நூல் மதிப்புரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நூல் மதிப்புரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மே 07, 2020

ஜெயகாந்தனின் முன்னுரை இலக்கியம்

ஜெயகாந்தனின் முன்னுரை இலக்கியம்
ஆசிரியர்கள்:           பேராசிரியர் தமிழண்ணல், பேராசிரியர் ம.திருமலை
வெளியீடு:                மீனாட்சி புத்தக நிலையம்
முதல் பதிப்பு:          1977,              திருத்தப்பட்ட பதிப்பு:      2016.
நூலின் விலை:        100                 பக்கங்கள்:                            164
நூல் அறிமுகம்
            ஜெயகாந்தனின் முன்னுரை இலக்கியம் எனும் இந்நூல் பேராசிரியர் தமிழண்ணலிடம் தமிழ்ப் பல்கலைக் கழக முன்னைத் துணைவேந்தர் திருமலை அவர்கள் ஆய்வாளராக இருந்த பொழுது 1977இல் இருவரும் இணைந்து எழுதியதாகும். பல ஆண்டுகளுக்குப் பிறகு பேராசிரியர் திருமலை அவர்களால் திருத்தம் செய்யப்பட்டு 2016 இல் மறுபதிப்பு செய்யப்பட்டு நூல் வெளிவந்துள்ளது. முன்னுரை பற்றிய இலக்கிய விமர்சனம் செய்யும் நூல்களில் இந்நூல் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. இந்நூலுக்கு ஜெயகாந்தன் அவர்களே முன்னுரை வழங்கிச் சிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இரா. மோகன் அவர்கள் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ளார். நூல் முழுக்க நாவல் எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக வாசிப்புப் புரிதலுக்காக இம்மதிப்புரையில் புதினம் என்ற சொல் தவிர்க்கப்பட்டு நாவல் என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது.
பொருளடக்கம்
இந்நூல் ஆறு இயல்களாகப் பகுக்கப்பட்டு விளக்கப்பட்டுள்ளது அவை பின்வருமாறு,.    ஜெயகாந்தன் முன்னுரைகள் ஒரு வகை தொகை
  1. ஜெயகாந்தனின் முன்னுரை நோக்கம்
  2. வரலாற்றுக் குறிப்புகள்
  3. ஜெயகாந்தனின் இலக்கியக் கொள்கை
  4. ஜெயகாந்தனின் முன்னுரை உத்திகள்
  5. திறனாய்வுக்கு எதிர்வினை

இயல் 1. ஜெயகாந்தன் முன்னுரைகள் ஒரு வகை தொகை
          இலக்கியம் பற்றிப் பேசும் முன்னுரைகள், சமூகம் பற்றிப் பேசும் முன்னுரைகள், வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிட்டு எழுதப்பட்ட முன்னுரைகள், திரைப்படம் பற்றிக் குறிப்பிடும் முன்னுரைகள், காதல் பற்றி விளக்கும் முன்னுரைகள், கல்வி முறை பற்றி எழுதப்பட்ட முன்னுரை, அரசியல் பற்றி எழுதப்பட்ட முன்னுரை, விமர்சனம் பற்றி எழுதப்பட்டவை, கதையை விமரிசிக்கும் முன்னுரைகள், வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய முன்னுரைகள், எழுத்தாளன் பற்றி எழுதப்பட்டவை என இவ்வியலை நூலாசிரியர் வகைப்படுத்தி சான்றுகள் காட்டி விளக்கியுள்ளார்.
2. ஜெயகாந்தனின் முன்னுரை நோக்கம்
             ஜெயகாந்தனின் படைப்புகள் பலவும் வாசகர்கள் மத்தியில் மிகுந்த விமர்சனத்தைப் பெற்று விடுகின்றன. அது அவரது படைப்புக்களை ஏற்பாளர்கள் மத்தியிலிருந்தும் மறுப்பாளர்கள் மத்தியிலிருந்தும் எழும். அதுவே அனைவரையும் ஜெயகாந்தனைப் பற்றிப் படிக்கும்படி செய்தது என்றால் மிகையாகாது. இதை ஜெயகாந்தன் குறிப்பிடுகையில்நான் எதை எழுதினாலும் அதன் மூலம் ஒரு சலசலப்பு ஏற்படுவதே என்னுடைய இயல்பாய்ப் போயிற்று.” என்று கருனையினால் அல்ல நாவலிற்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இதனைச் சுட்டிக் காட்டும் நூலாசிரியர், “ஜெயகாந்தன் தன்னுடைய படைப்புக்களுக்கு வருகின்ற விமர்சனங்களுக்கு வளைந்து கொடுப்பவர் அல்லர். அவ்விமர்சனங்களுக்கு ஈடுகொடுப்பவர்என்கிறார். மேலும் ஜெயகாந்தன் எழுதும் விமர்சனங்கள் குறித்து குறிப்பிடும் நூலாசிரியர்இந்த விமர்சனங்களுக்கு அவர் விடையறுக்கிறாரே தவிர, அவ்விமர்சனங்களுக்கு ஏற்ப இவர் தன்னைத் திருத்திக் கொள்கிறாரா? மாற்றிக் கொள்கிறாரா? என்று வெளிப்படையாகத் தெரியவில்லை மேலும் மேலும் தனது கருத்தை நிலை நாட்டவே இவர் முயல்கிறார்.” என்கிறார். முன்னுரை பற்றி விளக்கும் நூலாசிரியர்ஒரு நூலில் முற்பகுதியில் தொடக்கத்தில் எழுதப்படுவது முன்னுரை எனலாம் என்கிறார். தமிழ் இலக்கண நூல்கள் இதனைப் பாயிரம் என்று குறிக்கின்றனர்.” என்கிறார்.
            நாவல்கள் படைக்கும் ஜெயகாந்தன் அவற்றிற்கு முன்னுரை எழுத வேண்டிய நோக்கத்தைக் குறிப்பிடுகின்ற பொழுதுநாவலை எழுதிய அதே சிரத்தையுடன் இந்த முன்னுரையையும் நான் எழுதுகிறேன்.” என்று குறிப்பிடுவதைச் சுட்டிக் காட்டுகின்றார். ஜெயகாந்தன் அவருடைய கதைகளில் நேரடியாக விளக்க முடியாத சில கருத்துக்களை விளக்கவே இவர் முன்னுரைகளை எழுதுகிறார். முன்னுரைகளில் சொல்லிய செய்திகளை அவர் கதைகளில் சொல்ல நேர்ந்தால் கதைகளின் வடிவம்  சிதையக்கூடும். இத்தகையக் குறைபாடுகளைத் தவிர்க்க வேண்டியும் கதைகளில் பிரச்சாரத் தன்மை மலிந்து விடாமலிருக்க வேண்டியும் ஜெயகாந்தன் தனது படைப்புக்களுக்கு முன்னுரைகளை எழுதுகின்றார் என்கிறார். அதனை பிரம்மோபதேசம் கதைக்கு எழுதப்பட்ட முன்னுரையிலிருந்து எடுத்துக் காட்டுகிறார்.  கதைகளில் சொல்ல முடியாதசொன்னால் கதைத் தன்மை குலைந்து போகக் கூடியஆனால் நான் கதை எழுதும் நோக்கம் வலுப்பெறச் சொல்லியே தீர வேண்டிய கதை பற்றிய கருத்துக்களைப் பேசுவதற்கு நூலின் முன்னுரை ஒரு சௌகரியமான தளம் என்பதால் இந்தச் சில பக்கங்களைப் பயன்படுத்திக் கொள்வது சமுதாயக் கண்ணோட்டத்துடன் இலக்கியப் பணி புரியும் என் போன்றவர்க்கு இன்றியமையாததாகும்.” என்பது குறிப்பிடத் தக்கது.
            முன்னுரை என்பது எது என்று கூறும் ஆசிரியர் ஜெயகாந்தனின் வரிகளையே சான்றுகாட்டுகின்றார். “முன்னுரை என்பது எழுதிய ஒன்றைப் பற்றி எழுதுவது.” (கைவிலங்கு) ஜெயகாந்தன் முன்னுரைகளைப் பொதுவாக வாசகர்களிடமிருந்து வருகின்ற விமர்சனங்களுக்குப் பதிலளிக்கின்ற பகுதியாகவும் பயன்படுத்திக் கொள்வதாகக் குறிப்பிடுகின்றார். இதனை சில நேரங்களில் சில மனிதர்கள் எனும் நாவலிற்கு எழுதிய முன்னுரையிலிருந்து அறிய முடிகிறது என்கிறார் ஆசிரியர். “உண்மையான இலக்கியம் அல்லது கதை படிக்கிற ஆர்வத்தோடு எழுதப்பட்ட கடிதங்களை மட்டும் பொருட்படுத்தி ஒரு கட்டுரையை எழுத வேண்டும் என்ற நோக்கத்தினால்இந்த முன்னுரையின் மூலம் அந்த வாசக நண்பர்களின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் அபிப்பிராயங்களுக்கும் விமர்சனங்களுக்கும் பதில் சொல்ல முயல்கிறேன்.” என்கிறார். ஜெயகாந்தனின் முன்னுரைகளில் அவருடைய கதைகள், கதாப்பாத்திரங்கள், அவை உருவாகின்ற சூழல் முதலியவை பற்றி விளக்குவதற்கு முன்னுரைகளைப் பயன்படுத்துகிறார்.
ஜெயகாந்தன் கதைப்பாத்திரங்கள் பற்றிக் குறிப்பிடுகையில்என் கதைகளில் வருகிற எல்லாப் பாத்திரங்களுமே ஒன்றைக் கவனியுங்கள். என் பாத்திரங்களில் யாருமே முழுக்க, முழுக்க நல்லவர்களுமில்லை கெட்டவர்களுமில்லைநான் தான். நான் போட்டுக் கொள்ளுகின்றவாழ்க்கையில் நான் சந்தித்த பிறர் மாதிரியானவேஷங்களே அவை.” என்பதைக் குறிப்பிடுகின்றார். ஜெய்காந்தன் தன்னுடைய வாசகர்களின் விமர்சனங்களுக்கு விடை கூறும் விதமாக முன்னுரைகள் எழுதினாலும் அதன் வழி அவர்களுக்கு நன்றி கூற மறக்கவில்லை. “என் திறமையைப் பாராட்டி எனது குறைகளை உணரச் செய்த நண்பர்களுக்கும் என் குறைகளை உணர்த்தி என் பலத்தை எனக்கு நினைவுபடுத்திய அன்பர்களுக்கும் இந்த முன்னுரையில் நான் நன்றி தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன்.” என்கிறார்.
3. வரலாற்றுக் குறிப்புகள்
          ஜெயகாந்தனின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் அவரது முன்னுரைகளில் இடம் பெற்றுள்ள தன்மையினை இவ்வியல் விளக்குகிறது. ஜெயகாந்தன் அவரது வாழ்வின் அனுபவங்களிலிருந்து கதைகளை எழுதுவதாகக் குறிப்பிடுகின்றார். மேலும் அவர் சந்திக்கின்ற பலர் இவருடைய கதைகளில் கதைமாந்தர்களாகின்றனர். “வாழ்க்கையில் நான் காண்கின்ற மனிதர்களும் விலங்குகளும் பறவைகளும் மலர்களும் மண்ணும் கடலும் வானும் வண்ணங்களும் ஓசைகளும் எல்லாமே எனக்குக் கதை சொல்லுகின்றன.” (நினைத்துப் பார்க்கிறேன்) உன்னைப்போல் ஒருவன் நாவலில் வரும் கதாப்பாத்திரமானசிட்டிஎன்பவனைப் பற்றிக் கூறும் ஜெயகாந்தன் அந்நாவலின் முன்னுரையில் “1949இல் நான் பதினைந்து வயதுச் சிறுவனாய் ஒருசோப்பு இங்க்பாக்டரியில் வேலை செய்து கொண்டிருந்த போது என்னோடு வேலை செய்து கொண்டிருந்த, என்னைவிடச் சற்றே இளையவனான, நான் மொட்டை என்று அன்புடன் அழைக்கும் எனது சகா ஒருவனின் கதை இது.” என்று குறிப்பிடுகின்றார்.
ஜெயகாந்தனுக்கும் பத்திரிக்கைகளுக்குமான தொடர்பு குறித்த அவரது வாழ்க்கை அனுபவங்களை முன்னுரைகளில் குறிப்பிட்டிருக்கின்றார். “நான் பத்து வருசமாகக் கதைகள் எழுதிய போதிலும் இப்பொழுது ஒரு நான்கைந்து வருஷமாகத் தான் எனக்கு மௌஸ்.” “இந்த மௌஸ் எனக்குப் பிறந்ததுசரஸ்வதிபத்திரிக்கையில். நான் எழுதும் போது, அந்தப் பத்திரிக்கை, நான் எனது மனசில் சிந்திப்பது போலெல்லாம்ரத்தமும் சதையுமாய்எழுத இடமளித்து, விளையாடத் தளமமைத்துத் தந்திருந்தது.” முழுக்க முழுக்க இலக்கிய வளர்ச்சியையே நோக்கமாகக் கொண்ட சரஸ்வதி பத்திரிகை ஜெயகாந்தனுக்கு உரிய இடம் தந்து அவரைப் பயன்படுத்திக் கொண்டு இலக்கிய வளர்ச்சிக்குத் துணையாக நின்றதை அவரது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் அடிப்படையில் வகைப்படுத்தி விளக்குகிறார் நூலாசிரியர்.
          ஏதாவது நிகழ்ச்சி, சூழலில் ஆகியவை ஒரு படைப்பாளியைப் பாதிக்கின்ற போது தான் ஒரு கதை உருவாகிறது. அவ்வாறு ஜெயகாந்தன் எழுதிய பிரளயம் என்ற நாவலின் தோற்றப் பின்புலம் குறித்து விளக்குகையில்பிரளயம், சென்னையில் ஒரு முறை வந்த வெள்ளத்தின் போது நிகழ்ந்த அலங்கோலங்களை, மனிதனின் சிறுமைகளை, ‘கொடை வள்ளல்களின் மான வெட்கமற்ற தற்பெருமைச் சவடால்தனங்களைக் கண்ட போது என் மனத்தில் எழுந்தது தான்…” (பிரளயம்) அதுபோல் கைவிலங்கு நாவல் உருவான சூழலையும் விளக்குகிறார். “ஜெயிலில் சில காலம் வாழ்ந்த என் நண்பரொருவர் அந்த ஜெயிலின் சூப்பிரண்டெண்டாக இருந்த ஒரு கொடுமைக்கார அதிகாரியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த பொழுதுபோக்குப் பேச்சிலிருந்து தான் இந்தக் கதை உருவாயிற்று.” என ஜெயகாந்தனின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் அவரது படைப்புகளோடு தொடர்புகொண்டுள்ள தன்மையினை அவரது முன்னுரைகள் வழி எடுத்துரைக்கின்றார் நூலாசிரியர்.
4. ஜெயகாந்தனின் இலக்கியக் கொள்கை
          ஜெயகாந்தன், இலக்கியம் என்பது என்ன என்பது குறித்துக் குறிப்பிடுகின்ற பொழுதுஒரு தேசத்தின், ஒரு நாகரிகத்தின், ஒரு காலத்தின், ஒரு வளர்ச்சியின், ஒரு வாழ்க்கையின் உரைகல் இலக்கியம்.” “நீங்கள் கதை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் அது காலத்தின், ஒரு வாழ்க்கையின் சாஸனம்.” என்பதை பாரீஸுக்குப் போ நாவலில் குறிப்பிடுகின்றார். மேலும் ஜெயகாந்தன் வழி அவர் விளக்குகின்ற இலக்கியக் கொள்கையினை இலக்கியப் பணி, முற்போக்கு இலக்கியம், இலக்கியத்திற்கான விமர்சனம், வாழ்க்கை குறித்த புரிதல், வாழ்க்கைச் சிக்கல்கள் எனப் பல நிலைகளில் விளக்குகின்றார்.
