நினைவலைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவலைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஆகஸ்ட் 17, 2021

பாலசுப்பிரமணியம் ஐயா அவர்களின் நினைவேந்தல் உரை

  பேராசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம். மொழிபெயர்ப்பாளர் பாலசுப்ரமணியன் ஐயா அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த குடும்பத்தில் நானும் ஒருவனாக இருந்து அவரை இழந்து வாடுகிறேன் என்பதை இங்கு நான் பதிவு செய்துகொள்கிறேன். நான் அமெரிக்கன் கல்லூரியில் முதுகலைத் தமிழ் படிக்கின்ற பொழுது கோபிசந்த் நாரங்க் எழுதிய அந்த அமைப்பு மையவாதம், பின் அமைப்பியல் மற்றும் கீழைக்காவிய இயல் புத்தகத்தை படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது மொழிபெயர்ப்பாளர் என்ற இடத்திற்குக் கீழே பாலசுப்பிரமணியம் என்ற ஒரு பெயர் இருந்தது. எனக்கு அது குறித்த அந்த அளவிற்கு ஒரு முக்கியத்துவமாக எனக்குத் தெரியவில்லை அவர் பெயர் நினைவில் இருந்தது. பாலசுப்பிரமணியம் எனும் பெயர் மூளையில் ஒரு ஓரமாக இருந்தது. 2011 ஜே.என்.யு இல் எனக்குப் படிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது நான் இளம் முனைவர் பட்ட ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட தலைப்பு இரு இந்தி பெண்ணியச் சிறுகதைகள் மொழிபெயர்ப்பும் சிக்கல்களும். அதில் இரண்டு பெண்ணிய சிறுகதை எழுத்தாளர்களை எடுக்க ஒரு முடிவு எடுக்கப்பட்டது அதில் ஒன்று மன்னுபண்டாரி அவருடைய திரிசங்கு.  நாச்சிமுத்து ஐயா அவர்கள் எனக்கு ஒரு சொன்னாங்க. அய்யா நீங்கள தயவுசெய்து மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைகளை எடுத்துக்கொள்ளுங்கள் என்று வழிகாட்டினார். ஆனால் நான் ஒரு ஆர்வத்தின் காரணமாக ஐயாவிடம் தர்க்கம் செய்து, ஐயா முடியாது நீங்கள் சொல்வதைப் போல நான் வேண்டுமென்றால் ஒரு சிறுகதை மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதையை எடுத்துக்கொள்கிறேன். கண்டிப்பாக நான் ஒரு சிறுகதையை மொழிபெயர்த்தே தீருவேன் என்று நான் வாதம் செய்தேன். அதற்கு அவர் இது மிகவும் கடினமான செயல் என்று சொல்லினார் இருந்தாலும் கொடுத்துவிடுகிறேன் என்று சொன்னார். ஆனால் மொழிபெயர்ப்பிலே ஈடுபடுகின்ற போது சில நாட்கள் கழித்து எனக்கு ஒரு தடுமாற்றம் ஏற்பட்டது. ஏதோ அவசரப்பட்டு ஒரு ஆர்வத்துல நாம் இறங்கி விட்டோமோ! ஆனால் மிகவும் கடினமானதாக இருக்கிறதே. மொழிபெயர்ப்பான சிறுகதையை தமிழிலேயே படித்து விட்டு மீண்டும் இந்தியிலேயே சென்று படிக்கின்ற பொழுது அது ஒரு எளிமையான ஒரு புரிதலை கொடுக்கும். அதிலிருந்து  மொழிபெயர்ப்பு செய்வது என்பது நமக்கு எளிமையாக இருக்கும். ஆனால்   ஆங்கிலத்தில்கூட மொழிபெயர்ப்பு ஆகாத சிறுகதையை எப்படி மொழிபெயர்ப்பு செய்வது என்பது ஒரு பெரிய தயக்கம் இருந்தது. அப்பொழுது தான் நாச்சிமுத்து ஐயா அவர்கள் எனக்கு பாலசுப்பிரமணி ஐயா அவர்களை அறிமுகம் செய்து வைத்தார்கள். இவர்களுடைய உதவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். இவர் மிகச் சிறந்த ஒரு மொழிபெயர்ப்பாளர். அப்பொழுதுகூட பாலசுப்பிரமணியம் என்ற பெயர் எனக்கு நினைவிற்கு வரவில்லை. அவரை தொடர்பு கொண்டேன். அவர் மிக நெருங்கிய நண்பர் போல என்னிடம் நெருங்கிப் பழகினார். அதைத் தொடர்ந்து சுசீலா டாக்போரே எழுதிய அந்த பத்துக் கதைகள் அடங்கிய நூல் தொகுப்பு என் கையில் கிடைத்தது. அந்த கதைகளை எப்படி வாசிப்பது? அந்த ஆசிரியரை பற்றி குறிப்புகளை எப்படி தயார் செய்வது? இதில் எந்த கதையை தேர்வு செய்து நான் வந்து மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும்? என்ற தயக்கம் இருந்தது. அந்த நூலை வாங்கி வந்தேன். எனக்காக அந்த நூலை வாங்கிச் சென்று, அந்த நூல் முழுக்க எல்லா கதைகளையும் வாசித்து ஐயா அவர்கள் வந்து அதிலே மிகச்சிறிய அழகான ஒரு கதை இருக்கிறது. அந்த சுசிலா டாக்போரே அவர்கள் அவருடைய வாழ்க்கை அனுபவத்தை அழகாக எழுதி இருக்கிறார்கள் என்று சொல்லி அந்தக் கதையை என்னிடம் கொடுத்தார். இந்தக் கதையை மொழிபெயர்ப்புச் செய்யத் துவங்குங்கள் என்று சொன்னார். கதையை சுருக்கமாக எனக்கு அறிமுகம் செய்தார்கள். எனக்கு அந்தக் கதையை முழுவதும் தமிழில் வாசித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. 

