வெள்ளி, ஜூன் 04, 2021

உயிர்மெய் எழுத்துகளின் நிலை

 1. உயிர்மெய் எழுத்துகளின் நிலை

            தமிழில் உள்ள எழுத்துகளை முதல் எழுத்துகள், சார்பு எழுத்துகள் என வகைப்படுத்தலாம் என முந்தைய பாடங்களில் பார்த்தோம். உயிர் எழுத்து, மெய் எழுத்து ஆகிய முதல் எழுத்துகளும், சார்பு எழுத்துகளில் உயிர்மெய் எழுத்துகளும் சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் வரும் தன்மையை இந்தப் பாடம் வரையறுத்துச் சொல்கிறது.

உயிர் எழுத்து, மெய் எழுத்து என்று முதல் எழுத்துகள் இரு வகைப்படும்.

            அவற்றில் உயிர் எழுத்துகள் சொல்லுக்கு முதலில் வரும். மெய் எழுத்துகள் சொல்லுக்கு இறுதியில் வரும். உயிர் எழுத்துகள் தனியாகச் சொல்லுக்கு இறுதியில் வருவது இல்லை. மெய் எழுத்துகள் தனியாகச் சொல்லுக்கு முதலில் வருவது இல்லை. வல்லின எழுத்துகள் சொல்லுக்கு இறுதியில் வருவது இல்லை.

எடுத்துக்காட்டு

சொல்லின் முதல் எழுத்தாக உயிர் எழுத்து வருதல்.

அம்மா

எறும்பு

சொல்லுக்கு இறுதியில் மெய் எழுத்து வருதல்.

மணல்

முள்

கண்

உயிர்மெய் எழுத்துகள் சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் வரும்.

சொல்லுக்கு முதலில் உயிர்மெய் எழுத்து வருதல்.

பல்

கண்

மரம்

நிழல்

சொல்லுக்கு இறுதியில் உயிர்மெய் எழுத்து வருதல்.

எலி

அப்பா

உணவு

ஒற்றுமை

            உயிர் எழுத்துகளும் மெய் எழுத்துகளும் சேர்ந்து உண்டாவதே உயிர்மெய் எழுத்து என்பதை நீங்கள் அறிவீர்கள். மேலும் உயிர்மெய் எழுத்துகளில் மெய் எழுத்துகள் முன்னும் உயிர் எழுத்துகள் பின்னும் அமைந்துள்ளன என்பதையும் நீங்கள் அறிவீர்கள். சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் வரும் எழுத்துகளைப் பற்றிப் பார்க்கும்போது உயிர்மெய் எழுத்துகளை மெய்+உயிர் என்று தனித்தனியே பிரித்துவிட வேண்டும். அவ்வாறு பிரித்துவிட்டால் சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் உயிர்எழுத்து அல்லது மெய் எழுத்து ஆகிய இரண்டு மட்டுமே வரும் என்பது தெளிவாகிவிடும்.

            மரம் என்ற சொல்லின் முதல் எழுத்து ம. இதைப் பிரித்துப் பார்த்தால் ம்+அ என்று வரும். மரம் என்ற சொல் ம் என்ற மெய் எழுத்தில் தொடங்கிய சொல் என்று கொள்ள வேண்டும்.

            கிளி என்ற சொல்லின் இறுதி எழுத்து ளி என்பதாகும். இதைப் பிரித்துப் பார்த்தால் ள்+இ என்று வரும். கிளி என்ற சொல் இ என்ற உயிர் எழுத்தில் முடிகின்ற சொல் என்று கொள்ள வேண்டும்.

            இவ்வாறு பிரித்துப் பார்க்கும் போது எல்லா எழுத்துகளையும் உயிர் எழுத்து அல்லது மெய் எழுத்து என்ற பகுப்புக்குள் கொண்டு வந்து விடலாம். ஒருசொல் உயிர் எழுத்திலோ அல்லது மெய் எழுத்திலோ தான் தொடங்குகிறது என்று கூறிவிட இயலும். அதே போல ஒரு சொல் உயிர் எழுத்திலோ அல்லது மெய் எழுத்திலோ தான் முடிகிறது என்றும் கூறிவிட இயலும்.

