திரிசங்கு
(த்ரிஷங்கு)
மொழிபெயர்ப்பாளர்:
கு.ராஜா
“வீட்டின் நான்கு சுவர்கள்
கொண்ட அமைப்பானது மனிதனுக்கு பாதுகப்பினைத் தருகின்றது. ஆனால்
அத்துடன் அவனை ஒரு எல்லைக்குள் கட்டுப்படுத்தவும் செய்கிறது. பள்ளிகளும் கல்லுரிகளும்
எங்கே அறிவை, ஆற்றலை வளம்பெறச் செய்கின்றனவோ, அங்கேயே நிபந்தனை, கட்டுப்பாடு, மற்றும்
ஒழுங்கு எனும் பெயரால் அவனது ஆளுமையினைக் குன்றும்படியும் செய்கின்றன. விஷயம் இதுதான்
நண்பா! ஒவ்வொரு விஷயத்திற்குமான முரண் அதனுள்ளேயே
இருக்கிறது.”
இவையெல்லாம்,
நான் எந்தப் புத்தகத்திலிருந்தும் சான்றினை எடுத்து உங்கள் முன்பாக வைக்க வில்லை. இத்தகைய
கனமான செய்திகளையுடைய புத்தகங்களைப் படிக்குமளவிற்கு எனக்கு ஆற்றல் இல்லை. இவையனைத்தும்
எங்கள் வீட்டில் இரவும் பகலும் நடந்த அவர்களின் பேச்சுக்களிலிருந்தும் விவாதங்களிலிருந்தும்
எடுக்கப்பட்ட துணுக்குகள். அதாவது எங்களுடைய வீடு அறிவுஜீவிகளினுடைய அரங்கம். இங்கு
சாதாரணமாக சிகெரெட்டுப் புகைகளுக்கும் காப்பிக் கோப்பைகளுக்கும் இடையே பெரிதாக வாய்ச்சொற் கோபுரங்கள் எழுப்பப் படும்.
சாதாரனாமாக வார்த்தைகளினால் பெரிய பெரிய புரட்சிகள் நடைபெறும். இந்த வீட்டில் குறைவான
வேலையும் அதிகமான பேச்சுகளும் நடைபெறும். நான் எங்கேயும் படித்ததில்லை, அறிவாளிகளுக்கு
ஒரு வேளை தங்களின் வீட்டில் தொடர்ந்து வேலை செய்வது என்பது தடைசெய்யப் பட்ட ஒன்றாக
இருக்கலாம். என் தாயாருக்கு மூன்று மணி நேர வேலைக்குப் பிறகு விடுதலைதான். கொஞ்சம்
அதிகமாகவே படிப்பிற்கும் எழுத்திற்கும் பிறகு மீதமிருக்கும் நேரங்களில் அவள் பேசுவதும்
விவாதிப்பதுமாக இருப்பாள். இல்லையெனில் படுக்கையில் புரள்வதுதான். அவரின் சிந்தனைகளில்
உடல் செயலற்று இருக்கையில் மனமும் புத்தியும் சுறுசுறுப்பாக செயலாற்றத் துவங்குகின்றன. எனவே அவர்கள் ஒரு நாளில் இருபத்தி
நான்கு மணி நேரத்தில் பன்னிரெண்டு மணி நேரம் தங்களின் மனதையும் புத்தியையும் சுறுசுறுப்பாக
செயல்பட வைக்கின்றனர். தந்தையாரோ இதைவிட இருமடங்கு அதிகம். அவரால் முடியுமானால் குளியலையும் தன்னுடைய மேஜையிலேயே
முடித்துக் கொள்வார்.
எங்களுடைய பேச்சுக்களில்
எல்லாம் அதிகமாக கதைக்கப்படுவது, நவீனத்துவம்தான். ஆனால் கொஞ்சம் பொறுங்கள். நீங்கள்
நவீனத்துவத்துக்குத் தவறான பொருள் கொள்ளாதீர்கள். இது தலைமுடி
வெட்டிக்கொள்வதோ, முள்கரண்டியால் சாப்பிடுகிறவர்கள் போன்ற நவீனத்துவம் ஒருக்காலும் இல்லை. இது அப்பட்டமான அறிவுஜீவிகளின்
நவீனத்துவம். இது என்னவென்று எனக்கும் சரியாகத் தெரியவில்லை.
இங்கே வரையறை மீறுவது பற்றிய பேச்சுக்களே அதிகமாக கேட்கப்படுகின்றன.
நீங்கள் பழமையை உதறித்தள்ளிவிட்டு வாருங்கள். மகிழ்ச்சியாக பழமையுடன் ஒட்டிக் கொண்டு
வந்தால். உதைபடுங்கள்.
இப்படியே விவாதங்களில் உலகத்திலுள்ள எல்லா விஷயங்களும்
அரைபடுகின்றன. ஆனால் ஒரு வேலை எல்லோருக்கும் மிக விருப்பமான விஷயம் ஒன்று உண்டு. அதுதான் திருமணம்.
திருமணம் அதாவது அழிவு, லேசாக ஆரம்பிக்கும் பேச்சானது திடீரென அறிவுத்தளத்திற்குச்
சென்றுவிடுகின்றது. திருமண அமைப்பானது ஒரேயடியாக தனது அர்த்தங்களை இழந்துவிட்டது. கணவன்
மனைவியின் உறவு செயற்கையாக மேலிருந்து சுமத்தப்பட்டுள்ளது. இதன்பிறகு கோரமான விதத்தில்
திருமணம் தூள்தூளாக பறக்கவிடப்படுகின்றது. இவ்விவாதத்தில்
பெரும்பான்மையான பெண்கள் ஒரு பக்கமாகவும் ஆண்கள் ஒரு பக்கமாகவும் இருப்பர். இந்த விஷயத்தின்
சூழல் சற்றே சூடேறிவிடும். அப்பொழுது விரைவாக ஒருசிலர் விவாகரத்துக் கொடுத்து விடுவர்
என்று எனக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டுவிடும். ஆனால் நான் பார்த்த வரையில் இவ்வாறான
சம்பவம் எதுவும் நடைபெற்றதில்லை. அனைத்து நண்பர்களும் தங்கள் தாங்களின் திருமணத்தை மிகவும் நன்றாக மடித்துக்
கொண்டு அதன் மீது உறுதியாக உட்கார்ந்திருக்கின்றனர். ஆம் விவாதத்தின் போக்கும் தொனியும் இன்றும் அப்படியேதான் இருக்கிறது.
