வெள்ளி, ஜூன் 04, 2021

நன்னூல் அறிமுகம்

 

நன்னூல் அறிமுகம்

            பவணந்தி முனிவர் என்ற சமண சமய முனிவரால் இயற்றப்பட்டது நன்னூல் என்ற இலக்கண நூல். இது, எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம் ஆகிய இரண்டு இலக்கணங்களையும் கூறுகிறது. நன்னூல் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் தோன்றியது. நன்னூல், இலக்கணத்தைச் சுருக்கமாகக் கூறும் நூல் ஆகும். நன்னூலில் முதலில் பாயிரம் என்று ஒரு பகுதி உள்ளது. இதில் ஐம்பத்தைந்து சூத்திரங்கள் உள்ளன. பாயிரப் பகுதியில் நூலின் இலக்கணம், நூலைக் கற்றுத்தரும் ஆசிரியர் இலக்கணம், கற்றுத்தரும் முறை, மாணவர்களின் குணங்கள், மாணவர்கள் கற்கும் முறை ஆகியவை இடம் பெற்றிருக்கும். எழுத்து அதிகாரத்தில் ஐந்து இயல்கள் உள்ளன; 202 சூத்திரங்கள் உள்ளன. சொல்லதிகாரத்தில் ஐந்து இயல்கள் உள்ளன; 205 சூத்திரங்கள் உள்ளன.

            அருங்கலை விநோதன் என்ற பட்டப் பெயர் பெற்ற சீயகங்கன் என்ற அரசனின் வேண்டுகோளின்படி நன்னூல் இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. தொல்காப்பியம் தோன்றிப் பல நூற்றாண்டுகள் சென்றுவிட்டதால் அதில் உள்ள மரபுகள் மாறிவிட்டன. மேலும் தொல்காப்பியம் கடல் போலப் பரந்துவிரிந்த நூல் ஆகும். எனவே நன்னூல் தோன்றிய பின்பு பரவலாக அனைவரும் நன்னூலையே கற்கத் தொடங்கினர். எனவே நன்னூலுக்குப் பல உரைகள் தோன்றின. மயிலைநாதர், சங்கர நமச்சிவாயர், கூழங்கைத் தம்பிரான், விசாகப் பெருமாளையர், இராமானுச கவிராயர், ஆறுமுக நாவலர் முதலிய பலர் நன்னூலுக்கு உரை எழுதியுள்ளனர். நன்னூல் தோன்றியபிறகு எழுத்து, சொல் இலக்கணங்களைக் கற்போர் நன்னூலையே விரும்பிப் படித்து வருகின்றனர்.

எழுத்து இலக்கண அறிமுகம்

            தமிழ் மொழியில் எழுத்து இலக்கணம் மிகவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. எழுத்து இலக்கணத்தில், எழுத்தின் வகைகள், பத இலக்கணம், சந்தி இலக்கணம் ஆகியன முக்கியப் பகுதிகள் ஆகும்.

 

எழுத்தின் வகைகள்

தமிழ் எழுத்து இரண்டு வகைகளைக் கொண்டுள்ளது. அவை,

1.முதல் எழுத்து 2. சார்பு எழுத்து.

1. முதல் எழுத்து

மொழிக்கு அடிப்படைக் காரணமாக இருக்கும் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் ஆகியவை முதல் எழுத்துகள் என்று கூறப்படும்.

உயிர் எழுத்துகள் குறில், நெடில் என்றும், மெய் எழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என்றும் ஒலி அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.

எழுத்துகளின் பயன்பாடு நோக்கிச் சுட்டு எழுத்து, வினா எழுத்து ஆகியனவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

2. சார்பு எழுத்து

முதல் எழுத்துகளைச் சார்ந்து வருபவை சார்பு எழுத்துகள் எனப்படுகின்றன. உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் ஆகிய பத்தும் சார்பு எழுத்துகள் ஆகும்.