            சொல் என்பது ஒரு பொருளைக் குறிப்பது. பல எழுத்துகளின் சேர்க்கை ஒரு சொல் ஆகிறது. ஒரே எழுத்தும் ஒரு பொருளைக் குறிக்கப் பயன்படும். அப்போது அந்த ஒற்றை எழுத்தும் ஒருசொல் ஆகிறது. நெடில் எழுத்துகள் மட்டுமே தனித்து ஒரு சொல்லாக வரும்.

            தீ,  பூ,  வா,  போ

இவற்றை ஓர் எழுத்து ஒரு மொழி என்று கூறுவர். இந்தச் சொற்கள் எல்லாம் உயிர்மெய் எழுத்துகள் வரும் ஓர் எழுத்துச் சொற்கள். இவற்றைப் பிரித்துப் பார்க்கலாம்.

            தீ         =          த்         +         

            பூ         =          ப்         +         

            வா      =          வ்         +         

            போ    =          ப்         +         

            மேலே பிரித்துக் காட்டியுள்ளதைக் கவனியுங்கள். இவற்றில் மெய் எழுத்து முன்னும், உயிர் எழுத்து பின்னும் அமைந்துள்ளன. எனவே இவற்றை மெய் எழுத்தில் தொடங்குகின்ற சொற்களாகவும், உயிர் எழுத்தில் முடிகின்ற சொற்களாகவும் கொள்ள வேண்டும்.

          நின்ற நெறியே உயிர்மெய் முதல் ஈறே

                                                                                                                        (நன்னூல் -109)

(பொருள் : உயிர்மெய் எழுத்துகளில் மெய் எழுத்து முன்னும், உயிர் எழுத்து பின்னும் இருக்கும்.)

தனி உயிர் நெடில் எழுத்துகள் சொற்களாக அமைவதும் உண்டு.

எடுத்துக்காட்டு

            ஆ (பசு), ஈ, ஏ (அம்பு)

2 மொழி முதல் எழுத்துகள்

ஒரு சொல்லுக்கு முதலில் வரும் எழுத்துகள் பற்றி இந்தப் பாடத்தில் காணலாம். சொல்லுக்கு முதலில் உயிர் எழுத்துகளோ மெய் எழுத்துகளோ வரும். சொல் என்பதும், மொழி என்பதும், பதம் என்பதும் ஒரே பொருள் தரும் சொற்கள் ஆகும். முதலில் சொல்லுக்கு முதலில் வரும் உயிர் எழுத்துகளைப் பற்றிப் பார்ப்போம்.

சொல்லுக்கு முதலில் வரும் உயிர் எழுத்துகள்

உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும்.

எடுத்துக்காட்டு:

            அம்மா            அல்லி

            ஆடு                ஆறு

            இடை             இரண்டு

            ஈடு                  ஈரம்

            உடை             உடல்

            ஊர்                 ஊக்கம்

            எறும்பு            எலி

            ஏணி               ஏடு

            ஐந்து               ஐப்பசி

            ஒன்று             ஒட்டகம்

            ஓடு                  ஓடம்

            ஒளவையார்   ஒளவியம் (பொறாமை)

சொல்லுக்கு முதலில் வரும் மெய் எழுத்துகள்

            இந்தப் பாடத்தின் முதல் பகுதியில் உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள் இயல்பாக மெய் எழுத்தில் தொடங்குகின்றன என்பது விளக்கப்பட்டது. இப்போது சொல்லின் முதலில் வரும் மெய் எழுத்துகள் பற்றிக் காணலாம். மெய் எழுத்துகள் உயிர் எழுத்துகளுடன் சேர்ந்தே சொல்லின் முதலில் வரும் என்று கூறப்பட்டது. மெய்எழுத்துகள் எந்தெந்த உயிர்எழுத்துகளுடன் சேர்ந்து சொல்லின் முதலில் வரும் என்றும் பின்வரும் பகுதியில் விளக்கப்படும்.

            ஒரு மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சேர்ந்து உருவாகும் உயிர்மெய் எழுத்துகளை வருக்க எழுத்துகள் என்று கூறுவர். எடுத்துக்காட்டாக, க் என்ற மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சேர்ந்து உருவான க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ என்னும் பன்னிரண்டு உயிர்மெய் எழுத்துகளையும் ககர வருக்கம் என்று கூறுவர்.

