ஒரு
அழகான கிராமம். பாரதிராஜா ஸ்டைலுல சொல்லனுமுனா கிராமமுனாலே அழகுதானே. ஊரோட பேரெல்லாம்
எதுக்கு? இப்ப அத தெரிஞ்சு என்ன பன்னப் போறோம்? சரி அந்த கிராமம் நமக்குத் தேவையில்ல.
அந்த கிராமத்துலயிருந்து மூனு கிலோமீட்டருல ஒரு குட்டிக் கிராமம். அதாங்க குக்கிராமம்.
அந்த ஊரோட பெயர். நமக்கு எதுக்கு? நாம நேரா கதைத்து வருவோம். அந்த குக்கிராமத்துக்கு
பஸ் எல்லாம் கிடையாது. கரண்ட் கிடையாது. அடுத்து என்ன யோசிப்பீங்கனு எனக்கு நல்லாவே
தெரியும். இண்டெர்னெட் வாசனகூட படாத பாடாதி கிராமம். மன்னிக்கனும் குக்கிராமம். அந்த
கிராமத்துல இருக்கிற மொத்த மக்கள் தொகையே முப்பது பேரக்கூட தாண்டாது. ஆனா அவங்களுக்குனு
ஒரு கம்மா, பனமரங்கள், வரப்பு நெடுக்க வெளஞ்சு நிக்கிற அளவுக்கு ஊர சுத்தி கம்மாய ஒட்டி
வயக்காடு. அதுதான் அவங்க உலகம். வானம் பார்த்த பூமி. அந்த கம்மா நெரஞ்சாதான் அந்த ஊருக்கு
வாழ்க்கையே. ஊருக்காரங்க மொத்தமே ரெண்டு அண்ணன் தம்பிங்களோட தலக்கட்டுதான். அதுல ஒருத்தருக்கு
நாளு பசங்க ரெண்டு பொன்னுங்க. பொறந்தது நெறயதான். அதுல இந்த ஆறத்தான் காப்பாத்த முடிஞ்சது.
அந்த ரெண்டு பெருசுக வாழ்க்க எப்படியோ சொந்த வீடு, காடு, கற, கம்மா காலம் தவறாத மழை,
அப்படீனு கடந்து போயிருச்சு. இந்த ஆறு பிள்ளைகளும் வளந்து வந்துச்சு. அந்த ஊருல கால்
ஊண்டி நடக்க ஆரம்பிச்சிட்டாவே முதல் அடியே வயக்காட்டுலதான் வைக்கனும். அப்பத்தான் வாழவே
முடியும். வானம்பார்த்த பூமினு சொன்னோம். அப்படீனா கதையில திருப்பம் எப்படி இருக்குமுனு
நமக்கே தெரியும். தொடர்ந்து ரெண்டு வருசமா மழையே இல்ல. அந்த பஞ்சத்துலயே ஊருல இருக்குற
பழசுங்க ஒன்னு ரெண்டு இறந்து போச்சு. அதுல ரொம்ப பொடிசுகளும் சில இறந்து போச்சு. அதுலகூட
சில இளசுக உசுர கைல பிடிச்சுக்கிட்டு வாழ்ந்துக்கிட்டுத்தான் இருந்துச்சுக. அனைக்கட்ட
ஒரேயடியா அடச்சு வச்சோமுனா பாரம் தாங்காம ஒடச்சிக்கிட்டு ஊத்துர மாதிரி ஒருநாள் மேகம்
உருண்டு தெரண்டு மழை பெய்ய ஆரம்பிச்சிச்சு. ஊரே கொண்டாடுச்சு. ஒரு வாரம் மழை ஓயவே இல்ல.
கம்மா தெப்பம் மாதிரி நெரஞ்சு கெடந்துச்சு. பாக்குறதுக்கே அம்புட்டு அழகா இருந்துச்சு.
எல்லாரும் பசிய மறந்து திரும்பவும் வெள்ளாம போட ஆரம்புச்சுட்டாங்க. அப்போ பட்டாவெல்லாம்
கிடையாது. பேச்சுலதான் எல்லாமே. அது அப்படியே வாரிசுப்படி வரும். வாக்கு சுத்தமா இருக்கும்.
