வெள்ளி, ஜூன் 04, 2021

எழுத்தின் வகைகள்

 

எழுத்தின் வகைகள்

            எழுத்துகளை முதல் எழுத்து என்றும் சார்பு எழுத்து என்றும் இருவகையாகப் பிரிக்கலாம். மொழிக்கு முதற்காரணமாகவும் பிற எழுத்துகள் தோன்றவும் ஒலிக்கவும் காரணமாக இருக்கும் எழுத்துகள் முதல் எழுத்துகள் எனப்படும். முதல் எழுத்துகளைச் சார்ந்து வரக்கூடிய எழுத்துகளைச் சார்பு எழுத்துகள் என்கிறோம். இதைப் பின் வரும் விளக்கப்படம் எடுத்துக்காட்டுகிறது.

முதல் எழுத்துகள்

            பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் பதினெட்டு மெய் எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும். சொற்களை உருவாக்க இவையே அடிப்படையாக இருக்கின்றன. எனவே இவற்றை முதல் எழுத்துகள் என்கிறோம்.

உயிர் எழுத்துகளும் அமைப்பு முறையும்

            தமிழில், அடிப்படை ஒலிகளான அ முதல் ஒள வரை உள்ள ஒலிகளை - எழுத்துகளை உயிர் எழுத்துகள் என்கிறோம். இவை அமைந்துள்ள முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

                                                                                                         ஒள     

            1          2          3          4          5          6          7          8          9          10        11        12

            இந்தப் பன்னிரண்டு எழுத்துகளும் இயல்பாகவும் எளிதாகவும் ஒலிக்கக் கூடியனவாக உள்ளன.

            உயிர் எழுத்தை ஆவி எழுத்து என்றும் குறிப்பிடுவர். ஆவி என்றால் உயிர் என்று பொருள்.

 

 

மெய் எழுத்துகளும் அமைப்பு முறையும்

            உயிர் எழுத்துகளைப் போலவே மொழிக்கு அடிப்படையாக உள்ள மற்றொரு வகை எழுத்துகள் மெய் எழுத்துகள் ஆகும். க், ங், ச் முதலியன மெய் எழுத்துகள் ஆகும். மெய் எழுத்துகளும் அவை வரிசையில் அமைந்துள்ள முறையும் கீழே தரப்பட்டுள்ளன.

க்         ங்         ச்          ஞ்        ட்         ண்       த்         ந்          ப்         ம்         ய்         ர்          ல்         வ்         ழ்         ள்            ற்         ன்       

1          2          3          4          5          6          7          8          9          10        11        12        13        14        15        16            17        18

            இந்த எழுத்துகளை ஒலிப்பது சற்றுக் கடினம். உயிர் இல்லாமல் உடல் இயங்காது. அதுபோல இந்த எழுத்துகள் உயிர் எழுத்துகளுடன் சேர்ந்தே இயங்கும், அதனால் இவற்றை மெய் எழுத்துகள் என்று கூறுவர். மெய் என்பதும் உடம்பு என்பதும் ஒரே பொருள் தரும் சொற்கள் ஆகும். மெய் எழுத்துகளை ஒற்று எழுத்துகள் என்றும் கூறுவர். இந்த எழுத்துகள் புள்ளியுடன் இருப்பதால் இவற்றைப் புள்ளி எழுத்து என்றும் கூறுவர். உயிர் எழுத்துகள் 12, மெய்யெழுத்துகள் 18 ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும்.

            ‘உயிரும் உடம்புமாம் முப்பதும் முதலே’ (59)

என்னும் நன்னூல் நூற்பா இதை விளக்குகிறது.

சார்பு எழுத்துகள்

            தமிழ் மொழியில் உயிர் எழுத்துகள் மெய் எழுத்துகள் மட்டும் அல்லாமல் வேறு சில வகை எழுத்துகளும் உள்ளன. இவை முதல் எழுத்துகளின் அடிப்படையில், அவற்றின் கூட்டாக அமைகின்றன. அதாவது முதல் எழுத்துகளைச் சார்ந்து (துணைஎழுத்தாக) நிற்கின்றன. எனவே சார்பு எழுத்துகள் என அழைக்கப் படுகின்றன. உயிர்மெய், ஆய்தம் முதலிய எழுத்துகள் சார்பு எழுத்துகள் ஆகும்.

