நன்னூல் பாடக் குறிப்பு - தமிழ் விர்சுவல் இணையதளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நன்னூல் பாடக் குறிப்பு - தமிழ் விர்சுவல் இணையதளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜூன் 04, 2021

மெய்யெழுத்துகள் பிறப்பு

 

மெய்யெழுத்துகள் பிறப்பு - தொல்காப்பியர் கருத்து

 

மெய்யெழுத்துகள் எவ்வாறு பிறக்கின்றன என்பதைத் தொல்காப்பியம் தெளிவாக விளக்கியுள்ளது. தொல்காப்பியம் மெய்யெழுத்துகளின் பிறப்பினைக் குறித்து விளக்கும்போது இரண்டு வகையாக விளக்குகின்றது. அவை,

 

(1)வல்லின, மெல்லின மெய்களின் பிறப்பு

(2)இடையின மெய்களின் பிறப்பு

3.1.1 மெய்யெழுத்துகளின் பிறப்பிடம்

 

ஒவ்வோர் எழுத்துக்கும் அது பிறக்கின்ற இடமும், பிறப்பதற்குத் தேவைப்படும் உறுப்புகளின் முயற்சியும் இன்றியமையாதன என்று முன்னரே அறிந்திருப்பீர்கள். அந்த வகையில் மெய்யெழுத்துகள் பிறக்கின்ற இடம் குறித்துத் தொல்காப்பியம் கூறும் கருத்துகளை அறியலாம். உந்தியில் இருந்து எழும் காற்று தலை, கழுத்து, நெஞ்சு ஆகிய மூன்று இடங்களில் வந்து தங்கிப் பின்னர்ப் பல்வேறு உறுப்புகளால் வெவ்வேறு எழுத்தாகப் பிறக்கும் என்பதை முதல் பாடத்தில் கண்டோம்.

 

இங்கு மெய்யெழுத்துகள் பிறக்கின்ற இடங்களைப் பின்வருமாறு காணலாம். அவை,

 

(1)வல்லின மெய்கள்

- தலையில் தங்கிய காற்றினால் பிறக்கின்றன.

 

(2)மெல்லின மெய்கள்

- மூக்கில் தங்கிய காற்றினால் பிறக்கின்றன.

 

(3)இடையின மெய்கள்

- கழுத்தில் தங்கிய காற்றினால் பிறக்கின்றன.

 

என்பன.

 

இதனைத் தொல்காப்பிய நூற்பா (எழுத்ததிகாரம் 3:10), அதன் உரை ஆகியவற்றிலிருந்து அறியலாம்.

 

3.1.2 வல்லின, மெல்லின மெய்களின் பிறப்பு

 

மெய்யெழுத்துகளின் வகைப்பாட்டில் வல்லினம் என்றும், மெல்லினம் என்றும் தனித்தனியாக இருக்கும் போது, இவ்விரு வகை மெய்களின் பிறப்பினைச் சேர்த்துக் கூறியிருப்பதன் காரணம் என்ன என்று உங்களுக்குள் வினா எழும். அவ்வாறு வினா எழுவது பொருத்தம்தான். இந்த வினாவிற்கு விடை இதுவே - மெய்யெழுத்துகளின் வரிசையில் ஒரு வல்லின எழுத்துப் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சியே அதையடுத்து வைக்கப்பட்டுள்ள மெல்லின எழுத்துப் பிறப்பதற்கும் தேவைப்படுகின்றது. எனவேதான், ஒரு வல்லினத்தை அடுத்து ஒரு மெல்லின மெய் என்ற முறையில் அவை வைக்கப்பட்டுள்ளன.

 

3.1.3 க் ங் - மெய்களின் பிறப்பு

 

வல்லின மெய்களில் முதலில் வருவது ‘க்’ - ஆகும். அதைப்போல மெல்லின மெய்களில் முதலில் வருவதும் ‘ங்’ - ஆகும். இவ்விரண்டும் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சியில் ஒத்துழைக்கும் உறுப்புகள் அண்ணமும் (மேல்வாய்) நாக்கும். இவை, நாவின் அடி மேல்வாயின் அடிப்பகுதியைச் சென்று பொருந்தும்போது பிறக்கின்றன என்கிறார் தொல்காப்பியர். இதனை,

 

ககார ஙகாரம் முதல்நா அண்ணம் (எழுத்து. 3 : 89)

 

என்னும் தொல்காப்பிய நூற்பா விளக்குகின்றது

 

3.1.4 ச் ஞ் - மெய்களின் பிறப்பு

 

அடுத்துவரும் மெய்களான ‘ச்’ என்னும் வல்லின மெய்யும், ‘ஞ்’ என்னும் மெல்லின மெய்யும், நாவின் இடைப்பகுதி, அண்ணத்தின் (மேல்வாயின்) இடைப்பகுதியைச் சென்று பொருந்தும் நிலையில் பிறக்கும்.

 

இதனை,

 

சகார ஞகாரம் இடைநா அண்ணம் (எழுத்து. 3 : 90)

 

என்ற நூற்பா கூறுகின்றது

 

3.1.5 ட் ண் - மெய்களின் பிறப்பு

 

‘ட்’, ‘ண்’ ஆகிய இரு மெய்களும் ஒரே முயற்சியினால் தோன்றுகின்றன. இவை நாவின் நுனி, அண்ணத்தின் நுனிப்பகுதியைச் சென்று பொருந்துகின்ற நிலையில் பிறக்கின்றன. இதனை,

 

டகாரம் ணகாரம் நுனிநா அண்ணம் (எழுத்து. 3 : 91)

 

என்னும் தொல்காப்பிய நூற்பா விளக்குகிறது.

 

3.1.6 த் ந் - மெய்களின் பிறப்பு

 

மேல்வாய்ப் பல்லினது அடிப்பகுதியை நாவின் நுனியானது நன்கு பரந்து ஒற்றும் போது 'த்', 'ந்' என்னும் மெய்கள் பிறக்கின்றன. இதனை,

 

அண்ணம் நண்ணிய பல்முதல் மருங்கின்

நாநுனி பரந்து மெய்யுற ஒற்றத்

தாம்இனிது பிறக்கும் தகாரம் நகாரம்

(எழுத்து. 3 : 93)

 

என்னும் நூற்பா எடுத்துக் கூறுகின்றது. இந்நூற்பா தகாரம், நகாரம் எனப்படும் த், ந் என்னும் மெய்கள் தாம் இனிதாகப் பிறப்பதற்கு ‘மேல்வாய்ப் பல்லின் அடிப்பகுதியை நாவின் நுனி நன்கு சென்று பொருந்த வேண்டும்’ என்று அழகுபடக் கூறுகின்றது.

 

3.1.7 ப் ம் - மெய்களின் பிறப்பு

 

'ப்', 'ம்' என்னும் இந்த இரு மெய்களும் இரு இதழ்களின் (உதடுகள்) செயற்பாட்டால் பிறக்கின்றன. மேல் இதழும் கீழ் இதழும் ஒன்றோடு ஒன்று இயைந்து பொருந்திட, 'ப்', 'ம்' என்பவை பிறக்கின்றன. இதனை,

 

இதழ்இயைந்து பிறக்கும் பகாரம் மகாரம்      (எழுத்து. 3 : 97)

 

என்னும் நூற்பா தெரிவிக்கின்றது.

 

3.1.8 ற் ன் - மெய்களின் பிறப்பு

 

நாவின் நுனி, அண்ணத்தைச் சென்று நன்கு ஒற்றும் போது ‘ற்’ ‘ன்’ என்னும் மெய்கள் தோன்றும். இதனை,

 

அணரி நுனிநா அண்ணம் ஒற்ற

றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும்

                                                                                                                        (எழுத்து. 3: 94)

                                                                        என்னும் நூற்பா விளக்குகின்றது.

