புதினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜூலை 03, 2021

திருநாம திருப்பங்கள் பகுதி 1

 

ஒரு அழகான கிராமம். பாரதிராஜா ஸ்டைலுல சொல்லனுமுனா கிராமமுனாலே அழகுதானே. ஊரோட பேரெல்லாம் எதுக்கு? இப்ப அத தெரிஞ்சு என்ன பன்னப் போறோம்? சரி அந்த கிராமம் நமக்குத் தேவையில்ல. அந்த கிராமத்துலயிருந்து மூனு கிலோமீட்டருல ஒரு குட்டிக் கிராமம். அதாங்க குக்கிராமம். அந்த ஊரோட பெயர். நமக்கு எதுக்கு? நாம நேரா கதைத்து வருவோம். அந்த குக்கிராமத்துக்கு பஸ் எல்லாம் கிடையாது. கரண்ட் கிடையாது. அடுத்து என்ன யோசிப்பீங்கனு எனக்கு நல்லாவே தெரியும். இண்டெர்னெட் வாசனகூட படாத பாடாதி கிராமம். மன்னிக்கனும் குக்கிராமம். அந்த கிராமத்துல இருக்கிற மொத்த மக்கள் தொகையே முப்பது பேரக்கூட தாண்டாது. ஆனா அவங்களுக்குனு ஒரு கம்மா, பனமரங்கள், வரப்பு நெடுக்க வெளஞ்சு நிக்கிற அளவுக்கு ஊர சுத்தி கம்மாய ஒட்டி வயக்காடு. அதுதான் அவங்க உலகம். வானம் பார்த்த பூமி. அந்த கம்மா நெரஞ்சாதான் அந்த ஊருக்கு வாழ்க்கையே. ஊருக்காரங்க மொத்தமே ரெண்டு அண்ணன் தம்பிங்களோட தலக்கட்டுதான். அதுல ஒருத்தருக்கு நாளு பசங்க ரெண்டு பொன்னுங்க. பொறந்தது நெறயதான். அதுல இந்த ஆறத்தான் காப்பாத்த முடிஞ்சது. அந்த ரெண்டு பெருசுக வாழ்க்க எப்படியோ சொந்த வீடு, காடு, கற, கம்மா காலம் தவறாத மழை, அப்படீனு கடந்து போயிருச்சு. இந்த ஆறு பிள்ளைகளும் வளந்து வந்துச்சு. அந்த ஊருல கால் ஊண்டி நடக்க ஆரம்பிச்சிட்டாவே முதல் அடியே வயக்காட்டுலதான் வைக்கனும். அப்பத்தான் வாழவே முடியும். வானம்பார்த்த பூமினு சொன்னோம். அப்படீனா கதையில திருப்பம் எப்படி இருக்குமுனு நமக்கே தெரியும். தொடர்ந்து ரெண்டு வருசமா மழையே இல்ல. அந்த பஞ்சத்துலயே ஊருல இருக்குற பழசுங்க ஒன்னு ரெண்டு இறந்து போச்சு. அதுல ரொம்ப பொடிசுகளும் சில இறந்து போச்சு. அதுலகூட சில இளசுக உசுர கைல பிடிச்சுக்கிட்டு வாழ்ந்துக்கிட்டுத்தான் இருந்துச்சுக. அனைக்கட்ட ஒரேயடியா அடச்சு வச்சோமுனா பாரம் தாங்காம ஒடச்சிக்கிட்டு ஊத்துர மாதிரி ஒருநாள் மேகம் உருண்டு தெரண்டு மழை பெய்ய ஆரம்பிச்சிச்சு. ஊரே கொண்டாடுச்சு. ஒரு வாரம் மழை ஓயவே இல்ல. கம்மா தெப்பம் மாதிரி நெரஞ்சு கெடந்துச்சு. பாக்குறதுக்கே அம்புட்டு அழகா இருந்துச்சு. எல்லாரும் பசிய மறந்து திரும்பவும் வெள்ளாம போட ஆரம்புச்சுட்டாங்க. அப்போ பட்டாவெல்லாம் கிடையாது. பேச்சுலதான் எல்லாமே. அது அப்படியே வாரிசுப்படி வரும். வாக்கு சுத்தமா இருக்கும். இடத்துக்காக நாக்குப் பெறட்ட மாட்டாங்க. ஒரு நாள் பேஞ்ச கனமழையில அங்க இருந்த ஒரு வீட்டுல சுவரு இடிஞ்சு விழுந்ததுல தூங்கிக்கிட்டிருந்த நாலு பேரு இறந்து போயிட்டாங்க. ஆறு பேத்துல ரெண்டு பொன்னு ரெண்டு ஆணு இறந்துட்டாங்க. அதுதான் சொல்லுவாங்க போல. மழை பேஞ்சும் கெடுக்கும் பேயாமலும் கெடுக்குமுனு. எதுக்கு சொன்னாலும் சரி. இதுக்கும் பொருத்தமாத்தானே இருக்கு. அந்த சோகத்துலயே கொஞ்ச காலம் ஓடுச்சு. என்ன பன்றதுனு தெரியல. அந்த சம்பவம் அந்த ஊரோட எதிர்காலத்தயே திருப்பிப் போட்டிருச்சு. அந்த சம்பவத்த அடுத்து ஒவ்வொருத்தரா அந்த ஊரவிட்டு கெளம்ப ஆரம்பிச்சாங்க. இந்த ரெண்டு ஆம்பளைகளுக்கு பக்கத்து கிராமத்துலயிருந்து பொன்ன பாத்து கல்யானம் நடந்துச்சு. தொடந்து பஞ்சம் அந்த ஊர விட்டுவைக்கல. ஏற்கனவே அனாத மாதிரி வாழ்ந்துக்கிட்டு இருந்த அவுங்களுக்கு மேற்கொண்டு பஞ்சத்த தாங்குற சக்தியும் இல்ல. அடுத்த