திங்கள், மே 18, 2020

எனது சமூகம் (மேரா சமாஜ்) - தமிழ் மொழிபெயர்ப்பு

                                                எனது சமூகம்
                                                                      மொழிபெயர்ப்பாளர்: கு.ராஜா
அம்மா அப்பாவுடன் நான் எனது சமூக மக்களின் வீட்டில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வழக்கம். சிலநேரம் திருமண விழாக்களில் சிலநேரம் ஏதாவது பிறந்தநாள் விழாக்களில் சிலநேரம் பண்டிகைகளுக்கும்  நான் அடிக்கடி செல்வது வழக்கம். நான் பார்த்த வரையில் மக்கள் மிகவும் மரியாதையுடனும் அன்புடனும் ஒன்றிணைகின்றனர். மனிதன் சமூகத்தை ஏன் விரும்புகிறான். மனிதனுக்கு சமூகம் ஏன் தேவையாக இருக்கின்றது.  என்பதனை நான் இந்த விழாக்களுக்கு வந்துதான் இதனுடைய முக்கியத்துவம் மற்றும் தேவையை புரிந்துகொண்டுள்ளேன். ஆனாலும் நெருக்கமான  அல்லது தூரத்திலிருக்கின்ற உற்றார் உறவினர்கள்  சொந்த பந்தங்கள் அல்லது கிராமம் மற்றும் நரகத்தின் தொடர்பினால்   சகோதரத்துவத்துடன் ஒருவருக்கொருவர் தங்களின் அன்பைப் பரிமாறிக்கொள்கின்ற மக்கள் ஒருவருக்கொருவர் சண்டைபோடுவது எனக்கு சிலநேரங்களில் மனவருத்ததினை ஏற்படுத்திவிடும். 
எனக்கு மது அருந்துபவர்களைப் பார்த்தாலே ஒருபோதும் பிடிப்பதில்லை. தங்களுக்குள்ளாக சண்டையிட்டுக்கொள்பவர்களைப் பார்த்தாலே எனக்கு பயம் வரும். அதோடு கோபமும் வரும். சிலநேரம் யாராவது  போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள் தங்களுடைய  வீட்டில் உள்ளவர்களிடம் சண்டை போடுவதைப்  பார்த்து நான் என்னுடைய எதிர்கால வாழ்க்கை குறித்து ஐயமுற்றவளாக ஆகிவிடுவது வழக்கம். எனது வாழ்க்கையில் இப்படிபட்ட சூழ்நிலையை எப்படிச் சமாளிக்கப் போகிறேன்   என்று எனக்குத் தெரியாது. பள்ளிப்படிப்பை முடித்த பிறகு தன்னில் ஆழ்ந்து இருக்கின்ற நான் எனது வருங்காலம் குறித்த ஏமாற்றத்துடன் பட்டும் படாமல் இருக்கத் தொடங்கி விட்டிருந்தேன். 
சமூகத்திலுள்ள மக்கள் எப்படி தங்களின் முன்னோர்களின் தொழிலுடன் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதனைப் பார்த்து எனக்கு வருத்தம் ஏற்படும். பல நேரங்களில் நுழைவுத் தேர்வில் இளநிலை தேர்ச்சி பெற்ற பையன்களுக்கும் நல்ல வேலை இல்லாத பொழுதும் அதே வேலையினை செய்யத் தொடங்கினர். நான் குழந்தைப் பருவத்திலிருந்தே இது எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் வருகிறேன்.  ஆனால் எதிர்காலத்தில் நானும் இத்தகைய வேலையைத்தான் செய்வேன் என்று ஒருபோதும் நினைக்க முடியவில்லை.  அம்மா தனது எல்லாக் குழந்தைகளையும் படிக்க வைப்பதோடு   எல்லாக் குழந்தைகளுக்கும் நல்ல பதவிகளில் மரியாதைக்குரிய வேலை கிடைக்க  வேண்டும் என்றுதான் விரும்புவாள். 