சற்றே
சிந்தியுங்கள்! திருமணத்தைக் கண்டித்தால்,
சுதந்திரமான காதலையும் கட்டுப்பாடுகளற்ற உடலுறவுகளையும் ஏற்றுக்கொள்ளத்தான்
வேண்டும். இதிலே ஆண்கள் மிகுந்த ஆர்வத்துடன் முன்னே நிற்பார்கள். அதைப் பற்றிப் பேசுவதிலேயே
அவர்களுக்கு பாதி சுகம் கிடைத்தது போல இருக்கும். அப்பா இதற்குப் பெரிய ஆதரவாளர். ஆனால்
நடந்தது என்னவென்றால் வீட்டில் மிகவும் அமைதியாக இருக்கும் தூரத்து உறவில் உள்ள அக்கா
இருந்தாள். அவள் இவ்விவாதங்களில் கலந்து கொள்ளாமலேயே இதை முழுவதுமாக அமல்படுத்தி விட்டபோது
என்ன நடந்தது என்றால் நவீனத்துவம் அனைத்தும் திடீரென கீழே விழுந்து விட்டன. அதனை அடுத்து
அம்மாதான் மிகவும் இயல்பாக நிலமையை சமாளித்து அர்த்தமற்ற திருமண உறவில் அக்காவின் வாழ்வை
அர்த்தமுள்ளதாகவும் மாற்றினாள். இருந்தபோதிலும் இந்த விஷயம் மிகவும் பழையது. ஆனாலும்
இதைப் பற்றி அடக்கமான குரலில் மூடி மறைத்துப் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன்.
அப்படியிருக்க,
அப்பா அம்மா இருவருக்கும் காதல் திருமணம் தான் நடந்தது. இருப்பினும் இந்த விஷயம் என்பது
வேறாகத்தான் இருக்கிறது. எனக்கு நினைவு வந்ததிலிருந்து அவர்கள் காதல் செய்ததை அல்ல
விவாதம் செய்வதைத்தான் பார்த்திருக்கிறேன். தன்னுடைய திருமணத்திற்கு முன்பு இதைத் தீர்மானிப்பதில்
அம்மாவிற்கு தாத்தாவிடம் நிறைய விவாதம் செய்ய வேண்டியிருந்தது. ஆயினும் ஒருவேலை விவாதம்
மிகவும் நீண்டதாகவும் இருந்திருக்கலாம். இருந்தாலும் இது விவாதத் திருமணம் இல்லை. காதல்
திருமணமே என்று அம்மா மிகவும் பெருமையாகச் சொல்லுவாள். பெருமை திருமணத்தைப் பற்றியதல்ல.
தாத்தாவை எதிர்த்து வெற்றி கண்டதைப் பற்றிய பேச்சாகத்தான் இருக்கும். தனக்கும் தாத்தாவிற்கும்
இடையே நடந்த உரையாடல்களை எனக்கு மனப்பாடம் ஆகுமளவிற்கு சொல்லியிருக்கிறாள். இன்றும் அதனைப் பற்றிப் பேசும்பொழுது பாதையிலிருந்து
விலகி சாதித்தது போன்ற திருப்தி அவளின் முகத்தில்
பளிச்சிடும்.
போதும்,
இப்படிப்பட்ட வீட்டில்தான் நான் வளர்ந்து கொண்டிருக்கிறேன். மிகவும் சுதந்திரமாகவும்
தன்னிச்சையாகவும் வளர்ந்து வளர்ந்து ஒரு நாள் திடீரென்று பெரியவளாகிவிட்டேன். பெரியவளாகி
விட்டேன் என்ற இந்த உணர்வு வெளியே தெறிந்த அளவிற்கு எனக்குள்ளே தோன்றவில்லை. இத்துடன்
ஒரு சுவையான நிகழ்ச்சியும் இணைந்துள்ளது. அதாவது
எங்களின் வீட்டிற்கு நேர் எதிராக தாழ்வாரம் போன்று மேல்மாடியில் கட்டப்பட்டுள்ள அறை
ஒன்று உள்ளது. ஒரு அறையும் அதற்கு முன்பாக ஒரு மொட்டை மாடியும் உள்ளது. அதில் ஒவ்வொரு
வருடமும் இரண்டு மூன்று மாணவர்கள் வந்து தங்குவார்கள். மொட்டை மாடியில் அங்குமிங்குமாக
நடந்து கொண்டே படிப்பார்கள். ஆனால் நான் ஒருபோதும் அவர்களை கவனிப்பதில்லை. ஒருவேலை
கவனிக்கும் அளவிற்கு என்னுடைய வயது இல்லாமலிருந்திருக்கலாம். இம்முறைப் பார்த்தேன்.
அங்கே இரண்டு பையன்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் இருவர்தான். ஆனால் மாலையானதும்
அவர்களுடைய நண்பர்களின் நல்ல ஒரு கூட்டம் ஒன்று கூடிவிடும். அப்பொழுது மொட்டைமாடி மட்டுமல்ல, அந்த வட்டாரமே கலகலப்பாகிவிடும்.
சிரிப்பும் கேளியும் பாட்டும் வாத்தியமும் அக்கம்பக்கத்திலுள்ள பெண்கள் யாரேனும் கண்ணில்
பட்டால் அவர்களை கிண்டல் செய்வார்கள். ஆனால் உண்மையில் அவர்களின் இலக்கு எங்களுடைய
வீடுதான். இன்னும் தெளிவாகச் சொன்னால் நான்தான். நான் தாழ்வரத்தில் நின்று கொண்டு எது
செய்தாலும் அங்கிருந்து நக்கலான பேச்சு ஒவ்வொன்றாக காற்றில் மிதந்து வந்து காதில் விழுந்ததும்
நான் உள்ளுக்குள்ளேயே நடுநடுங்கிப் போவேன். முதல் முறையாக நானொருவள் இருக்கிறேன் என்பது
மட்டுமள்ள மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும்
விதமாக இருக்கிறேன் என எனக்குத் தோன்றியது. நேர்மையாகச் சொன்னால் என்னை முதல் முறையாக இந்த உணர்வு மெய்சிலிர்க்க
வைத்தது. மேலும் என்னுடைய பார்வையிலேயே நான்
புதியவள் மற்றும் பெரியவளாகிவிட்டேன்.