ரெண்டு நாள் கழிச்சு சாப்பாட்டுக்கு என்ன செய்யப் போறோமுங்குற அளவுக்கு வாழ்க்க கேள்விக்குறியாச்சு. பொன்ன குடுத்தவங்களும் எவ்வளவுதான் ஆதரவா இருக்க முடியும்? இந்த ரெண்டு பேத்துல மூத்தவரோட மாமனாருக்கு ஒருத்தரு நல்ல பழக்கம். வெகுதூரத்து பழக்கம். ஏதாச்சும் மாடு வாங்கனுமுனா இவுங்க ரெண்டு பேருந்தான் போவாங்க. என்ன ஒருத்தருக்குக்கூட பேரு இல்லையானு யோசிப்பீங்க. கதைக்குக் காலு இல்லேனுதானே கேள்விப்பட்டிருக்கீங்க. இந்தக் கதைக்கு காலு இருக்கு. கதையில பேருதான் இல்ல. அதான் கதைக்குப் பேரு இருக்குல. கதையில் ஐல்லையினா என்ன? குடியா முழுகிடப் போகுது. சரி கதைக்குப் போகலாம். ரெண்டு பேரும் மாடு வாங்கி வித்ததுல அந்த தூரத்து பழக்கமுனு சொன்னேன்ல அவருக்கு நல்ல லாபம். அப்ப அவரு எதார்த்தமா உன்னோட மூத்த மகள கட்டிக் கொடுத்தியே எப்படி இருக்கானு கேட்க. அவரு மனசு வருத்தத்தோட அட ஏங்க கேக்குறீங்க. குடிக்க கஞ்சிகூட இல்லாம கஷ்டப்பட்டுக்கிட்டு கெடக்குறா. என்ன பன்றதுனு தெரியல. மாப்பிள்ளையும் நல்லவருதான். என்ன… பொழப்புக்குத்தான் ஒரு வழியும் தெரியாம இருக்காரு. அப்படீனு பதில் சொன்னாரு. அதக் கேட்ட இந்த லாபம் பாத்தவரு சொன்னாரு.. என்னதான் நாம ரெண்டுபேரும் வேற வேற சாதியா இருந்தாலும், இந்த மாட்டு வியாபாரத்துல எனக்கு நீ ரொம்ப உதவியா இருந்திருக்க. அதுனால உனக்கு நான் உதவி செய்யலாமுனு நெனைக்குறேன். வேனுமுனா எங்க ஊருக்கு அனுப்பி வையி. எனக்கும் பண்ண வேலைக்கு ரெண்டு ஆளு தேவப்படுது. உனக்குத்தான் தெரியுமுல நம்ம ஊரு பக்கம் ஆத்துப்பாசனம். வெள்ளாம தவறாம வெளையும். அங்க வந்து அவுங்க பொளச்சுக்கட்டும் என்று சொல்ல, அதைத் தொடர்ந்து குக்கிராமத்துல பொழச்சுக்கிட்டு இருந்த அண்ணன் தம்பி ரெண்டு பேருல அண்ணன் குடும்பம் ஒரு கைக்குழந்தையோட இந்த பண்ணையாரு ஊருக்குப் பஞ்சம் பொழைக்கப் போனாங்க. எதுவுமே இல்லாம சாப்பிட்டுக்கே கஷ்டப்படும்போது எந்த வேலையினா என்ன? வயிறு நெரஞ்சா போதும். மானத்தக்காத்து, வயித்த நெறப்பி உசிரோட வாழ்ந்துட்டோமுனா இந்த சாதியில பொறந்ததுக்கு சாதனதான். அப்படீனு கிளம்பீட்டாங்க. தம்பீ குடும்பம் அந்த குக்கிராமத்துலேயே இருக்குற காடு கரைய வச்சு ஏதாச்சும் செஞ்சு பாப்போமுங்குற வரட்டு கவுரவத்துல இருந்துட்டாங்க. கைக்குழந்தையோட போன அண்ணன் குடும்பத்துல காஞ்சு போன தரைய பார்த்து வாழ்ந்துட்டு, அங்க போயி பச்சப் பசேலுனு இருக்குற வயக்காட்டயும் வரப்பு தெரியாத அளவுக்கு வளந்து நிக்கிற புள்ளையும் பார்த்துட்டு மனசும் வயிரும் குளிர்ந்து போச்சு. பாக்குறது பண்ண வேலையினாலும் இருக்கிற இடத்துல கஞ்சிக்கு வழி கெடச்சதால மனசு சந்தோசமாத்தான் இருந்துச்சு. என்ன ஒன்னு. அங்க தர கட்டாந்தரயா இருந்தாலும் நிலத்துக்கு முதலாளி இவருதான். இங்க தர பசுமையா இருந்தாலும் முதலாளி இவரு இல்ல. இதுல எம்புட்டு பாடுபட்டாலும் வயித்தத்தான் கழுவ முடியும். சம்பளத்துக்கு ஆளு போடுறதுக்கும் பண்ணைக்கு ஆள வைக்கிறதுக்கும் கூடவா பண்ணையாருக்கு இலாபக் கணக்கு தெரியாம போயிடும். அதோட ஒரே சாதிக்காரன் எவனும் பன்ன வெலைக்கு வரமாட்டாங்க. சரி பக்கத்து ஊருல வேற சாதிக்காரங்கள கூப்பிட்டாலும் கொஞ்சமாச்சும் சம்பளமுங்குற பேருல ஏதாச்சும் கேப்பாய்ங்க. ஊத்துர கஞ்சிய குடிச்சுப்பிட்டு வாய் தொறக்காம வேல பாக்கனுமுனா கஞ்சிக்கே வழி இல்லாதவனா இருந்தாதான் ஒத்துக்கிருவான். அதுவும் தன்னைவிட கீழ் சாதியில இருக்கிறவனா இருந்தாதான் தன்ன