வியாழன், மே 07, 2020

ஜெயகாந்தனின் முன்னுரை இலக்கியம்

ஜெயகாந்தனின் முன்னுரை இலக்கியம்
ஆசிரியர்கள்:           பேராசிரியர் தமிழண்ணல், பேராசிரியர் ம.திருமலை
வெளியீடு:                மீனாட்சி புத்தக நிலையம்
முதல் பதிப்பு:          1977,              திருத்தப்பட்ட பதிப்பு:      2016.
நூலின் விலை:        100                 பக்கங்கள்:                            164
நூல் அறிமுகம்
            ஜெயகாந்தனின் முன்னுரை இலக்கியம் எனும் இந்நூல் பேராசிரியர் தமிழண்ணலிடம் தமிழ்ப் பல்கலைக் கழக முன்னைத் துணைவேந்தர் திருமலை அவர்கள் ஆய்வாளராக இருந்த பொழுது 1977இல் இருவரும் இணைந்து எழுதியதாகும். பல ஆண்டுகளுக்குப் பிறகு பேராசிரியர் திருமலை அவர்களால் திருத்தம் செய்யப்பட்டு 2016 இல் மறுபதிப்பு செய்யப்பட்டு நூல் வெளிவந்துள்ளது. முன்னுரை பற்றிய இலக்கிய விமர்சனம் செய்யும் நூல்களில் இந்நூல் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. இந்நூலுக்கு ஜெயகாந்தன் அவர்களே முன்னுரை வழங்கிச் சிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இரா. மோகன் அவர்கள் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ளார். நூல் முழுக்க நாவல் எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக வாசிப்புப் புரிதலுக்காக இம்மதிப்புரையில் புதினம் என்ற சொல் தவிர்க்கப்பட்டு நாவல் என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது.
பொருளடக்கம்
இந்நூல் ஆறு இயல்களாகப் பகுக்கப்பட்டு விளக்கப்பட்டுள்ளது அவை பின்வருமாறு,.    ஜெயகாந்தன் முன்னுரைகள் ஒரு வகை தொகை
  1. ஜெயகாந்தனின் முன்னுரை நோக்கம்
  2. வரலாற்றுக் குறிப்புகள்
  3. ஜெயகாந்தனின் இலக்கியக் கொள்கை
  4. ஜெயகாந்தனின் முன்னுரை உத்திகள்
  5. திறனாய்வுக்கு எதிர்வினை

இயல் 1. ஜெயகாந்தன் முன்னுரைகள் ஒரு வகை தொகை
          இலக்கியம் பற்றிப் பேசும் முன்னுரைகள், சமூகம் பற்றிப் பேசும் முன்னுரைகள், வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிட்டு எழுதப்பட்ட முன்னுரைகள், திரைப்படம் பற்றிக் குறிப்பிடும் முன்னுரைகள், காதல் பற்றி விளக்கும் முன்னுரைகள், கல்வி முறை பற்றி எழுதப்பட்ட முன்னுரை, அரசியல் பற்றி எழுதப்பட்ட முன்னுரை, விமர்சனம் பற்றி எழுதப்பட்டவை, கதையை விமரிசிக்கும் முன்னுரைகள், வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய முன்னுரைகள், எழுத்தாளன் பற்றி எழுதப்பட்டவை என இவ்வியலை நூலாசிரியர் வகைப்படுத்தி சான்றுகள் காட்டி விளக்கியுள்ளார்.
2. ஜெயகாந்தனின் முன்னுரை நோக்கம்
             ஜெயகாந்தனின் படைப்புகள் பலவும் வாசகர்கள் மத்தியில் மிகுந்த விமர்சனத்தைப் பெற்று விடுகின்றன. அது அவரது படைப்புக்களை ஏற்பாளர்கள் மத்தியிலிருந்தும் மறுப்பாளர்கள் மத்தியிலிருந்தும் எழும். அதுவே அனைவரையும் ஜெயகாந்தனைப் பற்றிப் படிக்கும்படி செய்தது என்றால் மிகையாகாது. இதை ஜெயகாந்தன் குறிப்பிடுகையில்நான் எதை எழுதினாலும் அதன் மூலம் ஒரு சலசலப்பு ஏற்படுவதே என்னுடைய இயல்பாய்ப் போயிற்று.” என்று கருனையினால் அல்ல நாவலிற்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இதனைச் சுட்டிக் காட்டும் நூலாசிரியர், “ஜெயகாந்தன் தன்னுடைய படைப்புக்களுக்கு வருகின்ற விமர்சனங்களுக்கு வளைந்து கொடுப்பவர் அல்லர். அவ்விமர்சனங்களுக்கு ஈடுகொடுப்பவர்என்கிறார். மேலும் ஜெயகாந்தன் எழுதும் விமர்சனங்கள் குறித்து குறிப்பிடும் நூலாசிரியர்இந்த விமர்சனங்களுக்கு அவர் விடையறுக்கிறாரே தவிர, அவ்விமர்சனங்களுக்கு ஏற்ப இவர் தன்னைத் திருத்திக் கொள்கிறாரா? மாற்றிக் கொள்கிறாரா? என்று வெளிப்படையாகத் தெரியவில்லை மேலும் மேலும் தனது கருத்தை நிலை நாட்டவே இவர் முயல்கிறார்.” என்கிறார். முன்னுரை பற்றி விளக்கும் நூலாசிரியர்ஒரு நூலில் முற்பகுதியில் தொடக்கத்தில் எழுதப்படுவது முன்னுரை எனலாம் என்கிறார். தமிழ் இலக்கண நூல்கள் இதனைப் பாயிரம் என்று குறிக்கின்றனர்.” என்கிறார்.
