இலக்கணம் - தமிழ் விர்சுவல் இணையதளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கணம் - தமிழ் விர்சுவல் இணையதளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூலை 14, 2020

11. நம்பியகப்பொருள் - களவியல் - களவின் வகை, 1- 7


1. இயற்கைப் புணர்ச்சி
முதன் முதலாகத் தலைவனும் தலைவியும் தாமே கண்டு கூடுவது இயற்கைப் புணர்ச்சி எனப்படும். தெய்வம் கூட்டுவிக்கத் தன்மனம் வேறாய் (திரிந்து) நின்ற தலைவன், தலைவியைக் கூடுவான். இதனை,
  1.     தெய்வத்தால் எய்துவது
  2.     தலைவியால் எய்துவது
என இருநிலைகளாகக் காணலாம்.
1. தெய்வத்தால் எய்துவது
  1.     கலந்து மகிழ்தல்
  2.     அழகினைப் பாராட்டல்
  3.     ஏற்ற அணிகளை அணிதல்
என்னும் மூன்றும் தெய்வத்தால் அடையப்பெறும் இயற்கைப் புணர்ச்சியின் விரிவுகள் ஆகும்.
2. தலைவியால் எய்துவது
தலைவியால், தலைவன் கூடும் இயற்கைப் புணர்ச்சியானது
  1.    தலைவிக்குத் தலைவன் தன் வேட்கையை உணர்த்துதல்.
  2.    தலைவனது வேட்கையைத் தலைவி முதலில் மறுத்தல்.
  3.    தலைவனது வேட்கையைத் தலைவி பின்னர் ஏற்று உடன்படுதல்.
  4.    அதன்பின் தலைவனும் தலைவியும் கூடி மகிழ்தல்.
என நான்கு பிரிவுகளை உடையது.

தலைவியால் அடையும் இயற்கைப் புணர்ச்சியின் விரிவு
இயற்கைப் புணர்ச்சியின் ஒரு வகை தலைவியின் மூலம் நிகழும் என்று கண்டோம். அக்கூட்டத்தினை ஒட்டி நிகழும் பல்வேறு செயல்பாடுகளை அகப்பொருள் இலக்கண நூல் தொகுத்துக் கூறியுள்ளது. அவையாவன :
  1. இரந்துபின் நிற்றற்கு எண்ணல்: தலைவன் தலைவியைப் பணிந்து வேண்டி நிற்பதற்கு நினைத்தல்.
  2. இரந்து பின்னிலை நிற்றல்: தலைவன் தலைவியைப் பணிந்து வேண்டி நிற்றல்.
  3. முன்னிலையாக்கல்: தலைவன் தலைவியை முன்னிலைப்படுத்திக் கூறுதல்.
  4. மெய் தொட்டுப் பயிறல்: தலைவன் தலைவியின் உடலைத் தொட்டு நெருங்கிப் பழகுதல்.
  5. பொய் பாராட்டல்            : தலைவன் தலைவியிடம் உள்ளதையும் இல்லாததையும் சேர்த்துக் கூறுதல்.
  6. இடம் பெற்றுத் தழால்: தலைவன் தலைவி நிற்கும் இடத்திற்குச் சென்று அவளைத் தழுவ விரும்பிக் கூறுதல்.
  7. வழிபாடு மறுத்தல்: மேற்கண்டவாறெல்லாம் தலைவன் கூறியதைத் தலைவி முழுவதுமாக மறுத்தல்
  8. இடையூறு கிளத்தல்: தலைவி நாணிக்கண் புதைத்ததனால் (வெட்கப்பட்டுக் கண்ணை மூடியதால்) உண்டான துன்பத்தைத் தலைவன் கூறுதல்.
  9. நீடு நினைந்து இரங்கல்:  தலைவன் தலைவியைப் பற்றி நீண்ட நேரம் நினைத்துப் பார்த்து வருத்தப்பட்டுப் பேசுதல்
  10. மறுத்து எதிர்கோடல்:    தலைவி, முன்பு மறுத்ததனை மாற்றிக் கொண்டு தலைவன் கருத்தை ஏற்றல்.
  11.  வறிதுநகை தோற்றல்:   தலைவியின் முகத்தில் சிறிது புன்னகை தோன்றுதல்.
  12.  முறுவல் குறிப்பு உணர்தல்: தலைவியின் புன்முறுவல் புலப்படுத்தும் குறிப்பைத் தலைவன் உணர்ந்து கொள்ளுதல்.
  13.  முயங்குதல் உறுத்தல்: தலைவி தன்னோடு சேர்வதற்கு உடன்பட்டதைத் தலைவன் வலியுறுத்திக் கூறுதல்.
  14.  புணர்ச்சியின் மகிழ்தல்: தலைவன் தலைவியோடு கூடிய புணர்ச்சியால் மகிழ்தல்.
  15.  புகழ்தல்:  தலைவியின் அழகு நலத்தைத் தலைவன் புகழ்ந்துரைத்தல்.
2. வன்புறை:   வன்பு - வலிமை ; உறை - உறுத்தல், வற்புறுத்திக் கூறுதல்.
தலைவி ஐயுற்றவழித் தலைவன் அவளது ஐயம் தீர உண்மையை வற்புறுத்திக் கூறுதல் வன்புறை எனப்படும்.
வன்புறை வகை: வன்புறை இருவகைப்படும். அவையாவன:
  1.     ஐயம் தீர்த்தல்
  2.     பிரிவு அறிவுறுத்தல்
ஐயம் தீர்த்தல்
தலைவிக்கு உண்டான ஐயத்தைத் தலைவன் தீர்த்து வைத்தல் ஐயம் தீர்த்தல் எனப்படும்.
  1.  கலைந்துபோன தன் அணிகலனைச் சரிசெய்து தலைவன் அணிவிக்க அது மாறுபட்டுள்ளதைக் கண்டு தோழி ஐயுறுவாள் என்று கருதிய தலைவியின் ஐயம் தீர்த்தல்.
  2.  மீளவும் வருவேன் என்று, தான் கொண்டுள்ள அளவுக்கதிகமான காதலைக் கூறித் தலைவன் ஐயம் தீர்த்தல்.
  3.  ‘விதி நம்மைப் பிரிக்காது’ என ஊழின் வலிமையைக் கூறித் தலைவியின் ஐயம் தீர்த்தல்.
என மூன்று உட்பிரிவுகளை உடையது.
பிரிவு அறிவுறுத்தல்
தலைவன் தன் பிரிவைத் தலைவிக்குத் தெரிவித்தல் பிரிவு அறிவுறுத்தல் எனப்படும். இது வன்புறையின் இரண்டாம் வகை. இது,
  1.     பிரியமாட்டேன் எனல்.
  2.     பிரிந்து மறுபடியும் திரும்பி வருவேன் எனல்.
  3.     தான் பிரிந்து செல்லும் இடம் அருகில்தான் உள்ளது எனல்.
என மூன்று உட்பிரிவுகளை உடையது.
3. தெளிவு
            தலைவன் தனது நிலைப்பாட்டை வற்புறுத்தி உரைப்பது வன்புறை என்று கண்டோம். அந்த வன்புறை வார்த்தைகளை ஏற்று, ‘தலைவன் சொல்வது உண்மையானதுதான்; ஏற்புடையதுதான்’ என்று தெளிந்து தலைவி ஆற்றியிருப்பது தெளிவு எனப்படும்.
4. பிரிவுழி மகிழ்ச்சி
தலைவனும் தலைவியும் ஓரிடத்தில் களவு வழியில் கூடி மகிழ்ந்தனர். அப்புணர்ச்சிக்குப்பின் அங்கிருந்து தலைவி பிரிந்து செல்ல, அப்போது தலைவியோடு கூடிய கூட்டத்தை எண்ணி, தலைவன் மனமகிழ்வுடன் பேசுவது பிரிவுழி மகிழ்ச்சி எனப்படும்.
பிரிவுழி மகிழ்ச்சியின் இரு நிலைகள்
  1.     செல்லும் கிழத்தி செலவுகண்டு உளத்தொடு சொல்லல்.
  2.     செல்லும் கிழத்தி செலவுகண்டு பாகனொடு சொல்லல்.