எனக்கு இந்த மக்களின் மீது கோபம் கோபமாக வரும். அவர்களுக்கு இருக்கின்ற அதிக  வேலை   காரணத்தால் உதவிக்கு தங்களுடைய 12 – 15 வயது குழந்தைகளை  உடன் அழைத்துச் செல்கின்றனர். இந்த குழந்தைகள்  துப்புரவு வேலை செய்த பின்னர், அவர்கள் வேலை செய்வதைப் பார்த்த அவர்களுடன் பயிலுகின்ற சகமாணவர்களே அவர்களிடம் தீண்டாமை பற்றிய ஏற்றத்தாழ்வு மனப்பான்மை ஏற்படுமாறு நடந்து கொள்வர். அவர்களுடன் சண்டை போடுவதும், அவர்களை வெறுப்புடன்  நடந்துகொள்வர். மேலும் ஆசிரியர்கள் அவர்களை அடித்தும் அவமானப்படுத்தியும் கடுமையாக நடந்து கொள்வதாலும் அவர்களை பள்ளியில் நீடிக்க முடியாதபடி செய்து விடுவர். இவ்வாறு இந்தக் குழந்தைகளை பள்ளியில் படிக்க விடுவதில்லை. வீட்டின் சூழ்நிலை கருதியும் படிப்பதற்குப் புத்தகம் நோட்டு இல்லாததாலும் அப்பாவின் இயலாமையும் அம்மாவின் வேறு வழியின்மையாலும் அவர்களை மேலும் படிக்க விடுவதில்லை. வீட்டின் தேவைகளையும் செலவுகளையும் பார்த்து அவர்களின் படிப்பு நிறுத்தப்படுகின்றது. மேலும் இக்குழந்தைகள் தங்களுடைய தாய் தந்தையர்களின் வேலையில் ஈடுபடத் தொடங்கினர். இவ்வாறு தலைமுறை தலைமுறையாக முன்னோர்களின் தொழில் பின்பற்றப்பட்டு வந்து கொண்டிருக்கின்றது.
ஐந்தாவது – ஆறாவது படித்த பையன் மேற்கொண்டு என்னதான் செய்ய முடிந்தது?   இதே நிலமை பெண்களுக்கும் இருந்தது. புகுந்த வீட்டிற்குச் சென்ற பிறகு தன்னுடைய குடும்பத்திற்குத் தேவையான வரவு செலவுகளை செய்வதற்காக அவர்களும் இந்த வேலையில் சேர்த்துவிடப் படுகின்றனர். மகன் வேண்டுமானால் வேலை செய்யாமலிருக்கலாம். ஆனால் மருமகளை   வேலையில் ஈடுபடுத்துவர். அவள் வேலையும் செய்வாள். சமைத்தல், பாரிமாறுதல், பாத்திரம் துணி துவைத்தல்    என வீட்டினுடைய அனைத்து வேலைகளையும் செய்து   குழந்தை குட்டிகளை பராமரிக்கும் பொறுப்பையும் செய்து முடிக்கிறாள். இத்தனை வேலைகளையும் செய்தும் கூட பெரும்பாலான கணவனின் அடி உதை, மாமியாரின் வசவு மொழிகளும்  நாத்தனார்களின் குத்தலான மொழிகளும்தான் அவளுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. 