            நாவல்கள் படைக்கும் ஜெயகாந்தன் அவற்றிற்கு முன்னுரை எழுத வேண்டிய நோக்கத்தைக் குறிப்பிடுகின்ற பொழுதுநாவலை எழுதிய அதே சிரத்தையுடன் இந்த முன்னுரையையும் நான் எழுதுகிறேன்.” என்று குறிப்பிடுவதைச் சுட்டிக் காட்டுகின்றார். ஜெயகாந்தன் அவருடைய கதைகளில் நேரடியாக விளக்க முடியாத சில கருத்துக்களை விளக்கவே இவர் முன்னுரைகளை எழுதுகிறார். முன்னுரைகளில் சொல்லிய செய்திகளை அவர் கதைகளில் சொல்ல நேர்ந்தால் கதைகளின் வடிவம்  சிதையக்கூடும். இத்தகையக் குறைபாடுகளைத் தவிர்க்க வேண்டியும் கதைகளில் பிரச்சாரத் தன்மை மலிந்து விடாமலிருக்க வேண்டியும் ஜெயகாந்தன் தனது படைப்புக்களுக்கு முன்னுரைகளை எழுதுகின்றார் என்கிறார். அதனை பிரம்மோபதேசம் கதைக்கு எழுதப்பட்ட முன்னுரையிலிருந்து எடுத்துக் காட்டுகிறார்.  கதைகளில் சொல்ல முடியாதசொன்னால் கதைத் தன்மை குலைந்து போகக் கூடியஆனால் நான் கதை எழுதும் நோக்கம் வலுப்பெறச் சொல்லியே தீர வேண்டிய கதை பற்றிய கருத்துக்களைப் பேசுவதற்கு நூலின் முன்னுரை ஒரு சௌகரியமான தளம் என்பதால் இந்தச் சில பக்கங்களைப் பயன்படுத்திக் கொள்வது சமுதாயக் கண்ணோட்டத்துடன் இலக்கியப் பணி புரியும் என் போன்றவர்க்கு இன்றியமையாததாகும்.” என்பது குறிப்பிடத் தக்கது.
            முன்னுரை என்பது எது என்று கூறும் ஆசிரியர் ஜெயகாந்தனின் வரிகளையே சான்றுகாட்டுகின்றார். “முன்னுரை என்பது எழுதிய ஒன்றைப் பற்றி எழுதுவது.” (கைவிலங்கு) ஜெயகாந்தன் முன்னுரைகளைப் பொதுவாக வாசகர்களிடமிருந்து வருகின்ற விமர்சனங்களுக்குப் பதிலளிக்கின்ற பகுதியாகவும் பயன்படுத்திக் கொள்வதாகக் குறிப்பிடுகின்றார். இதனை சில நேரங்களில் சில மனிதர்கள் எனும் நாவலிற்கு எழுதிய முன்னுரையிலிருந்து அறிய முடிகிறது என்கிறார் ஆசிரியர். “உண்மையான இலக்கியம் அல்லது கதை படிக்கிற ஆர்வத்தோடு எழுதப்பட்ட கடிதங்களை மட்டும் பொருட்படுத்தி ஒரு கட்டுரையை எழுத வேண்டும் என்ற நோக்கத்தினால்இந்த முன்னுரையின் மூலம் அந்த வாசக நண்பர்களின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் அபிப்பிராயங்களுக்கும் விமர்சனங்களுக்கும் பதில் சொல்ல முயல்கிறேன்.” என்கிறார். ஜெயகாந்தனின் முன்னுரைகளில் அவருடைய கதைகள், கதாப்பாத்திரங்கள், அவை உருவாகின்ற சூழல் முதலியவை பற்றி விளக்குவதற்கு முன்னுரைகளைப் பயன்படுத்துகிறார்.