             சமூக விதிகளை மறுப்பதும் மாற்றுவதும் அதன் அநியாயமான தீர்ப்புகளைக் காலத்தின் முன்னே மறு பரிசீலனைக்கு வைப்பதும் இலக்கியத்தின் பணியாகிறது.” சமூகக் கட்டுப்பாடுகள் எனும் பெயரில் சமூகத்தில் நிகழும் அநீதிகளை விமர்சனம் செய்வது இலக்கியத்தின் பணியும் அதன் பயனும் ஆகிறது. என்பதினை ஜெயகாந்தனது முன்னுரைகளின் வழி நூலாசிரியர் எடுத்துக்காட்டி விளக்குகிறார். அதே போன்று முற்போக்கு இலக்கியம் என்பது யாது என்று விளக்கும் நூலாசிரியர்  முற்போக்கு என்பது வளர்ச்சி; வளர்ச்சியின் ஒரு கூறு என்று கொள்ளலாம். மனித சமூகத்தின் வளர்ச்சிக்குப் பாடுபடும் இலக்கியம், அதனை நோக்கமாகக் கொண்ட இலக்கியம் முற்போக்கு இலக்கியம் ஆகும்.” என்பதை முன்னுரைகள் வழி எடுத்துரைக்கின்றார்.  ஆழ்ந்து பார்க்கின்ற பக்குவம் பெற்றுவிட்டால் எல்லாவற்றுள்ளும் ஒரு மகத்துவம் துயிலுவதை, மறைந்திருப்பதைத் தரிசிக்க முடியும்.” என்பதை எடுத்துரைக்கின்றார்.
            வாழ்க்கை சிக்கல் மிகுந்ததுதான், கஷ்டங்கள் சூழ்ந்ததுதான்வாழ்கிறவன் எவனும் அதை மறக்க முயற்சி செய்யலாகாது. அதைப் புரிந்து கொள்ளவே கலையும் இலக்கியமும் பயன்படுதல் வேண்டும்.” என்ற புரிதலை ஜெயகாந்தனின் முன்னுரை இலக்கியம் நமக்கு விளங்குவதனை நூலாசிரியர் எடுத்துக் காட்டுகின்றார்.  எவ்வளவுதான் சிக்கல் மிகுந்திருந்த போதிலும், வாழ்க்கையின் ஒவ்வொரு பிரச்சனையிலும் முரண்பாடுகளே மலிந்திருப்பினும் மனித வாழ்க்கையின் பொதுவான கதி உன்னதமாய்த் தான் இருக்கிறது என்பது வாழ்க்கையை ஒரு வெறியோடு வாழ்ந்து அனுபவித்தவர்கள் மட்டுமே உணரத் தக்க ஒரு ஞானம்.” இது ஜெயகாந்தனின் பார்வையில் வாழ்க்கை குறித்த ஒரு விளக்கமாக அமைந்திருப்பதினை நூலாசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜெயகாந்தன் வாழ்க்கையை மிகவும் கூர்ந்து நோக்கி, பிறர் காணாதவற்றைகண்டும் கூறத் தயங்குவனவற்றைகாணத் தவறியவற்றைக் கண்டு கூறுகின்றார். இது தான் அவரது வெற்றியின் அடிப்படை. என ஜெயகாந்தனின் படைப்பிலக்கிய வெற்றியைக் குறித்த கருத்தினை நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.  
            ஜெயகாந்தனின் படைப்புக்களில் சங்க இலக்கியப் பண்புகளைக் காணுகின்றோம். என்கிறார். யாரேனும் சிலர் இவருடைய கதைகளை எடுத்து வைத்துக் கொண்டு, அவற்றிற்கு நிகரான சங்கப் பாடல்களையும் எடுத்துக் கொண்டு, சிறந்த ஒப்பீட்டுக் கட்டுரைகள் எழுதுவார்களாயின், தமிழ் முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்குமான நிலையை அறிய முடியும் என்கிறார் நூலாசிரியர்.     
            ஜெயகாந்தன் படைப்புக்களின் அடிப்படைக் கோட்பாட்டை அவரது முன்னுரைகளின் வழி விளக்கும் நூலாசிரியர்  படைப்பாளி தன் அனுபவத்தால் அறிந்ததைப் பிறரும் அரியும்படி சொல்கிறார். அப்படி அவனைச் சொல்லத் தூண்டுவது அவனுக்கிருக்கும் சமுதாயச் சிந்தனையே ஆகும். ஜெயகாந்தன் தமது சமுதாயத்தைப் பற்றி இடையறாது சிந்திக்கின்றார்”. என்பதனைக் குறிப்பிடுகின்றார். “என்னுடைய எழுத்து அனைத்துமே சமுதாயப் பிரச்சனைகளின் பாற்பட்டதன்றி வேறல்ல.” எனும் ஜெயகாந்தனின் கூற்றிலிருந்து அவரது படைப்பில் காணப்படுகின்ற சமூக சிந்தனை குறித்து நூலாசிரியர் விளக்குகின்றார். தமது படைப்புக்களிலும் மனித நேயத்தை மிகுதியாகப் பிரதிபலித்த எழுத்தாளர் அவரே! என்று கூறும் நூலாசிரியர், அவர்கள் உள்ளே இருக்கிறார்கள் எனும் கட்டுரைத் தொகுதியின் முன்னுரையினை எடுத்துக் காட்டுகின்றார்.  நான் சிறந்த எழுத்தாளனாவது என்னுடைய லட்சியமல்ல. நான் சிறந்த மனிதனாய் இருக்க வேண்டும். மிகுந்த மனிதாபிமான உணர்வுடன் எனக்குப் பிடித்த, எனக்குப் பிடிக்காத எல்லாரைப் பற்றியும் நான் இதில் எழுதியிருக்கிறேன்.” என்று கூறும் தன்மையிலிருந்து ஜெயகாந்தனின் இலக்கியக் கொள்கைக்கு அடிப்படையாக இருப்பது அவருடைய மனித நேயம் என்பதை நூலாசிரியர் வலியுறுத்துகின்றார்.
5. ஜெயகாந்தனின் முன்னுரை உத்திகள்
          ஜெயகாந்தன் எழுதிய முன்னுரைகளுக்கு அவர் மேற்கொண்ட உத்திகளை வகைப்படுத்தி விளக்குகிறது இவ்வியல். முன்னுரை இலக்கியத்தின் தொடக்கம், முடிவு, இடையே விளக்கப்படும் கருத்துக்களின் தன்மை, மேற்கோள் காட்டும் முறை, பயன்படுத்தும் சொல்லாட்சி அமைப்பு, பயன்படுத்தப்படும் உவமைகள் என இலக்கிய உத்திகளைப் பல வகைகளாக நூலாசிரியர் விளக்குகிறார். முன்னுரையின் தொடக்கம் அமைந்துள்ள விதத்தினை பகுத்துக் கூறும் ஆசிரியர் அதனை, நேரடித் தொடக்கம், பொதுத் தன்மையிலான தொடக்கம், வாசகர்களை முன்வைத்துத் தொடங்குதல், மேற்கோள் வைத்துத் தொடக்கம், சொற்பொருளுக்கான விளக்கத்தினை முன்வைத்துத் துவங்குதல், கடிதத்தை முன்வைத்துத் துவங்குதல் என வகைப்படுத்தி விளக்குகிறார். ஜெயகாந்தனின் முன்னுரை இலக்கியத்தின் முடிவு பொதுவாக பத்திரிக்கையாளர்களுக்கு, வாசகர்களுக்கு, பதிப்பகத்தாருக்கு எனப் பலருக்கும் நன்றியினைத் தெரிவிப்பதாக அமைவதனை விளக்குகின்றார்.
ஜெயகாந்தனின் நடை, உணர்ச்சி வாக்கியங்கள் மிகுந்தும் ஆங்கிலச் சொற்களும் வாக்கியங்களும் பரவலாகக் கலந்தும் முன்னுரை இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன என்பதை மொழிக் கலப்புக் கூறு எனும் தலைப்பின் கீழ் சான்று காட்டி விளக்குகின்றார் ஆசிரியர். மேலும் தொடரமைப்புகள், உவமைகள் போன்றவை குறித்தும் ஜெயகாந்தனின் முன்னுரைகளிலிருந்து சான்று காட்டுகின்றார். மேற்கோள் காட்டுதல் எனும் அடிப்படையில் முன்னுரைகளில் வருகின்ற மேற்கோள்களை எடுத்துக் கூறுகின்றார். “என்னுடைய கருத்தை அதன் மீது ஏற்றாமல் திருக்குறளைக் கூட என்னால் மேற்கோள் காட்ட முடியாது.” என்று கூறும் ஜெயகாந்தனின் நிலைப்பாட்டை நூலாசிரியர் எடுத்துரைக்கின்றார். இலக்கியம் சார்ந்தும் இலக்கணம் சார்ந்தும் புராண மரபுக் கதைகள் சார்ந்தும் மேற்கோள்களை ஜெயகாந்தன் பயன்படுத்துகின்ற விதத்தினை நூலாசிரியர் சான்றுகளுடன் எடுத்துரைக்கின்றார்.
6. திறனாய்வுக்கு எதிர்வினை
ஜெயகாந்தனின் படைப்புகளுக்கு எழுந்த விமர்சனங்களை விடவும் ஜெயகாந்தன் அவற்றிற்கு ஆற்றிய எதிர்வினைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். வாசகர்கள் பல்வேறு தரப்பட்டவர்களாக இருந்து அவரவர் தங்களது விருப்பப்படி கதை அமைப்பு இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் விமர்சனங்களை முன் வைப்பதும் அதற்கு ஜெயகாந்தன் தனக்கே உரிய தொனியில் விளக்கமளிப்பதும் முன்னுரை இலக்கியத்தில் முதன்மை பெறுகின்றன. நூலாசிரியர் நூலின் துவக்கத்தில் குறிப்பிட்டது போல ஜெயகாந்தன் முன்னுரைகள் பெரும்பாலானவை விமர்சகர்களுக்குப் பதிலுரைப்பனவாகவே உள்ளன என்கிறார். எப்படி விமர்சிக்க வேண்டும் என்பதிலே கூட இவருக்கு சில கருத்துக்கள் உண்டு, ‘உங்கள் கையில் விரிந்து கிடப்பது ஒரு புத்தகமன்று; எழுதியவனின் இதயம் என்பதை லட்சியப்படுத்தி இதயப் பூர்வமாய்க் களங்கமற்றுப் படியுங்கள் என்கிறார். வாழ்க்கை அழைக்கிறது என்னும் நாவலுக்கு எழுதிய முன்னுரையில் எதிர்வினையாற்றும் ஜெயகாந்தன் வாசகர்களாகிய விமர்சகர்களுக்குப் பின்வருமாறு கூறுகின்றார். “இதில் என்னென்ன இல்லை என்பதைப் பார்க்காமல், என்னென்ன இருக்கிறது எப்படி, எப்படி இருக்கிறது என்று கூறுவீர்களானால் அது எனது வளர்ச்சிக்கும், இலக்கிய வளர்ச்சிக்கும் உதவும் என்று நம்புகிறேன்.” என்கிறார். இதைத் தொடர்ந்து ஜெயகாந்தனை நோக்கி வரும் விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றும் தன்மையினை நூலாசிரியர் விளக்குகிறார்.  விமர்சகர்களைக் கடுமையாகக் கடிந்து கொண்டு எழுதவும் செய்கிறார் ஜெயகாந்தன். அதாவதுவிமர்சகர்கள் எனப்படும் பெரியார்கள் இருக்கிறார்களே, அவர்கள் யார் சொன்னாலும் விளங்கிக் கொள்ள மாட்டார்கள், எழுதியவனோ, படித்தவனோ எதாவது சொன்னால் கூட கேட்டுக் கொள்ள மாட்டார்கள். எப்பொழுதும் ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பதற்காகத்தான். அவர்கள் விமர்சகாவதாரம் எடுத்துள்ளார்கள். நயம்பட உரை என்ற பால பாடமே படிக்காத அல்லது அதை நடைமுறையில் ஏற்றுக் கொள்ளாத மேதாவிகள்.” என்கிறார். ஜெயகாந்தன் சமூகத்தில் கண்டதையும் கேட்டதையும் பற்றியே எழுதுவதாகவும் அது அசிங்கமாக இருக்குமேயானால் அதனால் எனக்குப் புகழோ பலியோ வந்து விடாது என்கிறார். எனது எழுத்துக்கள் அனைத்துமே சமூகப் பிரச்சனைகளைப் பற்றியவையே என்கிறார். ஜெயகாந்தனுடைய கதைகள் பாலுணர்வைப் பற்றியவை என்று விமர்சிக்கும் விமர்சகர்களுக்கு அவர் அவை பாலுணர்வைக் கிளறி விடுபவை அல்ல. மாறாக பாலுணர்ச்சிப் பிரச்சனைகள் பற்றியவை என்கிறார்.
ஜெயகாந்தன் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த பொழுது அவர் எழுதிய கதைகள் அனைவராலும் பாராட்டப் பெற்றது என்றும் கட்சியிலிருந்து வெளிவந்த பிறகு எழுதப்படுபவை அனைத்தும் விமர்சனத்துக்கு ஆளாகின்றன என்பதையும் விளக்குகிறார். இவருடைய கதைகளை புரிந்து கொள்ளாமல் விமர்சனம் செய்யும் விமர்சகர்களுக்கு இவரது எதிர்வினை சற்றே நக்கல் தொனியில் அமைவதினை அறிய முடிகின்றது என்பதற்கு நூலாசிரியர் பின்வரும் சான்றினை எடுத்துக் காட்டுகின்றார். “வாழ்க்கையை வாழ்க்கையாக வாழ்கிறவர்கள் கதையைக் கதையாகப் படிக்கலாம். கதைகளிலிருந்து வாழ்க்கையையும் புரிந்து கொள்ளலாம். வாழ்க்கையையே புரிந்து கொள்ள மறுக்கிறவர்கள் கதையையா புரிந்து கொள்ளப் போகிறார்கள்? புரிந்து கொள்ள மறுப்பவர்களைப் பற்றி நமக்குக் கவலையே இல்லை. இவர்கள் புரிந்து கொண்டவர்களைக் குழப்பாமல் இருந்தால் போதும்.” (சுய தரிசனம்) இத்தகைய விமர்சனங்களை எடுத்துக் கூறும் நூலாசிரியர் படைப்பாளியின் சிறப்பு, அவருடைய நுண்ணுணர்வில்தான் உள்ளது என்கிறார். எல்லோருக்கும் எல்லாமும் புரிந்து விடுவதில்லை. ஒரு படைப்பில் ஒருவருக்குப் புரிந்தது மற்றொருவருக்குப் புரிந்துவிடுவதில்லை. இது இலக்கியத்திற்கு மட்டுமல்ல கலைப் படைப்பு அனைத்திற்குமே பொருந்தும். “படைப்பு என்பது வாழ்க்கை பற்றிய திறனாய்வு; திறனாய்வு என்பது அப்படைப்புப் பற்றியது. வாழ்க்கையைக் காட்டும் கண்ணாடியே படைப்பு; அப்படைப்புக் காட்டும் கண்ணாடியாக முன்னிற்பதே திறனாய்வு. எனவே திறனாய்வு என்பது வளர்ந்து வரும் இலக்கியத்தை இனம் காட்டி, நடத்திச் செல்லும் தலைசிறந்த வழிகாட்டி. இவ்வுணர்வோடு திறனாளிகள்விமரிசகர்கள் செயற்படுவது இன்றியமையாதது. என்று திறனாய்வின் அவசியம் குறித்து விளக்கி ஜெயகாந்தனின் முன்னுரை இலக்கியத்தையும் திறனாய்வு செய்து விளக்கியுள்ளார் நூலாசிரியர்.