முதலாளியா ஏத்துக்கிருவான். ஆனா வெளியில சொல்லும்போது இதெல்லாம் உதவினுதானே சொல்லனும். அதுதானே பெரியமனுசத்தனம். அப்படியே காலமும் ஓடுது. மூனுவேல கஞ்சி குடிச்சதுக்கே புள்ளகுட்டி மூனு ஆயிருச்சு. பன்னையில கன்னுக்குட்டிக பெருகும்போது சந்தோசப் படுற பண்ணையாரு பண்ண வேல செய்யுறவனுக்கு பிள்ளைக பெருகும் போதும் சந்தோசப்பட்டாரு. பண்ண ஆளு கூடுச்சினா சம்பள ஆளு கொரையுமுங்குற கணக்குதான். இந்த பண்ணையாரோட சந்தோசத்தக் கெடுக்குற மாதிரி ஒரு முதலமைச்சரு வந்தாரு. அவரோட பேரு… இந்தக் கதையில பேரு இல்லைனு இப்பத்தானே சொன்னேன். ஆமாம். நான் சொல்லலைனாலும் உங்களால கண்டே பிடிக்க முடியாது பாருங்க. சரி அந்த முதலமைச்சரு பேருல வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு கொடுக்கனுமுனு அவரு சொல்லிப்புட்டாரு. அதுல எப்படியோ இந்த பண்ணையாளு பேரும் அதிகாரிங்க கண்ணுல பட்டிருச்சு. இப்படி உருவான காலனிகள் தமிழ்நாட்டுல இன்னும் அவரோட பேர சொல்லிக்கிட்டு கம்பீரமா நிக்குது. பட்டினியா கெடந்தவனுக்குச் சோறு கெடச்ச மாதிரி வீடும் கெடச்சா சந்தோசம் கொஞ்சமாவா இருக்கும். அப்பறம் என்ன? குடிக்க கஞ்சி இருக்கு. இருக்க வீடு இருக்கு. வீடு கெடச்ச கொஞ்ச வருசத்துலயே பிள்ளைகளோட எண்ணிக்க ஏழு ஆயிருச்சு. சந்தோசத்த இப்படித்தானே கொண்டாடியாகனும். என்ன இருந்தாலும் முதலாளி இல்லையா? அவருக்கிட்ட போயி எப்படி சம்பளம் கேக்கிறது? நம்மள வாழவச்ச தெய்வம். இந்த வாழ்க்கையே அவரு போட்ட பிச்ச. கூலி கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டாரா? இருந்தாலும் என்ன பன்றது? ஏழு பிள்ளைகள வச்சிக்கிட்டு எப்படி கஞ்சிய மட்டும் குடிச்சுக்கிட்டு வாழ்றது. வீடு குடுத்தவுங்க அதோட சும்மாவா விட்டாங்க. அவுங்க பாட்டுக்க காலனி வீட்டுல இருக்குறவுங்களுக்கு எல்லாம் ஓட்டுப்போடுற அட்ட, ரேசன் அட்ட இதையும் கொடுத்துப்புட்டாங்க. மொதலாளி ஊத்துர பழைய கஞ்சி ஒருபக்கம் இருந்தாலும் ரேசன் கடையில அரிசி வாங்கி சமச்சு சாப்பிடும்போது அது ஒரு தனி மறியாதயாத்தானே இருக்கு. கூலு குடிச்சாலும் கவர்மெண்டு கூலுனு நெனைக்கும்போது கொஞ்சம் மனசு குளிரத்தானே செய்யும். கொஞ்ச காலத்துலயே தெரிவிளக்கும் வந்துருச்சு. வீட்டுல வெளக்கு இல்லேனாலும் தெருவுல வெளக்கு எரியுதுனா. அதவிட வேற என்ன சொல்லனும். ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான். அப்பயெல்லாம் பண்ணையாரு வீட்டுக்குள்ளதான் ரேடியொப்பொட்டி பாட்டுப்பாடும். ஏதோ அதுவழியா போகும்போது கொஞ்சம் மெதுவா போனா அந்த நேரத்துல பாத்து ஏதாவது எம்ஜியாரோட பாட்டு ஓடுச்சுனா கேக்குரதுக்கு சுகமாத்தானே இருக்கும். பஞ்சம் பொளைக்க வந்தவய்ங்களுக்கு இந்த கவர்மெண்டு இம்புட்டு இடம் கொடுத்துச்சுனா பண்னையார்களுக்கும் கொஞ்சம் பஞ்சம் வரத்தானே செய்யும். ஏன்னா? அதுக்கு அஸ்திவாரம் போட்டவுங்க அப்படி சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் சொல்ல வேண்டிய இடத்துல சொல்ல வேண்டிய நேரத்துல சொல்ற விதத்துல சொன்னதுனால வந்த பக்க விளைவுகள் இப்படித்தான் இருக்கும். ஆயிரம் ஆயிரம் வருசமா நம்பிக்கைங்கிற கோட்டைக்குள்ள ஒற்றுமைங்கிற சொல்லுக்கு நான் மேல நீ கீழங்கிற அர்த்தந்தானே சொல்லிக்கிட்டு இருக்கோம். ஆனா ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டுதோ இல்லையோ! மெதுவா ஊர்ந்து வந்தாச்சும் ஊட்டத்தானே செய்யும். அதுக்கு என்ன பன்றது? எல்லாம் கர்ம பலன்கள் சரி கதையக் கேளுங்க.  