செல்லும் கிழத்தி செலவுகண்டு உளத்தொடு சொல்லல்
கூடிப்பிரிந்து செல்லும் தலைவியின் தன்மை கண்டு தலைவன் தன் மனத்தொடு பேசி மகிழ்வது.
செல்லும் கிழத்தி செலவுகண்டு பாகனொடு சொல்லல்
கூடிப்பிரிந்து செல்லும் தலைவியின் தன்மை கண்டு தலைவன் தன் பாகனிடம் பேசி மகிழ்வது.
5. பிரிவுழிக் கலங்கல்
களவிற்குரிய கிளவித்தொகைகளுள் ஒன்று. தலைவி பிரிந்து சென்றபோது தலைவன் மனம் கலங்கிப் பேசுவது பிரிவுழிக் கலங்கல் எனப்படும். இது,
  1.     மருளுற்று உரைத்தல் - மயக்கம் கொண்டு பேசுதல்
  2.     தெருளுற்று உரைத்தல் - தெளிவு பெற்றுப் பேசுதல்

என இருநிலைகளை உடையது.
பிரிவுழிக் கலங்கல் - விரிவு
  1.     தோழியர் கூட்டம், வழிவிட்டு வழிபடத்தக்கவளாக விளங்கும் தலைவியை நாம் கூடியது வியப்புக்குரியதே என மயங்கிக் கூறுதல்.
  2.     தோழியைத் தூதாகப் பெற்று இனியும் கூடி மகிழ்வேன் என்று கூறுதல்.
  3.     தலைவியின் அழகுப் பண்புகளைத் தலைவன் பாராட்டிக் கூறுதல்.
  4.     அத்தகு அழகியைப் பெற்றெடுத்த பெற்றோரை வாழ்த்துதல்.
  5.     தலைவன் இரவில் உறக்கமின்றி வருந்தி உரைத்தல்.

