வியாழன், ஜூன் 24, 2021

கடைசிக் கண்ணீர் பாகம் 8

 எலும்பும் தோளும் மட்டுமே இருக்குற ஒரு இரும்பு மனுசனாத்தான் வாழ்ந்துட்டு வர்ராறு. அவருக்கு ஒரு ஏக்கரு சொந்தமா இருக்கு. இன்னவரைக்கும் யாரையும் எதிர்பார்த்தது கிடையாது. எதையும் தனி ஆளா நின்னு செஞ்சுகாட்டுறதுல. அவருக்கு ஒரு சந்தோசம். பிள்ளகுட்டி ஊருக்குள்ள இருந்தாலும் இன்னைக்கும் அவரு தனிதான். பிள்ளைகளுக்கு, இருக்குற ஒரு ஏக்கரயும் வித்து பங்குபோட்டுத் தரலேனு ஆதங்கம். இவருக்கு இவரோட சின்ன வயசுலயிருந்து பாடுபட்டு ஒழச்சு சம்பாரிச்சு காசுபோட்டு வாங்குன இடம். பிள்ளைகளவிட அதிகமா நேசிக்கிற இடம். அந்த இடத்த விக்கிறதும் பிள்ளைகள விக்கிறதும் ஒன்னுதான். அதுனால நான் இருக்குற வரைக்கும் இந்த நிலத்த யாருகிட்டயும் விக்கமாட்டேன். நான் செத்தப்புறம் யாருக்கு எப்படிச் செய்ய விருப்பமோ அப்படிச் செஞ்சுக்கோங்க. அது அவிய்ங்க அவிய்ங்க இஸ்டம். வச்சு உழுதாலும் சரி, வித்துத் தின்னாலும் சரி. அடுத்தவன்கிட்ட வச்சுப்புட்டு அவன் வந்து உழுகிறத என்னால பாக்க முடியாதுனு ஒரேயடியா சொல்லீட்டாரு. பிள்ளைகளுக்கு காலம் போனபோக்குல இந்த கெழடுதான் இந்த வயல கட்டிக்கிட்டு அழுவுது. இதுபாட்டுக்க ஊத்துர கஞ்சிய குடிச்சிப்புட்டு வீட்டுல நொடங்கிக் கெடக்க வேண்டியதுதானேனு ஒவ்வொருவருக்கும் கருப்பன் மீது கோபம். இவர்களுக்கிடையேயான போராட்டத்தில் இன்றும் நிலம் கருப்பன் கைவசமே இருக்குது.  

ஆத்துல தண்ணி வரப்போகுதுனு காலம்பரம் பேப்பருல பாத்தேன். அதான் இந்த கருவ முள்ளுகள வெட்டிக்கிட்டு இருக்கோமுனு மணி கருப்பன பாத்துச் சொன்னாரு. அமாம்பா மணி, இப்பவே தோண்டிக்கிட்டாத்தான். தண்ணி வந்த பின்னாடி இந்த சேத்துக்குள்ள கெடந்து இழுபடமுடியாது. வெட்டுங்க, வெட்டுங்க, பாவம் இந்தப் பயலுகல வேற வேகாத வெயிலுல இழுத்துக்கிட்டு வந்துட்டியாக்கும். படிக்கிற பயலுகல சேத்துக்குள்ள இழுத்துவிடாதப்பா. நம்ம காலந்தான் ஏதோ சேரும் சகதியுமா போச்சுன்னா இதுகனாச்சும் ஏதாவது டவுனுக்குள்ள போயி வேல வெட்டியப் பாத்து பொலச்சுக்கட்டும். அவனவன் சொந்த வயக்காரனே, காடு கரைய வித்துப்புட்டு பிள்ளைகள படிக்க வச்சு, டவுனுக்குள்ள போயி குடியேறுறாய்ங்க. நீ இம்புட்டு கஷ்டப்பட்டு படிக்க வச்சுப்புட்டு இதுகல போட்டு முள்ளுவெட்ட விடுறது நல்லா இல்லப்பானு மணியின் மகன்மகள் மீது அக்கரை காட்டினார் கருப்பன்.

            அதுக்கிள்ளப்பா, இப்பயெல்லாம் யாருதான் படிச்ச படிப்புக்கு வேல தர்ராய்ங்க. நிலம்புலம் இருக்கவன் வித்துப்புட்டு காசுகள காட்டி வேலைய வாங்கீருராய்ங்க, நம்மள மாறி ஆளுகதான் பிள்ளைகள எம்புட்டுத்தான் படிக்க வச்சாலும் வேல வாங்குறது பெரிய கஷ்டமா இருக்குது. வெவசாய வேலைனா என்ன? கூலி வேலைக்கு போகலாட்டியும் சொந்த வேலைய பாக்குறதுல ஒன்னும் தப்பு இல்லப்பா. வேத்தாள விட்டா கூலி குடுத்து மாள முடியல. நாமலே பாடுபட்டாதானே வெவசாயத்துல ஏதோ நாமலும் நாலு காசு பாக்கமுடியும் என்றார் மணி.

