பாலினப் பாகுபாடும்
சமூக அடையாளங்களும்
ஆசிரியர்கள்:
வ.கீதா மற்றும் கிறிஸ்டி சுபத்ரா
வெளியீடு:
பாரதி புத்தகாலயம், ஆண்டு: 2009 டிசம்பர்
பக்கங்கள்:
176, விலை: ரூபாய் 80
பாலினப் பாகுபாடும் சமூக அடையாளங்களும்
எனும் இந்நூல் ஆறு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு
1. கடவுள் உன்னை வேறு மாதிரியாகப் படைத்துள்ளார்:
இயற்கை நம்மை வித்தியாசமாகப் படைத்துள்ளது.
2. பாலினயுத்தம்
3. குறிப்பிட்ட பாத்திரங்களாக வாழுதல்
4. ஆண் தன்மையும் பெண் தன்மையும்: கருத்தாக்கங்கள்
நிஜமாகின்றன
5. பாலின பாகுபாடு: வரலாற்றின் பார்வையில்
6. பாலினம் சார்ந்த பழக்கவழக்கங்கள், நடைமுறைகள்
மேற்கண்ட 6 இயல்களில் முதல் நான்கு இயல்கள்
பல்வேறு கருத்துநிலைகளின் அடிப்படையில் பாலினப் பாகுபாடு எவ்வாறு கருத்துருவாக்கம்
பெற்றுள்ளது என்பதை அறிமுகப்படுத்துகின்ற விதமாகவே அமைந்துள்ளன. 176 பக்கங்கள் கொண்ட
இந்நூலின் முதல் 70 பக்கங்களுக்குள்ளாக முதல் நான்கு இயல்கள் அடங்கிவிடுகின்றன. இறுதி
இரண்டு இயல்கள் மட்டுமே நூலின் மீதமுள்ள பக்கங்களில் விவாதிக்கப்பட்டுள்ளன. எனவே இந்நூலில்
விவரிக்கப்பட்டுள்ள முதல் நான்கு இயல்களையும்
தொகுத்துரைப்பது கேட்போரின் புரிதலை மேம்படுத்தும் என்ற நோக்கில் அவை பாலினப்
பாகுபாடு ஓர் அறிமுகம் எனும் தலைப்பின் கீழ் விவரிக்கப்படுகின்றன.
1. பாலினப் பாகுபாடு ஓர் அறிமுகம்
இவ்வியலின் உட்பிரிவாக அமையப்பெற்றுள்ள
முதல் இயலான 'கடவுள் உன்னை வேறு மாதிரியாகப் படைத்துள்ளார்: இயற்கை நம்மை வித்தியாசமாகப்
படைத்துள்ளது. என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் பாலினப் பாகுபாட்டினை மூன்று நிலைகளில்
இவ்வியல் விளக்குகிறது. அவை
1. மதரீதியான பாலினப் பாகுபாடு,
2. விஞ்ஞான ரீதியான பாலினப் பாகுபாடு
3. சமகால சமூகப் பின்னணியில் பாலினப் பாகுபாடு
I. மதரீதியான பாலினப் பாகுபாடு: மதரீதியான பாலினப் பாகுபாடு என்பது மதங்கள் அனைத்திற்கும்
பொருந்தக்கூடியதாக இருப்பதை இவ்வியலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. “பெண் பாவத்தின்
மறு உருவாக விளங்குபவள். பொய் பேசுவதும், வம்பிழுப்பதும் பெண்களின் இயல்பு. நகைகளின்
மீது தீராத மோகம் கோபம், அற்பத்தனம், துரோகம் ஆகியன அவளுக்குரிய குணங்கள்.” (ப -
20) என்று மனுவில் கூறப்பட்டுள்ள பெண் குறித்த
பதிவினையும், “பெண்கள் இயல்பிலேயே அறிவுத்திறத்திலும் பகுத்தறியும் திறனிலும் குறைவுபட்டவர்களாக
இருக்கிறார்கள். இயல்பிலேயே அறிவிலிகளாக உள்ள பெண்களுக்கு நாட்டின் பிரஜையாகவோ பொது
விசயங்களில் பங்கெடுக்கவோ தகுதியில்லை. இவற்றைப் ஆண்களிடமே விட்டுவிடுவதுதான் முறையாக
இருக்கும்.” (ப – 21) என்று குறிப்பிட்ட அரிஸ்டாட்டிலின்
(கிரேக்க தத்துவ அறிஞரான) கருத்தினையும் “பெண்கள் இயல்பிலேயே மோசமானவர்கள். எது சரி,
எது தவறு, உண்மை எது, பொய் எது என்பதையெல்லாம் அவர்களால் உய்த்துணர முடியாது.” (ப
– 21) என்று கூறிய புத்தமதக் கருத்துக்களையும் “கடவுள் ஆணையே முதலில் படைத்தார். பெண்ணை
ஆணின் விலா எலும்பிலிருந்து படைத்தார். பெண்களையும் அவர்கள் வாழும் வாழ்க்கையையும்
கண்காணித்து அவர்கள் மீது அதிகாரம் செலுத்தவே ஆண்கள் படைக்கப்பட்டனர்.” (ப – 21) என்பன
போன்ற கிறித்துவமதக் கருத்துக்களும் இவ்வியலில் விளக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட மதத்தின்
அடிப்படையில் பெண்களுக்கு எதிராக தோன்றிய கருத்துக்களை சான்று காட்டும் இந்நூல் மதத்தின்
பேரில் பெண்களுக்கு எதிராக பரப்பப்பட்டு வந்த செய்திகள் அனைத்தும் ஆணாதிக்க செயல்பாட்டின்
ஆதிக்க மனநிலையில் உருவானதே என்பதையும் சுட்டிக்காட்டுகின்றது.