ஜெயகாந்தன் கதைப்பாத்திரங்கள் பற்றிக் குறிப்பிடுகையில்என் கதைகளில் வருகிற எல்லாப் பாத்திரங்களுமே ஒன்றைக் கவனியுங்கள். என் பாத்திரங்களில் யாருமே முழுக்க, முழுக்க நல்லவர்களுமில்லை கெட்டவர்களுமில்லைநான் தான். நான் போட்டுக் கொள்ளுகின்றவாழ்க்கையில் நான் சந்தித்த பிறர் மாதிரியானவேஷங்களே அவை.” என்பதைக் குறிப்பிடுகின்றார். ஜெய்காந்தன் தன்னுடைய வாசகர்களின் விமர்சனங்களுக்கு விடை கூறும் விதமாக முன்னுரைகள் எழுதினாலும் அதன் வழி அவர்களுக்கு நன்றி கூற மறக்கவில்லை. “என் திறமையைப் பாராட்டி எனது குறைகளை உணரச் செய்த நண்பர்களுக்கும் என் குறைகளை உணர்த்தி என் பலத்தை எனக்கு நினைவுபடுத்திய அன்பர்களுக்கும் இந்த முன்னுரையில் நான் நன்றி தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன்.” என்கிறார்.
3. வரலாற்றுக் குறிப்புகள்
          ஜெயகாந்தனின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் அவரது முன்னுரைகளில் இடம் பெற்றுள்ள தன்மையினை இவ்வியல் விளக்குகிறது. ஜெயகாந்தன் அவரது வாழ்வின் அனுபவங்களிலிருந்து கதைகளை எழுதுவதாகக் குறிப்பிடுகின்றார். மேலும் அவர் சந்திக்கின்ற பலர் இவருடைய கதைகளில் கதைமாந்தர்களாகின்றனர். “வாழ்க்கையில் நான் காண்கின்ற மனிதர்களும் விலங்குகளும் பறவைகளும் மலர்களும் மண்ணும் கடலும் வானும் வண்ணங்களும் ஓசைகளும் எல்லாமே எனக்குக் கதை சொல்லுகின்றன.” (நினைத்துப் பார்க்கிறேன்) உன்னைப்போல் ஒருவன் நாவலில் வரும் கதாப்பாத்திரமானசிட்டிஎன்பவனைப் பற்றிக் கூறும் ஜெயகாந்தன் அந்நாவலின் முன்னுரையில் “1949இல் நான் பதினைந்து வயதுச் சிறுவனாய் ஒருசோப்பு இங்க்பாக்டரியில் வேலை செய்து கொண்டிருந்த போது என்னோடு வேலை செய்து கொண்டிருந்த, என்னைவிடச் சற்றே இளையவனான, நான் மொட்டை என்று அன்புடன் அழைக்கும் எனது சகா ஒருவனின் கதை இது.” என்று குறிப்பிடுகின்றார்.
ஜெயகாந்தனுக்கும் பத்திரிக்கைகளுக்குமான தொடர்பு குறித்த அவரது வாழ்க்கை அனுபவங்களை முன்னுரைகளில் குறிப்பிட்டிருக்கின்றார். “நான் பத்து வருசமாகக் கதைகள் எழுதிய போதிலும் இப்பொழுது ஒரு நான்கைந்து வருஷமாகத் தான் எனக்கு மௌஸ்.” “இந்த மௌஸ் எனக்குப் பிறந்ததுசரஸ்வதிபத்திரிக்கையில். நான் எழுதும் போது, அந்தப் பத்திரிக்கை, நான் எனது மனசில் சிந்திப்பது போலெல்லாம்ரத்தமும் சதையுமாய்எழுத இடமளித்து, விளையாடத் தளமமைத்துத் தந்திருந்தது.” முழுக்க முழுக்க இலக்கிய வளர்ச்சியையே நோக்கமாகக் கொண்ட சரஸ்வதி பத்திரிகை ஜெயகாந்தனுக்கு உரிய இடம் தந்து அவரைப் பயன்படுத்திக் கொண்டு இலக்கிய வளர்ச்சிக்குத் துணையாக நின்றதை அவரது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் அடிப்படையில் வகைப்படுத்தி விளக்குகிறார் நூலாசிரியர்.
