வெள்ளி, ஜூன் 04, 2021

மெய்ம்மயக்கம்

 மெய்ம்மயக்கம்

            உயிர் எழுத்துடன் உயிர் எழுத்துச் சேர்ந்து வருதல் இல்லை.  எனவே இரண்டு உயிர் எழுத்துகள் சேர்ந்து வருதல் பற்றி இப்பாடத்தில் குறிப்பிடவில்லை.  மயக்கம் என்பது சேர்ந்து வருதலைக் குறிக்கும். மெய் எழுத்துகள் இரண்டு சேர்ந்து வருதலைக் குறிப்பது மெய்ம்மயக்கம் எனப்படும். உயிர் எழுத்துடன் மெய்எழுத்துச் சேர்ந்து மிகப் பல இடங்களில் வரும். அவற்றைப் பல்வேறு தமிழ் இலக்கியங்களில் நாம் படித்துத் தெரிந்து கொள்ள இயலும். எனவே, இப்பாடத்தில் மெய்ம்மயக்கம் பற்றி மட்டுமே தெரிவிக்கப்படுகிறது.

மெய்ம்மயக்கம் இரண்டு வகைப்படும். அவை:

            1. வேற்றுநிலை மெய்ம்மயக்கம்

            2. உடன்நிலை மெய்ம்மயக்கம்

                                                                        என்பவை ஆகும்.

வேற்றுநிலை மெய்ம்மயக்கம்

            ஒரு மெய் எழுத்தை அடுத்து வேறு ஒரு மெய்எழுத்துச் சேர்ந்து வருவது வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எனப்படும்.

            ஒரு சொல்லின் முதல் எழுத்தாக உயிர் மெய் எழுத்து இருந்தால் அதனை மெய்+உயிர் எனப் பிரித்துப் பார்க்க வேண்டும் என்பதை முந்தைய பாடத்தில் பார்த்தோம். எனவே ஒரு சொல்லில் ஒரு மெய் எழுத்தை அடுத்து ஓர் உயிர்மெய் எழுத்து வரும்போது இரண்டு மெய் எழுத்துகள் அடுத்தடுத்து வருகின்றன. அப்படி வரும்போது அவை இயல்பாக அமைகின்றனவா என்று பார்க்க வேண்டும். இயல்பாக இருந்தால் அது வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எனப்படும்.

            எடுத்துக்காட்டாக, நான்கு என்னும் சொல்லில் ன் என்னும் மெய்எழுத்தும் க் என்னும் மெய் எழுத்தும் இயல்பாக இணைந்து ஒலிக்கின்றன. எனவே இது வேற்றுநிலை மெய்ம்மயக்கம் என்று அழைக்கப்படுகிறது.

            மெய்எழுத்துகள் பதினெட்டில் க, ச, த, ப என்னும் நான்கு மெய் எழுத்துகள் தவிர்த்து, ஏனைய பதினான்கு மெய்எழுத்துகளும் வேற்றுநிலை மெய்ம்மயக்கத்தில் வரும்.

வேற்றுநிலை மெய்ம்மயக்கத்தில் வரும் மெய் எழுத்துகள்

ங், ஞ், ட், ண், ந், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்

என்பன ஆகும்.

• ங் என்னும் மெய்எழுத்து

‘ங்’ என்னும் மெய்எழுத்துக்குப் பின், ‘க்’ என்னும் மெய்எழுத்து மட்டுமே வரும் பிற மெய் எழுத்துகள் வருவது இல்லை.

எடுத்துக்காட்டு:

            தங்கம்

            வங்காளம்

            அங்கி (நெருப்பு, சட்டை)

            அங்கு

            அங்கூடம் (அழகிய கூடம்)

            அங்கே

            அங்கை (உள்ளங்கை)

            எங்கோமான்

• ஞ் என்னும் மெய் எழுத்து

‘ஞ்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் ச், ய் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.

