வெள்ளி, ஜூன் 04, 2021

உயிர் எழுத்துகளின் பிறப்பு

 

உயிர் எழுத்துகளின் பிறப்பு - பொது

            தமிழில் உள்ள எழுத்துகளை முதல் எழுத்துகள், சார்பு எழுத்துகள் என்று இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்துக் காணும் முறையை நீங்கள் முன்பே அறிந்திருப்பீர்கள். இந்த முதல் எழுத்துகள் முப்பதில் முதலில் வருவன உயிர் எழுத்துகள் பன்னிரண்டு ஆகும். இவை உயிர் போலத் தனித்து இயங்கும் தன்மை உடையவை ஆதலால் உயிர்எழுத்துகள் என்று பெயர் பெற்றன. எனவே எழுத்துகளின் பிறப்பிற்கான இலக்கணத்தைக் காணும் போது உயிர்எழுத்துகளின் பிறப்பினை முதலில் அறிவது மிகவும் பொருத்தமானது.

தொல்காப்பியர் கருத்து

            உயிர்எழுத்துகளின் பொதுப் பிறப்புப் பற்றித் தொல்காப்பியர் கூறும் கருத்துகளை முதலில் காண்போம். முந்தைய பாடத்தில் எழுத்துகளின் பிறப்பிற்குக் கூறப்பட்ட பொதுவான அடிப்படை இலக்கணம் உயிரெழுத்துகளின் பிறப்பிற்கும் பொருந்தும்.

            உயிர்எழுத்துகள் பன்னிரண்டும் மிடற்றில் (கழுத்தில்) பிறக்கும் காற்றினால் உருவாகி ஒலிப்பன. தம்நிலையில் இருந்து மாறாமல் இருக்கும் உயிர்எழுத்துகள் மட்டுமே கழுத்தில் இருந்து தோன்றுவன. ‘தம்நிலையில் இருந்து திரியாமல்’ இருப்பது என்னவெனில், ஓர் உயிர்எழுத்து எந்தவித மாற்றமும் பெறாமல் இருப்பது ஆகும். சில உயிர் எழுத்துகள், எடுத்துக்காட்டாக ‘இகர’மும் ‘உகர’மும், குற்றியலிகரமாகவும், குற்றியலுகரமாகவும் வருகின்ற போது, அவை தம்நிலையில் இருந்து திரிந்து (மாறி) விடுகின்றன. அவ்வாறு இல்லாமல், இயல்பாக வருகின்ற உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மிடற்றில் பிறக்கும் காற்றினால் எழுத்துஒலிகளாகத் தோன்றுகின்றன என்பது தொல்காப்பியர் கருத்தாகும். இதனை,

அவ்வழிப்,

பன்னீ ருயிருந் தந்நிலை திரியா

மிடற்றுப் பிறந்த வளியி னிசைக்கும்   

                                                                             (எழுத்து. 84)

(தந்நிலை = தம்நிலை; மிடறு = கழுத்து; வளி = காற்று)

என்னும் தொல்காப்பிய நூற்பா விளக்குவதைக் காணலாம்.

நன்னூலார் கருத்து

இனி, உயிர்எழுத்துகளின் பிறப்புப் பற்றி நன்னூல் ஆசிரியர் கூறும் கருத்துகளைத் தெரிந்து கொள்ளலாம்.

            நன்னூல் ஆசிரியரும் எழுத்துகள் பிறப்பதற்குக் கூறப்பட்ட பொதுவான இலக்கணத்தின் அடிப்படையில்தான் உயிர்எழுத்துகளும் பிறக்கும் என்கிறார். அந்த வழியில் உயிர்எழுத்துகள் பிறப்பதற்கு இடம் மிடறு ஆகும் (கழுத்து) என்பது அவர் கருத்து. நன்னூல் உயிர்எழுத்துகள் பிறப்பதற்கு உரிய இடத்தைச் சொல்லுகின்ற இந்த இடத்தில், மெய்யெழுத்துகள் பிறப்பதற்கான இடங்களையும் சேர்த்துச் சொல்கின்றது.

நூற்பா

அவ்வழி,

ஆவி இடைமை இடம் மிட றுஆகும்

மேவு மென்மை மூக்கு உரம் பெறும் வன்மை

                                                                                      (நன்னூல். 74)

(ஆவி = உயிர்; இடைமை = இடையினம்; மென்மை = மெல்லினம்; உரம் = நெஞ்சு; வன்மை = வல்லினம்)

'அவ்வழி' என்பது முந்தைய பாடத்தில் சொல்லப்பட்ட 'எழுத்துப் பிறப்புக்கான பொது இலக்கணத்தின்படி' எனப் பொருள்தரும்.