உயிர் எழுத்துகளின் பிறப்பு

 

உயிர் எழுத்துகளின் பிறப்பு - பொது

            தமிழில் உள்ள எழுத்துகளை முதல் எழுத்துகள், சார்பு எழுத்துகள் என்று இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்துக் காணும் முறையை நீங்கள் முன்பே அறிந்திருப்பீர்கள். இந்த முதல் எழுத்துகள் முப்பதில் முதலில் வருவன உயிர் எழுத்துகள் பன்னிரண்டு ஆகும். இவை உயிர் போலத் தனித்து இயங்கும் தன்மை உடையவை ஆதலால் உயிர்எழுத்துகள் என்று பெயர் பெற்றன. எனவே எழுத்துகளின் பிறப்பிற்கான இலக்கணத்தைக் காணும் போது உயிர்எழுத்துகளின் பிறப்பினை முதலில் அறிவது மிகவும் பொருத்தமானது.

தொல்காப்பியர் கருத்து

            உயிர்எழுத்துகளின் பொதுப் பிறப்புப் பற்றித் தொல்காப்பியர் கூறும் கருத்துகளை முதலில் காண்போம். முந்தைய பாடத்தில் எழுத்துகளின் பிறப்பிற்குக் கூறப்பட்ட பொதுவான அடிப்படை இலக்கணம் உயிரெழுத்துகளின் பிறப்பிற்கும் பொருந்தும்.

            உயிர்எழுத்துகள் பன்னிரண்டும் மிடற்றில் (கழுத்தில்) பிறக்கும் காற்றினால் உருவாகி ஒலிப்பன. தம்நிலையில் இருந்து மாறாமல் இருக்கும் உயிர்எழுத்துகள் மட்டுமே கழுத்தில் இருந்து தோன்றுவன. ‘தம்நிலையில் இருந்து திரியாமல்’ இருப்பது என்னவெனில், ஓர் உயிர்எழுத்து எந்தவித மாற்றமும் பெறாமல் இருப்பது ஆகும். சில உயிர் எழுத்துகள், எடுத்துக்காட்டாக ‘இகர’மும் ‘உகர’மும், குற்றியலிகரமாகவும், குற்றியலுகரமாகவும் வருகின்ற போது, அவை தம்நிலையில் இருந்து திரிந்து (மாறி) விடுகின்றன. அவ்வாறு இல்லாமல், இயல்பாக வருகின்ற உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மிடற்றில் பிறக்கும் காற்றினால் எழுத்துஒலிகளாகத் தோன்றுகின்றன என்பது தொல்காப்பியர் கருத்தாகும். இதனை,

அவ்வழிப்,

பன்னீ ருயிருந் தந்நிலை திரியா

மிடற்றுப் பிறந்த வளியி னிசைக்கும்   

                                                                             (எழுத்து. 84)

(தந்நிலை = தம்நிலை; மிடறு = கழுத்து; வளி = காற்று)

என்னும் தொல்காப்பிய நூற்பா விளக்குவதைக் காணலாம்.

நன்னூலார் கருத்து

இனி, உயிர்எழுத்துகளின் பிறப்புப் பற்றி நன்னூல் ஆசிரியர் கூறும் கருத்துகளைத் தெரிந்து கொள்ளலாம்.

            நன்னூல் ஆசிரியரும் எழுத்துகள் பிறப்பதற்குக் கூறப்பட்ட பொதுவான இலக்கணத்தின் அடிப்படையில்தான் உயிர்எழுத்துகளும் பிறக்கும் என்கிறார். அந்த வழியில் உயிர்எழுத்துகள் பிறப்பதற்கு இடம் மிடறு ஆகும் (கழுத்து) என்பது அவர் கருத்து. நன்னூல் உயிர்எழுத்துகள் பிறப்பதற்கு உரிய இடத்தைச் சொல்லுகின்ற இந்த இடத்தில், மெய்யெழுத்துகள் பிறப்பதற்கான இடங்களையும் சேர்த்துச் சொல்கின்றது.

நூற்பா

அவ்வழி,

ஆவி இடைமை இடம் மிட றுஆகும்

மேவு மென்மை மூக்கு உரம் பெறும் வன்மை

                                                                                      (நன்னூல். 74)

(ஆவி = உயிர்; இடைமை = இடையினம்; மென்மை = மெல்லினம்; உரம் = நெஞ்சு; வன்மை = வல்லினம்)

'அவ்வழி' என்பது முந்தைய பாடத்தில் சொல்லப்பட்ட 'எழுத்துப் பிறப்புக்கான பொது இலக்கணத்தின்படி' எனப் பொருள்தரும்.

            இந் நூற்பா உயிர்எழுத்துகளுக்கும் மெய்எழுத்துகளுக்கும் (முதல் எழுத்துகளுக்குப்) பிறப்பிடம் கூறுவதாக அமைகின்றது. எனினும் நாம் இந்தப் பாடத்தில் உயிர்எழுத்துகள் பிறப்பின் இலக்கணம் பற்றி மட்டும் காண்போம்.

நன்னூல், உயிர்எழுத்துகளில் ‘இயல்பாக அமையும் உயிர்’ என்றும் ‘தந்நிலை திரியும் உயிர்’ என்றும் வேறுபடுத்திக் கூறவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

            இப்போது, உயிர்எழுத்துகளின் பொதுவான பிறப்பிடம் குறித்த செய்திகளைத் தொகுத்துக் காணலாம்.

(1)       உயிர்எழுத்துகள், எழுத்துஒலிகளின் பொதுவான பிறப்பிட இலக்கணத்தின் படியே            பிறப்பன.

(2)       உயிர்எழுத்துகளின் பிறப்பிடம் கழுத்து ஆகும்.

(3)       தனியே வருகின்ற உயிர்எழுத்தும், எந்தவித மாற்றமும் அடையாத உயிர்எழுத்தும்             மட்டுமே கழுத்தில் இருந்து தோன்றும். தன் மாத்திரை அளவில் இருந்து குறைந்து        ஒலிக்கும் உயிரொலிகளுக்கு இந்தப் பிறப்பிட விதி பொருந்தாது.

பிறப்பிடம் பற்றித் தொல்காப்பியமும் நன்னூலும்

            உயிர்எழுத்துகளின் பிறப்பிடம் பற்றித் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளில் காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகளைத் தொகுத்துக் காண்போம். இச்செய்திகளை மேலும் நன்கு விளங்கிக் கொள்வதற்கு இது பயன்படும்.

ஒற்றுமை

            முதலில், தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளில் காணப்படும் ஒற்றுமைகளைக் காண்போம்.

(1)       இரண்டு நூல்களும், எழுத்துஒலிகள் பிறப்பதற்குத் தேவைப்படும் பொதுவான முயற்சியே, உயிர்எழுத்துகள் பிறப்பதற்கும் தேவைப்படுவது என்பதை உரைக்கின்றன.

(2)       இவ்விரு நூல்களும் உயிர்எழுத்துகள் பிறக்கின்ற இடமாகக் கழுத்தைக் (மிடறு) குறிப்பிடுகின்றன.

வேற்றுமை

            இனி, தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளில் காணப்படும் வேற்றுமையினைக் காணலாம்.