எடுத்துக்காட்டு:

            கஞ்சம் (தாமரை)

            அஞ்சாமை

            அஞ்சி

            அஞ்சீறடி (அழகிய சிறிய பாதம்)

            கஞ்சுகம் (சட்டை)

            உரிஞ்(தேய்) யாது

• ட் என்னும் மெய் எழுத்து

‘ட்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ப் ஆகிய மெய் எழுத்துகள் வரும்

எடுத்துக்காட்டு:

            வெட்கம்

            வெட்சி (ஒரு பூ)

            மாட்சி (பெருமை)

            நட்பு

            நுட்பம்

• ண் என்னும் மெய் எழுத்து

‘ண்’ என்னும் மெய்எழுத்துக்குப் பின் க், ச், ஞ், ட், ப், ம், ய், வ் ஆகிய எட்டு மெய் எழுத்துகளும் வரும்.

எடுத்துக்காட்டு:

            வெண்கலம்

            கண்காட்சி                 }           க்

            வெண்சோறு

            மண்சேறு                   }           ச்

            வெண்ஞமலி

            உண்ஞமலி (உண்கின்ற நாய்)        }           ஞ்

            மண்டலம்

            வண்டல்                     }           ட்

            நண்பகல்

            நண்பன்                      }           ப்

            வெண்மலர்

            உண்மை                    }           ம்

            மண்யாது                   -           ய்

            மண்வலிது                 -           வ்

• ந் என்னும் மெய் எழுத்து

‘ந்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் த், ய் என்னும் மெய்எழுத்துகள் வரும்.

எடுத்துக்காட்டு:

            வந்த

            வந்தான்                                 }           த்

            வெரிந்யாது                           -           ய்

• ம் என்னும் மெய்எழுத்து

‘ம்’ என்னும் மெய்எழுத்துக்குப் பின் ப், ய், வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.

எடுத்துக்காட்டு:

            கம்பன்

            அம்பு                                                  }                       ப்

            கலம்யாது

            புலம்யாது                                          }                       ய்

            கலம்வலிது

            வலம்வரும்                                         }                       வ்

• ய் என்னும் மெய் எழுத்து

‘ய்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ஞ், த், ந், ப்,ம், வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.

எடுத்துக்காட்டு:

            பொய்கை (நீர்நிலை)

            மொய்குழல்(அடர்ந்த கூந்தல்)        }           க்

            வேய்சிறிது

            காய்சினம்                              }           ச்

            வேய்ஞான்ற

            (மூங்கில் முதிர்ந்தது)                        -           ஞ்

            நெய்தல்

            நொய்து (மெல்லியது)          }           த்

            மெய்நீண்டது                        -           ந்

            மெய்பெரிது               -           ப்

            பேய்மனம்                 -           ம்

            பேய்வலிது                -           வ்

• ர் என்னும் மெய் எழுத்து

‘ர்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ஞ், த், ந், ப், ம், வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.

எடுத்துக்காட்டு:

            வேர்கள்                     -           க்

            வேர்சிறியது              -           ச்

            வேர்ஞான்றது           -           ஞ்

            தேர்தல்                      -           த்

            நீர்நிலம்                     -           ந்

            மார்பு                          -           ப்

            கூர்மை                       -           ம்

            வியர்வை                   -           வ்

• ல் என்னும் மெய் எழுத்து

‘ல்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ப், ய், வ் என்னும் மெய் எழுத்துகள் வரும்.

எடுத்துக்காட்டு:

            கால்கோள் (தொடக்கம்)     -           க்

            வல்சி (உணவு)                      -           ச்

            கல்பாக்கம்                             -           ப்

            நல்யாறு                                 -           ய்

            பல்வலி                                   -           வ்

• வ் என்னும் மெய் எழுத்து

‘வ்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் ‘ய்‘ என்னும் மெய்எழுத்து மட்டும் வரும்.

எடுத்துக்காட்டு : தெவ்யாது (தெவ் - பகை)

• ழ் என்னும் மெய் எழுத்து

‘ழ்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ஞ், த், ந், ப், ம், வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.

எடுத்துக்காட்டு:

            ழூழ்கினான்   - க்

            பாழ்செய் (பாழ்படுத்து)        - ச்

            வீழ்ஞான்ற (தொங்கிய விழுது)      - ஞ்

            ஆழ்தல்           - த்

            வாழ்நாள்       - ந்

            வாழ்பவன்     - ப்

            வாழ்மனை     - ம்

            வாழ்வு            - வ்

• ள் என்னும் மெய் எழுத்து

‘ள்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ப், ய், வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.