  அந்த உணர்வோடு அந்த கதையை வந்து என்னால் இயன்ற அளவிற்கு மொழிபெயர்ப்பு பணியிலே வந்து ஈடுபட்டேன். அதைத்தொடர்ந்து அய்யா அவர்கள் பல்கலைகழகத்திற்கு வருகின்ற பொழுதெல்லாம், அப்போதுதான் என்னிடம் ஒரு கார் இருந்தது. ஐயா எப்பொழுது பல்கலைகழகத்திற்கு வந்தாலும் அலைபேசியில் ஒரு அழைப்பு விடுப்பார். நண்பரைப் போல வந்து உரிமையோடு பல்கலைக் கழகத்திற்கு வந்து விட்டேன். நீங்கள் வாருங்கள் நாம் துறைக்குப் போயிட்டு வேலை முடித்துவிட்டு கையோட கூட்டிட்டு போவாரு. வேலை முடிச்சுட்டு அப்படியே கூடவே வருவார். நான் உங்கள் அறைக்கு வருகிறேன். நீங்கள் ஏதோ மொழிபெயர்ப்பு வைத்திருப்பதாகச் சொன்னீர்களே! உங்கள் அறையில் இருந்து பார்ப்போம் என்று அவர் என்னை அழைத்துக் கொண்டு வருவார். அதை எனக்கு எப்படி சொல்வது என்று வியப்பாக இருக்கிறது. தானாக முன்வந்து கூடவே அழைத்துக்கொண்டு செல்வதும். மீண்டும் தன்னுடைய அறைக்கு வந்து அந்த மொழிபெயர்ப்புப் பணிகளில் எனக்கு உதவி செய்வதும். சில நேரங்களில் வெகுதூரம் பயணித்து வந்தேன். கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்கிறேன் என்று என்னிடம் அனுமதி கேட்பார். அந்தவொரு செயல் எனக்கு இன்னும் வியப்பைத் தரக்கூடியதாக இருக்கிறது. சிறிது நேர ஓய்வுக்கு பிறகு மீண்டும் எழுந்து முகம் கழுவிவிட்டு பணியை தொடங்குவோமா? என்று அப்போதும் அனுமதி கேட்பார். இப்படி ஒரு மனிதரை நான் இதுவரை சந்தித்ததில்லை. இனிமேல் சந்திப்பேனா என்ற எண்ணம் எனக்குள் இருந்துகொண்டே இருக்கிறது. தொடர்ந்து என்னுடைய அந்த இரண்டு சிறுகதைகளையும் அதில் ஒரு திரிசங்கு சிறுகதை கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து பக்கங்களுக்கு குறையாமல் இருக்கக்கூடியது. அதை முழுக்க வரிக்குவரி வாசித்துத் திருத்திக் கொடுத்தார். அப்ப நான் அந்தக் கதையை மொழிபெயர்ப்பது ஒரு எளிமையாக இருந்தது. ஏன்னா தமிழ்ல ஏற்கனவே வரிக்குவரி வாசித்துவிட்டு இந்தியிலும் வாசித்துவிட்டு அதற்கு ஏற்ப இதில் இன்னும் செறிவாக மொழிபெயர்க்க முடியும். அதில் இன்னொரு சிறுகதை சுசீலா டாக்போரே அவர்கள் எழுதியது. அவர்கள் ஒரு தலித் பெண்ணியச் சிறுகதையாளர். ஐயா அவர்கள் அதில் ஒரு சிறுகதையைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார்கள். அதைத்தான் நான் மொழிபெயர்ப்பு செய்தேன். ஐயா அவர்கள் அதை மொழிபெயர்ப்பு செய்த பிறகுதான் தெரிந்தது. அதில் நான் செய்தது ஒரு கால்பகுதி மொழிபெயர்ப்புகூட கிடையாது என்று. அதனை அவர்கள் மொழிபெயர்ப்பு செய்த பிறகுதான் அது முழுமை அடைந்தது. ஒரு ஆர்வத்தில் ஒரு களத்தில் இறங்கி கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது இடையில் அய்யா அவர்கள் தான் வந்து நின்று நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியது உதவியாய் இருந்தது. முழுக்க கிட்டத்தட்ட அது ஐயாவினுடைய மொழிபெயர்ப்பு என்று சொல்லும் அளவிற்கு அவருடைய உழைப்பு அதில்   இருந்தது. இல்லையென்றால் அதில் நான் ஒரு மன அழுத்தத்திற்கு போயிருப்பேன். அந்த இளம் முனைவர் பட்டத்தை முடிப்பது என்பதே ஒரு கேள்விக்குறியாக இருந்திருக்கும். அதே போல வந்து அந்த கதைகளை மொழி பெயர்த்ததோடு என்னை விட்டு விடவில்லை. ஐயா வந்து மீண்டும் மீண்டும் நேரம் இருக்கும்போதெல்லாம் என்னை அழைப்பார். நேரம் இருக்குபோதெல்லாம் எனக்கு சக தோழர் போல, தானாக முன்வந்து  எனக்கு இப்பொழுது இரண்டு மணி நேரம் இருக்கிறது. நீங்க கொஞ்சம் ப்ரீயா இருந்தா வரீங்களா? மொழிபெயர்ப்போம். எங்க இருக்கீங்கனு சொல்லுங்க. நான் வேணா வரேன் அப்படின்னு கேட்டு எனக்கு உதவி செய்வார். அதை இன்னும் இன்னும் நான் நினைத்துப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. அதேபோல் எனக்காக அவர் மெனக்கெட்டு பல்கலைக் கழகத்திற்கு வந்த நாட்களெல்லாம் இருக்கிறது. அதை கண்டு இன்னும் நான் வந்து வியக்கிறேன். அதனை தொடர்ந்து எனக்கு ஆய்வு முழுக்க ஒவ்வொரு வரியாக வாசித்துத் திருத்திக் கொடுத்தவர் கொடுத்தவர் வந்து பாலசுப்ரமணியம் ஐயா அவர்கள். அதுல சில இடங்களில் குறிப்பிடுகின்ற பொழுது கூட நான் ஒரு இந்துத்துவத்தை பற்றி எழுதுகின்ற பொழுது சுசீலாடாக்போரே அவர்களின் வலிகளை எழுதுகின்ற போது இந்துத்துவம் சாதி அடிப்படையிலேயே ஏற்றத்தாழ்வுகளைக் கற்பித்து மனிதர்களைப் பிரித்திருக்கிறது என்று எழுதிய வாசகத்தைப் பார்த்து விட்டு சற்று நிமிர்ந்து என்னை பார்த்து சிரித்தார். சிரித்துவிட்டு ஐயா வந்து ஒரு பதிவு செய்தார் ஒரு குறை இருக்கிறது என்பதற்காக அதை பூதாகரமாக நாம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. இந்து மதம் இந்த சமூகத்திற்கு எவ்வளவோ நன்மைகளை செய்து இருக்கிறது. அதையும் சற்று பேசுங்கள் என்று அவர் இப்போது புன்சிரிப்போடு அதை வந்து பதிவு செய்தார். புன்சிரிப்போடு செய்யக் கூடிய மனநிலையில் அதை நான் சில இடங்களில் திருத்தியும் கொண்டேன். முதல் படியை நான் எடுத்துக்கொண்டு சந்திரசேகர் அய்யா அவர்களிடம் கொடுக்க சென்றபோது ஐயா அவர்கள் என்னைப் பார்த்துக் கேட்டார்கள். நீங்கள் யாரிடமாவது இதுக்கு முன்னாடி உங்களுடைய சீனியரிடம் கொடுத்து சரி பாத்தீர்களா? என்று கேட்டார்கள். நான் ஒரு பதில்தான் சொன்னேன். பாலசுப்பிரமணிய ஐயா அவர்களிடம் கொடுத்து வரிக்குவரி அவர் திருத்தி கொடுத்த படிதான் இது என்றேன். அவர் சொன்னார் இதற்குமேல் இதை திருத்த வேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன். நீங்கள் பதிவு செய்த வந்துவிடலாம் என்று கருத்துக் கூறினார். எந்த அளவிற்கு அவருடைய மனதிலும் சுப்பிரமணியம் ஐயா அவருடைய ஆளுமை நிறைந்திருந்தது என்பதை என்னால் பார்க்க முடிந்தது.  