            தொல்காப்பியம் ‘தந்நிலை திரியா’ என்ற தொடரைப் பயன்படுத்தித் தந்நிலை திரியும் உயிர்எழுத்துகளின் பிறப்பிடம் வேறு என்பதை நுட்பமாகப் புலப்படுத்துகின்றது.

            நன்னூலில் அனைத்து உயிர்எழுத்துகளுக்கும் பொதுவாகப் பிறப்பிட இலக்கணம் காணப்படுகின்றது. இதில் இந்த நுட்ப வேறுபாடு கூறப்படவில்லை.

பிறப்பு முயற்சி வேறுபாடும் உயிரெழுத்துகளின் வகைப்பாடும்

            பன்னிரண்டு உயிர்எழுத்துகளும் கழுத்தில் இருந்து தோன்றுகின்றன. ஆனால் இந்த உயிர்எழுத்துகள் அனைத்தும் ஒரே முயற்சியினால் வெளிப்படுவது இல்லை. உயிர்எழுத்துகள் ஒரே இடத்தில் இருந்து பிறக்கின்றன. ஆனால் ஒரே முயற்சியினால் பிறப்பதில்லை என்பதை மனத்தில் கொள்ள வேண்டும்.

            பன்னிரண்டு உயிர்எழுத்துகள் மூன்று விதமான முயற்சியினால் பிறக்கின்றன. அந்த முயற்சி வேறுபாட்டின் அடிப்படையில் உயிர்எழுத்துகளைப் பிரித்துக் காண்போம்.

            (1)       அ, ஆ எழுத்துகளின் பிறப்பு

            (2)       இ, ஈ, எ, ஏ, ஐ எழுத்துகளின் பிறப்பு

            (3)       உ, ஊ, ஒ, ஓ, ஒள எழுத்துகளின் பிறப்பு

 அ, ஆ உயிர்எழுத்துகளின் பிறப்பு

தொல்காப்பியர் கருத்து

            உயிர்எழுத்துகள் பன்னிரண்டனுள் முதலில் வருகின்ற ‘அ’கரமும் ‘ஆ’காரமும் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சி பற்றி முதலில் காண்போம். இவ்விரண்டு உயிர்எழுத்துகளும் நிறை உயிர் முயற்சியுடன் வாயைத் திறக்கின்ற போது தோன்றுகின்றன. ‘வாயைத் திறக்கின்ற’ முயற்சியைத் தமிழ் இலக்கண ஆசிரியர்கள் ‘அங்காத்தல்’- என்ற சொல்லால் குறிப்பிடுவதை அறியலாம். அ, ஆ உயிர்எழுத்துகளின் பிறப்புப் பற்றித் தொல்காப்பியர்,

அவற்றுள்

அ ஆ ஆயிரண்டு அங்காந்து இயலும்

                                                                                                (எழுத்து. 85)

            எழுத்தொலிகள் பிறப்பதற்கு நான்கு உறுப்புகளின் முயற்சியும் தொழிலும் தேவைப்படுவன என்று முந்தைய பாடத்தில் படித்தீர்கள். அந்த நான்கு உறுப்புகள்

            (1)       இதழ்

            (2)       நா

            (3)       பல்

            (4)       அண்ணம்

            என்பவை. இந்த நான்கினுள் ‘அண்ணம்’ என்பது ‘மேல்வாய்’ என்று பொருள்படும்.

எனவே மேல்வாயைத் திறக்கும் முயற்சியின் பயனாக அகர ஆகார உயிர்ஒலிகள் தோன்றும் என்று அறியலாம்.

நன்னூலார் கருத்து

உயிர்எழுத்துகளில் அகரமும் ஆகாரமும் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சியை நன்னூலும் தெரிவிக்கின்றது.

முயற்சியுள் ‘அ ஆ அங்காப்பு உடைய’

                                                                                      (நூற்பா. 75)

            அ, ஆ ஆகிய இவை இரண்டும் ‘வாயைத் திறத்தல் - அங்காத்தல்’ என்னும் முயற்சியின் பயனாகத் தோன்றுகின்றன என்பதை, நன்னூலும் தெளிவுபடுத்துகின்றது.

இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய எழுத்துகளின் பிறப்பு

இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய எழுத்துகளின் பிறப்புப் பற்றித் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளைக் காண்போம்.

தொல்காப்பியர் கருத்து

            இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய ஐந்து எழுத்தொலிகள் தோன்றுவதற்குத் தேவைப்படும் முயற்சிகள் குறித்துத் தொல்காப்பியம் தெரிவிக்கும் கருத்துகளை முதலில் காண்போம். இந்த ஐந்து உயிர்எழுத்துகளும் தோன்றுவதற்கு இரு முயற்சிகள் தேவைப்படுகின்றன. அவை,

தேவைப்படும் முயற்சி:

(1)       வாயைத் திறத்தலாகிய அங்காத்தல்

(2)       மேல்வாய்ப் பல்லை, நாக்கினது அடிப்பகுதியின் விளிம்பு சென்று பொருந்தும் முயற்சி ஆகியன.

ஒத்துழைக்கும் உறுப்புகள்:  மேல்வாய்ப்பல், நாக்கு ஆகியன

இந்த எழுத்துகள் பிறப்பதற்கு ஒத்துழைக்கும் உறுப்புகள் மேல்வாய்ப் பல், நாக்கு என்பன. இதனைத் தொல்காப்பியம்,

இ, ஈ, எ, ஏ, ஐ யென இசைக்கும்

அப்பால் ஐந்தும் அவற்று ஓர் அன்ன

அவைதாம்

அண்பல் முதல்நா விளிம்பு உறல் உடைய

                                                                                                (எழுத்து. 86)

(அன்ன = போன்றவை; நா = நாக்கு; அண்பல் = மேல்வாய்ப்பல்; முதல்நா = நாவின் அடி)

என்று விளக்குகின்றது. இந்நூற்பா இந்த ஐந்து உயிர்எழுத்துகளும் ஒரே முயற்சியினால் பிறக்கின்றன என்று கூறுகின்றது. ‘ஐந்தும் அவற்று ஓர் அன்ன' என்னும் தொடர், அகரம் ஆகாரம் என்னும் எழுத்துகள் பிறப்பதற்குத் தேவைப்படும் அங்காத்தல் முயற்சியே இந்த எழுத்துகள் பிறப்பதற்கும் தேவைப்படுகின்றது என்பதை உணர்த்துகிறது.

 நன்னூலார் கருத்து

இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய உயிர்எழுத்துகள் பிறப்பது குறித்து நன்னூல் தெரிவிக்கும் கருத்துகளைக் காண்போம்.

இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய உயிர்எழுத்துகள் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சி பற்றியும், ஒத்துழைக்கும் உறுப்புகள் குறித்தும் நன்னூல் எடுத்துரைக்கின்றது. அவை,

தேவைப்படும் முயற்சி :      

(1) வாயைத் திறத்தலாகிய அங்காத்தல்.

(2) மேல்வாய்ப் பல்லை நாக்கின் அடியின் ஓரமானது சென்று பொருந்துதல்.

ஒத்துழைக்கும் உறுப்புகள்: மேல்வாய்ப்பல், நாக்கு ஆகியன.

இதனை,

இ ஈ எ ஏ ஐ அங்காப்போடு

அண்பல் முதல்நா விளிம்புற வருமே

                                                                        என்று நன்னூல் நூற்பா (76) விளக்குகின்றது.

