வெற்றி
தொடர்வதுமல்ல; தோல்வி நிரந்தரமுமல்ல என்பதற்கிணங்க வாழ்க்கை பல வெற்றி தோல்விகளைத்
தந்திருக்கிறது. அதில் ஒன்றுதான் நான் ஆராய்ச்சி மாணவராக மாறும் நிலையில் ஏற்பட்ட திருப்பம்.
பள்ளிப் பருவத்தோடு கல்வி முடிந்துவிடும் என்றிருந்த எனக்கு, கல்லூரியில் படிக்கும்
வாய்ப்பு கிடைத்தது. இளங்கலை, முதுகலை என தொடர்ந்து வெற்றியினை சந்தித்து வந்த நான்,
திடீர் என்று ஆராயச்சி மாணவர் படிப்பில் வாய்மொழித் தேர்வில் தோல்வியினைத் தழுவ நேர்ந்தது.
அதனைத் தொடர்ந்து கல்வியியல் படிப்பைத் தொடர நினைத்த போது அதுவும் தோல்வியையே தந்து
சென்றது. தொடர்ந்து தோல்விகளைச் சந்திக்க நேரிட்டதால் என்னுடைய ஆசிரியராகும் கனவு முற்றுபெற்றுவிட்டது
என்று அப்போது தோன்றியது. தோல்வியே இல்லை என்றிருந்த எனக்கு நல்ல பாடம் கற்பித்துச்
சென்றன தொடர் தோல்விகள். திக்கற்ற நிலையில் செய்வதறியாது திகைத்து நின்றேன். அப்பொழுதுதான்
தோல்விகள் நிரந்தரமல்ல எனும் தாரக மந்திரத்தை நினைவுப்படுத்தும் விதமாக தென்றலாய் வந்தது
ஒரு செய்தி.
கல்வியியல்
படிப்பில் வழக்கமாக சேருகின்ற மாதம் கடந்து ஒரு மாதத்திற்குப் பிறகு கல்வியியல் கல்லூரி
தேர்வுக் குழுவிடமிருந்து அழைப்பு ஒன்று வந்தது. காத்திருக்கும் பட்டியலில் முதல் மாணவனாக
இருந்த எனக்கு படிப்பதற்கு வாய்ப்புத் தருவதாகக் கூறப்பட்டது. ஆசிரியராகப் பணியாற்ற
வேண்டும் என்றிருந்த என் தீரா நதி வற்றி வரண்டு பாலைவனமாக மாறிவிட்டதே என்று உழன்று
கொண்டிருந்த அந்த நிமிடம் எனது வெற்றி வாழ்க்கையில் புதுமழைச் சாரலாய் வந்தது கல்வியியல்
படிப்பிற்கான வாய்ப்பு. இறக்கும் தருவாயில் அமுதம் குடித்தவனின் நிலையினை அடையப் பெற்றேன்.
அரசுக்
கல்லூரியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. எப்படியோ சுயநிதிப் பிரிவு கல்லூரியில் வாய்ப்பு
கிடைக்கப் பெற்றேன். சுயநிதிக் கல்லூரி என்றால் கல்விக் கட்டணம் மிகுதியாகத்தான் இருக்கும்.
