ஞாயிறு, ஜூன் 27, 2021

கடைசிக் கண்ணீர் பாகம் 9

 

அவிய்ங்க சரக்குனா சண்டைக்கு அலையுராய்ங்க. நமக்கு எல்லாம் அது சரிவராதுப்பா. என் வயசுக்கு அவிய்ங்ககூட மல்லுக்கட்டிக்கிட்டு நிக்க முடியுமா? நீ சொல்லு. கம்மாய அவன் குத்தகைக்கு எடுக்குறான். அவன் சொல்றதுதான் இங்க சட்டமாயிருக்கு. இத்தன வருசம் கழிச்சு இன்னக்கு போயி வாமட தொக்கனுமுனா விடுவாய்ங்களா? மட தொறந்தா நல்லாத்தான் இருக்கும். ஆனா அவிய்ங்க மோசமானவிய்ங்கப்பா என்று மடையைத் திறப்பதன் சிக்கலை விளக்கினார் கருப்பன்.

அட என்ன தாத்தா, நீயும் அப்பா மாதிரியே பேசுர. அவிய்ங்க கம்மாய குத்தகை எடுக்குறாய்ங்கனா அதுக்காக கம்மாயே அவிய்ங்கதுனு சொல்றதா? கம்மாயில ண்ணி தேக்குறதே வெவசாயத்துக்குதான். மீன் வளக்குறதுக்கு இல்ல. மொதல்ல வெவசாயத்துக்குத்தான். அப்பறந்தான் மீன் வளக்குறதெல்லாம். அவிய்ங்க செய்யுறது தப்புனு தெரிஞ்சும் நாம இப்படியே கம்முனு இருந்தோமுனா கடைசிவரைக்கும் அப்படியேதான் இருக்கனும். மொதல்ல நாம மடை இருக்குற தடத்தத் தேடிக் கண்டுபிடிப்போம். நாம நாலஞ்சு பேரு சேர்ந்து தோண்ட ஆரம்பிப்போம். அப்படி அவிய்ங்க வந்து பிரச்சன ஏதாவது பன்னுனா பி.டபிள்யூ.டிபார்ட்மெண்டுல கம்ப்ளைண்ட் பன்னுவோம். அதுக்கு மேல போனா போலீசுல கம்ப்ளைண்ட் பன்னுவோம். அதுக்கு மீறி போனாக்க. கலைக்டர் ஆபீசுல மனு குடுத்துருவோம் தாத்தா. நீங்க எடத்த மட்டும் காமிங்க. மத்த விசயத்த பத்திக் கவலப்பட வேண்டாம். இந்த வருசம் எப்படியும் மடயத் தொரந்து புடுவோம் என்று தன்னுடைய மடைதிறக்கும் ஆர்வத்தைக் காட்டினான் வேந்தன்.

நீ சொல்றது என்னவோ நல்லாதான் இருக்கு அவிய்ங்களுக்கு அங்கங்க ஆளுக இருக்கு. எங்க கம்ப்ளைண்டு பன்னுனாலும் அவிய்ங்களுக்கு நாமதான் பன்னுனோமுனு தெரிஞ்சு போயிடும். அப்பறம் தேவையில்லாத பிரச்சனையை கெளப்புவாய்ங்க அவிய்ங்க. வம்புக்குனே அலையிரவிய்ங்க. வேணுமுனா நான் ஒன்னு செய்யுறேன். இன்னைக்கு சாய்ங்காலமேகூட இந்த கம்மாய குத்தகை எடுக்கிற பையனோட அப்பா சீனிச்சாமிய பாத்து ஒரு வார்த்த கேட்டுட்டு வர்றேன். அவரு பாவம், நல்ல மனுசன். எனக்கு அப்பயிருந்து பழக்கம். நான்னா நல்லா மரியாத கொடுத்துப் பேசுவாரு. அவரு சரினுட்டாருனா, நாம தோண்ட ஆரம்பிச்சிருவோம். ஏதாவது கேட்டா சீனிச்சாமிதான் சொன்னாருனு சொல்லிக்கிருவோம் என்று தன்னுடைய பழைய நட்பின் தன்மையை உயர்த்திக்கொண்டு பேசினார் கருப்பன்.

தாத்தா! அப்படீனா, நீங்க அத என்னானு ஒரு வார்த்த கேட்டுருங்க. நாம தண்ணி வர்ரதுக்குள்ள தோண்டி வச்சிப்புடனும். அப்பறம் தண்ணி வந்து கம்மா ரொம்பிப் போச்சுனா செரமம். அப்பறமா தோண்டுனோமுனா கரகிர ஒடஞ்சிறுச்சுனு வையிங்க. அவ்வளவுதான் நம்மள கம்மா குத்தக எடுத்தவனும் சும்மா விடமாட்டான். கீழ வெள்ளாம போடுறவிய்ங்களும் சும்மா விட மாட்டாய்ங்க. வேணுமுனா அப்பாவையும் கூட கூட்டிக்கிட்டுப் போங்க, எவ்வளவு சீக்கிரம் பேசுறீங்களோ அவ்வளவு சீக்கிரம் நாம வேலைய ஆரம்பிச்சிரலாம் என்று தனது மடைதிறக்கும் ஆசையை காட்டும் விதமாக கருப்பனை கேட்டுக் கொண்டான் வேந்தன்.

மணி பரவாயில்லப்பா, உனக்கு இருக்குற மாதிரி எனக்கு பிள்ளைக துடிப்பா இருந்திருந்தா நானும் நல்லா இருந்திருப்பேனப்பா, என்னவோ என் காலம் இப்படியே ஓடிக்கிட்டிருக்கு, உம்மவன் சொன்னமாதிரி இன்னக்கி சாய்ந்தரமே என்ன சொல்றாருனு ஒரு வார்த்த கேட்டுப்புடலாம். என்னப்பு சொல்ற மணினு கருப்பனும் தன் பங்குக்கு ஆர்வத்தைக் காட்டினார்.

