புதினச் சுருக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதினச் சுருக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, மே 10, 2020

முன்னைப்போல - ஜெயகாந்தன்

          முன்னைப்போல, மகுடம் 1991.
மனோன்மனி, மாதவி இருவரும் சமூகச் சேவகிகளாக இருந்து வருகின்றனர். அதோடு மாதவி சேர்ந்து இயங்கி வரும் மகளிர் குழு ஒன்றில் தானும் சேர்ந்து சேவை செய்யும்படிக் கூறுகிறாள். ஆனால் மனோன்மனி எப்போதும் தனிமையையே விரும்புகிறாள் என்பதையும் உணர்கிறாள். அதற்கான காரணத்தை அறிய விரும்புகிறாள். மனோன்மனியின் தந்தை நாட்டுக்காக உழைத்து உயிர் நீத்தவர் ஆவார். அவர் இறந்த பிறகு தனித்து வாழ்ந்து வந்த போது காங்கிரஸ் கட்சியில் தொண்டனாக இருந்த அண்ணாமலை அறிமுகமானான். அறிமுகம் நாளடைவில் காதலானது. ஒருநாள் அண்ணாமலையின் தாத்தா இறந்துவிடவே அதற்கு ஊர் செல்ல வேண்டியிருப்பதால் திரும்பி வந்து திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்துவிட்டுச் செல்கிறான். போன இடத்தில் தாத்தாவின் விருப்பப்படி உறவுக்காரப் பெண் ஒருத்தியைத் திருமணம் செய்ய வேண்டிய நிலையில் அவளைத் திருமணம் செய்துகொள்கிறான். அந்தத் தொகுதியில் தேர்தலில் நின்று வெற்றியும் பெற்றுவிடுகிறான். அமைச்சராகிறான். மனோன்மணிக்கு வாக்குக் கூறிச் சென்றவன் திரும்பி வருவான் என்ற ஏக்கத்தில் காலத்தைக் கடத்துகிறாள். ஆண்டுகள் பல உருண்டோடின. ஒரு நாள் தன்னுடைய ஊரில் கட்சி ஒன்றில் அமைச்சர் ஒருவர் பேச இருப்பதை அறிந்து பார்க்கச் செல்கிறாள் மனோன்மணி. பேசுவது தன்னுடைய காதலன் என்பதை அறிந்து என்ன செய்வதென்று தெரியாமல், தன்னை ஏமாற்றி விட்டானே என்ற வருத்தத்துடன் வீடு திரும்புகிறாள். பேசி முடித்துவிட்டு மனோன்மணி வீட்டை நோக்கி வரும் அண்ணாமலை, நடந்த விசயங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறான். செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்கிறான். காதலித்துத் திருமணம் செய்து கொள்ளாததற்கு  பரிகாரமாக திருமணம் செய்து கொள்ளாத மனைவியாக வைத்துக் கொள்வதாகக் கூறுகிறான். கோபமடைந்த மணோன்மணி அவனை வீட்டை விட்டு வெளியேறும்படிக் கூறிவிடுகிறாள். வழக்கம்போல சமூகச் சேவகியாக செயல்படவேண்டும் என விரும்பி மாதவி கூறிய மகளிர் குழுவில் சேர்ந்து தொண்டாற்றத் துவங்குகிறாள். 

கையில் ஒரு விளக்கு - ஜெயகாந்தன்

          கையில் ஒரு விளக்கு, குங்குமச் சிமிழ் 1986.
கௌரியம்மாள் பள்ளித் தலைமையாசிரியாராக இருக்கின்ற பொழுது தேசிய நல்லாசிரியர் விருதினையும் பெறுகிறார். அதே பள்ளியில் படித்து இந்த நிலையை அடைந்ததை நினைத்துப் பார்க்கிறார். இவரிடம் படித்த பலரும் வெவ்வேறு இடங்களில் சிறந்து விளங்குகின்றனர். அவரை அனைவரும் அத்தை என்றே அழைத்து வருகின்றனர். தனக்கென்று யாரும் இல்லாத நிலையில் கௌரியம்மாள் தன்னுடைய அண்ணன் மகன் ராமதுரையின் வீட்டில் தங்குகிறார். ராமதுரையின் பிள்ளைகளிடம் தனது ஓய்வுக் காலத்தைக் கழித்து வருகின்றார். அந்த வீட்டில் வேலை செய்யும் மணி எனும் சிறுவன் மற்றவர்களுடன் சகஜமாகப் பழகுவது கௌரியம்மாளுக்குப் பிடிக்கவில்லை. அவன் அதிக உரிமை எடுத்துக் கொள்ளுகின்ற பொழுதெல்லாம் அவனைக் கண்டிக்கின்றார். இதை விரும்பாத ராமதுரை மணியை வேறு வீட்டிற்கு மாற்றுவதுதான் மணிக்கு நல்லது என்று நினைக்கின்றார். இதற்கிடையே மணியை தனது வீட்டில் கொண்டுவந்து விட்ட மெக்கானிக்கை சந்தித்து மணியைப் பற்றி விசாரிக்கின்ற பொழுது மணி மிகச் சிறந்த நடனக் கலைஞர்களின் மகன் எனவும் பெரிய செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதும் தெரியவருகிறது. விபத்தில் பெற்றோர் இறந்துவிடவே மணியும் அவனது தங்கையும் அநாதையாக்கப்பட்டனர் என்பதை அறிந்தார். இதனைத் தனது மனைவியிடமும் கௌரியம்மாளிடமும் கூறினார். இவ்வளவு படித்து பட்டம் வாங்கிய நாம் மணியைப் பற்றிப் புரிந்து கொள்ளாமல் தவறுதலாகப் புரிந்து கொண்டோமே என கௌரி வருத்தப்படுகிறார். இன்று முதல் மணியைத் தத்தெடுத்து படிக்க வைப்பது எனது கடமை என்று முடிவெடுக்கின்றார். கையில் ஒரு விளக்கை வைத்துக் கொண்டு அதனைப் பற்றிப் புரிந்து கொள்ளாமல் போய்விட்டோமே என்பது கண்டு வருத்தப்பட்டார் கௌரி. மணியின் தங்கையையும் தானே படிக்க வைக்கிறேன் என்று கூறவே அவள் ஒரு ஏழைக் குடும்பத்தில் வாழ்ந்தாலும் மிகவும் சந்தோசமாக வாழ்கிறாள் எனவே அவளை இங்கு அழைக்க வேண்டாம் என்று மணி கூறிவிடுகிறான். 

