செவ்வாய், ஜூலை 14, 2020

11. நம்பியகப்பொருள் - களவியல் - களவின் வகை, 1- 7


1. இயற்கைப் புணர்ச்சி
முதன் முதலாகத் தலைவனும் தலைவியும் தாமே கண்டு கூடுவது இயற்கைப் புணர்ச்சி எனப்படும். தெய்வம் கூட்டுவிக்கத் தன்மனம் வேறாய் (திரிந்து) நின்ற தலைவன், தலைவியைக் கூடுவான். இதனை,
  1.     தெய்வத்தால் எய்துவது
  2.     தலைவியால் எய்துவது
என இருநிலைகளாகக் காணலாம்.
1. தெய்வத்தால் எய்துவது
  1.     கலந்து மகிழ்தல்
  2.     அழகினைப் பாராட்டல்
  3.     ஏற்ற அணிகளை அணிதல்
என்னும் மூன்றும் தெய்வத்தால் அடையப்பெறும் இயற்கைப் புணர்ச்சியின் விரிவுகள் ஆகும்.
2. தலைவியால் எய்துவது
தலைவியால், தலைவன் கூடும் இயற்கைப் புணர்ச்சியானது
  1.    தலைவிக்குத் தலைவன் தன் வேட்கையை உணர்த்துதல்.
  2.    தலைவனது வேட்கையைத் தலைவி முதலில் மறுத்தல்.
  3.    தலைவனது வேட்கையைத் தலைவி பின்னர் ஏற்று உடன்படுதல்.
  4.    அதன்பின் தலைவனும் தலைவியும் கூடி மகிழ்தல்.
என நான்கு பிரிவுகளை உடையது.