நிறைவுரை
ஜெயகாந்தனின் முன்னுரை இலக்கியம் எனும் இந்நூல் ஆறு இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் இயல் ஜெயகாந்தன் முன்னுரைகள் ஒரு வகை தொகை எனும் அடிப்படையில் பின்வரும் இயல்களை விளக்குவதற்கு தளம் அமைத்துக் கொடுக்கிறது. இலக்கியம் பற்றியது, வாழ்க்கை பற்றியது, சினிமா பற்றியதுஎன வகைப்படுத்தி அறிமுகப் படுத்தும் நோக்கில் இவ்வியல் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இயலான  ஜெயகாந்தனின்  முன்னுரை நோக்கம் எனும் இயலில் ஜெயகாந்தன் ஒவ்வொரு கதைக்கும் முன்னுரை எழுதுவதன் நோக்கம் விமர்சகர்களுக்கான பதிலை முன்வைப்பதோடு அனைவருக்கும் நன்றி தெரிவிக்கவே முன்னுரைகளை எழுதுகின்றார் என்பதை நூலாசிரியர் முன்வைக்கின்றார். மூன்றாவது இயலான வரலாற்றுக் குறிப்புகள் எனும் இயல் ஜெயகாந்தனின் வாழ்க்கை அனுபவங்களுக்கும் அவரது படைப்புகளுக்குமான தொடர்பை ஜெயகாந்தன் விளக்கியுள்ள நிலையினை தொகுத்து விளக்குகிறது. நான்காவது இயலான ஜெயகாந்தனின் இலக்கியக் கொள்கை எனும் இயல் ஜெயகாந்தன் எழுதிய முன்னுரைகள் வழி மனித நேயம் நிறைந்த படைப்புக்களை உருவாக்குவதே ஜெயகாந்தனின் அடிப்படை இலக்கியக் கொள்கை என்பதை கண்டறிந்து வெளிப்படுத்துகிறது. ஐந்தாவது இயலான ஜெயகாந்தனின் முன்னுரை உத்திகள் எனும் இயல் ஜெயகாந்தனின் முன்னுரைகள் எழுதப்பட்டுள்ள விதத்தினை உத்திகளின் அடிப்படையில் வகைப்படுத்தி ஜெயகாந்தனின் இலக்கியத் திறனை கண்டறிய முற்படுகிறது. இறுதியலாக அமைந்துள்ள திறனாய்வுக்கு எதிர்வினை எனும் இவ்வியல் ஜெயகாந்தனை விமர்சனம் செய்யும் பலருக்கும் அவர் எவ்வாறு எதிர்வினையாற்றினார் என்பதை விளக்குகிறது. நக்கலாகவும், கோபமுடனும், பெருந்தன்மையுடனும் விமர்சகர்களுக்கான எதிரிவினையாற்றும் ஜெயகாந்தனின் முன்னுரைகள் மிகவும் சிறந்த இலக்கிய நயம் வாய்ந்தவை என்பதை நூலாசிரியர் எடுத்துக் கூறுகின்றார்.
முன்னுரைகளும் இலக்கியமாகக் கருதப்பட்டு திறானாய்வு செய்யப்பட வேண்டும் என்பதற்கு இந்நூல் ஒரு முன்னோடி நூலாக விளங்குகிறது. எனெனில் படைப்பிலக்கியங்கள் பேசாத பல செய்திகளை முன்னுரைகள் சமூகத்திற்கு எடுத்துக் கூறுகின்றன. ஒரு படைப்பின் வளர்சிக்கும் வீழ்ச்சிக்கும் அந்நூலில் முன்னுரைகள் காரணமாக அமைவதும் உண்டு. இதனடிப்படையில் திறனாய்வு நூலாக அறியப்படும் ஜெயகாந்தனின் முன்னுரை இலக்கியம் எனும் இந்நூல் படைப்பு குறித்த விமர்சகர் பார்வையையும் படைப்பாளரின் பார்வையையும் இனைத்துக் காட்டும் பகுதியாக ஜெயகாந்தனின் முன்னுரைகள் விளங்குகின்றன என்பதை திறனறிந்து விளக்குகிறது.   


புதன், மே 06, 2020

பாலினப் பாகுபாடும் சமூக அடையாளங்களும்

பாலினப் பாகுபாடும் சமூக அடையாளங்களும்

ஆசிரியர்கள்: வ.கீதா மற்றும் கிறிஸ்டி சுபத்ரா
வெளியீடு: பாரதி புத்தகாலயம், ஆண்டு: 2009 டிசம்பர்
பக்கங்கள்: 176, விலை: ரூபாய் 80
            பாலினப் பாகுபாடும் சமூக அடையாளங்களும் எனும் இந்நூல் ஆறு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு 
1. கடவுள் உன்னை வேறு மாதிரியாகப் படைத்துள்ளார்: இயற்கை நம்மை வித்தியாசமாகப் படைத்துள்ளது. 
2. பாலினயுத்தம் 
3. குறிப்பிட்ட பாத்திரங்களாக வாழுதல் 
4. ஆண் தன்மையும் பெண் தன்மையும்: கருத்தாக்கங்கள் நிஜமாகின்றன 
5. பாலின பாகுபாடு: வரலாற்றின் பார்வையில் 
6. பாலினம் சார்ந்த பழக்கவழக்கங்கள், நடைமுறைகள்

            மேற்கண்ட 6 இயல்களில் முதல் நான்கு இயல்கள் பல்வேறு கருத்துநிலைகளின் அடிப்படையில் பாலினப் பாகுபாடு எவ்வாறு கருத்துருவாக்கம் பெற்றுள்ளது என்பதை அறிமுகப்படுத்துகின்ற விதமாகவே அமைந்துள்ளன. 176 பக்கங்கள் கொண்ட இந்நூலின் முதல் 70 பக்கங்களுக்குள்ளாக முதல் நான்கு இயல்கள் அடங்கிவிடுகின்றன. இறுதி இரண்டு இயல்கள் மட்டுமே நூலின் மீதமுள்ள பக்கங்களில் விவாதிக்கப்பட்டுள்ளன. எனவே இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ள முதல் நான்கு இயல்களையும்   தொகுத்துரைப்பது கேட்போரின் புரிதலை மேம்படுத்தும் என்ற நோக்கில் அவை பாலினப் பாகுபாடு ஓர் அறிமுகம் எனும் தலைப்பின் கீழ் விவரிக்கப்படுகின்றன.
1. பாலினப் பாகுபாடு ஓர் அறிமுகம் 
            இவ்வியலின் உட்பிரிவாக அமையப்பெற்றுள்ள முதல் இயலான 'கடவுள் உன்னை வேறு மாதிரியாகப் படைத்துள்ளார்: இயற்கை நம்மை வித்தியாசமாகப் படைத்துள்ளது. என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் பாலினப் பாகுபாட்டினை மூன்று நிலைகளில் இவ்வியல் விளக்குகிறது. அவை 
1. மதரீதியான பாலினப் பாகுபாடு, 
2. விஞ்ஞான ரீதியான பாலினப் பாகுபாடு 
3. சமகால சமூகப் பின்னணியில் பாலினப் பாகுபாடு 

I. மதரீதியான பாலினப் பாகுபாடு: மதரீதியான பாலினப் பாகுபாடு என்பது மதங்கள் அனைத்திற்கும் பொருந்தக்கூடியதாக இருப்பதை இவ்வியலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. “பெண் பாவத்தின் மறு உருவாக விளங்குபவள். பொய் பேசுவதும், வம்பிழுப்பதும் பெண்களின் இயல்பு. நகைகளின் மீது தீராத மோகம் கோபம், அற்பத்தனம், துரோகம் ஆகியன அவளுக்குரிய குணங்கள்.” (ப - 20)  என்று மனுவில் கூறப்பட்டுள்ள பெண் குறித்த பதிவினையும், “பெண்கள் இயல்பிலேயே அறிவுத்திறத்திலும் பகுத்தறியும் திறனிலும் குறைவுபட்டவர்களாக இருக்கிறார்கள். இயல்பிலேயே அறிவிலிகளாக உள்ள பெண்களுக்கு நாட்டின் பிரஜையாகவோ பொது விசயங்களில் பங்கெடுக்கவோ தகுதியில்லை. இவற்றைப் ஆண்களிடமே விட்டுவிடுவதுதான் முறையாக இருக்கும்.” (ப – 21)  என்று குறிப்பிட்ட அரிஸ்டாட்டிலின் (கிரேக்க தத்துவ அறிஞரான) கருத்தினையும் “பெண்கள் இயல்பிலேயே மோசமானவர்கள். எது சரி, எது தவறு, உண்மை எது, பொய் எது என்பதையெல்லாம் அவர்களால் உய்த்துணர முடியாது.” (ப – 21) என்று கூறிய புத்தமதக் கருத்துக்களையும் “கடவுள் ஆணையே முதலில் படைத்தார். பெண்ணை ஆணின் விலா எலும்பிலிருந்து படைத்தார். பெண்களையும் அவர்கள் வாழும் வாழ்க்கையையும் கண்காணித்து அவர்கள் மீது அதிகாரம் செலுத்தவே ஆண்கள் படைக்கப்பட்டனர்.” (ப – 21) என்பன போன்ற கிறித்துவமதக் கருத்துக்களும் இவ்வியலில் விளக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட மதத்தின் அடிப்படையில் பெண்களுக்கு எதிராக தோன்றிய கருத்துக்களை சான்று காட்டும் இந்நூல் மதத்தின் பேரில் பெண்களுக்கு எதிராக பரப்பப்பட்டு வந்த செய்திகள் அனைத்தும் ஆணாதிக்க செயல்பாட்டின் ஆதிக்க மனநிலையில் உருவானதே  என்பதையும் சுட்டிக்காட்டுகின்றது.
II. விஞ்ஞான ரீதியான பாலினப் பாகுபாடு: ஆண் பெண் பாலினப் பாகுபாட்டில் விஞ்ஞானமும் நடுநிலையைக் கொண்டிருக்கவில்லை என்பதை எடுத்துரைக்கும் விதமாக அறிவியல் அறிஞர்கள் பெண்மை என்பது குறித்து கொண்டிருந்த கருத்தாக்கங்களை நூல் விவரிக்கின்றது. “பெண்ணின் பால் உறுப்புகள் குறைபாடு உடையன. மனித வளர்ச்சியின் பின்தங்கிய ஒருநிலையின் வெளிபாடு. ஆணின் குறைவுபட்ட பதிப்பே பெண்” (ப – 25) என கி.மு 2 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கிரேக்க மருத்துவர் கேலன் என்பவரின் கூற்றையும் “அளவுக்கதிகமாக யோசிக்கவோ படிக்கவோ ஒரு பெண் முற்பட்டால் அவளது கர்ப்பப்பை பாதிப்புக்குள்ளாகி அவள் பெண் தன்மையற்றவளாகவும் சமூகத்திற்குப் பொருத்தமற்றவளாகவும் ஆக நேரிடும்” (ப – 26) என 19 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து விஞ்ஞானிகள் கூறியதையும் ஆண் , பெண் ஆகியோரின் பால் உறுப்புகள் தொடர்பான  சுரப்பிகளே அவர்களின் வேறுபட்ட நடத்தையை தீர்மானிக்கிறது என இருபதாம் நூற்றாண்டிலும் பால்வேறுபாடு குறித்த வாதங்களை முன்வைத்துள்ள சில விஞ்ஞானிகள் கூறியதையும்  நூல் எடுத்துரைக்கின்றது. அதாவது இதுவரை விஞ்ஞானிகளாக பெரும்பாலும் ஆண்களே இருந்துள்ளனர் என்றும் அவர்களின் ஆய்வு ஆண்களுக்கு ஆதரவானதாகவே இருந்துள்ளது என்பதையும் எடுத்துரைப்பதோடு ஆண்களும் பெண்களும் தங்களது நடத்தை முறைகளில் வேறுபடுவது அவர்கள் வளர்க்கப்படுகின்ற விதமே தவிர இதில் சுரப்பிகளின் பங்கீடு எதுவும் இல்லை எனவும், இது பெண் விஞ்ஞானிகளின் தோற்றத்திற்குப் பிறகு கண்டறியப்பட்ட உண்மை என்பதையும் நூல் விவரிக்கின்றது. ஆண்கள் மட்டும் விஞ்ஞானிகளாக இருந்த காலம் வரை ஆணின் விந்துதான் கருவுருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. பெண் விஞ்ஞானிகள் தோன்றிய பிறகே கருவுருவாக்கத்தில் பெண்ணின் கருமுட்டை எவ்வளவு முக்கியமான இடத்தைப் பெறுகிறது என்ற உண்மை கண்டறியப்பட்டது என்பதனையும் நூல் எடுத்துரைக்கின்றது. 
III. சமகால சமூகப் பின்னணியில் பாலினப் பாகுபாடு: ‘பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாகப் பெண்கள் குறித்து விவாதிக்கத் துவங்கிய நிலையில் பெண் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லப்பட்டதாலும் அவர்கள் தங்களது அறிவை வளர்த்துக் கொள்ளத் தேவையில்லை என்று சமுதாயம் சாற்றியதாலுமே அவர்கள் அறிவிலிகளாக ஆக்கப்பட்டனர் என்ற மேரி வுல்ஸ்டன்  கிராப்ட் என்ற ஆங்கிலப் பெண்மணியின் வாதத்தையும் அவரைத் தொடர்ந்து ‘ஒரு பாலினம் இன்னொன்றின் மீது ஆதிக்கம் செலுத்தும் அதிகாரத்தை இயற்கை யாருக்கும் வழங்கவில்லை' என்று பிரெஞ்சு நாடக நடிகை ஒலீம்ப் டி கூஜ்  தெரிவித்ததையும் பெண்கள்  எத்தகையதொரு பதவியை வகித்தாலும் மஞ்சள் குங்குமம், கண் நெறஞ்ச புருஷன், அம்மான்னு சொல்ல புள்ளைங்க இதைவிட ஒரு பெண்ணுக்கு என்ன வேணும்? என பெண்களுக்கு அறிவுரை சொல்லப்பட்டு வருகின்றனவே தவிர பெண்ணியச் சிந்தனைகளை சமூகம் ஏற்றுக் கொல்லத் தயாராக இல்லை. என்பதனையும் இந்நூல் விவரிக்கின்றது. 
2.பாலினயுத்தம்: 
          பாலினயுத்தம் என்பது குழந்தை கருவில் தோன்றும் நிலையிலேயே தொடங்கிவிடுகிறது. பெண்சிசுக்கொலை புரிவதிலிருந்தே பெண்ணிற்காகன  பாலினயுத்தம்  தொடங்கிவிடுகிறது. அதனை அடுத்து பாலூட்டுதலிலும் கூட ஆண்  பெண் பேதம் பார்க்கப்படுகின்றது.  குழந்தைகள் வளர்க்கப்படுகிற நிலையிலேயே அவர்களின் உடை, பழக்கவழக்கங்கள் என ஒவ்வொன்றிலும் பாலினப் பாகுபாடு காட்டப்படுகின்றது. இதனை விளக்கும் விதமாக “நாம் பெண்ணாகவோ ஆணாகவோ பிறப்பதில்லை அப்படி ஆக்கப்படுகிறோம்” (ப – 36) என்று இரண்டாம் பாலினம் என்ற நூலின் ஆசிரியர் சீமொன் தி பொவார் கூறியுள்ள கருத்து சான்று காட்டப்பட்டுள்ளது. 'பெண்களுக்கு இலக்கியப் படிப்பு போன்ற மென்கலைகளும் ஆண்களுக்கு விஞ்ஞானம், கணிதம் போன்ற அறிவியல் துறைகளும்தான் பொருந்திவரும் என பெண் கல்வி தொடர்பான பாலினயுத்தம் தொடர்ந்து நடைமுறைப் படுத்தப் படுவதினை  இவ்வியல் எடுத்துரைக்கின்றது. இவ்வாறு வாழ்க்கையில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பெண்ணிற்கான ஒடுக்குமுறையும் ஆணிற்கான சுதந்திரமும் வழங்கப்பட்டு வருகின்றன என்பதை விளக்குவதாக பாலினயுத்தம் எனும் இவ்வியல் அமையப் பெற்றுள்ளது. 