II. விஞ்ஞான ரீதியான பாலினப் பாகுபாடு: ஆண் பெண் பாலினப் பாகுபாட்டில் விஞ்ஞானமும் நடுநிலையைக்
கொண்டிருக்கவில்லை என்பதை எடுத்துரைக்கும் விதமாக அறிவியல் அறிஞர்கள் பெண்மை என்பது
குறித்து கொண்டிருந்த கருத்தாக்கங்களை நூல் விவரிக்கின்றது. “பெண்ணின் பால் உறுப்புகள்
குறைபாடு உடையன. மனித வளர்ச்சியின் பின்தங்கிய ஒருநிலையின் வெளிபாடு. ஆணின் குறைவுபட்ட
பதிப்பே பெண்” (ப – 25) என கி.மு 2 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கிரேக்க மருத்துவர் கேலன்
என்பவரின் கூற்றையும் “அளவுக்கதிகமாக யோசிக்கவோ படிக்கவோ ஒரு பெண் முற்பட்டால் அவளது
கர்ப்பப்பை பாதிப்புக்குள்ளாகி அவள் பெண் தன்மையற்றவளாகவும் சமூகத்திற்குப் பொருத்தமற்றவளாகவும்
ஆக நேரிடும்” (ப – 26) என 19 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து விஞ்ஞானிகள் கூறியதையும்
ஆண் , பெண் ஆகியோரின் பால் உறுப்புகள் தொடர்பான
சுரப்பிகளே அவர்களின் வேறுபட்ட நடத்தையை தீர்மானிக்கிறது என இருபதாம் நூற்றாண்டிலும்
பால்வேறுபாடு குறித்த வாதங்களை முன்வைத்துள்ள சில விஞ்ஞானிகள் கூறியதையும் நூல் எடுத்துரைக்கின்றது. அதாவது இதுவரை விஞ்ஞானிகளாக
பெரும்பாலும் ஆண்களே இருந்துள்ளனர் என்றும் அவர்களின் ஆய்வு ஆண்களுக்கு ஆதரவானதாகவே
இருந்துள்ளது என்பதையும் எடுத்துரைப்பதோடு ஆண்களும் பெண்களும் தங்களது நடத்தை முறைகளில்
வேறுபடுவது அவர்கள் வளர்க்கப்படுகின்ற விதமே தவிர இதில் சுரப்பிகளின் பங்கீடு எதுவும்
இல்லை எனவும், இது பெண் விஞ்ஞானிகளின் தோற்றத்திற்குப் பிறகு கண்டறியப்பட்ட உண்மை என்பதையும்
நூல் விவரிக்கின்றது. ஆண்கள் மட்டும் விஞ்ஞானிகளாக இருந்த காலம் வரை ஆணின் விந்துதான்
கருவுருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. பெண்
விஞ்ஞானிகள் தோன்றிய பிறகே கருவுருவாக்கத்தில் பெண்ணின் கருமுட்டை எவ்வளவு முக்கியமான
இடத்தைப் பெறுகிறது என்ற உண்மை கண்டறியப்பட்டது என்பதனையும் நூல் எடுத்துரைக்கின்றது.
III. சமகால சமூகப் பின்னணியில் பாலினப் பாகுபாடு: ‘பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாகப் பெண்கள் குறித்து
விவாதிக்கத் துவங்கிய நிலையில் பெண் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லப்பட்டதாலும்
அவர்கள் தங்களது அறிவை வளர்த்துக் கொள்ளத் தேவையில்லை என்று சமுதாயம் சாற்றியதாலுமே
அவர்கள் அறிவிலிகளாக ஆக்கப்பட்டனர் என்ற மேரி வுல்ஸ்டன் கிராப்ட் என்ற ஆங்கிலப் பெண்மணியின் வாதத்தையும்
அவரைத் தொடர்ந்து ‘ஒரு பாலினம் இன்னொன்றின் மீது ஆதிக்கம் செலுத்தும் அதிகாரத்தை இயற்கை
யாருக்கும் வழங்கவில்லை' என்று பிரெஞ்சு நாடக நடிகை ஒலீம்ப் டி கூஜ் தெரிவித்ததையும் பெண்கள் எத்தகையதொரு பதவியை வகித்தாலும் மஞ்சள் குங்குமம்,
கண் நெறஞ்ச புருஷன், அம்மான்னு சொல்ல புள்ளைங்க இதைவிட ஒரு பெண்ணுக்கு என்ன வேணும்?
என பெண்களுக்கு அறிவுரை சொல்லப்பட்டு வருகின்றனவே தவிர பெண்ணியச் சிந்தனைகளை சமூகம்
ஏற்றுக் கொல்லத் தயாராக இல்லை. என்பதனையும் இந்நூல் விவரிக்கின்றது.
2.பாலினயுத்தம்:
பாலினயுத்தம் என்பது குழந்தை கருவில் தோன்றும் நிலையிலேயே
தொடங்கிவிடுகிறது. பெண்சிசுக்கொலை புரிவதிலிருந்தே பெண்ணிற்காகன பாலினயுத்தம்
தொடங்கிவிடுகிறது. அதனை அடுத்து பாலூட்டுதலிலும் கூட ஆண் பெண் பேதம் பார்க்கப்படுகின்றது. குழந்தைகள் வளர்க்கப்படுகிற நிலையிலேயே அவர்களின்
உடை, பழக்கவழக்கங்கள் என ஒவ்வொன்றிலும் பாலினப் பாகுபாடு காட்டப்படுகின்றது. இதனை விளக்கும்
விதமாக “நாம் பெண்ணாகவோ ஆணாகவோ பிறப்பதில்லை அப்படி ஆக்கப்படுகிறோம்” (ப – 36) என்று
இரண்டாம் பாலினம் என்ற நூலின் ஆசிரியர் சீமொன் தி பொவார் கூறியுள்ள கருத்து சான்று
காட்டப்பட்டுள்ளது. 'பெண்களுக்கு இலக்கியப் படிப்பு போன்ற மென்கலைகளும் ஆண்களுக்கு
விஞ்ஞானம், கணிதம் போன்ற அறிவியல் துறைகளும்தான் பொருந்திவரும் என பெண் கல்வி தொடர்பான
பாலினயுத்தம் தொடர்ந்து நடைமுறைப் படுத்தப் படுவதினை இவ்வியல் எடுத்துரைக்கின்றது. இவ்வாறு வாழ்க்கையில்
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பெண்ணிற்கான ஒடுக்குமுறையும் ஆணிற்கான சுதந்திரமும் வழங்கப்பட்டு
வருகின்றன என்பதை விளக்குவதாக பாலினயுத்தம் எனும் இவ்வியல் அமையப் பெற்றுள்ளது.
3. குறிப்பிட்ட பாத்திரங்களாக வாழ்தல்:
சமூகம் கட்டமைத்துள்ள சொல்லாடல்களின் வழி
ஆண்களும் பெண்களும் அவ்வப் பாத்திரங்களாக வாழ்தல் என்பதனையே இவ்வியல் விளக்குகிறது.