            இந் நூற்பா உயிர்எழுத்துகளுக்கும் மெய்எழுத்துகளுக்கும் (முதல் எழுத்துகளுக்குப்) பிறப்பிடம் கூறுவதாக அமைகின்றது. எனினும் நாம் இந்தப் பாடத்தில் உயிர்எழுத்துகள் பிறப்பின் இலக்கணம் பற்றி மட்டும் காண்போம்.

நன்னூல், உயிர்எழுத்துகளில் ‘இயல்பாக அமையும் உயிர்’ என்றும் ‘தந்நிலை திரியும் உயிர்’ என்றும் வேறுபடுத்திக் கூறவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

            இப்போது, உயிர்எழுத்துகளின் பொதுவான பிறப்பிடம் குறித்த செய்திகளைத் தொகுத்துக் காணலாம்.

(1)       உயிர்எழுத்துகள், எழுத்துஒலிகளின் பொதுவான பிறப்பிட இலக்கணத்தின் படியே            பிறப்பன.

(2)       உயிர்எழுத்துகளின் பிறப்பிடம் கழுத்து ஆகும்.

(3)       தனியே வருகின்ற உயிர்எழுத்தும், எந்தவித மாற்றமும் அடையாத உயிர்எழுத்தும்             மட்டுமே கழுத்தில் இருந்து தோன்றும். தன் மாத்திரை அளவில் இருந்து குறைந்து        ஒலிக்கும் உயிரொலிகளுக்கு இந்தப் பிறப்பிட விதி பொருந்தாது.

பிறப்பிடம் பற்றித் தொல்காப்பியமும் நன்னூலும்

            உயிர்எழுத்துகளின் பிறப்பிடம் பற்றித் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளில் காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகளைத் தொகுத்துக் காண்போம். இச்செய்திகளை மேலும் நன்கு விளங்கிக் கொள்வதற்கு இது பயன்படும்.

ஒற்றுமை

            முதலில், தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளில் காணப்படும் ஒற்றுமைகளைக் காண்போம்.

(1)       இரண்டு நூல்களும், எழுத்துஒலிகள் பிறப்பதற்குத் தேவைப்படும் பொதுவான முயற்சியே, உயிர்எழுத்துகள் பிறப்பதற்கும் தேவைப்படுவது என்பதை உரைக்கின்றன.

(2)       இவ்விரு நூல்களும் உயிர்எழுத்துகள் பிறக்கின்ற இடமாகக் கழுத்தைக் (மிடறு) குறிப்பிடுகின்றன.

வேற்றுமை

            இனி, தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளில் காணப்படும் வேற்றுமையினைக் காணலாம்.

            தொல்காப்பியம் ‘தந்நிலை திரியா’ என்ற தொடரைப் பயன்படுத்தித் தந்நிலை திரியும் உயிர்எழுத்துகளின் பிறப்பிடம் வேறு என்பதை நுட்பமாகப் புலப்படுத்துகின்றது.

            நன்னூலில் அனைத்து உயிர்எழுத்துகளுக்கும் பொதுவாகப் பிறப்பிட இலக்கணம் காணப்படுகின்றது. இதில் இந்த நுட்ப வேறுபாடு கூறப்படவில்லை.

பிறப்பு முயற்சி வேறுபாடும் உயிரெழுத்துகளின் வகைப்பாடும்

            பன்னிரண்டு உயிர்எழுத்துகளும் கழுத்தில் இருந்து தோன்றுகின்றன. ஆனால் இந்த உயிர்எழுத்துகள் அனைத்தும் ஒரே முயற்சியினால் வெளிப்படுவது இல்லை. உயிர்எழுத்துகள் ஒரே இடத்தில் இருந்து பிறக்கின்றன. ஆனால் ஒரே முயற்சியினால் பிறப்பதில்லை என்பதை மனத்தில் கொள்ள வேண்டும்.

            பன்னிரண்டு உயிர்எழுத்துகள் மூன்று விதமான முயற்சியினால் பிறக்கின்றன. அந்த முயற்சி வேறுபாட்டின் அடிப்படையில் உயிர்எழுத்துகளைப் பிரித்துக் காண்போம்.