வேறு யாரிடமும் இதைக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த அளவுக்கு அது சரியாக இருக்கும் என்ற ஒரு நம்பிக்கை எல்லோருடைய மனதிலும் இருந்தது. அந்த ஆண்டில் ஒரு வேளை அவருடைய துணை இல்லையென்றால் பட்டத்தை வாங்காமல் கூட வந்திருப்போமோ என்கிற ஐயம் இருந்தது. அந்த இடத்தில் நடுக்கடலில் தத்தளிக்கும் போது ஒரு படகில் ஏற்றிக்கொண்டு கொண்டு விட்டார் என்றால் அதை எப்படி நாம் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியும். அந்த அளவிற்கு அவருடைய உதவி எனக்கு பேருதவியாக இருந்தது. அந்த ஓராண்டு காலம் என்னுடைய சக தோழனாக, நண்பனாக, என்னுடைய தந்தையாக அவர் என்னுடன் பயணித்த ஒரே ஒருமுறை நான் அவருடைய வீட்டிற்குச் சென்று வைக்கிறேன் அந்த ஒரு முறையும் அவர் வந்து உடல்நலம் சரியில்லாத பொழுது என்னால் வர இயலாமல் இருக்கிறேன் மருத்துவர் ஓய்வெடுக்கச் சொல்லி இருக்கிறார். ஐயா நீங்கள் வருகிறீர்களா என்று என்னிடம் அனுமதி கேட்டார். அப்பொழுதுகூட என்னிடம் அனுமதி கேட்டார். ஐயா நீங்கள் எப்பொழுது கூப்பிட்டாலும் நான் வந்துவிடுவதாகத்தான் இருந்தேன் ஆனால் நீங்கள் இங்கு வந்துவிடுகிறீர்கள் என்றேன். இல்லை இல்லை ஆய்வு மாணவர்களை அலைய விடுவது எனக்கு நோக்கமில்லை. நான் வந்துவிடுகிறேன். நீங்கள் அங்கிருந்து ஆய்வு செய்யுங்கள். நான் உங்களுக்கு உதவி செய்கிறேன். எந்த ஒரு எதிர்பார்ப்புமே இருக்காது. எனக்கு பல நிலைகளில் உறுதுணையாக இருந்தவர். இன்றைக்கு வந்து இளம் முனைவர் பட்டம், முனைவர்பட்டம் முடித்து இந்த இடத்திலேயே இருக்கிறோம் என்றால் அதற்கு ஒரு மிக முக்கியமான ஒரு பங்கு வகிப்பவர் செய்ய பாலசுப்பிரமணியம் ஐயா அவர்கள். அதைத் தொடர்ந்து முனைவர்பட்டத்தில் திரைமொழி என்கிற ஒரு பகுதிக்கு அய்யா சந்திரசேகரன் ஐயா என்னை வழிகாட்டினார்.  இருந்தாலும் அந்த வழியில் செல்ல முடியாமல் கடைசில ஒரு புதினம் ஒப்பாய்வு என்கிற ஒரு தளத்திற்குள் என்னுடைய ஆய்வை முடிக்க வேண்டிய  இக்கட்டான நிலையில் இருந்ததனால் அந்த வழியிலும் பயணிக்க முடியாமல், ஐயா மொழிபெயர்ப்பாளர் பாலசுப்பிரமணியம் ஐயா அவர்கள் வழியிலும் பயணிக்க முடியவில்லை என்கிற ஆழ்ந்த வருத்தம் மனதிற்குள்ள இன்றும் இருக்கின்றது.  அவர்களுடைய இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலையில் நாம் எல்லோரும் இருக்கின்றோம். வாய்ப்பு அளித்தமைக்கு அனைவருக்கும் நன்றி.