3. குறிப்பிட்ட பாத்திரங்களாக வாழ்தல்: 
            சமூகம் கட்டமைத்துள்ள சொல்லாடல்களின் வழி ஆண்களும் பெண்களும் அவ்வப் பாத்திரங்களாக வாழ்தல் என்பதனையே இவ்வியல் விளக்குகிறது. ஆண்,  பெண்ணிற்கான சம உரிமைகளை எவ்வளவுதான் பேசினாலும் சமூகத்தில் நிலவி வருகின்ற, மக்களின் பழக்கவழக்கத்தில் பொதிந்து கிடக்கின்ற சொல்லாடல்களை மாற்றுவது இயலாத ஒன்றாக உள்ளது. ஒருவரின் செயலைப் பார்த்தது 'இவனெல்லாம் ஒரு ஆம்பளையா? என்பதும் இவளெல்லாம் ஒரு பொம்பளையா என்று கூறுவதும் மட்டுமல்லாமல் ஒவ்வொருவரும் சில நேரங்களில் தங்களுக்குள்ளாகவே 'நானெல்லாம் ஒரு ஆம்பளையா? நானெல்லாம் ஒரு பொம்பளையா? என்று சொல்லிக் கொள்வதும் உண்டு. ஆண்  பெண் என்ற சமூகக் கற்பிதங்களை ஒவ்வொருவரும் ஏற்று வழ்வதனையே குறிப்பிட்ட பாத்திரங்களாக வாழ்தல் என இவ்வியல் விளக்குகின்றது.
4. ஆண்தன்மையும் பெண்தன்மையும்: கருத்தாக்கங்கள் நிஜமாகின்றன:
            இந்திய சமூகத்தில் பாலினப் பாகுபாடும் சாதியப் பாகுபாடும் பல நிலைகளில் ஒன்றிப் போவதினை, பிறப்பின் அடிப்படையிலும் செயல்பாட்டின் அடிப்படையிலும் ஆணிலிருந்து பெண் வேறுபடுத்தப்படுவது போன்று, பிறப்பின் அடிப்படையிலும் தொழிலின் அடிப்படையிலும் சாதிகளும் வேறுபடுத்தப்பட்டுள்ளன என்பதை இவ்வியல் விளக்குகிறது. மேலும் “ஒவ்வொரு மதத்திலும் சடங்குகள், சம்பிரதாயங்கள், விரதங்கள் ஆகியவற்றைப் பெண்கள் மேற்கொள்ள வேண்டுமென்பதில் ஆண்கள் வெகு கவனமாக இருக்கின்றனர். இதை மறுக்கும் பெண்கள் ஏராளமான தண்டனைகளைப் பெறுகின்றனர். சரியாக முக்காடு இடவில்லை என்பதற்காக ஆஃப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளில் பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். மாண்பைக் காக்கிறோம் என்ற பெயரில் இந்தக் கொலைகள் நியாயப் படுத்துகின்றன. இந்த மாண்பும் கொலைத் தண்டனையும் சம்பந்தப்பட்ட பெண்ணுக்குத்தானே தவிர ஆணுக்கல்ல.” (ப – 55) என்ற மதரீதியான பாலினப் பாகுபாடு குறிப்பிடப்பட்டுள்ளது. “இனரீதியாக மக்களைப் பிரித்து வைத்திருக்கும் அமெரிக்கா, சாதி ரீதியாகப் மக்களைப் பிரித்து வைத்திருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் கறுப்பின ஆண்களும் தாழ்த்தப்பட்ட சாதி ஆண்களும் பெண்களைப் போலவே கீழாக நடத்தப்படுகிறார்கள்.” (ப- 60) என இன அடிப்படையிலான ஒடுக்குமுறையினை சாதிய ரீதியிலான ஒடுக்கு முறையுடன் ஒப்பிட்டு நோக்குகின்றது இவ்வியல். இவாறாக பாலினப் பாகுபாட்டையும் சாதியப் பாகுபாட்டையும் ஒரே தன்மையில் பார்த்தல் என்பது எந்த அளவிற்குப் பொருந்தி வரும் என்பது விமர்சனத்திற்குரியதேயாகும். 
            மேலும் குடும்ப நிலையில் வருமானம் என்பது ஆணின் வருமானமே, அந்தக் குடும்பத்தின் உண்மையான வருமானமாகவும், பெண்ணின் வருமானம் வெறும் உபரி வருமானமாகவும் கருதப்படுவதினை இவ்வியல் விளக்குகிறது. “ஒவ்வொரு சாதியும், தனக்கு மேல் நிலையிலுள்ள சாதியை ஆராதிப்பதும் தனக்குக் கீழ்ப்பட்ட சாதியை வெறுப்பதும் மட்டுமே சாதிய அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது என்று டாக்டர் அம்பேத்கர் கூறியது போன்று தான் அடக்கப்பட்டிருக்கிறோம். பாதிப்புக் குள்ளாயிருக்கிறோம் என்ற சிந்தனையில் இருக்கும் ஒவ்வொரு சாதியச் சார்ந்த ஆண்களும் தானோ, பிறரோ பெண்ணை அடக்கி ஆளுவதைப் பற்றியோ பெண்ணுக்கு மறுக்கப்பட உரிமையையும் அதிகாரத்தையும் ஆண் எடுத்துக் கொள்வதைப் பற்றியோ பெரியளவுக்கு உறுத்தல் அடைவதில்லை” (ப – 65). என சாதிய ஏற்றத் தாழ்வுகளால் பாதிக்கப்படும் எந்தவொரு ஆணும் பெண்ணிற்கான ஒடுக்குமுறையைப் பற்றி சிந்திக்காத நிலையினை இவ்வியல் எடுத்துரைக்கின்றது.
5. பாலின பாகுபாடு: வரலாற்றின் பார்வையில் 
          ஆண்மை, பெண்மை என்பன போன்ற பாலினப் பாகுபாடு பல நூற்றாண்டுகளாக, மனிதச் சிந்தனைப் போக்கின் ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளது. என்பதை வரலாற்றின் பார்வையில் பாலினப் பாகுபாடு எனும் இவ்வியல் விளக்குகிறது. மேலும் இவ்வியலில் பாலினப் பாகுபாடு குறித்த வரலாற்றுச் சான்றுகளை எடுத்துரைக்க ஆசிரியர்கள் பல்வேறு தளங்களிலிருந்து தரவுகளை தொகுத்துரைக்கின்றனர். இதனை வாசிப்பவரின் புரிதலுக்கேற்ப சில உட்பிரிவுகளின் அடிப்படையில் விளக்குவது பொருந்திவரும் என்பதால் பின்வரும் தலைப்புகளில் இவ்வியல் தொகுத்துரைக்கப்படுகின்றது. 
பிரடெரிக் ஏங்கல்ஸ்: தந்தை வழிச் சமூகத்தின் தோற்றம்  
1.   பிராய்டின் உளவியல் ஆய்வு: ஆண்களும் பெண்களும்
2.   கிரீந்திரசேகர், போஸ்: இந்தியச் சூழலில் உளவியல் ஆய்வு 
3.   காத்தரீன் மேக்கினன்: அமெரிக்கப் பெண்ணியவாதி  
4.   பெரியார்: இந்தியச் சூழலில் பாலினப் பாகுபாடு 
5.   1980 களில் பாலியலும் அடிமைத்தனமும் 
1.பிரடெரிக் ஏங்கல்ஸ்: தந்தை வழிச் சமூகத்தின் தோற்றம்  
            தாய்வழிச் சமூகம் தந்தை வழிச் சமூகமாக மாறிய நிலையினை ஏங்கல்ஸ் எழுதிய குடும்பம், தனிச் சொத்து, அரசின் தோற்றம் என்ற நூலில் வழி இவ்வியலின் முதல் பகுதி சுருக்கமாக எடுத்துரைக்கின்றது. அவை பின்வருமாறு, ‘வேட்டைச் சமூகத்தில் பெண்ணின் தலைமை போற்றப்பட்டது. தான் உடலுறவு கொள்ள விரும்பும் ஆணைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பெண்ணிற்கே உரியதாயிருந்தது. எந்தச் சூழலிலும் இறுதியான முடிவு எடுக்கும் உரிமை பெண்ணிற்கே உரியதாயிருந்தது. இவ்வாறு வாழ்ந்து வந்த தாய்வழிச் சமூகம் காலப் போக்கில் தண்ணீர், உணவுத் தேவைக்காக இடம் பெயருகையில் ஆற்றங்கரையோரங்களில் தங்கி, உணவு உற்பத்தி முறையினைக் கற்றுக் கொண்டனர். தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்பட பொருட்களைச் சேமிக்கவும் கற்றுக் கொண்டனர். இச்சேமிப்பு பொருளானது ஆணிற்கான அதிகாரத்தை வழங்கும் கருவியானது. 
            இச்சூழலில் ஆண் உற்பத்திக்குரியவனாகவும் அதிகாரம் மிக்கவனாகவும் மாறினான். பெண் வீட்டைப் பராமரிப்பவளாகவும் ஆணின் கட்டுப்பாட்டிற்கு உரியவளாகவும் மாற்றப்பட்டாள். உற்பத்திச் சூழலில் இரு குழுவினர்களுக்கிடையேயான மோதல் என்பது சேமித்து வைக்கப்பட்ட பொருளை கூறி வைத்தே நடைபெற்றது. இதில் வென்றவர்கள் தோற்றவர்களை அடிமைகளாக்கி தங்களுக்கான உற்பத்திப் பணியில் ஈடுபடுத்தினர். இந்நிலையில்தான் சுரண்டும் வர்க்கம், சுரண்டப்படும் வர்க்கம் என இருவர்க்கத்தினர் உருவாயினர். மற்றவர்களை அடிமைப்படுத்திப் பழகிய ஆணிற்கு பெண்ணை அடிமைப்படுத்துவது ஒன்றும் சிரமமாக இல்லை. உலகத்தில் அனைத்தையும் அடிமைப்படுத்த நினைக்கும் ஆணின் பார்வையில் பெண்ணும் அடிமையாகவே கருதப்பட்டாள். உற்பத்தி உயர்வும் அதிகார உயர்வும் ஆணிற்கானதாக உருமாறிய பின்பு தந்தை வழிச் சமூகத் தோற்றத்தின் விளைவாக பெண்ணின் மீதான கற்பிதங்களும் ஒடுக்கு முறைகளும் அதிகரிக்கத் தொடங்கின. ஆணிற்கான சுதந்திரப் போக்கு சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாயிற்று.’ (ப – 76 – 79) என தந்தை வழிச் சமூகம் தோன்றிய நிலையினை இவ்வியல் விளக்குகின்றது. 
2.பிராய்டின் உளவியல் ஆய்வு: ஆண்களும்  பெண்களும்
            சிக்மண்ட் பிராயிடின் உளவியல் அடிப்படையில் ஆண்மை, பெண்மை குறித்தான கருத்தாக்கங்களை இவ்வியல் விளக்குகிறது. அதாவது ‘ஒவ்வொரு குழந்தைக்கும் எதிர் பாலினம் சார்ந்த பெற்றோரின் மீதான ஈர்ப்பின் அடிப்படையில் அவர்களுடன் உறவு கொள்ள விரும்புவதாகவும், இது நடைபெறாது என்ற நிலையில் குழந்தைகளின் விருப்பம் வேறொன்றாய் மாறுகிறது. இந்தக் கட்டத்தில் குழந்தைகளின் ஆளுமை (ஈகோ), பேராளுமையால் (சூப்பர் ஈகோ) கட்டுப்படுத்தப்படுகின்றது. தாயின் மீதான ஆண்குழந்தையின் விருப்பமும் தந்தையின் மீதான பெண்குழந்தையின் விருப்பமும் தவறு என்று அவர்களின் பேராளுமை அறிவுறுத்துகின்றது. இவ்வாறு பேராளுமையால் மறுக்கப்படும் ஆசைகள் முற்றிலுமாக மறைந்துவிடாமல் ‘இட்’ எனும் உணர்வு நிலைக்குள் அடக்கப்படுகின்றன. குழந்தை இளம் பருவத்தை அடைந்து காதல் உறவு என்ற கட்டத்தை அடையும் போது இவ்வாறு தள்ளப்பட்ட உணர்வுகள் மீண்டும் மேல்தளத்துக்கு வருகின்றன. இளைஞன் தனக்கு குழந்தைகள் பெற்றுத் தரக்கூடிய பெண்ணை எதிர் நோக்குகிறான். இளம்பெண் தனக்குக் குழந்தை தரக்கூடிய ஆணை எதிர் நோக்குகிறாள். இந்நிலைமை அவளைத் திருமணம், தாய்மை போன்ற தளங்களுக்கு இட்டுச் செல்கிறது.’ (ப – 96, 97) இந்நிலையில்தான் ஆண்களும் பெண்களும் உறவு நிலைக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்கின்றனர் என்ற பிராய்டின் விளக்கத்தை இவ்வியல் கொண்டுள்ளது. 
3.கிரீந்திரசேகர், போஸ்: இந்தியச் சூழலில் உளவியல் ஆய்வு 
          இந்தியச் சூழலில் உளவியல் ஆய்வு எனும் தலைப்பின் கீழ் இந்திய உளவியல் ஆய்வு அமைப்பைத் தோற்றுவித்த கிரீந்திரசேகர், போஸ் போன்றோர், பிராய்டின் உளவியல் அடிப்படை இந்திய சூழலில் செயல்படுவதில்லை என்ற கருத்தினை முன்வைத்தனர். என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. அதாவது “ஐரோப்பாவைப் போல இந்தியக் கலாச்சாரங்களில் பெண்மை ஒதுக்கப்பட்ட ஒன்றாக இல்லை. பெண் தெய்வ வழிபாடு, வங்கத்தில் இன்றுமே உள்ளது. வங்கத்தில் பெண்மை வணக்கத்துக்குரியதாய் வழிபாட்டுக்குரியதாய் உள்ளதால், பிராய்டு தன் நோயாளிகளிடம் கண்டறிந்தது போன்ற பெண் மீதான குழம்பிய கண்ணோட்டங்கள் வங்கத்தைச் சார்ந்த ஆண்களுக்கு இல்லை. தாய் மீது அவர்கள் கொள்ளும் ஆர்வம், பிராய்டு முன் வைப்பது போல பொறாமையிலோ, வெறுப்பிலோ விளைவதில்லை. மாறாக இவ்வாறு நினைக்கும் ஆண்கள் பெண் தாய்வத்தின் சக்திக்கு ஆட்பட விரும்புபவர்களாக, அதில் கரைந்து விட விழைபவர்களாகவே உள்ளனர்.  என்ற மாற்றுக்கருத்தை முன்வைத்தனர். இது ஆண், பெண் ஆகிய இருவர்களுக்கிடையான பாலினப் பாகுபாடு என்பது உலகளாவிய அளவில் இருந்தாலும் நாட்டிற்குநாடு சமூகத்திற்கு சமூகம் வேறுபடுவதனை வெளிப்படுத்துவதாக அமைகின்றது.   
4.காத்தரீன் மேக்கினன்: அமெரிக்கப் பெண்ணியவாதி  
            மார்க்சியத்திற்கும் பெண்ணியத்திற்குமான பொருத்தப்பாட்டினை காத்தரீன் மெக்கினன் எனும் அமெரிக்கப் பெண்ணியவாதியின் கருத்தின் ஊடாக இவ்வியல் பின்வருமாறு விளக்குகிறது. ‘மார்க்ஸியத்திற்கு உழைப்பு என்பது எவ்வளவு அடிப்படையோ அந்த அளவுக்குப் பாலியல் என்பது பெண்ணியத்துக்கு அடிப்படை. அதாவது உழைப்பு என்பதும் பாலியல் என்பதும் ஒருவருக்குச் சொந்தமானதைக் குறிப்பதுமாகும். பலரின் உழைப்பை சிலர் தங்கள் சுய லாபத்துக்காகச் சுரண்டுவதை மார்க்ஸியமும் ஒரு சாராரின் பாலியலாற்றலை மற்றொரு சாரார் அடக்கியோடுக்கிச் சுரண்டுவதை பெண்ணியமும் விமர்சிக்கின்றன. 