6. இடந்தலைப்பாடு: இடம் - முதன்முதலாகக் கூடிய இடம்.
தலைப்பாடு - மீண்டும் அவ்விடத்தே வந்து கூடுதல்.
முதன்முதலாக இயற்கைப் புணர்ச்சியில் கூடி மகிழ்ந்த தலைவன் (மீண்டும்) அடுத்த நாளும் அவ்விடத்தே வந்து தலைவியைக் கூடுதல் இடந்தலைப்பாடு எனப்படும்.
இடந்தலைப்பாடு வகை: இடந்தலைப்பாடு மூன்று வகைப்படும். அவையாவன:
  1.     தெய்வம் தெளிதல்
  2.     கூடல்
  3.     விடுத்தல்

தெய்வம் தெளிதல்
முன்னே முதல்முறையாகத் தலைவியை நம்மோடு கூட்டி வைத்த தெய்வம் மறுபடியும் அதே இடத்தில் தலைவியை நம்மோடு சேர்த்து வைக்கும் என்று தலைவன் தெளிவுடன் உரைப்பது.
கூடல்: அவ்வாறே தலைவன், தலைவியைக் கூடி மகிழ்தல்.
விடுத்தல்: கூடி மகிழ்ந்த பிறகு தலைவியை அவளது தோழியர் கூட்டத்தின்பால் செல்லுமாறு தலைவன் அனுப்பி வைத்தல்.

இடந்தலைப்பாட்டின் விரிவு
இம்மூவகைப்பட்ட இடந்தலைப்பாட்டு நிகழ்ச்சியையே ஐந்து நிலைகளாக விரிவுபடுத்தியும் வழங்குவர். அவையாவன:
  1.     தந்த தெய்வம் மீண்டும் தரும் எனச் செல்லுதல்
  2.     தன் முன்னே தலைவியைக் காணுதல்
  3.     கூடி மகிழ்தல்
  4.     புகழ்தல்
  5.     தோழியர் கூட்டத்தில் தலைவியைச் சேர்த்தல்.

7. பாங்கன் கூட்டம்: தலைவன் - தலைவியின் முதல் கூட்டம்: இயற்கையாய் நிகழும்.
தலைவன்-தலைவியின் அடுத்த கூட்டம்: அதே இடத்தில் மீண்டும் சந்தித்து நிகழும்.
தலைவன் - தலைவியின் மூன்றாம் கூட்டம்: பாங்கன் எனப்படும் தோழன் மூலமாக நிகழும். அதனைப் பாங்கன் கூட்டம் என்பர்.
பாங்கன் கூட்டத்தின் வகை
இப்பாங்கன் கூட்டம் சார்தல், கேட்டல், சாற்றல், எதிர்மறை, நேர்தல், கூடல், பாங்கியோடு கூடி இருக்கச் செய்தல் என ஏழு வகைகளாக அமையும். அவற்றிற்கும் மேலாக 24 வகைப்பட்ட விரிவுகளையும் கூறியுள்ளார் அகப்பொருள் விளக்க நூலாசிரியர். அந்த 24 செய்திப் பிரிவுகளையும் மேற்கண்ட 7 வகைகளுக்கும் உரியவாறு பாகுபடுத்தியும் கூறியுள்ளார்.
  1.     சார்தல்
  2.     கேட்டல்
  3.     சாற்றல்
     இம்மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புடைய செயல்பாடுகளாகும்.
1. சார்தல்: தலைவன், பாங்கனிடம் சென்று சேர்தல்.
2. கேட்டல்: 
    பாங்கன், தலைவனது வாட்டம் கண்டு, அதற்கான காரணம் கேட்டல்.
3. சாற்றல்: 
    தலைவன், பாங்கனிடம் தன் வாட்டத்திற்கான காரணத்தைக் கூறுதல்.
4. எதிர்மறை
தலைவனது காதலைக் (களவை) கேட்டறிந்த பாங்கன் நினக்கு இது தக்கது அன்று என்று தலைவனிடம் இடித்துரைப்பது எதிர்மறை எனப்படும். இது பாங்கன் மறுத்துப் பேசுவது, தலைவன் அதற்கு விடை சொல்வது, பாங்கன் தலைவனைப் பழித்துப் பேசுவது, தலைவி மீது கொண்ட காமம் என்னால் தாங்க முடியாதது என்று தலைவன் கூறுவது முதலான விரிவுகளை உடையது.
5. நேர்தல்
தலைவன் தனது தாங்க இயலாத காதல் தன்மையை உணர்த்தினான். அதனை உணர்ந்த பாங்கன் தலைவனது கருத்துக்கு இசைந்து செயல்பட முடிவு செய்கிறான். அவனுக்காகத் தலைவியைச் சென்று கண்டு வருகிறான். இதுவே நேர்தல் எனப்படும்.
(நேர்தல் - தலைவனது கருத்துக்கு உடன்பட்டுச் செயல்பட முடிவு செய்தல்)
இது பல விரிவுக் கூறுபாடுகளை உடையது.
  1. பாங்கன் தன் மனத்திற்குள் இரங்குதல்.
  2. பாங்கன் தலைவனிடத்தில் இரக்கத்தைப் புலப்படுத்திப் பேசுதல்.
  3. தலைவியின் உருவம், அவளைக் கண்ட இடம் முதலானவற்றைக் கேட்டறிதல்.
  4. தலைவன் ‘தலைவியின் உருவம் இவ்வகைத்து - கண்ட இடம் இது’ எனக் கூறுதல். (இவ்வகைத்து = இன்ன தன்மையில் அமைந்தது)
  5. ‘தலைவ! நான் அவ்விடத்திற்குச் சென்று கண்டு வருகிறேன் கவலைப்படாதே’ என்று பாங்கன் கூறுதல்.
  6. அவ்வாறே குறிப்பிட்ட அந்த இடத்திற்குப் பாங்கன் செல்லுதல்.
  7. தலைவியை, குறிப்பிட்ட இடத்தில் பாங்கன் காணுதல்.
  8. அவளது பேரழகைக் கண்ட பாங்கன், அறிவில்லாமல் தலைவனை இகழ்ந்து விட்டோமே என்று நெகிழ்ந்து பேசுதல்.
  9. இத்தகு பேரழகியைக் கண்ட பின்னும் - காதல் வயப்பட்ட பின்னும் தலைவன் மீண்டும் வந்தது வியப்பிற்குரியது எனல்.
  10.  தலைவியைப் பற்றி வியப்பு மேலிட்டுப் பேசுதல்.
  11.  மீண்டு வந்து, தலைவி குறியிடத்தில் நிற்கும் நிலையைப் பற்றித் தலைவனிடம் கூறுதல்.
இவையாவும் நேர்தல் என்பதன் விரிவுகளாகும்.
6. கூடல்
பாங்கன் மூலமாக அமைந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தலைவன் தலைவியைக் கூடி இன்புறுதல் கூடல் எனப்படும். இது,
  1.     தலைவன் செல்லுதல்
  2.     தலைவியைக் காணுதல்
  3.     புணர்ந்து மகிழ்தல்
  4.     புணர்ச்சியின்பின் தலைவியைப் புகழ்தல்
என நான்கு உட்கூறுகளை (விரிவுகளை) உடையது, இது.
7. பாங்கிற் கூட்டல்
பாங்கன் வாயிலாகத் தலைவியைக் கூடி மகிழ்ந்த தலைவன் ‘இனி நீ வரும்போது நின் உயிர்த்தோழியோடு வருக!' என்று கூறி, தலைவியை அவளது தோழி இருக்கும் இடத்திற்கு அனுப்பி வைத்தல் பாங்கிற் கூட்டல் எனப்படும்.