இன்னும் ஒரு பெண்ணின் கதை - ஜெயகாந்தன்

         இன்னும் ஒரு பெண்ணின் கதை ராணி, 1986
15 வயதிலேயே வீட்டை விட்டு ஓடிவந்து கன்னுசாமி படையாச்சியிடம் சேர்ந்தான் மாதவன். அவரிடமிருந்த லாரியில் வேலை செய்து இப்போது லாரி ஓட்டுனர் என்ற தகுதியைப் பெற்றுவிட்டான். அவளது நண்பன் சாமிநாதன் மதுக்கடை நடத்தி வருகிறான். அதில் தினமும் குடிப்பது வழக்கம். கன்னுசாமி கடையில் குடிக்க மாட்டார். அதனால் வீட்டிற்கு வாங்கி வந்து குடிப்பார். குடித்துவிட்டு தெருவில் மாதவன் கிடப்பதை விரும்பாத அவனுடைய மனைவி வெள்ளையம்மாள் கன்னுசாமி மாதிரி வீட்டில் வந்து குடிக்கும்படிக் கேட்டுக் கொண்டாள். அதன் விளைவாக மாதவனின் வற்புறுத்தலின் பேரில் தானும் குடிக்கக் கற்றுக் கொண்டாள். நெல்லிக் குப்பத்திலிருந்து ஓடிவந்து 10 வருஷமான மாதவனுக்கு கன்னுசாமி அனாதையாக இருந்த தனது தங்கை மகளான வெள்ளையம்மாளைத் திருமணம் முடித்தான். வெள்ளையம்மாளின் அழகு மாதவனுக்கு உண்மையாக இருந்தாள். வயதான காரணத்தால் லாரியின் அச்சு முறிந்து விட்டது. அதன் பாகங்களாகச் சுழற்றி விற்றுவிட்ட கன்னுசாமிக்கும் வயசானதால் அச்சு முறிந்து விட்டது. தன்னை நம்பியிருந்த குப்பம்மாவையும் நகரத்திற்கு செல்லும்படி கூறிவிட்டு தன்னிடம் இருப்பதை மாதவனுக்கு, குப்பமாளுக்கும் கொடுத்து விட்டு இறந்துவிட்டார். தொழிலுக்கு என்ன செய்வது என்றெண்ணுகையில் வடிவேலு என்பவர் வைத்திருந்த பலகாரக் கடை கிடைத்தது. வடிவேலுவின் மகன் கோயம்புத்தூரில் தங்கிவிட்டதால் இவரும் கடையை விட்டுவிட்டு மகனிடமே சென்றுவிட்டார். கடையில் வேலை செய்த அஞ்சலையும் அவளது குழந்தை அழகம்மாளும் அங்கேயே தங்கிவிட்டனர். தாலி கட்டிக் கொள்ளாமல் பிள்ளை பெற்றுக் கொண்ட அஞ்சலையைப் பார்த்தால் வெள்ளையம்மாளுக்கு அருவருப்பாகத்தான் வரும். இரயில் செல்வதற்காக கேட்டில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள், அந்த நேரத்தின் அலுப்பைப் போக்கிக் கொள்ள டீ, பலகாரம் சாப்பிடுவது வழக்கம். அதனால் மாதவனின் பலகார வியாபாரம் பெருகியது. கையில் பணமும் கழுத்தில் நகையும் சேர்ந்தது. பயணிகள் அதிக நேரம் காத்துக் கிடக்க வேண்டியதால் நேரம் விரயம் ஆவதைத் தடுக்க மேம்பாலம் கட்டும்பணி துவங்கியது. மேம்பாலம் கட்டிய பின்னர் நின்று பலகாரம் சாப்பிட்ட அனைவரும் நிற்காமல் சென்றனர். பலகார வியாபாரமும் முடங்கியது. இதனிடையே ஒருநாள் அஞ்சலை அழகம்மாளை விட்டுவிட்டு எங்கோ சென்றுவிட்டாள். அழகம்மாள் வெள்ளையம்மாளுக்கு ஒரு சுமையாகவே ஆகிவிட்டாள். சாப்பாட்டுக்கே கஷ்டப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். மாதவனின் நண்பன் சாமிநாத கிரமணியிடம் உதவி கேட்டுச் சென்றான் மாதவன். கடைகள் அதிகரித்து விட்டதனால் விலைவாசி உயர்ந்து விட்டது. எனவே இங்கு கடை போடுவது சாதாரண விஷயம் இல்லை. என்று கூறிய இரமணி மதுக்கடையின் முன்பாக மாரியின் மனைவி பார்வதியம்மாள் கடையை ஒரு வாரத்திற்குள் காலிசெய்து விடுவாள். அந்தக் கடையை உன் மனைவியை நடத்தச் சொல் என்றான். அதைக் கேட்டு மாதவனுக்கு கோபம் வந்தாலும் வெளிக்காட்ட முடியாமல் திரும்பி வந்துவிட்டான். அவளைப் போன்று உடலைக் காட்டிக் கொண்டு வாழ்வதை விட சாவதே மேல் என வெள்ளையம்மாளிடம் சொல்லிப் புலம்பினான் மாதவன். அவள் வழக்கமாகக் கூறுவது போல நீ சாரினா, நானும் சரிதான் என்றாள். அன்றிரவே இருவரும் விஷம் குடித்து இறந்துவிட்டனர். காலையில் எழுந்த அழகம்மாள் வயிற்றுப் பசியால் கதறி அழுதது கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இருவரும் இறந்துவிட்டதை உறுதி செய்தனர். பெற்றவள் எங்கோ ஓடிவிட்டாள், வளர்த்தவர்களோ இறந்துவிட்டார்கள் யாருமற்ற அனாதையாகி விட்டாள் அழகம்மாள்.