இன்னைக்கு முழுக்க முள்ளு வெட்ட வேண்டியிருக்கும். மிச்சம் மீதாரி இருந்துச்சுனா நாளைக்கு காலையில வெள்ளனா வேலைய முடிச்சுப்புட்டு நாளைக்கு சாய்ந்தரம் போய்ட்டு வந்திருவோம்ப்பா என்று பதிலளித்தார் மணி.

கருப்பனுக்கு எங்க போனாலும் நடராஜா வண்டிதான். ஆமாம், எங்க போனாலும் நடந்தேதான் போவாரு, நடந்தேதான் வருவாரு. இப்பவும்கூட எத்தன கிலோமீட்டருனாலும் நடந்து போயிருவாரு. அவரு நடைக்கு ஈடுகொடுத்து நடக்குறதுனா ரொம்ப கஷ்டம். வயல்ல வேல இல்லாத நாட்கள்ல டவுனுக்குள்ள கட்டட வேலைகளுக்கும் போயி சம்பாரிப்பாரு. அத வச்சிக்கிட்டு சாய்ந்தரம் ஆச்சுனா சரக்கடிச்சிருவாரு. மத்தவங்க மாதிரி இல்ல. எவ்வளவு குடிக்கனிமுங்குற அளவு தெரியும். அதே போல நிதானம் தடுமார மாட்டாரு. குடிச்சிட்டா போதும் சாப்பிட்டுப்பிட்டு கம்மு கொலையாம தூங்கிருவாரு. அவருக்கிட்ட இருக்கிற ஒரே பிரச்சினை தினமும் குடிப்பாரு. மத்தபடி அவரு இந்த நாட்டோட சிறந்த குடிமகந்தான்.

அன்றைய பொழுது ஓரளவுக்கு முள்ளு வெட்டியாச்சு. மிச்சமிருக்குறத பாத்தா, இன்னும் ஒரு நாள் முழுக்க தேவப்படும் போல இருக்கு. இதுவரைக்கும் வெட்டுன முள்ளுகள அங்கங்க கும்மல் கும்மலா குமிச்சி வச்சாங்க. மதியத்துக்கு மேலயே மணியோட பசங்களுக்கு கையில கொப்பளம் கொப்பளமா வர ஆரம்பிச்சிருச்சு. இந்த மாதிரி நேரங்கள்ல மணி எப்பவுமே வெளையாட்டா முதல்ல காய்காச்சுத்தான் பழம் பழுக்கும். ஆனா கடப்பாற, வம்பெட்டி பிடிச்சு வேலை செய்யும் போது மட்டுந்தான் கையில் முதல்ல கொப்பளம் பழுத்து பின்னாடிதான் கையில் காய்க்கும். கையி பழுத்திருக்கேனு அப்படியே விட்டுராம தொடர்ந்து வேல செஞ்சோமுனா கொப்பளம் டஞ்சு. கொஞ்ச நாள்லயே அந்த இடம் காய்ச்சுப் போயிடும். ஒரு தடவ காச்சிருச்சினா அதுக்கப்பறம் எத்தன தடவ கடப்பாற, வம்பட்டிய பிடிச்சாலும் கையி ஒன்னும் செய்யாது. வலி தெரியாத அளவுக்கு மரத்துப் போயிரும். கையி பழுக்குறது நல்லதுக்குத் தாம்பானு ஆறுதல் சொல்லுவாரு. ஆரம்பத்துல வலிய தாங்கீட்டமுனா பின்னாடி வலி இருக்காது. ஆரம்பத்திலேயே வலிக்குப் பயந்துட்டோமுனா காலம்பூராம் வலி இருந்துக்கிட்டேதான் இருக்குமுனு மணி சொல்றத கேக்கும்போது பசங்களுக்கு கையில இருக்குற வலி மறந்தே போயிரும். வேந்தனும்கூட தம்பிக்கிட்ட அடிக்கடி சொல்றது உண்டு. நோ பெயின் நோ கெயின், வலி இல்லையேல் பயனில்லை. எந்தவொரு மிகப்பெரிய வெற்றிக்கும் பின்னாடி ஒரு வலி மறஞ்சிருக்கும். இது உலகத்துல எல்லாருக்கும் பொருந்தும்னு சொல்லுவான். தம்பிகளும் அப்பா அம்மா பேச்சவிட அண்ணன் சொன்னா அதிக மரியாதை தருவாய்ங்க. வீட்டுல எந்த வேலை நடக்கனுமுனாலும் சரசுதான் முதல்ல வேலை சொல்லுவாங்க. சில நேரத்துல அத பசங்க காதுல வாங்கியும் வாங்காமலும் இருந்துட்டாய்ங்கனா, மணி வந்ததும் அவருக்கிட்ட சொல்லுவாங்க. அவரு சொல்லியும் சில நேரங்கள்ல ஏதாவது வேல நடக்கலேனா வேந்தண்ட்ட சொன்னா போதும் எப்படிப்பட்ட வேலையும் நடந்துரும், அந்த அளவுக்கு அண்ணன் தம்பிக்குள்ள ஒத்துமை இருக்குதுங்குறத ஊர்ல சொல்லாதவுங்க இல்ல. ஊர்ல பலபேரு மணி வீட்டுப் பிள்ளைகள பாருங்க. அதுக எப்படி இருக்குதுக, நீங்களுந்தான் இருக்கீங்களே. பாம்பும் கீரியுமாட்டமுனு சொல்லி அவங்க பிள்ளைகள திட்டுவாங்க.