ஞாயிறு, ஜூன் 27, 2021

கடைசிக் கண்ணீர் பாகம் 10

 பாண்டி போட்டோ கட வச்சிருக்கான். மணி டீ குடிக்கிற கடையும் பாண்டி போட்டா கடையும் பக்கத்துல பக்கத்துலதான். காலைல வெள்ளனா டீ குடிக்கப் போறப்போ, எப்பவுமே கடைக்கு வெளிய இருக்குற வெளக்கமாத்த எடுத்து கடை முன்னாடி சுத்தமா கூட்டி விட்டுப்புட்டுத்தான் அங்கயிருந்து வயலுக்குப் போறதுனாலும் வீட்டுக்குப் போறதுனாலும் போவாரு.

மொத நாள் வெட்டுனது போக இரண்டாவது நாளும் எல்லாரும் போயி ஒரு வழியா கருவ முள்ளுகள கொஞ்சம் கொஞ்சமா வெட்டி முடிச்சாங்க. வெட்டிப்போட்ட முள்ள எல்லாம் காயிரதுக்கு ரெண்டு நாள் ஆகும். அதுக்கப்பறந்தான் தீ வைக்க முடியும் அதுனால வெட்டுற முள்ளுகள அங்கங்க குமிச்சு வச்சிட்டாங்க. வெட்டி முடிச்ச சந்தோசத்துல அப்பா நாளைக்காச்சும் போயி கருப்பன் தாத்தாவ கூட்டிக்கிட்டுப் போயி மட விசயத்த என்ன ஏதுனு கேட்டுக்கிட்டு வந்திருப்பா. தண்ணி வந்து கம்மா ரொம்பிப் போச்சுனா அப்பறம் தோண்டுறது செரமம்னு வேந்தன் மணிக்கிட்ட சொன்னான்.

கேப்பம்பா கேப்பம் நானும் அவர கடைய பக்கம் தேடிப்பார்த்தேன். ஆளக் காணல. அனேகமா எங்கயாச்சும் வேலைக்குப் போயிருப்பாரு. நாளைக்கு எப்படியாச்சும் ஆளப் பிடிச்சு காட்டீட்டு போவோமுனு சொன்னது மாதிரியே மணி மறுநாளு கருப்பன் டீ கடையில பிடிச்சிட்டாரு. ஏம்பா உன்ன நேத்தெல்லாம் தேடுனேன். ஆளக் காணோம். என்னாவாம் என்று மணி கேட்டதற்கு அட டவுனுக்குள்ள வேலைக்குப் போயிட்டேன். காலம்பரமே வந்து இழுத்துக்கிட்டுப் போய்ட்டாய்ங்க. நைட்டு வர்ரதுக்கு லேட்டாயிருச்சுனு காரணம் சொல்லிக்கிட்டிருந்தாரு கருப்பன்.

அட இந்த மட விசயம்மா சீனிச்சாமிய பாத்துப்புட்டு வந்துரலாமுனு சொன்னீங்கள்ல அதான் என்னனு கேக்கலாமுனு தேடுனேன் என்றார் மணி. நேத்து பாத்த வேல கொஞ்சம் பாக்கிக் கெடக்கு. இன்னைக்கு முடிச்சுப்புட்டு சீக்கிரமா வந்துருவேன். சாயங்காலமா போயி என்ன ஏதுனு ஒரு வார்த்த கேட்டுட்டு வந்துருவோம். சாயந்தரமா கடையப்பக்கம் வருவேல்ல. நானும் வந்துருரேன். அப்படியே பொடி நடையா போனோமுன்னா கேட்ரலாம்னு சொல்லிவிட்டு கருப்பன் வெலைக்குக் கெளம்பீட்டாரு. அன்னைக்கு சொன்னது மாதிரியே சாய்ந்தரம் ரெண்டு பேரும் சேர்ந்து சீனிச்சாமிய பாக்கப் போனாங்க. என்ன கருப்பா, என்ன மணிய கூட்டிக்கிட்டு இந்தப் பக்கமா வந்திருக்க? என்ன விசயமுனு சீனிச்சாமி கேட்க, கருப்பன் அது ஒன்னும் இல்லீங்க நம்ம வயலுக்கு மேவய அதான் கம்மாகரைய ஒட்டிக் கெடக்குல அந்த வயல மணி ஒத்திக்கு வாங்கியிருக்காரு. உங்களுக்குத் தெரியாதா? அந்த வயலுக்கு ஆத்துத் தண்ணி நேரா பாயாது. மேவயக்காரன் வயல் வழியாத்தான் பாச்சிக்கிறனும். இப்பத்தானே அப்படி, முன்னாடியெல்லாம் நாம கம்மா வாமட தண்ணியத்தானெ பாச்சிக்கிட்டு இருந்தோம். மடைய அடச்சதுக்கப்புறம் ரொம்ப வருசமா அந்த வய வெள்ளாம போடாம கெடந்துச்சு. அதுக்கப்புறமும் மே வயக்காரன்கிட்ட கேட்டு கேட்டே தண்ணி பாச்சிக்கிட்டு இருந்தாங்க. அது எல்லா நேரத்துலையும் ஒத்து வராதுல. அவன் ஒரு நேரம் சிரிக்கிறான். ஒரு நேரம் மொறைக்குறான். எப்ப எப்படினு அவன ஒன்னும் புரிஞ்சுக்க முடியல. அதான் மடைய கொஞ்சம் ரெடி பன்னி வச்சிக்கிட்டோமுனா ஆத்தர அவசரத்துக்குத் தண்ணிய பாச்சிக்குரலாம். யார பத்தியும் கவலப் படவேண்டியதில்ல. எப்பவுமே நீங்கதான் குத்தக எடுக்குறீங்க. இந்த வருசமும் நீங்கதான் எடுப்பீங்க. அதான் உங்ககிட்ட ஒரு வார்த்த சொல்லீட்டு மடய ரெடி பன்னிப்புடலாமுனு கேட்டுப் போகலாமுனு வந்தோம். நீங்க பாத்து சொன்னீங்கனா செஞ்சுபுடலாம். ஆத்துலவேற தண்ணி வரப்போகுதுனு பேசிகிறாங்கனு கருப்பன் தலையைக் குணிந்தவாறு, தான் வந்த காரியத்த சொல்லீட்டாரு.

