வெள்ளி, ஜூன் 04, 2021

சார்பு எழுத்துகள்

சார்பு எழுத்துகள்

1. உயிர்மெய்

            உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய் எழுத்துத் தோன்றும். இதில் மெய் எழுத்து முன்னும் உயிர் எழுத்துப் பின்னும் ஒலிக்கப்படும். பதினெட்டு மெய் எழுத்துகள், பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து, இருநூற்றுப் பதினாறு உயிர்மெய் எழுத்துகள் தோன்றும்.

            மெய்   -           உயிர்              =          உயிர்மெய்

            18        x          12                    =          216

எடுத்துக்காட்டாக

க் என்ற மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சேர்ந்து பன்னிரண்டு உயிர்மெய் எழுத்துகள் உருவாகின்றன.

            க்         +          அ        =          க

            க்         +          ஆ        =          கா

            க்         +          இ        =          கி

            க்         +          ஈ         =          கீ

            க்         +          உ        =          கு

            க்         +          ஊ       =          கூ

            க்         +          எ         =          கெ

            க்         +          ஏ         =          கே

            க்         +          ஐ         =          கை

            க்         +          ஒ         =          கொ

            க்         +          ஓ         =          கோ

            க்         +          ஒள      =          கௌ

இவ்வாறே மற்ற மெய் எழுத்துகளும் 12 உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து 216 உயிர்மெய் எழுத்துகள் தோன்றுவதை இணைப்பில் காண்க.

            உயிர் எழுத்துகளுக்கு உரிய மாத்திரையே உயிர்மெய் எழுத்துகளுக்கும் பொருந்தும். அதாவது உயிர்மெய்க் குறில் எழுத்துகள் ஒரு மாத்திரையும், உயிர்மெய் நெடில் எழுத்துகள் இரண்டு மாத்திரையும் பெறும். உயிர்மெய் எழுத்துகள் மெய் எழுத்துகளைப் போலவே வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மூன்று இனமாகவும் வரும்.

            உயிர்மெய் எழுத்துகளின் ஒலிவடிவம் உயிர் எழுத்தின் ஓசையும் மெய் எழுத்தின் ஓசையும் கலந்ததாக இருக்கும். உயிர்மெய் எழுத்துகளை ஒலித்து, அதில் மெய்யின் ஓசையும் உயிர் எழுத்தின் ஓசையும் கலந்து இருப்பதை அறிக.

உயிர்மெய் எழுத்துகளில் மெய் எழுத்து முன்னும் உயிர் எழுத்து பின்னும் வரும்.

            க         =          க்         +          அ

            மு        =          ம்         +          உ

உயிர்மெய் எழுத்துகளின் வரிவடிவம் மெய் எழுத்துகளின் அடிப்படையில் அமைந்திருக்கும்.

            எடுத்துக்காட்டு:

                                    க் = க, கா, கி, கீ

                                    ப் = பி, பு, பெ, பை

                                    ட் = டி, டீ, டொ, டோ

            உயிர்மெய் எழுத்துகளின் வரிவடிவம் பின்வருமாறு அமையும்.

அகர உயிருடன் கூடிய மெய் எழுத்துகள், புள்ளி இல்லாத மெய் எழுத்தாக இருக்கும்.

          க, ங, ச, ஞ, ட

மற்ற உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து வரும்போது மேற்கண்ட வடிவத்தில் சில மாற்றங்கள் பெற்று வரும்.

ஆகார உயிருடன் சேர்ந்த மெய் எழுத்துகள், அகரத்துடன் சேர்ந்த மெய் எழுத்துகளுடன் வலதுபக்கம் கால் ‘ா’ பெற்று வரும்.

          கா, சா, ஞா, டா

இகர உயிருடன் சேர்ந்த மெய் எழுத்துகள் மேலே ‘ி’குறியீடு பெற்று வரும்

            பி, சி, தி, டி

ஈகார உயிருடன் சேர்ந்த மெய் எழுத்துகள் மேலே ‘ீ’குறியீடு பெற்று வரும்

            நீ, ளீ, ரீ, தீ

உகரத்துடன் கூடிய மெய் எழுத்துகள் தனியான குறியீடு இல்லாமல் முழு உருவமும் மாறி வரும்.