ஆண், பெண்ணிற்கான சம உரிமைகளை எவ்வளவுதான்
பேசினாலும் சமூகத்தில் நிலவி வருகின்ற, மக்களின் பழக்கவழக்கத்தில் பொதிந்து கிடக்கின்ற
சொல்லாடல்களை மாற்றுவது இயலாத ஒன்றாக உள்ளது. ஒருவரின் செயலைப் பார்த்தது 'இவனெல்லாம்
ஒரு ஆம்பளையா? என்பதும் இவளெல்லாம் ஒரு பொம்பளையா என்று கூறுவதும் மட்டுமல்லாமல் ஒவ்வொருவரும்
சில நேரங்களில் தங்களுக்குள்ளாகவே 'நானெல்லாம் ஒரு ஆம்பளையா? நானெல்லாம் ஒரு பொம்பளையா?
என்று சொல்லிக் கொள்வதும் உண்டு. ஆண் பெண்
என்ற சமூகக் கற்பிதங்களை ஒவ்வொருவரும் ஏற்று வழ்வதனையே குறிப்பிட்ட பாத்திரங்களாக வாழ்தல்
என இவ்வியல் விளக்குகின்றது.
4. ஆண்தன்மையும் பெண்தன்மையும்: கருத்தாக்கங்கள்
நிஜமாகின்றன:
இந்திய சமூகத்தில் பாலினப் பாகுபாடும்
சாதியப் பாகுபாடும் பல நிலைகளில் ஒன்றிப் போவதினை, பிறப்பின் அடிப்படையிலும் செயல்பாட்டின்
அடிப்படையிலும் ஆணிலிருந்து பெண் வேறுபடுத்தப்படுவது போன்று, பிறப்பின் அடிப்படையிலும்
தொழிலின் அடிப்படையிலும் சாதிகளும் வேறுபடுத்தப்பட்டுள்ளன என்பதை இவ்வியல் விளக்குகிறது.
மேலும் “ஒவ்வொரு மதத்திலும் சடங்குகள், சம்பிரதாயங்கள், விரதங்கள் ஆகியவற்றைப் பெண்கள்
மேற்கொள்ள வேண்டுமென்பதில் ஆண்கள் வெகு கவனமாக இருக்கின்றனர். இதை மறுக்கும் பெண்கள்
ஏராளமான தண்டனைகளைப் பெறுகின்றனர். சரியாக முக்காடு இடவில்லை என்பதற்காக ஆஃப்கானிஸ்தான்,
ஈரான் போன்ற நாடுகளில் பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். மாண்பைக் காக்கிறோம் என்ற
பெயரில் இந்தக் கொலைகள் நியாயப் படுத்துகின்றன. இந்த மாண்பும் கொலைத் தண்டனையும் சம்பந்தப்பட்ட
பெண்ணுக்குத்தானே தவிர ஆணுக்கல்ல.” (ப – 55) என்ற மதரீதியான பாலினப் பாகுபாடு குறிப்பிடப்பட்டுள்ளது.
“இனரீதியாக மக்களைப் பிரித்து வைத்திருக்கும் அமெரிக்கா, சாதி ரீதியாகப் மக்களைப் பிரித்து
வைத்திருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் கறுப்பின ஆண்களும் தாழ்த்தப்பட்ட சாதி ஆண்களும்
பெண்களைப் போலவே கீழாக நடத்தப்படுகிறார்கள்.” (ப- 60) என இன அடிப்படையிலான ஒடுக்குமுறையினை
சாதிய ரீதியிலான ஒடுக்கு முறையுடன் ஒப்பிட்டு நோக்குகின்றது இவ்வியல். இவாறாக பாலினப்
பாகுபாட்டையும் சாதியப் பாகுபாட்டையும் ஒரே தன்மையில் பார்த்தல் என்பது எந்த அளவிற்குப்
பொருந்தி வரும் என்பது விமர்சனத்திற்குரியதேயாகும்.
மேலும் குடும்ப நிலையில் வருமானம் என்பது
ஆணின் வருமானமே, அந்தக் குடும்பத்தின் உண்மையான வருமானமாகவும், பெண்ணின் வருமானம் வெறும்
உபரி வருமானமாகவும் கருதப்படுவதினை இவ்வியல் விளக்குகிறது. “ஒவ்வொரு சாதியும், தனக்கு
மேல் நிலையிலுள்ள சாதியை ஆராதிப்பதும் தனக்குக் கீழ்ப்பட்ட சாதியை வெறுப்பதும் மட்டுமே
சாதிய அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது என்று டாக்டர் அம்பேத்கர் கூறியது போன்று தான்
அடக்கப்பட்டிருக்கிறோம். பாதிப்புக் குள்ளாயிருக்கிறோம் என்ற சிந்தனையில் இருக்கும்
ஒவ்வொரு சாதியச் சார்ந்த ஆண்களும் தானோ, பிறரோ பெண்ணை அடக்கி ஆளுவதைப் பற்றியோ பெண்ணுக்கு
மறுக்கப்பட உரிமையையும் அதிகாரத்தையும் ஆண் எடுத்துக் கொள்வதைப் பற்றியோ பெரியளவுக்கு
உறுத்தல் அடைவதில்லை” (ப – 65). என சாதிய ஏற்றத் தாழ்வுகளால் பாதிக்கப்படும் எந்தவொரு
ஆணும் பெண்ணிற்கான ஒடுக்குமுறையைப் பற்றி சிந்திக்காத நிலையினை இவ்வியல் எடுத்துரைக்கின்றது.
5. பாலின பாகுபாடு: வரலாற்றின் பார்வையில்
ஆண்மை, பெண்மை என்பன போன்ற பாலினப் பாகுபாடு பல நூற்றாண்டுகளாக,
மனிதச் சிந்தனைப் போக்கின் ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளது. என்பதை வரலாற்றின் பார்வையில்
பாலினப் பாகுபாடு எனும் இவ்வியல் விளக்குகிறது. மேலும் இவ்வியலில் பாலினப் பாகுபாடு
குறித்த வரலாற்றுச் சான்றுகளை எடுத்துரைக்க ஆசிரியர்கள் பல்வேறு தளங்களிலிருந்து தரவுகளை
தொகுத்துரைக்கின்றனர். இதனை வாசிப்பவரின் புரிதலுக்கேற்ப சில உட்பிரிவுகளின் அடிப்படையில்
விளக்குவது பொருந்திவரும் என்பதால் பின்வரும் தலைப்புகளில் இவ்வியல் தொகுத்துரைக்கப்படுகின்றது.
பிரடெரிக் ஏங்கல்ஸ்:
தந்தை வழிச் சமூகத்தின் தோற்றம்
1.
பிராய்டின் உளவியல் ஆய்வு: ஆண்களும் பெண்களும்
2.
கிரீந்திரசேகர், போஸ்: இந்தியச் சூழலில் உளவியல்
ஆய்வு
3.
காத்தரீன் மேக்கினன்: அமெரிக்கப் பெண்ணியவாதி
4.