          ஏதாவது நிகழ்ச்சி, சூழலில் ஆகியவை ஒரு படைப்பாளியைப் பாதிக்கின்ற போது தான் ஒரு கதை உருவாகிறது. அவ்வாறு ஜெயகாந்தன் எழுதிய பிரளயம் என்ற நாவலின் தோற்றப் பின்புலம் குறித்து விளக்குகையில்பிரளயம், சென்னையில் ஒரு முறை வந்த வெள்ளத்தின் போது நிகழ்ந்த அலங்கோலங்களை, மனிதனின் சிறுமைகளை, ‘கொடை வள்ளல்களின் மான வெட்கமற்ற தற்பெருமைச் சவடால்தனங்களைக் கண்ட போது என் மனத்தில் எழுந்தது தான்…” (பிரளயம்) அதுபோல் கைவிலங்கு நாவல் உருவான சூழலையும் விளக்குகிறார். “ஜெயிலில் சில காலம் வாழ்ந்த என் நண்பரொருவர் அந்த ஜெயிலின் சூப்பிரண்டெண்டாக இருந்த ஒரு கொடுமைக்கார அதிகாரியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த பொழுதுபோக்குப் பேச்சிலிருந்து தான் இந்தக் கதை உருவாயிற்று.” என ஜெயகாந்தனின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் அவரது படைப்புகளோடு தொடர்புகொண்டுள்ள தன்மையினை அவரது முன்னுரைகள் வழி எடுத்துரைக்கின்றார் நூலாசிரியர்.
4. ஜெயகாந்தனின் இலக்கியக் கொள்கை
          ஜெயகாந்தன், இலக்கியம் என்பது என்ன என்பது குறித்துக் குறிப்பிடுகின்ற பொழுதுஒரு தேசத்தின், ஒரு நாகரிகத்தின், ஒரு காலத்தின், ஒரு வளர்ச்சியின், ஒரு வாழ்க்கையின் உரைகல் இலக்கியம்.” “நீங்கள் கதை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் அது காலத்தின், ஒரு வாழ்க்கையின் சாஸனம்.” என்பதை பாரீஸுக்குப் போ நாவலில் குறிப்பிடுகின்றார். மேலும் ஜெயகாந்தன் வழி அவர் விளக்குகின்ற இலக்கியக் கொள்கையினை இலக்கியப் பணி, முற்போக்கு இலக்கியம், இலக்கியத்திற்கான விமர்சனம், வாழ்க்கை குறித்த புரிதல், வாழ்க்கைச் சிக்கல்கள் எனப் பல நிலைகளில் விளக்குகின்றார்.
             சமூக விதிகளை மறுப்பதும் மாற்றுவதும் அதன் அநியாயமான தீர்ப்புகளைக் காலத்தின் முன்னே மறு பரிசீலனைக்கு வைப்பதும் இலக்கியத்தின் பணியாகிறது.” சமூகக் கட்டுப்பாடுகள் எனும் பெயரில் சமூகத்தில் நிகழும் அநீதிகளை விமர்சனம் செய்வது இலக்கியத்தின் பணியும் அதன் பயனும் ஆகிறது. என்பதினை ஜெயகாந்தனது முன்னுரைகளின் வழி நூலாசிரியர் எடுத்துக்காட்டி விளக்குகிறார். அதே போன்று முற்போக்கு இலக்கியம் என்பது யாது என்று விளக்கும் நூலாசிரியர்  முற்போக்கு என்பது வளர்ச்சி; வளர்ச்சியின் ஒரு கூறு என்று கொள்ளலாம். மனித சமூகத்தின் வளர்ச்சிக்குப் பாடுபடும் இலக்கியம், அதனை நோக்கமாகக் கொண்ட இலக்கியம் முற்போக்கு இலக்கியம் ஆகும்.” என்பதை முன்னுரைகள் வழி எடுத்துரைக்கின்றார்.  ஆழ்ந்து பார்க்கின்ற பக்குவம் பெற்றுவிட்டால் எல்லாவற்றுள்ளும் ஒரு மகத்துவம் துயிலுவதை, மறைந்திருப்பதைத் தரிசிக்க முடியும்.” என்பதை எடுத்துரைக்கின்றார்.