இடத்துக்காக நாக்குப் பெறட்ட மாட்டாங்க. ஒரு நாள் பேஞ்ச கனமழையில அங்க இருந்த ஒரு வீட்டுல
சுவரு இடிஞ்சு விழுந்ததுல தூங்கிக்கிட்டிருந்த நாலு பேரு இறந்து போயிட்டாங்க. ஆறு பேத்துல
ரெண்டு பொன்னு ரெண்டு ஆணு இறந்துட்டாங்க. அதுதான் சொல்லுவாங்க போல. மழை பேஞ்சும் கெடுக்கும்
பேயாமலும் கெடுக்குமுனு. எதுக்கு சொன்னாலும் சரி. இதுக்கும் பொருத்தமாத்தானே இருக்கு.
அந்த சோகத்துலயே கொஞ்ச காலம் ஓடுச்சு. என்ன பன்றதுனு தெரியல. அந்த சம்பவம் அந்த ஊரோட
எதிர்காலத்தயே திருப்பிப் போட்டிருச்சு. அந்த சம்பவத்த அடுத்து ஒவ்வொருத்தரா அந்த ஊரவிட்டு
கெளம்ப ஆரம்பிச்சாங்க. இந்த ரெண்டு ஆம்பளைகளுக்கு பக்கத்து கிராமத்துலயிருந்து பொன்ன
பாத்து கல்யானம் நடந்துச்சு. தொடந்து பஞ்சம் அந்த ஊர விட்டுவைக்கல. ஏற்கனவே அனாத மாதிரி
வாழ்ந்துக்கிட்டு இருந்த அவுங்களுக்கு மேற்கொண்டு பஞ்சத்த தாங்குற சக்தியும் இல்ல.
அடுத்த ரெண்டு நாள் கழிச்சு சாப்பாட்டுக்கு என்ன செய்யப் போறோமுங்குற அளவுக்கு வாழ்க்க
கேள்விக்குறியாச்சு. பொன்ன குடுத்தவங்களும் எவ்வளவுதான் ஆதரவா இருக்க முடியும்? இந்த
ரெண்டு பேத்துல மூத்தவரோட மாமனாருக்கு ஒருத்தரு நல்ல பழக்கம். வெகுதூரத்து பழக்கம்.
ஏதாச்சும் மாடு வாங்கனுமுனா இவுங்க ரெண்டு பேருந்தான் போவாங்க. என்ன ஒருத்தருக்குக்கூட
பேரு இல்லையானு யோசிப்பீங்க. கதைக்குக் காலு இல்லேனுதானே கேள்விப்பட்டிருக்கீங்க. இந்தக்
கதைக்கு காலு இருக்கு. கதையில பேருதான் இல்ல. அதான் கதைக்குப் பேரு இருக்குல. கதையில்
ஐல்லையினா என்ன? குடியா முழுகிடப் போகுது. சரி கதைக்குப் போகலாம். ரெண்டு பேரும் மாடு
வாங்கி வித்ததுல அந்த தூரத்து பழக்கமுனு சொன்னேன்ல அவருக்கு நல்ல லாபம். அப்ப அவரு
எதார்த்தமா உன்னோட மூத்த மகள கட்டிக் கொடுத்தியே எப்படி இருக்கானு கேட்க. அவரு மனசு
வருத்தத்தோட அட ஏங்க கேக்குறீங்க. குடிக்க கஞ்சிகூட இல்லாம கஷ்டப்பட்டுக்கிட்டு கெடக்குறா.
என்ன பன்றதுனு தெரியல. மாப்பிள்ளையும் நல்லவருதான். என்ன… பொழப்புக்குத்தான் ஒரு வழியும்
தெரியாம இருக்காரு. அப்படீனு பதில் சொன்னாரு. அதக் கேட்ட இந்த லாபம் பாத்தவரு சொன்னாரு..
என்னதான் நாம ரெண்டுபேரும் வேற வேற சாதியா இருந்தாலும், இந்த மாட்டு வியாபாரத்துல எனக்கு
நீ ரொம்ப உதவியா இருந்திருக்க. அதுனால உனக்கு நான் உதவி செய்யலாமுனு நெனைக்குறேன்.
வேனுமுனா எங்க ஊருக்கு அனுப்பி வையி. எனக்கும் பண்ண வேலைக்கு ரெண்டு ஆளு தேவப்படுது.