பெரியார்: இந்தியச் சூழலில் பாலினப் பாகுபாடு
5.
1980 களில் பாலியலும் அடிமைத்தனமும்
1.பிரடெரிக் ஏங்கல்ஸ்: தந்தை வழிச் சமூகத்தின் தோற்றம்
தாய்வழிச் சமூகம் தந்தை வழிச் சமூகமாக
மாறிய நிலையினை ஏங்கல்ஸ் எழுதிய குடும்பம், தனிச் சொத்து, அரசின் தோற்றம் என்ற நூலில்
வழி இவ்வியலின் முதல் பகுதி சுருக்கமாக எடுத்துரைக்கின்றது. அவை பின்வருமாறு, ‘வேட்டைச்
சமூகத்தில் பெண்ணின் தலைமை போற்றப்பட்டது. தான் உடலுறவு கொள்ள விரும்பும் ஆணைத் தேர்ந்தெடுக்கும்
அதிகாரம் பெண்ணிற்கே உரியதாயிருந்தது. எந்தச் சூழலிலும் இறுதியான முடிவு எடுக்கும்
உரிமை பெண்ணிற்கே உரியதாயிருந்தது. இவ்வாறு வாழ்ந்து வந்த தாய்வழிச் சமூகம் காலப் போக்கில்
தண்ணீர், உணவுத் தேவைக்காக இடம் பெயருகையில் ஆற்றங்கரையோரங்களில் தங்கி, உணவு உற்பத்தி
முறையினைக் கற்றுக் கொண்டனர். தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்பட பொருட்களைச் சேமிக்கவும்
கற்றுக் கொண்டனர். இச்சேமிப்பு பொருளானது ஆணிற்கான அதிகாரத்தை வழங்கும் கருவியானது.
இச்சூழலில் ஆண் உற்பத்திக்குரியவனாகவும்
அதிகாரம் மிக்கவனாகவும் மாறினான். பெண் வீட்டைப் பராமரிப்பவளாகவும் ஆணின் கட்டுப்பாட்டிற்கு
உரியவளாகவும் மாற்றப்பட்டாள். உற்பத்திச் சூழலில் இரு குழுவினர்களுக்கிடையேயான மோதல்
என்பது சேமித்து வைக்கப்பட்ட பொருளை கூறி வைத்தே நடைபெற்றது. இதில் வென்றவர்கள் தோற்றவர்களை
அடிமைகளாக்கி தங்களுக்கான உற்பத்திப் பணியில் ஈடுபடுத்தினர். இந்நிலையில்தான் சுரண்டும்
வர்க்கம், சுரண்டப்படும் வர்க்கம் என இருவர்க்கத்தினர் உருவாயினர். மற்றவர்களை அடிமைப்படுத்திப்
பழகிய ஆணிற்கு பெண்ணை அடிமைப்படுத்துவது ஒன்றும் சிரமமாக இல்லை. உலகத்தில் அனைத்தையும்
அடிமைப்படுத்த நினைக்கும் ஆணின் பார்வையில் பெண்ணும் அடிமையாகவே கருதப்பட்டாள். உற்பத்தி
உயர்வும் அதிகார உயர்வும் ஆணிற்கானதாக உருமாறிய பின்பு தந்தை வழிச் சமூகத் தோற்றத்தின்
விளைவாக பெண்ணின் மீதான கற்பிதங்களும் ஒடுக்கு முறைகளும் அதிகரிக்கத் தொடங்கின. ஆணிற்கான
சுதந்திரப் போக்கு சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாயிற்று.’ (ப – 76 – 79) என தந்தை
வழிச் சமூகம் தோன்றிய நிலையினை இவ்வியல் விளக்குகின்றது.
2.பிராய்டின் உளவியல் ஆய்வு: ஆண்களும் பெண்களும்
சிக்மண்ட் பிராயிடின் உளவியல் அடிப்படையில்
ஆண்மை, பெண்மை குறித்தான கருத்தாக்கங்களை இவ்வியல் விளக்குகிறது. அதாவது ‘ஒவ்வொரு குழந்தைக்கும்
எதிர் பாலினம் சார்ந்த பெற்றோரின் மீதான ஈர்ப்பின் அடிப்படையில் அவர்களுடன் உறவு கொள்ள
விரும்புவதாகவும், இது நடைபெறாது என்ற நிலையில் குழந்தைகளின் விருப்பம் வேறொன்றாய்
மாறுகிறது. இந்தக் கட்டத்தில் குழந்தைகளின் ஆளுமை (ஈகோ), பேராளுமையால் (சூப்பர் ஈகோ)
கட்டுப்படுத்தப்படுகின்றது. தாயின் மீதான ஆண்குழந்தையின் விருப்பமும் தந்தையின் மீதான
பெண்குழந்தையின் விருப்பமும் தவறு என்று அவர்களின் பேராளுமை அறிவுறுத்துகின்றது. இவ்வாறு
பேராளுமையால் மறுக்கப்படும் ஆசைகள் முற்றிலுமாக மறைந்துவிடாமல் ‘இட்’ எனும் உணர்வு
நிலைக்குள் அடக்கப்படுகின்றன. குழந்தை இளம் பருவத்தை அடைந்து காதல் உறவு என்ற கட்டத்தை
அடையும் போது இவ்வாறு தள்ளப்பட்ட உணர்வுகள் மீண்டும் மேல்தளத்துக்கு வருகின்றன. இளைஞன்
தனக்கு குழந்தைகள் பெற்றுத் தரக்கூடிய பெண்ணை எதிர் நோக்குகிறான். இளம்பெண் தனக்குக்
குழந்தை தரக்கூடிய ஆணை எதிர் நோக்குகிறாள். இந்நிலைமை அவளைத் திருமணம், தாய்மை போன்ற
தளங்களுக்கு இட்டுச் செல்கிறது.’ (ப – 96, 97) இந்நிலையில்தான் ஆண்களும் பெண்களும்
உறவு நிலைக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்கின்றனர் என்ற பிராய்டின் விளக்கத்தை
இவ்வியல் கொண்டுள்ளது.