            வாழ்க்கை சிக்கல் மிகுந்ததுதான், கஷ்டங்கள் சூழ்ந்ததுதான்வாழ்கிறவன் எவனும் அதை மறக்க முயற்சி செய்யலாகாது. அதைப் புரிந்து கொள்ளவே கலையும் இலக்கியமும் பயன்படுதல் வேண்டும்.” என்ற புரிதலை ஜெயகாந்தனின் முன்னுரை இலக்கியம் நமக்கு விளங்குவதனை நூலாசிரியர் எடுத்துக் காட்டுகின்றார்.  எவ்வளவுதான் சிக்கல் மிகுந்திருந்த போதிலும், வாழ்க்கையின் ஒவ்வொரு பிரச்சனையிலும் முரண்பாடுகளே மலிந்திருப்பினும் மனித வாழ்க்கையின் பொதுவான கதி உன்னதமாய்த் தான் இருக்கிறது என்பது வாழ்க்கையை ஒரு வெறியோடு வாழ்ந்து அனுபவித்தவர்கள் மட்டுமே உணரத் தக்க ஒரு ஞானம்.” இது ஜெயகாந்தனின் பார்வையில் வாழ்க்கை குறித்த ஒரு விளக்கமாக அமைந்திருப்பதினை நூலாசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜெயகாந்தன் வாழ்க்கையை மிகவும் கூர்ந்து நோக்கி, பிறர் காணாதவற்றைகண்டும் கூறத் தயங்குவனவற்றைகாணத் தவறியவற்றைக் கண்டு கூறுகின்றார். இது தான் அவரது வெற்றியின் அடிப்படை. என ஜெயகாந்தனின் படைப்பிலக்கிய வெற்றியைக் குறித்த கருத்தினை நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.  
            ஜெயகாந்தனின் படைப்புக்களில் சங்க இலக்கியப் பண்புகளைக் காணுகின்றோம். என்கிறார். யாரேனும் சிலர் இவருடைய கதைகளை எடுத்து வைத்துக் கொண்டு, அவற்றிற்கு நிகரான சங்கப் பாடல்களையும் எடுத்துக் கொண்டு, சிறந்த ஒப்பீட்டுக் கட்டுரைகள் எழுதுவார்களாயின், தமிழ் முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்குமான நிலையை அறிய முடியும் என்கிறார் நூலாசிரியர்.     
            ஜெயகாந்தன் படைப்புக்களின் அடிப்படைக் கோட்பாட்டை அவரது முன்னுரைகளின் வழி விளக்கும் நூலாசிரியர்  படைப்பாளி தன் அனுபவத்தால் அறிந்ததைப் பிறரும் அரியும்படி சொல்கிறார். அப்படி அவனைச் சொல்லத் தூண்டுவது அவனுக்கிருக்கும் சமுதாயச் சிந்தனையே ஆகும். ஜெயகாந்தன் தமது சமுதாயத்தைப் பற்றி இடையறாது சிந்திக்கின்றார்”. என்பதனைக் குறிப்பிடுகின்றார். “என்னுடைய எழுத்து அனைத்துமே சமுதாயப் பிரச்சனைகளின் பாற்பட்டதன்றி வேறல்ல.” எனும் ஜெயகாந்தனின் கூற்றிலிருந்து அவரது படைப்பில் காணப்படுகின்ற சமூக சிந்தனை குறித்து நூலாசிரியர் விளக்குகின்றார். தமது படைப்புக்களிலும் மனித நேயத்தை மிகுதியாகப் பிரதிபலித்த எழுத்தாளர் அவரே! என்று கூறும் நூலாசிரியர், அவர்கள் உள்ளே இருக்கிறார்கள் எனும் கட்டுரைத் தொகுதியின் முன்னுரையினை எடுத்துக் காட்டுகின்றார்.  நான் சிறந்த எழுத்தாளனாவது என்னுடைய லட்சியமல்ல. நான் சிறந்த மனிதனாய் இருக்க வேண்டும். மிகுந்த மனிதாபிமான உணர்வுடன் எனக்குப் பிடித்த, எனக்குப் பிடிக்காத எல்லாரைப் பற்றியும் நான் இதில் எழுதியிருக்கிறேன்.” என்று கூறும் தன்மையிலிருந்து ஜெயகாந்தனின் இலக்கியக் கொள்கைக்கு அடிப்படையாக இருப்பது அவருடைய மனித நேயம் என்பதை நூலாசிரியர் வலியுறுத்துகின்றார்.