• க் என்னும் மெய்எழுத்து

ககர மெய் எழுத்து, பன்னிரண்டு உயிர் எழுத்துகளுடன் சேர்ந்தும் சொல்லுக்கு முதலில் வரும்.

            கல்                  கரும்பு

            கால்                காகம்

            கிளி                கிழமை

            கீரி                  கீரை

            குயில்             குரங்கு

            கூடு                கூத்து

            கெட்ட            கெடுதி (அழிவு)

            கேள்வி           கேணி (கிணறு)

            கை                  கைத்தடி

            கொடி             கொம்பு

            கோடு             கோட்டை

            கௌதாரி      

• ங் என்னும் மெய் எழுத்து

ஙகரம். அ, இ ஆகிய சுட்டு எழுத்துகளுக்குப் பின்னும், யா, எ, ஆகிய வினா எழுத்துகளுக்குப் பின்னும் சொல்லுக்கு முதலில் வரும்.

            அங்ஙனம் (அப்படி)

            இங்ஙனம் (இப்படி)

            எங்ஙனம் (எப்படி)

            யாங்ஙனம் (எப்படி)

                        சுட்டு, யா, எகர வினா வழி, அவ்வை

                        ஒட்டி ஙவ்வும் முதல் ஆகும்மே   (106)

என்னும் நன்னூல் நூற்பா, ஙகர எழுத்து மொழிக்கு முதலில் வருவதை விளக்குகிறது.

• ச் என்னும் மெய்எழுத்து

            சகரம் பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து மொழிக்கு முதலில் வரும். ஆனால் பழங்காலத்தில் அ, ஐ, ஒள என்னும் ழூன்று உயிர் எழுத்துகளுடனும் மொழிக்கு முதலில் வருவதில்லை. அ என்னும் எழுத்துடன் சேர்ந்து சக்கரம், சங்கு, சங்கம் முதலான சொற்கள் பழங்காலம் முதலே பயன்படுத்தப் படுகின்றன. ஐ, ஒள ஆகிய உயிர் எழுத்துகளுடன் சகரம் சேர்ந்துவரும் சொற்கள் தமிழில் இல்லை. சைகை, சௌக்கியம் முதலான பிறமொழிச் சொற்களே பயன்படுத்தப்படுகின்றன.

            சக்கரம்           சந்தனம்

            சாலை             சாறு

            சிரிப்பு             சிலந்தி

            சீற்றம்                        சீப்பு

            சுட்டு               சுண்ணாம்பு

            சூடு                 சூடாமணி

            செறிவு            செம்பு

            சேறு               சேரன்

            சைகை            சைவம்

            சொல்             சொட்டு

            சோறு             சோழன்

• ஞ் என்னும் எழுத்து

ஞகரம் அ, ஆ, எ, ஒ ஆகிய நான்கு உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.

 

ஞமலி (நாய்)              ஞலவல் (மின்மினிப் பூச்சி)              =ஞ்+அ

ஞாலம் (உலகம்)       ஞாயிறு                                              =ஞ்+ஆ

ஞெகிழி (தீப்பொறி)             ஞெலிகோல் (தீக்கடையும் கோல்) =ஞ்+எ

ஞொள்குதல் (இளைத்தல்)                                                             =ஞ்+ஒ

அ, ஆ, எ, ஒவ்வொடு ஆகும் ஞம் முதல்

                                                                                      (நன்னூல்.105)

(பொருள் : ஞகர மெய் எழுத்து அ, ஆ, எ, ஒ, ஆகிய நான்கு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும். )

• த் என்னும் மெய்எழுத்து

தகர மெய் எழுத்து, பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.

            தரை               தம்பி

            தாமரை          தாய்

            திசை               திணை

            தீர்ப்பு             தீமை

            துடிப்பு            துன்பம்

            தூண்              தூக்கம்

            தென்னைமரம்          தென்றல்

            தேன்               தேங்காய்

            தைமாதம்       தையல்

            தொழில்         தொட்டி

            தோட்டம்       தோகை

            தௌவை (அக்காள்)

• ந் என்னும் மெய்எழுத்து

நகர மெய் எழுத்து, பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.