5.பெரியார்: இந்தியச் சூழலில் பாலினப் பாகுபாடு 
            “இந்தியச் சூழலில் பாலினம் பற்றி முன்வைக்கப்பட்ட மிக முன்னேற்றகரமான கருத்தாக்கங்களில் ஒன்று ஈ.வே.ராமசாமி பெரியாருடையது என இந்நூல் அவரின் கருத்துக்களை முன்வைக்கின்றது. உணர்வுகள் மனிதராகப் பிறந்த எவருக்கும் ஒன்றுதான் என்பதை பெரியார் கூற்றின் வழி “கோபம், ஆணவம், தைரியம் என எல்லா மனிதப் பிரவிகளுக்கும் பொதுவான குணங்கள்தான் இருக்கின்றன. இவை ஆண்களுக்கு மட்டும் உரித்தானவை அல்ல. ஆண்களைப் போலவே இந்த உணர்ச்சிகள் யாவும் பெண்ணுக்கும் இருக்கின்றன.” (ப – 116) எனவும் “அழகு, கற்பு, தாய்மை ஆகியன வெறும் கட்டுக்கதைகள்தான். இவற்றைப் பயன்படுத்தியே சமுதாயமானது, பெண் ஆணிற்குக்  கீழானவள், அவனுக்கு அடங்கிப் போக வேண்டியவள், என்ற கருத்துக்களை அவள் மீது தினித்துள்ளது.” எனவும் மேலும் கற்பு பற்றி விமர்சிக்கும் பெரியாரின் கருத்தாக “கற்பு நெறி தவறாத மனைவிக்கும், பாலியல் தொழில் புரியும் தாசிக்கும் அடிப்படையில் வேறுபாடு கிடையாது. ஒருவர் வாழ்நாள் முழுவதும் ஒருவனுக்குப் பாலியல் அடிமையாக இருப்பதை ஏற்கிறார். மற்றொருவர் பலருக்குத் தன் உடலை விற்க சம்மதிக்கிறார். என கற்பு என்ற கற்பனையை பெரியாரின் கருத்துக்கள் வழி இவ்வியல் விளக்குகிறது. மேலும் “பிராமணன் – சூத்திரன் என்ற அமைப்புக்கும் பேதத்திற்கும் புருஷன் – பொண்டாட்டி  என்ற விகிதத்துக்கும் எந்தவித வேறுபாடும் கிடையாது. பெரும் பகுதி மக்களை சூத்திரனாக்க உடலுழைப்புக் காரனாக மாற்ற, எப்படிப் பார்ப்பனன் சாத்திரங்கள் செய்தானோ அதைப் போலத்தான் பெண்களை அடிமையாக்க கலியாணம் என்ற முறையும் ஏற்படுத்தப்பட்டது. (விடுதலை 28.08.1973)” (ப – 118) என சாதிய முறையிலான அடக்கு முறைக்கும் திருமண முறையிலான அடக்கு முறைக்கும்  வேறுபாடுகள் ஒன்றுமில்லை. என்பது பெரியார் சிந்தனைகளின் வழி விளக்கப்பட்டுள்ளது.
6.1980 களில் பாலியலும் அடிமைத்தனமும் 
            பாலியல் வன்முறைகள் குறித்த விவாதங்கள் 1980 களில்தான், இந்தியச் சூழலில் பரவலாகத் தோற்றம் பெறத்துவங்கின என்பது குறித்து இவ்வியல் விவாதிக்கின்றது. இத்தகைய விவாதம் இரு நிலைகளில் விளக்கப்பட்டுள்ளது. அதில் “ஒன்று பாலியல் வன்முறைகளுக்கும் ஆண் மேலாதிக்கத்துக்கும் எதிர்ப்புக் காட்ட பெண் ஆதரவு மையங்கள் தொடங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தின.” (ப – 124)  மற்றொன்று “ஆண்கள் தங்கள் மானமும், தங்கள் சாதி மானமும் தங்கள் பெண்களின் உடல் மீது செதுக்கப்பட்டிருப்பதாகக் கருதிக் கொண்டிருப்பதையும், ஒரு பெண்ணின் கற்பைக் காப்பதும், அழிப்பதும் சாதி மானத்தோடு தொடர்புடையதாகக் கருதுவதும், மற்றொரு சாதி மானத்தை வாங்குவதாகக் கருதிக்கொள்வதும் குறித்து பெண்ணியச் சிந்தனையாளர்கள் சுட்டிக் காட்டினர். சாதிய மத ரீதியான அடையாளங்களைக் காப்பதும் பிற சாதிய மத ஆண்களைக் கேவலப்படுத்துவதுமான இந்த மோதலில் பெண்ணின் உடல் களப்பொருளாவதை அவர்கள் கவனப்படுத்தினர். படிநிலைச் சமூகத்தில் தன் மேலாதிக்கத்தை நிலை நாட்டவும் அநீதியான சமூக அமைப்பைத் தக்க வைத்துக் கொள்ளவும் துடிக்கும் ஆணின் வெறி பிடித்த அதிகார வெளிப்பாடாகவே  இத்தகைய தாக்குதல்கள் அமைக்கின்றன என்பதை கிராமப்புற ஏழை மக்கள், தலித் மக்கள், பழங்குடியினர், கலவரங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோருடன் பணியாற்றி வந்த பெண்ணியவாதிகள் 1980 களில் தொடர்ந்து நடைபெற்ற சாதிய, மதக் கலவரங்களின் பின்னணியில் இக்கருத்துக்களை வெளியிட்டனர்.” (ப – 125) என சாதிய மோதல்களுக்கு பெண்ணின் உடல் எவ்வாறு களப்பொருளாக்கப்பட்டது என்பதை இவ்வியல் வரலாற்று நோக்கில் விளக்குகின்றது. 
6. பாலினம் சார்ந்த பழக்க வழக்கங்கள், நடை முறைகள் 
            பாலினம் சார்ந்த பழக்க வழக்கங்கள், நடைமுறைகள் எனும் இவ்வியலில் ஆண்மை, பெண்மை குறித்த கருத்தாக்கங்கள் எவ்வாறு நடைமுறை வாழ்வில் செயல்படுத்தப்படுகின்றன என்பது போன்ற கருத்துக்கள் விவாதிக்கப்படுகின்றன. மேலும் அழகு என்ற கருத்தாக்கம் ஆணாதிக்க மனநிலையில் எவ்வாறு தோற்றம் பெறுகிறது என்றும் அது பெண்களுக்கு எவ்வாறு பொருத்தமுடையதாக கட்டமைக்கப்படுகிறது என்றும் இவ்வியலின் விவாதங்கள் தெளிவுறுத்துகின்றன. அவற்றின் வளர்ச்சி நிலை பின்வருமாறு, 
            ஆண்மை, பெண்மை குறித்த விவாதங்களில் அழகு என்பது பெண்மைக்கு உரியதாகவும் வீரம் என்பது ஆண்மைக்கு உரியதாகவும் சமூகத்தினர் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றும், சமூகத்தில் பெண்கள் என்பவர்கள் தங்கள் தோற்றத்தின் மீது எல்லையற்ற அக்கரை செலுத்துவர் என்றும் ஆண்கள் என்பவர்கள் ஆதிக்கத்தின் அடிப்படையில் சாதிக்க விரும்புவர் என்றும் விளக்கப்படுகிறது. பெண்ணின் அழகு என்பதையும் பெண்ணிற்கான குணங்களையும் பெண்களே ஏற்றுக் கொண்டு அதனைப் பின்பற்றுபவர்களாக, அதனைத் தொடர்ந்து செயல்படுத்துபவர்களாக இருக்கின்றனர். என்பது ஆணாதிக்கச் சிந்தனைப் போக்கின் வெற்றியாக நிலை நாட்டப்படுகிறது. பெண்களின் அழகு என்பது ஆண்களின் விருப்பத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது, என்ற புரிதலின்றி பெண்கள் அதனை ஆராதிக்கின்றனர். தங்களுக்கென கட்டமைக்கப்பட்ட பாத்திரங்களை ஏற்று அவை சார்ந்த கலாசார இலக்குகளை பெண்கள் தமதாக்கிக் கொள்கின்றனர். பெண்கள் எப்படிச் சிரிக்க வேண்டும், பேச வேண்டும், தலையைத் திருப்ப வேண்டும் என்று அனைத்திற்குமான முன்மாதிரிகளை ஊடகங்கள் முன்வைக்கின்றன. அவையனைத்தும் ஆணின் விருப்பத்திற்கேற்பவே நடைபெறுகின்றன என்பன போன்ற விவாதங்கள் இவ்வியலில் விளக்கப்பட்டுள்ளன. 
            இத்தகைய அழகு குறித்த மாயை, தந்தை வழி ஆணாதிக்க சமூகத்தின் சில தேவைகளை ஒட்டியே ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் பெண்ணின் அழகு என்பது ஆண்கள் அளிக்கின்ற அங்கீகாரத்தை அளவுகோலாகக் கொண்டுள்ளது என்றும்  பெண்ணிற்கான அழகு என்பது ஆண் எதை விரும்புகிறானோ அதைத் தருவதே தன் மகிழ்ச்சி, அதுவே தன் வாழ்க்கை என்ற அடிமைத்தனம்  பெண்ணிற்குள் தோன்றுவதை பெண்ணியவாதிகள் எதிர்க்கின்றனர் என்பதை இவ்வியல் விளக்குகிறது. பெண்ணின் உடல் சார்ந்த அழகு தவிர உள்ளம் சார்ந்த அழகையும் ஆண் தீர்மானிக்கின்றான். ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது போல பெண்ணிற்கான நடவடிக்கைகள், பழக்க வழக்கங்களை வரையறுப்பதன் வாயிலாக அகஅழகை வரையறுக்க முனைகின்றனர். ‘அவ்வளவு அழகான பொண்ணு, ஆனால் ஏறெடுத்து யாரையும் பார்க்க மாட்டாள்’ என்ற சொல்லாடல் பெண்ணின் புறத்தோற்றத்துடன் கூடிய அகத் தோற்றத்தினையும் வரையறுக்க முனைகிறது. 
            “ஆணின் பார்வையில் பெண்ணின் உருவாக்கம் என்பது இன்பம் தரும் ஒன்றாக வரையறுக்கப்பட்டுள்ளது. பெண்ணைக் காதலியாய், மனைவியாய், குழந்தைகளின் தாயாய், அழகுப் பொருளாய், ஆண் எதிர் நோக்குகிறான். இத்தகைய ஒவ்வொரு ஆசைக்கும் ஏற்ப பெண் தன் உடலையும் அழகையும் சீரமைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. பெரும்பாலான கலாச்சாரங்களில் இந்த அழகின் இலக்கணம் இரு வேறு வெளிப்பாடுகளைக் கொண்டுள்ளதைக் காணலாம். குடும்ப விளக்கு – விலைமகள்; மனைவி – வைப்பாட்டி; காதலி – தாசி; நல்ல பெண் – குடியைக் கெடுக்கும் பெண் என்ற எதிர்நிலைகளினூடாகவே பெண்கள் அறியப்படுகின்றனர். கல்யாணம், தாய்மை, வீடு, குடும்பம், பாலுறவு என விதிக்கப்பட்ட செயல்பாடுகள் முதல் நிலை அழகு என்பதாகவும் களிப்பூட்டுவதாய், கிளுகிளுப்பானதாய், குடிகெடுப்பதாய், அழைப்பு விடுப்பதாய், மயக்கி மந்திரம் போடுவதாய் உள்ள செயல்பாடுகள் அனைத்தும் இரண்டாவது நிலை அழகு என்பதாகவும் கருதபடுகின்றன.” (ப – 147) எனும் இக்கருத்தாக்கங்களைத் தாங்கி இவ்வியல் விவாதிக்கப்பட்டுள்ளது. 
            “கலைகள், இலக்கியம், மதம் தொடர்பான கதைகள், ஓவியம், சிற்பம், நாடகங்களின், சினிமாக்களின் அடிப்படைக் கதைகள் என்று எல்லாவற்றிலும் குடும்பப் பெண்மணி – மயக்கும் மோகினி என்ற இருவகை உருவகங்கள் காணப்படுகின்றன.” (ப – 147) என்பது பெண்ணிற்கு விதிக்கப்பட்ட அழகு சமூக ஊடகங்களில் எவ்வாறு விளக்கப்பட்டு வருகின்றது என்பது குறித்தும் இவ்வியல் விளக்குகிறது. சாதியத்தின் பெருமை நிலைநாட்டப்படுவதற்கு எவ்வாறு பெண்ணின் கற்பு தொடர்புபடுத்தப் படுகிறதோ அதே போன்று குடும்பப் பெருமை நிலை நாட்டப்படுவதற்கும் பெண்ணின் கற்பு ஆதாரமாகக் கருதப்படுகின்றது. “நம் நாட்டின் பல பகுதிகளிலும் ஒரு நல்ல குடும்பம் என்பதற்கான வரைமுறை அந்தக் குடும்பத்திலுள்ள பெண் மாண்புடன் இருக்கிறாளா, கற்புநிலை தவறாமல் இருக்கிறாளா என்பதைக் கொண்டுதான் தீர்மானிக்கப்படுகிறது. குடும்பம் என்ற அமைப்பு நிலைக்க கற்புநிலை தவறாத மனைவி தேவைப்படுகிறாள்.” (ப – 148) என்ற கருத்து நிலைப்பாடும் இவ்வியலின் வழி விவாதத்திற்குட்படுத்தப் படுகின்றது. 
நிறைவுரை:
            பாலினப் பாகுபாடும் சமூக அடையாளங்களும் என்னும் தலைப்பின் கீழ் இந்நூலில் விளக்கப்பட்டுள்ள கருத்துக்களை ஒன்று திரட்டி நோக்குகின்ற பொழுது இந்நூலானது மூன்று நிலைகளில் விவாதிக்கப்பட்டிருப்பதினை அறியமுடிகின்றது. 1. பாலினப் பாகுபாடு குறித்த பதிவுகளை பல்வேறு தளங்களிலிருந்து தொகுத்து உரைப்பதாக முதல் நான்கு இயல்களும் விளக்கப்பட்டுள்ளன. அதாவது ஆண், பெண்ணிற்கான பொதுவான தன்மை பற்றி விளக்குவதோடு மத ரீதியாகவும் மரபு ரீதியாகவும் சூழலுக்கு ஏற்ப பெண்மை குறித்த கற்பிதங்கள் எவ்வாறு கையாளப்பட்டு வருகின்றன. என்பது குறித்த விளக்கங்களாகவே இவ்வியல்கள் விளக்கப்பட்டுள்ளன. 2. வரலாற்று நோக்கில் ஒவ்வொரு கட்டத்திலும் பாலினப் பாகுபாடு குறித்த பெண்ணிற்கு எதிரான, கருத்துக்களை எதிர்த்து பெண்ணியலாளர்கள் எதிர்ப்பு வாதங்களை முன்வைத்து வந்துள்ளதனை விவாதிப்பதாக இவ்வியல் அமையப் பெற்றுள்ளது. 3. பாலினப் பாகுபாடு குறித்த கருத்தியல்கள் வெறும் கருத்துக்களாக மட்டுமல்லாமல் நடைமுறைப் படுத்தப்பட்டதற்கான சாத்தியக்கூறுகளைத் தாங்கி எவ்வாறு பெண்ணிற்கு எதிராகச் செயல்பட்டன என்பது குறித்து அவற்றின் பின்னணியோடு நோக்குவது என்ற நிலையில் இந்நூல் முழுமை பெறுகிறது எனலாம். 
