வெள்ளி, ஜூன் 04, 2021

எழுத்துக்களின் பிறப்பு

 

தொல்காப்பியரின் விளக்கம்

            தமிழ் மொழியில் இன்று வரை கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழமையானது தொல்காப்பியம். இதனை இயற்றியவர் தொல்காப்பியர். இந்நூல் கி.மு. 4ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இந்நூல் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் தமிழில் உள்ள ஐந்து இலக்கணங்களையும் விளக்குகின்றது. இத்தகைய பழமையான தமிழ் இலக்கண நூல், எழுத்துகளின் பிறப்புப் பற்றி ஆராய்ந்து கூறியிருப்பது சிறப்புடையதாகும்.

எழுத்தொலி பிறத்தல்

            எழுத்தை உச்சரிக்க முயலும் ஒருவரின் கொப்பூழில் (உந்தி) இருந்து காற்று மேல் நோக்கி எழுகின்றது. இவ்வாறு எழும் காற்று அவரது தலை, கழுத்து, நெஞ்சு (மார்பு) ஆகிய இடங்களில் சென்று தங்கி (தொட்டு) நிற்கும். பின்னர், தலை, கழுத்து, நெஞ்சு ஆகிய இந்த மூன்று உறுப்புகளுடன், பல், இதழ், நாக்கு, மூக்கு, அண்ணம் (மேல்வாய்) ஆகிய ஐந்து உறுப்புகளும் சேர்ந்து இந்த எட்டு உறுப்புகளின் பொருத்தமான முயற்சியின் விளைவாக வெவ்வேறு எழுத்து ஒலிகள் பிறக்கின்றன. தமிழில் உள்ள எல்லா எழுத்து ஒலிகளும் இந்த முறையிலேயே பிறக்கின்றன. இதுவே எழுத்துப் பிறப்பின் பொதுவான இலக்கணம் ஆகும். (தொல்காப்பியம். எழுத்ததிகாரம், 83)

வெவ்வேறு ஒலிகள்

            ஆனால், எல்லா எழுத்தொலியும் தோன்றுவதற்கு இந்த எட்டு உறுப்புகளின் முயற்சியும் ஒத்துழைப்பும் தேவைப்படுவது இல்லை. தேவைப்படும் உறுப்புகள் பொருந்தி இயங்கும் தன்மைக்கேற்பவே வெவ்வேறு ஒலிகள் தோன்றும். ஒவ்வோர் எழுத்தொலியும் தோன்றுவதற்கு வெவ்வேறு உறுப்புகளின் ஒத்துழைப்புக் காரணமாக அமைகின்றது.

தேவைப்படும் முயற்சி

            ஒலியை எழுப்ப நினைக்கும் ஒருவர் முதலில் செய்ய வேண்டியது முயற்சி ஆகும். இந்த முயற்சியை இலக்கண ஆசிரியர்கள் 'உயிரின் முயற்சி’ என்று அழைக்கின்றனர். ஒலியை எழுப்பக் கருதிய ஒருவரின் உயிர்ப்புத் தன்மையே அடுத்தடுத்த முயற்சிக்குக் காரணமாக அமைகிறது. அதனைத் தொடர்ந்து உறுப்புகளின் ஒத்துழைப்புகளுக்கும் அதுவே காரணமாகிறது. எனவே எழுத்து ஒலிகள் தோன்றுவதற்கு மனித முயற்சி மிகவும் இன்றியமையாததாகும்.

            இவ்வகையில், தொல்காப்பியரின் கருத்துப்படி, உயிரின் முயற்சியால் கொப்பூழில் இருந்து காற்று எழுகின்றது. இக்காற்று மேல்நோக்கிச் செல்கின்றது. இம்முயற்சிக்கு உறுப்புகள் துணை செய்கின்றன. இந்த உறுப்புகளில் அக்காற்று சென்று பொருந்துகின்றது. மேல்நோக்கி எழும் இக்காற்று பொருந்தும் உடல் உறுப்புகளைக் குறிப்பிடும் போது, தலை, கழுத்து, நெஞ்சு என்ற வரிசையில் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.

ஒத்துழைக்கும் உறுப்புகள்

            எழுத்தொலிகள் தோன்றுவதற்குத் தேவைப்படும் உறுப்புகளாகத் தொல்காப்பியர் எட்டு உறுப்புகளைக் குறிப்பிடுகின்றார். இந்த எட்டு உறுப்புகளை இரண்டு பிரிவாகப் பகுத்துக் காணலாம். அவை,

(1) காற்றுப் பொருந்தும் உறுப்புகள்.

(2) ஒன்றுடன் ஒன்று ஒத்துழைக்கும் உறுப்புகள்

காற்றுப் பொருந்தும் உறுப்புகள்:

காற்றுப் பொருந்தும் உறுப்புகள் 3 ஆகும். அவை,

            தலை,

            கழுத்து,

            நெஞ்சு.