• உயிர்மெய்

            உயிர் (ஒலியும்) எழுத்துகளும் மெய் (ஒலியும்) எழுத்துகளும் சேர்ந்து உயிர்மெய் எழுத்துகள் உண்டாகின்றன. உயிர் ஒலியே எல்லாவற்றுக்கும் அடிப்படை என்பதால் அதற்கு முதல் இடம் தந்து, ‘உயிர்மெய்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

            மெய்           உயிர்          உயிர்மெய்(வரி வடிவம்)

            க்         +                              =          கி

            ச்          +                              =          சு

            ப்         +                             =          பூ

            வ்         +                              =          வா

            த்         +                               =          தே

            இந்த எழுத்துகள் எல்லாம் உயிர் எழுத்துகளும் மெய் எழுத்துகளும் சேர்ந்து உருவாகிய எழுத்துகள் என்பதால், இவற்றை உயிர்மெய் எழுத்துகள் என்று அழைக்கிறோம். மேலே காட்டிய எழுத்துகளை நீங்களும் ஒலித்துப் பாருங்கள், இந்த எழுத்துகளில் மெய் எழுத்தின் ஓசையும், உயிர் எழுத்தின் ஓசையும் இணைந்து இருப்பதைக் காணலாம்,

• ஆய்தம்

            தமிழ் மொழியில் ஃ என்று ஓர் எழுத்து உள்ளது, இதைஆய்த எழுத்து என்று சுட்டுவர்.

           

            இது சொற்களில் பின்வருமாறு வரும்.

            அஃது, எஃகு

            ஆய்த எழுத்து ஃ என்ற முக்கோண வடிவத்தில் உள்ளது. இதில் மூன்று புள்ளிகள் இருப்பதால் இதை முப்புள்ளி, முப்பாற்புள்ளி என்றும் அழைப்பர். ஆய்த எழுத்து உயிர் எழுத்தோடும் மெய் எழுத்தோடும் ஒன்றாமல் இருப்பதால் இதைத் தனிநிலை என்றும் சுட்டுவர். ஆய்த எழுத்துகள் சொல்லில் வரும்போது, அதற்கு முன்னும் பின்னும் வேறு எழுத்துகள் வருகின்றன. ஆய்த எழுத்தும் மற்ற எழுத்துகளைச் சார்ந்தே வருகிறது. எனவே இதுவும் சார்பு எழுத்து எனப்படுகிறது. தமிழில் வேறு சில சார்பு எழுத்துகளும் உள்ளன. அவை பின் வரும் பாடங்களில் விளக்கப்படும்.

உயிர் எழுத்தின் வகைகள்

உயிர் எழுத்துகள் இரண்டு வகைப்படும். அவை,

            1. குறில் 2. நெடில்

                        என்பவை ஆகும்.

• குறில்

பன்னிரண்டு உயிர் எழுத்துகளில் சில எழுத்துகள் குறுகி ஒலிக்கின்றன. அவ்வாறு குறுகி ஒலிக்கும் எழுத்துகளைக் குறில் எழுத்துகள் என்று குறிப்பிடுவர்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள எழுத்துகளை நோக்குங்கள்.

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள

இவற்றில் அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்தும் குறைந்த அளவு நேரமே ஒலிப்பதால் இவற்றைக் குற்றெழுத்து அல்லது குறில் எழுத்து என்று குறிப்பர்.

‘அ, இ, உ, எ, ஒ, குறில் ஐந்தே’ (64)

என்னும் நன்னூல் நூற்பா, அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்து எழுத்துகளும் குறில் எழுத்துகள் என்று குறிப்பிட்டுள்ளது.

 

• நெடில்

பன்னிரண்டு உயிர் எழுத்துகளில் சில எழுத்துகள் நீண்டு ஒலிக்கின்றன. அவ்வாறு நீண்டு ஒலிக்கும் எழுத்துகளை நெடில் எழுத்துகள் என்று குறிப்பிடுவர்.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள ஆகிய ஏழு எழுத்துகளும் நீண்டு ஒலிப்பதால் நெட்டெழுத்து அல்லது நெடில் எழுத்துகள் என்று குறிக்கப்படும்.

‘ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள நெடில்’ (65)

என்னும் நன்னூல் நூற்பா ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள ஆகிய ஏழு எழுத்துகளும் நெடில் எழுத்துகள் என்று குறிப்பிட்டுள்ளது.