          கு, ஙு, சு. ஞு, டு, ணு, து, நு, பு,மு, யு, ரு, லு, வு, ழு, ளு, று, னு.

ஊகாரத்துடன் கூடிய மெய் எழுத்துகளும் தனிக் குறியீடு இல்லாமல் மாறி வரும்.

            கூ, ஙூ, சூ, ஞூ, டூ, ணூ, தூ, நூ. பூ,மூ, யூ, ரூ, லூ, வூ, ழூ, ளூ, றூ, னூ.

எகரத்துடன் சேர்ந்த மெய் எழுத்துகள் இடதுபக்கம் ஒற்றைக் கொம்பு என்னும் ‘ெ’ குறியீடு பெற்று வரும்.

            கெ, செ, டெ, மெ

ஏகாரத்துடன் சேர்ந்த மெய் எழுத்துகள் இடதுபக்கம் இரட்டைக் கொம்பு என்னும் ‘ே’ குறியீடு பெற்று வரும்.

            கே, பே, ளே, வே, யே

ஐகாரத்துடன் சேர்ந்த மெய் எழுத்துகள் இடதுபக்கம் ‘ை’என்ற குறியீட்டைப் பெற்று வரும்.

            மை, லை, றை, ழை, னை

ஒகரத்துடன் சேர்ந்த மெய் எழுத்துகள் இடதுபக்கம் ‘ெ’என்ற குறியீடும், வலதுபக்கம் ‘ா’ என்ற குறியீடும் பெற்று வரும்.

            பொ, யொ, ரொ, சொ

ஓகாரத்துடன் சேர்ந்த மெய் எழுத்துகள் இடதுபக்கம் ‘ே’என்ற குறியீடும், வலதுபக்கம் ‘ா’ என்ற குறியீடும் பெற்று வரும்.

            கோ, டோ, மோ, யோ, ழோ

ஒளகாரத்துடன் சேர்ந்த மெய் எழுத்துகள் இடதுபக்கம் ‘ெ’என்ற குறியீடும், வலதுபக்கம் ‘ள’ என்ற குறியீடும் பெற்று வரும்.

            பௌ, சௌ, நௌ, ரௌ

புள்ளி விட்டு அவ்வொடு முன் உரு ஆகியும்

ஏனை உயிரொடு உருவு திரிந்தும்

உயிர் அளபாய் அதன் வடிவு ஒழித்து இருவயின்

பெயரொடும் ஒற்று முன்னாய் வரும் உயிர் மெய்

                                                                                                            (நன்னூல் 89)

            (பொருள்: அகர உயிர் எழுத்துடன் சேர்ந்து வரும்போது புள்ளி இல்லாமலும் மற்ற உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து வரும்போது வடிவம் திரிந்தும் வரும். மாத்திரை கொள்ளும்போது உயிர்எழுத்தின் மாத்திரையே கொண்டு வரும். மெய் எழுத்து முன்பும் உயிர் எழுத்து பின்பும் வந்து உயிர் மெய் என்று இரண்டின் பெயரையும் பெற்று வரும்.)

2. ஆய்தம்

            ஆய்த எழுத்தும் சார்பு எழுத்துகளில் ஒன்று. இதன் வரிவடிவம் முக்கோணத்தில் அமைந்த மூன்று புள்ளிகள் போன்று இருக்கும்.

            ஃ

            ஆய்த எழுத்து அரை மாத்திரை நேரம் ஒலிக்கும். ஆய்த எழுத்து, தனியாக வராது. சொல்லுக்கு நடுவில் மட்டும் வரும். ஆய்த எழுத்துக்கு முன்பு குறில் எழுத்தும், பின்னால் உகரத்துடன் சேர்ந்த வல்லின எழுத்தும் (கு, சு, டு, து, பு, று) வரும்.

            அஃது

            எஃகு

            இது தனிமொழி ஆய்த எழுத்து ஆகும். இரண்டு சொற்கள் சேரும்போதும் ஆய்த எழுத்து உருவாகும். இதைப் பின்னர் காணலாம்.

குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி

உயிரொடு புணர்ந்த வல் ஆறன் மிசைத்தே

                                                                                                            (நன்னூல் 90)

பொருள்:

            ஆய்த எழுத்து குறில் எழுத்திற்குப் பின்பும், குற்றியலுகர எழுத்திற்கு முன்பும் வரும்.