பகலில் ஒரு வேஷம் - ஜெயகாந்தன்

          பகலில் ஒரு வேஷம் இதயம், 1986
ஸ்ரீரங்கத்தில் பிறந்து வெளியுலகம் தெரியாத சீதா முதல் முறையாக ஊரைவிட்டு சென்னை செல்கிறாள். இனிமேல் ஊர் திரும்பப் போவதில்லை. இரயில் பயணம் புதிது, சென்னை புதிது, நகரமும் புதிது என இனிமேல் சீதாவின் வாழ்வே புதியதுதான். இரயில் செல்லுகின்ற பொழுது அவளது கடந்தகால ஸ்ரீரங்கத்து விளைவுகள் தொடரவே செய்தன. இளம் வயதில் தாயை இழந்துவிட்டவள். குமாஸ்தாவான அப்பாவின் வருமானத்தில் காலம் கழிந்தது. திறமைசாலி என்றாலும் அப்பாவின் வருமானத்தில் படிப்பினைத் தொடரமுடியவில்லை. அப்பாவின் சொல் கேட்கும் பிள்ளை என்பதால் அவரே பார்த்துத் திருமணம் முடித்த ஒருவனே அவளின் கணவன். அவன்மீது இறக்கப்பட்டு அங்கீகாரம் கொடுத்தார் அப்பா. ஆனால் அவன் வீட்டிலே நண்பர்களை அழைத்து குடிப்பதும் சீட்டாடுவதும் மனைவியை அதிகாரம் செய்வதும் வழக்கமாகக் கொண்டிருந்தான். அதோடு மட்டுமல்லாமல் தனது பதவி உயர்விற்காக மேலதிகாரி ஒருவனிடம் மனைவியை சல்லாபிக்கவும் பணித்தான். இத்தகைய கொடுமையிலிருந்து விடுபட நினைத்த சீதா இதழில் வெளியான ரிஷி எனும் எழுத்தாளரின் பேட்டியக் கண்டு எழுதிய கடிதத்திற்குப் பதில் வந்தது. அதை எடுத்துக் கொண்டு கணவனை வெறுத்து சென்னை சென்று கொண்டிருக்கிறாள். ஸ்டேஷன் வந்ததும் இந்திரா நகருக்கு ஆட்டோவில் சென்றாள். ரிஷியை சந்தித்ததில் அவரது கெஸ்ட் ஹௌசில் தங்கும் அனுமதி பெற்று அலுவலக வேலைகளைத் தொடங்கினாள். ரிஷியின் மனைவி இறந்துவிட்டாள். அவள் இருந்தபொழுது ரிஷி சொல்வதையெல்லாம் எழுதுவதையே தனது முழுநேரப் பணியாகக் கொண்டிருந்தாள். அவ்வாறு எழுதுவதற்காகவே சீதா அழைக்கப்பட்டிருந்தாள். ரிஷியின் அலுவலகக்தில் வேலை செய்பவர் வாசு. ரிஷியின் படைப்புக்களால் ஈர்க்கப்பட்டவர். மறுநாள் பொழுதில் மூவரும் கடற்கரை சொன்றனர். சீதா அப்பொழுதுதான் முதல் முறையாக கடலைப் பார்க்கிறாள். மூவரும் இலக்கியம், அரசியல், ஆன்மீகம், வாழ்க்கை என பல்வேறு செய்திகளைப் பற்றி விவாதித்துள்ளனர். ரிஷி ஒருமுறை தனது நாவலில் உங்களது மனைவியை, காதலியை, சகோதரியைத் தேட வேண்டுமென்றால் தலபாதாளத்தில் சென்று தேடுங்கள் என்றார். அதைப் படித்த வாசு அதலபாதாளத்தில் சென்று ஒரு பெண்ணைக் கண்டறிந்து திருமணம் செய்து