படிக்கின்ற வேலையில் எதோ ஒரு நேரம் சோம்பி இருந்ததன் விளைவாக வந்தது இந்த தண்டனை என்று
எண்ணிக் கொண்டேன். இல்லையெனில் முதல் முறையிலேயே அரசு கல்லூரியில் படிக்கும் வாய்ப்பினைப்
பெற்றிருப்பேனே! என் சோம்பலின் விளைவு கடைசியில், அப்பாவின் தொழிலுக்கு ஆதாரமாக இருந்த
இரண்டு காளை மாடுகளை இழக்க வைத்தது. இன்னும் சற்று உழைத்து கொஞ்சம் கூடுதலான மதிப்பெண்
பெற்றிருந்தால், எனக்கு அரசுக் கல்லூரி வாய்ப்பும் கிடைத்திருக்கும், அப்பாவும் மாடுகளை
இழந்திருக்கமாட்டார். எத்தனைத் துன்பங்களிலும் என்னைத் தோளில் தூக்கி வைத்து அழகு பார்க்கும்
என் தந்தையின் தியாகத்திற்கு என்ன கைமாறு செய்தாலும் ஈடாகாது. எத்தனைமுறை நான் சரிந்து
விழுந்தாலும் அவருடைய தகுதிக்கு மீரிய நிலையிலும் கூட என்னைத் தலைநிமிர்ந்து உன்னால்
முடியும் என்று என்னை ஊக்கப்படுத்துபவர் என் தந்தை என்பதை எங்கு வேண்டுமானாலும் எப்பொழுது
வேண்டுமானாலும் சொல்லிக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன். நான் எத்தனை முறை வெற்றி பெற்றாலும்
அத்துனைக்கும் சொந்தக்காரர் என் தந்தைதான் என்பதை சொல்லுவதில் எனக்கு உள்ளளவு ஒரு மகிழ்ச்சி.
கல்லூரியில்
சேர்ந்தேன். நான் எங்கு படிக்கச் சென்றாலும் முதல் நாள் என் தந்தையை அழைத்துச் செல்வது வழக்கம். தோல்விகள் நிரந்தரமல்ல என்பதை
எனக்கு எனது கல்வியியல் கல்லூரிதான் உணர்த்தியது. சிறந்த மாணவன் என்ற பட்டத்திற்கு
உரியவன் என கல்லூரி என்னைப் பெருமைபடுத்தியது. தொடர்ந்து ஏற்பட்ட இரண்டு தோல்விகளில்
ஒன்றில் வெற்றி கண்டாலும் அந்த வெற்றி எனது முழுமையான தகுதிக்குரியதாக இல்லை என்பதை
மட்டும் மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. முழுமையான வெற்றி என்பது காத்திருக்க வைப்பதல்ல.
காத்திருக்க விடாமல் செய்வது. நாம் எப்பொழுது முதல் நிலையிலேயே வெற்றி வாய்ப்பினை அடைகின்றோமோ
அதுவே முழுமையான வெற்றி என்பதை மட்டும் என்னால் உணர முடிந்தது. ஓராண்டு கல்வியியல்
படிப்பு முடிவடைவடைந்தது. மீண்டும் ஆராய்ச்சி மாணவர் படிப்பிற்கு விண்ணப்பித்தேன்.
நுழைவுத்
தேர்வில் வெற்றி கண்டேன். ஏற்கனவே நுழைவுத் தேர்வில் வெற்றி கண்டுள்ளேன் என்பதால் அது
எனக்குக் கடினமானதாகத் தெரியவில்லை. வாய்மொழித் தேர்வுதான் நம்மை தலைகவிழச் செய்தது.
ஆகவே அதற்குத் தகுந்த பயிற்சிகளை பெரும் முயற்சியில் ஈடுபட்டேன். அதன் முதல் கட்டமாக
நல்ல ஒரு ஆய்வுச் சுருக்கத்தினைத் தயார் செய்ய வேண்டும் என்பதால் சங்க இலக்கியம், இலக்கணம்
என இரு நிலைகளிலும் இரண்டு ஆய்வுச் சுருக்கங்களைத் தயார் செய்து வைத்துக் கொண்டேன்.
வாய்மொழித் தேர்விற்கான அழைப்பும் வந்தது. ஆராய்ச்சிப் படிப்பிற்காக தமிழ் மொழி பேசும்
தேசத்தைக் கடந்து வேற்றுமொழிப் புலத்திற்கு முதன் முதலாகப் பயணம் மேற்கொண்டேன். மகிழ்ச்சியும்
பயமும் என்னைத் தொற்றிக் கொண்டன.