மெய் எழுத்தின் வகைகள்

உயிர் எழுத்துகளில் இவ்வாறு குறில், நெடில் வேறுபாடு உண்டு, ஆனால் மெய் எழுத்துகளில் இவ்வாறான குறில், நெடில் வேறுபாடு இல்லை. உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உண்டாகும் உயிர்மெய் எழுத்துகளிலும் இதே போல குறில் நெடில் வேறுபாடு உண்டு.

மெய் எழுத்துகள் மூன்று வகைப்படும். அவை,

1. வல்லினம்

2, மெல்லினம்

3. இடையினம்

• வல்லினம்

மெய் எழுத்துகளில் வன்மையாக ஒலிக்கும் எழுத்துகளை வல்லினம் என்று கூறுவர். க், ச், ட், த், ப், ற் என்ற ஆறு மெய் எழுத்துகளும் வன்மையாக ஒலிப்பதால் வல்லின எழுத்துகள் ஆகும்.

வல்லினம் க, ச, ட, த, ப, ற என ஆறே (68)

என்னும் நன்னூல் நூற்பா வல்லின எழுத்துகள் எவை என்றுகுறிக்கிறது.

• மெல்லினம்

மெய் எழுத்துகளில் மென்மையாக ஒலிக்கும் எழுத்துகளை மெல்லினம் என்று கூறுவர். ங், ஞ், ண், ந், ம், ன் ஆகிய ஆறு மெய் எழுத்துகளும் மென்மையாக ஒலிப்பதால் மெல்லின எழுத்துகள் ஆகும்.

மெல்லினம் ங, ஞ, ண, ந. ம, ன என ஆறே (69)

என்னும் நன்னூல் நூற்பா மெல்லின எழுத்துகள் எவை என்று குறிக்கிறது.

• இடையினம்

மெய் எழுத்துகளில் வன்மைக்கும் மென்மைக்கும் இடையில் ஒலிக்கும் எழுத்துகளை இடையினம் என்று கூறுவர். ய், ர், ல், வ், ழ், ள் என்ற ஆறு மெய் எழுத்துகளும் வன்மைக்கும் மென்மைக்கும் இடையில் ஒலிப்பதால் இடையின எழுத்துகள் ஆகும்.

இடையினம் ய, ர, ல, வ, ழ, ள என ஆறே (70)

என்னும் நன்னூல் நூற்பா இடையின எழுத்துகள் எவை என்று குறிக்கிறது.

இன எழுத்துகள்

பிறப்பு, ஒலிப்பு முதலியவற்றில் ஒத்து இருக்கும் எழுத்துகளை இன எழுத்துகள் என்று கூறுவர். உயிர் எழுத்துகள் குறில். நெடில் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. குறில் எழுத்துகள் ஐந்தும் நெடில் எழுத்துகள் ஏழும் உள்ளன. இவற்றின் ஒத்த தன்மையைக் கொண்டு இன எழுத்துகளாகப் பிரிப்பர்.

                   

                   

                   

                    

            ---       

                    

            ---       

நெடில் எழுத்தாக;  உள்ள ஐ, ஒள ஆகியவற்றுக்கு இனமான குறில் எழுத்துகள் இல்லை.

மெய் எழுத்துகளில் ஆறு மெல்லின எழுத்துகளும் ஆறுவல்லின எழுத்துகளுக்கு இன எழுத்துகளாக உள்ளன. மெய் எழுத்துகளில் இன எழுத்துகள் பின்வருமாறு அமையும்.

            க்         ங்         தங்கம்

            ச்          ஞ்        பஞ்சு

            ட்         ண்       நண்டு

            த்         ந்          பந்து

            ப்         ம்         பாம்பு

            ற்         ன்        கன்று

            இந்தச் சொற்களில் உள்ள மெய் எழுத்துகளைக் கவனியுங்கள், இவற்றில் ங்க, ஞ்சு, ண்டு, ந்து, ம்பு, ன்று என்று வந்துள்ளதைக் கவனியுங்கள், இந்தச் சொற்களில் மெய் எழுத்துகளும் உயிர்மெய் எழுத்துகளும் அடுத்தடுத்து வந்துள்ளன. முன்பு உயிர் எழுத்துகளில் இன எழுத்துகளைப் பார்த்தோம். இவை மெய் எழுத்துகளில் இன எழுத்துகள் ஆகும்.

