தது (Fasilah) 1974
6. இரு துளி
நீர் (Do boond pani)
1977
7. எழு இந்தியர்கள் (Saat
Hindustani) 1977
8. கண்ணாடிச்
சுவர்கள் (Walls of the glass) 1977
9. நான்கு
நண்பர்கள் (Four friends) 1977
10. நக்ஸலைட்டுகள்
(The Naxalites) 1983
11. மூன்று சக்கரங்கள்
(Teen Pahiye) 1983
12. இன்குலாப்
(Inqulab)
2007
துணைமைத்
தரவுகள்
ஜெயகாந்தனும் அப்பாஸும் எழுதிய புதினங்கள் தவிர்த்த கதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள்
போன்றவைகளும் இவர்களைப் பற்றிய பிறர் எழுதிய நூல்கள், கட்டுரைகள், ஆய்வுகள் முதனாலவைகளும்
இவ்வாய்வின் துணைமைத் தரவுகளாகக் கொள்ளப்படுகின்றன.
ஆய்வு
அணுகுமுறை
ஜெயகாந்தன் மற்றும் அப்பாஸ் ஆகியோரது புதினங்களை அமைப்பு அடிப்படையிலும் கருத்து
அடிப்படையிலும் ஒப்பிட்டு ஆராய்கின்ற நிலையில் இவ்வாய்வில் ஒப்பீட்டாய்வு அணுகுமுறை
பின்பற்றப்படுகிறது. மேலும் எடுத்துக் கொண்ட கருத்துக்களை தொகுத்து விளக்கியுரைக்கின்ற
நிலையில் விளக்கமுறைத் திறனாய்வாகவும் அமைகின்றது.
ஆய்வு
எல்லை
ஜெயகாந்தன் தனது படைப்புகளாக 14 புதினங்கள், 35 குறும்புதினங்கள் 135 சிறுகதைகள்
படைத்திருப்பதோடு கட்டுரைகள், சுயசரிதைகள், மொழிபெயர்ப்புகள், விமர்சனங்கள் எனப் பல்வேறு
நிலைகளில் தனது படைப்புகளை வெளியிட்டுள்ளார். அது போலவே அப்பாஸும் புதினங்கள், சிறுகதைகள்,
கட்டுரைகள், சுயசரிதை, பேட்டிகள், வாழ்க்கை வரலாற்று நூல்கள் என உருது, இந்தி, ஆங்கிலம்
என மும்மொழிகள் சார்ந்தும் ஏறத்தாழ 85 நூல்களுக்கும் மேல் எழுதி வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் புதினங்கள் குறித்த ஒப்பீட்டாய்வு என்கிற முறையில், ஆய்வின் எல்லை கருதி
ஜெயகாந்தன் எழுதிய புதினங்களோடு குறும்புதினங்களையும் சேர்த்து 49 புதினங்களையும் அப்பாஸின்
தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 12 புதினங்களையும் கொண்டு ஆய்வு எல்லை வரையறுக்கப்படுகின்றது.