விசித்திரமான நிலை அது. அவர்கள் கிண்டல் செய்யும்
பொழுது கஷ்டமாகவே இருந்தது. அந்தக் கிண்டலில்
அநாகரிகமான பேச்சு கொஞ்சமும் இருக்காது. எனினும் எனக்கு கோபம் வரும். எப்படியோ மனதை
வருடும்படியான சிறிய புன்னகை அவ்வளவுதான். ஆனால் அவர்கள் அங்கு இல்லாத போது ஒருவருக்கொருவர்
தங்களுக்குள்ளாக பேசிக்கொண்டிருக்கும் போதிலும் நான் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பேன்.
ஏதாவது சொல்வார்களா என்று உள்ளுக்குள்ளாகவே குழம்பிய நிலையிலிருப்பேன். இந்த இக்கட்டான
நிலையில் வேறு கவனமின்றி இங்கேயே கவனித்துக் கொண்டிருப்பேன். நான் அறையை விட்டு வெளியே
உள்ள தாழ்வாரத்திலேயே அங்குமிங்குமாக அலைவேன்.
ஆனால்
இந்தப்பையன்களின் சத்தம் அந்த வட்டார மக்களின் அமைதியை அதிகமாகவே குலைத்துவிட்டது.
அதாவது எங்களுடைய வட்டாரத்தின் பெயர் ஹாத்ரஸ். இங்கே குர்ஜாவிலிருந்து[1] வந்த
வியாபாரிகள் அதிகமாக உள்ளனர். அவர்களுடைய வீட்டில் குமரிப் பெண்களும் இருந்தனர். அவர்கள் புருவத்தை உயர்த்திக் கொண்டு பல்லை உடைத்து
விடுவேன் என மிரட்டுவார்கள். ஏனெனில் அவர்களுக்கு தங்கள் பெண்களின் எதிர்காலம் ஏதோ
ஆபத்தில் இருப்பதாகத் தோன்றியது. எங்கள் வட்டாரத்தில்
இவ்வளவு பதட்டமிருந்தாலும் என்னுடைய அம்மா அப்பாவிற்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது.
உண்மை இதுதான். இவர்கள்
தங்களின் இருப்பை ஒரு தீவு பொல செய்திருந்தனர். எல்லோருக்கும் நடுவே இருந்தாலும் எல்லோரிடமிருந்தும்
விலகியே இருந்தனர்.
ஒரு நாள்
நான் அம்மாவிடம் சொன்னேன், அம்மா ! எதிர் வீட்டில் பையன்கள் குடிவந்திருக்கிறார்களே!
அவர்கள் பார்க்கும் போதெல்லாம் என்னை கிண்டல் செய்கின்றனர். நான் பேசாமல் இருக்கப்
போவதில்லை, நானும் இங்கிருந்தே பதலளிக்கப் போகிறேன்.
எந்தப் பையன்கள்? அம்மா
வியப்புடன் வினவினாள்.
அம்மாவிற்கு ஒன்றுமே தெரியாது. அற்புதம்! நான் கொஞ்சம்
எரிச்சலும் கொஞ்சம் மகிழ்ச்சியும் கலந்த குரலில் நடந்த அனைத்து விஷயங்களையும் எடுத்துக்
கூறினேன். ஆனால் அம்மாவிடம் சிறப்பான எந்த எதிர்விளைவுகளும் தோன்றவில்லை.
யாரு இந்தப்
பையங்கள்? சொல்லேன்! என மிகவும் சாதாரணமாகக்
கேட்டு விட்டு மீண்டும் படிக்கத் தொடங்கினாள். நான் சீண்டப்பட்டது எந்த அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்தியதோ அதில் அம்மாவின்
இந்த உதாசினம். எனக்கு பிடிக்கவில்லை. இதே இன்னொரு அம்மாவாக இருந்திருந்தாள்.
அவர்களின் ஏழேலு தலைமுறைகலையும் கரையேற்றியிருப்பாள். ஆனால் அம்மாவிடம் அப்படி எந்தவொரு பாதிப்பும்
ஏற்படவில்லை.
நண்பகல்
கடந்ததும், பையன்கள் கூட்டம் மொட்டைமாடியில் கூடியதும் நான் அம்மாவிடம் சொன்னேன். பாருமா
! இவர்கள்தான் அந்தப் பையன்கள். எப்பொழுதும் இங்கேயே பார்த்துக் கொண்டு நான் எது செய்தாலும்
அதைக் கிண்டல் செய்கிறார்கள். நான் சொன்னதில் அப்படி என்ன இருந்ததோ தெரியவில்லை அம்மாவிற்கு, அவள் கண்ணிமைக்காமல் என்னையே
பார்த்துக் கொண்டிந்தவள் பிறகு மெதுவாக சிரித்தாள். சிறிது நேரம் வரை மொட்டைமாடியிலிருந்த
பையன்களை பார்வையிட்டப் பிறகு, சொன்னாள். கல்லூரி மாணவர்கள் போல் தெரிகிறது. ஆனால்
இவர்கள் குழந்தைகள்தான்.
என்னைப்
பையன்கள் அல்லாது கிழவர்களா வந்து சீண்டுவார்கள் என கேட்கத் தோன்றியது. அதற்குள் அம்மா
சொன்னாள். நாளை மாலை இவர்களை தேநீர் விருந்திற்கு அழைப்போம். அப்படியே உனக்கு நண்பர்களாக்கி
விடுகிறேன்.
நான் வாயடைத்து நின்றேன்.!
நீ இவர்களை
தேநீருக்கு அழைக்கப் போகிறாயா? அம்மா இவ்வாறு சொன்ன பிறகும் எனக்கு நம்பிக்கை வராதது
போல் இருந்தது.
ஆமாம்!
ஏன்? என்ன ஆயிற்று? அரே, இதுவே எங்களுடைய காலமாக இருந்திருந்தால் சந்திக்கவே முடியாது.
தூரத்திலிருந்து கொண்டே கிண்டலும் கேலியும் செய்து கொண்டிருக்க வேண்டியதுதான். இப்பெல்லாம்
காலம் மாறிவிட்டது.
அம்மாவின்
இந்த நினைப்பிலே, நான் அப்படியே பூரித்துப் போனேன். அம்மா உண்மையாகவே உயர்ந்தவள்தான்
என்று தோன்றியது. இவர்கள் எங்கள் வீட்டிற்கு
வருவார்கள். எனக்கு நண்பர்களாகி விடுவார்கள்.