            மேலும் இந்நூலினை விமர்சன நோக்கில் அணுகுகின்ற பொழுது இரு பெண்ணியவாதிகளின் (நூலாசிரியர்களின்) கருத்தியல் விளக்கமாக அமையப்பெற்ற இந்நூல் சான்றுகளை மதம் தொடர்பான தளங்களிலிருந்தும், தத்துவ அறிஞர்கள் சார்ந்தும், உளவியல் கோட்பாடுகள் சார்ந்து, சமூகப் போராளிகள் சார்ந்தும் பெண்ணியக் கருத்தாக்கம் கொண்ட அறிஞர்களிடமிருந்தும் எடுத்தாளுகின்றது. அந்த அடிப்படையில் பெண்ணியம் குறித்த விவாதத்தினை மிகவும் பரந்துபட்ட தளத்தில் விவாதிக்கின்ற ஒரு சிறந்த நூலாகவே இதனை அறியமுடிகின்றது. ஆனால் ஆய்வு என்னும் நோக்கில் அணுகுகின்ற பொழுது நூலில் கையாளப்பட்டுள்ள சான்றுகள் அனைத்தும் எங்கிருந்து எடுக்கப்பட்டவை, யாரால் கூறப்பட்டவை என்ற தகவல்கள் கூறப்பட்டிருக்கின்றனவே தவிர அவற்றிற்கான முறையான நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதை அறியமுடிகின்றது. இந்நிலையில் நூலில் கூறப்பட்ட கருத்துக்கள் எவ்வளவுதான் உண்மைத் தன்மை வாய்ந்ததாக இருப்பினும் அதன் மீதான நம்பகத்தன்மை சந்தேகத்திற்கு இடமளிக்க ஏதுவாகின்றன. இதற்கு விதிவிளக்காக பெரியாரின் கூற்றினைக் குறிப்பிடுகின்ற ஓரிடத்தில் மட்டும் பக்கம் 118 இல் அக்கூற்று எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதற்கான சான்று குறிப்பிடப்பட்டுள்ளது.  
            மேலும் நூலின் போக்கு, கருத்துக்கள் எடுத்தாளப்படும் முறைமை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கின்ற பொழுது மார்க்சியக் கண்ணோட்டத்தின் ஊடாக பாலினப் பாகுபாடு எனும் கருத்தாக்கம் விவாதிக்கப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது. ஆண்மை, பெண்மை குறித்த தெளிவான விளக்கங்களைக் கொண்டுள்ள ஆசிரியர்கள் பாலினப் பாகுபாட்டோடு சில இடங்களில் சாதியப் பாகுபாட்டையும் மார்க்சிய வர்க்க வேறுபாட்டினையும் ஒப்பிட்டுக் காட்டியுள்ளனர். இத்தகைய ஒப்பீடு எந்த அளவிற்கு சரிவர பொருந்துகிறது என்பது சற்றே சிந்திக்க வேண்டியதாக உள்ளது. சாதிய ஏற்றதாழ்வு என்பது ஒன்றுக்கொன்று புறந்தள்ளப்பட்ட, தீண்டத்தகாத நிலையில் அடக்குமுறை செய்வதாகவும், ஆண் பெண் ஏற்றத் தாழ்வு என்பது ஒன்றோடு ஒன்று பிரிக்க முடியாத அதிகாரத்தை நிலைநாட்டுகின்ற அடக்கு முறையாகவும் உள்ளது. எனவே சாதிய ஏற்றத்தாழ்வும் ஆண் பெண் ஏற்றத் தாழ்வும் எதிர் நிலையில் செயல்படுவதாகவே அறியமுடிகிறது. அதேபோன்று வர்க்க அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு என்பது மனித உழைப்பைச் சுரண்டி அதிகாரத்தை நிலைநாட்டுகின்ற ஒன்றாகவும் ஆண் பெண் ஏற்றத் தாழ்வு என்பது சமூகக் கருத்தாக்கங்களின் ஊடாக ஆணின் அதிகாரத்தை நிலைநாட்டுகின்ற ஒன்றாகவும் உள்ளது. இதனடிப்படையில் இவ்விரண்டிற்குமான போக்கு மாறுபட்ட தளத்தில் இயங்குவதை அறியலாம். எனவே சாதிய பாகுபாட்டோடும் வர்க்க வேறுபாட்டோடும் பாலின பாகுபாட்டை ஒப்பிட்டு நோக்குதல் பொது நிலையில் பொருந்தி வருவதாகத் தோன்றினாலும் அதன் செயல்பாட்டுத் தளத்தில் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டே நிற்கின்றன. 
            நூலின் மொழிநடையினை நோக்குகின்ற பொழுது ஒலி வடிவத்தில் பதிவு செய்யப்பட கருத்துக்களை யாரேனும் ஒருவர் தொகுத்து எழுதியிருக்கக் கூடுமோ என்ற ஐயம் தோன்றவே செய்கின்றது. அதாவது ஒவ்வொரு இயலிலும் துணைத் தலைப்புகள் இடப்பட்டிருக்கும் முறைகளும் ஒரு கருத்தினை விவாதித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் பல்வேறு தளங்களுக்குப் பயணிக்கின்ற போக்கும் அவ்வாறு உணருவதற்குக் காரணமாக உள்ளன. இருப்பினும் இவ்வையம் உறுதிப் படுத்தப்படாததாகும். 
            நூலின் நோக்கம் குறித்து ஆசிரியர்கள் முதல் பக்கத்திலும் பின்புற அட்டைப் படத்திலும் குறிப்பிட்டிருப்பது போல அதாவது “காலங்காலமாய் இந்தப் பாலினப் பாகுபாடு முகத்தில் அறைந்து சொல்லப்படும் உண்மை. இந்தியாவில் மட்டுமில்லாமல், உலகளாவிய அளவில் அடிமைச் சமுதாயமாகவே இருத்தி வைக்கப்பட்டிருக்கும் பெண்ணினம். மாற்ற முடியாத நியதியாக, மாறத் தயாராக இருந்தாலும் காலுக்குக் கீழே தள்ளி மிதிக்கத் தயாராய் இருக்கும் ஆணினம். இதுதான் நியதி என்றே என்றைக்கும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் வறட்டுவாதம். இவற்றின் ஆணிவேரை அசைத்துப் பார்க்கும் முயற்சிதான் இந்நூல்”. என்று குறிப்பிடப்பட்டுள்ளதின் அடிப்படையில் இம்முயற்சியானது நூலில் நிறைவேற்றப் பட்டிருப்பதாகவே உணர முடிகின்றது. அதுவே இந்நூலின் வெற்றியாகிறது. மேலும் இந்நூலின் ஒட்டுமொத்தமான கருத்து என்ன என்பதை விளங்கிக்கொள்ள முயலுகையில் பிரெஞ்ச் பெண்ணியவாதியான ‘இரண்டாம் பாலினம்’ என்ற நூலின் ஆசிரியர் சீமொன் தி பொவார் அவர்களின் கூற்று நினைவிற்கு வருகின்றது. 'நாம் பெண்ணாகவோ ஆணாகவோ பிறப்பதில்லை அப்படி ஆக்கப்படுகிறோம்’. என்பதை எடுத்துரைப்பதாகவே இந்நூலின் மையக் கருத்தினை அறிய முடிகின்றது.  

தமிழ் நாவல்களில் குடும்பச் சிதைவுகள்

தமிழ் நாவல்களில் குடும்பச் சிதைவுகள்

ஆசிரியர்: அ. குணசேகரன் வெளியீடு: NCBH 
முதல் பதிப்பு: 2006விலை: 75 பக்கம் : 200 
நூல் அறிமுகம்
            தமிழ் நாவல்களில் குடும்பச் சிதைவுகள் எனும் இந்நூல் முனைவர் அ. குணசேகரனின் முனைவர் பட்ட ஆய்வேடாகும். புதுவைப் பல்கலைக் கழகத்தில் க. இளமதி ஜானகிராமனின் வழிகாட்டுதலின் வழி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நூல் உருவாக்கத்தின் பொருட்டு ஆய்வேட்டின் முன்னுரை எனும் இயல்பகுப்பு நூலில் நூன்முகம் என்பதாக மாற்றம் பெற்றுள்ளது. நூல் முழுக்க நாவல் எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக வாசிப்புப் புரிதலுக்காக இம்மதிப்புரையில் புதினம் என்ற சொல் தவிர்க்கப்பட்டு நாவல் என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது. 
பொருளடக்கம் 
1.    தமிழ் நாவல் வரலாற்று வளர்ச்சியில் குடும்பம்
2.    குடும்ப அமைப்பு: மாற்றங்களும் சிதைவுகளும் 
3.    தமிழ் நாவல்களில் பொருளாதாரச் சிக்கல்களும் குடும்பச் சிதைவுகளும்
4.    தமிழ் நாவல்களில் உளச்சிக்கல்களும் குடும்பச் சிதைவுகளும் 
5.    தமிழ் நாவல்களில் பெண்ணுரிமையும் குடும்பச் சிதைவுகளும் 
6.    முடிவுரை   
ஆய்வேட்டிலிருந்து கருதுகோளும் ஆய்வு எல்லையும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இதனை நூன்முகத்திலும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். 
ஆய்வேட்டிற்கான கருதுகோள் பின்வருமாறு  

“சமூகவியல் அறிஞர்கள் சுட்டும் குடும்பச் சிதைவுகள், அவற்றுக்கான காரணிகள் ஆகியன நாவல்களில் இயல்பாக இடம் பெற்றுள்ளன. இப்பதிவுகள் சமூகவியலாளர்களின் ஆய்வுகளுக்கு இணையாக விளங்குகின்றன. சிற்சில இடங்களில் அவர்களின் ஆய்வுக்கு எட்டாதவற்றையும் நாவலாசிரியர்கள் தம் நாவல்களில் பதிவு செய்துள்ளனர். எனவே சமூக மாற்றங்களில் குறிப்பிடத்தக்க நிகழ்வான குடும்பச் சிதைவைக் காட்டுவதில் சமூகவியல் ஆய்வுகள் போன்று தமிழ் நாவல்கள் விளங்குகின்றன என்பது இவ்வாய்வின் கருதுகோளாகும்.” 
ஆய்வு எல்லை: 
            “தமிழ் நாவல்கள் ஒரு நூற்றாண்டைக் கடந்து மேலும் இருபதாண்டுக் கால வரலாற்றை உடையது. இத்தகைய வரலாற்றை உடைய பரப்பில் ஆய்வின் தேவை கருதி எழுபதுக்குப் பிந்தைய இருபத்தைந்தாண்டு கால எல்லைக்குட்பட்ட நாவல்களைக் கொண்டதாக இவ்வாய்வின் எல்லை அமைகின்றது. அவற்றுள்ளும் குடும்பச் சிதைவைச் சித்தரிக்கின்ற நாவல்கள் மட்டுமே ஆய்வுக்குட்படுத்தப் படுகின்றன.”  என்கிறார் ஆசிரியர். அவை பின்வருமாறு 
ராஜம் கிருஷ்ணனின் (6)     வீடு (1977)
                                                புதிய சிறகுகள் (1985), 
                                                சுழலில் மிதக்கும் தீபங்கள் (1987), 
                                                ஆண்களோடு பெண்களும் (1988), 
                                                ஓசைகள் அடங்கிய பிறகு (1989),
                                                மண்ணக்கத்துப் பூந்துளிகள் (1988), 
ஜெயகாந்தனின் (3)              சில நேரங்களில் சில மனிதர்கள் (1970), 
                                                ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் (1973), 
                                                சுந்தர காண்டம் (1982), 
சிவசங்கரியின் (2)                 ஒரு மனிதனின் கதை (1981)
                                                பாலங்கள் (1983), 
பிரபஞ்சனின் (2)                   மகாநதி (1990)
                                                கனவு மெய்ப்பட வேண்டும் (1991), 
இந்திரா பார்த்தசாரதியின் (1) ஹெலிகாட்டார்கள் கீழே இறங்குகின்றன (1971), 
எம்.வி. வெங்கட்ராமின் (1) வேள்வித்தீ (1975), 
ஐசக் அருமைராசனின் (1)   கீறல்கள் (1975), 
வண்ண நிலவனின் (1)         கடல் புரத்தில் (1977), 
கண்ணதாசனின் (1)             விளக்கு மட்டுமா சிவப்பு (1977), 
பாலகுமாரனின் (1)              மெர்குரிப் பூக்கள் (1981), 
இந்துமதியின் (1)                  பைசா நகரத்துக் கோபுரங்கள் (1982), 
பூமணியின் (1)                      நைவேத்தியம் (1985), 
அஸ்வகோஷின் (1)              சிறகுகள் முளைத்து (1988), 
தோப்பில் முகமது மீரானின் (1) ஒரு கடலோர கிராமத்தின் கதை (1989), 
வாசந்தியின் (1)                    யாதுமாகி (1992), 
கணேசலிங்கனின் (1            ஒரு பெண்ணின் கதை (1992). 
தமிழ் நாவல் வரலாற்று வளர்ச்சியில் குடும்பம்
          தமிழில் தோன்றிய முதல் நாவலில் தொடங்கி ஆய்வு மேற்கொள்ளப்பட்ட காலம் வரையில் வெளிவந்து குடும்ப அமைப்பை மையமாகக் கொண்டு விளங்குகிற நாவல்களை வரலாற்று ரீதியில் சுருக்கமாக விளக்கியுள்ளார். பொதுவாக குடும்ப சித்தரிப்புகள் அடங்கிய நாவல்களை சமூக நாவல்கள் எனும் பகுதியில் குறிப்பிடுவர் என்று கூறும் ஆசிரியர் குடும்ப நாவல் என்பது குறித்து விளக்க கி. வா. ஜெகநாதனின் கூற்றான “குடும்பத்தின் எல்லைக்குள்ளே அடங்கிய நிகழ்ச்சிகளை முக்கியமாக வைத்தெழுதும் நாவல்களையே குடும்ப நாவல்கள் எனலாம்.” என்பதை மேற்கொள் காட்டுகின்றார். பிரதாப முதலியார் சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம் காட்டுகின்ற குடும்ப அமைப்புகள் குறித்து விளக்கியுள்ளார். அதாவது “பிரதாப முதலியார் சரித்திரம் குடும்பம் தவிர்த்த வேறு பல நிகழ்வுகளை அதிகமாகக் கொண்டிருந்தாலும் சிறப்பாக அக்காலத்தில் ஒரு மூட்டுக் குடும்பத்தில் எழுந்த சிக்கல்கள் குறித்தும் பேசியுள்ளது. மாமியார் – மருமகள் சந்தைகளும் நாத்தனார் கொடுமையும் அவற்றால் குடும்ப வாழ்க்கைச் சீர்குலைவது பற்றியும் இந்நாவலில் அறிய முடிகிறது.” என்கிறார். அதனையடுத்து விடுதலைக்குப் பிந்திய நாவல்கள் எனும் தலைப்பின் கீழ் கு.ப.ரா, தொ.மு.சி. ரகுநாதன், ஆர். சண்முக சுந்தரம், ஹெப்ஸிபா ஜேசுதாசன், டி. செல்வராஜ், கு. சின்னப்பப் பாரதி, மு.வ வின் நாவல்களை சுட்டிக்காட்டுகின்றார். மேலும் ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், இந்திரா பார்த்தசாரதி, ஆர். சூடாமணி, அசோகமித்திரன் நாவல்களில் குடும்பச் சிகைவுகள் காணப்படுகின்றன என்பதாகவும் குறிப்பிடுகின்றார்.  இவையனைத்தும் ஒரு அறிமுக உரையினைப் போன்று 14 பக்கங்களுக்குள்ளாக விளக்கியுள்ளார். 
குடும்ப அமைப்பு மாற்றங்களும் சிதைவுகளும்
            குடும்பம் ஒரு நிறுவனம் அல்லது நிலையம் அல்லது ஒரு குழு என்று குறிப்பிடுவதோடு குடும்பம் குறித்து மார்க்சியர்கள் கூறும் விளக்கங்கள் எனும் தலைப்பில் கருத்துக்களை முன்வைக்கின்றார். “குடும்பம் என்பது மக்கள் சமுதாயக் கூட்டமைப்பின் மற்றொரு வடிவம் அதில் இயற்கையானதும் சமுதாயத்தன்மை கொண்டதுமான செயலபாடுகள் மிக நுணுக்கமாக பின்னிப் பிணைந்திருக்கின்றன. எனினும் சமுதாயச் செயல்பாடுகளே நிலைபெறுகின்றன. ஆண் பெண்களுக்கு இடையேயான உறவுகளின் மீதும் எல்லாவற்றிற்கும் மேலாகப் பொருளாதார உறவுகளின் மீதும் உற்பத்தி முறையின் மீதும் சார்ந்திருக்கின்றன.” என்கிறார். பின்னர் குடும்பத்தின் தோற்றம் குறித்து விளக்குகின்றார். மனிதன் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழுகின்ற தேவை கருதி குழுக்களாக வாழ்ந்தனர். குழுக்கள் பல குடும்ப அமைப்புக்களைப் பெற்றிருந்தன. மேலும் வாரிசுரிமையின் அடிப்படையில் சொத்துக்கள் பாதுகாக்கப் பட வேண்டி குடும்ப அமைப்பு பின்பற்றப் பட்டு வந்தது என்கிறார். குடும்பம் என்ற அமைப்பு இரத்த உறவுகளைப் பாதுகாக்கும் சக்தியாக விளங்குகிறது. புற நிலையில் ஒழுங்கமைவுடன் காணப்பட்டாலும் சுதந்திரம், உரிமை எனும் அடிப்படையில் கால மாற்றத்திற்கு ஏற்ப விரிசல்கள் பல தோன்றலாயின. இதனால் கூட்டுக் குடும்பம் என்ற அமைப்பு தனிக் குடும்பமாக மாற்றம் பெறத் துவங்கியது என்கிறார் ஆசிரியர். 