இயல் பகுப்பு
முன்னுரை
இப்பகுதி ஆய்வினை அறிமுகப்படுத்துகின்ற விதமாக ஜெயகாந்தனையும் அப்பாஸையும் அறிமுகப்படுத்துவதோடு
மேலும் இருவரது புதினங்களிலும் காணப்படுகின்ற சில ஒப்புமைக் கூறுகளை எடுத்துக் காட்டுவதாக
அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆய்வு நோக்கம், ஆய்வு அணுகுமுறை, ஆய்வு வினாக்கள், ஆய்வு
எல்லை, முன்னாய்வுகள் மற்றும் கருதுகோள் போன்றவை குறித்தக் கருத்துகளை விளக்குவதாக
அமைக்கப்பட்டுள்ளது. மேலும் முதன்மைத் தரவுகள், துணைமைத் தரவுகள் குறித்தும் விளக்குவதோடு
இயல் பகுப்பு முறைகள் குறித்து அறிமுகப்படுத்துகின்ற விதமாகவும் இப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
இயல்
– 1: ஜெயகாந்தன், அப்பாஸ் வாழ்வும் பணியும்
ஒருவரது படைப்பும் வாழ்வும் பல்வேறு நிலைகளில் ஒன்றுபட்டும் வேறுபட்டும் அமைகின்ற
நிலையிலும் அவர்களது புதினத்தைப் பற்றி ஆராய்வதற்கு முன்பு படைப்பாளர்களின் வாழ்வியல்
அனுபவங்கள் குறித்துப் புரிந்துகொள்வது அவசியமாகின்றது. இதனடிப்படையில் ஜெயகாந்தன்
மற்றும் அப்பாஸ் ஆகிய இருவரது வாழ்க்கை அனுபவங்களை அவர்கள் சார்ந்து இயங்கிய துறைகள்
சார்ந்து விளக்குவதாக இவ்வியல் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வியலில் ஜெயகாந்தன் மற்றும் அப்பாஸின் வாழ்க்கை
அனுபவங்களைப் பின்வருமாறு வகைப்படுத்தி விளக்கப்பட்டுள்ளது.
1. வாழ்க்கை அனுபவங்கள்
2. பத்திரிக்கை, இலக்கிய அனுபவங்கள்
3. திரைத்துறை அனுபவங்கள்
4. அரசியல் அனுபவங்கள்
இயல்
– 2: ஜெயகாந்தன், அப்பாஸ் புதினங்களில் உத்தி முறைகள்
இவ்விரு புதின ஆசிரியர்களும் தங்களது புதினங்களை எவ்வாறு எழுதியுள்ளனர் என்பது
குறித்தும் அவர்களது புதினங்களில் காணப்படுகின்ற உத்தி முறைகள் குறித்தும் வகைப்படுத்தி
ஒப்பிட்டுப் பார்க்கின்ற விதமாக இவ்வியல் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாகத் தலைப்பிடும்
முறை, துவங்கும் முறை, கதைமாந்தரைத் தேர்ந்தெடுத்தல், கதைப்பின்னணியை விளக்குதல் என
மேலும் பல்வேறு நிலைகளில் ஜெயகாந்தன் மற்றும் அப்பாஸின் புதினங்கள் ஒப்பிட்டு விளக்கப்பட்டுள்ளன.
இவ்வியலின் பகுப்புமுறை பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.
1. தலைப்பிடும் முறை
2. கதைத் துவக்கம்
3. பாத்திரப்படைப்பு
4. கதைப்பின்னணி
5. கதைப் பின்னல்
6. கதைக் கரு
7. நோக்கு நிலை
8. கதை முடிவு
இயல்
– 3: ஜெயகாந்தன், அப்பாஸ் புதினங்களில் பாலினப் பாகுபாடு
ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்கள் குறிப்பாகக் கல்வி, பொருளாதரநிலை, சாதி, மதம்
எனப் பல்வேறு நிலைகளில் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். பிறப்பிலிருந்து பல்வேறு நிலைகளில்
அவர்கள் மீதான பாலினப் பாகுபாடு குறித்த ஒடுக்குமுறை என்பது வலியுறுத்தப்படுகிறது.
மேலும் பெண்களே ஆணாதிக்கச் சமூகத்திற்கு ஏற்றவாறு நடந்துகொள்வதற்குப் பழக்கப்படுத்தப்பட்டும்
வந்துள்ளனர். சொத்துடமைக்கு உரியவனாக விளங்கும் ஆண் பெண்ணையும் தனது சொத்துக்களில்
ஒன்றாகக் கட்டிக் காப்பாற்ற வேண்டும், கட்டுப்படுத்த வேண்டும் எனும் மனநிலையில் இயங்கி
வருவதினை தற்காலச் சமூகத்தில் காணமுடிகின்றது. குறிப்பாகக் கல்வி கற்றப் பெண்கள் இத்தகையப்
பாகுபாட்டு நிலையிலிருந்து மாற்றம்பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஜெயகாந்தன் மற்றும்
அப்பாஸ் புதினங்களில் பெண் கதைமாந்தர்கள் முதன்மைக் கதைமாந்தர்களாக விளங்குகின்றனர்.