5. ஜெயகாந்தனின் முன்னுரை உத்திகள்
          ஜெயகாந்தன் எழுதிய முன்னுரைகளுக்கு அவர் மேற்கொண்ட உத்திகளை வகைப்படுத்தி விளக்குகிறது இவ்வியல். முன்னுரை இலக்கியத்தின் தொடக்கம், முடிவு, இடையே விளக்கப்படும் கருத்துக்களின் தன்மை, மேற்கோள் காட்டும் முறை, பயன்படுத்தும் சொல்லாட்சி அமைப்பு, பயன்படுத்தப்படும் உவமைகள் என இலக்கிய உத்திகளைப் பல வகைகளாக நூலாசிரியர் விளக்குகிறார். முன்னுரையின் தொடக்கம் அமைந்துள்ள விதத்தினை பகுத்துக் கூறும் ஆசிரியர் அதனை, நேரடித் தொடக்கம், பொதுத் தன்மையிலான தொடக்கம், வாசகர்களை முன்வைத்துத் தொடங்குதல், மேற்கோள் வைத்துத் தொடக்கம், சொற்பொருளுக்கான விளக்கத்தினை முன்வைத்துத் துவங்குதல், கடிதத்தை முன்வைத்துத் துவங்குதல் என வகைப்படுத்தி விளக்குகிறார். ஜெயகாந்தனின் முன்னுரை இலக்கியத்தின் முடிவு பொதுவாக பத்திரிக்கையாளர்களுக்கு, வாசகர்களுக்கு, பதிப்பகத்தாருக்கு எனப் பலருக்கும் நன்றியினைத் தெரிவிப்பதாக அமைவதனை விளக்குகின்றார்.
ஜெயகாந்தனின் நடை, உணர்ச்சி வாக்கியங்கள் மிகுந்தும் ஆங்கிலச் சொற்களும் வாக்கியங்களும் பரவலாகக் கலந்தும் முன்னுரை இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன என்பதை மொழிக் கலப்புக் கூறு எனும் தலைப்பின் கீழ் சான்று காட்டி விளக்குகின்றார் ஆசிரியர். மேலும் தொடரமைப்புகள், உவமைகள் போன்றவை குறித்தும் ஜெயகாந்தனின் முன்னுரைகளிலிருந்து சான்று காட்டுகின்றார். மேற்கோள் காட்டுதல் எனும் அடிப்படையில் முன்னுரைகளில் வருகின்ற மேற்கோள்களை எடுத்துக் கூறுகின்றார். “என்னுடைய கருத்தை அதன் மீது ஏற்றாமல் திருக்குறளைக் கூட என்னால் மேற்கோள் காட்ட முடியாது.” என்று கூறும் ஜெயகாந்தனின் நிலைப்பாட்டை நூலாசிரியர் எடுத்துரைக்கின்றார். இலக்கியம் சார்ந்தும் இலக்கணம் சார்ந்தும் புராண மரபுக் கதைகள் சார்ந்தும் மேற்கோள்களை ஜெயகாந்தன் பயன்படுத்துகின்ற விதத்தினை நூலாசிரியர் சான்றுகளுடன் எடுத்துரைக்கின்றார்.
6. திறனாய்வுக்கு எதிர்வினை
ஜெயகாந்தனின் படைப்புகளுக்கு எழுந்த விமர்சனங்களை விடவும் ஜெயகாந்தன் அவற்றிற்கு ஆற்றிய எதிர்வினைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். வாசகர்கள் பல்வேறு தரப்பட்டவர்களாக இருந்து அவரவர் தங்களது விருப்பப்படி கதை அமைப்பு இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் விமர்சனங்களை முன் வைப்பதும் அதற்கு ஜெயகாந்தன் தனக்கே உரிய தொனியில் விளக்கமளிப்பதும் முன்னுரை இலக்கியத்தில் முதன்மை பெறுகின்றன. நூலாசிரியர் நூலின் துவக்கத்தில் குறிப்பிட்டது போல ஜெயகாந்தன் முன்னுரைகள் பெரும்பாலானவை விமர்சகர்களுக்குப் பதிலுரைப்பனவாகவே உள்ளன என்கிறார். எப்படி விமர்சிக்க வேண்டும் என்பதிலே கூட இவருக்கு சில கருத்துக்கள் உண்டு, ‘உங்கள் கையில் விரிந்து கிடப்பது ஒரு புத்தகமன்று; எழுதியவனின் இதயம் என்பதை லட்சியப்படுத்தி இதயப் பூர்வமாய்க் களங்கமற்றுப் படியுங்கள் என்கிறார். வாழ்க்கை அழைக்கிறது என்னும் நாவலுக்கு எழுதிய முன்னுரையில் எதிர்வினையாற்றும் ஜெயகாந்தன் வாசகர்களாகிய விமர்சகர்களுக்குப் பின்வருமாறு கூறுகின்றார். “இதில் என்னென்ன இல்லை என்பதைப் பார்க்காமல், என்னென்ன இருக்கிறது எப்படி, எப்படி இருக்கிறது என்று கூறுவீர்களானால் அது எனது வளர்ச்சிக்கும், இலக்கிய வளர்ச்சிக்கும் உதவும் என்று நம்புகிறேன்.” என்கிறார். இதைத் தொடர்ந்து ஜெயகாந்தனை நோக்கி வரும் விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றும் தன்மையினை நூலாசிரியர் விளக்குகிறார்.  