ஞாயிறு, ஜூன் 27, 2021

கடைசிக் கண்ணீர் பாகம் 10

 பாண்டி போட்டோ கட வச்சிருக்கான். மணி டீ குடிக்கிற கடையும் பாண்டி போட்டா கடையும் பக்கத்துல பக்கத்துலதான். காலைல வெள்ளனா டீ குடிக்கப் போறப்போ, எப்பவுமே கடைக்கு வெளிய இருக்குற வெளக்கமாத்த எடுத்து கடை முன்னாடி சுத்தமா கூட்டி விட்டுப்புட்டுத்தான் அங்கயிருந்து வயலுக்குப் போறதுனாலும் வீட்டுக்குப் போறதுனாலும் போவாரு.

மொத நாள் வெட்டுனது போக இரண்டாவது நாளும் எல்லாரும் போயி ஒரு வழியா கருவ முள்ளுகள கொஞ்சம் கொஞ்சமா வெட்டி முடிச்சாங்க. வெட்டிப்போட்ட முள்ள எல்லாம் காயிரதுக்கு ரெண்டு நாள் ஆகும். அதுக்கப்பறந்தான் தீ வைக்க முடியும் அதுனால வெட்டுற முள்ளுகள அங்கங்க குமிச்சு வச்சிட்டாங்க. வெட்டி முடிச்ச சந்தோசத்துல அப்பா நாளைக்காச்சும் போயி கருப்பன் தாத்தாவ கூட்டிக்கிட்டுப் போயி மட விசயத்த என்ன ஏதுனு கேட்டுக்கிட்டு வந்திருப்பா. தண்ணி வந்து கம்மா ரொம்பிப் போச்சுனா அப்பறம் தோண்டுறது செரமம்னு வேந்தன் மணிக்கிட்ட சொன்னான்.

கேப்பம்பா கேப்பம் நானும் அவர கடைய பக்கம் தேடிப்பார்த்தேன். ஆளக் காணல. அனேகமா எங்கயாச்சும் வேலைக்குப் போயிருப்பாரு. நாளைக்கு எப்படியாச்சும் ஆளப் பிடிச்சு காட்டீட்டு போவோமுனு சொன்னது மாதிரியே மணி மறுநாளு கருப்பன் டீ கடையில பிடிச்சிட்டாரு. ஏம்பா உன்ன நேத்தெல்லாம் தேடுனேன். ஆளக் காணோம். என்னாவாம் என்று மணி கேட்டதற்கு அட டவுனுக்குள்ள வேலைக்குப் போயிட்டேன். காலம்பரமே வந்து இழுத்துக்கிட்டுப் போய்ட்டாய்ங்க. நைட்டு வர்ரதுக்கு லேட்டாயிருச்சுனு காரணம் சொல்லிக்கிட்டிருந்தாரு கருப்பன்.