விட்டார். அவள் குறிப்பிட்ட காலத்திற்குல்லாகவே யாருடனோ ஓடிவிட்டாள் என்ற செய்தியறிந்து காதல் என்பது வெறும் பொய் என்ற அவநம்பிக்கை கொள்ள ஆரம்பித்துவிட்டார் வாசு. சீதா வந்து சேர்ந்து ஐந்தாண்டுகளில் ஆண்டிற்கு ஒன்று வீதம் ஐந்து பகுதிகளாக அவரது வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டு இந்திய மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன. சீதாவும் தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த கசப்பான சம்பவங்களைப் பற்றி ரிஷியிடம் விளக்கினாள். நம்முடைய வாழ்வின் கசப்பான சம்பவங்கள் நாம் செய்த தப்பினாலோ நம்முடைய சூழல் காரணமாகவோ நேர்ந்திருக்கலாம். அதற்காக அப்படியே தங்கிவிடுவது முடிவாகாது என அவர் கூறிய வார்த்தைகள் சீதாவிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தின. அந்த நம்பிக்கை எழுத்தாளர் ரிஷியின் மீதான காதலை ஏற்படுத்தியது. வெளியுலகத்திற்கு நண்பர்களாகவும் தங்களுக்கு மட்டும் அறிந்த அந்தரங்கத்தோடும் வாழத் தொடங்கினார். ரிஷி தனது சொத்துக்கள் அனைத்தையும் சீதாவிற்கு எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார். அவர் மறைந்த பிறகு சீதாவிற்கு பொறுப்புகள் அதிகரிக்கவே செய்தன. ரிஷியின் வளர்ப்பில் வளர்ந்த சீதாவின் குணவியல்புகளால் ஈர்க்கப்பட வாசு தன் காதலை சீதாவிடம் வெளிப்படுத்தினார். இதனை ரிஷி அறிந்தால் மிகவும் வரவேற்பார் என்று சீதாவிற்குத் தெரியும் எனினும் சீதாவின் மனம் காதலின்பால் செல்வதைவிட அவர் விட்டுச் சென்ற பணிகளைச் செவ்வனே செய்வதில்தான் திருப்தியடைந்தது. எனவே வாசுவிடம் நாம் நல்ல நண்பர்களாகவே இருப்போம் என்ற தனது விருப்பத்தை சீதா தெரிவித்துவிட்டாள். வாசுவும் அதற்காக மரியாதையாளித்தான்.
(ரிஷி எழுதிய நாவல்களில் விவாதிக்கப்பட்டுள்ள வாழ்க்கை, காதல், திருமணம், வேலை முதலியவை குறித்து உணர்ந்த இளைஞர் பலர் திருமணம், வேலை என அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு தனியாக வாழ்கின்றனர். இப்பகுதி வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்து, அந்த அக்காவைத் தேடி என்ற இரு குறும்புதினங்களையும் இணைத்துப் பேசுகிறது. பைரவி, மாலா, மிஸ்.ஜே, கண்ணன், சுரேஷ், ரவி, கோபால், ராஜினா, வாணி போன்றோர் இவ்வாறு வாழ்ந்து வருகின்றனர்.)