இவை எல்லாம் எனக்குத் தவறாகவேத் தெரிந்தது. நான் அவர்களுக்கு எடுத்துச் சொல்வேன். உறவினர்களின் வீடுகளில் சகோதரர்களுக்கிடையே சண்டையிட்டுக் கொண்டாலும் மாமியார் சண்டையிடுகின்ற பொழுதும் நாத்தனார் மற்றும் அண்ணிமார் சண்டையிடுகின்ற பொழுதும் கணவனானவன் வீட்டினர் மீது உள்ள தன்னுடைய கோபத்தையெல்லாம் மனைவியின் மீதுதான் காட்டுவான். பாவம் பரிதாபத்திற்குரிய நிலையில் அந்த மனைவி தொடர்ந்து அடிவாங்கிக் கொண்டுதான் இருக்கிறாள். அவள் அழுது கதரினாலும் யாரும் உதவிக்கு வருவதில்லை. ஏனென்றால் இது கணவன் மனைவிக்கிடையில் உள்ள விவகாரமாக கருதுகின்றனர். வேண்டுமானால் பிறகு அடிபட்ட  மனைவிக்கு மஞ்சள் போட்டு ஒத்தடம் கொடுப்பார்கள். ஆனால் சண்டையிடுகிற சமயத்தில் வீட்டிலும் அக்கம்பக்கத்திலும் உள்ளவர்களுமே அவளை கப்பாற்ற மாட்டார்கள். 
இது ஒரு பரம்பரை பரம்பரையாக நடைபெறும் நிகழ்ச்சி.   தன்னுடைய இளமைக் காலத்திலிருந்து முதுமை நிலையை அடையும் வரை மாமியார் அடிவாங்கிக்  கொண்டிருப்பாள்.  இதுதான் மருமகளுக்கும் நடக்கும்.  இந்த விஷயத்தை   கணவனிடம் சொன்னால் கணவன் எதிரியைப் போல அடிப்பான்.   மனைவி அழுதுகொண்டேதான் இருப்பாள். ஆயினும் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்து கொண்டுதான் இருப்பாள். சமையல் செய்து எல்லோருக்கும் பரிமாறிய பிறகு சிறிதும் தனக்கென்று வைத்துக் கொள்ளாது பசியுடனே இருப்பாள். அவள் தனக்கு ஒரு விடிவு காலம் வரும் என்று ஏங்கிக் கொண்டேயிருக்கிறாள். ஒன்றிரெண்டு ஆண்டுகளில் தன்னுடைய நிலைமை மாறிவிடும் என்றும் அல்லது அதன் பிறகு ஒன்றிரெண்டு குழந்தைகள் பிறந்த பிறந்த பிறகு நிலமை மாறிவிடும் என்று நினைப்பாள். அல்லது குழந்தைகள் பெரியவர்களானதும் மாறிவிடும் என்று நினைப்பாள். அல்லது மருமகள்கள் வந்த பிறகாவது இந்நிலமை மாறும் என்று நினைப்பாள். இதே எதிர்பார்ப்பில் அவளின் வாழ்நாள் முடிந்து விடுகின்றது.  கல்வுயறிவும் விழிப்புணர்வும் இல்லாத சமூகத்தில் நடக்கின்ற இது போன்ற நிகழ்வுகளையெல்லாம் பார்த்து  நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்    என்று முடிவு செய்தேன்.
நான் என்னை முழுவதுமாக படிப்பதில் ஈடுபடுத்திக் கொள்வேன். நான் நல்ல வேலையில் இருப்பேன். சமூகத்தில் இவ்வாறு தலைமுறை தலைமுறையாக நடைபெற்று வருகின்ற இந்த நிகழ்வுகள் பற்றி விழிப்புணர்வினை ஏற்படுத்தி சமூகத்தினை மாற்ற முயற்சி செய்வேன். நான் எனது பிடிவாதத்துடன் கல்லூரியில் படிக்கத் தொடங்கினேன். என் ஈடுபாட்டுடனும் கடின உழைப்புடனும் நல்ல முறையில் பி.ஏ பட்டம் பெற்றேன். பி.ஏ படித்து முடித்த பிறகு எம்.ஏ படிக்க விரும்பினேன்.   எனது இந்தி பேராசிரியர் முனைவர் பட்டம் படிக்கின்றவர் என்று தெரிந்து கொண்டேன்.  எனக்கும் முனைவர் பட்டம்   படிக்க வேண்டும் என்ற எண்ணம்   தோன்றியது.