ஒன்றுடன் ஒன்று ஒத்துழைக்கும் உறுப்புகள்:

எழுத்தொலிகள் தோன்றுவதற்கு ஒன்றுடன் ஒன்று இயைந்து ஒத்துழைக்கும் உறுப்புகள் எட்டு ஆகும். அவை, முதலில் கூறப்பட்ட தலை, கழுத்து, நெஞ்சு ஆகிய மூன்றுடன்,

            பல்,

            இதழ்,

            நாக்கு,

            மூக்கு,

அண்ணம் ஆகிய ஐந்தும், சேர்ந்து 8 ஆகும்.

நன்னூலாரின் விளக்கம்

            இதுவரை, தொல்காப்பியம் எழுத்தொலிகளின் பிறப்புப் பற்றித் தெரிவித்த கருத்துகளைக் கண்டோம். இனி, இதுபற்றி நன்னூல் கூறும் கருத்துகளையும் காண்போம். நன்னூல் 12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கண நூல். இது, எழுத்து, சொல் ஆகிய இரு இலக்கணங்களை மட்டுமே விளக்குகின்றது. தமிழ் இலக்கணம் கற்க விரும்புவோர் முதலில் இந்நூலில் இருந்து கற்கத் தொடங்குவது மரபு.

எழுத்தொலி பிறத்தல்

            நன்னூல், ஒவ்வோர் எழுத்தும் ஒலியாக வெளிப்படுவதற்கு இரண்டு நிலைகள் தேவைப்படுகின்றன என்று தெரிவிக்கின்றது. அவை,

            (1) உயிரின் முயற்சி

            (2) உடல் உறுப்புகளின் ஒத்துழைப்பு

            குறைபாடில்லாத நிறைந்த, உயிரின் முயற்சியினால் உள்ளே இருக்கும் காற்றானது மேலே எழும்பி நிற்கும்;  அவ்வாறு எழுகின்ற காற்று, செவிகளுக்குக் கேட்கும்படியான அணுக்கூட்டமாகத் திரண்டு, மார்பு, கழுத்து, தலை, மூக்கு என்ற நான்கு இடங்களில் பொருந்தும்; பின்பு இதழ், நாக்கு, பல், அண்ணம் ஆகிய நான்கு உறுப்புகளின் இயக்கத்தினாலும் வேறுவேறு எழுத்துகளுக்கு உரிய ஒலிகள் தோன்றுகின்றன. இவ்வாறே எழுத்துகள் ஒலிவடிவம் பெறுகின்றன. இதனை எழுத்துகளின் பிறப்பு என்று கூறலாம் என்று நன்னூல் தெரிவிக்கின்றது.

தேவைப்படும் முயற்சி

            எழுத்தொலி தோன்ற முதலில் தேவைப்படுவது ஒருவரின் முயற்சி ஆகும். இந்த முயற்சி உயிரின் முயற்சியாக இருக்க வேண்டும். உயிர்ப்புத் தன்மை நிறைந்த ஒருவரின் முயற்சியாக இருக்க வேண்டும். முயற்சியில் முழுமை இல்லாமல் இருந்தால் நினைத்த ஒலி எழும்பாது. எனவே உயிரின் முயற்சி என்று குறிப்பிடாமல் நன்னூல் ஆசிரியர் இங்குத் தேவைப்படும் முயற்சியை ‘நிறை உயிர் முயற்சி’ என்று குறிப்பிடுகின்றார். இத்தொடர், ஒலி எழுப்ப நினைப்பவரின் முயற்சிக்கு நிறைந்த உயிர் முயற்சிதான் தேவை என்பதைச் சுட்டுகின்றது. இத்தகைய முயற்சியின் விளைவாகவே உந்தியில் இருக்கும் காற்று மேல்நோக்கி எழும். அவ்வாறு எழும் காற்று உடலின் நான்கு உறுப்புகளில் சென்று தங்கும். இந்த நான்கு உறுப்புகளையும் எழுத்துஒலிகள் பிறப்பதற்கு முயற்சி செய்யும் உறுப்புகள் எனலாம். அவை,

            (1) மார்பு,

            (2) கழுத்து,

            (3) தலை (உச்சி)

            (4) மூக்கு

ஒத்துழைக்கும் உறுப்புகள்

            எழுத்தொலிகள் தோன்றுவதற்கு, சில உறுப்புகளின் முயற்சியுடன் வேறு சில உறுப்புகளின் ஒத்து இயங்கும் தன்மையும் தேவைப்படுகின்றது. சில உறுப்புகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட்டால்தான் எழுத்தொலிகள் பிறக்கும். அவ்வகையில் ஒத்துழைக்கும் உறுப்புகளை நன்னூல் ஆசிரியர் பட்டியலிட்டுக் காட்டுகின்றார். அவை,