இதனைத் தொடர்ந்து ஜெயகாந்தன் புதினங்களில் காணப்படுகின்ற பெண் கதைமாந்தர்கள் யாவரும்
தங்களது வாழ்வில் நிகழ்ந்துள்ள சிக்கல்களைப் போக்குவதற்காகப் போராடுகின்ற சுயம்சார்ந்த
போராளிகளாகவும் அப்பாஸ் புதினங்களில் வருகின்ற பெண் கதைமாந்தர்கள் யாவரும் தங்களது
பிரச்சினைகளையும் கடந்து சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்காகப் போராடுகின்ற பண்புடையவர்களாகவும்
விளங்குகின்றனர் என்பதை விளக்குகின்ற விதமாக இவ்வியல் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வியல்
பின்வருமாறு சில துணைத் தலைப்புகளின் வழி விளக்கப்பட்டுள்ளது.
1. பாலினப் பாகுபாடு
2. பாலினப் பாகுபாடும் திருமணச் சடங்கும்
3. பிறப்பிலிருந்து பின்பற்றப்படுகின்ற பாலினப் பாகுபாடு
4. பாலியல் வன்கொடுமைகள்
இயல்
– 4: ஜெயகாந்தன், அப்பாஸ் புதினங்களில் பொருளாதாரச் சிக்கல்
மார்க்ஸிய அடிப்படையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வானது பணவுடமைச் சமூகத்தில் காணப்படுகின்ற
வர்க்கத்தினரை, மூன்று நிலைகளில் வகைப்படுத்துகின்றனர். அவை மேல்தட்டு வர்க்கமாகிய
முதலாளி வர்க்கம், நடுத்தர வர்க்கம், தொழிலாளி வர்க்கம் ஆகியவைகளாகும். இத்தகைய நிலையில்
சமூகத்தில் காணப்படுகின்ற பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் குறித்தும் ஏற்றத் தாழ்வுகளுக்குக்
காரணமாகிய உழைப்புச் சுரண்டல் முறை குறித்தும் ஜெயகாந்தன் மற்றும் அப்பாஸ் ஆகிய இருவரும்
தங்களது புதினங்களில் விளக்கியுள்ளனர் என்பதினைக் கருத்தில் கொண்டு இவ்வியல் பின்வருமாறு
துணைத் தலைப்புகளின் வழி விளக்கப்பட்டுள்ளது.
1. பொருளாதாரச் சிக்கல்கள்
2. புதினங்களில் சமூகப் பின்புலங்கள்
3. நகரமயமாதல்
4. உழைப்புச் சுரண்டல்
இயல்
– 5. ஜெயகாந்தன், அப்பாஸ் ஓர் ஒப்பாய்வு
இவ்வியலானது மேற்கண்டவாறு விளக்கப்பட்ட இயல்களில் காணப்படுகின்ற ஒற்றுமை வேற்றுமைகளைத்
தொகுத்து இயல்கள் வாரியாக கருத்துக்களை வரிசைப்படுத்தி விளக்குவதாக அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வியலின் துணைத்தலைப்புகள் பின்வருமாறு
1. ஜெயகாந்தன், அப்பாஸ் வாழ்வும் பணியும்
2. ஜெயகாந்தன், அப்பாஸ் புதினங்களில் உத்தி முறைகள்
3. ஜெயகாந்தன், அப்பாஸ் புதினங்களில் பாலினப் பாகுபாடு
4. ஜெயகாந்தன், அப்பாஸ் புதினங்களில் பொருளாதாரச் சிக்கல்
முடிவுரை
மேற்கண்டவாறு ஐந்து இயல்கலிலும் விவரிக்கப்பட்டுள்ள கருத்துக்களின் வழி கண்டறியப்படுகின்ற
தரவுகள், கருத்துகள் யாவும் ஆய்வின் முடிவுகளாக இப்பகுதியில் விளக்கப்பட்டுள்ளன.