10. நம்பியகப்பொருள் - களவியல் - களவு


களவு
 களவிற்கு உரிய கிளவித்தொகை
களவு என்னும் மறைமுகக் காதல் ஒழுக்கத்தை விரிவாக விளக்கும் இயல் களவியல் ஆகும். அவ்வியலில் இடம்பெறும் செய்திகளை ஒருங்கு தொகுத்து ஒரு நூற்பாவில் உணர்த்தியுள்ளார் நாற்கவிராசநம்பி. அதுவே “களவிற்கு உரிய கிளவித்தொகை” எனப்படுகிறது. (கிளவி - கூற்று) அந்நூற்பாவில் பதினேழு வகைப்பட்ட கிளவிகளைக் குறிப்பிட்டுள்ளார். அவையாவன:
  1.  இயற்கைப்புணர்ச்சி
  2.  வன்புறை
  3.  தெளிவு
  4.  பிரிவுழி மகிழ்ச்சி
  5.  பிரிவுழிக் கலங்கல்
  6.  இடந்தலைப்பாடு
  7.  பாங்கன் கூட்டம்
  8.  பாங்கிமதி உடம்பாடு
  9.  பாங்கியிற் கூட்டம்
  10.  பகற்குறி
  11.  பகற்குறி இடையீடு
  12.  இரவுக்குறி
  13.  இரவுக்குறி இடையீடு
  14.  வரைதல் வேட்கை
  15.  வரைவு கடாதல்
  16.  ஒருவழித் தணத்தல்
  17.  வரைவு இடை வைத்துப் பொருள்வயின் பிரிதல்



9. நம்பியகப்பொருள் - களவியல் - கைக்கிளை


கைக்கிளை
கைக்கிளையின் பாகுபாடு
முதல் நூற்பா களவுக்கு வரையறை செய்தது. அடுத்த நூற்பா, தலைவனும் தலைவியும் அறிந்து சந்திப்பதற்கு முன்னதாக நடைபெறும் நிகழ்வுகளை எடுத்துரைக்கின்றது.
  1.     காட்சி
  2.     ஐயம்
  3.     துணிவு
  4.     குறிப்பறிதல்

எனும் நான்கும் களவிற்கு முன் நிகழ்வனவாகும். இந்நான்கும் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்வன. இவற்றைப் படிநிலைகள் என்றும் குறிப்பிடலாம். இந்நான்கும் தலைவனின் விருப்பம் என்கிற ஒருபக்கக் காதலை மட்டும் அடிப்படையாகக் கொண்டன. எனவே ஒருதலைக் காமம் என்கிற கைக்கிளை ஒழுக்கமாக இவை கருதப் பெறுகின்றன.
1. காட்சி (காண்பது)
தலைவனும் தலைவியும் தனி இடத்து எதிர்ப்பட்டு ஒருவரை ஒருவர் காண்பது காட்சி ஆகும்.  
2. ஐயம் (சந்தேகப்படுதல்):
ஒரு பெண்ணின் தோற்றமும், அவளைக் கண்ட இடமும் சிறப்பு மிக்கதாக அமைந்துவிடும் போது, அவளைப் பற்றிய ஐயம் தலைவனுக்கு எழுவது இயற்கை. அப்பெண் மானுடப் பெண்ணா ! தெய்வப் பெண்ணா! என்பது போலத் தலைவன் உயர்ந்த எண்ணத்தில் ஐயம் கொள்வான்.
3. துணிவு
தலைவியைக் கண்டபோது அவள் தெய்வப் பெண்ணா? மானுட மகளா? என்று ஐயப்பட்ட தலைவன், பின்னர்த் தன் ஐயம் நீங்கி, அவள் மானுடப் பெண்ணே என்ற முடிவுக்கு வருவான். அவ்வாறு அவன் ஐயம் நீங்கி ஒரு முடிவுக்கு வருவதைத் துணிவு என்று கூறுவர். அத்தகைய துணிவுக்கு வர, சில அடையாளங்கள் துணைபுரிவதாக அமையும். அவையாவன:
  1.    உடலில் எழுதப்பட்ட வல்லிக்கொடி
  2.    அணிந்திருக்கும் அணிகலன்களின் அமைப்பு
  3.    சூடிய மலர் வாடுதல்
  4.    மலரை வண்டு மொய்த்தல்
  5.    பாதம் தரையில்பட நடந்து வருதல்
  6.    இமைக்கின்ற கண்கள்
  7.    தலைவி அடைகின்ற அச்சம்  
இவை காரணமாக, தலைவன் தலைவியை மானிடப் பெண் எனக் கண்டு ஐயம் தீர்வான்.