திடீரென்று எனக்கும் தோன்றியது. நான் தனியாளாக
இருக்கிறேன். எனக்கும் ஒருவரது நட்பு அவசியம் தேவைதான். இந்த வட்டாரத்தில் எனக்கு யாரும் அப்படியொன்றும்
சிறப்பான நண்பர்கள் யாருமில்லை. ஆயினும் வீட்டில்
பெற்றோர்களின் நண்பர்கள் மட்டும்தான் வருவார்கள்.
மறுநாள்
என் மனம் சந்தேகத்திலேயேக் கழிந்தது. அம்மா, தன் வார்த்தையை நிறைவேற்றுவாளா? அல்லது
வெறுமனே ஒரு வேகத்தில் சொல்லி முடிந்ததா? தெரியவில்லையே. மாலையில் நான் ஞாபகப்படுத்துவதற்காகக்
கேட்டேன். அம்மா ! நீ உண்மையாகவே இந்தப் பையன்களை அழைக்கப் போவாயா ? சொற்கள் என்னவோ!
என்னுடையதுதான். அதன் உள்ளர்த்தம், அம்மா! தயவு செய்து போயேன் என்பதாகத்தான் இருந்தது.
அம்மா
உண்மையிலேயே சென்றாள். அம்மா இரண்டு அல்லது நான்கு முறைக்கு மேல் வட்டாரத்தில் உள்ள
யாருடைய வீட்டிற்கேனும் சென்றிருப்பாளா என்பது எனக்கு ஞாபகமில்லை. நான் மூச்சை நிறுத்திக்
கொண்டு அவர்கள் திரும்பி வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு விசித்திரமான
நடுக்கத்தைனை என்னுடைய ஒவ்வொரு அங்கத்தைலும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஒருவேளை அம்மா கூடவே அவர்களை அழைத்து வந்துவிட்டால்? ஒருவேளை அவர்கள்
அம்மாவிடம் அவமரியாதையாக நடந்து கொண்டு விட்டால்? இல்லை இல்லை, அவர்கள் அப்படிப்பட்டவர்களாகத்
தோன்றவில்லை. ஒரு மணி நேரத்திற்க்குப் பிறகு அம்மா திரும்பி வந்தாள். மகிழ்ச்சியுடன்
இருந்தாள்.
என்னைப்
பார்த்ததும் அவர்கள் கதி கலங்கி ஓடி ஒழிந்து விட்டனர். எல்லோரும் அவர்களை இது வரை தாங்கள்
தங்களின் வீட்டிலிருந்து கொண்டே காலையும் பல்லையும் உடைத்து விடுவதாக மிரட்டிக் கொண்டிருந்தனர்.
நான் நீராக வீட்டின் முன்பாக சென்றதும் எங்கே அவர்களின் விலா எலும்புகளை உடைக்க வந்துவிட்டேனோ
என்று நினைத்துவிட்டனர். ஆனால் பாவம் அந்தப் பையன்கள் எவ்வளவு மரியாதையுடன் உபசரித்தார்கள் தெரியுமா?
மிகவும் நல்லக் குழந்தைகள் (பையன்கள்). வெளியூரிலிருந்து வந்திருக்கிறார்கள். விடுதியில்
தங்குவதற்கு இடம் கிடைக்கவில்லை. அதனால்தான் அறை எடுத்து தங்கியிருக்கிறார்கள். சாயந்தரம்
அப்பா வந்த பிறகு அவர்களை அழைத்து வரலாம்.
எதிர்பார்த்துக்
காத்திருப்பதில் நேரம் எவ்வளவு சுமையாக கடக்கின்றது. இதுவும் என்னுடைய முதல் அனுபவமாகத்தான்
இருந்தது. அப்பா வந்தவுடன் அம்மா மிகுந்த மகிழ்ச்சியுடன் எல்லா விஷயங்களையும் சொன்னாள். எல்லோரையும் விட
சற்றே வேறு பட்டு செய்கிறோம் என்கிற மகிழ்ச்சியும் கர்வமும் அவளின் ஒவ்வொரு வார்த்தையிலிருந்தும்
பிரதிபலித்தது. அப்பா மட்டும் யாராம். இதில் பின்வாங்கக் கூடியவரா?. இதையேல்லாம் கேட்டதும்
அவரும் மகிழ்ச்சியடைந்தார்.
கூப்பிடு
அந்தப் பையன்களை! விளையாடிக்கிட்டும் சாப்பிட்டுக்கிட்டும் குழந்தைகள் சந்தோசமாக இருக்கட்டும்.
அம்மாவிற்கும் அப்பாவிற்கும் தங்களின் நவீனத்துவத்தை நிறைவேற்ற ஒரு நல்ல சந்தர்ப்பம்
கிடைத்தது.
வேலைக்காரனை அனுப்பி அவர்களை
அழைத்ததும் அடுத்த நிமிடமே எல்லோரும் வந்துவிட்டனர். அம்மா
முறைப்படி அறிமுகப்படுத்தினாள். அதன்பின் ஹலோ… ஹாய்(வணக்கம்) என பரிமாற்றங்கள் நடைபெற்றன.
மகளே ! தனு உன் நண்பர்களுக்கு
தேநீர் போட்டு வாம்மா !
அட, ச்சே! அம்மாவோட நண்பர்கள்
வந்தாலும் தனுதான் தேநீர் போடனும். தனுவின் நண்பர்கள் வந்தாலும் அவள்தான் தேநீர் போடனும்,
இருப்பினும் எழுந்திரிக்க மனமின்றி எழுந்தேன்.
தேநீர் விருந்து சிறப்பாகவே
நடைபெற்றது. சிரிப்பும் கிண்டலுமாக நன்றாகவே நடைபெற்றது. இந்த வட்டாரத்தில் உள்ளவர்கள்
அவர்களை தவறு செய்ததாக வற்புருத்துகின்றனர். (ஜஸ்ட் ஃபார் ஃபன்) வேடிக்கைக்காக மட்டும்தான்
கிண்டல் செய்தோமே தவிர அதைத் தவிர வேறு எந்தவொரு உள்நோக்கமும் கிடையாது. என தங்கள்
சார்பாக உள்ள உண்மையைக் கூற முன்வந்தனர்.
அப்பா அவர்களை உற்சாகப்படுத்தினார்.