எனது சமூக மக்கள் தங்களுடைய குழந்தைகளின் கல்வியை குறித்து அதிகம் சிந்திப்பதே இல்லை. அவர்கள் மதம் மற்றும் சடங்குகளைப் பற்றியும் தான் சிந்திப்பார்கள். ஹோலிப் பண்டிகையின் அர்த்தம் பற்றி இவர்களுக்குத் தெரியாது. குலால்* கொண்டு ஹோலிப் பண்டிகையினைக் கொண்டாடுவர். உயர்சாதியினர் என்பவர்களைப் பார்த்து மரக்கட்டைகளை ஓரிடத்தில் சேகரித்து எரிப்பதும் அதனை பூஜை செய்தும் குருட்டுத் தனமாக அவர்களைப் பின்பற்றுவர். நம்முடைய பழங்குடி மூதாதையர்களின் கதைதான் இந்த ஹோலிப் பண்டிகையின் கதையாகும்.
உயர்சாதி என்பவர்கள்  சதி செய்து   ஹோலிக்காவை  எரிக்கும்   கதையை உருவாக்கினர். இதுபோன்ற திருவிழாவினைக் கொண்டாடுவது, நம்முடைய வேலை இல்லை என்பது எங்கள் மக்களுக்குத் தெரியாது.  மாறாக இதுபோன்ற திருவிழாக்களை எதிர்க்க வேண்டும்.  
தசராத் திருவிழாவின் போது ராவணன் எரிக்கப்படுகின்றான். நாமும் ராவணன் எரிக்கப்படுவதினைப் பார்த்து மகிழ்ச்சியாக இருக்கின்றோம். ஆனால் நாம் இதனை தெரிந்து கொள்ளாமலேயே இருந்திருக்கின்றோம். ராவணன் நம்முடைய பூர்வீகக் குடித்தலைவன் என்பதை நாம் அறிவதில்லை.   உயர்சாதி ராமன் பத்துதலை ராவணனை வீழ்த்தியதாகக் கதை சொல்லப்படுகின்றது.   ராவணனைக் கொலைசெய்து கொண்டாடுவது என்பது எங்களுடைய திருவிழாவாக இருக்க முடியாது. நாம்  உயர்சாதி என்பவர்களைப்   பின்பற்றுவதால் இதுபோன்ற திருவிழாக்களையும் கொண்டாடினோம். 
தீபாவளி அன்று நடத்தப்படும் பூசையும் ஒருபொழுதும் எங்களுடையதாக ஆக  முடியாது. ஏனெனில்  மகாபலி என்ற மன்னரை வஞ்சனையால் பலியிட்டுக் கொன்று வெற்றி பெற்றுவிட்டனர். இதனை விழாவாகக் கொண்டாடினர். இந்தக் கதையுடன் தனலெட்சுமி பூசை போன்ற வேறு வாய்மொழிக்கதைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் எங்களிடம் பணமும் கிடையாது. பதார்த்தங்களும் கிடையாது. இருப்பினும்   நாம் லெட்சுமி பூசை செய்வதை பின்பற்றி வருகின்றோம். 
எங்களுடைய மக்கள் மதத்திற்குப் பயந்தவர்களாகவும் குருட்டு நம்பிக்கை உடையவர்களாகவும் இருந்தனர்.   பூனை பாதையில் குறுக்கிட்டால் தீய சகுணம் என்றும் காகம் தனது சிறகுகளை அடித்துக்கொண்டால் தீய சகுணம் என்றும் இது போன்ற பல மூடநம்பிக்கைகளை உண்மை என நம்பி இருந்தனர். யாரேனும் ஒருவரின் உடலில் சாமி வந்தாலும் ஆவி புகுந்து கொண்டாலும் அதனை நம்பிக்கையுடன் வழிபட்டு உண்மை என நம்பி வந்தனர்.   என்னுடைய குழந்தைப் பருவத்தில் மக்களிடத்தில்  சாமி அல்லது பூதம் வருவதும் அதனை உடலை விட்டு வெளியேற்றுவதற்குப் பூசை பரிகாரங்கள் செய்வதையெல்லாம் பார்த்திருக்கிறேன். இது போன்ற நிகழ்வுகளால் நான், தூங்கும் போது கூட பயந்து கொண்டே இருப்பேன். பிறகுதான் பாட்டி சொன்னாள். “பாபாவிடம் அழைத்துச் சென்று தாயத்துக் கட்டிவிடுங்கள் இல்லையென்றால் இவள் இப்படி பயந்தபடியேதான் இருப்பாள்.” ஆனால் மாமா எண்ணையில் நனைக்கப்பட்ட கயிற்றினை எனக்கு முன்பாகாகவே தண்ணீரில் போட்டு அதனைச் சூடுபடுத்தி சத்தமாக சில மந்திரங்களைச் சொன்னவுடன் என்னுடைய மனதில் இருந்த பயமெல்லாம் வெளியேற்றப்பட்டது. 