எழுத்துகள் ஒலிக்கும் நேரத்தை மாத்திரை என்று கூறுவர். எந்த எந்த எழுத்துகள் எவ்வளவு நேரம் ஒலிக்கும் என்பதைத் தெளிவாக வரையறுத்து இலக்கண நூல்கள் கூறுகின்றன.

மற்ற உயிரினங்களிலிருந்து மனிதனைப் பிரித்துக் காட்டுவது மொழி. மொழி, சொற்களால் உருவாகிறது. சொல், எழுத்துகளின் சேர்க்கை. எழுத்தின் அடிப்படை ஒலி. மனித உடலில் இருந்து ஒலி எப்படித் தோன்றுகிறது என்பதைத் தமிழ் இலக்கண நூல்கள் விளக்குகின்றன. மொழியின் அடிப்படை ஒலி என்பதால் ஒவ்வோர் எழுத்தும் எப்படிப் பிறக்கின்றன என்பது பற்றியும் இலக்கண நூல்களில் கூறப்பட்டுள்ளது. மூக்கு, உதடு, பல், நாக்கு, அண்ணம் ஆகிய உறுப்புகளின் செயல்பாட்டால் உயிர் எழுத்துகளும், மெய் எழுத்துகளும் எவ்வாறு தோன்றுகின்றன என்று இலக்கண நூல்கள் துல்லியமாகக் கூறுகின்றன.

தமிழில் எல்லா எழுத்துகளும் சொல்லுக்கு முதலில் வருவதில்லை. சொல்லின் முதல் எழுத்தாக வரக்கூடிய எழுத்துகள் இவை என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. அதுபோலவே சொல்லுக்கு இறுதியில் வரக்கூடிய எழுத்துகள் பற்றியும் வரையறை செய்யப்பட்டுள்ளது. சொல்லுக்கு இடையில் ஒரு மெய் எழுத்துக்கு அடுத்து எந்த மெய் எழுத்து வரும் என்ற வரையறையும் தரப்பட்டுள்ளது.

பதவியல்

தமிழ் ஓர் ஒட்டு நிலை மொழியாகும். ஒட்டுநிலை மொழி என்பது ஒரு வேர்ச் சொல்லுடன் விகுதி, இடைநிலை, சாரியை முதலியன சேர்ந்து ஒரு சொல்லாகத் தோன்றுவது ஆகும். (இவற்றைப் பற்றி விரிவாகப் பின்னர் படிக்கலாம்) தமிழில் முன் ஒட்டுகள் இல்லை; பின் ஒட்டுகளே உள்ளன. வேர்ச் சொல்லுடன் பல உருபுகளும் சேர்ந்து சொற்கள் உருவாகும் முறை இலக்கணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக

போ என்பது ஒரு வேர்ச் சொல்லாகும். இதனுடன் வ் என்ற எதிர் கால இடைநிலையும், ஆன் என்ற ஆண்பால் ஒருமை வினைமுற்று விகுதியும் இணைந்து,

போ + வ் + ஆன் = போவான்

என்று ஒரு சொல் உருவாகிறது. இலக்கணத்தில் இதைப் பற்றிச் சொல்லும் பகுதிக்குப் பதவியல் என்று பெயர்.

 

 

சந்தி இலக்கணம்

தமிழில் எழுத்திலக்கணத்தில் முக்கியப் பகுதியாகவும் பெரிய பகுதியாகவும் இருப்பது சந்தி இலக்கணம் ஆகும். சந்தி இலக்கணம் என்பது இரண்டு சொற்கள் சேரும்போது ஏற்படும் மாற்றங்களைப் பற்றிய இலக்கணம் ஆகும். இலக்கண நூல்களை இயற்றிய ஆசிரியர்கள் சந்தி இலக்கணத்தைப் புணர்ச்சி இலக்கணம் என்று கூறுவர்.

எடுத்துக்காட்டாக

ஓடி + போனான் = ஓடிப்போனான்

என்று வரும்.