            (1) இதழ்

            (2) நாக்கு

            (3) பல்

            (4) அண்ணம்

            இந்த நான்கு உறுப்புகளில் எந்த உறுப்பின் முயற்சியால் ஓர் எழுத்தொலி பிறக்கின்றதோ, அந்த எழுத்திற்கு அந்த உறுப்பு பிறப்பிடம் என்று அழைக்கப்படுகின்றது. எனவே உறுப்புகளின் ஒத்துழைக்கும் தன்மைக்கு ஏற்ப வெவ்வேறு எழுத்தொலிகள் தோன்றுகின்றன. ஓர் எழுத்தொலி பிறக்க ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்புகளின் ஒத்துழைப்பும் தேவையாக அமைவதும் உண்டு.

நிறை உயிர் முயற்சியின் உள்வளி துரப்ப

எழும் அணுத்திரள் உரம், கண்டம், உச்சி

மூக்கு உற்று, இதழ், நாப் பல் அணத் தொழிலின் வெவ்வேறு எழுத்தொலியாய் வரல் பிறப்பே.

            என்பது நன்னூல் நூற்பா (73). இதில், உரம் என்பது மார்பையும், கண்டம் என்பது கழுத்தையும் குறிக்கும். அணம் என்பது அண்ணம், (மேல்வாய்) என்று பொருள்படும்.

எழுத்துப் பிறப்பில் தொல்காப்பியமும் நன்னூலும்

            எழுத்தொலிகளின் பிறப்புப் பற்றித் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவித்த கருத்துகளை அறிந்து கொண்டீர்கள். அவற்றைத் தனித்தனியே பார்த்தபோது அவ்விரு நூல்கள் தெரிவித்த கருத்துகளுக்கு இடையில் சில ஒற்றுமைகளும் சில வேற்றுமைகளும் இருப்பதைக் கண்டிருப்பீர்கள். இப்போது, அந்த ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் தொகுத்துக் காண்போம். இவ்வாறு ஒப்பிட்டுக் காண்பது, நாம், இக் கருத்துகளை மேலும் தெளிவாகப் புரிந்து கொள்ளத் துணை செய்யும்.

ஒற்றுமை

(1)       இரண்டு இலக்கண நூலாசிரியர்களும் ஓர் எழுத்துப் பிறப்பதற்கு உந்தியில் (கொப்பூழ்) இருந்து காற்றுத் தோன்றி மேலே எழும்ப வேண்டும் என்கின்றனர்.

(2)       எழுத்துகள் பிறப்பதற்கு ஒத்துழைக்கும் உறுப்புகளில் ஒன்று மற்றொன்றோடு இயைந்து இயங்கும் தன்மைக்கேற்ப வேறு வேறு ஒலிகள் பிறக்கின்றன என்று இருவரும் உரைக்கின்றனர்.

(3)       இரு நூலாரும், அடிப்படையில் எழுத்துஒலிகள் பிறப்பதற்கு அடிப்படையான உறுப்புகளாகக் குறிப்பிடும் உறுப்புகளின் மொத்த எண்ணிக்கை எட்டு ஆகும்.

வேற்றுமை

(1)       தொல்காப்பியர் காற்று மேலே எழும்பித் தங்கும் இடங்களாக மூன்று உறுப்புகளை மட்டுமே குறிப்பிடுகின்றார். அவை முறையே தலை, கழுத்து, நெஞ்சு என்பன.

            நன்னூலார் காற்று மேலே எழுந்து தங்கும் இடங்களாக நான்கு உறுப்புகளைச் சுட்டுகிறார். அவை முறையே, நெஞ்சு, கழுத்து, உச்சி, மூக்கு என்பன.

(2)       உறுப்புகளைக் குறிப்பிடுகையில் தொல்காப்பியர் மேலே இருந்து கீழே இறங்கி வருவது போல் தலை, கழுத்து, நெஞ்சு என்று குறிப்பிடுகின்றார்.

            நன்னூலார் காற்று கீழிருந்து மேலே எழும்பும் அதே இயல்பான நிலையில் மார்பு, கழுத்து, உச்சி, மூக்கு என்ற வரிசையில் அமைத்துள்ளார்.

(3)       எழுத்தொலிகள் பிறக்கப் பயன்படும் உறுப்புகளைத் தொல்காப்பியர் எட்டு என்று விரித்துள்ளார். காற்றுத் தங்கும் இடங்களான மூன்றையும் சேர்த்துக் குறிப்பிடுகின்றார்.