எங்களுடைய சமூக மக்கள் இந்துத்துவத்தினப் பின்பற்றி வருகின்றனர். இத்துடன் தங்களுடைய கடவுளர்களை வழிபட்டு வருகின்றனர். எங்களுடைய வீட்டில் சிறப்பாக ராமதேவ் சித்தருக்கு சேவல், திண்பண்டங்கள் படைத்து பூசை செய்யப்படுகிறது. இவ்வாறு விஜயாசென் தேவிக்கு பூசை செய்ததற்கு அதனுடைய பெயரில் சிறிய தாயத்து போன்று நூலில் கோர்த்து குழந்தைகளுக்குக் கழுத்தில் கட்டிவிடுவது வழக்கமாக இருந்தது. குழந்தைப் பருவத்தில் இதுபோன்ற எல்லா நிகழ்வுகளும் எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் பள்ளிப்படிப்பினை முடித்தப் பிறகு, இந்த விஷயங்களைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியவுடன், இவை  எல்லாம் வெறும் ஆடம்பரமும் பின்பற்றுதலும்தான்   என்பதினை உணர்ந்தேன். சாமி, தேவதைகள்  மற்றும் துறவிகளின் அருளைப் பெறுவதை விட தங்களுடைய மனதில் தன்நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அதிலிருந்து நாம் முன்னேரவும்  எதிர்த்துப் போராடவும் வலிமை கிடைக்கின்றது. 
நான் சிறுமியாக இருந்த பொழுது, எங்களுடைய வீட்டிற்கு அடிக்கடி உறவினர்களும் விருந்தினர்களும் வருவது வழக்கம். அதில் ஒரு சிலர் பலமுறை பல நாட்கள் தங்கி இருந்திருக்கின்றனர். எங்களுடைய மக்கள் அவர்களிடம் மரியாதை அறிந்து நடந்து கொள்வதோடு பசியுடன் இருக்கின்ற விருந்தினர்களுக்கு மரியாதையுடன் உணவளிப்பார்கள். எங்களுடைய மக்களிடத்தில் சாப்பிடுகின்ற பழக்கம் எனக்கு மிகவும் பிடித்தமானது. தொழிலாளர்களாக இருக்கின்ற அவர்கள் குறைந்த ஊதியத்திலும் கறி, மீன் மசாலா போட்டு சமைத்த கறி என நன்றாக சமைத்துச் சாப்பிட்டுவிட்ட பிறகு  இல்லாமையினால் வருத்தப்படுவார்கள். இன்றைய பொழுது மகிழ்ச்சியாக திருப்தியாக இருந்தால் போதும் நாளையைப்  பற்றி  கவலைப்பட மாட்டார்கள்.   அவர்களின் இதுபோன்ற எண்ணங்களும் நடத்தைகளும் அவர்களை எதிர்காலம் குறித்து சிந்திக்க இயலாமல் செய்துவிடுகின்றன. இதனாலேயே அவர்களால் தங்கள் தங்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் குறித்து திட்டமிட முடிவதில்லை.