தலைவியால் அடையும் இயற்கைப் புணர்ச்சியின் விரிவு
இயற்கைப் புணர்ச்சியின் ஒரு வகை தலைவியின் மூலம் நிகழும் என்று கண்டோம். அக்கூட்டத்தினை ஒட்டி நிகழும் பல்வேறு செயல்பாடுகளை அகப்பொருள் இலக்கண நூல் தொகுத்துக் கூறியுள்ளது. அவையாவன :
  1. இரந்துபின் நிற்றற்கு எண்ணல்: தலைவன் தலைவியைப் பணிந்து வேண்டி நிற்பதற்கு நினைத்தல்.
  2. இரந்து பின்னிலை நிற்றல்: தலைவன் தலைவியைப் பணிந்து வேண்டி நிற்றல்.
  3. முன்னிலையாக்கல்: தலைவன் தலைவியை முன்னிலைப்படுத்திக் கூறுதல்.
  4. மெய் தொட்டுப் பயிறல்: தலைவன் தலைவியின் உடலைத் தொட்டு நெருங்கிப் பழகுதல்.
  5. பொய் பாராட்டல்            : தலைவன் தலைவியிடம் உள்ளதையும் இல்லாததையும் சேர்த்துக் கூறுதல்.
  6. இடம் பெற்றுத் தழால்: தலைவன் தலைவி நிற்கும் இடத்திற்குச் சென்று அவளைத் தழுவ விரும்பிக் கூறுதல்.
  7. வழிபாடு மறுத்தல்: மேற்கண்டவாறெல்லாம் தலைவன் கூறியதைத் தலைவி முழுவதுமாக மறுத்தல்
  8. இடையூறு கிளத்தல்: தலைவி நாணிக்கண் புதைத்ததனால் (வெட்கப்பட்டுக் கண்ணை மூடியதால்) உண்டான துன்பத்தைத் தலைவன் கூறுதல்.
  9. நீடு நினைந்து இரங்கல்:  தலைவன் தலைவியைப் பற்றி நீண்ட நேரம் நினைத்துப் பார்த்து வருத்தப்பட்டுப் பேசுதல்
  10. மறுத்து எதிர்கோடல்:    தலைவி, முன்பு மறுத்ததனை மாற்றிக் கொண்டு தலைவன் கருத்தை ஏற்றல்.
  11.  வறிதுநகை தோற்றல்:   தலைவியின் முகத்தில் சிறிது புன்னகை தோன்றுதல்.
  12.  முறுவல் குறிப்பு உணர்தல்: தலைவியின் புன்முறுவல் புலப்படுத்தும் குறிப்பைத் தலைவன் உணர்ந்து கொள்ளுதல்.
  13.  முயங்குதல் உறுத்தல்: தலைவி தன்னோடு சேர்வதற்கு உடன்பட்டதைத் தலைவன் வலியுறுத்திக் கூறுதல்.
  14.  புணர்ச்சியின் மகிழ்தல்: தலைவன் தலைவியோடு கூடிய புணர்ச்சியால் மகிழ்தல்.
  15.  புகழ்தல்:  தலைவியின் அழகு நலத்தைத் தலைவன் புகழ்ந்துரைத்தல்.
2. வன்புறை:   வன்பு - வலிமை ; உறை - உறுத்தல், வற்புறுத்திக் கூறுதல்.
தலைவி ஐயுற்றவழித் தலைவன் அவளது ஐயம் தீர உண்மையை வற்புறுத்திக் கூறுதல் வன்புறை எனப்படும்.
வன்புறை வகை: வன்புறை இருவகைப்படும். அவையாவன:
  1.     ஐயம் தீர்த்தல்
  2.     பிரிவு அறிவுறுத்தல்
ஐயம் தீர்த்தல்
தலைவிக்கு உண்டான ஐயத்தைத் தலைவன் தீர்த்து வைத்தல் ஐயம் தீர்த்தல் எனப்படும்.
  1.  கலைந்துபோன தன் அணிகலனைச் சரிசெய்து தலைவன் அணிவிக்க அது மாறுபட்டுள்ளதைக் கண்டு தோழி ஐயுறுவாள் என்று கருதிய தலைவியின் ஐயம் தீர்த்தல்.
  2.  மீளவும் வருவேன் என்று, தான் கொண்டுள்ள அளவுக்கதிகமான காதலைக் கூறித் தலைவன் ஐயம் தீர்த்தல்.
  3.  ‘விதி நம்மைப் பிரிக்காது’ என ஊழின் வலிமையைக் கூறித் தலைவியின் ஐயம் தீர்த்தல்.
என மூன்று உட்பிரிவுகளை உடையது.
பிரிவு அறிவுறுத்தல்
தலைவன் தன் பிரிவைத் தலைவிக்குத் தெரிவித்தல் பிரிவு அறிவுறுத்தல் எனப்படும். இது வன்புறையின் இரண்டாம் வகை. இது,
  1.     பிரியமாட்டேன் எனல்.
  2.     பிரிந்து மறுபடியும் திரும்பி வருவேன் எனல்.
  3.     தான் பிரிந்து செல்லும் இடம் அருகில்தான் உள்ளது எனல்.
என மூன்று உட்பிரிவுகளை உடையது.
3. தெளிவு
            தலைவன் தனது நிலைப்பாட்டை வற்புறுத்தி உரைப்பது வன்புறை என்று கண்டோம். அந்த வன்புறை வார்த்தைகளை ஏற்று, ‘தலைவன் சொல்வது உண்மையானதுதான்; ஏற்புடையதுதான்’ என்று தெளிந்து தலைவி ஆற்றியிருப்பது தெளிவு எனப்படும்.
4. பிரிவுழி மகிழ்ச்சி
தலைவனும் தலைவியும் ஓரிடத்தில் களவு வழியில் கூடி மகிழ்ந்தனர். அப்புணர்ச்சிக்குப்பின் அங்கிருந்து தலைவி பிரிந்து செல்ல, அப்போது தலைவியோடு கூடிய கூட்டத்தை எண்ணி, தலைவன் மனமகிழ்வுடன் பேசுவது பிரிவுழி மகிழ்ச்சி எனப்படும்.
பிரிவுழி மகிழ்ச்சியின் இரு நிலைகள்
  1.     செல்லும் கிழத்தி செலவுகண்டு உளத்தொடு சொல்லல்.
  2.     செல்லும் கிழத்தி செலவுகண்டு பாகனொடு சொல்லல்.

செல்லும் கிழத்தி செலவுகண்டு உளத்தொடு சொல்லல்
கூடிப்பிரிந்து செல்லும் தலைவியின் தன்மை கண்டு தலைவன் தன் மனத்தொடு பேசி மகிழ்வது.
செல்லும் கிழத்தி செலவுகண்டு பாகனொடு சொல்லல்
கூடிப்பிரிந்து செல்லும் தலைவியின் தன்மை கண்டு தலைவன் தன் பாகனிடம் பேசி மகிழ்வது.
5. பிரிவுழிக் கலங்கல்
களவிற்குரிய கிளவித்தொகைகளுள் ஒன்று. தலைவி பிரிந்து சென்றபோது தலைவன் மனம் கலங்கிப் பேசுவது பிரிவுழிக் கலங்கல் எனப்படும். இது,
  1.     மருளுற்று உரைத்தல் - மயக்கம் கொண்டு பேசுதல்
  2.     தெருளுற்று உரைத்தல் - தெளிவு பெற்றுப் பேசுதல்