சனி, ஜூலை 03, 2021

எச். பாலசுப்பிரமணியன் ஐயா அவர்களின் நினைவுகளோடு

பெருமதிப்பிற்குரிய எச். பாலசுப்பிரமணியன் ஐயா,

            ஐயா, நான் உங்களை முதன்முதலில் 2011இல் சந்தித்தேன். அப்பொழுது நான் இளநிலை ஆய்வு முதலாம் ஆண்டு மாணவன். இரண்டாம் ஆண்டில் ஆய்விற்காக மொழிபெயர்ப்பு செய்ய வேண்டி உங்களை நாடினேன். உதவி கேட்பவர் உதவி செய்பவரைத் தேடிச் செல்வதுதான் உலக வழக்கம். ஆனால் நான் உங்களிடம் உதவி கேட்ட பொழுதெல்லாம் என்னைத் தேடிவந்து உதவி செய்தீர்கள் என்பதை இன்றும் மனம் உருகி நினைத்துப் பார்க்கிறேன். நான் முதல் தலைமுறையில் கல்வி பெறுபவன். கல்வியில் உயர்நிலையினை அடைந்தவர்கள் என்றால் அவர்களிடம் மரியாதை கலந்த பயத்துடன் ஒதுங்கி நின்றே பழகியவன். பெரியோர்களிடம் எளிதாகப் பழகும் திறன் இல்லாதவன். உங்களுடைய அன்பின் வழியில் என்னை நாடி வந்தீர்கள் ஆசிரியராக, நண்பராக, உறவுக்காரராக, தாய் தந்தை காட்டும் அன்போடு எனக்கு உதவி செய்தீர்கள்.

            என்னுடைய விடுதி அறைக்கு வந்து நீண்ட நேரம் செலவழித்து, என்னுடன் உணவருந்தி, இது போல் பலநாட்கள் எனக்காக அரும்பாடுபட்டு சிறுகதைகள் மொழிபெயர்ப்பிற்கு உறுதுணையாக இருந்திருக்கிறீர்கள். நீங்கள் என் அறைக்கு வந்தபொழுதெல்லாம் நான் நண்பர்களிடம் பலரிடமும் பெருமையுடன் கூறிக்கொண்டதுண்டு. “ஐயா யார் தெரியுமா? மிகப்பெரிய புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளர். சாகித்திய அகாதமியில் பரிசு பெற்றவர்.” இப்படிக் கூறும்பொழுதெல்லாம் நண்பர்கள் என்னைக் கண்டு வியப்பார்கள். இப்படிப்பட்ட ஒருவர் என்னைத் தேடி வருகிறாரே என்று. நீங்கள் பல்கலைக் கழகத்திற்கு வந்தவுடன் உற்ற நண்பனாக உரிமையோடு எனக்குத் தெரியப்படுத்துவீர்கள். “நான் இப்பொழுது நமது பல்கலைக் கழகத்தில்தான் இருக்கிறேன். இன்னும் சிறுது நேரத்தில் எனது பணி முடிவுவடைந்துவிடும். உங்களுக்கு நேரம் இருந்தால் சொல்லுங்களேன் நாம் சந்திப்போம்.” என்று என்னிடம் அனுமதி கேட்பீர்கள். பலமுறை வீடுதேடிச் சென்று அலைபேசியில் அழைத்து உதவி கேட்டாலும் செவிசாய்க்காத மக்களிடத்தில் இப்படி ஒரு மாமனிதரைச் சந்திக்கும் யாரும் வியப்படையத்தான் செய்வார்கள். அதுவும் உங்களைப் போன்றோரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததே என் வாழ்வின் பெரும்பேராகக் கருதும் நான் எப்படி உங்களைச் சொந்தம் கொண்டாடாமல் இருக்க முடியும்?. ஐயா நீங்கள் இன்றும் என் மனதில் தலைசிறந்த மாமனிதராக நிறைந்து நிற்கிறீர்கள்.