(அங்காத்தல் = வாய் திறத்தல்; முதல் நா = அடி நாக்கு; விளிம்பு = ஓரம்)

உ, ஊ, ஒ, ஓ, ஒள ஆகிய எழுத்துகளின் பிறப்பு

தொல்காப்பியர் கருத்து

            தொல்காப்பியம், உ, ஊ, ஒ, ஓ, ஒள ஆகிய உயிர்எழுத்துகள் ஐந்தும் இதழ் குவிந்து சொல்லப் பிறக்கும் என்று விளக்குகின்றது. இதனை,

உ ஊ ஒ ஓ ஒள என இசைக்கும்

அப்பால் ஐந்தும் இதழ் குவிந்து இயலும்

                                                                                      (எழுத்து. 87)

            என்னும் தொல்காப்பிய நூற்பா உரைக்கின்றது. இந்த ஐந்து உயிர்எழுத்துகளும் பிறப்பதற்கு உயிரின் முயற்சியோடு, இதழ் குவிதலாகிய முயற்சியும் தேவைப்படுகின்றது என்பது தெளிவாகிறது.

நன்னூலார் கருத்து

            உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் இந்த ஐந்து உயிர்எழுத்துகளும் எவ்வாறு பிறக்கின்றன என்பதை நன்னூலும் விளக்கியுள்ளது.

            நன்னூல் இந்த எழுத்துகள் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சியையும், ஈடுபடும் உறுப்புகளையும் மிகச் சுருக்கமாகத் தெரிவிக்கக் காணலாம். இந்த உயிர்எழுத்துகள் இதழ் குவிதலால் தோன்றுகின்றன என்று தெரிவிக்கின்றது. இக்கருத்தை,

உ, ஊ, ஒ, ஓ, ஒள இதழ் குவிவே

                                                                                                (நூற்பா. 77)

                                    என்னும் நூற்பாவின் மூலம் நன்னூல் விளக்கிச் செல்கின்றது.

உயிர் ஒலிகள் பிறப்பது பற்றித் தொல்காப்பியமும் நன்னூலும்

            உயிர்ஒலிகள் பிறப்பது பற்றித் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவித்த கருத்துகளில் வெளிப்படும் ஒற்றுமை காணத்தக்கது.

ஒற்றுமை

            இரு இலக்கண நூல்களும் அ, ஆ ஆகிய உயிர்எழுத்துகள் இரண்டும் வாயைத் திறத்தலால் பிறக்கும் என்றும், இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய ஐந்து உயிர்எழுத்துகளும் மேல்வாய்ப் பல்லை (அண்பல்) நாக்கின் அடியானது (நாமுதல்) சென்று பொருந்த (விளிம்புறப்) பிறக்கும் என்றும், உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் ஐந்து உயிர்எழுத்துகளும் இதழ் குவிதலால் பிறக்கும் என்றும் கூறுகின்றன. எனவே இதில் இரண்டு நூலாசிரியர்களுக்கும் இடையில் எந்த வித வேறுபாடும் இல்லை.

எழுத்துக்களின் பிறப்பு

 

தொல்காப்பியரின் விளக்கம்

            தமிழ் மொழியில் இன்று வரை கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழமையானது தொல்காப்பியம். இதனை இயற்றியவர் தொல்காப்பியர். இந்நூல் கி.மு. 4ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இந்நூல் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் தமிழில் உள்ள ஐந்து இலக்கணங்களையும் விளக்குகின்றது. இத்தகைய பழமையான தமிழ் இலக்கண நூல், எழுத்துகளின் பிறப்புப் பற்றி ஆராய்ந்து கூறியிருப்பது சிறப்புடையதாகும்.

எழுத்தொலி பிறத்தல்

            எழுத்தை உச்சரிக்க முயலும் ஒருவரின் கொப்பூழில் (உந்தி) இருந்து காற்று மேல் நோக்கி எழுகின்றது. இவ்வாறு எழும் காற்று அவரது தலை, கழுத்து, நெஞ்சு (மார்பு) ஆகிய இடங்களில் சென்று தங்கி (தொட்டு) நிற்கும். பின்னர், தலை, கழுத்து, நெஞ்சு ஆகிய இந்த மூன்று உறுப்புகளுடன், பல், இதழ், நாக்கு, மூக்கு, அண்ணம் (மேல்வாய்) ஆகிய ஐந்து உறுப்புகளும் சேர்ந்து இந்த எட்டு உறுப்புகளின் பொருத்தமான முயற்சியின் விளைவாக வெவ்வேறு எழுத்து ஒலிகள் பிறக்கின்றன. தமிழில் உள்ள எல்லா எழுத்து ஒலிகளும் இந்த முறையிலேயே பிறக்கின்றன. இதுவே எழுத்துப் பிறப்பின் பொதுவான இலக்கணம் ஆகும். (தொல்காப்பியம். எழுத்ததிகாரம், 83)

வெவ்வேறு ஒலிகள்

            ஆனால், எல்லா எழுத்தொலியும் தோன்றுவதற்கு இந்த எட்டு உறுப்புகளின் முயற்சியும் ஒத்துழைப்பும் தேவைப்படுவது இல்லை. தேவைப்படும் உறுப்புகள் பொருந்தி இயங்கும் தன்மைக்கேற்பவே வெவ்வேறு ஒலிகள் தோன்றும். ஒவ்வோர் எழுத்தொலியும் தோன்றுவதற்கு வெவ்வேறு உறுப்புகளின் ஒத்துழைப்புக் காரணமாக அமைகின்றது.

தேவைப்படும் முயற்சி

            ஒலியை எழுப்ப நினைக்கும் ஒருவர் முதலில் செய்ய வேண்டியது முயற்சி ஆகும். இந்த முயற்சியை இலக்கண ஆசிரியர்கள் 'உயிரின் முயற்சி’ என்று அழைக்கின்றனர். ஒலியை எழுப்பக் கருதிய ஒருவரின் உயிர்ப்புத் தன்மையே அடுத்தடுத்த முயற்சிக்குக் காரணமாக அமைகிறது. அதனைத் தொடர்ந்து உறுப்புகளின் ஒத்துழைப்புகளுக்கும் அதுவே காரணமாகிறது. எனவே எழுத்து ஒலிகள் தோன்றுவதற்கு மனித முயற்சி மிகவும் இன்றியமையாததாகும்.

            இவ்வகையில், தொல்காப்பியரின் கருத்துப்படி, உயிரின் முயற்சியால் கொப்பூழில் இருந்து காற்று எழுகின்றது. இக்காற்று மேல்நோக்கிச் செல்கின்றது. இம்முயற்சிக்கு உறுப்புகள் துணை செய்கின்றன. இந்த உறுப்புகளில் அக்காற்று சென்று பொருந்துகின்றது. மேல்நோக்கி எழும் இக்காற்று பொருந்தும் உடல் உறுப்புகளைக் குறிப்பிடும் போது, தலை, கழுத்து, நெஞ்சு என்ற வரிசையில் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.

ஒத்துழைக்கும் உறுப்புகள்

            எழுத்தொலிகள் தோன்றுவதற்குத் தேவைப்படும் உறுப்புகளாகத் தொல்காப்பியர் எட்டு உறுப்புகளைக் குறிப்பிடுகின்றார். இந்த எட்டு உறுப்புகளை இரண்டு பிரிவாகப் பகுத்துக் காணலாம். அவை,

(1) காற்றுப் பொருந்தும் உறுப்புகள்.

(2) ஒன்றுடன் ஒன்று ஒத்துழைக்கும் உறுப்புகள்

காற்றுப் பொருந்தும் உறுப்புகள்:

காற்றுப் பொருந்தும் உறுப்புகள் 3 ஆகும். அவை,

            தலை,

            கழுத்து,

            நெஞ்சு.