உனக்குத்தான் தெரியுமுல நம்ம ஊரு பக்கம் ஆத்துப்பாசனம். வெள்ளாம தவறாம வெளையும். அங்க
வந்து அவுங்க பொளச்சுக்கட்டும் என்று சொல்ல, அதைத் தொடர்ந்து குக்கிராமத்துல பொழச்சுக்கிட்டு
இருந்த அண்ணன் தம்பி ரெண்டு பேருல அண்ணன் குடும்பம் ஒரு கைக்குழந்தையோட இந்த பண்ணையாரு
ஊருக்குப் பஞ்சம் பொழைக்கப் போனாங்க. எதுவுமே இல்லாம சாப்பிட்டுக்கே கஷ்டப்படும்போது
எந்த வேலையினா என்ன? வயிறு நெரஞ்சா போதும். மானத்தக்காத்து, வயித்த நெறப்பி உசிரோட
வாழ்ந்துட்டோமுனா இந்த சாதியில பொறந்ததுக்கு சாதனதான். அப்படீனு கிளம்பீட்டாங்க. தம்பீ
குடும்பம் அந்த குக்கிராமத்துலேயே இருக்குற காடு கரைய வச்சு ஏதாச்சும் செஞ்சு பாப்போமுங்குற
வரட்டு கவுரவத்துல இருந்துட்டாங்க. கைக்குழந்தையோட போன அண்ணன் குடும்பத்துல காஞ்சு
போன தரைய பார்த்து வாழ்ந்துட்டு, அங்க போயி பச்சப் பசேலுனு இருக்குற வயக்காட்டயும்
வரப்பு தெரியாத அளவுக்கு வளந்து நிக்கிற புள்ளையும் பார்த்துட்டு மனசும் வயிரும் குளிர்ந்து
போச்சு. பாக்குறது பண்ண வேலையினாலும் இருக்கிற இடத்துல கஞ்சிக்கு வழி கெடச்சதால மனசு
சந்தோசமாத்தான் இருந்துச்சு. என்ன ஒன்னு. அங்க தர கட்டாந்தரயா இருந்தாலும் நிலத்துக்கு
முதலாளி இவருதான். இங்க தர பசுமையா இருந்தாலும் முதலாளி இவரு இல்ல. இதுல எம்புட்டு
பாடுபட்டாலும் வயித்தத்தான் கழுவ முடியும். சம்பளத்துக்கு ஆளு போடுறதுக்கும் பண்ணைக்கு
ஆள வைக்கிறதுக்கும் கூடவா பண்ணையாருக்கு இலாபக் கணக்கு தெரியாம போயிடும். அதோட ஒரே
சாதிக்காரன் எவனும் பன்ன வெலைக்கு வரமாட்டாங்க. சரி பக்கத்து ஊருல வேற சாதிக்காரங்கள
கூப்பிட்டாலும் கொஞ்சமாச்சும் சம்பளமுங்குற பேருல ஏதாச்சும் கேப்பாய்ங்க. ஊத்துர கஞ்சிய
குடிச்சுப்பிட்டு வாய் தொறக்காம வேல பாக்கனுமுனா கஞ்சிக்கே வழி இல்லாதவனா இருந்தாதான்
ஒத்துக்கிருவான். அதுவும் தன்னைவிட கீழ் சாதியில இருக்கிறவனா இருந்தாதான் தன்ன முதலாளியா
ஏத்துக்கிருவான். ஆனா வெளியில சொல்லும்போது இதெல்லாம் உதவினுதானே சொல்லனும். அதுதானே
பெரியமனுசத்தனம். அப்படியே காலமும் ஓடுது. மூனுவேல கஞ்சி குடிச்சதுக்கே புள்ளகுட்டி
மூனு ஆயிருச்சு. பன்னையில கன்னுக்குட்டிக பெருகும்போது சந்தோசப் படுற பண்ணையாரு பண்ண
வேல செய்யுறவனுக்கு பிள்ளைக பெருகும் போதும் சந்தோசப்பட்டாரு. பண்ண ஆளு கூடுச்சினா
சம்பள ஆளு கொரையுமுங்குற கணக்குதான். இந்த பண்ணையாரோட சந்தோசத்தக் கெடுக்குற மாதிரி
ஒரு முதலமைச்சரு வந்தாரு. அவரோட பேரு… இந்தக் கதையில பேரு இல்லைனு இப்பத்தானே சொன்னேன்.