எடுத்துக்காட்டு:

            கொள்கலம்    - க்

            வாள்சிறிது     - ச்

            வாள் பெரிது  - ப்

            வாள்யாது      - ய்

            கள்வன்          - வ்

• ற் என்னும் மெய்எழுத்து

‘ற்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ப் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.

எடுத்துக்காட்டு:

            கற்க    - க்

            கற்சிலை        - ச்

            கற்பவை        - ப்

• ன் என்னும் மெய் எழுத்து

‘ன்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ஞ், ப், ம், ய், வ், ற் என்னும் மெய் எழுத்துகள் வரும்.

எடுத்துக்காட்டு:

            பொன்கலம்   - க்

            புன்செய்         - ச்

            புன்ஞமலி      - ஞ்

            புன்பயிர்        - ப்

            நன்மை           - ம்

            பொன்யாது   - ய்

            பொன்வலிது - வ்

            தென்றல்        - ற்

            இதுவரை க், ச், த், ப் என்னும் நான்கு மெய் எழுத்துகள் தவிர, ஏனைய பதினான்கு மெய் எழுத்துகளும் பிற மெய் எழுத்துகளுடன் சேர்ந்து வரும் தன்மையைப் பார்த்தோம்.

உடன்நிலை மெய்ம்மயக்கம்

ஒரு மெய் எழுத்துக்குப் பின் அதே மெய் எழுத்து வருவது உடன்நிலை மெய்ம்மயக்கம் எனப்படும்.

மெய் எழுத்துகள் பதினெட்டில் ர், ழ் என்னும் மெய் எழுத்துகளைத் தவிர ஏனைய பதினாறு மெய் எழுத்துகளும் உடன்நிலை மெய்ம்மயக்கத்தில் வரும்.

உடன்நிலை மெய்ம்மயக்கத்தில் வரும் மெய்எழுத்துகள்:

            க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ல், வ், ள், ற், ன்

                        என்னும் மெய் எழுத்துகள் உடன்நிலை மெய்ம்மயக்கத்தில் இடம்பெறும்.

• ‘க்’ என்னும் எழுத்து

            மக்கள்

            அக்காள்

• ‘ங்’ என்னும் எழுத்து

            அங்ஙனம் (அவ்விதம்)

            எங்ஙனம் (எவ்விதம்)

• ‘ச்’ என்னும் எழுத்து

            உச்சி

            அச்சு

• ‘ஞ்’ என்னும் எழுத்து

            அஞ்ஞான்று (அப்பொழுது)

            எஞ்ஞான்று (எப்பொழுது)

• ‘ட்’ என்னும் எழுத்து

            பட்டம்

            சட்டை

• ‘ண்’என்னும் எழுத்து

            அண்ணன்

            கண்ணீர்

• ‘த்’என்னும் எழுத்து

            கத்தி

            பத்து

• ‘ந்’என்னும் எழுத்து

            வெந்நீர்

            செந்நீர்

• ‘ப்’என்னும் எழுத்து

            கப்பல்

            குப்பை

• ‘ம்’ என்னும் எழுத்து

            அம்மை

            அம்மாடு

• ‘ய்’ என்னும் எழுத்து

            செய்யான்

            வெய்யோன் (கதிரவன்)

• ‘ல்’ என்னும் எழுத்து

            எல்லாம்

            நல்லவன்

• ‘வ்’ என்னும் எழுத்து

            செவ்வாய்

            கொவ்வை

• ‘ள்’ என்னும் எழுத்து

            பள்ளம்

            தள்ளு

• ‘ற்’ என்னும் எழுத்து

            குற்றம்

            காற்று

• ‘ன்’ என்னும் எழுத்து

            மன்னன்

            பின்னால்

            மேலே நாம் பார்த்த உடன்நிலை மெய்ம்மயக்கங்களில் ஒரு மெய் எழுத்திற்கு அடுத்து அதே மெய்எழுத்து வந்துள்ளது. ஆனால் அந்த மெய் எழுத்துத் தனித்து வராமல் உயிர்மெய் எழுத்தின் உருவில் வந்துள்ளது. க்+அ = க என்பது போல் இடம்பெற்றுள்ளது.