அட இந்த மட விசயம்மா சீனிச்சாமிய பாத்துப்புட்டு வந்துரலாமுனு சொன்னீங்கள்ல அதான் என்னனு கேக்கலாமுனு தேடுனேன் என்றார் மணி. நேத்து பாத்த வேல கொஞ்சம் பாக்கிக் கெடக்கு. இன்னைக்கு முடிச்சுப்புட்டு சீக்கிரமா வந்துருவேன். சாயங்காலமா போயி என்ன ஏதுனு ஒரு வார்த்த கேட்டுட்டு வந்துருவோம். சாயந்தரமா கடையப்பக்கம் வருவேல்ல. நானும் வந்துருரேன். அப்படியே பொடி நடையா போனோமுன்னா கேட்ரலாம்னு சொல்லிவிட்டு கருப்பன் வெலைக்குக் கெளம்பீட்டாரு. அன்னைக்கு சொன்னது மாதிரியே சாய்ந்தரம் ரெண்டு பேரும் சேர்ந்து சீனிச்சாமிய பாக்கப் போனாங்க. என்ன கருப்பா, என்ன மணிய கூட்டிக்கிட்டு இந்தப் பக்கமா வந்திருக்க? என்ன விசயமுனு சீனிச்சாமி கேட்க, கருப்பன் அது ஒன்னும் இல்லீங்க நம்ம வயலுக்கு மேவய அதான் கம்மாகரைய ஒட்டிக் கெடக்குல அந்த வயல மணி ஒத்திக்கு வாங்கியிருக்காரு. உங்களுக்குத் தெரியாதா? அந்த வயலுக்கு ஆத்துத் தண்ணி நேரா பாயாது. மேவயக்காரன் வயல் வழியாத்தான் பாச்சிக்கிறனும். இப்பத்தானே அப்படி, முன்னாடியெல்லாம் நாம கம்மா வாமட தண்ணியத்தானெ பாச்சிக்கிட்டு இருந்தோம். மடைய அடச்சதுக்கப்புறம் ரொம்ப வருசமா அந்த வய வெள்ளாம போடாம கெடந்துச்சு. அதுக்கப்புறமும் மே வயக்காரன்கிட்ட கேட்டு கேட்டே தண்ணி பாச்சிக்கிட்டு இருந்தாங்க. அது எல்லா நேரத்துலையும் ஒத்து வராதுல. அவன் ஒரு நேரம் சிரிக்கிறான். ஒரு நேரம் மொறைக்குறான். எப்ப எப்படினு அவன ஒன்னும் புரிஞ்சுக்க முடியல. அதான் மடைய கொஞ்சம் ரெடி பன்னி வச்சிக்கிட்டோமுனா ஆத்தர அவசரத்துக்குத் தண்ணிய பாச்சிக்குரலாம். யார பத்தியும் கவலப் படவேண்டியதில்ல. எப்பவுமே நீங்கதான் குத்தக எடுக்குறீங்க. இந்த வருசமும் நீங்கதான் எடுப்பீங்க. அதான் உங்ககிட்ட ஒரு வார்த்த சொல்லீட்டு மடய ரெடி பன்னிப்புடலாமுனு கேட்டுப் போகலாமுனு வந்தோம். நீங்க பாத்து சொன்னீங்கனா செஞ்சுபுடலாம். ஆத்துலவேற தண்ணி வரப்போகுதுனு பேசிகிறாங்கனு கருப்பன் தலையைக் குணிந்தவாறு, தான் வந்த காரியத்த சொல்லீட்டாரு.

அட என்ன கருப்பா, இதுக்குப்போயி எங்கிட்ட கேட்டுக்கிட்டு. அது கவர்மெண்டு கம்மாப்பா, அதுவும்வே அங்க ற்கனவே மட இருந்துச்சுதானே. தோண்டிக்கங்கப்பா. நான் அப்பவே சொன்னேன் அங்க வாமட இருக்கு அத மூடிப்புடாதீங்கப்பானு. இப்ப அத கண்டுபிடிக்கிறதே செரமப்பா. எப்படி கண்டுபிடிக்கப் போறீங்க. பொதரு மண்டிப் போயில கெடக்கும். ஆனா வாமடையில இருந்த தூம்பு இன்னும் உள்ளதான் இருக்கும். ஜே.சி.பி கொண்டாத்தாதானே தோண்ட முடியும். ஆளுகள வச்சு எப்படித் தோன்றது? பாத்துக்கோங்க. எப்படி வசதியோ அப்படி செய்யுங்கனு பெருந்தன்மையா பேசினாரு சீனிச்சாமி.