3. உயிரளபெடை

பழங்காலத்தில் தமிழ் மொழியில் இலக்கியங்கள் பெரும்பாலும் செய்யுள்களாகவே இருந்தன. செய்யுள், ஓசையை அடிப்படையாகக் கொண்டது. குறள் வெண்பா முதல் பல வகையான செய்யுள் வடிவங்கள் இருந்தன. செய்யுளில் ஓசை குறையும் இடங்களில் ஓசையை நிறைவு செய்வதற்காக எழுத்துகள் நீண்டு ஒலிக்கும். இவ்வாறு நீண்டு ஒலிப்பதை, அளபெடுத்தல் என்று கூறுவர். அளபெடை இரண்டு வகைப்படும். அவை,

            1. உயிரளபெடை

          2. ஒற்றளபெடை

என்பவை ஆகும்.

            நெடில் எழுத்துகளே அளபெடுக்கும். நெடில் எழுத்து அளபெடுக்கும் போது, அந்த நெடில் எழுத்திற்கு இனமான குறில் எழுத்து அளபெடுப்பதற்கு அடையாளமாக அதன் அருகில் எழுதப்படும். செய்யுளில் இவ்வாறு எழுதப்பட்டுள்ள இடங்களில் நீட்டி ஒலிக்க வேண்டும் என்பது அதன் கருத்தாகும். நெடில் எழுத்து இரண்டு மாத்திரை. அளபெடுக்கும்போது அதற்கு இனமான குறில் எழுத்தையும் எழுதுவதால், குறிலுக்கு உரிய ஒரு மாத்திரையும் சேர்த்து உயிரளபெடை மூன்று மாத்திரை நேரம் ஒலிக்கும்.

            இன எழுத்துகள் ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஒளஉ என்பனவாகும், ஐகாரத்திற்கும் ஒளகாரத்திற்கும் இணையான குறில் இல்லை என்பதால், முறையே இகரம், உகரம் ஆகியவை அடையாளமாக எழுதப்படும்.

          மாஅயோள்

          பேஎய்ப் பக்கம்

            இசை கெடின் மொழி முதல் இடை கடை நிலை நெடில்

          அளபு எழும் அவற்று அவற்று இனக் குறில் குறியே

                                                                             (நன்னூல் 91)

(பொருள்: செய்யுளில் ஓசை குறையும்போது சொல்லுக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் வரும் நெடில் எழுத்து நீண்டு ஒலிக்கும். அதற்கு அடையாளமாகக் குறில் எழுத்து எழுதப்படும்.)

            பொதுவாக, செய்யுளில் ஏற்படும் ஓசைக் குறைவை நிறைவு செய்யவே அளபெடுக்கிறது. எனினும் வேறு காரணங்களுக்காக அளபெடுப்பதும் உண்டு. உயிரளபெடை நான்கு வகைப்படும்.

            1. இயற்கை அளபெடை

          2. சொல்லிசை அளபெடை

          3. இன்னிசை அளபெடை

          4. செய்யுளிசை அளபெடை.

1. இயற்கை அளபெடை

இயல்பாகவே சொல்லில் வரும் எழுத்துகள் அளபெடுத்து நின்றால் அதை இயற்கை அளபெடை என்று கூறுவர்.

            மரூஉ, ஒரூஉ, ஆடூஉ, மகடூஉ, குரீஇ

            குழூஉக்குறி, குளாஅம்பல்

            பேரூர்கிழாஅன்

இவை இயற்கையாகவே அளபெடுப்பதால் இயற்கை அளபெடை எனப்படுகின்றன

2. சொல்லிசை அளபெடை

            ஒரு பெயர்ச் சொல்லை வினை எச்சமாக மாற்றுவது சொல்லிசை அளபெடை எனப்படும்.

நசை என்பது விருப்பம் என்று பொருள்படும்.  அதையே

நசைஇ என்று அளபெடை ஆக்கினால், விரும்பி என்றுபொருள் தரும். இதுவே சொல்லிசை அளபெடை ஆகும்

            தொகை    தொகைஇ (தொகுத்து)

            வளை     வளைஇ (வளைத்து)

3. இன்னிசை அளபெடை

செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசை தருவதற்காக குறில் எழுத்துகள் நெடில் எழுத்துகள் ஆகி, அளபெடுத்தல் இன்னிசை அளபெடை ஆகும்.

          கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே

          எடுப்பதூஉம் எல்லாம் மழை

கெடுப்பதும் என்ற சொல்லில் உள்ள து என்ற குறில்எழுத்து, தூ என நெடில் எழுத்தாகி, கெடுப்பதூஉம் என அளபெடுத்தல் இன்னிசை அளபெடை ஆகும்.

          கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்

          உண்பதூஉம் இன்றிக் கெடும்

இந்தக் குறளில் உள்ள உடுப்பதூஉம் உண்பதூஉம் என்ற இரண்டும் இன்னிசை அளபெடைகளே.

4. செய்யுளிசை அளபெடை

            செய்யுளில் ஓசை குறையும்போது அளபெடுத்து ஓசையைநிறைவு செய்வது செய்யுளிசை அளபெடை ஆகும்.

          தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

          பெய்யெனப் பெய்யும் மழை

            இந்தக் குறளில் தொழாள் என்று இயல்பாக இருந்தால், அது ஒரே நிரை அசை ஆகிவிடும். இந்த இடத்தில் ஓசை கெடாமல் இருக்க நிரை, நேர் என்ற இரு அசைகள் தேவை. தொழாஅள் என்று அளபெடுத்தபின், தொழா என்பது நிரை அசையாகவும், அள் என்பது நேர் அசையாகவும் அமைந்து ஓசையை நிறைவு செய்கின்றன. செய்யுளிசை அளபெடையை அறிந்துகொள்ள யாப்பிலக்கணம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். யாப்பிலக்கணப் பாடங்களில் அளபெடை பற்றி விரிவாக விளக்கப்படும்.

          பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்

          ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை

          ஆஅதும் என்னு மவர்

          நற்றாள் தொழாஅர் எனின்

என்று வரும் இவையும் செய்யுளிசை அளபெடை ஆகும். செய்யுளிசை அளபெடை சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் வரும். செய்யுளிசை அளபெடையை இசைநிறை அளபெடை என்றும் கூறுவர்

            அளபெடைச் சொற்களைச் சொல்லும் போது, நெடில் எழுத்தைத் தனியாகவும் அதனோடு ஒட்டி வரும் குறில் எழுத்தைத் தனியாகவும் ஒலிக்கக் கூடாது. இரண்டு எழுத்துகளின் ஓசையும் ஒட்டி வரும்படியே நீட்டி ஒலிக்க வேண்டும். அளபெடையில் எழுத்துகளை விட்டு இசைப்பது ஓசை இனிமையைக் கெடுக்கும்.

          “கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே

          எடுப்பதூஉம் எல்லாம் மழை”

          “நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க”

4. ஒற்றளபெடை

          உயிர் எழுத்துகள் அளபெடுப்பது போலவே மெய் எழுத்துகளும் அளபெடுக்கும். மெய் எழுத்து அளபெடுக்கும்போது, அதற்கு அடையாளமாக, அதே மெய் எழுத்து எழுதப்படும். ங், ஞ். ண், ந், ம், ன், வ், ய், ல், ள் ஆகிய பத்து மெய்எழுத்துகளும் ஆய்த எழுத்தும் அளபெடுக்கும். ஒரு மெய்எழுத்து அரை மாத்திரை நேரம் ஒலிக்கும் என்று கூறப்பட்டது. மெய்எழுத்து அளபெடுக்கும்போது இரண்டு மெய்எழுத்துகள் வருவதால், இரண்டும் சேர்ந்து ஒரு மாத்திரை நேரம் ஒலிக்கும்.

            வணங்ங்கினான்.