            நன்றி              நகை

            நாடு                நாள்

            நிறம்               நிழல்

            நீர்                   நீளம்

            நுங்கு              நுனி

            நூல்                நூறு

            நெல்               நெஞ்சு

            நேற்று                        நேர்மை

            நையாண்டி(கேலி)    நைதல்

            நொடி             நொறுங்குதல்

            நோக்கம்        நோட்டம்

            நௌவி (மான்)         

• ப் என்னும் மெய்எழுத்து

பகரமெய் எழுத்து, பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.

            பல்                  பழம்

            பால்                பாட்டு

            பிடி                 பிரிவு

            பீலி                 (தோகை)       பீடு (பெருமை)

            புகழ்                புல்

            பூங்கா             பூட்டு

            பெட்டி            பெண்

            பேச்சு  பேழை (பெட்டி)

பை      பையன்

பொன்            பொங்கல்

போட்டி          போர்

பௌத்தர் (புத்த சமயத்தவர்)          

• ம் என்னும் மெய் எழுத்து

மகர மெய் எழுத்து, பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.

            மண்    மக்கள்

            மான்   மாடு

            மின்னல்         மிதியடி

            மீன்     மீண்டும்

            முரசு   முடி

            மூங்கில்          மூன்று

            மெய்   மெழுகு

            மேடு   மேளம்

            மை     மையம்

            மொழி            மொட்டு

            மோதிரம்       மோசடி

            மௌனம்        மௌவல்(முல்லை மலர்)

• ய் என்னும் மெய்எழுத்து

யகர மெய் எழுத்து அ, ஆ, உ, ஊ, ஓ, ஓள ஆகிய ஆறு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும். யகர மெய் எழுத்து, பழங்காலத்தில் ஆ (ய்+ஆ=யா) என்னும் எழுத்துடன் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

            யவனர்                                   யவை (நெல்வகை)

            யானை                                   யாழ்

            யுகம் (கால அளவு)  

            யூகி (அறிவாளி)       

            யோகம் (இணைந்து நிற்றல்)         

            யௌவனம் (இளமை)         

          அ, ஆ, உ, ஊ, ஓ, ஒள யம் முதல்

                                                                                                (நன்னூல். 104)

(பொருள்: அ, ஆ, ஊ, ஓ, ஒள ஆகிய உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து யகர மெய் சொல்லுக்கு முதலில் வரும். )

• வ் என்னும் மெய் எழுத்து

வகர மெய் எழுத்து அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒள ஆகிய எட்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.

            வணக்கம்       வரிசை

            வால்               வாய்

            வில்                 விண்

            வீடு                 வீண்

            வெற்றி           வெண்மை

            வேல்               வேங்கை

            வைகை          வையகம் (உலகம்)

            வௌவால்    

            உ, ஊ, ஒ, ஓ அலவொடு வம் முதல்

                                                                                                (நன்னூல் - 103)

(பொருள்: வகர மெய் எழுத்து உ, ஊ, ஒ, ஓ ஆகிய நான்கு தவிர மற்ற (அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒள) எட்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.)

3. சொல்லுக்கு முதலில் வராத மெய் எழுத்துகள்

            க, த, ந, ப, ம, ச, ஞ, ய, வ, ங என்னும் பத்து மெய் எழுத்துகளும் மொழிக்கு முதலில் வரும் என்பதை அறிந்தோம். இவை தவிர உள்ள ட, ண, ர, ல, ழ, ள, ற, ன என்னும் எட்டு மெய் எழுத்துகளும் மொழிக்கு முதலில் வருவதில்லை. ஆனால் இந்த எழுத்துகளைக் குறிக்கும் போது இவை மொழிக்கு முதலில் வரும்.

‘ட‘ என்னும் எழுத்து, ‘ண‘ என்னும் எழுத்து என்று எழுத்தைக் குறிப்பிடும் போது இவையும் முதலில் வருகின்றன.

            தமிழ்மொழி பேசும் மக்கள் பிறமொழி பேசுகிறவர்களுடன் கலந்து பழகி வாழ்கின்றனர். அவ்வாறு அவர்களுடன் பழகும்போது பிறமொழிச் சொற்களையும் பயன்படுத்துகிறார்கள். அப்படிப் பேச்சுவாக்கில் தமிழ் மொழியில் நுழைந்த பிறமொழிச் சொற்கள் பலவும் தமிழ்மொழியில் பயன்பாட்டில் உள்ளன. அவற்றையும் தமிழ் மக்கள் பயன்படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட பிறமொழிச் சொற்களில் ட, ண, ர, ல, ற என்னும் ஐந்து மெய்எழுத்துகளும் முதலில் வருகின்றன.