            நன்னூலார், இந்த உறுப்புக்களில் இதழ், நாக்கு, பல், அண்ணம் என்ற நான்கு உறுப்புகளை மட்டுமே எழுத்துப் பிறப்பதற்கு இயங்கும் உறுப்புகளாகக் குறிப்பிடுகின்றார்.

எழுத்துப் பிறப்பும் மொழியியலும்

            எழுத்தொலிகளின் பிறப்புப் பற்றி இலக்கண நூல்கள் தந்த விளக்கங்களை விரிவாகக் கண்டோம். எழுத்தொலிகள் பற்றி மொழிநூல் அறிஞர்கள் மிக விரிவாக ஆராய்ந்துள்ளனர். மொழிநூல் அறிஞர்கள் இது குறித்து ஆராய்ந்து விளக்கங்களை வெளியிட்ட பின்னரே, இத்துறையில் பல உண்மைகள் வெளிப்பட்டன என்று கூறலாம். எனவே எழுத்தொலிகள் பிறப்புப் பற்றி மொழிநூல் அறிஞர்கள் தெரிவிக்கும் கருத்துகளையும் இங்கு ஒப்பிட்டுக் காண்பது பொருத்தம் உடையது.

மரபு

            ஒரு மொழிக்கு இலக்கணம் வகுக்கும் மரபுவழி இலக்கண ஆசிரியர்கள் மொழியின் எழுத்து வடிவத்திற்கே முதன்மை தருவர். அதனை விளக்கிக் கூறுவர். ஏட்டில் இலக்கிய வடிவம் பெற்ற எழுத்து வடிவத்தினை ஆராய்ந்து அதன் நுட்பத்தை வெளிப்படுத்துவர். மொழியின் பேச்சு வடிவத்தை ஆய்வுக்கு ஏற்றுக் கொண்டு அதனை விளக்குவது மரபுவழி இலக்கண நூல்களில் காணப்படுவது இல்லை. இந்த நிலை உலக மொழிகள் அனைத்திற்கும் பொதுவானதாகும்.

மொழியியல்

            ஒரு மொழியை அறிவியல் பார்வையோடு அணுகவேண்டும் என்ற கருத்து எழுந்த போது ‘மொழியியல்’ என்ற பிரிவு உருவானது. மொழியியல் துறையில் ஈடுபடும் அறிஞர்கள் ஒரு மொழியின் எழுத்துவடிவத்தை விட அதன் பேச்சு வடிவத்தையே தங்கள் ஆய்விற்கு ஆதாரங்களாக எடுத்துக் கொண்டனர். மொழியியலார் பேச்சு மொழிதான் ஒரு மொழியின் உண்மையான இயல்பினை எடுத்துரைக்கும் என்று கருதுகின்றனர். இதனால் பேச்சொலி எழுவதற்குக் காரணமாக இருக்கும் மொழியின் ஒலி வடிவத்தில் தங்கள் ஆர்வத்தைச் செலுத்தினர். எனவே மொழியின் ஒலி வடிவத்திற்கு முதன்மை தரும் நிலையில் மொழியியல் ஆய்வுகள் எழுந்தன.

மொழியியல் உண்மைகள்

            பேச்சு ஒலிகளை ஆய்வு செய்ய முற்பட்டவர் மொழியியல் அறிஞர்கள். இந்த ஆய்வு, பேச்சு ஒலிகள் தோன்றுவதற்குக் காரணமாக அமையும் உடல் உறுப்புகளையும் ஆய்வு செய்யத் தூண்டியது. எனவே எந்த ஒலி தோன்றுவதற்கு எந்த உறுப்பின் முயற்சியும் ஒத்துழைப்பும் பயன்படுகின்றது என்பதை ஆய்வு செய்து கண்டனர். அந்த ஆய்வின்படி பல உண்மைகளை வெளியிட்டனர். இந்த மொழியியல் ஆய்வுகள் எல்லாம் 19-ஆம் நூற்றாண்டிலும் 20-ஆம் நூற்றாண்டிலும் இடம்பெற்றன. மேனாட்டு அறிஞர்கள் 19-ஆம் நூற்றாண்டில் தொடங்கி 20-ஆம் நூற்றாண்டில் இதில் மிகவும் முனைந்து ஈடுபட்டனர். இவ்வறிஞர்கள் வெளிப்படுத்திய உண்மைகளைத் தொல்காப்பியமும் நன்னூலும் முன்பே எடுத்துரைக்கக் காணலாம்.

            எனவே, தமிழ் இலக்கணம் அறிவியல் முறைப்படி அமைந்தது என்பது இதனால் வெளிப்படுகின்றது. 2500 ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய தொல்காப்பியம் இன்றைய மொழியியலாரின் கருத்துகளை அன்றே விளக்கி இருப்பது தமிழ் மொழியின் சிறப்புக்குச் சான்றாக உள்ளது.