வாய்மொழித்
தேர்வு அறைக்கு வெளியே காத்துக்கொண்டிருந்த எனக்கு அறைக்குள் வரும்படி அழைப்பு வந்தது.
உள்ளே நுழைந்தேன். கடந்த ஆண்டு வாய்மொழித் தேர்வில் சந்தித்த அதே தேர்வாளர்கள் அமர்ந்திருந்தனர்.
நான் வணக்கம் சொல்லி இருக்கையில் அமர்வதற்குள் உன் பெயர் ………. தானே என்று தேர்வாளர்
ஒருவர் என்னைப் பார்த்துக் கேட்டது என்னைத் திடுக்கிட வைத்தது. கடந்தமுறை நீ வாய்மொழித்
தேர்விற்கு வந்தாய் அல்லவா? என்று கேட்ட கேள்வி எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஒரு
வருடத்திற்கு முன்னால் ஒருமுறைதான் பார்த்திருக்கிறார். ஆனால் மறக்காமல் எப்படி கூறமுடிகிறது
என்று வியப்பாக இருந்தது. கடந்தமுறை நீ ஏன் தேர்வாகவில்லை என்று தெரியுமா? என்று கேள்வியும்
கேட்டுவிட்டு பதிலும் கூறத் துவங்கினார். நீ முதுகலைப் பட்டம் கல்லூரியில் பயின்றவன்.
நாங்கள் பல்கலைக் கழகங்களில் பயின்றவர்களை மட்டும் தேர்வு செய்வது என்று முடிவு செய்திருந்தோம்.
இருந்தாலும் உன்னுடைய பேச்சு சிறப்பாக இருந்தது. நான் நல்ல மதிப்பெண் தான் கொடுத்திருந்தேன்.
கடைசியில் ஒரு சிக்கல். பல்கலைக் கழகங்களுக்கு மட்டும் இடம் ஒதுக்கப்பட்டதால் உனக்கு
இடம் கொடுக்க இயலாமல் போனது என்று கூறி முடித்தார். பரவாயில்லை இந்தமுறை உனக்கு இடம்
கொடுப்பதற்கு பரிந்துரை செய்கிறேன் என்றார். எந்த கேள்விகளும் இன்றி கேள்வியும் நானே!
பதிலும் நானே! என்பது போல் வாய்மொழித் தேர்வு எளிமையாக முடிவுபெற்றது. அப்பொழுதுதான்
புரிந்தது நான் ஏற்கனவே வெற்றியாளன் என்று. விதி விளையாடிவிட்டது என்று கூறுவது போல
பல்கலைக் கழகத்தின் விதி (விதிமுறை) எனது வாழ்க்கையில் விளையாடியிருக்கிறது. இருப்பினும்
மனத்திற்குள் ஐயம். ஏனென்றால் இவர் ஒருவருடைய மதிப்பெண் மட்டும் நம்மைத் தீர்மானிக்காதே.
அப்படித்தானே கடந்தமுறை அவர் நிறைய மதிப்பெண் இட்டும் இடம் கிடைக்காமல் போயிருக்கிறது
என்கிற ஐயம் தோன்றியது.
பயத்தின்
விளைவு அருகிலுள்ள பல்கலைக் கழகத்திலும் ஆராய்ச்சிப் படிப்பிற்கு விண்ணப்பித்தேன்.
ஒரு மாதம் கழிந்ததும் இரண்டு இடங்களிலும் வெற்றி கிடைத்திருந்தது. அதில் ஏற்கனவே எந்த
இடத்தில் தோற்றேனோ! அதே இடத்தில் படிப்பது என்கிற முடிவையும் ஏற்றேன். மீண்டும் ஏற்பட்ட
தொடர் வெற்றிகள் வாழ்க்கையில் நம்பிக்கை விதைகளை விதைத்துச் சென்றன. ஆகவே வெற்றி தொடர்வதுமில்லை,
தோல்வி நிரந்தரமுமில்லை என்பதை மட்டும் மனதில் நிறுத்திக் கொள்வது அவசியமாகின்றது.