ஒன்றுடன் ஒன்று ஒத்துழைக்கும் உறுப்புகள்:

எழுத்தொலிகள் தோன்றுவதற்கு ஒன்றுடன் ஒன்று இயைந்து ஒத்துழைக்கும் உறுப்புகள் எட்டு ஆகும். அவை, முதலில் கூறப்பட்ட தலை, கழுத்து, நெஞ்சு ஆகிய மூன்றுடன்,

            பல்,

            இதழ்,

            நாக்கு,

            மூக்கு,

அண்ணம் ஆகிய ஐந்தும், சேர்ந்து 8 ஆகும்.

நன்னூலாரின் விளக்கம்

            இதுவரை, தொல்காப்பியம் எழுத்தொலிகளின் பிறப்புப் பற்றித் தெரிவித்த கருத்துகளைக் கண்டோம். இனி, இதுபற்றி நன்னூல் கூறும் கருத்துகளையும் காண்போம். நன்னூல் 12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கண நூல். இது, எழுத்து, சொல் ஆகிய இரு இலக்கணங்களை மட்டுமே விளக்குகின்றது. தமிழ் இலக்கணம் கற்க விரும்புவோர் முதலில் இந்நூலில் இருந்து கற்கத் தொடங்குவது மரபு.

எழுத்தொலி பிறத்தல்

            நன்னூல், ஒவ்வோர் எழுத்தும் ஒலியாக வெளிப்படுவதற்கு இரண்டு நிலைகள் தேவைப்படுகின்றன என்று தெரிவிக்கின்றது. அவை,

            (1) உயிரின் முயற்சி

            (2) உடல் உறுப்புகளின் ஒத்துழைப்பு

            குறைபாடில்லாத நிறைந்த, உயிரின் முயற்சியினால் உள்ளே இருக்கும் காற்றானது மேலே எழும்பி நிற்கும்;  அவ்வாறு எழுகின்ற காற்று, செவிகளுக்குக் கேட்கும்படியான அணுக்கூட்டமாகத் திரண்டு, மார்பு, கழுத்து, தலை, மூக்கு என்ற நான்கு இடங்களில் பொருந்தும்; பின்பு இதழ், நாக்கு, பல், அண்ணம் ஆகிய நான்கு உறுப்புகளின் இயக்கத்தினாலும் வேறுவேறு எழுத்துகளுக்கு உரிய ஒலிகள் தோன்றுகின்றன. இவ்வாறே எழுத்துகள் ஒலிவடிவம் பெறுகின்றன. இதனை எழுத்துகளின் பிறப்பு என்று கூறலாம் என்று நன்னூல் தெரிவிக்கின்றது.

தேவைப்படும் முயற்சி

            எழுத்தொலி தோன்ற முதலில் தேவைப்படுவது ஒருவரின் முயற்சி ஆகும். இந்த முயற்சி உயிரின் முயற்சியாக இருக்க வேண்டும். உயிர்ப்புத் தன்மை நிறைந்த ஒருவரின் முயற்சியாக இருக்க வேண்டும். முயற்சியில் முழுமை இல்லாமல் இருந்தால் நினைத்த ஒலி எழும்பாது. எனவே உயிரின் முயற்சி என்று குறிப்பிடாமல் நன்னூல் ஆசிரியர் இங்குத் தேவைப்படும் முயற்சியை ‘நிறை உயிர் முயற்சி’ என்று குறிப்பிடுகின்றார். இத்தொடர், ஒலி எழுப்ப நினைப்பவரின் முயற்சிக்கு நிறைந்த உயிர் முயற்சிதான் தேவை என்பதைச் சுட்டுகின்றது. இத்தகைய முயற்சியின் விளைவாகவே உந்தியில் இருக்கும் காற்று மேல்நோக்கி எழும். அவ்வாறு எழும் காற்று உடலின் நான்கு உறுப்புகளில் சென்று தங்கும். இந்த நான்கு உறுப்புகளையும் எழுத்துஒலிகள் பிறப்பதற்கு முயற்சி செய்யும் உறுப்புகள் எனலாம். அவை,

            (1) மார்பு,

            (2) கழுத்து,

            (3) தலை (உச்சி)

            (4) மூக்கு

ஒத்துழைக்கும் உறுப்புகள்

            எழுத்தொலிகள் தோன்றுவதற்கு, சில உறுப்புகளின் முயற்சியுடன் வேறு சில உறுப்புகளின் ஒத்து இயங்கும் தன்மையும் தேவைப்படுகின்றது. சில உறுப்புகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட்டால்தான் எழுத்தொலிகள் பிறக்கும். அவ்வகையில் ஒத்துழைக்கும் உறுப்புகளை நன்னூல் ஆசிரியர் பட்டியலிட்டுக் காட்டுகின்றார். அவை,

            (1) இதழ்

            (2) நாக்கு

            (3) பல்

            (4) அண்ணம்

            இந்த நான்கு உறுப்புகளில் எந்த உறுப்பின் முயற்சியால் ஓர் எழுத்தொலி பிறக்கின்றதோ, அந்த எழுத்திற்கு அந்த உறுப்பு பிறப்பிடம் என்று அழைக்கப்படுகின்றது. எனவே உறுப்புகளின் ஒத்துழைக்கும் தன்மைக்கு ஏற்ப வெவ்வேறு எழுத்தொலிகள் தோன்றுகின்றன. ஓர் எழுத்தொலி பிறக்க ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்புகளின் ஒத்துழைப்பும் தேவையாக அமைவதும் உண்டு.

நிறை உயிர் முயற்சியின் உள்வளி துரப்ப

எழும் அணுத்திரள் உரம், கண்டம், உச்சி

மூக்கு உற்று, இதழ், நாப் பல் அணத் தொழிலின் வெவ்வேறு எழுத்தொலியாய் வரல் பிறப்பே.

            என்பது நன்னூல் நூற்பா (73). இதில், உரம் என்பது மார்பையும், கண்டம் என்பது கழுத்தையும் குறிக்கும். அணம் என்பது அண்ணம், (மேல்வாய்) என்று பொருள்படும்.

எழுத்துப் பிறப்பில் தொல்காப்பியமும் நன்னூலும்

            எழுத்தொலிகளின் பிறப்புப் பற்றித் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவித்த கருத்துகளை அறிந்து கொண்டீர்கள். அவற்றைத் தனித்தனியே பார்த்தபோது அவ்விரு நூல்கள் தெரிவித்த கருத்துகளுக்கு இடையில் சில ஒற்றுமைகளும் சில வேற்றுமைகளும் இருப்பதைக் கண்டிருப்பீர்கள். இப்போது, அந்த ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் தொகுத்துக் காண்போம். இவ்வாறு ஒப்பிட்டுக் காண்பது, நாம், இக் கருத்துகளை மேலும் தெளிவாகப் புரிந்து கொள்ளத் துணை செய்யும்.

ஒற்றுமை

(1)       இரண்டு இலக்கண நூலாசிரியர்களும் ஓர் எழுத்துப் பிறப்பதற்கு உந்தியில் (கொப்பூழ்) இருந்து காற்றுத் தோன்றி மேலே எழும்ப வேண்டும் என்கின்றனர்.

(2)       எழுத்துகள் பிறப்பதற்கு ஒத்துழைக்கும் உறுப்புகளில் ஒன்று மற்றொன்றோடு இயைந்து இயங்கும் தன்மைக்கேற்ப வேறு வேறு ஒலிகள் பிறக்கின்றன என்று இருவரும் உரைக்கின்றனர்.