அரே! இந்த வயசுலதான் இதெல்லாம் செய்யனும். எனக்கு இப்படியொரு சந்தர்ப்பம் இப்பொழுது
கிடைத்தாலும் விடமாட்டேன்.
சிரிப்பலைகள் அறையின் இந்தப்பக்கத்திலிருந்து
அந்தப் பக்கம் வரை பரவிச் சென்றது. இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அவர்கள் விடைபெற்றுப்
போகும்பொழுது அம்மாவிடம் சொன்னாள். இங்கப் பாருங்க! இது உங்களுடைய வீடு புரிஞ்சதா!
உங்களுக்கு எப்பொழுதெல்லாம் வரணுமுனு தோனுதோ, அப்பொழுதெல்லாம் வரலாம். எங்களுடைய மகள்
தனுவிற்கும் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். உங்களிடம் சேர்ந்து பழகுவதோடு அது தொடர்பாக
ஏதாவது கேட்டுத் தெரிந்து கொள்வாள். ஏதாவது சாப்பிட வேண்டுமென்று நினைத்தால் சொல்லுங்கள். உங்களுக்காக செய்து தருகிறேன். அப்பா வெளிப்படையாகவும் அம்மா
உறவினர் போலவும் பழகுவதைக் கண்டு மகிழ்ச்சியுடன் சென்றனர்.
போதும் யாருடன் நண்பர்களாக்குவதற்காக அவர்கள் அழைக்கப்பட்டார்களோ!
பாவம் அவள் பரிதாபத்திற்குரியவளாக இந்த நகைச்சுவைகளின் பார்வையாளராக மட்டுமே இருந்தாள். அவ்வளவுதான்.
அவர்கள் சென்றபின் வெகு
நேரம் வரை அவர்களைப் பற்றி மட்டும்தான் பேச்சு நடந்துகொண்டிருந்தது. தங்களுடைய வீட்டிலுள்ள
இளம்பெண்ணை கிண்டல் செய்கின்ற பையன்களை வீட்டிற்கு அழைத்து
தேநீர் குடிக்கச் சொல்வதும் பெண்ணிற்கு நண்பர்களாக்குவதும் இது எல்லாமே பரவசமாகவும்,
கற்பனையோ என எண்ணுவதாகவும் இருந்தது. மறு நாளிலிருந்து வீட்டிற்கு வருபவர்களிடமெல்லாம்
அம்மா இதைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தாள். வர்ணிப்பதில் அம்மா சாமர்த்தியசாலிதான்.
சுவையே இல்லாத விஷயத்தையும் சுவையானதாக ஆர்வமூட்டும் விஷயமாக ஆக்கிவிடுவாள். இந்த செய்திகள்
அனைத்தையும் மிகவும் ஆர்வமூட்டுவனவாக ஆக்கிவிட்டாள். கேட்பவர்களெல்லாம் உங்களுடைய கருத்து
மிகவும் முற்போக்காக உள்ளதாகக் கூறி மகிழ்ச்சியடைவர். இவ்வாறு வர்ணிப்பவர்களெல்லாம்
பெரியதாக செய்வதாகப் பேசுவார்கள். ஆனால் தங்களின் குழந்தைகளை அடக்கித்தான் வைத்திருப்பார்கள்.
சிறிது சந்தேகம் தோன்றினாலும் உளவு பார்க்கத் தொடங்கி விடுவார்கள். அம்மா இந்த பாராட்டுதல்களை
எல்லாம் கேட்டு மகிழ்ச்சியடைவாள். அப்புறமென்ன? சுதந்திரமாக வாழ் மற்றும் குழந்தைகளை
சுதந்திரமாக வாழ விடு. நாங்கள் சிறுவர்களாக இருக்கையில் இதைச் செய்யாதே! இங்கே போகாதே!
என்று சொல்லிச் சொல்லி எத்தனைத் தடைகளை விதித்தனர். நம்முடைய குழந்தையாவது இந்த சிரமங்களுக்கெல்லாம்
பலியாகக் கூடாது.
ஆனால் அம்மாவின் குழந்தை
அந்த நேரத்தில் வேறொரு சிரமத்திற்குப் பலியாகிக் கொண்டிருந்தாள். மேலும் அவள் எந்த
நாடகத்திற்கு தலைவியாக அங்கே நடிக்க இருந்தாளோ!
அதற்குத் தலைவியாக அம்மா நடித்துக்கொண்டிருந்தாள்.
நல்லது. இந்த எல்லா நிகழ்ச்சிகளின் முடிவில் அந்தப் பையங்களின் நடத்தை
முறைகள் ஒரேயடியாக மாறிவிட்டன. எந்தப் பெருந்தன்மையினை அம்மா அவர்கள் மீது சுமத்தினாளோ!
அதற்குத் தகுந்தார் போல நடந்து கொள்ள அவர்கள் நிர்பந்திக்கப்பட்டார்கள். இப்பொழுதெல்லாம்
அவர்கள் தங்களின் மொட்டை மாடியிலிருந்து அம்மாவையும் அப்பாவையும் பார்க்கும் பொழுதெல்லாம்
மரியதையுடன் ஒரு வணக்கம் என்னைப் பார்க்கும் பொழுது புன்முறுவலுடன் ஒரு வணக்கம் சொல்லுவார்கள்.
பரிகாசங்களுக்குப் பதிலாக எங்களுடைய உரையாடல்கள் தொடங்கிவிட்டன. மிகவும் சத்தமாகவும்
திறந்த மனதுடனும் உரையாடினோம். எங்களுடைய தாழ்வாரத்திற்கும் அவர்களின் மொட்டை மாடிக்குமான இடைவெளி குறைவுதான். சத்தமாகப் பேசியதால் பேசமுடிந்தது.
ஆம் அந்தப் பேச்சுத் தொடங்கியதும். எங்களுடைய உரையாடல் வட்டாரம் முழுமையும் கேட்கும்
படியாகவே இருந்தது. மிகுந்த ஆர்வத்துடன் அனைவராலும் கேட்கப்பட்டது. இவ்வாறு நாங்கள்
பேச ஆரம்பித்ததும் ஜன்னல்களில் நான்கைந்துத் தலைகள், உடல்களும் வந்து ஒட்டிக்கொள்ளும்.