ஈர்ஒற்று மயக்கம்

            ஒரு மெய் எழுத்துக்கு அடுத்து வேறொரு மெய்எழுத்து, உயிர்மெய் எழுத்துடன் வராமல் தனி மெய் எழுத்தாகவும் வருவது உண்டு. அவ்வாறு இரண்டு மெய் எழுத்துகள் சேர்ந்து வருவதை ஈர்ஒற்று மயக்கம் என்று கூறுவர்.

எடுத்துக்காட்டு: புகழ்ச்சி

            இதில் ‘ழ்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின் ‘ச்’ என்ற மெய் எழுத்து வந்துள்ளது. இந்த ‘ச்’ என்னும் எழுத்து உயிர்மெய்யுடன் சேர்ந்து வராமல் தனி மெய் எழுத்தாகவே வந்துள்ளது.

ஈர்ஒற்று மயக்கம் வரும் இடங்கள்:

            ய், ர், ழ் என்னும் மூன்று மெய் எழுத்துகளை அடுத்து, க், ங், ச், ஞ், த், ந், ப், ம் ஆகிய மெய் எழுத்துகள் ஈர்ஒற்றுகளாகச் சேர்ந்து வரும்.

• ‘ய்’ என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று வருதல்

            நாய்க்கால்                 -           க்

            வேய்ங்குழல்              -           ங்

            காய்ச்சல்                    -           ச்

            மெய்ஞ்ஞானம்          -           ஞ்

            மேய்த்தல்                  -           த்

            பாய்ந்தது                   -           ந்

            வாய்ப்பு                      -           ப்

செய்ம்மன (செய்யுளில் மட்டுமே வரும்)

• ‘ர்’ என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று வருதல்

            பார்க்கிறாள்              -           க்

            ஆர்ங்கோடு               -           (ஆத்திமரக்கிளை) - ங்

            உயர்ச்சி                     -           ச்

            ஞ்                                -           வழக்கத்தில் இல்லை.

            பார்த்தல்                    -           த்

            ஊர்ந்து                       -           ந்

            தீர்ப்பு                         -           ப்

            ம்                                 -           வழக்கத்தில் இல்லை.

• ‘ழ்’ என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று வருதல்

 

            வாழ்க்கை                  -           க்

            பாழ்ங்கிணறு                        -           ங்

            வீழ்ச்சி                        -           ச்

            ஞ்                                -           வழக்கத்தில் இல்லை

            வாழ்த்து                     -           த்

            வாழ்ந்து                     -           ந்

            தாழ்ப்பாள்                 -           ப்

            ம்                                 -           வழக்கத்தில் இல்லை.

செய்யுளில் ஈர்ஒற்று மயக்கம்

மேலே நாம் படித்த மெய்ம்மயக்கங்கள் செய்யுளிலும் பேச்சு வழக்கிலும் இடம் பெறும் மெய்ம்மயக்கங்கள் ஆகும்.

செய்யுளில் மட்டுமே இடம் பெறும் ஈர்ஒற்று மயக்கமும் உள்ளது. அதை இங்கே காண்போம்.

            சார்பு எழுத்துகள் என்னும் பாடத்தில் மகரக்குறுக்கம் என்று ஒரு சார்பு எழுத்தைப் பற்றி நீங்கள் படித்திருக்கிறீர்கள். உங்களுக்கு நினைவிருக்கிறதா? அதை மீண்டும் நினைவு கூர்வோம்.

            ‘ம்’ என்னும் மெய்எழுத்து, தனக்குரிய மாத்திரையில் குறைந்து ஒலிப்பது மகரக்குறுக்கம் எனப்படும். இந்த மகரக்குறுக்கத்தில் இரண்டு மெய் எழுத்துகள் அருகில் இருக்கும்.

எடுத்துக்காட்டு

                        போன்ம்

                        மருண்ம்

            இந்த மகரக் குறுக்கங்களும் ஈர் ஒற்று மயக்கம் ஆகும். இது செய்யுளில் மட்டுமே இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.