அந்த அக்காவைத் தேடி - ஜெயகாந்தன்

         அந்த அக்காவைத் தேடி குங்குமச் சிமிழ், 1985
(‘நம்ப மாட்டேளேகுறும்புதினத்தின் தொடர்ச்சியாகவும் வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்துகுறும்புதினத்தையும் தொடர்புபடுத்தி எழுதப்பட்டுள்ளது.)
(நம்ப மாட்டேளே கதையினை சுருக்கமாக அறிமுகம் செய்து விட்டு பின்னர் இக்கதையைத் தொடங்குகிறார்.) மணி மொரிசியசில் வேலை கிடைத்து 5 ஆண்டு ஒப்பந்தத்தில் சென்றுவிட்டார். நாங்கள் ஒன்றும் பிரிவதற்காக வருந்தும் காதலர்கள் இல்லை. மணி சென்ற பின்பு ஒரு வெறுமை இருந்தாலும் அது பெரிதும் என்னைக் கஷ்டப்படுத்தவில்லை. கடிதத்தின் வழி தொடர்பு கொண்டோம். திருமணம், சடங்குமுறை இல்லற வாழ்க்கை குறித்து இருவருமே ஒருமித்த கருத்துக்களே கொண்டிருந்தோம். பெண்கள் அடிமைகளாக இருப்பதை அவர் விரும்புவதில்லை. ஒரு நாள் எதேர்ச்சையாக அப்பாவின் டைரியை பார்த்த பொழுது ஒரு போட்டோவைப் பார்த்தேன். அவள் பெயர் ஜானகி (அக்கா) பெரியப்பாவின் மகள். என்னைப் போல மற்றவர்களும் ஞாபகம் வைத்திருப்பார்களா என்பதை அறிய அனைவரிடமும் காட்டினேன். அதைப்பார்த்த கிச்சு இது நாடகத்தில் வருகிற மாலா மாதிரியே இருக்கு என்றதும் அவர்களாகத்தான் இருக்கும் என மாலாவைத் தேடிச் சந்தித்தேன். அவள் கூறியபடி அவள் இருக்கிற இடத்திற்கும் சென்றேன். நீண்ட உரையாடலுக்குப் பின் என் விருப்பப்படி வீட்டிற்கு வர சம்மதம் தெரிவித்தாள். வீட்டில் அணைவரும் அன்புடன் அவளை வரவேற்றனர். நான் மணி பற்றி அவளிடம் கூறினேன். அதற்கு அவள் மணியை தனக்கும் தெரியும் என்றாள். இருப்பினும் எங்களுடைய கொள்கையில் உடன்பாடு இல்லாதவர் என்றாள். எங்கள் நண்பர்கள் குழுவின் அனைவரும் வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள். சமூகச் சீர்கேடுகளை அகற்றுவதற்காகப் போராடி வருகிறோம். இவ்வாறான எங்களது வாழ்வைத் தொடங்கி வைத்தவள் பைரவிஎன்பவள்தான். மேலும் ரவி, சுரேஷ், கோபால், கண்ணன், மணி எங்கள் கொள்கையோடு உடன்படாதவர் என்றாலும் மிகவும் நல்லவர். உன் வாழ்வு சிறப்பாக இருக்கும் என்று வாழ்த்து தெரிவித்தாள். டிவியில் Impossible dream எனும் படம் ஓடுகிறது. இதில் பெண் நாள் முழுக்க வேலை செய்கிறாள். வீட்டு வேலை, அலுவலக வேலை என வேலை தினமும் தொடர்கிறது. ஒரு நாள் தூங்குகையில் கனவு காண்கிறாள். அதில் அவருடைய வேலைகளை அவளுடைய கணவனும் குழந்தைகளும் பகிர்ந்து கொள்கின்றனர். அதனால் அவள் மிகவும் சந்தோமாக இருக்கிறாள். விடிந்தவுடன் தூக்கம் களைகிறது. அதோடு காணவும் களைந்து நிஜ வாழ்வுக்கு திரும்புகிறாள். மீண்டும் அதே வேலைப் பலுக்கள் அவளைத் துரத்துகின்றன. இதைக் கண்டு ஆண்கள் இவ்வாறு ஏன் இருக்கின்றனர் என நான் புலம்பவே ஆரம்பித்து விட்டேன். மாலாவை பற்றியும் அவர்களின் நட்பைப் பற்றியும் மணி அவர்களுக்கு விரிவாகக் கடிதம் எழுதினேன். அவரும் மகிழ்ந்தார். அதனைத் தொடர்ந்து மாலாவின் நண்பர்கள் பலரும் எனக்கும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். மணியிடமிருந்து வந்த கடிதம் ஒன்றை கிச்சு என்னிடம் கொடுத்தான். அதில் மொரீசியசில் நான் பெரிய வேளையில் இருக்கிறேன். எனக்குக் கீழ் பலரும் வேலை செய்கின்றனர். ஆகையால் நீ வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. உன் கேட்டரிங் வேலையை விட்டு வீடு. திருமணம் முடிந்ததும். நீ இங்கு வந்துவிடலாம்.இதைக் கேட்டதும் அம்மா, அக்கா, கிச்சு அனைவரும் மகிழ்ந்தனர். ஆனால் எனக்கு அது மகிழ்ச்சி தரவில்லை. எல்லா ஆண்களும் இப்படித்தான் என்ற முடிவில் தங்களுடைய கருத்து எனக்கு உடன்பாடில்லை எனவும் வேறு பெண் பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றும் கூறி கடிதம் எழுதிவிட்டேன். அம்மா எவ்வளவோ தடுத்தாள். ஆனால் என் மனம் ஒப்புதல் அளிக்கவில்லை. யார் என்ன சொன்னாலும் உன் மனதிற்கு சரி என்று படுவதை துணிந்து செய்என்று அப்பா கூறியவைதான் மனதிலிருக்கின்றன. சமூகத்தோடு சிக்கிக் கொண்டு வாழும் இவர்களுடன் வாழ்வதை விட சமூகக் கட்டுக்களிலிருந்து விடுபட்டு வாழும் மாலா அக்காவுடன் செல்வது என்று தீர்மானித்தேன். அவர்களின் கொள்கைப்படி சேர்ந்து வாழ்வதற்கு என் வேலை தடையாக இருக்குமெனில் அதை விட்டுவிடுவது என்று தீர்மானித்து விட்டேன். நான் எங்கும் ஓடிப்போகப் போவதில்லை. ஒரு அக்காவிடமிருந்து இன்னொரு அக்காவைத் தேடித்தானே செல்கிறேன்.

வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்து - ஜெயகாந்தன்

          வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்து மேகலா, 1985
பைரவி ராகம் பிடிக்கும் எனபதற்காக அம்மா எனக்கு இப்பெயர் சூட்டினாள். அது போலத்தான் வசந்தாவின் பெயரும். அப்பா பெரிய கம்பெனியில் அக்கவுண்டண்ட். அம்மாவிற்கு நல்ல பிள்ளை என்றாள் அது வசந்தாதான். அப்பா என்னுடைய கட்சிதான் என்றாலும், நான் வேலை செல்லவில்லை என்ற வருத்தம் அவருக்கு. பெண் உரிமை பற்றி அப்பா விரிவாகப் பேசுவார். அப்பா என்னுடைய கருத்திற்கு உடன்படுவார். ஆனாலும் சில நேரங்களில் எதிரிப்பு தெரிவிப்பார். எனது நண்பர்கள் குழு ஆண், பெண், பாரபட்சமற்றது. நாங்கள் இணைந்து பல விஷயங்கள் பற்றி விவாதிப்போம் நான் படிப்பை முடித்ததும் வேலைக்குச் செல்லவில்லை என்பது அப்பாவின் வருத்தம். வேலைக்குச் செல்லவில்லை, வெட்டியாக நண்பர்களுடன் ஊர் சுற்றுகிறேன். குறிப்பாக ஆண்களுடன் சுற்றுகிறேன் என்ற தொடர் குற்றச்சாட்டு வசந்தா எனக்கு எதிர்மாறானவள். அவளைத்தான் உதாரணம் காட்டுவர். எனது நண்பர் குழுவில் சுரேஷ் பள்ளிப் பருவத்திலிருந்து எனது நண்பன். அவனுடன் வெளியில் செல்வதை அவர்கள் விரும்பவில்லை. அப்படித்தான் ஒரு நாள் நண்பர்கள் கூட்டத்திற்காக கிளம்புகின்ற பொழுது பிரச்சினை கிளம்பியது. சுரேசுடன் செல்லக்கூடாது என தடுத்தனர். சுரேஷ் வந்தவுடன் அவனை அம்மா திட்டிவிட்டாள். நான் வீட்டை விட்டே கிளம்பி விடுவதாகக் கூறிவிட்டு அவனுடன் சென்றுவிட்டேன். அன்றைய நண்பர்கள் கூட்டத்தில் நான் வாணியின் வீட்டில் தங்குவதென்று முடிவெடுக்கப்பட்டது. மேலும் வாடகைக்குத் தனி வீடு ஒன்று எடுத்து அனைவரும் தங்குவது என்று தீர்மானித்தோம். ஒரு சில தினங்களில் வீடும் தயாராகியது. புது வீடு வந்து ஓராண்டு வந்துவிட்டது. ரோஜா செடி வளர்ப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம். வீட்டில் வளர்த்த செடி எண்ணானது என்று தெரியவில்லை. அதைப் பறித்து வர வீடுவரை சென்றேன். அவர்கள் குடும்பத்தோடு வேறு வீட்டிற்குச் சென்றுவிட்டனர் என்பது பக்கத்து வீட்டு மாமி சீதாலெட்சுமி கூறி அறிந்து கொண்டேன். என் விருப்பத்தை ஏற்று சுரேஷ் அவனுடைய வீட்டிலிருந்து ரோஜா செடிகளைக் கொண்டுவந்தான். அவன் வரைந்த ஓவியங்களையும் கொண்டு வந்திருந்தான். எங்கள் குழுவில் இன்னும் ஒரு சில நண்பர்கள் இணைந்தனர். அதில் கண்ணன் என்பவனும் ஒருவன். அவன் அடிக்கடி வீட்டிற்கு வருவான். நிறைய பேசுவான். அதற்குக் காரணம் அவனுக்கு என்மீது விருப்பம் இருக்கிறது அதுதான். அவன் விருப்பத்தை அறிந்து, நம் கொள்கைக்கு புறம்பானது என்று கூறி விட்டேன். அதோடு என் தங்கையைத் திருமணம் செய்து கொள்ளும்படி சிபாரிசு செய்தேன். அவனும் பெண்கேட்டுவிட்டு வந்தபிறகு, தங்களுக்கு ஒரு மகள்தான் என்று அவர்கள் கூறியது கேட்டு வியந்தேன். ஒரு நாள் அவளை எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தான். அவள் என்னைக் கண்டதும் குற்ற உணர்ச்சியால் வந்த வழியாகவே திரும்பி ஓடி விட்டாள். அன்று அவருக்காக ஏற்பாடு செய்த விருந்தில் நான் கண்ணனைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்தேன். அனைவரும் திகைத்தனர். அனைவருக்கும் புரியும்படி 30 வயதில்தான் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்றேன். யாருடைய 30 வயதில் என்ற வினாவும் எழவே செய்தது.