            ஒருமுறை நான் உங்களிடம் உதவிக்கு நாடிய பொழுது நீங்கள் உடல் நலம் சரியில்லாமல் இருந்தீர்கள். “மன்னிக்கனும் என்னால் வர இயலவில்லை, ஏனென்றால் எனக்கு உடல்நிலை சரியில்லை. மருத்துவர் வீட்டில் ஓய்வெடுக்கச் சொல்லிருக்கார். நான் என்னுடைய முகவரி அனுப்புறேன். நீங்க இங்க வந்துடுறீங்களா? நான் உங்களுக்குச் சாப்பாடு சமச்சு வைக்கிறேன்.” என்று அப்பொழுதும்கூட என்னிடம்தானய்யா அனுமதி கேட்டீட்கள். ஐயா தவறா எடுத்துக்குறாதீங்க! சாதி சொல்லக்கூடாதுதான் இருந்தாலும் என்னோட உள்ளப்பூரிப்பைச் சொல்லியாக வேண்டியிருக்கிறது. இதுவரை நான் கேள்விப்பட்ட அளவில் ஐயர் என்றால் மற்ற சாதிக்காரர்களை வீட்டிற்குள் விடமாட்டார்கள், தீட்டு பார்ப்பார்கள் என்றெல்லாம் ஒருவகையான மாயை உலகத்தில் வாழ்ந்து வந்தேன். ஒரு வகையில், அது பல இடங்களில் உண்மையாகக்கூட இருக்கலாம்.

            நான் உங்கள் வீட்டிற்கு வருகிறேன் என்றறிந்து அருகிலுள்ள சாலைவரை வந்து என்னை அழைத்துச் சென்றீர்கள். வீட்டிற்குள் நுழைந்தவுடன் அருந்துவதற்கு குளிர்பானம் கொடுத்தீர்கள். வீடு முழுக்க கணினி திரை உள்பட உங்களுடைய மனைவியின் புகைப்படம் வைத்திருந்தீர்கள். அவர்களைப் பற்றி நான் கேட்டபொழுது ஒரு நிமிடம் மனம் கலங்கி நின்றீர்கள். மொழிபெயர்ப்புப் பணியை அடுத்து எனக்கு உணவு பரிமாறுனீர்கள். நான்கூட உங்களிடம் நகைச்சுவையாக ஒன்று கேட்டேன். “ஐயா நான் தற்பூசணி பழம் சாப்பிட்டிருக்கிறேன். இப்பொழுதுதான் முதன்முறையாகத் தற்பூசணிக் காய் பொறியல் சாப்பிடுகிறேன்.” என்றேன். “தற்பூசணி நல்ல நீர்ச்சத்து கொண்டது. இதனை சமைத்தும் சாப்பிடலாம். பலபேருக்கு இது தெரியாது.” என்று அக்கறையோடு கூறுனீர்கள். ஐயா என் வாழ்நாளில் நான் உண்ட முதல் ஐயர் வீட்டுச் சாப்பாடும் அதுதான். ஏன் இதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன் என்றால் என்னைப் போன்றோர்களால்தான் அதைக் கண்டு வியக்கமுடியும். உங்களுடைய செயல் சாதாரணமானது அல்ல, அது மிகப்பெரிய புரட்சி. சமதர்ம தத்துவங்கள் படிக்கப்படுவதால் மட்டுமே வெற்றியடைந்து விடுவதில்லை. நடைமுறை வாழ்க்கையில் வழக்கமாகின்ற பொழுதுதான் வெற்றியடைகின்றன.