இவ்வாறாகத் தனிக் குடும்பம் தோன்றி அது செயல்படுகின்ற நிலையினை கீழ்க்காணுமாறு ஆசிரியர் வகைப்படுத்துகின்றார்.
1.    புதிய வாழிடம் தேடி: வேலை வாய்ப்பு மற்றும் வாழ்க்கை ஆதாரங்களைத் தேடி பெற்றோரைப் பிரிந்து புதியவழிடம் தேடி வாழ்தல்.  
2.    கூட்டு செயல்பாடு: பல்வேறு காரணங்களால் பெற்றோரைப் பிரிந்து வாழும் பிள்ளைகள் பெற்றோரின் முதுமை, உடல்நலமின்மை காரணமாக தொலைவில் இருந்துகொண்டே அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் செயலை கூட்டு செயல்பாடு என்கிறார்.
3.    தனி மனிதத்துவம்: ஒவ்வொருவருக்கும் கருத்துச் சுதந்திரம் என்ற நிலையில் தனிக் குடும்பங்களில் தனிமனிதத்துவம் முக்கியத்துவம் பெறுகின்றது.  அதனால் கூட்டுக் குடும்பம் தனிக் குடும்பங்களாகப் பிரிகின்றது. 
4.    பெண்ணுக்கான சமத்துவம்:  கல்வி கற்றல், வேலை செய்தல் என பெண்களின் நிலை மாறுகின்ற பொழுது பெண்களுக்கான சமத்துவ உணர்வும் மேலோங்குகிறது. 
5.    வாழ்க்கைத் துணைத் தேர்வு: தனிக் குடும்ப அமைப்பில் பிள்ளைகளின் விருப்ப அடிப்படையில் பெரும்பாலும் வாழ்க்கைத் துணைத் தேர்வு அமைகின்றது. 
6.    குடும்ப நெறிகள் நெகிழ்தல்: தற்காலத்தில் நிறுவனங்களுக்காக உழைத்தல் எனும் நெருக்கடியான நிலையில்  உறவுகளுக்கான நெருக்கம் தளர்ந்து போகின்றது. என தனிக்குடும்ப செயல்பாடு முறையினை வகைப்படுத்துகின்றார். 
குடும்பச் சிதைவு: 
            குடும்பச் சிதைவிற்கான காரணிகளை அகக் காரணிகள், புறக் காரணிகள் என வகைப்படுத்துகின்றார். அகக் காரணிகள்: ஆசை, பொறாமை, தன்முனைப்பு, மானம், சினம், ஏமாற்றப் பட்டோம் என்ற மன நிலை, தனிமனிதப் போக்கு, பாலுணர்வு என அகக்  காரணிகளைப் பட்டியலிடுகின்றார்.  
புறக் காரணிகள்:  
            கல்வி, நகரமயமாதல், தொழில் முறை மாற்றம், திருமண முறை மாற்றம், வாழ்க்கைத் துணைத் தேர்வு, சட்ட முறைகளில் மாற்றம் முதலானவைகளை புறக்காரணிகளாகக் குறிப்பிடுகின்றார்.  
கல்வி:
            நிறுவனங்கள் சார்ந்து வளர்ந்து வரும் தொழில் துறைக்கு ஏற்ப கல்வி அமைப்பு முறையும் மாறி விட்டதால் தன்னுடைய சுய வளர்ச்சியினை மட்டும் கருத்தில் கொண்டு நிறுவனுங்களுக்கு ஏற்ப தன்னைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டியுள்ள நிலையில் குடும்ப அமைப்பிலும் மாற்றம் ஏற்படுகின்றது. 
நகரமயமாதல்: 
            நகரமயமாதலின் வளர்ச்சியால் கிராமத்திலிருந்து மக்கள், நகரத்தை நோக்கி தொழில் காரணமாக இடம் பெயருகின்றனர். நகரங்களில் ஏற்படுகின்ற இட நெருக்கடியும் தேவைகளும் கூட்டுக் குடும்ப சிதைவிற்குக் காரணமாகின்றன.
தொழில்மயமாதல்: 
            தொழில்மயமாதலினால் பெருகி வருகின்ற தொழிலுக்கு ஏற்ப மனிதனின் வாழ்க்கைச் சூழலும் மாற்றம் பெறுகின்றது. கிடைக்கின்ற தொழிலுக்கு ஏற்ப தன்னுடைய வாழ்க்கை முறையினையும் வாழ்விடத்தையும் அமைத்துக் கொள்கின்ற நிலைக்கு மனிதன் தள்ளப்படுவதால் கூட்டுக் குடும்ப அமைப்பு முறையானது சிதைவிற்கு உள்ளாகின்றது. 
திருமண முறைகளில் ஏற்படுகின்ற மாற்றம்: 
            வாழ்க்கையில் குடும்ப பொறுப்பின் காரணமாக திருமணம் தள்ளிப் போதல், இதனால் வயது மிகுதல், திருமணம் தடைபடுதல் இதன் காரணமாக ஏற்படுகின்ற வெறுப்புணர்ச்சி குடும்பச் சிதைவிற்குக் காரணமாகின்றது. மேலும் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கின்ற பொழுது ஏற்படுகின்ற குழப்பங்கள் போன்றவையும் குடும்பச் சிதைவிற்குக் காரணமாக இருக்கின்றன. கல்வி, வேலை என பல காரணங்களால் தனியாகவே தன்னுடைய விருப்பப்படி வாழ்ந்துவிட்டவர்கள் ஒருவரோடு சேர்ந்து வாழ்தல் என்பதை வெறுத்தல் ஆகிய காரணங்களால் குடும்பச் சிதைவுகள் ஏற்படுகின்றன என வரிசைப்படுத்துகின்றார் ஆசிரியர். 
தமிழ் நாவல்களில் பொருளாதாரச் சிக்கல்களும் குடும்பச் சிதைவுகளும்
            பொருளாதாரச் சிக்கல்களினால் சிதைவுக்குள்ளான குடும்ப அமைப்பைப் பற்றி விளக்குகிற நாவல்களை எடுத்துக்கொண்டு வகைப்படுத்திக் காட்டுகின்றார் ஆசிரியர். அதனடிப்படையில் பின்வருகின்ற தலைப்புக்களின் கீழ் இவ்வியலை விளக்கிச் செல்கின்றார். அவை பின்வருமாறு. 
1. தன்னலமும் குடும்பச் சிதைவும் 
            கூட்டுக் குடும்பத்தில் பொதுநலம் மிகவும் அவசியமானது. சுயநலம் தோன்றத் துவங்கினால் குடும்பம் சிதைவிற்கு உள்ளாகிவிடும். இதை வேள்வித்தீ நாவல் வழி சான்று காட்டுகின்றார். ‘இரண்டு அண்ணன்கள் மூன்று சகோதரிகள். அனைவரும் நெசவுத் தொழில் செய்து வந்தனர். தந்தை இறந்து விட்ட நிலையில் தாயை யார் பார்த்துக் கொள்வது என்ற பிரச்சினை எழுகிறது. மேலும் அண்ணன் தம்பிகள் ஒவ்வொருவரும் தங்களுடைய வருமானத்தினை பங்கிட்டு செலவு செய்ய விருப்பமின்றி தன் குடும்பம், தன் பிள்ளைகள் என்ற சுய நலத்தால் தனிக்குடித்தனம் செல்கின்றனர்.
2. இளையோர் மனநிலையும் குடும்பச் சிதைவும்
            பெற்றோர்கள் தங்களுடைய வாழ்க்கையை இழந்து குழந்தைகளை படிக்க வைத்து, பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற உழைக்கின்றனர். பிள்ளைகள் முன்னேறுகின்ற நிலையில் பெற்றோர் முதுமையுறுகின்றனர். தங்களுடைய முன்னேற்றத்தை மட்டும் நினைக்கும் பிள்ளைகள் பெற்றோரின் தியாகத்தை மறந்து விடுகின்றனர். என்பதை ஐசக் அருமைராஜனின் கீறல்கள் எனும் நாவலில் எடுத்துக் காட்டுகின்றார். முத்தையா முந்திரி அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரிகிறார். மூன்று மகன்கள் இரண்டு மகள்கள் என ஒவ்வொருவரும் பெற்றோரின் தியாகத்தை உணராது போனதால் குடும்பம் சிதைந்து போவதினை ஆசிரியர் விளக்குகின்றார். தன் உழைப்பு தன் வாழ்க்கை தன் முன்னேற்றம் என்ற மனநிலை தோன்றிய இச்சமூகத்தில் குடும்ப அமைப்பு சிதைந்து போகின்றது என்பதை நாவல் வழி விளக்குகின்றார்.  
3. இயற்கையின் பங்கும் குடும்பச் சிதைவும்
            குடும்பச் சிதைவு இயற்கையின் மாறுபாட்டாலும் நடைபெறுகின்றது. மழையின்மையின் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்ப நிலையினை பூமணியின் நைவேத்தியம்  நாவல் வழி ஆசிரியர் விளக்குகின்றார். ‘சித்தரம் பட்டி கிராமத்தில் மழையின்மையில் விவசாயம் பாதிக்கப்பட்டது. அவ்வூரில் உள்ள நிலங்கள் பார்ப்பனர்களுக்கு உரியவை. அவை குத்தகைக்கு விடப்பட்டு அவற்றில் வரும் வருவாயினை வைத்து வாழ்ந்து வந்த அவர்கள் வறட்சியின் காரணமாக ஊரை விட்டு நீங்கினர். மகாலிங்க ஐயர் பசியின் பொருட்டு வாழைக்காய் திருடி காவல்காரனிடம் அடிவாங்கியதால் அவமானம் தாங்காமல் இறந்து போனார். சங்கரையர் வறுமையின் பொருட்டு மனைவியும் நோய்வாய்ப்பட்டு இறந்து விட சில நாட்களில் தானும் இறந்து போனார். என்பதாக குடும்பச் சிதைவினை நாவல் வழி எடுத்துரைக்கிறார் ஆசிரியர். 
4. குடும்பச் சிதைவில் பாலியல்
            பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கான காரணிகளில் முதன்மையானது குடும்பப் பொருளாதார நிலை. இதனை விளக்க அஸ்வகோஷின் சிறகுகள் முளைத்து எனும்  நாவல் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.  ‘கணவன் வேறொரு பெண்ணுடன் சென்று விட்ட நிலையில் குடும்பத்தைக் காக்கும் பொறுப்பு தேவையானையிடம் வருகிறது. மகளின் திருமணத்தை முடித்து மகனை படிக்க வைக்கின்றாள். மகன் பாஸ்கரன் படித்து வீடு திரும்புகையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதற்காக தேவையானையை காவல் துறையினர் கைது செய்கின்றனர். அவமானம் தாங்காமல் அவள் இறந்து விடுகின்றாள்.  குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டி எந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனரோ அதே தொழில் மீண்டும் குடும்பச் சிதைவிற்கு முக்கியக் காரணியாக விளங்குகிறது.  
5. தொழிலாளர் போராட்டங்களும் குடும்பச் சிதைவுகளும் 
            தமிழ் நாவல்களில் ஐம்பதுகளில் தொடங்கி, பல நிலைகளில் தொழிலாளர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள், இழப்புகள் இவற்றுக்கான போராட்டங்கள் பற்றிய பதிவுகள் இடம் பெற்றுள்ளன. சிதம்பர ரகுநாதன், டி. செல்வராஜ், பொன்னீலன், கு. சின்னப்பா பாரதி போன்றோர் இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் என்கிறார்.  
6. நுகர்வுப் பண்பாடும் குடும்பச் சிதைவுகளும் 
            ‘அறிவியல் தொழில் நுட்பங்கள், சமூக மாற்றத்திலும் முன்னேற்றத்திலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வியாபாரத்தில் தொழில் நுட்பங்கள் நுழைந்துவிட்ட நிலையில் மனிதனின் அன்றாடத் தேவைகள் அதிகரித்து விட்டன. பொருட்களின் பயன்பாடும் அதிகரித்து விட்டது. அன்றாடப் பொருட்களும் விளம்பர உத்திகளுடன் விற்பனை செய்யப்படுகின்றன. வரதட்சணை எனும் பெயரில் அன்றாடப் பொருட்கள் அனைத்தும் சீதனமாக பெறப்படுகின்றன. இதனால் பெண்ணிற்குத் திருமணம் என்பது பொருளாதாரத்தின் அடிப்படையில் பெரும் சிக்களுக்குரியதாகின்றது. வீடு எனும் நாவலின் அமைப்பில் ரேவதி என்பவளின் திருமணம் நடைபெறுவதற்காக அக்குடும்பம் எவ்வளவு பிரச்சனைகளை சந்திக்கிறது என்பதை அறியமுடிகின்றது. என்கிறார் ஆசிரியர். 
தமிழ் நாவல்களில் உளச்சிக்கல்களும் குடும்பச் சிதைவுகளும் 
பாலுறவுச் சிக்கல்களும் குடும்பச் சிதைவுகளும்
            பாலியல் சிக்கல்களை திருமணத்திற்கு முன், திருமணத்திற்குப் பின் என   இருவகைப்படுத்துகின்றார். 
திருமணத்திற்கு முந்திய பாலியல் சிக்கல்கள்
எதிர் பாலினரோடு நெருக்கம்
            இன்றைய சமூகச் சூழலில் ஆணும் பெண்ணும் இணைந்து கல்வி பயிலுதல், பணியாற்றுதல் போன்ற சூழலில் நெருக்கமாக பழகும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதனால் ஒருவர் பால் ஒருவர் ஈர்க்கப்படுவது இயல்பாகிறது. இது காதலாகின்ற நிலையில் ஏற்படுகின்ற எதிர்ப்புகளும் அதற்கான போராட்டங்களும் குடும்பச் சிதைவிற்கு காரணங்களாகின்றன. என்கிறார். 
திருமண வாய்ப்பு தள்ளிப் போதல் 
            பொருளாதார மற்றும் குடும்பச் சுமை காரணமாக ஒருவரின் திருமண வாய்ப்பு தள்ளிப் போகின்றது. ஆணிற்கு திருமணம் தள்ளிப் போவதை விட பெண்ணிற்கு திருமணம் தள்ளிப் போவதினை சமூகம் ஏற்றுக் கொள்வதில்லை. அதனால் திருமணம் ஆகாத பெண் மிகவும் கண்டிப்போடு வளர்க்கப் படுகிறாள். திருமண வாய்ப்பு தள்ளிப் போவது குடும்பச் சிதைவிற்கு காரணமாக விளங்குவதை ஆசிரியர் விளக்குகிறார். 