3.கிரீந்திரசேகர், போஸ்: இந்தியச் சூழலில் உளவியல்
ஆய்வு
இந்தியச் சூழலில் உளவியல் ஆய்வு எனும் தலைப்பின்
கீழ் இந்திய உளவியல் ஆய்வு அமைப்பைத் தோற்றுவித்த கிரீந்திரசேகர், போஸ் போன்றோர், பிராய்டின்
உளவியல் அடிப்படை இந்திய சூழலில் செயல்படுவதில்லை என்ற கருத்தினை முன்வைத்தனர். என்பது
குறித்து விளக்கப்பட்டுள்ளது. அதாவது “ஐரோப்பாவைப் போல இந்தியக் கலாச்சாரங்களில் பெண்மை
ஒதுக்கப்பட்ட ஒன்றாக இல்லை. பெண் தெய்வ வழிபாடு, வங்கத்தில் இன்றுமே உள்ளது. வங்கத்தில்
பெண்மை வணக்கத்துக்குரியதாய் வழிபாட்டுக்குரியதாய் உள்ளதால், பிராய்டு தன் நோயாளிகளிடம்
கண்டறிந்தது போன்ற பெண் மீதான குழம்பிய கண்ணோட்டங்கள் வங்கத்தைச் சார்ந்த ஆண்களுக்கு
இல்லை. தாய் மீது அவர்கள் கொள்ளும் ஆர்வம், பிராய்டு முன் வைப்பது போல பொறாமையிலோ,
வெறுப்பிலோ விளைவதில்லை. மாறாக இவ்வாறு நினைக்கும் ஆண்கள் பெண் தாய்வத்தின் சக்திக்கு
ஆட்பட விரும்புபவர்களாக, அதில் கரைந்து விட விழைபவர்களாகவே உள்ளனர். என்ற மாற்றுக்கருத்தை முன்வைத்தனர். இது ஆண், பெண்
ஆகிய இருவர்களுக்கிடையான பாலினப் பாகுபாடு என்பது உலகளாவிய அளவில் இருந்தாலும் நாட்டிற்குநாடு
சமூகத்திற்கு சமூகம் வேறுபடுவதனை வெளிப்படுத்துவதாக அமைகின்றது.
4.காத்தரீன் மேக்கினன்: அமெரிக்கப் பெண்ணியவாதி
மார்க்சியத்திற்கும் பெண்ணியத்திற்குமான
பொருத்தப்பாட்டினை காத்தரீன் மெக்கினன் எனும் அமெரிக்கப் பெண்ணியவாதியின் கருத்தின்
ஊடாக இவ்வியல் பின்வருமாறு விளக்குகிறது. ‘மார்க்ஸியத்திற்கு உழைப்பு என்பது எவ்வளவு
அடிப்படையோ அந்த அளவுக்குப் பாலியல் என்பது பெண்ணியத்துக்கு அடிப்படை. அதாவது உழைப்பு
என்பதும் பாலியல் என்பதும் ஒருவருக்குச் சொந்தமானதைக் குறிப்பதுமாகும். பலரின் உழைப்பை
சிலர் தங்கள் சுய லாபத்துக்காகச் சுரண்டுவதை மார்க்ஸியமும் ஒரு சாராரின் பாலியலாற்றலை
மற்றொரு சாரார் அடக்கியோடுக்கிச் சுரண்டுவதை பெண்ணியமும் விமர்சிக்கின்றன.
5.பெரியார்: இந்தியச் சூழலில் பாலினப் பாகுபாடு
“இந்தியச் சூழலில் பாலினம் பற்றி முன்வைக்கப்பட்ட
மிக முன்னேற்றகரமான கருத்தாக்கங்களில் ஒன்று ஈ.வே.ராமசாமி பெரியாருடையது என இந்நூல்
அவரின் கருத்துக்களை முன்வைக்கின்றது. உணர்வுகள் மனிதராகப் பிறந்த எவருக்கும் ஒன்றுதான்
என்பதை பெரியார் கூற்றின் வழி “கோபம், ஆணவம், தைரியம் என எல்லா மனிதப் பிரவிகளுக்கும்
பொதுவான குணங்கள்தான் இருக்கின்றன. இவை ஆண்களுக்கு மட்டும் உரித்தானவை அல்ல. ஆண்களைப்
போலவே இந்த உணர்ச்சிகள் யாவும் பெண்ணுக்கும் இருக்கின்றன.” (ப – 116) எனவும் “அழகு,
கற்பு, தாய்மை ஆகியன வெறும் கட்டுக்கதைகள்தான். இவற்றைப் பயன்படுத்தியே சமுதாயமானது,
பெண் ஆணிற்குக் கீழானவள், அவனுக்கு அடங்கிப்
போக வேண்டியவள், என்ற கருத்துக்களை அவள் மீது தினித்துள்ளது.” எனவும் மேலும் கற்பு
பற்றி விமர்சிக்கும் பெரியாரின் கருத்தாக “கற்பு நெறி தவறாத மனைவிக்கும், பாலியல் தொழில்
புரியும் தாசிக்கும் அடிப்படையில் வேறுபாடு கிடையாது. ஒருவர் வாழ்நாள் முழுவதும் ஒருவனுக்குப்
பாலியல் அடிமையாக இருப்பதை ஏற்கிறார். மற்றொருவர் பலருக்குத் தன் உடலை விற்க சம்மதிக்கிறார்.
என கற்பு என்ற கற்பனையை பெரியாரின் கருத்துக்கள் வழி இவ்வியல் விளக்குகிறது. மேலும்
“பிராமணன் – சூத்திரன் என்ற அமைப்புக்கும் பேதத்திற்கும் புருஷன் – பொண்டாட்டி என்ற விகிதத்துக்கும் எந்தவித வேறுபாடும் கிடையாது.
பெரும் பகுதி மக்களை சூத்திரனாக்க உடலுழைப்புக் காரனாக மாற்ற, எப்படிப் பார்ப்பனன்
சாத்திரங்கள் செய்தானோ அதைப் போலத்தான் பெண்களை அடிமையாக்க கலியாணம் என்ற முறையும்
ஏற்படுத்தப்பட்டது. (விடுதலை 28.08.1973)” (ப – 118) என சாதிய முறையிலான அடக்கு முறைக்கும்
திருமண முறையிலான அடக்கு முறைக்கும் வேறுபாடுகள்
ஒன்றுமில்லை. என்பது பெரியார் சிந்தனைகளின் வழி விளக்கப்பட்டுள்ளது.