4. குறிப்பறிதல்
தலைவியைக் காண்பது; ஐயம் கொள்வது; மானுடப் பெண்ணே என்று துணிவது; இவற்றின்பின் தலைவி தன்னை விரும்புகிறாளா என்பதை அறியும் ஆவல் தலைவனுக்கு ஏற்படும். அதற்காக, தலைவி ஏதேனும் குறிப்புக் காட்டுகிறாளா என்று நோக்குவது தலைவனது இயல்பு. அதையே குறிப்பறிதல் என்று குறிப்பிடுவர். தலைமகள், தன் உள்ளத்தில் உள்ள தலைவன் மீதான விருப்பத்தைக் கண்களின் வழிப் புலப்படுத்துவாள். இதுவே அவள் காட்டும் குறிப்பாகும் என்பது இலக்கண வரையறை.
அரிவை நாட்டம் (தலைவியின் கண்கள் காணும் பார்வை)
அகத்துநிகழ் வேட்கை (மன விருப்பம்)
தெரிய உணர்த்தும் (வெளிப்படுத்தும்)
குரிசிற்கு என்ப (தலைவனுக்கு)
அகப்பொருள் நூற்பா (6).
குறிப்பு : காட்சி, ஐயம், துணிவு, குறிப்பறிதல் என்னும் இந்நான்கும் நிகழ்ந்த பின்னரே (தலைவியின் காதல் குறிப்பு வெளிப்பட்ட பின்னர்) ஐந்திணைக்குரிய களவு தொடங்கும். அதுவரை தலைவனிடம் மட்டுமே காதல் உணர்வு இருப்பதால் இந்நான்கையும் கைக்கிளைக்குரிய படிநிலைகளாகவே ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

8. நம்பியகப்பொருள் - களவியல் - எண்வகை மணங்கள்


களவின் இலக்கணம்
தலைவன் - தலைவி ஆகிய தலைமக்கள் வாழும் அன்பு வாழ்க்கை களவு, கற்பு என இருவகைப்படும். இவற்றுள் களவு என்றால் என்ன என்பதற்கு விளக்கம் தர வந்த அகப்பொருள் விளக்க நூலாசிரியர் கீழ் வருமாறு நூற்பா வகுத்தார்.
“உளமலி காதல் களவு எனப்படுவது
ஒரு நான்கு வேதத்து இருநான்கு மன்றலுள்
யாழோர் கூட்டத்தின் இயல்பினது என்ப”.
(களவியல் நூற்பா -1)
எண்வகை மணங்கள்
மேற்கண்ட நூற்பாவில் நால்வேத நெறியினர் வகுத்த எட்டு வகைத் திருமண முறைகள் குறிப்பிடப்படுகின்றன. அவை பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், கந்தர்வம், ஆசுரம், இராக்கதம், பைசாசம் என்பன இவற்றுக்கான விளக்கம் வருமாறு:
1. பிரமம்:    தகுதியுடைய பிரம்மச்சாரிக்குப் பெண்ணைக் கொடுப்பது.
2. பிரசாபத்தியம்: தலைவன் தலைவி இருவரது பெற்றோரும் உடன்பட்டுத் திருமணம் செய்து வைப்பது.
3. ஆரிடம்:  ஒன்றோ இரண்டோ பசுவும், காளையும் தானமாகப் பெற்றுக் கொண்டு பெண்ணைக் கொடுப்பது.
4. தெய்வம்: வேள்விகள் பலவும் இயற்றும் ஓர் வேள்வி ஆசிரியனுக்குப் பெண்ணைக் கொடுப்பது.
5. கந்தர்வம்:         கொடுப்போரும், கேட்போரும் இன்றித் தலைமகனும், தலைமகளும் தனி இடத்தில் எதிர்ப்பட்டுத் தாமே கூடி இன்புறுவது. இதுவே யாழோர் கூட்டம் எனப்படும்.
6. ஆசுரம்: பெண்ணின் தந்தைக்குப் பணம் கொடுத்து, பெண்ணுக்கும் அணிகலன்களை அணிவித்து, அப்பெண்ணை ஏற்று மணந்து கொள்வது.
7. இராக்கதம்: தலைவியை அவளது விருப்பமோ அவளது உறவினர் ஒப்புதலோ இன்றி அடைவது.
8. பைசாசம்:          உறங்கிய பெண், (கள் உண்டு) களித்திருக்கும் பெண், பித்துப்பிடித்த பெண் முதலானவர்களுடன் கூடிக்களிப்பது.
கந்தர்வமே களவு
மேற்கண்ட எண்வகைப்பட்ட வேத வழிப்பட்ட மணமுறைகளில் ஒன்றாக இடம் பெறும் கந்தர்வம் என்பது தமிழ் இலக்கண நூல்கள் குறிப்பிடும் களவுக்கு இணையானது. இம்முறையில்தான் தலைமக்களின் அன்புக்கு முதன்மை உள்ளது. முன் ஏற்பாடும் திட்டமிடுதலும் இன்றி இயற்கையாய் எதிர்ப்பட்ட இருவரும் விரும்பி, உளம் ஒத்து, அன்பு கலந்து கூடுகின்ற இம்முறையே தமிழ் மரபு வழிப்பட்ட களவுக்கு இணையானது.