திருமணத்திற்குப் பிந்திய பாலுறவுச் சிக்கல்கள் 
பாலுணர்வுத் தேவை நிறைவேறாமை 
          ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் எனும் நாவலில் சபாபதிப் பிள்ளையின் மனைவி பாலுணர்வுத் தேவையின் பொருட்டு ஊரைவிட்டு முடி திருத்தும் தொழிலாளியுடன் ஓடிப் போவதனால் ஏற்பட்டுகின்ற குடும்பச் சிதைவு, 
பாலுறவில் மனநிறைவின்மை  
            மெர்க்குரிப் பூக்கள் எனும் நாவலில் தண்டபாணியின் மனைவி ‘சியாமளி’ கணவருடனான மனநிறைவின்மை காரணமாக கணவரின் இளைய சகோதரன் சங்கரனிடம் பாலியல் உறவில் ஈடுபடுதல். இதனால் கணவன் மணிவியிடையே ஏற்படுகின்ற பிரச்சனையால் குடும்பம் சிதைவுறுகிறது. 
பாலியல் வன்முறை 
            பாலங்கள் எனும் நாவலில் சாருவின் கணவன் ‘சுரேஷ்’ அவள் கருவுற்றிருக்கின்ற நிலையில் மனைவியின் முன்பாகவே வேறொரு பெண்ணுடன் தொடர்பு கொள்வதனால் கணவன் மீது வெறுப்பு ஏற்பட்ட நிலையில் குடும்பம் சிதைவிற்குள்ளாகிறது.  
பழைய காதல் பற்றிய  நினைவுகள் 
            ஹெலிகாப்டர்கள் கீழே இறங்குகின்றன எனும் நாவலில் அமிர்தம், திலகம் ஆகிய இருவருக்கும் வாழ்க்கை ஒத்துப் போகவில்லை. அமிர்தம் தன் முன்னாள் காதலி நித்தியாவின் நினைவில் வாழ்கின்றான். இதனால் இருவருக்குமிடையே சிக்கல்கள் எழுகின்றன. 
பாலியல் விபத்துக்கள் 
            சில நேரங்களில் சில மனிதர்கள் எனும் நாவலில் கங்கா திருமணத்திற்கு முன்பு பாலுறவிற்கு உட்படுத்தப்படுகின்றாள் இதனால் கங்காவினால் குடும்பம் என்ற அமைப்பிற்குள் தன்னை இணைத்துக் கொள்ள இயலாமல் போகின்றது. இவ்வாறு நாவல்களை ஆசிரியர் சான்று காட்டுகின்றார். 
1. பிற உளச்சிக்கல்களும் குடும்பச் சிதைவுகளும்  
          உளவியல் சிக்கல் பல நிலைகளில் தோன்றுகின்றன. பொதுவாக ஒவ்வொரு செயலுக்கும் உளவியல் காரணங்கள் சொல்லலாம். அதனடிப்படையில் இந்நூலில் தாய் - மகன் இருவருக்குமிடையேயான காமம், தந்தை - மகள் இருவருக்குமிடையேயான காமம் என வகைப்படுத்தி விளக்குகின்றார். இதற்குச் சான்றாக ஜெயகாந்தனின் ரிஷிமூலம் இந்திரா பார்த்த சாரதியின் நிலமென்னும் நல்லாள் போன்ற நாவல்களைச் சான்று காட்டுகின்றார். மேலும் தந்தை மகனுக்குமான பகை உணர்வை சிவசங்கரியின் ஒரு மனிதனின் கதை எனும் நாவலின் வழி எடுத்துரைக்கின்றார். தியாகு குடிப்பழக்கத்தினால் ஹிஷ்டீரியா நோய்க்கு ஆளாகின்றான். அதனால் தந்தைக்கும் மகனுக்கும் பகை ஏற்பட்டு தந்தை இறந்துவிடுகின்றார். குடும்பம் சிதைவுறுகின்றது. என்கிறார் ஆசிரியர். ஈகோ என்பதற்கு தன்முனைப்பு என்ற சொல்லாக்கத்தை ஆசிரியர் பயன்படுத்துகின்றார். அதனால் சிதைந்து போன குடும்பத்தைக் காட்டுவதற்கு தோப்பில் முகமது மீரான் எழுதிய ஒரு கடலோர கிராமத்தின் கதை சான்றாகின்றது. 
தமிழ் நாவல்களில் பெண்ணுரிமையும் குடும்பச் சிதைவுகளும் 
            ‘குடும்ப நிர்வாகத்தில் ஆண்களை விட பெண்களே அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்.  இருப்பினும் பெண்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் இரண்டாம் தலைப்பட்டதாகவே உள்ளன. இந்நிலையில் பெண்கள் தங்களுக்கான உரிமைகளைப் பெற நினைக்கின்ற பொழுது ஆண்கள் மரபார்ந்த கட்டுப்பாட்டிற்குள் பெண்களைக் கொண்டுவர நினைக்கின்றனர் என்பதை நாவல்கள் வழி ஆசிரியர் விளக்குகின்றார். 
சமூகவியலார் சுட்டும் பெண்ணுரிமைகள் 
            பெண்ணிற்கான உரிமைகளை மூன்று நிலைகளில் வகைப்படுத்தப்படுவதாக ஆசிரியர் விளக்குகின்றார். 1. சமூக உரிமை 2. பொருளாதார உரிமை 3. அரசியல் உரிமை இவற்றில் சமூக உரிமையின் கூறுகளாக 1 சமத்துவம் 2. காதல் உரிமை 3. வாழ்க்கைத் துணைத் தேர்வு உரிமை 4. கருத்தரிப்பை முடிவு செய்யும் உரிமை 5. பாலியல் உரிமை என வகைப்படுத்துகின்றார். 
பெண் சமத்துவம் கோரலும் குடும்பச் சிதைவுகளும்
          இராஜம் கிருஷ்ணன் எழுதிய வீடு எனும் நாவலில் மூன்று குடும்பங்களில் சிதைவுகள் பேசப்பட்டுள்ளன. இந்நாவலில் வரும் தேவி என்பவள் குடும்ப முன்னேற்றத்திற்காக உழைப்பவள். எனினும் அவளுக்குரிய சமத்துவம் இன்மையால் தேவி வீட்டை விட்டு வெளியேறுகின்றாள். திரிவேனியும் தன் கணவனுடன் சமத்துவ நிலையில் வாழமுடியாததால் வீட்டை விட்டு வெளியேறுகின்றாள். தேவி, திரிவேணி ஆகிய இருவரும் தங்களுக்குரிய சமத்துவ உரிமை கிடைக்கப்பெறாததால் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். இருவருக்குமான கணவர்கள் கற்றவர்களாயினும் சமத்துவம் பற்றி உணராதவர்களாக உள்ளனர் என்பதை நாவல்கள் வழி ஆசிரியர் எடுத்துரைக்கின்றார்.  
வாழ்க்கைத் துணைத் தேர்வு 
            தமிழ் சமூகத்தில் வாழ்க்கைத் துணைத் தேர்வு உரிமை என்பது மிகுதியும் பெண்ணுக்கு மறுக்கப்பட்டு வருகின்றது என்பதை நாவல் வழி விளக்குகின்றார். திருமணம் என்பது சாதி மற்றும் பொருளாதார நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும் ஆணைப் பொறுத்த வரையில்  பொருட்படுத்தாமலும் பெண்ணுக்கு முற்றிலும் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டதாகவுமே இருக்கின்றது. ஒரு ஆண் பெற்றோர் ஒப்புதலின்றி ஒரு பெண்ணை ஏற்பதற்கான வாய்ப்பைப் பெற்றிருப்பது போன்று ஒரு பெண் பெற்றுள்ளதாக கூறுவதற்கில்லை. ஒரு பெண் அவ்வாறு நடந்து கொள்ளுகின்ற பொழுது அது அவளுக்குத் துன்பத்தைத் தரக்கூடியதாகவே அமைகின்றது. என்பதை ஹெப்ஸிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு நாவலின் வழி எடுத்துக் காட்டுகின்றார் ஆசிரியர். 
கருத்தரிப்பை முடிவு செய்யும் உரிமை 
            “பெண் கரு உயிர்த்தல், குழந்தை பெறுதல் என்பன ஆணின் வாரிசை உருவாக்கல், அவனுடைய ஆண்மைக்கான வெற்றியை நிலை நிறுத்தல் என்ற அளவிலேயே அமைகின்றன. இதைப் பெண் குறைவின்றி நிறைவேற்றினால் பாராட்டப் படுவாளே அன்றி அவளுக்கு உரிமை பாராட்டும் அளவில் எத்தகைய பெருமையும் விளைவதில்லை.” என்று கூறும் ஆசிரியர் செ. கணேசலிங்கன் எழுதிய ஒரு பெண்ணின் கதை எனும் நாவலில் அசோகன் மற்றும் உமா ஆகியோரிடையே ஏற்படுகின்ற சிக்கலினால் குடும்பம் சிதைவதினை எடுத்துரைக்கின்றார்.  கல்லூரி ஆசிரியையாக பணிபுரியும் உமா கற்பமுற்ற நிலையில் பணியின் காரணமாக முதல் குழந்தையைத் தள்ளிபோடலாம் என்று கூற அசோகன் உனது வேலையை நிறுத்திவிட்டு குழந்தையைப் பெற்று வளர்த்தால் போதும் என்பதாக வற்புறுத்துகிறான். இதனால் ஏற்படுகின்ற மன விரிசல்கள் குடும்பச் சிதைவிற்குக் காரணமாவதாகக் குறிப்பிடுகின்றார். 
பாலியல் உரிமை 
            “பாலியல் உரிமை என்பது பெண் பாலுறவில் நாட்டங்கொள்வது, அந்த உறவை மறுப்பது என இரண்டு வகைப்படும். இரண்டுமே சமூகத்தில் ஆணின் அதிகாரத்திற்கு உட்பட்டிருக்கின்றன. இவற்றை எந்த நிலையில் ஒரு பெண் மீறினாலும் அது அவள் கொண்டிருக்கின்ற குடும்ப வாழ்வைச் சிதைப்பதாகவே விளங்குகின்றது.”    என்பதை ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார். 
பெண்ணின் பொருளாதார உரிமையும் குடும்பச் சிதைவுகளும் 
            சராசரி குடும்பத்தில் ஆணின் மூலமாக வருகின்ற வருமானம் இன்றைய சூழலில்  போதுமானதாக இல்லை. அதன் காரணமாக பெண்ணும் பணிக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றாள். மேலும் “ஆணை விட பெண் ஒருபடி மேலான பொறுப்புக்களையோ பதவிகளையோ வகிப்பது ஆணுக்கும் மனதளவில் ஏற்க இயலாதாகின்றது.” என்பதை நாவல்கள் மூலம் சான்று காட்டி விளக்குகின்றார் ஆசிரியர்.
மதிப்புரை 
            தமிழ் நாவல்களில் குடும்பச் சிதைவுகள் எனும் தலைப்பில் 1992ல் தொடங்கி 1999ல் ஆய்வேடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் இதற்கிடையில் 1966ல் விரிவுரையாளராகத் தனது கல்விப் பணியைத் துவங்கியுள்ளார். இதனையடுத்து 2006ல் இவ்வாய்வு, நூல் வடிவம் பெற்றுள்ளது. ஆய்வேடும் நூலும் கிடைக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டினையும் ஒப்பிட வேண்டியுள்ளது. நூல் வடிவத்தின் பொருட்டு ஆய்வின் முன்னுரை நீக்கப்பட்டுள்ளது. மேலும் ஆய்வேட்டில் ஒவ்வொரு இயலுக்கும் இறுதியாகக் கொடுக்கப்பட்ட தொகுப்புரை எனும் பகுதி தலைப்பு நீக்கப்பட்டுள்ளது. இவை தவிர எவ்வித மாற்றமுமின்றி ஆய்வேடு, நூல் வடிவம் பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து  ஆய்வு அடிப்படையில் குடும்பச் சிதைவினை, பொருளாதாரச் சிக்கல்கள், உளவியல் சிக்கல்கள், பெண்ணுரிமை கோரல் எனும் மூன்றின் அடிப்படையில் ஏற்படுகின்ற குடும்பச் சிதைவுகளை விளக்க முயல்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்ற அளவில் ஆசிரியர் ஒவ்வொன்றையும் வகைப்படுத்திக் கூறியுள்ளார். ஆய்வில் ஒவ்வொரு இயலிலும் இறுதியாகத் தொகுக்கப்பட்ட கருத்துக்கள் முடிவுரையில் தொகுப்பாக விளக்கப்பட்டுள்ளன. 
            தமிழ் நாவல் வரலாற்று வளர்ச்சியில் குடும்பம் எனும் இயல் மிகவும் சுருக்கமான நிலையில் 14 பக்கங்களில் விளக்கப்பட்டுள்ளது. ஆனால் தலைப்பின் பொருண்மை பற்றிப் பார்க்கும் பொழுது முதல் இயலை இன்னும் சற்று விரிவாக விளக்கியிருக்கலாம் என்பதாகத் தோன்றுகிறது. மேலும் குடும்ப அமைப்பு மாற்றங்களும் சிதைவுகளும் எனும் இயல் கூட்டுக் குடும்ப அமைப்பு எவ்வாறு தற்காலச் சூழலுக்கு ஏற்ப சிதைவுறுகிறது என்பதினை பல்வேறு நிலைகளில் விளக்குகின்றது. மேலும் மார்க்சிய அறிஞர்களின் விளக்கங்களை முன்வைத்து தனிக்குடும்ப அமைப்பினை வகைப்படுத்தி விளக்கும் விதமாக இவ்வியல் அமைக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து தமிழ் நாவல்களில் பொருளாதாரச் சிக்கல்களும் குடும்பச் சிதைவுகளும் எனும் இயல் தற்காலப் பொருளாதார சூழலுக்கு ஏற்ப குடும்ப அமைப்பில் சிதைவுகள் ஏற்படுவதும் மனிதனின் மன நிலை மாறுவதூம் குறித்து தக்க சான்றுகளுடன் விளக்குகிறது. கூட்டுக் குடும்பங்களில் பொதுநலம் மிகுந்திருந்ததையும் தற்காலச் சூழலில் சுயநலம் அதிகரித்து விட்டிருப்பதையும் அதற்கான பொருளாதாரக் காரணத்தையும் ஆசிரியர் நாவல்கள் வழி எடுத்துரைக்கின்றார். தமிழ் நாவல்களில் உளச்சிக்கல்களும் குடும்பச் சிதைவுகளும் எனும் இயல், பாலியல் சார்ந்து ஏற்படுகின்ற உளச்சிக்கல்களை மையப்படுத்தி விளக்குகிறது. திருமணத்திற்கு முன்பு ஆணிற்கும் பெண்ணிற்குமான காதல் உறவுகளை புரிந்து கொள்ளாத சமூகத்தில் ஏற்படுகின்ற சிக்கல்கள், திருமணத்திற்கு பின்பு கணவன் மனைவி இடையே ஏற்படுகின்ற பாலியல் சிக்கல்கள் போன்றவை குடும்பச் சிதைவிற்குக் காரணமாக அமைவதினை நாவல்கள் வழி எடுத்க்காட்டியுள்ளார். தமிழ் நாவல்களில் பெண்ணுரிமையும் குடும்பச் சிதைவுகளும் எனும் இயல் பெண்ணியம் குறித்த தற்கால சமூக அமைப்பில் பெண்ணின் சமத்துவம் குறித்த கருத்துக்களை ஏற்றுக் கொள்ள இயலாத மரபார்ந்த குடும்ப அமைப்பு சிதைவிற்கு உள்ளாவதினை ஆசிரியர் நாவல்களின் துணை கொண்டு விளக்கியுள்ளார். வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்தல், பொருளாதார சமத்துவம், கருத்தரிப்பை முடிவு செய்யும் உரிமை முதலானவற்றில் பெண்களுக்கான உரிமை மறுக்கப்படுவதால் ஏற்படும் குடும்பச் சிதைவுகளை விளக்கியுள்ளார். 
            இவ்வாய்வு நூலை மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில் நாவல்களில் ஆய்வு செய்பவர்களுக்கு இந்நூல் ஒரு வழிகாட்டுதலாக அமையும். மேலும் நாவல்களை வாசிக்கும் முன்பு இது போன்ற நாவல் குறித்த ஆய்வு நூற்களை படித்து விட்டு நாவல்களை வாசித்தால் கதைகளைப் புரிந்து கொள்வதில் மேலும் புரிதல்கள் ஏற்படும். என்பதை அறிய முடிகின்றது.