            `மன்ன்னன்

            ங, ஞ. ண, ந, ம, ன, வ, ய, ல, ள, ஆய்தம்

          அளபு ஆம், குறில் இணை, குறில் கீழ், இடை, கடை

          மிகலே அவற்றின் குறி ஆம் வேறே

                                                                                                            (நன்னூல் 92)

(பொருள்: செய்யுளில் ஓசை குறையும்போது, குறில் எழுத்தை அடுத்தும், தொடர்ந்து வரும் இரண்டு குறில் எழுத்துகளை அடுத்தும், சொல்லின் இடையிலும் இறுதியிலும் ங், ஞ், ண், ந்,ம், ன், வ், ய், ல், ள் ஆகிய மெய் எழுத்துகளும் ஆய்த எழுத்தும் நீண்டு ஒலிக்கும். அளபெடுப்பதற்கு அடையாளமாக அதே மெய்எழுத்து எழுதப்படும்.)

            பெயர்:                        ஒற்றளபெடை

            எழுத்துகள்:                ங், ஞ்,ண்,ந்,ம்,ன்,வ்,ய்,ல்,ள், ஃ

            வரும் இடம்:              ஒரு குறில் எழுத்து இரு குறில் எழுத்து } இவற்றுக்குப் பிறகு

            சொல்லின்                 முதல், இடை, இறுதி } ஆகிய இடங்களில் அளபெடுக்கும்

            அடையாளம்:                        அதே எழுத்து மீண்டும் எழுதப்படும்.

5. குற்றியலுகரம்

            உகரம் ஒரு மாத்திரை உடையது. இந்த ஒரு மாத்திரை அளவும் குறைந்து (குறுகி) ஒலிக்கிற இடங்களும் உண்டு. அப்போது அது குற்றியலுகரம் (குறுகி ஒலிக்கின்ற உகரம்) என்று அழைக்கப்படும்.

அதற்குச் சில வரையறைகள் உண்டு.

            வல்லின மெய்களோடு சேர்ந்த உகரம் மட்டுமே குற்றியலுகரமாக வருவதற்கு வாய்ப்பு உண்டு. அதாவது, கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு எழுத்துகள் மட்டுமே இந்த வகையில் அடங்கும்.

            இந்த ஆறும் சொல்லின் கடைசி எழுத்தாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டு: பாக்கு, பேசு, நாடு, காது, அம்பு, ஆறு.

தனிக்குறில் எழுத்தை அடுத்து வந்தால் அது குற்றியலுகரம் ஆகாது. எடுத்துக்காட்டு: அது, பசு, வடு, அறு முதலியவை.

குற்றியலுகரத்தை ஆறு வகையாகப் பிரிக்கலாம். அவை,

            1. நெடில் தொடர்க் குற்றியலுகரம்

            2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்

            3. உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்

            4. வன்தொடர்க் குற்றியலுகரம்

            5. மென்தொடர்க் குற்றியலுகரம்

            6. இடைத்தொடர்க் குற்றியலுகரம்

                                                என்பவை ஆகும்.

 

• நெடில் தொடர்க் குற்றியலுகரம்

            தனியாக உள்ள நெடில் எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகள் வந்தால் நெடில் தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

            எ.டு :   பாகு, மூசு, பாடு, காது, ஆறு

• ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்

ஆய்த எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு ,து, பு, று என்னும் எழுத்துகள் வந்தால் ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

எ,டு:    அஃது (அது என்பது பொருள்)

            கஃசு (பழங்காலத்து நாணயம் ஒன்று)

• உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்

உயிர் எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகள் வந்தால் உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

நெடில் எழுத்துகள், நெடில் தொடர்க் குற்றியலுகரத்தில் இடம் பெற்றதால் உயிர்மெய் எழுத்துகளில் உள்ள குறில் எழுத்துகள் மட்டும் உயிர்த் தொடர்க் குற்றியலுகரத்தில் வரும். எனவே, இது, குறில்தொடர்க் குற்றியலுகரம் என்றும் அழைக்கப்படும்.

உயிர்த் தொடர்க் குற்றியலுகரத்தில் இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகள் மட்டுமே வரும்.