            க, ச, ட, த, ப, ற என்ற வல்லின எழுத்துகள் ஆறும் தனியே ஒலிக்கும்போது வன்மையாக ஒலிக்கும். மேலே காட்டியபடி சொற்களில் மெல்லின எழுத்துகளை ஒட்டி வரும்போது இவை மென்மையாகவே ஒலிக்கும். வல்லின எழுத்தை ஒட்டி வரும்போது வன்மையாக ஒலிக்கும்.

            சங்கு   பக்கம்

            நஞ்சு   நச்சு

            பண்டம்          பட்டம்

            மந்தி   கத்தி

            பம்பரம்          கப்பல்

            இன்று            நேற்று

            மேலே காட்டப்பட்டுள்ள சொற்களில் இடப்பக்கம் உள்ளவை மென்மையாகவும் வலப்பக்கம் உள்ளவை வன்மையாகவும் ஒலிக்கும் என்பதை ஒலித்துப் பாருங்கள்.

சுட்டு எழுத்துகள்

            ஒரு பொருளைக் குறிப்பிட்டுக் காட்டுவதற்குப் பயன்படும் எழுத்துகள் சில உள்ளன, பின்வருவனவற்றைப் படியுங்கள்,

            அவ்வீடு

            இப்புத்தகம்

            அம்மரம்

            இப்பூனை

            மேலே, வீடு, புத்தகம், மரம், பூனை முதலிய சொற்களுக்கு முன் அ, இ ஆகிய எழுத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த எழுத்துகள் பொருள்களைச் சுட்டிக் காட்டப் பயன்படுகின்றன. ஒரு பொருளின் பெயருக்கு முன் இந்த எழுத்துகள் வந்து, அந்தப் பொருளைக் குறிப்பாகச் சுட்டிக் காட்டப் பயன்படுகின்றன.

            ஒரு தென்னந்தோப்பில் நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் நிற்கும். மரங்கள் என்று சொன்னால் அது அந்தத் தோப்பில் உள்ள மரங்களைக் குறிக்கும். மரம் என்றால் அது தோப்பில் உள்ள ஏதோ ஒரு மரத்தைக் குறிக்கும். அம்மரம் என்று சொன்னால் அத்தோப்பில் உள்ள ஒரு குறிப்பிட்ட மரம் சுட்டிக்காட்டப்படுவதை நாம் உணரமுடியும். இவ்வாறு சுட்டிக்காட்ட உதவும் எழுத்து, சுட்டு எழுத்து எனப்படும். அ, இ, உ ஆகிய மூன்று எழுத்துகளும் சுட்டு எழுத்துகள் ஆகும். உ என்ற சுட்டு எழுத்து, தற்காலத்தில் பயன்பாட்டில் இல்லை.

            உதுக்காண்

            உவன்

            உங்கே

            என்ற இடங்களில் உகரம் சுட்டு எழுத்தாக வந்துள்ளதைக் காணலாம். இக்காலத்தில் இலங்கையில் வாழும் தமிழர்கள் மட்டும் உகரச் சுட்டைப் பயன்படுத்துகின்றனர், மற்றபடி இக்காலத் தமிழ் மொழியில் உகரச் சுட்டு இடம்பெறுவதில்லை.

            அ, இ, உம் முதல் தனிவரின் சுட்டே (66)

என்னும் நன்னூல் நூற்பா சுட்டு எழுத்துகள் எவை என்று குறிக்கிறது.

• சேய்மைச் சுட்டு

            அவ்வீடு

            அக்கரை

            அம்மரம்

            அக்குளம்

            மேலே காட்டப்பட்ட எடுத்துக் காட்டுகளில், அவ்வீடு, அம்மரம் முதலியன தொலைவில் உள்ள பொருள்களைச் சுட்டிக்காட்டுகின்றன, எனவே இதனைச் சேய்மைச் சுட்டு என்கிறோம். சேய்மை என்பது தொலைவு என்று பொருள்படும்.

• அண்மைச் சுட்டு

            இப்பூனை

            இப்புத்தகம்

            இம்மாடு

            இக்கட்டில்

            இப்புத்தகம், இப்பூனை முதலியன அருகில் உள்ள பொருள்களைச் சுட்டிக் காட்டுகின்றன. எனவே இவற்றை அண்மைச் சுட்டு என்கிறோம். அண்மை என்பது அருகில் என்று பொருள்படும்.