ஆமாம். நான் சொல்லலைனாலும் உங்களால கண்டே பிடிக்க முடியாது பாருங்க. சரி அந்த முதலமைச்சரு
பேருல வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு கொடுக்கனுமுனு அவரு சொல்லிப்புட்டாரு. அதுல எப்படியோ
இந்த பண்ணையாளு பேரும் அதிகாரிங்க கண்ணுல பட்டிருச்சு. இப்படி உருவான காலனிகள் தமிழ்நாட்டுல
இன்னும் அவரோட பேர சொல்லிக்கிட்டு கம்பீரமா நிக்குது. பட்டினியா கெடந்தவனுக்குச் சோறு
கெடச்ச மாதிரி வீடும் கெடச்சா சந்தோசம் கொஞ்சமாவா இருக்கும். அப்பறம் என்ன? குடிக்க
கஞ்சி இருக்கு. இருக்க வீடு இருக்கு. வீடு கெடச்ச கொஞ்ச வருசத்துலயே பிள்ளைகளோட எண்ணிக்க
ஏழு ஆயிருச்சு. சந்தோசத்த இப்படித்தானே கொண்டாடியாகனும். என்ன இருந்தாலும் முதலாளி
இல்லையா? அவருக்கிட்ட போயி எப்படி சம்பளம் கேக்கிறது? நம்மள வாழவச்ச தெய்வம். இந்த
வாழ்க்கையே அவரு போட்ட பிச்ச. கூலி கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டாரா? இருந்தாலும்
என்ன பன்றது? ஏழு பிள்ளைகள வச்சிக்கிட்டு எப்படி கஞ்சிய மட்டும் குடிச்சுக்கிட்டு வாழ்றது.
வீடு குடுத்தவுங்க அதோட சும்மாவா விட்டாங்க. அவுங்க பாட்டுக்க காலனி வீட்டுல இருக்குறவுங்களுக்கு
எல்லாம் ஓட்டுப்போடுற அட்ட, ரேசன் அட்ட இதையும் கொடுத்துப்புட்டாங்க. மொதலாளி ஊத்துர
பழைய கஞ்சி ஒருபக்கம் இருந்தாலும் ரேசன் கடையில அரிசி வாங்கி சமச்சு சாப்பிடும்போது
அது ஒரு தனி மறியாதயாத்தானே இருக்கு. கூலு குடிச்சாலும் கவர்மெண்டு கூலுனு நெனைக்கும்போது
கொஞ்சம் மனசு குளிரத்தானே செய்யும். கொஞ்ச காலத்துலயே தெரிவிளக்கும் வந்துருச்சு. வீட்டுல
வெளக்கு இல்லேனாலும் தெருவுல வெளக்கு எரியுதுனா. அதவிட வேற என்ன சொல்லனும். ஒரே ஆட்டம்
பாட்டம் கொண்டாட்டம்தான். அப்பயெல்லாம் பண்ணையாரு வீட்டுக்குள்ளதான் ரேடியொப்பொட்டி
பாட்டுப்பாடும். ஏதோ அதுவழியா போகும்போது கொஞ்சம் மெதுவா போனா அந்த நேரத்துல பாத்து
ஏதாவது எம்ஜியாரோட பாட்டு ஓடுச்சுனா கேக்குரதுக்கு சுகமாத்தானே இருக்கும். பஞ்சம் பொளைக்க
வந்தவய்ங்களுக்கு இந்த கவர்மெண்டு இம்புட்டு இடம் கொடுத்துச்சுனா பண்னையார்களுக்கும்
கொஞ்சம் பஞ்சம் வரத்தானே செய்யும். ஏன்னா? அதுக்கு அஸ்திவாரம் போட்டவுங்க அப்படி சமத்துவத்தையும்,
சகோதரத்துவத்தையும் சொல்ல வேண்டிய இடத்துல சொல்ல வேண்டிய நேரத்துல சொல்ற விதத்துல சொன்னதுனால
வந்த பக்க விளைவுகள் இப்படித்தான் இருக்கும். ஆயிரம் ஆயிரம் வருசமா நம்பிக்கைங்கிற
கோட்டைக்குள்ள ஒற்றுமைங்கிற சொல்லுக்கு நான் மேல நீ கீழங்கிற அர்த்தந்தானே சொல்லிக்கிட்டு
இருக்கோம். ஆனா ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டுதோ இல்லையோ! மெதுவா ஊர்ந்து வந்தாச்சும்
ஊட்டத்தானே செய்யும். அதுக்கு என்ன பன்றது? எல்லாம் கர்ம பலன்கள் சரி கதையக் கேளுங்க.