எ.டு:    வரகு, தவிசு, முரடு, வயது, கிணறு

• வன்தொடர்க் குற்றியலுகரம்

            வல்லின மெய் எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகள் வந்தால் வன்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

            எ.டு:    பாக்கு, கச்சு, பட்டு, பத்து, மூப்பு, காற்று

• மென்தொடர்க் குற்றியலுகரம்

மெல்லின மெய் எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகள் வந்தால் மென்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

எ.டு:    சங்கு, பஞ்சு, நண்டு, பந்து, பாம்பு, கன்று

• இடைத்தொடர்க் குற்றியலுகரம்

            இடையின மெய் எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகள் வந்தால் இடைத்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

எ.டு:    மூழ்கு, செய்து, மார்பு, பல்கு

1. முற்றியலுகரம்

மேலே காட்டிய கு, சு, டு, து, பு, று ஆகிய எழுத்துகள் தனிக் குறிலை அடுத்து வந்தால் ஓசை குறைவதில்லை.

நகு, பசு, தடு, எது, மறு

கு, சு, டு, து, பு, று ஆகிய வல்லின மெய்யுடன் கூடிய உகர எழுத்துகள் வந்தாலும், முதல் எழுத்து, குறில் எழுத்தாக இருப்பதால், இவை குற்றியலுகரம் அல்ல.

மெல்லின, இடையின மெய்களோடு சேர்ந்த உகரமும் சொல்லுக்கு இறுதியில் வரும்போது குறைந்து ஒலிப்பதில்லை.

அணு, தனு, உறுமு, குழுமு, தும்மு, பளு,

எரு, ஏவு இரவு, நிறைவு, உறவு, விரிவு

ஓய்வு, பிறழ்வு, நிகழ்வு

வலு, ஏழு, உழு, துள்ளு

            மேலே காட்டப்பட்டுள்ள சொற்களின் இறுதியில் மெல்லின, இடையின மெய் எழுத்துகள் உகரத்துடன் சேர்ந்து வந்துள்ளன. அவை குறைந்து ஒலிப்பதில்லை. எனவே அவை குற்றியலுகரம் அல்ல. ஒரு சொல்லின் இறுதியில் உள்ள உகரம் குறைந்து ஒலிக்காமல் முழு அளவில் ஒலிக்குமாயின் அது முற்றியலுகரம் எனப்படும். மேலே காட்டியுள்ள சொற்களில் உள்ள உகரங்கள் எல்லாம் முற்றியலுகரங்கள் ஆகும்.

ஒரு சொல்லின் இறுதியில் வரும் உகரம் முற்றியலுகரமாகவோ குற்றியலுகரமாகவோ இருக்கும்.

6. குற்றியலிகரம்

            உகரம் சில இடங்களில் குறுகி, குற்றியலுகரம் ஆவது போலவே, இகரமும் சில இடங்களில் குறுகும். இவ்வாறு இகரம் குறுகி வருவதைக் குற்றியலிகரம் என்று கூறுவர். குற்றியலிகரம் இரண்டு வகையாக வரும்.

1. தனிமொழிக் குற்றியலிகரம்

            மியா என்ற அசைச்சொல்லில் ம் என்ற எழுத்தோடு சேர்ந்த இகரம் குறுகும். இதில் ம் என்ற எழுத்திற்குப் பின் யகரம் வருவதால் குறைந்து ஒலிக்கிறது. இதுவே தனிமொழிக் குற்றியலிகரம் ஆகும்.

            கேண்மியா

            சென்மியா

இந்தச் சொற்களில் உள்ள ‘மி’ என்ற எழுத்தில் உள்ள இகரம் தனக்கு இயல்பான ஒரு மாத்திரையில் இருந்து குறைந்து அரை மாத்திரையாக ஒலிக்கும்.

2. புணர்மொழிக் குற்றியலிகரம்

            புணர்மொழி என்பது இரண்டு சொற்கள் சேர்ந்து வருவதாகும். புணர்மொழிக் குற்றியலிகரம் என்பது இரண்டு சொற்கள் சேரும்போது உருவாகும் குற்றியலிகரம் ஆகும். முதலில் உள்ள சொல்லின் இறுதியில் குற்றியலுகர எழுத்து வந்து, இரண்டாம் சொல் ‘ய’ என்ற எழுத்தில் தொடங்கும்போது, குற்றியலுகரத்தில் உள்ள உகரமானது, இகரமாகத் திரியும். அவ்வாறு திரிந்த இகரம், உகரம் குறைந்து ஒலிப்பது போலவே அரை மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கும்.