6.1980 களில் பாலியலும் அடிமைத்தனமும்
பாலியல் வன்முறைகள் குறித்த விவாதங்கள்
1980 களில்தான், இந்தியச் சூழலில் பரவலாகத் தோற்றம் பெறத்துவங்கின என்பது குறித்து
இவ்வியல் விவாதிக்கின்றது. இத்தகைய விவாதம் இரு நிலைகளில் விளக்கப்பட்டுள்ளது. அதில்
“ஒன்று பாலியல் வன்முறைகளுக்கும் ஆண் மேலாதிக்கத்துக்கும் எதிர்ப்புக் காட்ட பெண் ஆதரவு
மையங்கள் தொடங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தின.” (ப – 124) மற்றொன்று “ஆண்கள் தங்கள் மானமும், தங்கள் சாதி
மானமும் தங்கள் பெண்களின் உடல் மீது செதுக்கப்பட்டிருப்பதாகக் கருதிக் கொண்டிருப்பதையும்,
ஒரு பெண்ணின் கற்பைக் காப்பதும், அழிப்பதும் சாதி மானத்தோடு தொடர்புடையதாகக் கருதுவதும்,
மற்றொரு சாதி மானத்தை வாங்குவதாகக் கருதிக்கொள்வதும் குறித்து பெண்ணியச் சிந்தனையாளர்கள்
சுட்டிக் காட்டினர். சாதிய மத ரீதியான அடையாளங்களைக் காப்பதும் பிற சாதிய மத ஆண்களைக்
கேவலப்படுத்துவதுமான இந்த மோதலில் பெண்ணின் உடல் களப்பொருளாவதை அவர்கள் கவனப்படுத்தினர்.
படிநிலைச் சமூகத்தில் தன் மேலாதிக்கத்தை நிலை நாட்டவும் அநீதியான சமூக அமைப்பைத் தக்க
வைத்துக் கொள்ளவும் துடிக்கும் ஆணின் வெறி பிடித்த அதிகார வெளிப்பாடாகவே இத்தகைய தாக்குதல்கள் அமைக்கின்றன என்பதை கிராமப்புற
ஏழை மக்கள், தலித் மக்கள், பழங்குடியினர், கலவரங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோருடன்
பணியாற்றி வந்த பெண்ணியவாதிகள் 1980 களில் தொடர்ந்து நடைபெற்ற சாதிய, மதக் கலவரங்களின்
பின்னணியில் இக்கருத்துக்களை வெளியிட்டனர்.” (ப – 125) என சாதிய மோதல்களுக்கு பெண்ணின்
உடல் எவ்வாறு களப்பொருளாக்கப்பட்டது என்பதை இவ்வியல் வரலாற்று நோக்கில் விளக்குகின்றது.
6. பாலினம் சார்ந்த பழக்க வழக்கங்கள், நடை முறைகள்
பாலினம் சார்ந்த பழக்க வழக்கங்கள், நடைமுறைகள்
எனும் இவ்வியலில் ஆண்மை, பெண்மை குறித்த கருத்தாக்கங்கள் எவ்வாறு நடைமுறை வாழ்வில்
செயல்படுத்தப்படுகின்றன என்பது போன்ற கருத்துக்கள் விவாதிக்கப்படுகின்றன. மேலும் அழகு
என்ற கருத்தாக்கம் ஆணாதிக்க மனநிலையில் எவ்வாறு தோற்றம் பெறுகிறது என்றும் அது பெண்களுக்கு
எவ்வாறு பொருத்தமுடையதாக கட்டமைக்கப்படுகிறது என்றும் இவ்வியலின் விவாதங்கள் தெளிவுறுத்துகின்றன.
அவற்றின் வளர்ச்சி நிலை பின்வருமாறு,
ஆண்மை, பெண்மை குறித்த விவாதங்களில் அழகு
என்பது பெண்மைக்கு உரியதாகவும் வீரம் என்பது ஆண்மைக்கு உரியதாகவும் சமூகத்தினர் ஏற்றுக்
கொண்டுள்ளனர் என்றும், சமூகத்தில் பெண்கள் என்பவர்கள் தங்கள் தோற்றத்தின் மீது எல்லையற்ற
அக்கரை செலுத்துவர் என்றும் ஆண்கள் என்பவர்கள் ஆதிக்கத்தின் அடிப்படையில் சாதிக்க விரும்புவர்
என்றும் விளக்கப்படுகிறது. பெண்ணின் அழகு என்பதையும் பெண்ணிற்கான குணங்களையும் பெண்களே
ஏற்றுக் கொண்டு அதனைப் பின்பற்றுபவர்களாக, அதனைத் தொடர்ந்து செயல்படுத்துபவர்களாக இருக்கின்றனர்.
என்பது ஆணாதிக்கச் சிந்தனைப் போக்கின் வெற்றியாக நிலை நாட்டப்படுகிறது. பெண்களின் அழகு
என்பது ஆண்களின் விருப்பத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது, என்ற புரிதலின்றி பெண்கள்
அதனை ஆராதிக்கின்றனர். தங்களுக்கென கட்டமைக்கப்பட்ட பாத்திரங்களை ஏற்று அவை சார்ந்த
கலாசார இலக்குகளை பெண்கள் தமதாக்கிக் கொள்கின்றனர். பெண்கள் எப்படிச் சிரிக்க வேண்டும்,
பேச வேண்டும், தலையைத் திருப்ப வேண்டும் என்று அனைத்திற்குமான முன்மாதிரிகளை ஊடகங்கள்
முன்வைக்கின்றன. அவையனைத்தும் ஆணின் விருப்பத்திற்கேற்பவே நடைபெறுகின்றன என்பன போன்ற
விவாதங்கள் இவ்வியலில் விளக்கப்பட்டுள்ளன.
இத்தகைய அழகு குறித்த மாயை, தந்தை வழி
ஆணாதிக்க சமூகத்தின் சில தேவைகளை ஒட்டியே ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் பெண்ணின் அழகு
என்பது ஆண்கள் அளிக்கின்ற அங்கீகாரத்தை அளவுகோலாகக் கொண்டுள்ளது என்றும் பெண்ணிற்கான அழகு என்பது ஆண் எதை விரும்புகிறானோ
அதைத் தருவதே தன் மகிழ்ச்சி, அதுவே தன் வாழ்க்கை என்ற அடிமைத்தனம் பெண்ணிற்குள் தோன்றுவதை பெண்ணியவாதிகள் எதிர்க்கின்றனர்
என்பதை இவ்வியல் விளக்குகிறது. பெண்ணின் உடல் சார்ந்த அழகு தவிர உள்ளம் சார்ந்த அழகையும்
ஆண் தீர்மானிக்கின்றான். ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது போல பெண்ணிற்கான
நடவடிக்கைகள், பழக்க வழக்கங்களை வரையறுப்பதன் வாயிலாக அகஅழகை வரையறுக்க முனைகின்றனர்.
‘அவ்வளவு அழகான பொண்ணு, ஆனால் ஏறெடுத்து யாரையும் பார்க்க மாட்டாள்’ என்ற சொல்லாடல்
பெண்ணின் புறத்தோற்றத்துடன் கூடிய அகத் தோற்றத்தினையும் வரையறுக்க முனைகிறது.