என இருநிலைகளை உடையது.
பிரிவுழிக் கலங்கல் - விரிவு
  1.     தோழியர் கூட்டம், வழிவிட்டு வழிபடத்தக்கவளாக விளங்கும் தலைவியை நாம் கூடியது வியப்புக்குரியதே என மயங்கிக் கூறுதல்.
  2.     தோழியைத் தூதாகப் பெற்று இனியும் கூடி மகிழ்வேன் என்று கூறுதல்.
  3.     தலைவியின் அழகுப் பண்புகளைத் தலைவன் பாராட்டிக் கூறுதல்.
  4.     அத்தகு அழகியைப் பெற்றெடுத்த பெற்றோரை வாழ்த்துதல்.
  5.     தலைவன் இரவில் உறக்கமின்றி வருந்தி உரைத்தல்.

6. இடந்தலைப்பாடு: இடம் - முதன்முதலாகக் கூடிய இடம்.
தலைப்பாடு - மீண்டும் அவ்விடத்தே வந்து கூடுதல்.
முதன்முதலாக இயற்கைப் புணர்ச்சியில் கூடி மகிழ்ந்த தலைவன் (மீண்டும்) அடுத்த நாளும் அவ்விடத்தே வந்து தலைவியைக் கூடுதல் இடந்தலைப்பாடு எனப்படும்.
இடந்தலைப்பாடு வகை: இடந்தலைப்பாடு மூன்று வகைப்படும். அவையாவன:
  1.     தெய்வம் தெளிதல்
  2.     கூடல்
  3.     விடுத்தல்

தெய்வம் தெளிதல்
முன்னே முதல்முறையாகத் தலைவியை நம்மோடு கூட்டி வைத்த தெய்வம் மறுபடியும் அதே இடத்தில் தலைவியை நம்மோடு சேர்த்து வைக்கும் என்று தலைவன் தெளிவுடன் உரைப்பது.
கூடல்: அவ்வாறே தலைவன், தலைவியைக் கூடி மகிழ்தல்.
விடுத்தல்: கூடி மகிழ்ந்த பிறகு தலைவியை அவளது தோழியர் கூட்டத்தின்பால் செல்லுமாறு தலைவன் அனுப்பி வைத்தல்.

இடந்தலைப்பாட்டின் விரிவு
இம்மூவகைப்பட்ட இடந்தலைப்பாட்டு நிகழ்ச்சியையே ஐந்து நிலைகளாக விரிவுபடுத்தியும் வழங்குவர். அவையாவன:
  1.     தந்த தெய்வம் மீண்டும் தரும் எனச் செல்லுதல்
  2.     தன் முன்னே தலைவியைக் காணுதல்
  3.     கூடி மகிழ்தல்
  4.     புகழ்தல்
  5.     தோழியர் கூட்டத்தில் தலைவியைச் சேர்த்தல்.