சனி, மே 09, 2020

7. நம்பியகப்பொருள் அகத்திணையியல் - வாயில்கள்


(தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் பாடக் குறிப்பு)
வாயில்கள்
ஊடல் தீர்க்கும் வாயில்கள்
தலைவி, தலைவன் மீது கொள்ளும் பிணக்கு ஊடல் எனப்படும். கற்பு வாழ்வின் போது, பரத்தையிற் பிரிவு நிகழ்த்தும் தலைவன் அயல்மனை, அயற்சேரி, புறநகர் என்ற மூன்று இடங்களுக்கும் சென்று தங்கிவிடுவான். அப்போது தலைவிக்கு ஊடல் ஏற்படும்.
தலைவிக்கு ஏற்படும் ஊடலைத் தீர்த்து மீண்டும் தலைவன், தலைவியின் கற்பு வாழ்வை (இல்லற வாழ்வை) இணைத்து வைக்கும் இனிய பணியை ஆற்றுபவர்கள் ஊடல் தீர்க்கும் வாயில்கள் எனப்படுவர்.
கொளைவல் பாணன் பாடினி கூத்தர்
இளையர் கண்டோர் இருவகைப் பாங்கர்
பாகன் பாங்கி செவிலி அறிவர்
காமக் கிழத்தி காதற் புதல்வன்
விருந்து ஆற்றாமை என்றுஇவை ஊடல்
மருந்தாய்த் தீர்க்கும் வாயில்கள் ஆகும்
என்ற நம்பி அகப்பொருள் நூற்பா(68) ஊடல் தீர்க்கும் வாயில்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது. பாணன், விறலி, கூத்தர், ஏவலர், (தலைவி ஊடியுள்ள நிலையைக்) காண்பவர்கள் (இவர்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களாக இருப்பர்) பாங்கன், பாங்கி, தேர்ப்பாகன், செவிலி, சான்றோர், காமக்கிழத்தி, புதல்வர், விருந்தினர், தலைவியின் ஆற்றாமை (பொறுத்துக் கொள்ள முடியாத தனிமையும் வருத்தமும்) ஆகியவை ஊடல் தீர்க்கும் வாயில்களாகக் கூறப்பட்டிருக்கின்றனர். இனி, வாயில்களாகத் திகழும் சிலரது செயல்பாடுகளைக் காண்போம்.