            ராமன்

            லலிதா

            முதலான பிறமொழிப் பெயர்களைத் தமிழில் பயன்படுத்துகிறோம். இவ்வாறு பிறமொழிப் பெயர்களைத் தமிழ்மொழியில் பயன்படுத்தும் போது அவற்றைத் தமிழ்மொழியின் இயல்புக்கு ஏற்பவே காலங்காலமாகப் பயன்படுத்தி வருகிறோம்.

            ரகர வருக்க எழுத்துகளும் லகர வருக்க எழுத்துகளும் தமிழ்மொழியில் சொல்லுக்கு முதலில் வருவதில்லை என்பதை அறிந்து அவற்றுக்கு முன் ‘இ’ என்னும் எழுத்தைச் சேர்த்து அப்பெயர்களை எழுதுகிறோம்

            ராணி              இராணி

            ரவி                  இரவி

            ராமன்             இராமன்

            லலிதா            இலலிதா

            லாபம்             இலாபம்

            லாடம்                        இலாடம்

மேலே ‘இ’ என்னும் எழுத்தைச் சேர்த்தது போல் ‘அ’என்னும் எழுத்தைச் சேர்த்துப் பயன்படுத்துவதும் உண்டு.

ரங்கன்          அரங்கன்

இ, அ என்னும் எழுத்துகளைச் சேர்த்துப் பயன்படுத்துவதுபோல் ‘உ’ என்னும் எழுத்தைச் சேர்த்தும் பிறமொழிப் பெயர்களைப் பயன்படுத்துவது உண்டு.

            ரோம்              உரோம்

            ரோமம்           உரோமம்

            ரொட்டி          உரொட்டி

            இவ்வாறு பிறமொழியிலிருந்து பெற்றுப் பயன்படுத்தும் சொற்கள் அனைத்தும் பெயர்ச் சொற்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளுதல் வேண்டும். அந்தப் பிறமொழிப் பெயர்களையும் நம் தமிழ் மொழியின் தன்மைக்கு ஏற்பவே அமைத்துப் பயன்படுத்துகிறோம். பிற மொழிப் பெயர்களைத் தேவை கருதிப் பயன்படுத்துவதைப் போல் பிறமொழி வினைச் சொற்களையும் பிறசொற்களையும் பயன்படுத்தக் கூடாது.

• ஒலிக்குறிப்புச் சொற்கள்

சில ஒலிக்குறிப்புகளை நாம் நமது அன்றாடப் பேச்சில் பயன்படுத்துகிறோம்.

            கோழி கொக். . . கொக் என்று கொக்கரிக்கும்

            காக்கை கா. . . கா என்று கரையும்

            நாய் லொள் . . . லொள் என்று குரைக்கும்

இவற்றில் இடம்பெற்றுள்ள கொக். . . கொக். . ., கா. . .கா. . ., லொள். . . லொள். . .  என்பவை ஒலிக்குறிப்புச் சொற்கள். இவை போன்று வேறு பல ஒலிக்குறிப்புகளையும் பயன்படுத்துகிறோம். இத்தகைய ஒலிக்குறிப்புச் சொற்களில் மொழிக்கு முதலில் வராத எழுத்துகளும் இடம்பெறுவது உண்டு.

            மணி டாண். . . .டாண் என்று ஒலித்தது.

            பட்டாசு டமார். . . டமார் என்று வெடித்தது.

இவை போன்ற ஒலிக்குறிப்புச் சொற்களைத் தமிழ்மொழியில் இரட்டைக் கிளவி என்று சொல்கிறோம். இரட்டைக் கிளவி பற்றி, பின்னர் விரிவாகப் படிப்போம்.

மொழி இறுதி எழுத்துகள்

            சொல்லுக்கு இறுதியில் வரும் எழுத்துகளை மொழி இறுதி எழுத்துகள் என்று கூறுவர். மெய் எழுத்துகள் இயல்பாகவே சொல்லுக்கு இறுதியில் வரும். சொல்லுக்கு இறுதியில் வரும் உயிர்மெய் எழுத்துகளை உயிர் எழுத்துகளாகவே கொள்ளவேண்டும் என்று இந்தப் பாடத்தின் முன்பகுதியில் படித்தது நினைவிருக்கிறதா?