எங்களுடைய சாதி சமூதாயத்தில் உள்ள பெண்களுக்கு 14 – 15 வயதிற்குள்ளாகவே திருமணம் நடத்துவது வழக்கமாக இருந்தது. அம்மாவும் எனக்காக எழுதப்படிக்கத் தெரிந்த நல்ல வேலையில் இருக்கிற மாப்பிள்ளையைத் தேடினர். என் அப்பாவோ மிகவும் தூரத்தில் இருக்கின்ற நகரங்களுக்கெல்லாம் சென்று நல்ல மாப்பிள்ளை தேடினார். வருகின்ற மாப்பிள்ளைகளை எனக்குப் பிடிக்கவில்லை என்பதால் திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. எனவே நான் மேலும் படித்துக் கொண்டிருந்தேன். நான் இளங்களைப்  படிப்பு படிக்கின்ற பொழுது, மிகவும் நெருக்கமான உறவினர்கள் என்னுடைய தாய் தந்தையரிடம் எவ்வளவு நாட்களுக்குத்தான் பெண் பிள்ளையை படிக்க வைத்துக் கொண்டிருப்பீர்கள்? எவ்வளவு நாட்களுக்குத்தான் அவளை வீட்டிலேயே உட்கார வைத்திருப்பீர்கள்? இப்படியே போனால் உங்கள் பெண்ணிற்கு வயது ஆகிவுடும். அவளை ஒத்த பெண்களெல்லாம் திருமணம் செய்து அவர்கள் ஒன்றிரெண்டு குழந்தைகளுக்குத் தாயாகி விட்டார்கள். நீங்கள்தான் இப்படிக் கண்மூடித்தனமாக உட்கார வைத்திருக்குறீர்கள்” என்று சொல்லிவிட்டார்கள்.
அம்மா சொல்லுவாள். நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.  எங்கள் மகள் வெறுமனே சுற்றிக் கொண்டிருக்கவில்லை.   படித்துக் கொண்டிருக்கின்றாள். நல்ல குணமுள்ள புத்திசாலியான பையன் கிடைத்த பிறகு திருமணம் செய்வோம். கிடைக்காத வாரை படித்துக் கொண்டுதான் இருப்பாள். மக்களுக்கு என்னிடமும் என்னுடைய அம்மா அப்பாவிடமும் எந்தக் குறையும் இல்லை. நமது சமூதாயத்தில் பெண்களை இந்த அளவிற்குப் படிக்க வைக்கின்ற வழக்கம் இல்லை. பிறகு நீங்கள் ஏன் இவ்வளவு படிக்க வைக்கிறீர்கள் ? என்பதுதான் அவர்களின் குறையாக இருந்தது.  மக்கள் இதற்கு மேல் சிந்திக்க மாட்டார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன். மகளைப் பெற்றெடுத்து அவளைப் படிக்க வைப்பத்தில்லை. அவளை திருமணம் செய்து கொடுக்கவே நினைக்கின்றனர். திருமணம் செய்வது, குழந்தைகள் பெற்றுக் கொள்வது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு இருந்து வந்திருக்கின்றனர். இந்த விதத்தில்   சமூகத்தினை முன்னேற்ற முடியாது. இத்தகைய மரபார்ந்த சிந்தனைகளை உடைக்க வேண்டியது அவசியமாக இருக்கின்றது. அப்போதுதான் சமூகம்   புதிய எண்ணங்களை ஏற்றுக்கொள்ள முடியும். நான் எனது சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக முடிந்த வரை முயற்சி செய்தவது என்பது எனது கனவாக இருந்தது.    சமூகத்தில் ஒன்றுமறியாதப்  பெண்களுக்கு குழந்தைப் பருவத்திலிருந்தே விழிப்புணர்வினை உருவாக்கச் செய்து   கல்வியின் தேவையினை அறிந்தவர்களாக மாற்றுவதற்கும், அவர்களை தன்நம்பிக்கை உள்ளவர்களாக ஆக்குவதற்கு ஊக்கப்படுத்துவதுமே எனது ஆசையாகும்.