பாணர் செயல்கள்
ஊடல் தீர்க்க வந்த வாயிலாகத் தன்னை ஏற்க வேண்டுதல், இசைவு பெறுதல், தலைவியின் ஊடல் தீர்த்தல், அவள் அழகு அழிந்தமை கண்டு கலங்குதல், தலைவனிடம் சென்று தலைவி சொல்லிய செய்தியை உரைத்தல், தலைவன் மீண்டு வருவதைத் தலைவிக்குச் சொல்லுதல், தலைவன் வரவு அறிந்த தலைவி அழகு பெற்றதை அறியார்போல வினவுதல் முதலியன பாணரின் செயல்களாகும்.
விறலிக்குரிய செயல்கள்
பிரிவின் போது தலைவிக்கு ஆறுதல் கூறுதல், ஊடல் தீர்த்தல், தலைவனோடு சேர்த்தல் முதலியன விறலிக்குரிய செயல்களாகும். (விறலி - ஆடல் மகள்)
கூத்தர் செயல்கள்
தலைவியின் செல்வச் செழிப்பை வாழ்த்துதல், நல்லறிவு புகட்டுதல், ஆறுதல் மொழி கூறுதல், தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே ஏற்பட்டு விட்ட இடைவெளியைச் சுட்டிக் காட்டுதல், பாசறைக்குச் சென்று தலைவனிடம் செய்தி கூறுதல், தலைவன் திரும்பி வருவதைத் தலைவிக்கு உரைத்தல் முதலானவை கூத்தர் செயல்களாகும்.
இளையோர் செயல்கள் (இளையோர் = ஏவலர்)
வாயில் வேண்டி உடன்படச் செய்தல், தலைவியின் ஊடல் தீர்த்தல், அதனைத் தலைவனுக்கு உணர்த்துதல், தலைவனுக்கும் தலைவிக்கும் பணிவிடை செய்தல், தலைவன் வருவதைத் தலைவிக்கு உரைத்தல், தலைவனின் ஆற்றலைத் தலைவிக்கு உணர்த்தல் முதலானவை இளையோர்க்குரிய செயல்களாகும்.
கண்டோர்க்குரிய செயல்கள்
ஊடல் தீர்த்தல், தலைவன் வரவைத் தலைவிக்கு உணர்த்துதல் முதலானவை கண்டோர்க்குரிய செயல்களாகும்.
பாங்கர் செயல்கள்
இளமை, செல்வம், வாழ்க்கை முதலான எதுவுமே நிலையற்றது என்ற நிலையாமைத் தத்துவத்தை உணர்த்துதல், தலைவன் பிரிவைத் தடுத்தல், பின்னர் பிரிவுக்கு உடன்படுதல் முதலானவையும் நன்மை தரும் வழியில் தலைவனை நிலைநிறுத்துதலும், தீமையிலிருந்து விலக்குதலும் பாங்கரின் செயல்களாகும்.
பாகன் செயல்கள்
தலைவியிடம் வாயில் ஏற்க வேண்டுதல், ஊடல் தீர்த்தல், நெடுந்தூரம் சென்ற தலைவன் விரைவில் வருவான் எனக் கூறித் தலைவியை ஆற்றுதல் முதலானவை பாகன் செயல்களாகும்.
பாங்கியின் செயல்கள்
பிரிவை விலக்குதல், பிரிவைத் தாமதிக்கச் செய்தல், பிரிவை ஏற்றுக்கொள்ளுதல், நோற்றல் முதலானவை பாங்கியின் செயல்களாகும்.
செவிலி, அறிவர் செயல்கள்
நீதிமுறை, உலகியல் முறைகளை வெளிப்படையாகக் கூறுதல் செவிலிக்கும் அறிவர்க்கும் உரிய செயல்களாகும்.


6. நம்பியகப்பொருள் அகத்திணையியல் - பிரிவு

                                                            (தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் பாடக் குறிப்பு)
பிரிவு
பிரிவும் அதன் வகைகளும்
தலைவன், தலைவியைத் தனித்திருக்கச் செய்து பிரிந்து செல்லும் நிகழ்ச்சிக்குப் பிரிவு என்று பெயர். இச்செயல்பாடு களவு - கற்பு எனும் இரு வகைப்பட்ட வாழ்விலும் நிகழும்.
களவில் நிகழும் பிரிவுகள்
மிகுந்த அன்பு கொண்டு பழகி வாழும் களவு வாழ்வின் போது நிகழும் பிரிவுகள் இருவகைப்படும்.
  1.      ஒருவழித் தணத்தல்
  2.      வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல்

1. ஒருவழித் தணத்தல்
களவு வாழ்வை ஒரு முடிவுக்குக் கொண்டு வர ஏதுவாகத் திருமணம் புரிந்து கொள்ளுமாறு தோழி தலைவனிடம் அறிவுறுத்துவாள். அதற்கு உடன்பட்ட தலைவன் தன் ஊருக்கு ஒருவழி (முறை) போய் வருகிறேன்; பிறகு மணமுடிப்பேன் என்று கூறிச் செல்வது ஒருவழித் தணத்தல் எனப்படும். இது, ஓர் ஊரின்கண்ணும் ஒரு நாட்டுக்குள்ளும் நிகழும் பிரிவாகும். ஆகவே, இதற்குக் கால வரையறை சொல்லப்படவில்லை.
2. வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல்
            திருமணம் புரிந்து கொள்ள முடிவு செய்த தலைவன் அதற்கு வேண்டும் பொருள் ஈட்டுதல் காரணமாகப் பிரிதல் இவ்வகை. இது காடு இடையிட்டும், நாடு இடையிட்டும் செல்வதாக அமையும். இப்பிரிவுக்குரிய காலம் இரண்டு மாதமாகும்.


கற்பில் நிகழும் பிரிவுகள்
கற்பு வாழ்க்கை வாழும் காலத்தே தலைவன் தலைவியைப் பிரிந்து மேற்கொள்ளும் செயல் (பிரிவு) ஆறு வகைப்படும்.
  1.      பரத்தையிற் பிரிவு
  2.      ஓதல் பிரிவு
  3.        காவல் பிரிவு
  4.        தூதிற் பிரிவு
  5.        துணைவயின் பிரிவு
  6.        பொருள்வயின் பிரிவு

1. பரத்தையிற் பிரிவு
தலைவன் பரத்தையிடம் விருப்பம் கொண்டு தலைவியைப் பிரிந்து, பரத்தையர் வாழும் பகுதிக்குச் செல்லுதல் பரத்தையிற் பிரிவு எனப்படும். இது,
  1.        அயல்மனைப் பிரிவு
  2.        அயற்சேரிப் பிரிவு
  3.        புறநகர்ப் போக்கு

என மூன்று உட்பிரிவுகளை உடையது.
1.1 அயல்மனைப் பிரிவு
தலைவன் காமக்கிழத்தியோடு கூடி மகிழ ஓர் ஊரிலேயே வேறு வீட்டில் சென்று தங்குதல்.