            நாச்சிமுத்து ஐயா அவர்கள் நான் நல்ல மொழிபெயர்ப்பாளனாக வரவேண்டும் என்று பேராவல் கொண்டு உங்களை எனக்கு அறிமுகப்படுத்தினார். உங்களைக் கண்டு வியந்த நான் உங்கள் வழியில் பயணிக்கத் தவறிவிட்டேன். காரணம் சொல்லித் தப்பிக்க நினைக்கவில்லை. குற்ற உணர்வுடன் நிற்கின்றேன். சந்திரசேகரன் ஐயாவும் திரைமொழியில் சிறந்த ஆய்வாளனாக வருவேன் என்கிற உயர்ந்த நோக்கோடு என்னைப் பணித்தார்கள். இறுதியில் புதின ஒப்புமை நோக்கில் மட்டுமே என் ஆய்வினை முடித்துக் கொண்டேன். கடைசியில் முனைவர் பட்டம் முடிப்பேனா என்கிற ஐயம் தோன்றும் அளவிற்கு எனது சூழலை நானே உருவாக்கிக் கொண்டேன். ஆசிரியர்கள் காட்டும் திசைகளில் பயணிக்க இயலாமல் போனது இன்னும் குற்ற உணர்வாகவே நிலைக்கின்றது. கடந்த பிறகுதான் நாம் கடந்தவர்களின் பெருமை புலப்படும் என்பது போல ஐயா உங்களை இழந்த பிறகுதான் மனம் மேலும் வலிக்கின்றது. கண்ணீர்த் துளிகளால் அஞ்சலி செலுத்துகிறேன்.

                                     முனைவர் கு.ராஜா,

                                    உதவிப் பேராசிரியர்,

                                    மதுரைக் கல்லூரி, மதுரை.      

 

 

 

 

 

 

 

            நினைக்குப் போதெல்லாம் வியப்பாய் இருக்கும் மனிதரில் ஒருவர்தான் எங்கள் எச். பாலசுப்பிரமணியன் ஐயா அவர்கள். இதுவரை அவர் ஒருமுறையேனும் கோபம் கொண்டு நான் பார்த்ததில்லை.  என்னுடன் மட்டுமல்ல யாருடனும் அப்படித்தான். இளநிலை ஆய்விற்காகஎனது சமூகம் (மேரா சமாஜ்)’, திரிசங்கு ஆகிய இரு கதைகளைத் தேர்ந்தெடுத்திருந்தேன். இக்கதைகளை என்னால் இயன்ற அளவிற்கு மொழிபெயர்த்துவிட்டுச் சரிசெய்வதற்காக ஐயா அவர்களிடம் உதவி நாடினேன். அவருக்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் என்னை அழைத்து உதவி செய்திருக்கிறார். நான் உதவி கேட்டது ஒருமுறைதான். ஆனால் அந்த மொழிபெயர்ப்புப் பணி முடியும்வரை ஒவ்வொருமுறையும் என்னை அழைத்து, மேலும் எனது விடுதி அறைக்கே வந்து எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி முடித்துக் கொடுத்தவர்.

            கதைகளை மொழிபெயர்த்தது மட்டுமல்லாமல் ஆய்வு முழுக்க வரிக்குவரி படித்துப் பார்த்து சரிசெய்து கொடுத்தவர். மொழிபெயர்ப்பாளர் என்று மட்டும் அவரை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடக்கிவிட முடியாது. பரந்துபட்ட வாசிப்புத் தளங்களை உடையவர். நவீனக் கோட்பாடுகளையும் உள்வாங்கியவர் என்பது நமக்குப் புலப்படும். ஆய்வில் சில இடங்களில் கருத்து முரன்பாடு தோன்றுகின்ற பொழுது இன்முகத்துடன் அதனை நமக்குப் புரியவைப்பதில் சிறந்த ஆசானாக விளங்கியவர். இப்படியெல்லாம்கூட உதவும் உள்ளம் கொண்டவரகள் உலகில் இருக்கின்றனரா என்பதை ஐயா அவர்களைக் கண்ட பிறகுதான் தெரிந்துகொண்டேன். மாணவர்களைப் போல துறையில் கட்டுரைகளை வாசிப்பதும் மாணவர்களுக்கு இலவசமாக இந்தி மொழிக் கற்றுக் கொடுத்ததும் இன்னும் வியப்பைத் தருகின்றது. “பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது.” எனும் குறளிற்குப் பொருத்தமானவர். குளிர் வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் மாணவர்களுக்காக அயராது உழைத்த மாமனிதர் இன்று நம்மிடையே இல்லை என்பது ஈடுகட்ட முடியாத ஒன்று.

 

முனைவர் கு.ராஜா, உதவிப் பேராசிரியர், மதுரைக் கல்லூரி, மதுரை.