அதக் கேக்கும் போது மணிக்கும் கருப்பனுக்கும் மனசு ஆறுதலா இருந்துச்சு. சரி அப்ப நாங்க வர்ரோமுங்கய்யா என்று நன்றி தெரிவிக்கும் விதமாக இருவரும் புறப்பட்டு வீடு திரும்பினர். வாமடைய தோண்டச் சொல்லீட்டாங்கனு மணி சொன்னதக் கேட்டு வேந்தனுக்கும் அவனது தம்பிகளுக்கும் சந்தோசம். நாளைக்கே போயி எல்லாத்தையும் தோண்டிப் போட்டு மடய ரெடி பன்னிட்டு வந்திரலாமுனு எல்லாரும் முடிவெடுத்தனர். அது போலவே மணி கருப்பன் ஆகிய இருவருடன் வேந்தனும் தம்பிகளும் காலையில் எழுந்து வயலுக்குச் சென்றனர். கருப்பன் தனது ஞாபக சக்தியைக் கொண்டு மடையின் உள்புறம் மற்றும் வெளிப்புற துவாரப் பகுதியை கணிக்கலானார். சில நிமிடங்களின் தேடலுக்குப் பிறகு மணியும் கருப்பனும் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்தனர். அவர்கள் சொன்ன இடத்தில் வேந்தனும் அவனது தம்பிகளும் தோண்டத் துவங்கினர். பல வருடங்களாக இறுகிப்போயிருந்த இடமாதலால் பாறைபோல் இறுகிக் கிடந்து. கரை கல்லுமாதிரி இறுகிக்கெடக்கு. ஆரம்பமே இப்படி இறுகிக் கெடக்கே. எப்படி தோண்டுறது என்கி மலைப்பு எல்லோர் மனசுலயும் வந்தது. இப்படித் தோண்டினோமுனாஅதுல கொஞ்சம் ரிஸ்க் இருக்கு. கரை ஒடச்சிருச்சுனா திரும்ப அடைக்கிறது ரொம்பச்செரமம். அதையும் பாத்துக்குறனும் ரொம்ப சேப்டியாத்தான் தோண்டனும். கம்மா கர ஒடச்சுக்கிச்சுனா கம்மா குத்தக எடுத்தவனுக்கும் பதில் சொல்லனும். கீழ வெள்ளாம போட்டவனுக்கும் பதில் சொல்லனும். அதுமட்டுமல்ல கவர்மெண்டு காரணுக்கும் பதில் சொல்லனும். இதெல்லாம் யோசிச்சுக்கிட்டுத்தான் செய்யனும். ஜெ.சு.பி வச்சு தோண்டுறதுனா அதுக்கு நெரையா காசு தேவப்படும். அவ்வளவு செலவழிச்சு தோண்டுறதுக்கு ஆளுக ஒத்துவரமாட்டாய்ங்க. அதுனால ஒரே வழிதான் இருக்கு கம்மாயில தண்ணி ரொம்பின பிறகு கொஞ்சம் கொஞ்சமா கவனமா தோண்டுறதுதான். களிமண்ணு எவ்வளவுதான் கல்லு மாதிரி இருந்தாலும் தண்ணி பட்டிருச்சுனா போதும் மாவு மாதிரி ஊரிப் போயிரும் கடப்பாரை வச்சு தோண்ட ஈசியா இருக்கும்

கடைசிக் கண்ணீர் பாகம் 9

 

அவிய்ங்க சரக்குனா சண்டைக்கு அலையுராய்ங்க. நமக்கு எல்லாம் அது சரிவராதுப்பா. என் வயசுக்கு அவிய்ங்ககூட மல்லுக்கட்டிக்கிட்டு நிக்க முடியுமா? நீ சொல்லு. கம்மாய அவன் குத்தகைக்கு எடுக்குறான். அவன் சொல்றதுதான் இங்க சட்டமாயிருக்கு. இத்தன வருசம் கழிச்சு இன்னக்கு போயி வாமட தொக்கனுமுனா விடுவாய்ங்களா? மட தொறந்தா நல்லாத்தான் இருக்கும். ஆனா அவிய்ங்க மோசமானவிய்ங்கப்பா என்று மடையைத் திறப்பதன் சிக்கலை விளக்கினார் கருப்பன்.