• அகச்சுட்டு

            அவன்

            இவள்

            அது

            இது

            இந்தச் சொற்களில் அ, இ ஆகிய எழுத்துகள் சுட்டுப்பொருளை உணர்த்தி வருகின்றன. இவை சொல்லுக்கு உள்ளேயே இருக்கின்றன. அவன் என்பதில் ’அ’ என்ற சுட்டு எழுத்தை நீக்கிவிட்டால் ‘வன்’ தனியே நின்று பொருள் இல்லாமல் போய்விடும். எனவே இவற்றைச் சொல்லில் இருந்து தனியே பிரித்துக் காணமுடியாது. ஒரு சொல்லுக்கு உள்ளே இருந்து, சுட்டுப் பொருளையும் உணர்த்துவதால், இவற்றை அகச் சுட்டு என்று கூறுவர். அகம் என்பது உள்ளே என்று பொருள்படும்.

• புறச்சுட்டு

            அவ்வீடு

            இம்மனிதன்

            அக்குளம்

            இம்மாடு

            மேலே காட்டியவற்றில் அ, இ ஆகிய சுட்டு எழுத்துகள் வீடு, மனிதன் முதலியவற்றுடன் கூடி. ஒரே சொல் போன்று காட்சி தருகின்றன. எனினும் இவற்றைத் தனியே பிரிக்க முடியும். எடுத்துக்காட்டாக மேலே உள்ள சொற்களில் சுட்டு எழுத்துகளை நீக்கிப் பார்க்கலாம்.

                    +          வீடு

                    +          மனிதன்

                    +          குளம்

                    +          மாடு

            இவற்றில் சுட்டு எழுத்தை நீக்கிய பின் வீடு, மனிதன், குளம், மாடு ஆகிய சொற்கள் தனித்து நிற்கின்றன. இந்த எடுத்துக்காட்டுகளில் சொல்லுக்கு வெளியே இருந்து சுட்டு எழுத்துகள் சுட்டுப் பொருளை உணர்த்துவதால் இவை புறச் சுட்டு எனப்படுகின்றன, புறம் என்பது வெளியே என்று பொருள்படும்.

• சுட்டுத் திரிபு

            அந்த மரம்

            இந்த வீடு

            அந்த மாடு

            இந்த ஆடு

            மேலே காட்டிய எடுத்துக் காட்டுகளில் மரம், வீடு ஆகியவற்றைச் சுட்டிக்காட்டும் அந்த, இந்த ஆகியவை சொல்லுக்கு வெளியே தனியே நின்றுள்ளன. இவை அடிப்படையில் அ, இ என்ற சுட்டு எழுத்துகளே. ஆனால் இங்கு அந்த, இந்த என்று மாறியுள்ளன. இவை தம் வடிவத்திலிருந்து திரிந்து, பொருளைச் சுட்டுகின்றன. எனவே இவற்றைச் சுட்டுத் திரிபு என்று கூறுவர்.

வினா எழுத்துகள்

            அ, இ ஆகிய எழுத்துகள் சுட்டுப் பொருள் தருவது போலவே, சில எழுத்துகள் வினாப் பொருளைத் தருகின்றன. கீழே உள்ளவற்றைக் கவனிக்க. வினா என்பதும் கேள்வி என்பதும் ஒரே பொருள் தருவன.

யார்? எங்கு? நீயா?

            இந்தச் சொற்கள் வினாப் பொருள் தருவதை உணரலாம். தமிழில் ஆ, எ. ஏ. ஓ, யா ஆகிய எழுத்துகள், வினாப் பொருள்தரும் எழுத்துகள் ஆகும், இவை வினாப் பொருள் தருவதால் வினா எழுத்துகள் எனப்படுகின்றன, வினா எழுத்துகள் ஒருசொல்லைச் சார்ந்தே வினாப் பொருள் தரும். இவற்றில் எ, யா ஆகிய இரு எழுத்துகளும் ஒருசொல்லுக்கு முதலில் வந்து வினாப் பொருள் தரும்,

எப்படி? எவ்வரிசை? எம்மனிதர்? யார்? யாது?

ஆ, ஓ ஆகிய இரு எழுத்துகளும் சொல்லுக்கு இறுதியில் வந்து வினாப் பொருள் தரும்.

