சனி, ஜூலை 03, 2021

எச். பாலசுப்பிரமணியன் ஐயா அவர்களின் நினைவுகளோடு

பெருமதிப்பிற்குரிய எச். பாலசுப்பிரமணியன் ஐயா,

            ஐயா, நான் உங்களை முதன்முதலில் 2011இல் சந்தித்தேன். அப்பொழுது நான் இளநிலை ஆய்வு முதலாம் ஆண்டு மாணவன். இரண்டாம் ஆண்டில் ஆய்விற்காக மொழிபெயர்ப்பு செய்ய வேண்டி உங்களை நாடினேன். உதவி கேட்பவர் உதவி செய்பவரைத் தேடிச் செல்வதுதான் உலக வழக்கம். ஆனால் நான் உங்களிடம் உதவி கேட்ட பொழுதெல்லாம் என்னைத் தேடிவந்து உதவி செய்தீர்கள் என்பதை இன்றும் மனம் உருகி நினைத்துப் பார்க்கிறேன். நான் முதல் தலைமுறையில் கல்வி பெறுபவன். கல்வியில் உயர்நிலையினை அடைந்தவர்கள் என்றால் அவர்களிடம் மரியாதை கலந்த பயத்துடன் ஒதுங்கி நின்றே பழகியவன். பெரியோர்களிடம் எளிதாகப் பழகும் திறன் இல்லாதவன். உங்களுடைய அன்பின் வழியில் என்னை நாடி வந்தீர்கள் ஆசிரியராக, நண்பராக, உறவுக்காரராக, தாய் தந்தை காட்டும் அன்போடு எனக்கு உதவி செய்தீர்கள்.

            என்னுடைய விடுதி அறைக்கு வந்து நீண்ட நேரம் செலவழித்து, என்னுடன் உணவருந்தி, இது போல் பலநாட்கள் எனக்காக அரும்பாடுபட்டு சிறுகதைகள் மொழிபெயர்ப்பிற்கு உறுதுணையாக இருந்திருக்கிறீர்கள். நீங்கள் என் அறைக்கு வந்தபொழுதெல்லாம் நான் நண்பர்களிடம் பலரிடமும் பெருமையுடன் கூறிக்கொண்டதுண்டு. “ஐயா யார் தெரியுமா? மிகப்பெரிய புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளர். சாகித்திய அகாதமியில் பரிசு பெற்றவர்.” இப்படிக் கூறும்பொழுதெல்லாம் நண்பர்கள் என்னைக் கண்டு வியப்பார்கள். இப்படிப்பட்ட ஒருவர் என்னைத் தேடி வருகிறாரே என்று. நீங்கள் பல்கலைக் கழகத்திற்கு வந்தவுடன் உற்ற நண்பனாக உரிமையோடு எனக்குத் தெரியப்படுத்துவீர்கள். “நான் இப்பொழுது நமது பல்கலைக் கழகத்தில்தான் இருக்கிறேன். இன்னும் சிறுது நேரத்தில் எனது பணி முடிவுவடைந்துவிடும். உங்களுக்கு நேரம் இருந்தால் சொல்லுங்களேன் நாம் சந்திப்போம்.” என்று என்னிடம் அனுமதி கேட்பீர்கள். பலமுறை வீடுதேடிச் சென்று அலைபேசியில் அழைத்து உதவி கேட்டாலும் செவிசாய்க்காத மக்களிடத்தில் இப்படி ஒரு மாமனிதரைச் சந்திக்கும் யாரும் வியப்படையத்தான் செய்வார்கள். அதுவும் உங்களைப் போன்றோரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததே என் வாழ்வின் பெரும்பேராகக் கருதும் நான் எப்படி உங்களைச் சொந்தம் கொண்டாடாமல் இருக்க முடியும்?. ஐயா நீங்கள் இன்றும் என் மனதில் தலைசிறந்த மாமனிதராக நிறைந்து நிற்கிறீர்கள்.