வட்டாரத்தில் பெண்களின் காதல் விவகாரங்கள் இல்லாமலில்லை. பெண்கள் காதலர்களுடன் ஓடிச்
சென்று திருமணம் செய்து கொண்டது வரை நடந்துள்ளது. ஆனால் இவையனைத்தும் பிறர் அறியாமல்
நடந்துள்ளது. மேலும் வட்டாரத்திலுள்ளவர்கள் கூர்மையான பார்வையால் இதுபோன்ற இரகசியங்களையும்
அறிந்து கொண்டு விட்ட பிறகு அவர்களுக்கு சந்தோஷம் தாங்காது. ஆண்கள் மீசையை முறுக்கிக்
கொண்டும் பெண்கள் கையை ஆட்டிக் கொண்டும் நிறைய உப்பும் காரமும் கொண்ட இது போன்ற பிரச்சனைகளை
அங்கிருந்து இங்கு வரை பிரசாரம் செய்வார்கள். கொஞ்சம் பாவனை கலந்து, நாங்களெல்லாம் இந்த உலகத்தையே பார்த்தவர்கள்… எங்களுடைய கண்ணில்
யாரும் மண்ணை அள்ளிப் போட முடியாது.
ஆனால் இங்கு நிலமை முற்றிலும்
வேறாயிருந்த்து. எங்களுடைய உரையாடல்கள் அனைவரும் கேட்கும்படியாகவே இருந்தது. அனைவரும்
மறைந்து கொண்டுதான் நாங்கள் பேசுவதைக் கேட்க வேண்டியிருந்தது. அவ்வாறு கவனித்தும் கூட மகிழ்ச்சி அடையும்படியாக அப்படி ஒன்றுமே இல்லாமல்
போய்விட்டது. இந்த சாதாரணப் பேச்சானது வளரத்
தொடங்கியது. பிறகு மாடியில் நடந்தக் கூட்டம் மெல்ல மெல்ல என்னுடைய அறையில் கூடியது.
தினமும் சில நேரங்களில் இருவர் அல்லது சில நேரங்களில் நாங்கு பேர் கூட வந்துவிடுவார்கள். பிறகென்ன உலகத்தைப்
பற்றிய பேச்சும் சிரிப்பும் கேலியுமாகவும், பாட்டும் பஜனையுடன் கூடிய தேநீரும் விருந்தும்
நடைபெறும். மாலையில் அம்மா அப்பாவின் நண்பர்கள் வந்தாலும் இவர்களில் யாராவது ஒரு சிலர்
அமர்ந்து கொண்டிருப்பர். ஆரம்பத்தில் பெரிதாக சுதந்திரமாய் இரு, சுதந்திரமாய் இருக்க
விடு என புகழ்ந்தவர்கள். சுதந்திரமாய் இருப்பதைக் கண்டதும் அவர்களுக்கு விசித்திரமான
சந்தேகங்கள் தோன்றின. அம்மாவின் ஓரிரு நண்பர்கள் மெதுவாக சொன்னார்கள். தனுவோ மிகவும்
வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறாள். அதனால் அம்மாவின் ஒட்டுமொத்தமான உற்சாகமும் மந்தமாகிவிட்டது.
மேலும் எழுதுவதிலிருந்து விலகி ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் முற்றிலும் நீங்கிவிட்டது. அவர்களுக்கு
அப்பட்டமாக புலப்பட்ட உண்மை என்னவென்றால் அவள் சிறுவயதுப் பெண், அனுபவமில்லாதப் பெண்,
அவள் மூன்று நான்கு பையன்களுடன் சூழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பதுதான் உண்மை. அம்மாவால் உற்சாகமாக் ஆரம்பித்து வைத்த இவர்களின்
நட்பினை தற்பொழுது மறுக்க முடியவில்லை, விழுங்கவும் துப்பவும் முடியவில்லை.
இறுதியாக ஒரு நாள் என்னை
அவளின் அருகில் அழைத்து உட்கார வைத்து, தனு, என் மகளே! இந்தப் பையன்கள் தினந்தோறும்
இங்கு வந்து விடுகிறார்களே, இப்பயாவது நீ எழுதப்
படிக்க வேண்டாமா? நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். இவர்களின் நட்பினால் உன்னுடைய படிப்பு வீணாகிக்
கொண்டிருக்கிறது. இது மாதிரியெல்லாம் இனிமேல் நடந்து கொள்ளக் கூடாது. என்றாள்.
இரவுதான் படிக்கிறேனே என
அலட்ச்சியமாகச் சொன்னேன்.
மண்ணாங்கட்டி படிப்பு படிக்குற.
இரவு எவ்வளவு நேரம் கிடைக்குது உனக்கு? அப்புறம் தினமும் இங்கே கூட்டம் கூடுவது எனக்கு
சுத்தமா பிடிக்கவில்லை. சரி, நான்கு ஐந்து நாட்களுக்கு ஒரு முறை வந்தாலும் பரவாயில்லை.
ஆனால் இங்க என்னடானா ஒருவன் இல்லாவிட்டால்
இன்னொருவன் வந்து உட்கார்ந்து கொள்கிறான்.
அம்மாவின் குரலில் கோபம் அதிகரித்துக் கொண்டே சென்றது.
அம்மாவின் அந்தத் தொனி எனக்குப்
பிடிக்கவில்லை. இருப்பினும் நான் அமைதியாகவே இருந்தேன்.
நீதான் அவர்களிடம் மிகவும்
நன்றாகப் பழகுகிறாய். அவர்களிடம் உட்கார்ந்து படியுங்கள். என்னையும் படிக்க விடுங்கள்
என்று நீ போய் சொல்ல முடியாவிட்டால் அவர்களிடம் நான் சொல்லுகிறேன்.
ஆனால் யாருக்கும் சொல்ல
வேண்டிய அவசியம் வரவில்லை. கொஞ்சம் படிப்பின் சுமையினாலும் கொஞ்சம் டில்லியில் மற்ற
விஷயங்களிலும் கவரப்பட்ட விடுதி மாணவர்கள் வருவது குறைந்து விட்டது. ஆனால் எதிர் மாடியியுள்ள
அறையிலிருக்கும் சேகர் தினமும் வந்து விடுவான்.