            நானா சொன்னேன்?            -          

            அவனா தருவான்?   -          

            நானோ கள்வன்?     -          

            அவர் வருவாரோ?   -          

ஏ என்னும் எழுத்து, சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் வந்து வினாப் பொருள் தரும்.

ஏன், ஏது யாரே அனுபவிப்பார்

எ, யா, முதலும் ஆ, ஓ. ஈற்றும் ஏ, இருவழியும் வினா ஆகும்மே (67)

என்னும் நன்னூல் நூற்பா வினா எழுத்துகள் எவை என்று குறிப்பதுடன் சொல்லுக்கு முதலில் வரும் வினா எழுத்துகளையும் இறுதியில் வரும் வினா எழுத்துகளையும் முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்தையும் குறிப்பிடுகிறது.

• அகவினா

சுட்டு எழுத்துகளைப் போலவே சொல்லுக்கு உள்ளே இருந்து வினாப் பொருளை உணர்த்துவது அகவினா எனப்படும்.

ஏன்? யார்? என்ன? எங்கு?

மேற்கண்ட சொற்களில் வினா எழுத்துகளை நீக்கிவிட்டால், அச்சொற்கள் பொருள் தர மாட்டா. ஆகவே இவை அக வினா எனப்படுகின்றன.

• புறவினா

வினா எழுத்துகள் சொல்லுக்கு வெளியே இருந்து, வினாப்பொருளைத் தந்தால் அது புறவினா எனப்படும்.

            எம்மரம்?        எ+மரம்                       எப்படி?          எ+படி

            அவளா?         அவள்+ஆ                  நின்றானா?   நின்றான்+ஆ

            தருவாளா?    தருவாள்+ஆ

மேலே உள்ள எடுத்துக்காட்டுகளில், வினாப் பொருள் தரும் எ, ஆ, ஓ ஆகிய வினா எழுத்துகளை நீக்கிவிட்டாலும் இந்தச் சொற்கள் பொருள் தரும்.

எழுத்துச் சாரியை

            எழுத்துகளை ஒலிக்கும்போது, அ, ப் என்று ஒலிக்கிறோம். எழுத்துகளை ஒலிக்கும்போது தனியே எழுத்தை மட்டும் ஒலிக்காமல், அகரம், இகரம் என்று ஒலிப்பதும் உண்டு. கரம் என்று சேர்த்துச் சொல்வதால், எழுத்துகளை எளிதாக ஒலிப்பதற்கு ஏதுவாக இருக்கும். எழுத்துகளை எளிதாக ஒலிக்கப் பயன்படும் இவற்றை எழுத்துச் சாரியை என்று வழங்குவர்.

            மெய் எழுத்துகளைத் தனியாக ஒலிப்பது கடினம். எனவே அவற்றை அ என்ற உயிர் எழுத்துடன் சேர்த்தே சொல்லுவர். இலக்கணத்தில், க என்று கூறப்படும் எழுத்து க் என்ற மெய் எழுத்தையே குறிக்கும், கரம் என்பதைப் போலவே காரம், கான் ஆகியவையும் எழுத்துச் சாரியைகளாக வரும். கீழ்வரும் எடுத்துக்காட்டுகளைக் கவனிக்க.

அகரம், சகரம், எகாரம், வகாரம், மஃகான், வஃகான் ஆகாரம், யாகாரம் ஐகான், ஒளகான் க. ச. த. ப

            இவற்றை நோக்குங்கள். இவற்றில் கரம், காரம், கான் ஆகிய சாரியைகள் வந்துள்ளன, மெய் எழுத்துகள் அ சாரியை பெறும் என ஏற்கெனவே கூறப்பட்டுள்ளது. எழுத்துச் சாரியைகளைக் கீழ்க்காணுமாறு காட்டலாம்.

            குறில் எழுத்துகள்                 -           கரம், காரம், கான்

            நெடில் எழுத்துகள்                -           காரம்

            ஐ, ஒள,                                   -           கான்

            மெய் எழுத்துகள்                   -          

குறில் எழுத்துகள் கான் சாரியை பெற்று வரும்போது, அதற்குமுன் ஆய்த எழுத்து வரும்,

எடுத்துக்காட்டாக,  மஃகான், லஃகான், வஃகான் என்று வரும்.