அட என்ன தாத்தா, நீயும் அப்பா மாதிரியே பேசுர. அவிய்ங்க கம்மாய குத்தகை எடுக்குறாய்ங்கனா அதுக்காக கம்மாயே அவிய்ங்கதுனு சொல்றதா? கம்மாயில ண்ணி தேக்குறதே வெவசாயத்துக்குதான். மீன் வளக்குறதுக்கு இல்ல. மொதல்ல வெவசாயத்துக்குத்தான். அப்பறந்தான் மீன் வளக்குறதெல்லாம். அவிய்ங்க செய்யுறது தப்புனு தெரிஞ்சும் நாம இப்படியே கம்முனு இருந்தோமுனா கடைசிவரைக்கும் அப்படியேதான் இருக்கனும். மொதல்ல நாம மடை இருக்குற தடத்தத் தேடிக் கண்டுபிடிப்போம். நாம நாலஞ்சு பேரு சேர்ந்து தோண்ட ஆரம்பிப்போம். அப்படி அவிய்ங்க வந்து பிரச்சன ஏதாவது பன்னுனா பி.டபிள்யூ.டிபார்ட்மெண்டுல கம்ப்ளைண்ட் பன்னுவோம். அதுக்கு மேல போனா போலீசுல கம்ப்ளைண்ட் பன்னுவோம். அதுக்கு மீறி போனாக்க. கலைக்டர் ஆபீசுல மனு குடுத்துருவோம் தாத்தா. நீங்க எடத்த மட்டும் காமிங்க. மத்த விசயத்த பத்திக் கவலப்பட வேண்டாம். இந்த வருசம் எப்படியும் மடயத் தொரந்து புடுவோம் என்று தன்னுடைய மடைதிறக்கும் ஆர்வத்தைக் காட்டினான் வேந்தன்.

நீ சொல்றது என்னவோ நல்லாதான் இருக்கு அவிய்ங்களுக்கு அங்கங்க ஆளுக இருக்கு. எங்க கம்ப்ளைண்டு பன்னுனாலும் அவிய்ங்களுக்கு நாமதான் பன்னுனோமுனு தெரிஞ்சு போயிடும். அப்பறம் தேவையில்லாத பிரச்சனையை கெளப்புவாய்ங்க அவிய்ங்க. வம்புக்குனே அலையிரவிய்ங்க. வேணுமுனா நான் ஒன்னு செய்யுறேன். இன்னைக்கு சாய்ங்காலமேகூட இந்த கம்மாய குத்தகை எடுக்கிற பையனோட அப்பா சீனிச்சாமிய பாத்து ஒரு வார்த்த கேட்டுட்டு வர்றேன். அவரு பாவம், நல்ல மனுசன். எனக்கு அப்பயிருந்து பழக்கம். நான்னா நல்லா மரியாத கொடுத்துப் பேசுவாரு. அவரு சரினுட்டாருனா, நாம தோண்ட ஆரம்பிச்சிருவோம். ஏதாவது கேட்டா சீனிச்சாமிதான் சொன்னாருனு சொல்லிக்கிருவோம் என்று தன்னுடைய பழைய நட்பின் தன்மையை உயர்த்திக்கொண்டு பேசினார் கருப்பன்.

தாத்தா! அப்படீனா, நீங்க அத என்னானு ஒரு வார்த்த கேட்டுருங்க. நாம தண்ணி வர்ரதுக்குள்ள தோண்டி வச்சிப்புடனும். அப்பறம் தண்ணி வந்து கம்மா ரொம்பிப் போச்சுனா செரமம். அப்பறமா தோண்டுனோமுனா கரகிர ஒடஞ்சிறுச்சுனு வையிங்க. அவ்வளவுதான் நம்மள கம்மா குத்தக எடுத்தவனும் சும்மா விடமாட்டான். கீழ வெள்ளாம போடுறவிய்ங்களும் சும்மா விட மாட்டாய்ங்க. வேணுமுனா அப்பாவையும் கூட கூட்டிக்கிட்டுப் போங்க, எவ்வளவு சீக்கிரம் பேசுறீங்களோ அவ்வளவு சீக்கிரம் நாம வேலைய ஆரம்பிச்சிரலாம் என்று தனது மடைதிறக்கும் ஆசையை காட்டும் விதமாக கருப்பனை கேட்டுக் கொண்டான் வேந்தன்.

மணி பரவாயில்லப்பா, உனக்கு இருக்குற மாதிரி எனக்கு பிள்ளைக துடிப்பா இருந்திருந்தா நானும் நல்லா இருந்திருப்பேனப்பா, என்னவோ என் காலம் இப்படியே ஓடிக்கிட்டிருக்கு, உம்மவன் சொன்னமாதிரி இன்னக்கி சாய்ந்தரமே என்ன சொல்றாருனு ஒரு வார்த்த கேட்டுப்புடலாம். என்னப்பு சொல்ற மணினு கருப்பனும் தன் பங்குக்கு ஆர்வத்தைக் காட்டினார்.

இன்னைக்கு முழுக்க முள்ளு வெட்ட வேண்டியிருக்கும். மிச்சம் மீதாரி இருந்துச்சுனா நாளைக்கு காலையில வெள்ளனா வேலைய முடிச்சுப்புட்டு நாளைக்கு சாய்ந்தரம் போய்ட்டு வந்திருவோம்ப்பா என்று பதிலளித்தார் மணி.