சில சமயம் பகலிலும் சில சமயம் மாலையிலும் மூன்று அல்லது நான்கு பேருடன் பேசுகையில்
கூட கவனிக்காததை அந்தத் தனிமையில் பேசுகின்ற பொழுது எல்லாவற்றையும் விட அதிகமாகவே பளிச்சென்று
தெரியவந்தது. அவன் குறைவாகத்தான் பேசுவான். ஆனால் சொற்களுக்கு அப்பாற்பட்டு வேறு ஏதோ
ஒன்றினை சொல்ல முயல்வான். திடீரென நான் அவன் சொல்ல வருகிற மொழியை புரிந்து கொண்டேன்.
புரிந்து கொண்டது மட்டுமல்ல, அதற்குப் பதிலும் கொடுக்கத் தொடங்கினேன். விரைவிலேயே சேகருக்கும்
எனக்குமிடையே காதல் போன்ற ஒன்று வளரத் தொடங்கியது என்பது எனக்குப் புரிய வந்தது. ஒரு
வேளை இவையெல்லாம் புரியாமலிருந்திருக்கும். இந்திப் படங்களைப் பார்த்தப் பிறகு இவைகளைப்
புரிந்து கொள்வதில் சிரமம் ஒன்றும் ஏற்படவில்லை.
மனதில் ஒன்றுமில்லாத வரை
எல்லாம் வெளிப்படையாகத்தான் இருந்தன. ஆனால்
ஏதோவொன்று அதிலிருந்து தோன்ற ஆரம்பத்ததும் மற்றவர்கள் பார்த்து விடக்கூடாது என்ற எண்ணமும்
தோன்றியது. மற்ற பையன்கள் வருகின்ற பொழுதெல்லாம் படிக்கட்டிலிருந்தே பேசிக்கொண்டே வருவார்கள்.
உரக்க உரக்கப் பேசுவார்கள். ஆனால் சேகர் வரும்பொழுதெல்லாம் அமைதியாகவே வருவான். நாங்கள்
இருவரும் குசுகுசுவென்று பேசிக்கொள்வோம்.
ஆனால் விஷயம் என்னவோ சாதாரணமானதுதான். பள்ளிக்கூடங்களைப் பற்றியும் கல்லூரிகளைப் பற்றியும்தான்.
ஆனால் குசுகுசுப்பது அவர்களுக்கு சற்று விசேஷமாகவே தோன்றியது. காதலை சற்று மர்மமானதாக
சற்று அமைதியானதாக செய்துவிட்டால் அது கிளுகிளுப்பாகிவிடும். அவ்வாறு இல்லையெனில் அது
வெறும் காரசாரமற்றதாக ஆகிவிடும். ஆனால் அம்மாவிடம் வீட்டையும் வீட்டில் உள்ளவர்களையும்
பற்றிய இரகசியங்களைத் தெரிந்து கொள்வதற்கு ஆறாவது புலனறிவு உண்டு. அதனால் அப்பா சற்று வேலையாக இருந்தாலும் இதைபற்றியெல்லாம்
புரிந்து கொள்வதற்கு எனக்கு வெகுநேரம் ஆகிவிடவில்லை. சேகர் எவ்வளவுதான் மறைந்து மறைந்து
வந்தாலும், அம்மா வீட்டில் எங்கிருந்தாலும் அங்கே வந்து விடுவாள். இல்லையெனில் அங்கிருந்தே
கேட்பாள். தனு! உன்னுடைய அறையில் யாரு இருக்கிறார்கள்? என்று கேட்பாள்.
என்னைப் பார்ப்பதற்கு வருகின்ற
சேகரின் இந்த நடவடிக்கைகளால் அம்மாவின் முகத்தில் ஒரு விசித்திரமான குழப்பம் தோன்ற
ஆரம்பித்து விட்ட்து. அம்மா இந்த விஷயத்திற்கெல்லாம் குழப்பம் அடைவாள் என என்னால் நினைத்துக்
கூடப் பார்க்க முடியவில்லை. இப்பொழுதெல்லாம் வீட்டில் இரவும் பகலும் பலவகையான காதல்
விவகாரங்கள் பற்றிதான் பெரும்பாலும் பேசப்படுகிறது. திருமணமாகாதவர்களின் காதல் விவகாரங்கள்,
திருமணமானவர்களின் காதல் விவகாரங்கள் இரண்டு மூன்று காதலர்களுடன் ஒரே சமயத்தில் காதல்
வைத்திருப்பவர்களின் காதல் விவகாரங்கள் என பேசுபவர்களுக்கு இந்த விஷயமெல்லாம் மிகவும்
சாதாரணமாகத்தான் இருந்திருக்க வேண்டும். பையன்களுடன் பழகுகிற பொழுது ஒரு சில காதல்
நிகழ்வுகள் நடைபெறக்கூடும். ஒரு வேளை அம்மா இவையெல்லாம் தற்காலத்திய கலைத்துவமான திரைப்படங்களில்
மட்டும் நடைபெறுவதாகப் புரிந்து வைத்திருக்கலாம். அவள் இவைகளையெல்லாம் போற்றிப் புகழக்கூடியவள்.
ஆனால் இந்தப் படங்களில் தொடக்கத்திலிருந்து இறுதி வரை கொஞ்சம் கூட பரவசமூட்டும் சம்பவங்கள்
எதுவும் இருக்காது.
எதுவாயிருந்தாலும் அம்மாவின்
இந்த குழப்பமான நிலை எனக்கும் மனதில் தடுமாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. அம்மா எனக்கு
வெறும் அம்மா மட்டுமல்ல உற்ற தோழியும் தோழனுமாக இருப்பவள். இரண்டு நெருக்கமான நண்பர்கள்
போல நாங்கள் உலக விஷயங்கள் அனைத்தையும் பற்றிப்
பேசிக்கொள்வோம். சிரித்துக் கொண்டும் கேலி செய்து கொண்டும் இருப்போம். அவள் இதைப் பற்றிப்
பேச வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இதைப்பற்றி ஒன்றும் பேசவில்லை. ஆம், சேகர் வரும்பொழுது மட்டும் அவள் தன்னுடைய அலட்சியமற்ற
சுபாவத்தை விட்டுவிட்டு இயல்பான சுபாவத்துடன் எனது அறையினைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டே
இருப்பாள்.
ஒரு நாள் அம்மாவுடன் வெளியே
போவதற்காக நான் கீழே இறங்கி வருகையில் கதவருகே பக்கத்து வீட்டு ஒரு பெண்மனி எதிர்பட்டாள். வணக்கம் கூறி, நலம் விசாரித்த பிறகு, அவள் சொல்ல வேண்டிய விஷயத்திற்கு வந்தாள்.