“ஆணின் பார்வையில் பெண்ணின் உருவாக்கம்
என்பது இன்பம் தரும் ஒன்றாக வரையறுக்கப்பட்டுள்ளது. பெண்ணைக் காதலியாய், மனைவியாய்,
குழந்தைகளின் தாயாய், அழகுப் பொருளாய், ஆண் எதிர் நோக்குகிறான். இத்தகைய ஒவ்வொரு ஆசைக்கும்
ஏற்ப பெண் தன் உடலையும் அழகையும் சீரமைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. பெரும்பாலான கலாச்சாரங்களில்
இந்த அழகின் இலக்கணம் இரு வேறு வெளிப்பாடுகளைக் கொண்டுள்ளதைக் காணலாம். குடும்ப விளக்கு
– விலைமகள்; மனைவி – வைப்பாட்டி; காதலி – தாசி; நல்ல பெண் – குடியைக் கெடுக்கும் பெண்
என்ற எதிர்நிலைகளினூடாகவே பெண்கள் அறியப்படுகின்றனர். கல்யாணம், தாய்மை, வீடு, குடும்பம்,
பாலுறவு என விதிக்கப்பட்ட செயல்பாடுகள் முதல் நிலை அழகு என்பதாகவும் களிப்பூட்டுவதாய்,
கிளுகிளுப்பானதாய், குடிகெடுப்பதாய், அழைப்பு விடுப்பதாய், மயக்கி மந்திரம் போடுவதாய்
உள்ள செயல்பாடுகள் அனைத்தும் இரண்டாவது நிலை அழகு என்பதாகவும் கருதபடுகின்றன.” (ப
– 147) எனும் இக்கருத்தாக்கங்களைத் தாங்கி இவ்வியல் விவாதிக்கப்பட்டுள்ளது.
“கலைகள், இலக்கியம், மதம் தொடர்பான கதைகள்,
ஓவியம், சிற்பம், நாடகங்களின், சினிமாக்களின் அடிப்படைக் கதைகள் என்று எல்லாவற்றிலும்
குடும்பப் பெண்மணி – மயக்கும் மோகினி என்ற இருவகை உருவகங்கள் காணப்படுகின்றன.” (ப
– 147) என்பது பெண்ணிற்கு விதிக்கப்பட்ட அழகு சமூக ஊடகங்களில் எவ்வாறு விளக்கப்பட்டு
வருகின்றது என்பது குறித்தும் இவ்வியல் விளக்குகிறது. சாதியத்தின் பெருமை நிலைநாட்டப்படுவதற்கு
எவ்வாறு பெண்ணின் கற்பு தொடர்புபடுத்தப் படுகிறதோ அதே போன்று குடும்பப் பெருமை நிலை
நாட்டப்படுவதற்கும் பெண்ணின் கற்பு ஆதாரமாகக் கருதப்படுகின்றது. “நம் நாட்டின் பல பகுதிகளிலும்
ஒரு நல்ல குடும்பம் என்பதற்கான வரைமுறை அந்தக் குடும்பத்திலுள்ள பெண் மாண்புடன் இருக்கிறாளா,
கற்புநிலை தவறாமல் இருக்கிறாளா என்பதைக் கொண்டுதான் தீர்மானிக்கப்படுகிறது. குடும்பம்
என்ற அமைப்பு நிலைக்க கற்புநிலை தவறாத மனைவி தேவைப்படுகிறாள்.” (ப – 148) என்ற கருத்து
நிலைப்பாடும் இவ்வியலின் வழி விவாதத்திற்குட்படுத்தப் படுகின்றது.
நிறைவுரை:
பாலினப் பாகுபாடும் சமூக அடையாளங்களும்
என்னும் தலைப்பின் கீழ் இந்நூலில் விளக்கப்பட்டுள்ள கருத்துக்களை ஒன்று திரட்டி நோக்குகின்ற
பொழுது இந்நூலானது மூன்று நிலைகளில் விவாதிக்கப்பட்டிருப்பதினை அறியமுடிகின்றது.
1. பாலினப் பாகுபாடு குறித்த பதிவுகளை பல்வேறு தளங்களிலிருந்து தொகுத்து உரைப்பதாக
முதல் நான்கு இயல்களும் விளக்கப்பட்டுள்ளன. அதாவது ஆண், பெண்ணிற்கான பொதுவான தன்மை
பற்றி விளக்குவதோடு மத ரீதியாகவும் மரபு ரீதியாகவும் சூழலுக்கு ஏற்ப பெண்மை குறித்த
கற்பிதங்கள் எவ்வாறு கையாளப்பட்டு வருகின்றன. என்பது குறித்த விளக்கங்களாகவே இவ்வியல்கள்
விளக்கப்பட்டுள்ளன. 2. வரலாற்று நோக்கில் ஒவ்வொரு கட்டத்திலும் பாலினப் பாகுபாடு குறித்த
பெண்ணிற்கு எதிரான, கருத்துக்களை எதிர்த்து பெண்ணியலாளர்கள் எதிர்ப்பு வாதங்களை முன்வைத்து
வந்துள்ளதனை விவாதிப்பதாக இவ்வியல் அமையப் பெற்றுள்ளது. 3. பாலினப் பாகுபாடு குறித்த
கருத்தியல்கள் வெறும் கருத்துக்களாக மட்டுமல்லாமல் நடைமுறைப் படுத்தப்பட்டதற்கான சாத்தியக்கூறுகளைத்
தாங்கி எவ்வாறு பெண்ணிற்கு எதிராகச் செயல்பட்டன என்பது குறித்து அவற்றின் பின்னணியோடு
நோக்குவது என்ற நிலையில் இந்நூல் முழுமை பெறுகிறது எனலாம்.
மேலும் இந்நூலினை விமர்சன நோக்கில் அணுகுகின்ற
பொழுது இரு பெண்ணியவாதிகளின் (நூலாசிரியர்களின்) கருத்தியல் விளக்கமாக அமையப்பெற்ற
இந்நூல் சான்றுகளை மதம் தொடர்பான தளங்களிலிருந்தும், தத்துவ அறிஞர்கள் சார்ந்தும்,
உளவியல் கோட்பாடுகள் சார்ந்து, சமூகப் போராளிகள் சார்ந்தும் பெண்ணியக் கருத்தாக்கம்
கொண்ட அறிஞர்களிடமிருந்தும் எடுத்தாளுகின்றது. அந்த அடிப்படையில் பெண்ணியம் குறித்த
விவாதத்தினை மிகவும் பரந்துபட்ட தளத்தில் விவாதிக்கின்ற ஒரு சிறந்த நூலாகவே இதனை அறியமுடிகின்றது.