            நாடு(ட்+உ) + யாது               =          நாடியாது(ட்+இ)

            களிற்று(ற்+உ) + யானை     =          களிற்றியானை (ற்+இ)

            கொக்கு(க்+உ) + யாது         =          கொக்கியாது(க்+இ)

            குரங்கு(க்+உ) + யாது           =          குரங்கியாது(க்+இ)

            யகரம் வரக் குறள் உத் திரி இகரமும்

          அசைச்சொல் மியாவின் இகரமும் குறிய

                                                                   (நன்னூல் 93)

            (பொருள்: இரண்டு சொற்கள் சேரும் இடத்தில் முதல் சொல்லின் இறுதியில் வரும் குற்றியலுகரத்தில் உள்ள உகரம் இரண்டாம் சொல்லின் முதலில் யகரம் வரும்போது இகரமாக மாறும். இந்த இகரமும் அசைச் சொல்லாகிய மியா என்பதில் உள்ள இகரமும் குறைந்து ஒலிக்கும்.)

7. குறுக்கங்கள்

            குற்றியலுகரம், குற்றியலிகரம் ஆகிய இரண்டிலும் உகரம் குறுகி ஒலிப்பதைப் பற்றிப் படித்தோம். அதைப்போல, ஐ, ஔ, ம், ஆய்தம் ஆகியவையும் குறுகி ஒலிக்கும். இவற்றை ஐகாரக் குறுக்கும், ஔகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம் ஆய்தக் குறுக்கம் என்று சொல்கிறோம்.

1. ஐகாரக்குறுக்கம்

            ஐ என்கிற உயிர் எழுத்து சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் வரும்.

            ஐப்பசி, வைகல்      - முதல்

            கடைசி, இறைவன்    - இடை

            மழை, நகை, கடை   - இறுதி

            மேலே ஐ என்ற எழுத்து, சொல்லின் மூன்று இடங்களிலும் வந்திருப்பதைக் காணலாம். ஐ என்பது நெடில் எழுத்து என்று முன்பே கூறப்பட்டது. நெடில் எழுத்து என்பதால் ஐகாரம் இரண்டு மாத்திரை நேரம் ஒலிக்கும்.  தனியே இருக்கும் ஐகாரம் மட்டுமே இவ்வாறு இரண்டு மாத்திரை ஒலிக்கும். சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் வரும் ஐகாரம் இரண்டு மாத்திரையில் குறைந்து ஒரு மாத்திரையாக ஒலிக்கும்.  இதை ஐகாரக் குறுக்கம் என்று கூறுவர்.

            மேலே காட்டியுள்ள எடுத்துக்காட்டுகளில் உள்ள ஐகாரம், இரண்டு மாத்திரையில் இருந்து குறைந்து ஒரு மாத்திரையாகவே ஒலிக்கும். ஐகாரம் அளபெடுக்கும்போது குறைந்து ஒலிப்பதில்லை,

நசைஇ, அசைஇ

இந்த இடத்தில் ஐகாரத்திற்கு இரண்டு மாத்திரையும் இகரத்திற்கு ஒரு மாத்திரையும் வரும்.

2. ஒளகாரக்குறுக்கம்

ஒளகாரம் நெடில் எழுத்து என்பதால் இரண்டு மாத்திரை பெறும். ஒளகாரம் சொல்லுக்கு முதலில் வரும்போது குறைந்து ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிப்பதை ஒளகாரக்குறுக்கம் என்பர். ஒளகாரக்குறுக்கம் ஒரு மாத்திரை நேரம் ஒலிக்கும்.

ஒளவையார்,  மௌவல்,  வௌவால்.

ஒளகாரம் தனியே ஒலிக்கும்போது குறைந்து ஒலிப்பதில்லை.

தற்சுட்டு அளபு ஒழி ஐம் மூவழியும்

நையும் ஒளவும் முதல் அற்று ஆகும்

                                                                                      (நன்னூல் 95)

(பொருள்: ஐகார எழுத்து சொல்லில் வரும்போது, தன்னைச்சுட்டிக் கூறும் இடத்திலும் அளபெடையிலும் தவிர மற்ற இடங்களில் (சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும்) குறைந்தே ஒலிக்கும். ஒளகார எழுத்தும் சொல்லின் முதலில் வரும்போது குறைந்து ஒலிக்கும்.)