(3)       இரு நூலாரும், அடிப்படையில் எழுத்துஒலிகள் பிறப்பதற்கு அடிப்படையான உறுப்புகளாகக் குறிப்பிடும் உறுப்புகளின் மொத்த எண்ணிக்கை எட்டு ஆகும்.

வேற்றுமை

(1)       தொல்காப்பியர் காற்று மேலே எழும்பித் தங்கும் இடங்களாக மூன்று உறுப்புகளை மட்டுமே குறிப்பிடுகின்றார். அவை முறையே தலை, கழுத்து, நெஞ்சு என்பன.

            நன்னூலார் காற்று மேலே எழுந்து தங்கும் இடங்களாக நான்கு உறுப்புகளைச் சுட்டுகிறார். அவை முறையே, நெஞ்சு, கழுத்து, உச்சி, மூக்கு என்பன.

(2)       உறுப்புகளைக் குறிப்பிடுகையில் தொல்காப்பியர் மேலே இருந்து கீழே இறங்கி வருவது போல் தலை, கழுத்து, நெஞ்சு என்று குறிப்பிடுகின்றார்.

            நன்னூலார் காற்று கீழிருந்து மேலே எழும்பும் அதே இயல்பான நிலையில் மார்பு, கழுத்து, உச்சி, மூக்கு என்ற வரிசையில் அமைத்துள்ளார்.

(3)       எழுத்தொலிகள் பிறக்கப் பயன்படும் உறுப்புகளைத் தொல்காப்பியர் எட்டு என்று விரித்துள்ளார். காற்றுத் தங்கும் இடங்களான மூன்றையும் சேர்த்துக் குறிப்பிடுகின்றார்.

            நன்னூலார், இந்த உறுப்புக்களில் இதழ், நாக்கு, பல், அண்ணம் என்ற நான்கு உறுப்புகளை மட்டுமே எழுத்துப் பிறப்பதற்கு இயங்கும் உறுப்புகளாகக் குறிப்பிடுகின்றார்.

எழுத்துப் பிறப்பும் மொழியியலும்

            எழுத்தொலிகளின் பிறப்புப் பற்றி இலக்கண நூல்கள் தந்த விளக்கங்களை விரிவாகக் கண்டோம். எழுத்தொலிகள் பற்றி மொழிநூல் அறிஞர்கள் மிக விரிவாக ஆராய்ந்துள்ளனர். மொழிநூல் அறிஞர்கள் இது குறித்து ஆராய்ந்து விளக்கங்களை வெளியிட்ட பின்னரே, இத்துறையில் பல உண்மைகள் வெளிப்பட்டன என்று கூறலாம். எனவே எழுத்தொலிகள் பிறப்புப் பற்றி மொழிநூல் அறிஞர்கள் தெரிவிக்கும் கருத்துகளையும் இங்கு ஒப்பிட்டுக் காண்பது பொருத்தம் உடையது.

மரபு

            ஒரு மொழிக்கு இலக்கணம் வகுக்கும் மரபுவழி இலக்கண ஆசிரியர்கள் மொழியின் எழுத்து வடிவத்திற்கே முதன்மை தருவர். அதனை விளக்கிக் கூறுவர். ஏட்டில் இலக்கிய வடிவம் பெற்ற எழுத்து வடிவத்தினை ஆராய்ந்து அதன் நுட்பத்தை வெளிப்படுத்துவர். மொழியின் பேச்சு வடிவத்தை ஆய்வுக்கு ஏற்றுக் கொண்டு அதனை விளக்குவது மரபுவழி இலக்கண நூல்களில் காணப்படுவது இல்லை. இந்த நிலை உலக மொழிகள் அனைத்திற்கும் பொதுவானதாகும்.

மொழியியல்

            ஒரு மொழியை அறிவியல் பார்வையோடு அணுகவேண்டும் என்ற கருத்து எழுந்த போது ‘மொழியியல்’ என்ற பிரிவு உருவானது. மொழியியல் துறையில் ஈடுபடும் அறிஞர்கள் ஒரு மொழியின் எழுத்துவடிவத்தை விட அதன் பேச்சு வடிவத்தையே தங்கள் ஆய்விற்கு ஆதாரங்களாக எடுத்துக் கொண்டனர். மொழியியலார் பேச்சு மொழிதான் ஒரு மொழியின் உண்மையான இயல்பினை எடுத்துரைக்கும் என்று கருதுகின்றனர். இதனால் பேச்சொலி எழுவதற்குக் காரணமாக இருக்கும் மொழியின் ஒலி வடிவத்தில் தங்கள் ஆர்வத்தைச் செலுத்தினர். எனவே மொழியின் ஒலி வடிவத்திற்கு முதன்மை தரும் நிலையில் மொழியியல் ஆய்வுகள் எழுந்தன.

மொழியியல் உண்மைகள்

            பேச்சு ஒலிகளை ஆய்வு செய்ய முற்பட்டவர் மொழியியல் அறிஞர்கள். இந்த ஆய்வு, பேச்சு ஒலிகள் தோன்றுவதற்குக் காரணமாக அமையும் உடல் உறுப்புகளையும் ஆய்வு செய்யத் தூண்டியது. எனவே எந்த ஒலி தோன்றுவதற்கு எந்த உறுப்பின் முயற்சியும் ஒத்துழைப்பும் பயன்படுகின்றது என்பதை ஆய்வு செய்து கண்டனர். அந்த ஆய்வின்படி பல உண்மைகளை வெளியிட்டனர். இந்த மொழியியல் ஆய்வுகள் எல்லாம் 19-ஆம் நூற்றாண்டிலும் 20-ஆம் நூற்றாண்டிலும் இடம்பெற்றன. மேனாட்டு அறிஞர்கள் 19-ஆம் நூற்றாண்டில் தொடங்கி 20-ஆம் நூற்றாண்டில் இதில் மிகவும் முனைந்து ஈடுபட்டனர். இவ்வறிஞர்கள் வெளிப்படுத்திய உண்மைகளைத் தொல்காப்பியமும் நன்னூலும் முன்பே எடுத்துரைக்கக் காணலாம்.

            எனவே, தமிழ் இலக்கணம் அறிவியல் முறைப்படி அமைந்தது என்பது இதனால் வெளிப்படுகின்றது. 2500 ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய தொல்காப்பியம் இன்றைய மொழியியலாரின் கருத்துகளை அன்றே விளக்கி இருப்பது தமிழ் மொழியின் சிறப்புக்குச் சான்றாக உள்ளது.

மெய்ம்மயக்கம்

 மெய்ம்மயக்கம்

            உயிர் எழுத்துடன் உயிர் எழுத்துச் சேர்ந்து வருதல் இல்லை.  எனவே இரண்டு உயிர் எழுத்துகள் சேர்ந்து வருதல் பற்றி இப்பாடத்தில் குறிப்பிடவில்லை.  மயக்கம் என்பது சேர்ந்து வருதலைக் குறிக்கும். மெய் எழுத்துகள் இரண்டு சேர்ந்து வருதலைக் குறிப்பது மெய்ம்மயக்கம் எனப்படும். உயிர் எழுத்துடன் மெய்எழுத்துச் சேர்ந்து மிகப் பல இடங்களில் வரும். அவற்றைப் பல்வேறு தமிழ் இலக்கியங்களில் நாம் படித்துத் தெரிந்து கொள்ள இயலும். எனவே, இப்பாடத்தில் மெய்ம்மயக்கம் பற்றி மட்டுமே தெரிவிக்கப்படுகிறது.

மெய்ம்மயக்கம் இரண்டு வகைப்படும். அவை:

            1. வேற்றுநிலை மெய்ம்மயக்கம்

            2. உடன்நிலை மெய்ம்மயக்கம்

                                                                        என்பவை ஆகும்.