ஆனால் ஆய்வு என்னும் நோக்கில் அணுகுகின்ற பொழுது நூலில் கையாளப்பட்டுள்ள சான்றுகள்
அனைத்தும் எங்கிருந்து எடுக்கப்பட்டவை, யாரால் கூறப்பட்டவை என்ற தகவல்கள் கூறப்பட்டிருக்கின்றனவே
தவிர அவற்றிற்கான முறையான நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதை அறியமுடிகின்றது.
இந்நிலையில் நூலில் கூறப்பட்ட கருத்துக்கள் எவ்வளவுதான் உண்மைத் தன்மை வாய்ந்ததாக இருப்பினும்
அதன் மீதான நம்பகத்தன்மை சந்தேகத்திற்கு இடமளிக்க ஏதுவாகின்றன. இதற்கு விதிவிளக்காக
பெரியாரின் கூற்றினைக் குறிப்பிடுகின்ற ஓரிடத்தில் மட்டும் பக்கம் 118 இல் அக்கூற்று
எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதற்கான சான்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நூலின் போக்கு, கருத்துக்கள் எடுத்தாளப்படும்
முறைமை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கின்ற பொழுது மார்க்சியக் கண்ணோட்டத்தின் ஊடாக
பாலினப் பாகுபாடு எனும் கருத்தாக்கம் விவாதிக்கப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது. ஆண்மை,
பெண்மை குறித்த தெளிவான விளக்கங்களைக் கொண்டுள்ள ஆசிரியர்கள் பாலினப் பாகுபாட்டோடு
சில இடங்களில் சாதியப் பாகுபாட்டையும் மார்க்சிய வர்க்க வேறுபாட்டினையும் ஒப்பிட்டுக்
காட்டியுள்ளனர். இத்தகைய ஒப்பீடு எந்த அளவிற்கு சரிவர பொருந்துகிறது என்பது சற்றே சிந்திக்க
வேண்டியதாக உள்ளது. சாதிய ஏற்றதாழ்வு என்பது ஒன்றுக்கொன்று புறந்தள்ளப்பட்ட, தீண்டத்தகாத
நிலையில் அடக்குமுறை செய்வதாகவும், ஆண் பெண் ஏற்றத் தாழ்வு என்பது ஒன்றோடு ஒன்று பிரிக்க
முடியாத அதிகாரத்தை நிலைநாட்டுகின்ற அடக்கு முறையாகவும் உள்ளது. எனவே சாதிய ஏற்றத்தாழ்வும்
ஆண் பெண் ஏற்றத் தாழ்வும் எதிர் நிலையில் செயல்படுவதாகவே அறியமுடிகிறது. அதேபோன்று
வர்க்க அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு என்பது மனித உழைப்பைச் சுரண்டி அதிகாரத்தை நிலைநாட்டுகின்ற
ஒன்றாகவும் ஆண் பெண் ஏற்றத் தாழ்வு என்பது சமூகக் கருத்தாக்கங்களின் ஊடாக ஆணின் அதிகாரத்தை
நிலைநாட்டுகின்ற ஒன்றாகவும் உள்ளது. இதனடிப்படையில் இவ்விரண்டிற்குமான போக்கு மாறுபட்ட
தளத்தில் இயங்குவதை அறியலாம். எனவே சாதிய பாகுபாட்டோடும் வர்க்க வேறுபாட்டோடும் பாலின
பாகுபாட்டை ஒப்பிட்டு நோக்குதல் பொது நிலையில் பொருந்தி வருவதாகத் தோன்றினாலும் அதன்
செயல்பாட்டுத் தளத்தில் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டே நிற்கின்றன.
நூலின் மொழிநடையினை நோக்குகின்ற பொழுது
ஒலி வடிவத்தில் பதிவு செய்யப்பட கருத்துக்களை யாரேனும் ஒருவர் தொகுத்து எழுதியிருக்கக்
கூடுமோ என்ற ஐயம் தோன்றவே செய்கின்றது. அதாவது ஒவ்வொரு இயலிலும் துணைத் தலைப்புகள்
இடப்பட்டிருக்கும் முறைகளும் ஒரு கருத்தினை விவாதித்துக் கொண்டிருக்கின்ற நிலையில்
பல்வேறு தளங்களுக்குப் பயணிக்கின்ற போக்கும் அவ்வாறு உணருவதற்குக் காரணமாக உள்ளன. இருப்பினும்
இவ்வையம் உறுதிப் படுத்தப்படாததாகும்.
நூலின் நோக்கம் குறித்து ஆசிரியர்கள் முதல்
பக்கத்திலும் பின்புற அட்டைப் படத்திலும் குறிப்பிட்டிருப்பது போல அதாவது “காலங்காலமாய்
இந்தப் பாலினப் பாகுபாடு முகத்தில் அறைந்து சொல்லப்படும் உண்மை. இந்தியாவில் மட்டுமில்லாமல்,
உலகளாவிய அளவில் அடிமைச் சமுதாயமாகவே இருத்தி வைக்கப்பட்டிருக்கும் பெண்ணினம். மாற்ற
முடியாத நியதியாக, மாறத் தயாராக இருந்தாலும் காலுக்குக் கீழே தள்ளி மிதிக்கத் தயாராய்
இருக்கும் ஆணினம். இதுதான் நியதி என்றே என்றைக்கும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும்
வறட்டுவாதம். இவற்றின் ஆணிவேரை அசைத்துப் பார்க்கும் முயற்சிதான் இந்நூல்”. என்று குறிப்பிடப்பட்டுள்ளதின்
அடிப்படையில் இம்முயற்சியானது நூலில் நிறைவேற்றப் பட்டிருப்பதாகவே உணர முடிகின்றது.
அதுவே இந்நூலின் வெற்றியாகிறது. மேலும் இந்நூலின் ஒட்டுமொத்தமான கருத்து என்ன என்பதை
விளங்கிக்கொள்ள முயலுகையில் பிரெஞ்ச் பெண்ணியவாதியான ‘இரண்டாம் பாலினம்’ என்ற நூலின்
ஆசிரியர் சீமொன் தி பொவார் அவர்களின் கூற்று நினைவிற்கு வருகின்றது. 'நாம் பெண்ணாகவோ
ஆணாகவோ பிறப்பதில்லை அப்படி ஆக்கப்படுகிறோம்’. என்பதை எடுத்துரைப்பதாகவே இந்நூலின்
மையக் கருத்தினை அறிய முடிகின்றது.