3. மகரக்குறுக்கம்

மகரக்குறுக்கம் என்பது மகர ஒற்று, குறைந்து ஒலிப்பதைக் குறிக்கும்.  மகரக்குறுக்கம் இரண்டு வகைப்படும்.

தனிமொழி

ணகர, னகர ஒற்று எழுத்துகளை அடுத்து வரும் மகரமெய் எழுத்து, குறைந்து ஒலிக்கும்.

            மருண்ம், உண்ம்

            போன்ம், சென்ம்

புணர்மொழி

இரண்டு சொற்கள் சேரும்போது, முதல் சொல்லின் இறுதியில் மகர ஒற்று வந்து, இரண்டாம் சொல்லின் முதல் எழுத்தாக வகரம் வந்தால் மகர ஒற்று குறுகும்.

            தரும் வளவன்

            வாழும் வகை

மகர ஒற்று அரை மாத்திரை ஒலிக்க வேண்டும். மேற்கண்ட இடங்களில் குறைந்து ஒலிக்கும் மகரக்குறுக்கம் கால் மாத்திரையே பெறும்.

ண, ன முன்னும், வஃகான் மிசையும் மக்குறுகும்.                                        (நன்னூல். 96)

பொருள்:

வகரத்திற்கு முன்பும் ண், ன் மெய் எழுத்துகளுக்குப் பின்பும் மகர ஒற்று, குறைந்து ஒலிக்கும்.

4. ஆய்தக்குறுக்கம்

            இரண்டு சொற்கள் சேரும்போது முதல் சொல்லின் இறுதியில் ல், ள் ஆகிய மெய் எழுத்துகள் வந்து இரண்டாம் சொல்லின் முதலில் தகர எழுத்து வந்தால் ல், ள் ஆகியவை ஆய்த எழுத்தாக மாறிவிடும்.

            அல்     +          திணை            =          அஃறிணை

            முள்     +          தீது                 =          முஃடீது

இந்த ஆய்த எழுத்து, குறைந்து கால் மாத்திரையாக ஒலிக்கும். இதையே ஆய்தக்குறுக்கம் என்று கூறுவர்.

ல, ள ஈற்று இயைபின் ஆம் ஆய்தம் அஃகும்

                                                                   (நன்னூல் 97)

(பொருள்: ல், ள் ஆகிய எழுத்துகள் ஆய்த எழுத்தாகத் திரியும். அந்த ஆய்த எழுத்து, குறைந்து ஒலிக்கும். )

• சார்பு எழுத்துகளுக்கு மாத்திரை

சார்பு எழுத்துகள் எல்லாம் எப்படி மாத்திரை பெறும் என்பதைப் பின்வரும் பட்டியல் காட்டும்.

உயிரளபெடை                                  மூன்று மாத்திரை

உயிர்மெய் நெடில்                            இரண்டு மாத்திரை

உயிர்மெய்க் குறில்                          ஒரு மாத்திரை

ஒற்றளபெடை                                   ஒரு மாத்திரை

ஐகாரக்குறுக்கம்                               ஒரு மாத்திரை

ஒளகாரக்குறுக்கம்                            ஒரு மாத்திரை

குற்றியலுகரம், குற்றியலிகரம்       அரை மாத்திரை

ஆய்தம்                                               அரை மாத்திரை

மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம்   கால் மாத்திரை

                                                மூன்று உயிரளபு;

இரண்டு ஆம் நெடில்; ஒன்றே

குறிலோடு, ஐ, ஒளக் குறுக்கம் ஒற்றளபு;

அரை ஒற்று. இ, உக் குறுக்கம், ஆய்தம்;

கால் குறள் மஃகான், ஆய்தம், மாத்திரை.

                                                                                       (நன்னூல். 99)

            (பொருள்: உயிரளபெடை மூன்று மாத்திரை பெறும். உயிர்மெய்க்குறில், ஒற்றளபெடை, ஐகாரக் குறுக்கம், ஒளகாரக் குறுக்கம் ஆகியவை ஒரு மாத்திரை பெறும். மெய் எழுத்து, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் ஆகியவை அரை மாத்திரை பெறும். மகரக்குறுக்கமும் ஆய்தக் குறுக்கமும் கால் மாத்திரை பெறும்.)