அதென்னமோ சரிதாம்பா, எடுத்ததுக்கெல்லாம் கூலி ஆள விட்டோமுனா வெவசாயம் பன்றதுக்கு சும்மா படுத்து எந்திருச்சிப்பிட்டுப் போயிரலாம். கூலிக்கு ஆளு விடனுமுனா நல்லா பத்து, பதினஞ்சு ஏக்கருக்கு சொந்தக்காரனா இருந்தா சரிப்படும். நம்மள மாதிரி ஒத்த ஏக்கர வச்சிக்கிட்டு திரியிரவனயெல்லாம் சொந்தமாத்தான் வேலையப் பாத்துக்குறனும். இதுல என்னத்த பெருசா காசு பாக்கப் போறோம்? உழுதவனுக்கும் உரக்கடக் காரனுக்கும் கொடுத்துட்டா ஏதோ மிச்சம் மீதாரி சோத்துக்கு ஆயிக்குரும். அம்புட்டுத்தான் வெவசாயம். இந்த ரேசன் அரிசிக் கொடுமையிலிருந்து கொஞ்ச காலம் தப்பிக்கலாம் என மணியின் கருத்துக்கு ஒத்த கருத்தினைக் கூறினார் கருப்பன். ஏம்ப்பா மணி ரெண்டு வருசமா தண்ணிவிடாம கெடுத்துப்புட்டாய்ங்க. அதுக்குள்ள கருவ மண்டிப் போயிருக்கு. சரி, இந்த தடவ தண்ணி வந்துச்சுனா ஏதாவது அறுவட முழுக்க வருமா? இல்ல டேங்கு வத்திப்போச்சு. பொச்சு வத்திப்போச்சுனு சொல்லி ஏதாவது காயப்போட்டுருவானுகளா? தெரியலயே என்றார் கருப்பன்.

இந்த தடவதான் கேரளாவுல நல்ல தண்ணியாமுல அதுனால தண்ணிக்கு ஒரு பிரச்சனையும் இருக்காதுனு பேசிக்கிறாங்க. எனக்கும் அப்படித்தான் தோனுது. ஊரே வெதைக்கையில நாம மட்டும் வயல சும்மாவா போட முடியும்? சொல்ல முடியாது அனையில தண்ணியே இருந்தாலும் சில நேரத்துல, குடிக்கனும் குளிக்க வேனுமுனு சொல்லிப்புட்டு தண்ணிய அடச்சுப்புடுவானுக. உங்களுக்கென்ன வெள்ளாம சாவியாப் போச்சுனா கவர்மெண்டு காசு வரும். நீங்க சொந்த வயக்காரவுக. எங்கள மாதிரி ஆளுகளுக்குத்தான் பஞ்சப்பாட்டு பாடனும் என்று கருப்பன் சொந்த வயக்காரர் என்பதைச் சொல்லிக் காண்பித்தார் மணி.

அட நீ வேரப்பா மணி. கவர்மெண்டு கொடுக்குற காசு கண்டவனெல்லாம் தின்னு மிச்சம் மீதாரி நமக்கு வரும்போது குண்டி தொடைக்கக்கூட பத்த மாட்டேங்குது. ஏதோ பேருக்கு நானு சொந்த வயக்கார்ரனு சொல்லிக்கிட்டுத் திரியுறேன். உனக்குத்தான் தெரியுமே என் நெலம தெரிஞ்சுக்கிட்டே நீ இப்படி பேசுறது நல்லாவா இருக்குதுனு இந்த நிலத்துக்காக தன்பிள்ளைகள் செய்கின்ற கொடுமையை நெனச்சு வருத்தப்பட்டாரு கருப்பன். இல்லாதவனுக்கு இல்லையேங்குற ஒரு பிரச்சனதான். இருக்குறவனுக்கு இருக்குறதப் பாதுகாக்கனுமேங்குற பிரச்சன அதுமட்டுமில்லாம சரியா பங்கு போடுறதுல பிரச்சனை. சரியா பங்கு போட்டுக் கொடுத்தாலும் தான் வாழும்போதே அத பிள்ளைக அழிச்சுப்புடுவாய்ங்களேங்குற பயம். அப்படி அழிக்குறதுக்கா ஆயுசுக்கும் அரும்பாடுபட்டு சொத்து சேத்தோமுனு நெனைக்கும்போது மனசு படும்பாடு சொல்லவே வேணாம். ஒழச்சு சம்பாரிச்சு சொத்து சேர்த்தவனுக்குத்தான் அந்த சொத்துமேல அக்கற அதிகமா இருக்கும். சொகுசா நோகாம பங்கு வாங்கிறவனுக்கு அதோட அருமை புரியுறதில்ல. அவிய்ங்க பாட்டுக்க போற போக்குல வித்துத் தின்னுப்புட்டுத் திரும்பவும் பழையபடி கஷ்டப்படுறாய்ங்க. அத நெனச்சா சொத்து சேத்தவனுக்கு அதவிட கஷ்டமா இருக்குது. கருப்பனோட நெலம இருந்தும் இல்லாதது மாதிரிதான். கருப்பனுக்கு ஏதோ அப்பப்ப கஞ்சி கெடைக்குதுன்னா அவரு பேருல அந்த ஒரு ஏக்கரு நிலம் இருக்குதுங்குறதுனாலதான்.