நம்ப மாட்டேளே - ஜெயகாந்தன்

          நம்ப மாட்டேளே மேகலா, 1984
கதாப்பாத்திரங்களின் பெயர்கள் குறிப்பிடவில்லை. கதைத் தலைவியின் கூற்றாக கதை அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறே இக்கதைச் சுருக்கமும் அமைகின்றது.) சின்ன விஷயங்கள் என்று எதையும் ஏளனமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதுவே பெரிய பிரச்சனையாகவும் மாறலாம் என்று அப்பா அடிக்கடி சொல்லுவார். அப்பாவிற்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்றாலும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார். அம்மா முழுநேர கடவுள் நம்பிக்கை உடையவர். அக்கா பேங்கில் வேலை செய்கிறாள். நல்ல சம்பளம், கல்யாணம் என்ற பெயரில் ஒருவனிடம் அடிமைப்பட முடியாது என்று திருமணத்தை விட்டாள். சின்ன அக்கா திருமணம் செய்து அவதிப்படுவது கண்டு ஒருவேளை அவள் எச்சரிக்கையாயிருக்கலாம். நான் திருமணம் வேண்டாம் என்று சொல்லவில்லை அதற்காக அடிமையாய் வாழவும் தயாராயில்லை. அப்பா இறந்த பிறகு வீடு முற்றிலும் மாறிவிட்டது. கேட்க ஆலில்லாமல் கிச்சு (தம்பி) படிப்பை நிறுத்திவிட்டான். சின்ன அக்காவை பார்க்க யாரும் செல்வதில்லை. நான் வீட்டிலிருப்பதையும் அக்கா ஜாடமாடையாக குத்திக்காட்ட ஆரம்பித்துவிட்டாள். ஹிந்தி படிக்கத் தொடங்கினேன். படித்தவுடன் டியூஷன் எடுத்ததில் மாதம் 50 ரூபாய் கிட்டியது. முதல் மாதச் சம்பளத்தில் எனது ஹிந்தி சாருக்கு சின்ன ட்ரீட் (டீ, சமோசா). அது நான்வெஜ் கடை என்பதால் நானும் அவருடன் சேர்ந்து நான்வெஜ் சாப்பிட்டதாக கிச்சு வீட்டில் கூறிவிட்டான். நான் சாப்பிடவில்லை என்றால் யாரும் நம்புவதாயில்லை. நானும் அவர்கள் விருப்பத்திற்கே விட்டுவிட்டேன். எனது சமைக்கும் ஆர்வத்தைப் பயன்படுத்தி கேட்டரிங் படித்தேன். தற்பொழுது அசைவ சமையலில் வல்லுனராகவும் மாறிவிட்டேன். பிரபலமாகிவிட்டேன். அக்காவுக்கு நிகரான சம்பளமும் பெறத் தொடங்கினேன். எல்லோரும் என்னை நான்வெஜ் சாப்பிடுகிறவள் என்றே கருதத் துவங்கினர். ஆனால் நான் சைவம் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. நீண்ட நாட்களுக்குப் பிறகு சின்ன அக்காவைப் பார்க்கச் சென்றேன். அவள் உடல் நிலை சரியில்லாமல் இருந்தாள். அவளுடைய மாமியார் அவளை கொடுமைப்படுத்துகிறார். கணவனோ சுமையாகக் கருதுகிறார். அவர் இரண்டாவது மனைவி கட்டிக் கொள்ள அக்கா தடையாக இருக்கிறாளாம். இந்தக் கொடுமைகளைக் கேட்டு நான் வீடு திரும்பிய மூன்றாம் நாள் அக்கா இறந்து விட்டதாகச் செய்தியும் வந்தது. அம்மா எங்கோ ஒரு கோயிலுக்குச் சென்ற பொழுது அவருடைய தோழி செல்லம் என்பவளைச் சந்தித்தாளாம். அவருடைய மகனின் பெயர் மணி. அவன் நான்வெஜ் சாப்பிடுகிறவனாம். ஆனால் பிராமண வீட்டில் நான்வெஜ் சாப்பிடுகிற பெண்ணை எவ்வாறு கண்டிபிடிப்பது? என்று அம்மாவிடம் கேட்டாளாம் அவன் எனக்குப் பொருத்தமாக இருப்பாள் என அம்மா சிபாரிசு செய்தாள். சாப்பிடுவதை வைத்துப் பொருத்தம் பார்க்கும் இவர்களை நினைத்தால் சிரிப்பாகத்தான் வந்தது. அவனிடம் தனியாக பேசிய பிறகே சம்மதம் தெரிவிப்பேன் என்றேன். அக்காவும் அதற்கு ஆதரவு தெரிவித்தாள். நானும் திருமணம் செய்திருக்கலாமோ என அக்கா ஏங்குகிறாள் என்பதை என்னால் உணர முடிந்தது. நான் நன்றாக ஸ்கூட்டர் ட்டக் கற்றுக் கொண்டு விட்டேன். மணி என் வீட்டிற்கு வந்தபோது அனைவரும் நான் நான்வெஜ் சாப்பிடுபவள் என்றே அறிமுகம் செய்து வைத்தனர். ஆனால் நான் அன்று அனைவரின் முன்பாகவும் யாரும் அறியாத உண்மையாகிய சைவ உணவு சாப்பிடுபவள் என்பதைக் கூறினேன். அக்கா என்னைத் தட்டிக் கொடுத்து என்னதான் இருந்தாலும் கலாச்சாரம் சார்ந்த விஷயங்கள் தலைமுறை தலைமுறையாக மாறுவதில்லை. அவை மேலும் வலுப்பெறவே செய்கின்றன என்றாள். அதற்கு ஒப்புதல் தெரிவிக்கின்ற விதமாக மணியும் அசைவம், சைவம் என்பதெல்லாம் அவரவர்களின் விருப்பத்தினைப் பொருத்தது. இது நல்லது, இது கேட்டது என்று எதையும் கூறிவிட முடியாது எனக்கூறி திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தார். நானும் அக்காவும் அடுத்தவர்கள் உணவுப் பழக்கத்தில் நாம் தலையிடுவது நாகரீகம் அல்ல என்று கூறினோம். அதை அவரும் ஏற்றுக் கொண்டார். உணவு விஷயத்தில் மனிதர் உண்ணுகிற எல்லா உணவு வகைகளும் எனக்கு உகந்ததே.என்று கூறிய அப்பாவின் நினைவுகளை நினைத்துப் பார்க்கிறேன்.