விமர்சகர்களைக் கடுமையாகக் கடிந்து கொண்டு எழுதவும் செய்கிறார் ஜெயகாந்தன். அதாவதுவிமர்சகர்கள் எனப்படும் பெரியார்கள் இருக்கிறார்களே, அவர்கள் யார் சொன்னாலும் விளங்கிக் கொள்ள மாட்டார்கள், எழுதியவனோ, படித்தவனோ எதாவது சொன்னால் கூட கேட்டுக் கொள்ள மாட்டார்கள். எப்பொழுதும் ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பதற்காகத்தான். அவர்கள் விமர்சகாவதாரம் எடுத்துள்ளார்கள். நயம்பட உரை என்ற பால பாடமே படிக்காத அல்லது அதை நடைமுறையில் ஏற்றுக் கொள்ளாத மேதாவிகள்.” என்கிறார். ஜெயகாந்தன் சமூகத்தில் கண்டதையும் கேட்டதையும் பற்றியே எழுதுவதாகவும் அது அசிங்கமாக இருக்குமேயானால் அதனால் எனக்குப் புகழோ பலியோ வந்து விடாது என்கிறார். எனது எழுத்துக்கள் அனைத்துமே சமூகப் பிரச்சனைகளைப் பற்றியவையே என்கிறார். ஜெயகாந்தனுடைய கதைகள் பாலுணர்வைப் பற்றியவை என்று விமர்சிக்கும் விமர்சகர்களுக்கு அவர் அவை பாலுணர்வைக் கிளறி விடுபவை அல்ல. மாறாக பாலுணர்ச்சிப் பிரச்சனைகள் பற்றியவை என்கிறார்.
ஜெயகாந்தன் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த பொழுது அவர் எழுதிய கதைகள் அனைவராலும் பாராட்டப் பெற்றது என்றும் கட்சியிலிருந்து வெளிவந்த பிறகு எழுதப்படுபவை அனைத்தும் விமர்சனத்துக்கு ஆளாகின்றன என்பதையும் விளக்குகிறார். இவருடைய கதைகளை புரிந்து கொள்ளாமல் விமர்சனம் செய்யும் விமர்சகர்களுக்கு இவரது எதிர்வினை சற்றே நக்கல் தொனியில் அமைவதினை அறிய முடிகின்றது என்பதற்கு நூலாசிரியர் பின்வரும் சான்றினை எடுத்துக் காட்டுகின்றார். “வாழ்க்கையை வாழ்க்கையாக வாழ்கிறவர்கள் கதையைக் கதையாகப் படிக்கலாம். கதைகளிலிருந்து வாழ்க்கையையும் புரிந்து கொள்ளலாம். வாழ்க்கையையே புரிந்து கொள்ள மறுக்கிறவர்கள் கதையையா புரிந்து கொள்ளப் போகிறார்கள்? புரிந்து கொள்ள மறுப்பவர்களைப் பற்றி நமக்குக் கவலையே இல்லை. இவர்கள் புரிந்து கொண்டவர்களைக் குழப்பாமல் இருந்தால் போதும்.” (சுய தரிசனம்) இத்தகைய விமர்சனங்களை எடுத்துக் கூறும் நூலாசிரியர் படைப்பாளியின் சிறப்பு, அவருடைய நுண்ணுணர்வில்தான் உள்ளது என்கிறார். எல்லோருக்கும் எல்லாமும் புரிந்து விடுவதில்லை. ஒரு படைப்பில் ஒருவருக்குப் புரிந்தது மற்றொருவருக்குப் புரிந்துவிடுவதில்லை. இது இலக்கியத்திற்கு மட்டுமல்ல கலைப் படைப்பு அனைத்திற்குமே பொருந்தும். “படைப்பு என்பது வாழ்க்கை பற்றிய திறனாய்வு; திறனாய்வு என்பது அப்படைப்புப் பற்றியது. வாழ்க்கையைக் காட்டும் கண்ணாடியே படைப்பு; அப்படைப்புக் காட்டும் கண்ணாடியாக முன்னிற்பதே திறனாய்வு. எனவே திறனாய்வு என்பது வளர்ந்து வரும் இலக்கியத்தை இனம் காட்டி, நடத்திச் செல்லும் தலைசிறந்த வழிகாட்டி. இவ்வுணர்வோடு திறனாளிகள்விமரிசகர்கள் செயற்படுவது இன்றியமையாதது. என்று திறனாய்வின் அவசியம் குறித்து விளக்கி ஜெயகாந்தனின் முன்னுரை இலக்கியத்தையும் திறனாய்வு செய்து விளக்கியுள்ளார் நூலாசிரியர்.