அட என்ன கருப்பா, இதுக்குப்போயி எங்கிட்ட கேட்டுக்கிட்டு. அது கவர்மெண்டு கம்மாப்பா, அதுவும்வே அங்க ற்கனவே மட இருந்துச்சுதானே. தோண்டிக்கங்கப்பா. நான் அப்பவே சொன்னேன் அங்க வாமட இருக்கு அத மூடிப்புடாதீங்கப்பானு. இப்ப அத கண்டுபிடிக்கிறதே செரமப்பா. எப்படி கண்டுபிடிக்கப் போறீங்க. பொதரு மண்டிப் போயில கெடக்கும். ஆனா வாமடையில இருந்த தூம்பு இன்னும் உள்ளதான் இருக்கும். ஜே.சி.பி கொண்டாத்தாதானே தோண்ட முடியும். ஆளுகள வச்சு எப்படித் தோன்றது? பாத்துக்கோங்க. எப்படி வசதியோ அப்படி செய்யுங்கனு பெருந்தன்மையா பேசினாரு சீனிச்சாமி.

அதக் கேக்கும் போது மணிக்கும் கருப்பனுக்கும் மனசு ஆறுதலா இருந்துச்சு. சரி அப்ப நாங்க வர்ரோமுங்கய்யா என்று நன்றி தெரிவிக்கும் விதமாக இருவரும் புறப்பட்டு வீடு திரும்பினர். வாமடைய தோண்டச் சொல்லீட்டாங்கனு மணி சொன்னதக் கேட்டு வேந்தனுக்கும் அவனது தம்பிகளுக்கும் சந்தோசம். நாளைக்கே போயி எல்லாத்தையும் தோண்டிப் போட்டு மடய ரெடி பன்னிட்டு வந்திரலாமுனு எல்லாரும் முடிவெடுத்தனர். அது போலவே மணி கருப்பன் ஆகிய இருவருடன் வேந்தனும் தம்பிகளும் காலையில் எழுந்து வயலுக்குச் சென்றனர். கருப்பன் தனது ஞாபக சக்தியைக் கொண்டு மடையின் உள்புறம் மற்றும் வெளிப்புற துவாரப் பகுதியை கணிக்கலானார். சில நிமிடங்களின் தேடலுக்குப் பிறகு மணியும் கருப்பனும் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்தனர். அவர்கள் சொன்ன இடத்தில் வேந்தனும் அவனது தம்பிகளும் தோண்டத் துவங்கினர். பல வருடங்களாக இறுகிப்போயிருந்த இடமாதலால் பாறைபோல் இறுகிக் கிடந்து. கரை கல்லுமாதிரி இறுகிக்கெடக்கு. ஆரம்பமே இப்படி இறுகிக் கெடக்கே. எப்படி தோண்டுறது என்கி மலைப்பு எல்லோர் மனசுலயும் வந்தது. இப்படித் தோண்டினோமுனாஅதுல கொஞ்சம் ரிஸ்க் இருக்கு. கரை ஒடச்சிருச்சுனா திரும்ப அடைக்கிறது ரொம்பச்செரமம். அதையும் பாத்துக்குறனும் ரொம்ப சேப்டியாத்தான் தோண்டனும். கம்மா கர ஒடச்சுக்கிச்சுனா கம்மா குத்தக எடுத்தவனுக்கும் பதில் சொல்லனும். கீழ வெள்ளாம போட்டவனுக்கும் பதில் சொல்லனும். அதுமட்டுமல்ல கவர்மெண்டு காரணுக்கும் பதில் சொல்லனும். இதெல்லாம் யோசிச்சுக்கிட்டுத்தான் செய்யனும். ஜெ.சு.பி வச்சு தோண்டுறதுனா அதுக்கு நெரையா காசு தேவப்படும். அவ்வளவு செலவழிச்சு தோண்டுறதுக்கு ஆளுக ஒத்துவரமாட்டாய்ங்க. அதுனால ஒரே வழிதான் இருக்கு கம்மாயில தண்ணி ரொம்பின பிறகு கொஞ்சம் கொஞ்சமா கவனமா தோண்டுறதுதான். களிமண்ணு எவ்வளவுதான் கல்லு மாதிரி இருந்தாலும் தண்ணி பட்டிருச்சுனா போதும் மாவு மாதிரி ஊரிப் போயிரும் கடப்பாரை வச்சு தோண்ட ஈசியா இருக்கும்