சொல்லுக்கு இறுதியில் வரும் உயிர் எழுத்துகள்

            உயிர் எழுத்துகள் தனியாகச் சொல்லுக்கு முதலில் மட்டுமே வரும். சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் வருவது இல்லை; மெய் எழுத்துடன் சேர்ந்து உயிர்மெய் எழுத்தாகவே சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் வரும். அவ்வாறு வரும் உயிர் எழுத்துகளில் எவை சொல்லுக்கு இறுதியில் வரும் என்பதைப் பார்க்கலாம்.

            உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சொல்லுக்கு இறுதியில் வரும். அவற்றில் எகரக் குறில் அளபெடையாக மட்டுமே சொல்லுக்கு இறுதியில் வரும். ஏனைய அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள ஆகிய உயிர் எழுத்துகள் சொல்லுக்கு இறுதியில் வரும்.

            எடுத்துக்காட்டு

                    பல      சில      திற

                    நிலா   பலா    சுறா

                    பனி     எலி     நரி

                     தேனீ  தீ        

                    ஏழு     கதவு   மிளகு

                   பூ         தூ (வெண்மை)         

                     சேஎ               

                     எங்கே            யானே           

                     மழை  தாமரை          மலை

                     நொ (துன்பம்)                       

                     நிலவோ         மலரோ          

            ஒள      கௌ (கொள்)            வௌ (திருடு)           

குற்றியலுகரமும் சொல்லுக்கு இறுதியில் வரும்.

            ஆறு    காடு

            பட்டு   காற்று

            பந்து   பாம்பு

            செய்து            மூழ்கு

            பழகு   விளையாடு

            அஃது  எஃகு

சொல்லுக்கு இறுதியில் வரும் மெய் எழுத்துகள்

வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மெய் எழுத்துகள் மூன்று வகைப்படும். இவற்றில் வல்லின மெய் எழுத்துகள் சொல்லுக்கு இறுதியில் வருவது இல்லை. மெல்லின மெய் எழுத்துகள் ஐந்தும், இடையின மெய் எழுத்துகள் ஆறும் சொல்லுக்கு இறுதியில் வரும்.

மெல்லின மெய் எழுத்துகளில் ஞ், ண், ந், ம், ன் ஆகிய ஐந்தும் சொல்லுக்கு இறுதியில் வரும்.

            உரிஞ்(தேய்க்கும்)    

            ஆண்  பெண்

            வெரிந் (முதுகு)          பொருந் (போரிடும், பொருந்தும்)

            மரம்    வெள்ளம்

            மன்னன்         பொன்

உரிஞ் என்னும் ஒரு சொல்லில் மட்டும் ‘ஞ்‘ என்னும் மெய்எழுத்து, இறுதியில் வரும்.

வெரிந், பொருந் என்னும் இரு சொற்களில் மட்டும் ‘ந்‘ என்னும் மெய்எழுத்து இறுதியில் வரும்.

இடையின மெய் எழுத்துகள் ஆறும் (ய், ர், ல், வ், ழ், ள்) சொல்லுக்கு இறுதியில் வரும்.

            நாய்    தாய்

            வேர்    தண்ணீர்

            கால்    நடத்தல்

            தெவ் (பகை) 

            கீழ்      ஊழ்

            முள்     வாள்

அவ், இவ், உவ், தெவ் என்னும் நான்கு சொற்களில் மட்டும் ‘வ்’ என்னும் மெய் எழுத்து இறுதியில் வரும்

ஆவி, ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள மெய்

சாயும் உகரம் நால் ஆறும் ஈறே.

                                                                                      (நன்னூல் - 107)

(பொருள் : உயிர் எழுத்துகள் பன்னிரண்டும், ஞ, ண, ந, ம, ன,ய, ர, ல, வ, ழ, ள ஆகிய பதினொரு மெய் எழுத்துகளும் குற்றியலுகரமும் ஆக இருபத்து நான்கும் சொல்லுக்கு இறுதியில் வரும்.)