            ஒருமுறை நான் உங்களிடம் உதவிக்கு நாடிய பொழுது நீங்கள் உடல் நலம் சரியில்லாமல் இருந்தீர்கள். “மன்னிக்கனும் என்னால் வர இயலவில்லை, ஏனென்றால் எனக்கு உடல்நிலை சரியில்லை. மருத்துவர் வீட்டில் ஓய்வெடுக்கச் சொல்லிருக்கார். நான் என்னுடைய முகவரி அனுப்புறேன். நீங்க இங்க வந்துடுறீங்களா? நான் உங்களுக்குச் சாப்பாடு சமச்சு வைக்கிறேன்.” என்று அப்பொழுதும்கூட என்னிடம்தானய்யா அனுமதி கேட்டீட்கள். ஐயா தவறா எடுத்துக்குறாதீங்க! சாதி சொல்லக்கூடாதுதான் இருந்தாலும் என்னோட உள்ளப்பூரிப்பைச் சொல்லியாக வேண்டியிருக்கிறது. இதுவரை நான் கேள்விப்பட்ட அளவில் ஐயர் என்றால் மற்ற சாதிக்காரர்களை வீட்டிற்குள் விடமாட்டார்கள், தீட்டு பார்ப்பார்கள் என்றெல்லாம் ஒருவகையான மாயை உலகத்தில் வாழ்ந்து வந்தேன். ஒரு வகையில், அது பல இடங்களில் உண்மையாகக்கூட இருக்கலாம்.

            நான் உங்கள் வீட்டிற்கு வருகிறேன் என்றறிந்து அருகிலுள்ள சாலைவரை வந்து என்னை அழைத்துச் சென்றீர்கள். வீட்டிற்குள் நுழைந்தவுடன் அருந்துவதற்கு குளிர்பானம் கொடுத்தீர்கள். வீடு முழுக்க கணினி திரை உள்பட உங்களுடைய மனைவியின் புகைப்படம் வைத்திருந்தீர்கள். அவர்களைப் பற்றி நான் கேட்டபொழுது ஒரு நிமிடம் மனம் கலங்கி நின்றீர்கள். மொழிபெயர்ப்புப் பணியை அடுத்து எனக்கு உணவு பரிமாறுனீர்கள். நான்கூட உங்களிடம் நகைச்சுவையாக ஒன்று கேட்டேன். “ஐயா நான் தற்பூசணி பழம் சாப்பிட்டிருக்கிறேன். இப்பொழுதுதான் முதன்முறையாகத் தற்பூசணிக் காய் பொறியல் சாப்பிடுகிறேன்.” என்றேன். “தற்பூசணி நல்ல நீர்ச்சத்து கொண்டது. இதனை சமைத்தும் சாப்பிடலாம். பலபேருக்கு இது தெரியாது.” என்று அக்கறையோடு கூறுனீர்கள். ஐயா என் வாழ்நாளில் நான் உண்ட முதல் ஐயர் வீட்டுச் சாப்பாடும் அதுதான். ஏன் இதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன் என்றால் என்னைப் போன்றோர்களால்தான் அதைக் கண்டு வியக்கமுடியும். உங்களுடைய செயல் சாதாரணமானது அல்ல, அது மிகப்பெரிய புரட்சி. சமதர்ம தத்துவங்கள் படிக்கப்படுவதால் மட்டுமே வெற்றியடைந்து விடுவதில்லை. நடைமுறை வாழ்க்கையில் வழக்கமாகின்ற பொழுதுதான் வெற்றியடைகின்றன.