மெய்கள் அகரமும் நெட்டுயிர் காரமும்

ஐ, ஒள, கானும், இருமைக் குறில் இவ்

இரண்டொடு காரமும் ஆம் சாரியை பெறும் பிற

                                                                                                (நன்னூல் 126)

மாத்திரை

            மாத்திரை என்பது ஓர் எழுத்தை எவ்வளவு நேரம் ஒலிக்கிறோம் என்று கூறுவதாகும். ஒவ்வோர் எழுத்தையும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே ஒலிக்க வேண்டும் என்று வரையறை செய்து வைக்கப்பட்டுள்ளது. மாத்திரை என்பது கால அளவைக் குறிப்பதாகும். மாத்திரை இரண்டு விதமான அளவுகளில் விளக்கப்படுகிறது.

இயல்பு எழும் மாந்தர் இமை, நொடி, மாத்திரை

                                                                                                (நன்னூல் 100)

1. மனிதர்கள் இயல்பாகக் கண் இமைக்கும் நேரம்.

2. மனிதர்கள் இயல்பாகக் கை நொடிக்கும் (சொடுக்குப் போடும்) நேரம்.

இவை ஒரு மாத்திரை எனப்படும். எழுத்துகள் கீழ்வருமாறு ஒலிக்கப்பட வேண்டும்.

            உயிர்க் குறில்                        -           ஒரு மாத்திரை           -           அ, இ

            உயிர்மெய்க் குறில்              -           ஒரு மாத்திரை           -           ப, த

            உயிர் நெடில்                         -           இரண்டு மாத்திரை   -           ஊ, ஏ,

            உயிர்மெய் நெடில்                -           இரண்டு மாத்திரை   -           போ, பூ

            மெய் எழுத்து                         -           அரை மாத்திரை        -           ய், ள்

            மேலே குறிப்பிட்ட விதத்தில் எழுத்துகளை ஒலிக்கவேண்டும். எனினும், இந்த வரையறை சில இடங்களில் மீறப்படுவதும் உண்டு. இசை பாடும்போதும், ஒருவரை விளிக்கும்போதும், பொருள்களைக் கூவி விற்கும் போதும் இந்த வரையறையை மீறி ஒலித்தலும் உண்டு.

போலி

            சொற்களில் ஓர் எழுத்து வரவேண்டிய இடத்தில் வேறு ஓர் எழுத்து வருவதைப் போலி என்று கூறுவர். அப்படி வேறு எழுத்து வரும்போது பொருள் மாறாமல் இருக்க வேண்டும். போலி எழுத்துகள் சொல்லின் முதலிலும், இடையிலும், இறுதியிலும் வரும். இவற்றை முறையே முதற்போலி, இடைப்போலி, இறுதிப்போலி என்று கூறுவர்.

முதற்போலி

ஒரு சொல்லின் முதல் எழுத்து, போலியாக வருவதை முதற்போலி என்று கூறுவர்.

            பசல்    பைசல்

            மயல்   மையல்

            மஞ்சு   மைஞ்சு

இந்தச் சொற்களில் அகரம் வரவேண்டிய இடங்களில் ஐகாரம் வந்துள்ளது.

இடைப்போலி

சொல்லுக்கு இடையில் ஓர் எழுத்து வரவேண்டிய இடத்தில் வேறு எழுத்து வருவது இடைப்போலி ஆகும்.

            அரயர்     அரையர்

            இலஞ்சி   இலைஞ்சி

இந்தச் சொற்களில் அகரம் வரவேண்டிய இடங்களில் ஐகாரம் வந்துள்ளது. இவை சொல்லுக்கு இடையில் வந்துள்ளதால் இடைப்போலி எனப்படும்.

இறுதிப்போலி

 

சொல்லின் இறுதியில் ஓர் எழுத்து வரவேண்டிய இடத்தில் வேறு எழுத்து வருவது இறுதிப் போலி எனப்படும். இதைக் கடைப் போலி எனவும் கூறுவர்.

            முகம்               முகன்

            அகம்              அகன்

            நலம்               நலன்

            நிலம்               நிலன்

            சாம்பல்           சாம்பர்

            பந்தல்             பந்தர்

இந்தச் சொற்களின் இறுதியில் மகர ஒற்று வரவேண்டிய இடத்தில் னகர ஒற்றும், லகர ஒற்று வரவேண்டிய இடத்தில் ரகர ஒற்றும் வந்துள்ளன. இவ்வாறு வருவது இறுதிப் போலி எனப்படுகிறது.