7. பாங்கன் கூட்டம்: தலைவன் - தலைவியின் முதல் கூட்டம்: இயற்கையாய் நிகழும்.
தலைவன்-தலைவியின் அடுத்த கூட்டம்: அதே இடத்தில் மீண்டும் சந்தித்து நிகழும்.
தலைவன் - தலைவியின் மூன்றாம் கூட்டம்: பாங்கன் எனப்படும் தோழன் மூலமாக நிகழும். அதனைப் பாங்கன் கூட்டம் என்பர்.
பாங்கன் கூட்டத்தின் வகை
இப்பாங்கன் கூட்டம் சார்தல், கேட்டல், சாற்றல், எதிர்மறை, நேர்தல், கூடல், பாங்கியோடு கூடி இருக்கச் செய்தல் என ஏழு வகைகளாக அமையும். அவற்றிற்கும் மேலாக 24 வகைப்பட்ட விரிவுகளையும் கூறியுள்ளார் அகப்பொருள் விளக்க நூலாசிரியர். அந்த 24 செய்திப் பிரிவுகளையும் மேற்கண்ட 7 வகைகளுக்கும் உரியவாறு பாகுபடுத்தியும் கூறியுள்ளார்.
  1.     சார்தல்
  2.     கேட்டல்
  3.     சாற்றல்
     இம்மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புடைய செயல்பாடுகளாகும்.
1. சார்தல்: தலைவன், பாங்கனிடம் சென்று சேர்தல்.
2. கேட்டல்: 
    பாங்கன், தலைவனது வாட்டம் கண்டு, அதற்கான காரணம் கேட்டல்.
3. சாற்றல்: 
    தலைவன், பாங்கனிடம் தன் வாட்டத்திற்கான காரணத்தைக் கூறுதல்.
4. எதிர்மறை
தலைவனது காதலைக் (களவை) கேட்டறிந்த பாங்கன் நினக்கு இது தக்கது அன்று என்று தலைவனிடம் இடித்துரைப்பது எதிர்மறை எனப்படும். இது பாங்கன் மறுத்துப் பேசுவது, தலைவன் அதற்கு விடை சொல்வது, பாங்கன் தலைவனைப் பழித்துப் பேசுவது, தலைவி மீது கொண்ட காமம் என்னால் தாங்க முடியாதது என்று தலைவன் கூறுவது முதலான விரிவுகளை உடையது.
5. நேர்தல்
தலைவன் தனது தாங்க இயலாத காதல் தன்மையை உணர்த்தினான். அதனை உணர்ந்த பாங்கன் தலைவனது கருத்துக்கு இசைந்து செயல்பட முடிவு செய்கிறான். அவனுக்காகத் தலைவியைச் சென்று கண்டு வருகிறான். இதுவே நேர்தல் எனப்படும்.
(நேர்தல் - தலைவனது கருத்துக்கு உடன்பட்டுச் செயல்பட முடிவு செய்தல்)
இது பல விரிவுக் கூறுபாடுகளை உடையது.
  1. பாங்கன் தன் மனத்திற்குள் இரங்குதல்.
  2. பாங்கன் தலைவனிடத்தில் இரக்கத்தைப் புலப்படுத்திப் பேசுதல்.
  3. தலைவியின் உருவம், அவளைக் கண்ட இடம் முதலானவற்றைக் கேட்டறிதல்.
  4. தலைவன் ‘தலைவியின் உருவம் இவ்வகைத்து - கண்ட இடம் இது’ எனக் கூறுதல். (இவ்வகைத்து = இன்ன தன்மையில் அமைந்தது)
  5. ‘தலைவ! நான் அவ்விடத்திற்குச் சென்று கண்டு வருகிறேன் கவலைப்படாதே’ என்று பாங்கன் கூறுதல்.
  6. அவ்வாறே குறிப்பிட்ட அந்த இடத்திற்குப் பாங்கன் செல்லுதல்.
  7. தலைவியை, குறிப்பிட்ட இடத்தில் பாங்கன் காணுதல்.
  8. அவளது பேரழகைக் கண்ட பாங்கன், அறிவில்லாமல் தலைவனை இகழ்ந்து விட்டோமே என்று நெகிழ்ந்து பேசுதல்.
  9. இத்தகு பேரழகியைக் கண்ட பின்னும் - காதல் வயப்பட்ட பின்னும் தலைவன் மீண்டும் வந்தது வியப்பிற்குரியது எனல்.
  10.  தலைவியைப் பற்றி வியப்பு மேலிட்டுப் பேசுதல்.
  11.  மீண்டு வந்து, தலைவி குறியிடத்தில் நிற்கும் நிலையைப் பற்றித் தலைவனிடம் கூறுதல்.
இவையாவும் நேர்தல் என்பதன் விரிவுகளாகும்.
6. கூடல்
பாங்கன் மூலமாக அமைந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தலைவன் தலைவியைக் கூடி இன்புறுதல் கூடல் எனப்படும். இது,
  1.     தலைவன் செல்லுதல்
  2.     தலைவியைக் காணுதல்
  3.     புணர்ந்து மகிழ்தல்
  4.     புணர்ச்சியின்பின் தலைவியைப் புகழ்தல்
என நான்கு உட்கூறுகளை (விரிவுகளை) உடையது, இது.
7. பாங்கிற் கூட்டல்
பாங்கன் வாயிலாகத் தலைவியைக் கூடி மகிழ்ந்த தலைவன் ‘இனி நீ வரும்போது நின் உயிர்த்தோழியோடு வருக!' என்று கூறி, தலைவியை அவளது தோழி இருக்கும் இடத்திற்கு அனுப்பி வைத்தல் பாங்கிற் கூட்டல் எனப்படும்.