            (1)       அ, ஆ எழுத்துகளின் பிறப்பு

            (2)       இ, ஈ, எ, ஏ, ஐ எழுத்துகளின் பிறப்பு

            (3)       உ, ஊ, ஒ, ஓ, ஒள எழுத்துகளின் பிறப்பு

 அ, ஆ உயிர்எழுத்துகளின் பிறப்பு

தொல்காப்பியர் கருத்து

            உயிர்எழுத்துகள் பன்னிரண்டனுள் முதலில் வருகின்ற ‘அ’கரமும் ‘ஆ’காரமும் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சி பற்றி முதலில் காண்போம். இவ்விரண்டு உயிர்எழுத்துகளும் நிறை உயிர் முயற்சியுடன் வாயைத் திறக்கின்ற போது தோன்றுகின்றன. ‘வாயைத் திறக்கின்ற’ முயற்சியைத் தமிழ் இலக்கண ஆசிரியர்கள் ‘அங்காத்தல்’- என்ற சொல்லால் குறிப்பிடுவதை அறியலாம். அ, ஆ உயிர்எழுத்துகளின் பிறப்புப் பற்றித் தொல்காப்பியர்,

அவற்றுள்

அ ஆ ஆயிரண்டு அங்காந்து இயலும்

                                                                                                (எழுத்து. 85)

            எழுத்தொலிகள் பிறப்பதற்கு நான்கு உறுப்புகளின் முயற்சியும் தொழிலும் தேவைப்படுவன என்று முந்தைய பாடத்தில் படித்தீர்கள். அந்த நான்கு உறுப்புகள்

            (1)       இதழ்

            (2)       நா

            (3)       பல்

            (4)       அண்ணம்

            என்பவை. இந்த நான்கினுள் ‘அண்ணம்’ என்பது ‘மேல்வாய்’ என்று பொருள்படும்.

எனவே மேல்வாயைத் திறக்கும் முயற்சியின் பயனாக அகர ஆகார உயிர்ஒலிகள் தோன்றும் என்று அறியலாம்.

நன்னூலார் கருத்து

உயிர்எழுத்துகளில் அகரமும் ஆகாரமும் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சியை நன்னூலும் தெரிவிக்கின்றது.

முயற்சியுள் ‘அ ஆ அங்காப்பு உடைய’

                                                                                      (நூற்பா. 75)

            அ, ஆ ஆகிய இவை இரண்டும் ‘வாயைத் திறத்தல் - அங்காத்தல்’ என்னும் முயற்சியின் பயனாகத் தோன்றுகின்றன என்பதை, நன்னூலும் தெளிவுபடுத்துகின்றது.

இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய எழுத்துகளின் பிறப்பு

இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய எழுத்துகளின் பிறப்புப் பற்றித் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளைக் காண்போம்.

தொல்காப்பியர் கருத்து

            இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய ஐந்து எழுத்தொலிகள் தோன்றுவதற்குத் தேவைப்படும் முயற்சிகள் குறித்துத் தொல்காப்பியம் தெரிவிக்கும் கருத்துகளை முதலில் காண்போம். இந்த ஐந்து உயிர்எழுத்துகளும் தோன்றுவதற்கு இரு முயற்சிகள் தேவைப்படுகின்றன. அவை,

தேவைப்படும் முயற்சி:

(1)       வாயைத் திறத்தலாகிய அங்காத்தல்

(2)       மேல்வாய்ப் பல்லை, நாக்கினது அடிப்பகுதியின் விளிம்பு சென்று பொருந்தும் முயற்சி ஆகியன.

ஒத்துழைக்கும் உறுப்புகள்:  மேல்வாய்ப்பல், நாக்கு ஆகியன

இந்த எழுத்துகள் பிறப்பதற்கு ஒத்துழைக்கும் உறுப்புகள் மேல்வாய்ப் பல், நாக்கு என்பன. இதனைத் தொல்காப்பியம்,

இ, ஈ, எ, ஏ, ஐ யென இசைக்கும்

அப்பால் ஐந்தும் அவற்று ஓர் அன்ன

அவைதாம்

அண்பல் முதல்நா விளிம்பு உறல் உடைய

                                                                                                (எழுத்து. 86)

(அன்ன = போன்றவை; நா = நாக்கு; அண்பல் = மேல்வாய்ப்பல்; முதல்நா = நாவின் அடி)

என்று விளக்குகின்றது. இந்நூற்பா இந்த ஐந்து உயிர்எழுத்துகளும் ஒரே முயற்சியினால் பிறக்கின்றன என்று கூறுகின்றது. ‘ஐந்தும் அவற்று ஓர் அன்ன' என்னும் தொடர், அகரம் ஆகாரம் என்னும் எழுத்துகள் பிறப்பதற்குத் தேவைப்படும் அங்காத்தல் முயற்சியே இந்த எழுத்துகள் பிறப்பதற்கும் தேவைப்படுகின்றது என்பதை உணர்த்துகிறது.