1.2 அயற்சேரிப் பிரிவு
தலைவன் பின்முறை வதுவைப் பெருங்குலக் கிழத்தியையும், காதல் பரத்தையையும் கூடி மகிழ்வதற்காகவும், விழா நிகழ்ச்சிகளைக் காண்பதற்காகவும், வேறு ஓர் பகுதிக்குச் சென்று தங்குதல்.
1.3 புறநகர்ப் போக்கு
தலைவன் புதியவளாகிய பரத்தையைத் தேரிலேற்றிக் கொண்டு சோலையில் விளையாடவும், புனலாடவும் நகர்ப் புறத்திற்குச் சென்று தங்குதல்.
2. ஓதல் பிரிவு
தலைவன் கல்வி கற்றலின் காரணமாகத் தலைவியைப் பிரிந்து செல்லுதல் ஓதல் பிரிவு எனப்படும். இதற்குரிய கால வரையறை 3 ஆண்டுகளாகும். இது
  1.        வேதம் ஓதுதல்
  2.        வேதமல்லாக் கல்வி கற்றல்

என இரண்டு உட்பிரிவுகளை உடையது.
3. காவல் பிரிவு
பாதுகாத்தல் தொழிலை மேற்கொள்ள வேண்டி, தலைவன் தலைவியைப் பிரிந்து செல்வது காவல் பிரிவு எனப்படும். இது
  1.        அறப்புறம் காவல்
  2.        நாடு காவல்

என இரு உட்பிரிவுகளை உடையது.


1.1 அறப்புறம் காவல்
அறமன்றங்கள் முதலான இடங்களைப் பாதுகாப்பதற்காகத் தலைவன் மேற்கொள்வது இப்பிரிவு.
1.2 நாடு காவல்
பகைவர்களிடமிருந்து தன் நாட்டைக் காப்பதற்காக மேற்கொள்ளும் இப்பிரிவு அரசருக்கு மட்டுமே உரியது.
4. தூதிற் பிரிவு
அரசர் இருவர் தம்முள் வேறுபட்டுப் பகை கொண்டு போரிட எண்ணிய சூழலில், அவ்விருவரிடையே பகை நீங்குவதற்காகத் தலைவன் தூது செல்லுதல் இப்பிரிவாகும். இது அந்தணர்க்கும், அரசருக்கும் உரியது. இதற்குரிய காலம் ஓர் ஆண்டு ஆகும்.
5. துணைவயின் பிரிவு
ஓர் அரசனுக்குப் பகைவர்களால் இடையூறு நேர்ந்த வழி அதனைப் போக்குவதற்குத் துணைபுரியும் நோக்குடன் தலைவன் மேற்கொள்ளும் பிரிவு துணைவயின் பிரிவு எனப்படும். இது அரசர், வணிகர், வேளாளர் என்னும் மூவருக்கும் உரியது. இதற்குரிய காலம் ஓர் ஆண்டு ஆகும்.
6. பொருள்வயின் பிரிவு
தலைவன் தன் இல்லற வாழ்வுக்குத் தேவைப்படும் பொருளை ஈட்டுதல் காரணமாகப் பிரியும் பிரிவு பொருள்வயின் பிரிவு எனப்படும். இது அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்னும் நான்கு பிரிவினர்க்கும் உரியது. இதற்குரிய காலம் ஓர் ஆண்டு ஆகும்.


பிரிவு பற்றிய சில சிறப்பு விதிகள்
தலைவன் நிகழ்த்தும் அறுவகைப் பிரிவிற்குமான சில சிறப்பு விதிகளை நம்பி அகப்பொருள் நூல் வகுத்து வழங்குகிறது. அவை வருமாறு:
1.     எல்லா வகைப்பிரிவின் போதும் தலைவன் தலைவியிடம் சொல்லிச் செல்வதும் உண்டு, சொல்லாமல் செல்வதும் உண்டு.
2.     தலைவியிடம் சொல்லாமல் செல்லும் போதும் தோழியிடம் சொல்லி விட்டுச் செல்வான்.
3.     நாடு இடையிட்டுச் (தன் நாடு விட்டு வேற்று நாட்டுக்கு) செல்லும் பிரிவின் போது தலைவன் - நடந்து செல்லுதல், கப்பலில் செல்லுதல், ஊர்தியில் செல்லுதல் என்னும் மூன்று வழிமுறைகளில் ஒன்றை மேற்கொள்வான்.
4.     தலைவிக்கும்கூட, தன் பிரிவைக் குறிப்பினால் உணர்த்திச் செல்வான்.
5.     அந்தணர்கள் கப்பலில் செல்வதும், அரசர், வணிகர், வேளாளர் என்னும் மூவரும் பெண்களுடன் கப்பலில் செல்வதும், பெண்களுடன் பாசறையில் சென்று தங்குவதும் கூடாது.
6.     பிரிவு மேற்கொள்ளாமல் தலைவன் தாமதித்தல் உண்டு. அதற்குச் செலவு அழுங்குதல் என்று பெயர்.
7.     தலைவன் ஓதற் பிரிவு மேற்கொண்ட காலத்தே பிரிவை நினைத்துப் புலம்புதல் கூடாது. தூது காரணமாகவும், துணைபுரிதல் காரணமாகவும் பிரிந்து சென்ற தலைவன் அச்செயலின் காலம் நீட்டிக்கும் போது தலைவியை நினைந்து புலம்பலாம்.