வேற்றுநிலை மெய்ம்மயக்கம்

            ஒரு மெய் எழுத்தை அடுத்து வேறு ஒரு மெய்எழுத்துச் சேர்ந்து வருவது வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எனப்படும்.

            ஒரு சொல்லின் முதல் எழுத்தாக உயிர் மெய் எழுத்து இருந்தால் அதனை மெய்+உயிர் எனப் பிரித்துப் பார்க்க வேண்டும் என்பதை முந்தைய பாடத்தில் பார்த்தோம். எனவே ஒரு சொல்லில் ஒரு மெய் எழுத்தை அடுத்து ஓர் உயிர்மெய் எழுத்து வரும்போது இரண்டு மெய் எழுத்துகள் அடுத்தடுத்து வருகின்றன. அப்படி வரும்போது அவை இயல்பாக அமைகின்றனவா என்று பார்க்க வேண்டும். இயல்பாக இருந்தால் அது வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எனப்படும்.

            எடுத்துக்காட்டாக, நான்கு என்னும் சொல்லில் ன் என்னும் மெய்எழுத்தும் க் என்னும் மெய் எழுத்தும் இயல்பாக இணைந்து ஒலிக்கின்றன. எனவே இது வேற்றுநிலை மெய்ம்மயக்கம் என்று அழைக்கப்படுகிறது.

            மெய்எழுத்துகள் பதினெட்டில் க, ச, த, ப என்னும் நான்கு மெய் எழுத்துகள் தவிர்த்து, ஏனைய பதினான்கு மெய்எழுத்துகளும் வேற்றுநிலை மெய்ம்மயக்கத்தில் வரும்.

வேற்றுநிலை மெய்ம்மயக்கத்தில் வரும் மெய் எழுத்துகள்

ங், ஞ், ட், ண், ந், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்

என்பன ஆகும்.

• ங் என்னும் மெய்எழுத்து

‘ங்’ என்னும் மெய்எழுத்துக்குப் பின், ‘க்’ என்னும் மெய்எழுத்து மட்டுமே வரும் பிற மெய் எழுத்துகள் வருவது இல்லை.

எடுத்துக்காட்டு:

            தங்கம்

            வங்காளம்

            அங்கி (நெருப்பு, சட்டை)

            அங்கு

            அங்கூடம் (அழகிய கூடம்)

            அங்கே

            அங்கை (உள்ளங்கை)

            எங்கோமான்

• ஞ் என்னும் மெய் எழுத்து

‘ஞ்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் ச், ய் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.

எடுத்துக்காட்டு:

            கஞ்சம் (தாமரை)

            அஞ்சாமை

            அஞ்சி

            அஞ்சீறடி (அழகிய சிறிய பாதம்)

            கஞ்சுகம் (சட்டை)

            உரிஞ்(தேய்) யாது

• ட் என்னும் மெய் எழுத்து

‘ட்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ப் ஆகிய மெய் எழுத்துகள் வரும்

எடுத்துக்காட்டு:

            வெட்கம்

            வெட்சி (ஒரு பூ)

            மாட்சி (பெருமை)

            நட்பு

            நுட்பம்

• ண் என்னும் மெய் எழுத்து

‘ண்’ என்னும் மெய்எழுத்துக்குப் பின் க், ச், ஞ், ட், ப், ம், ய், வ் ஆகிய எட்டு மெய் எழுத்துகளும் வரும்.

எடுத்துக்காட்டு:

            வெண்கலம்

            கண்காட்சி                 }           க்

            வெண்சோறு

            மண்சேறு                   }           ச்

            வெண்ஞமலி

            உண்ஞமலி (உண்கின்ற நாய்)        }           ஞ்

            மண்டலம்

            வண்டல்                     }           ட்

            நண்பகல்

            நண்பன்                      }           ப்

            வெண்மலர்

            உண்மை                    }           ம்

            மண்யாது                   -           ய்

            மண்வலிது                 -           வ்

• ந் என்னும் மெய் எழுத்து

‘ந்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் த், ய் என்னும் மெய்எழுத்துகள் வரும்.

எடுத்துக்காட்டு:

            வந்த

            வந்தான்                                 }           த்

            வெரிந்யாது                           -           ய்

• ம் என்னும் மெய்எழுத்து

‘ம்’ என்னும் மெய்எழுத்துக்குப் பின் ப், ய், வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.

எடுத்துக்காட்டு:

            கம்பன்

            அம்பு                                                  }                       ப்

            கலம்யாது

            புலம்யாது                                          }                       ய்

            கலம்வலிது

            வலம்வரும்                                         }                       வ்

• ய் என்னும் மெய் எழுத்து

‘ய்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ஞ், த், ந், ப்,ம், வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.

எடுத்துக்காட்டு:

            பொய்கை (நீர்நிலை)

            மொய்குழல்(அடர்ந்த கூந்தல்)        }           க்

            வேய்சிறிது

            காய்சினம்                              }           ச்

            வேய்ஞான்ற

            (மூங்கில் முதிர்ந்தது)                        -           ஞ்

            நெய்தல்

            நொய்து (மெல்லியது)          }           த்

            மெய்நீண்டது                        -           ந்

            மெய்பெரிது               -           ப்

            பேய்மனம்                 -           ம்

            பேய்வலிது                -           வ்

• ர் என்னும் மெய் எழுத்து

‘ர்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ஞ், த், ந், ப், ம், வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.

எடுத்துக்காட்டு:

            வேர்கள்                     -           க்

            வேர்சிறியது              -           ச்

            வேர்ஞான்றது           -           ஞ்

            தேர்தல்                      -           த்

            நீர்நிலம்                     -           ந்

            மார்பு                          -           ப்

            கூர்மை                       -           ம்

            வியர்வை                   -           வ்

• ல் என்னும் மெய் எழுத்து

‘ல்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ப், ய், வ் என்னும் மெய் எழுத்துகள் வரும்.

எடுத்துக்காட்டு:

            கால்கோள் (தொடக்கம்)     -           க்

            வல்சி (உணவு)                      -           ச்

            கல்பாக்கம்                             -           ப்

            நல்யாறு                                 -           ய்

            பல்வலி                                   -           வ்

• வ் என்னும் மெய் எழுத்து

‘வ்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் ‘ய்‘ என்னும் மெய்எழுத்து மட்டும் வரும்.

எடுத்துக்காட்டு : தெவ்யாது (தெவ் - பகை)

• ழ் என்னும் மெய் எழுத்து

‘ழ்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ஞ், த், ந், ப், ம், வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.

எடுத்துக்காட்டு:

            ழூழ்கினான்   - க்

            பாழ்செய் (பாழ்படுத்து)        - ச்

            வீழ்ஞான்ற (தொங்கிய விழுது)      - ஞ்

            ஆழ்தல்           - த்

            வாழ்நாள்       - ந்

            வாழ்பவன்     - ப்

            வாழ்மனை     - ம்

            வாழ்வு            - வ்

• ள் என்னும் மெய் எழுத்து

‘ள்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ப், ய், வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.

எடுத்துக்காட்டு:

            கொள்கலம்    - க்

            வாள்சிறிது     - ச்

            வாள் பெரிது  - ப்

            வாள்யாது      - ய்

            கள்வன்          - வ்

• ற் என்னும் மெய்எழுத்து

‘ற்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ப் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.

எடுத்துக்காட்டு:

            கற்க    - க்

            கற்சிலை        - ச்

            கற்பவை        - ப்

• ன் என்னும் மெய் எழுத்து

‘ன்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ஞ், ப், ம், ய், வ், ற் என்னும் மெய் எழுத்துகள் வரும்.