 நன்னூலார் கருத்து

இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய உயிர்எழுத்துகள் பிறப்பது குறித்து நன்னூல் தெரிவிக்கும் கருத்துகளைக் காண்போம்.

இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய உயிர்எழுத்துகள் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சி பற்றியும், ஒத்துழைக்கும் உறுப்புகள் குறித்தும் நன்னூல் எடுத்துரைக்கின்றது. அவை,

தேவைப்படும் முயற்சி :      

(1) வாயைத் திறத்தலாகிய அங்காத்தல்.

(2) மேல்வாய்ப் பல்லை நாக்கின் அடியின் ஓரமானது சென்று பொருந்துதல்.

ஒத்துழைக்கும் உறுப்புகள்: மேல்வாய்ப்பல், நாக்கு ஆகியன.

இதனை,

இ ஈ எ ஏ ஐ அங்காப்போடு

அண்பல் முதல்நா விளிம்புற வருமே

                                                                        என்று நன்னூல் நூற்பா (76) விளக்குகின்றது.

(அங்காத்தல் = வாய் திறத்தல்; முதல் நா = அடி நாக்கு; விளிம்பு = ஓரம்)

உ, ஊ, ஒ, ஓ, ஒள ஆகிய எழுத்துகளின் பிறப்பு

தொல்காப்பியர் கருத்து

            தொல்காப்பியம், உ, ஊ, ஒ, ஓ, ஒள ஆகிய உயிர்எழுத்துகள் ஐந்தும் இதழ் குவிந்து சொல்லப் பிறக்கும் என்று விளக்குகின்றது. இதனை,

உ ஊ ஒ ஓ ஒள என இசைக்கும்

அப்பால் ஐந்தும் இதழ் குவிந்து இயலும்

                                                                                      (எழுத்து. 87)

            என்னும் தொல்காப்பிய நூற்பா உரைக்கின்றது. இந்த ஐந்து உயிர்எழுத்துகளும் பிறப்பதற்கு உயிரின் முயற்சியோடு, இதழ் குவிதலாகிய முயற்சியும் தேவைப்படுகின்றது என்பது தெளிவாகிறது.

நன்னூலார் கருத்து

            உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் இந்த ஐந்து உயிர்எழுத்துகளும் எவ்வாறு பிறக்கின்றன என்பதை நன்னூலும் விளக்கியுள்ளது.

            நன்னூல் இந்த எழுத்துகள் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சியையும், ஈடுபடும் உறுப்புகளையும் மிகச் சுருக்கமாகத் தெரிவிக்கக் காணலாம். இந்த உயிர்எழுத்துகள் இதழ் குவிதலால் தோன்றுகின்றன என்று தெரிவிக்கின்றது. இக்கருத்தை,

உ, ஊ, ஒ, ஓ, ஒள இதழ் குவிவே

                                                                                                (நூற்பா. 77)

                                    என்னும் நூற்பாவின் மூலம் நன்னூல் விளக்கிச் செல்கின்றது.

உயிர் ஒலிகள் பிறப்பது பற்றித் தொல்காப்பியமும் நன்னூலும்

            உயிர்ஒலிகள் பிறப்பது பற்றித் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவித்த கருத்துகளில் வெளிப்படும் ஒற்றுமை காணத்தக்கது.

ஒற்றுமை

            இரு இலக்கண நூல்களும் அ, ஆ ஆகிய உயிர்எழுத்துகள் இரண்டும் வாயைத் திறத்தலால் பிறக்கும் என்றும், இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய ஐந்து உயிர்எழுத்துகளும் மேல்வாய்ப் பல்லை (அண்பல்) நாக்கின் அடியானது (நாமுதல்) சென்று பொருந்த (விளிம்புறப்) பிறக்கும் என்றும், உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் ஐந்து உயிர்எழுத்துகளும் இதழ் குவிதலால் பிறக்கும் என்றும் கூறுகின்றன. எனவே இதில் இரண்டு நூலாசிரியர்களுக்கும் இடையில் எந்த வித வேறுபாடும் இல்லை.