கழுத்தில் விழுந்த மாலை - ஜெயகாந்தன்

           கழுத்தில் விழுந்த மாலை குங்குமச் சிமிழ், 1984
சங்கரபுரத்தில் உள்ள சங்கரலிங்கேசுவரர் ஆலயத் திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மடங்களில் பரமேஸ்வரனும் பார்வதியுமாக பிராமணக் குழந்தைகள் விளையாடுவது போல ஜெயலெட்சுமியும் ஜெயராமனும் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து அப்பையாக் குருக்கள் அவர்களை விசாரிக்க, “நான் ஹெட்மாஸ்டர் சபேசய்யர் மகள், அவன் லோக்கநாத அய்யரின் மகன் என அறிமுகம் செய்கிறாள் ஜெயலெட்சுமி இவ்விருவரின் ஒற்றுமையைப் பார்த்து இவர்கள் இணைந்தால் நன்றாக இருக்குமே என நினைக்காதவர் ல்லை. இச்செய்தி கேட்டு லோகநாத அய்யர் ஜெயராமன் ஜேஜே சுவாமிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டானாகையால் அவனுக்குத் திருமணம் நடைபெறாது என்கிறார். சிறுபருவத்தில் சுவாமிகள் பற்றி அறியாத இருவரும் அதனை விளையாட்டாக எடுத்துக் கொண்டனர். குறிப்பிட்ட சில வருடங்களிலேயே மடம் அவனைத் தத்தெடுத்துக் கொண்டது. போகும்போது நாம் எல்லோருக்கும் சாமியாகப் போகிறேன் என்ற பெருமையோடு சென்றாலும் சில நாட்களிலேயே அனைவரையும் பிரிந்துவிட்ட துன்பம் ஜெயராமனுக்கு ஏற்பட்டது. குறிப்பாக ஜெயலெட்சுமியின் ஞாபகம் தொடர்ந்தது. பெரியவனான பிறகு திரும்பி வந்து உன்னைத் திருமணம் செய்து கொள்வேன் என்ற ஜெயராமனின் வாக்குக் கேட்டு அவன் வருகைக்காக காத்திருந்தாள் ஜெயா. பெரியவளாகிவிட்டாள், பள்ளிப்படிப்பு முடித்து அதே பள்ளியில் ஆசிரியராகவும் பணிபுரிகிறாள். ஜெயா இன்னும் ஜெயராமன் கூறிய வாக்கினை நினைத்துக் கொண்டு திருமணம் வேண்டாம் என்கிறாள் என்பதையறிந்து அவளது தந்தை ஜூனியர் ஜேஜே சுவாமிகளை  (ஜெயராமன்) சந்தித்து, ஜெயா திருமணம் செய்ய மருப்பதைப் பற்றிக் கூறினார். அதற்கு சுவாமிகள் கூடிய விரைவில் நல்ல வரன் கிட்டும் என்று கூறிவிட்டார். ஜெயாவுடன் பணியாற்றிய ஆசிரியை ரெஜினாவின் காதலன் விக்டரும் இவ்வாறு திருச்சபையில் பாதரக வேண்டிய சூழலில் ரெஜினாவின் நினைவுகள் அவனைத் துரத்தவே திருச்சபையில் மன்னிப்புக் கேட்டுவிட்டு அதிலிருந்து மீண்டு வந்து ரெஜினாவைத் திருமணம் முடித்தான். இதுபோன்று இந்து மதத்திலும் இருந்தால் நல்லா இருக்குமே என்று ஜெயலெட்சுமி விரும்பினாள். தந்தையின் துணையோடு ஜெயரமனைப் பார்த்துப் பேசுகையில் ஜெயராமன் தன்னை மறந்து பேசுவதைக் கண்டாள். இருப்பினும் சுவாமிகள் எனும் நிலையில் தன் ஆசைகளை மறைத்து அவளுக்கு ஆசி வழங்கினான். மீண்டுமொருமுறை ஜெயராமனே கனவில் வந்து கூறியதாகக் கூறி தந்தையின் துணையோடு ஜெயரமனைச் சந்தித்துப் பேசினால். என்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய வாக்கு என்னவாயிற்று? என கேட்டுவிட்டு என்றைக்கேனும் நீங்களே என் கணவர் என ஜெயராமனுக்கு மாலை அணிவித்தாள். ஜெயராமன் அவளுக்கு மாலையிட நினைக்கையில் சுவாமிகள் ஒரு பெண்ணிற்கு மாலையிடுவதை ஏற்காத சமூகத்தினர் அதனைத் தடுத்து ஜெயலெட்சுமியை அவ்விடத்திலிருந்து விலக்கினார். அடிகளும் உதைகளும் ஜெயலெட்சுமிக்குக் கிடைக்கவே செய்தன. தன்னை சுவாமி என்று உணர்ந்துவிட்ட ஜெயராமன் மதச் சடங்குகளுக்குள் கட்டுண்டு, ஆசைகளைக் கட்டுப்படுத்தி அமர்ந்திருந்தான். அழைத்து வந்த ஜெயலெட்சுமியை தூக்கிச் செல்லும் அளவிற்கு ஆகிவிட்டது அவளது தந்தையின் நிலை. மதச் சடங்குகள் காதலின் உணர்வுகளை விழுங்கிவிட்டது. அதன் பிறகு ஜெயலெட்சுமியின் நிலை என்னவானது என்று யாருக்குத் தெரியும்?.