எடுத்துக்காட்டு:

            பொன்கலம்   - க்

            புன்செய்         - ச்

            புன்ஞமலி      - ஞ்

            புன்பயிர்        - ப்

            நன்மை           - ம்

            பொன்யாது   - ய்

            பொன்வலிது - வ்

            தென்றல்        - ற்

            இதுவரை க், ச், த், ப் என்னும் நான்கு மெய் எழுத்துகள் தவிர, ஏனைய பதினான்கு மெய் எழுத்துகளும் பிற மெய் எழுத்துகளுடன் சேர்ந்து வரும் தன்மையைப் பார்த்தோம்.

உடன்நிலை மெய்ம்மயக்கம்

ஒரு மெய் எழுத்துக்குப் பின் அதே மெய் எழுத்து வருவது உடன்நிலை மெய்ம்மயக்கம் எனப்படும்.

மெய் எழுத்துகள் பதினெட்டில் ர், ழ் என்னும் மெய் எழுத்துகளைத் தவிர ஏனைய பதினாறு மெய் எழுத்துகளும் உடன்நிலை மெய்ம்மயக்கத்தில் வரும்.

உடன்நிலை மெய்ம்மயக்கத்தில் வரும் மெய்எழுத்துகள்:

            க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ல், வ், ள், ற், ன்

                        என்னும் மெய் எழுத்துகள் உடன்நிலை மெய்ம்மயக்கத்தில் இடம்பெறும்.

• ‘க்’ என்னும் எழுத்து

            மக்கள்

            அக்காள்

• ‘ங்’ என்னும் எழுத்து

            அங்ஙனம் (அவ்விதம்)

            எங்ஙனம் (எவ்விதம்)

• ‘ச்’ என்னும் எழுத்து

            உச்சி

            அச்சு

• ‘ஞ்’ என்னும் எழுத்து

            அஞ்ஞான்று (அப்பொழுது)

            எஞ்ஞான்று (எப்பொழுது)

• ‘ட்’ என்னும் எழுத்து

            பட்டம்

            சட்டை

• ‘ண்’என்னும் எழுத்து

            அண்ணன்

            கண்ணீர்

• ‘த்’என்னும் எழுத்து

            கத்தி

            பத்து

• ‘ந்’என்னும் எழுத்து

            வெந்நீர்

            செந்நீர்

• ‘ப்’என்னும் எழுத்து

            கப்பல்

            குப்பை

• ‘ம்’ என்னும் எழுத்து

            அம்மை

            அம்மாடு

• ‘ய்’ என்னும் எழுத்து

            செய்யான்

            வெய்யோன் (கதிரவன்)

• ‘ல்’ என்னும் எழுத்து

            எல்லாம்

            நல்லவன்

• ‘வ்’ என்னும் எழுத்து

            செவ்வாய்

            கொவ்வை

• ‘ள்’ என்னும் எழுத்து

            பள்ளம்

            தள்ளு

• ‘ற்’ என்னும் எழுத்து

            குற்றம்

            காற்று

• ‘ன்’ என்னும் எழுத்து

            மன்னன்

            பின்னால்

            மேலே நாம் பார்த்த உடன்நிலை மெய்ம்மயக்கங்களில் ஒரு மெய் எழுத்திற்கு அடுத்து அதே மெய்எழுத்து வந்துள்ளது. ஆனால் அந்த மெய் எழுத்துத் தனித்து வராமல் உயிர்மெய் எழுத்தின் உருவில் வந்துள்ளது. க்+அ = க என்பது போல் இடம்பெற்றுள்ளது.

ஈர்ஒற்று மயக்கம்

            ஒரு மெய் எழுத்துக்கு அடுத்து வேறொரு மெய்எழுத்து, உயிர்மெய் எழுத்துடன் வராமல் தனி மெய் எழுத்தாகவும் வருவது உண்டு. அவ்வாறு இரண்டு மெய் எழுத்துகள் சேர்ந்து வருவதை ஈர்ஒற்று மயக்கம் என்று கூறுவர்.

எடுத்துக்காட்டு: புகழ்ச்சி

            இதில் ‘ழ்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் ‘ச்’ என்ற மெய் எழுத்து வந்துள்ளது. இந்த ‘ச்’ என்னும் எழுத்து உயிர்மெய்யுடன் சேர்ந்து வராமல் தனி மெய் எழுத்தாகவே வந்துள்ளது.

ஈர்ஒற்று மயக்கம் வரும் இடங்கள்:

            ய், ர், ழ் என்னும் மூன்று மெய் எழுத்துகளை அடுத்து, க், ங், ச், ஞ், த், ந், ப், ம் ஆகிய மெய் எழுத்துகள் ஈர்ஒற்றுகளாகச் சேர்ந்து வரும்.

• ‘ய்’ என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று வருதல்

            நாய்க்கால்                 -           க்

            வேய்ங்குழல்              -           ங்

            காய்ச்சல்                    -           ச்

            மெய்ஞ்ஞானம்          -           ஞ்

            மேய்த்தல்                  -           த்

            பாய்ந்தது                   -           ந்

            வாய்ப்பு                      -           ப்

செய்ம்மன (செய்யுளில் மட்டுமே வரும்)

• ‘ர்’ என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று வருதல்

            பார்க்கிறாள்              -           க்

            ஆர்ங்கோடு               -           (ஆத்திமரக்கிளை) - ங்

            உயர்ச்சி                     -           ச்

            ஞ்                                -           வழக்கத்தில் இல்லை.

            பார்த்தல்                    -           த்

            ஊர்ந்து                       -           ந்

            தீர்ப்பு                         -           ப்

            ம்                                 -           வழக்கத்தில் இல்லை.

• ‘ழ்’ என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று வருதல்

 

            வாழ்க்கை                  -           க்

            பாழ்ங்கிணறு                        -           ங்

            வீழ்ச்சி                        -           ச்

            ஞ்                                -           வழக்கத்தில் இல்லை

            வாழ்த்து                     -           த்

            வாழ்ந்து                     -           ந்

            தாழ்ப்பாள்                 -           ப்

            ம்                                 -           வழக்கத்தில் இல்லை.

செய்யுளில் ஈர்ஒற்று மயக்கம்

மேலே நாம் படித்த மெய்ம்மயக்கங்கள் செய்யுளிலும் பேச்சு வழக்கிலும் இடம் பெறும் மெய்ம்மயக்கங்கள் ஆகும்.

செய்யுளில் மட்டுமே இடம் பெறும் ஈர்ஒற்று மயக்கமும் உள்ளது. அதை இங்கே காண்போம்.

            சார்பு எழுத்துகள் என்னும் பாடத்தில் மகரக்குறுக்கம் என்று ஒரு சார்பு எழுத்தைப் பற்றி நீங்கள் படித்திருக்கிறீர்கள். உங்களுக்கு நினைவிருக்கிறதா? அதை மீண்டும் நினைவு கூர்வோம்.

            ‘ம்’ என்னும் மெய்எழுத்து, தனக்குரிய மாத்திரையில் குறைந்து ஒலிப்பது மகரக்குறுக்கம் எனப்படும். இந்த மகரக்குறுக்கத்தில் இரண்டு மெய் எழுத்துகள் அருகில் இருக்கும்.

எடுத்துக்காட்டு

                        போன்ம்

                        மருண்ம்

            இந்த மகரக் குறுக்கங்களும் ஈர் ஒற்று மயக்கம் ஆகும். இது செய்யுளில் மட்டுமே இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.