            நாச்சிமுத்து ஐயா அவர்கள் நான் நல்ல மொழிபெயர்ப்பாளனாக வரவேண்டும் என்று பேராவல் கொண்டு உங்களை எனக்கு அறிமுகப்படுத்தினார். உங்களைக் கண்டு வியந்த நான் உங்கள் வழியில் பயணிக்கத் தவறிவிட்டேன். காரணம் சொல்லித் தப்பிக்க நினைக்கவில்லை. குற்ற உணர்வுடன் நிற்கின்றேன். சந்திரசேகரன் ஐயாவும் திரைமொழியில் சிறந்த ஆய்வாளனாக வருவேன் என்கிற உயர்ந்த நோக்கோடு என்னைப் பணித்தார்கள். இறுதியில் புதின ஒப்புமை நோக்கில் மட்டுமே என் ஆய்வினை முடித்துக் கொண்டேன். கடைசியில் முனைவர் பட்டம் முடிப்பேனா என்கிற ஐயம் தோன்றும் அளவிற்கு எனது சூழலை நானே உருவாக்கிக் கொண்டேன். ஆசிரியர்கள் காட்டும் திசைகளில் பயணிக்க இயலாமல் போனது இன்னும் குற்ற உணர்வாகவே நிலைக்கின்றது. கடந்த பிறகுதான் நாம் கடந்தவர்களின் பெருமை புலப்படும் என்பது போல ஐயா உங்களை இழந்த பிறகுதான் மனம் மேலும் வலிக்கின்றது. கண்ணீர்த் துளிகளால் அஞ்சலி செலுத்துகிறேன்.

                                     முனைவர் கு.ராஜா,

                                    உதவிப் பேராசிரியர்,

                                    மதுரைக் கல்லூரி, மதுரை.      

 

 

 

 

 

 

 

            நினைக்குப் போதெல்லாம் வியப்பாய் இருக்கும் மனிதரில் ஒருவர்தான் எங்கள் எச். பாலசுப்பிரமணியன் ஐயா அவர்கள். இதுவரை அவர் ஒருமுறையேனும் கோபம் கொண்டு நான் பார்த்ததில்லை.  என்னுடன் மட்டுமல்ல யாருடனும் அப்படித்தான். இளநிலை ஆய்விற்காகஎனது சமூகம் (மேரா சமாஜ்)’, திரிசங்கு ஆகிய இரு கதைகளைத் தேர்ந்தெடுத்திருந்தேன். இக்கதைகளை என்னால் இயன்ற அளவிற்கு மொழிபெயர்த்துவிட்டுச் சரிசெய்வதற்காக ஐயா அவர்களிடம் உதவி நாடினேன். அவருக்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் என்னை அழைத்து உதவி செய்திருக்கிறார். நான் உதவி கேட்டது ஒருமுறைதான். ஆனால் அந்த மொழிபெயர்ப்புப் பணி முடியும்வரை ஒவ்வொருமுறையும் என்னை அழைத்து, மேலும் எனது விடுதி அறைக்கே வந்து எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி முடித்துக் கொடுத்தவர்.

            கதைகளை மொழிபெயர்த்தது மட்டுமல்லாமல் ஆய்வு முழுக்க வரிக்குவரி படித்துப் பார்த்து சரிசெய்து கொடுத்தவர். மொழிபெயர்ப்பாளர் என்று மட்டும் அவரை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடக்கிவிட முடியாது. பரந்துபட்ட வாசிப்புத் தளங்களை உடையவர். நவீனக் கோட்பாடுகளையும் உள்வாங்கியவர் என்பது நமக்குப் புலப்படும். ஆய்வில் சில இடங்களில் கருத்து முரன்பாடு தோன்றுகின்ற பொழுது இன்முகத்துடன் அதனை நமக்குப் புரியவைப்பதில் சிறந்த ஆசானாக விளங்கியவர். இப்படியெல்லாம்கூட உதவும் உள்ளம் கொண்டவரகள் உலகில் இருக்கின்றனரா என்பதை ஐயா அவர்களைக் கண்ட பிறகுதான் தெரிந்துகொண்டேன். மாணவர்களைப் போல துறையில் கட்டுரைகளை வாசிப்பதும் மாணவர்களுக்கு இலவசமாக இந்தி மொழிக் கற்றுக் கொடுத்ததும் இன்னும் வியப்பைத் தருகின்றது. “பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது.” எனும் குறளிற்குப் பொருத்தமானவர். குளிர் வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் மாணவர்களுக்காக அயராது உழைத்த மாமனிதர் இன்று நம்மிடையே இல்லை என்பது ஈடுகட்ட முடியாத ஒன்று.

 

முனைவர் கு.ராஜா, உதவிப் பேராசிரியர், மதுரைக் கல்லூரி, மதுரை.