இங்கு இரண்டு சொற்கள் சேரும்போது, இரண்டுக்கும் இடையில் ப் என்ற மெய் எழுத்துத் தோன்றி இருக்கிறது. இவ்வாறு இரண்டு சொற்கள் சேரும்போது பல வகையான மாற்றங்கள் ஏற்படும்.

சந்தி வகைகள்

இரண்டு சொற்கள் சேரும்போது ஏற்படும் மாற்றங்கள் நான்கு வகைகளில் அமையும்.

1. கதவு + மூடியது = கதவுமூடியது - இயல்பாக இருக்கிறது.

2. மாலை + பொழுது = மாலைப்பொழுது - ஒரு மெய்எழுத்துத் தோன்றியது.

3. மரம் + நிழல் = மரநிழல் - ஓர் எழுத்துக் கெட்டது (அழிந்தது).

4. கல் + சிலை = கற்சிலை - ல் என்ற எழுத்து ற் என்ற எழுத்தாகத் திரிந்தது (மாறியது).

            எனவே, இரண்டு சொற்கள் சேரும்போது இயல்பாக வருதல், தோன்றுதல், திரிதல், கெடுதல் ஆகிய நான்கு வகைகளிலும் வரும் என அறியலாம். இங்கு இரண்டு சொற்கள் இருக்கின்றன. முதல் சொல்லை நிலைமொழி என்றும், இரண்டாம் சொல்லை வருமொழி என்றும் கூறுவர். இந்த மாற்றங்கள் நிலைமொழியின் இறுதி எழுத்துக்கும், வருமொழியின் முதல் எழுத்துக்கும் ஏற்ப அமையும். எனவே ஒரு சொல்லின் முதல் எழுத்தையும் இறுதி எழுத்தையும் பற்றி அறிய வேண்டியது அவசியம் ஆகிறது.

முதலும் இறுதியும்

உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து ஆகிய மூன்று வகை எழுத்துகள் சொற்களில் வரும். சந்தி இலக்கணத்தில் உயிர் எழுத்து, மெய் எழுத்து என்ற இருவகை எழுத்துகளை மட்டுமே கொண்டு இலக்கணம் சொல்லப்படும். உயிர்மெய் எழுத்து, உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உருவானது ஆகும். அதை மெய் எழுத்து, உயிர் எழுத்து என்று பிரித்துக் கொண்டு சந்தி இலக்கணத்தில் பயன்படுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டாக

பல் என்ற சொல்லின் முதலில் உள்ள ப என்ற உயிர்மெய்எழுத்து,

            ப் + அ என்ற இரண்டு எழுத்துகள் சேர்ந்தது.

பாம்பு என்ற சொல்லின் இறுதியில் உள்ள பு என்ற உயிர்மெய்எழுத்து,

            ப் + உ என்ற இரண்டு எழுத்துகள் சேர்ந்தது.

            எனவே சொற்களைப் பின்வருமாறு பிரிக்கலாம்.

            ஓடை - உயிர் எழுத்தில் தொடங்கும் சொல்.

            மாடு - மெய் எழுத்தில் தொடங்கும் சொல்.

            பழம் - மெய் எழுத்தில் முடியும் சொல்.

            கிளி - உயிர் எழுத்தில் முடியும் சொல்

இவற்றைக் கொண்டு பார்க்கும்போது சொற்கள் அமையும் விதத்தைப் பின்வருமாறு காட்டலாம். ஈறு என்னும் சொல் இறுதி அல்லது கடைசி என்னும் பொருளைக் கொண்டது.

            உயிர் ஈறு + மெய் முதல் (ஓடை + கரை)

            உயிர் ஈறு + உயிர் முதல் (மணி + அடித்தது)

            மெய் ஈறு + உயிர் முதல் (பழம் + உதிர்ந்தது)

            மெய் ஈறு + மெய் முதல் (முள் + குத்தியது)