நானும் நாளைக்குத்தான் வந்து கருவய வெட்டனும். ஒனக்காச்சும் உன் புள்ளைக ஒத்தாசையா வருதுக. எனக்கு வெட்டும்போது உழுகும்போது ஒருத்தனும் எட்டிப் பாக்க மாட்டேங்கிறான். அறுக்கும்போது மட்டும் ஆளாளுக்கு சாக்கத் தூக்கிக்கிட்டு வந்துருவாய்ங்க. என்ன பன்றது எனக்குப் பொறந்ததுக அப்படி இருக்கு. நானும் வேற வழியில்லாம அவிய்ங்களுக்குப் பயந்துக்கிட்டு மிச்சம் மீதாரி வெச்சுக்கிறாம கொடுத்துப்புடுறேன் என தன் நிலையை நினைத்து வருந்தினார் கருப்பன். ஆத்துலயே தண்ணி வந்தாலும் உன் வயலுக்கு இந்த மேவயக்காரன்கிட்ட கேட்டுத்தானே பாச்சனும் பாத்துப்பா அவன் ஒரு மாதிரி. எப்ப எப்படி பேசுவான்னு தெரியாது. கொஞ்சம் பொறாமை பிடிச்சவன். அவன் வயலவிட நம்ம வயல் பார்க்குறதுக்கு கொஞ்சம் நல்லா இருந்துச்சுனா போதும், வயித்தெரிச்சப்பட்டுக்கிட்டு ஏதாச்சும் பேசுவான். ஏற்கனவே இந்த வயக்காரு ஏங்கிட்ட சொல்லுவாரு. அவன் வயல்ல போட்ட உரந்தான் இந்த வயலுக்கு வந்திருச்சு, அதுனாலதான் ஏன் வயல் சரியா வெளையல. உங்க வயல் நல்லா வெளஞ்சிருக்குனு ஏதாவது சொல்லுவானாம். எனக்குத் தெரிஞ்சு பத்து வருசத்துக்கு முன்னாடியெல்லாம் இந்த வயலுக்கு மேமடத் தண்ணிதான் பாயும். அதப் பொறுக்காத ………….பட்டிக்காரய்ங்க குத்தக எடுக்குறாய்ங்களாம் குத்தக. கம்மாய சுத்தம் பன்றேங்குற பேருல ஜே.சி.பிய வச்சு மண்ணப் போட்டு மூடிப்புட்டாய்ங்கப்பா. அது மட்டும் தொறந்திருந்துச்சின்னா போதும் உங்களுக்கு ஆத்துத் தண்ணியப் பத்திக் கவலயே இல்ல. தண்ணி தேவப்படும் போது வரவேண்டியது மடய தொறக்க வேண்டியது. ஒரு மணி நேரம் ஒக்காந்திருந்தா போதும் வயல் தெப்பம் மாதிரி நெரஞ்சு போயிரும். அடச்சிப்புட்டு கம்மகொலையாம வீட்டுக்குப் போயிரலாம். எவன் பொல்லாப்புக்கும் ஆளாக வேண்டிய அவசியம் இல்ல. அந்த மடையில ஏற்கனவே இருந்த தூம்புகூட அங்கதான் இன்னும் இருக்கு. இப்ப என்னடானா அந்த இடம் பொதரு மண்டிப் போயி கெடக்கு. எல்லாம் நேரம், காசு பணம் இருக்கவன் பக்கந்தான் கவர்மெண்டுகூட தலையாட்டுது என்று வரப்பின் ஓரத்தில் இருக்கின்ற முட்புதரைக் கை நீட்டிக் காட்டியவாறு பேசினார் கருப்பன்.  

ஏன்தாத்தா இப்ப நம்ம வேணுமுனா தோண்டிக்கிறலாமா? உங்களுக்கு சரியா வாமட தூம்பு எங்க இருக்குனு அடையாளம் காட்ட முடியுமா? கம்மாயில தண்ணி வர்ரதுக்குள்ள மடய தொறந்துட்டோமுனா உங்களுக்கும் தண்ணி பாச்சுறது கொஞ்சம் ஈசியாத்தானே இருக்கும். நாம வேணுமுனா நாலஞ்சு பேரு சேந்து தோண்டுவோமா? என்று மடையை அடையாளம் காட்டிய கருப்பனை நோக்கி மடயத் திறக்கும் ஆர்வத்தில் கேட்டான் வேந்தன். அட நீ வேரப்பா, ஏற்கனவே ஒரு தடவ நாங்க கொஞ்சபேரு சேர்ந்து தோண்டிப்புடலாமுனு அவிய்ங்ககிட்ட கேட்டதுக்கு சண்டைக்கு வர்ர மாதிரி ஹே ஹேனு வந்துட்டாய்ங்கப்பா. அப்புறம் எதுக்குடா வம்புனு ஆத்துத் தண்ணியத்தான் பாய்ச்சிக்கிட்டு இருக்கோம்