கருப்பனுக்கு எங்க போனாலும் நடராஜா வண்டிதான். ஆமாம், எங்க போனாலும் நடந்தேதான் போவாரு, நடந்தேதான் வருவாரு. இப்பவும்கூட எத்தன கிலோமீட்டருனாலும் நடந்து போயிருவாரு. அவரு நடைக்கு ஈடுகொடுத்து நடக்குறதுனா ரொம்ப கஷ்டம். வயல்ல வேல இல்லாத நாட்கள்ல டவுனுக்குள்ள கட்டட வேலைகளுக்கும் போயி சம்பாரிப்பாரு. அத வச்சிக்கிட்டு சாய்ந்தரம் ஆச்சுனா சரக்கடிச்சிருவாரு. மத்தவங்க மாதிரி இல்ல. எவ்வளவு குடிக்கனிமுங்குற அளவு தெரியும். அதே போல நிதானம் தடுமார மாட்டாரு. குடிச்சிட்டா போதும் சாப்பிட்டுப்பிட்டு கம்மு கொலையாம தூங்கிருவாரு. அவருக்கிட்ட இருக்கிற ஒரே பிரச்சினை தினமும் குடிப்பாரு. மத்தபடி அவரு இந்த நாட்டோட சிறந்த குடிமகந்தான்.

அன்றைய பொழுது ஓரளவுக்கு முள்ளு வெட்டியாச்சு. மிச்சமிருக்குறத பாத்தா, இன்னும் ஒரு நாள் முழுக்க தேவப்படும் போல இருக்கு. இதுவரைக்கும் வெட்டுன முள்ளுகள அங்கங்க கும்மல் கும்மலா குமிச்சி வச்சாங்க. மதியத்துக்கு மேலயே மணியோட பசங்களுக்கு கையில கொப்பளம் கொப்பளமா வர ஆரம்பிச்சிருச்சு. இந்த மாதிரி நேரங்கள்ல மணி எப்பவுமே வெளையாட்டா முதல்ல காய்காச்சுத்தான் பழம் பழுக்கும். ஆனா கடப்பாற, வம்பெட்டி பிடிச்சு வேலை செய்யும் போது மட்டுந்தான் கையில் முதல்ல கொப்பளம் பழுத்து பின்னாடிதான் கையில் காய்க்கும். கையி பழுத்திருக்கேனு அப்படியே விட்டுராம தொடர்ந்து வேல செஞ்சோமுனா கொப்பளம் டஞ்சு. கொஞ்ச நாள்லயே அந்த இடம் காய்ச்சுப் போயிடும். ஒரு தடவ காச்சிருச்சினா அதுக்கப்பறம் எத்தன தடவ கடப்பாற, வம்பட்டிய பிடிச்சாலும் கையி ஒன்னும் செய்யாது. வலி தெரியாத அளவுக்கு மரத்துப் போயிரும். கையி பழுக்குறது நல்லதுக்குத் தாம்பானு ஆறுதல் சொல்லுவாரு. ஆரம்பத்துல வலிய தாங்கீட்டமுனா பின்னாடி வலி இருக்காது. ஆரம்பத்திலேயே வலிக்குப் பயந்துட்டோமுனா காலம்பூராம் வலி இருந்துக்கிட்டேதான் இருக்குமுனு மணி சொல்றத கேக்கும்போது பசங்களுக்கு கையில இருக்குற வலி மறந்தே போயிரும். வேந்தனும்கூட தம்பிக்கிட்ட அடிக்கடி சொல்றது உண்டு. நோ பெயின் நோ கெயின், வலி இல்லையேல் பயனில்லை. எந்தவொரு மிகப்பெரிய வெற்றிக்கும் பின்னாடி ஒரு வலி மறஞ்சிருக்கும். இது உலகத்துல எல்லாருக்கும் பொருந்தும்னு சொல்லுவான். தம்பிகளும் அப்பா அம்மா பேச்சவிட அண்ணன் சொன்னா அதிக மரியாதை தருவாய்ங்க. வீட்டுல எந்த வேலை நடக்கனுமுனாலும் சரசுதான் முதல்ல வேலை சொல்லுவாங்க. சில நேரத்துல அத பசங்க காதுல வாங்கியும் வாங்காமலும் இருந்துட்டாய்ங்கனா, மணி வந்ததும் அவருக்கிட்ட சொல்லுவாங்க. அவரு சொல்லியும் சில நேரங்கள்ல ஏதாவது வேல நடக்கலேனா வேந்தண்ட்ட சொன்னா போதும் எப்படிப்பட்ட வேலையும் நடந்துரும், அந்த அளவுக்கு அண்ணன் தம்பிக்குள்ள ஒத்துமை இருக்குதுங்குறத ஊர்ல சொல்லாதவுங்க இல்ல. ஊர்ல பலபேரு மணி வீட்டுப் பிள்ளைகள பாருங்க. அதுக எப்படி இருக்குதுக, நீங்களுந்தான் இருக்கீங்களே. பாம்பும் கீரியுமாட்டமுனு சொல்லி அவங்க பிள்ளைகள திட்டுவாங்க.