நிறைவுரை
ஜெயகாந்தனின் முன்னுரை இலக்கியம் எனும் இந்நூல் ஆறு இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் இயல் ஜெயகாந்தன் முன்னுரைகள் ஒரு வகை தொகை எனும் அடிப்படையில் பின்வரும் இயல்களை விளக்குவதற்கு தளம் அமைத்துக் கொடுக்கிறது. இலக்கியம் பற்றியது, வாழ்க்கை பற்றியது, சினிமா பற்றியதுஎன வகைப்படுத்தி அறிமுகப் படுத்தும் நோக்கில் இவ்வியல் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இயலான  ஜெயகாந்தனின்  முன்னுரை நோக்கம் எனும் இயலில் ஜெயகாந்தன் ஒவ்வொரு கதைக்கும் முன்னுரை எழுதுவதன் நோக்கம் விமர்சகர்களுக்கான பதிலை முன்வைப்பதோடு அனைவருக்கும் நன்றி தெரிவிக்கவே முன்னுரைகளை எழுதுகின்றார் என்பதை நூலாசிரியர் முன்வைக்கின்றார். மூன்றாவது இயலான வரலாற்றுக் குறிப்புகள் எனும் இயல் ஜெயகாந்தனின் வாழ்க்கை அனுபவங்களுக்கும் அவரது படைப்புகளுக்குமான தொடர்பை ஜெயகாந்தன் விளக்கியுள்ள நிலையினை தொகுத்து விளக்குகிறது. நான்காவது இயலான ஜெயகாந்தனின் இலக்கியக் கொள்கை எனும் இயல் ஜெயகாந்தன் எழுதிய முன்னுரைகள் வழி மனித நேயம் நிறைந்த படைப்புக்களை உருவாக்குவதே ஜெயகாந்தனின் அடிப்படை இலக்கியக் கொள்கை என்பதை கண்டறிந்து வெளிப்படுத்துகிறது. ஐந்தாவது இயலான ஜெயகாந்தனின் முன்னுரை உத்திகள் எனும் இயல் ஜெயகாந்தனின் முன்னுரைகள் எழுதப்பட்டுள்ள விதத்தினை உத்திகளின் அடிப்படையில் வகைப்படுத்தி ஜெயகாந்தனின் இலக்கியத் திறனை கண்டறிய முற்படுகிறது. இறுதியலாக அமைந்துள்ள திறனாய்வுக்கு எதிர்வினை எனும் இவ்வியல் ஜெயகாந்தனை விமர்சனம் செய்யும் பலருக்கும் அவர் எவ்வாறு எதிர்வினையாற்றினார் என்பதை விளக்குகிறது. நக்கலாகவும், கோபமுடனும், பெருந்தன்மையுடனும் விமர்சகர்களுக்கான எதிரிவினையாற்றும் ஜெயகாந்தனின் முன்னுரைகள் மிகவும் சிறந்த இலக்கிய நயம் வாய்ந்தவை என்பதை நூலாசிரியர் எடுத்துக் கூறுகின்றார்.
முன்னுரைகளும் இலக்கியமாகக் கருதப்பட்டு திறானாய்வு செய்யப்பட வேண்டும் என்பதற்கு இந்நூல் ஒரு முன்னோடி நூலாக விளங்குகிறது. எனெனில் படைப்பிலக்கியங்கள் பேசாத பல செய்திகளை முன்னுரைகள் சமூகத்திற்கு எடுத்துக் கூறுகின்றன. ஒரு படைப்பின் வளர்சிக்கும் வீழ்ச்சிக்கும் அந்நூலில் முன்னுரைகள் காரணமாக அமைவதும் உண்டு. இதனடிப்படையில் திறனாய்வு நூலாக அறியப்படும் ஜெயகாந்தனின் முன்னுரை இலக்கியம் எனும் இந்நூல் படைப்பு குறித்த விமர்சகர் பார்வையையும் படைப்பாளரின் பார்வையையும் இனைத்துக் காட்டும் பகுதியாக ஜெயகாந்தனின் முன்னுரைகள் விளங்குகின்றன என்பதை திறனறிந்து விளக்குகிறது.