“எதிரேயுள்ள மாடியிலிருக்கும்
பையன் உங்களுக்கு உறவினனா என்ன?”
”இல்லையே” !
அப்படியா? மலையானதும் தினமும்
உங்கள் வீட்டில் வந்து உட்கார்ந்திருக்கிறான். அதனால்தான் உங்களுடைய நெருங்கிய உறவுக்காரன்
என்று நினைத்தேன்.
தனுவின் நண்பன், அம்மாவிடம்
கொஞ்சம் கூட குழப்பமோ கூச்சமோ இன்றி அந்த வாக்கியம் வெளிப்பட்டதும் பரிதாபத்துடன் தான்
எய்த அம்பு குறிதவறிவிட்டதை எண்ணி வருத்தத்துடன் திரும்பி விட்டாள்.
அவள் திரும்பி சென்று விட்டாள்.
அம்மா கண்டிப்பாக இந்த விஷயத்தின் வாலைப் பிடித்துக் கொண்டு என்னை ஒருவழி ஆக்கிவிடுவாள் என்று நினைத்தேன். சொன்னவளுக்கு ஒன்றுமே கிடைக்க வில்லை. ஆனால் என்மீது குற்றம்
சுமத்த அம்மாவின் கையில் ஒரு ஆயுதம் கிடைத்து விட்டது. பல நாட்களாகவே ஏதோ ஒன்று அவளின்
மனதில் பொங்கிக்கொண்டிருந்தது. ஆனாலும் இதனைச் சொன்னாள்.
இவளுக்கு தன்னுடைய வீட்டில் ஒரு வேலையும் இல்லை போலிருக்கிறது.
பார்க்கும் போதெல்லாம் அடுத்த வீட்டிலேயே மூக்கை நுழைத்துக் கொண்டிருக்கிறாள்.
நான் நிம்மதியடைந்தது மட்டுமல்ல.
மாறாக அம்மா இதற்கு பச்சைக் கொடி காட்டிவிட்டாள் என நான் என்னுடைய வேகத்தை இன்னும்
கொஞ்சம் அதிகரித்துக் கொண்டேன். ஆனால் இவ்வளவுக்குமான அவசியம் என்ன? சேகருடன் கழிக்கின்ற
மூன்று மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்தை படிப்பதற்காக மட்டும் ஒதுக்கிக் கொண்டேன்.
அவன் மிகுந்த அக்கறையுடன் சொல்லிக்கொடுத்தான். நானும் அதிக அக்கறையுடன் படித்தேன்.
இடையிடையே அவன் துண்டுக் காகிதங்களில் சிறு சிறு வாக்கியங்கள் எழுத்திக் கொடுப்பான். எனக்கு உள்ளுக்குள்ளே ஒரு
விதமான சொல்லத் தெரியாத உணர்வு மேலிடும். அவன் போன பிறகும் அவனது வரிகள். அந்த சொற்களின்
பொருள்களில் தோன்றும் பாவம் உடல் முழுவதும் பரவசத்தை ஏற்படுத்தவும், நான் அதிலேயே மூழ்கி
விடுவேன்.
எனக்குள்ளே நிறைவான வண்ணமயமான
ஒரு உலகம் உருவாகிக் கொண்டிருந்தது. இப்பொழுதெல்லாம் நான் யாருடைய தேவையையும் உணரவில்லை.
நான் எனக்குள்ளேயே நிறைந்திருந்தேன். எப்பொழுதும் என் கூடவே இருக்கும் அம்மா கூட விலகிச்
சென்று கொண்டிருந்தாள். மேலும் நான் அம்மாவைக் கவனிப்பதை விட்டு விட்டிருந்தேன். ஒருவேளை
இது கூட காரணமாக இருக்கலாம். வழக்கம் போல பேசிக்கொண்டிருந்தோம். ஆனால் அது வெரும் பேச்சாக
மட்டுமே இருந்தது. அதற்கு மேல் ஒன்றுமில்லை.
நாட்கள் சென்று கொண்டேயிருந்தன.
மேலும் நான் எனக்குள்ளேயே மூழ்கிப் போயிருந்தேன். என்னுடைய உலகத்தில் இன்னும் ஆழத்தில்
மூழ்கிக் கொண்டே போனேன். வெளி உலகம் பற்றி ஒரு விதத்தில் ஒன்றும் அறியாதது போலவே இருந்தேன்.
ஒரு நாள் பள்ளியிலிருந்து
திரும்பி வந்தேன். உடை மாற்றிக் கொண்டேன். சத்தமும் கூச்சலுமாக சாப்பாடு கொண்டுவரச்
சொல்லி தயக்கத்துடன் சாப்பிட்டுவிட்டு என் அறைக்குள் நுழைந்த பொழுது அம்மா எழுந்திருக்காமலே
அழைத்தாள். “தனு இங்கே வா” !
உள்ளே வந்ததும் அம்மாவின்
முகம் கோபத்தால் சிவந்து இருந்தது. அதைக் கண்டதும் எனது நெற்றி நரம்பு புடைக்க ஆரம்பித்தது.
அவளின் பக்கத்திலுள்ள மேஜையிலிருந்து ஒரு புத்தகத்தினை எடுத்தாள். அதிலிருந்து ஐந்தாறு
காகிதத் துண்டுகளை எடுத்து எனக்கு முன்பாக வைத்தாள். ஐயோ! அம்மாவிடம் ஏதோ கேட்க வேண்டியிருந்ததால்
போகின்ற பொழுது அவளிடம் என்னுடைய புத்தகத்தினைக் கொடுத்துவிட்டிருந்தேன். தவறுதலாக
சேகர் எழுதிய காகிதத் துண்டுகளை அதிலே வைத்து விட்டிருந்தேன்.
“ஓகோ! சேகருக்கும் உனக்கும் நட்பு இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறதா? இந்தப்
படிப்புதான் நடந்து கொண்டிருக்கிறதா? இதைப்பன்றதுக்குத்
தான் அவன் இங்கே வருகிறானா?
நான் ஒன்றும் பேசவில்லை.
அமைதியாயிருந்தேன். கோபத்திலிருக்கும் அம்மாவிற்கு பதிலளிப்பதைவிட முட்டாள்தனம் வேறு
ஒன்றுமில்லை.
“உனக்கு சுதந்திரம் கொடுத்தேன். உன் விருப்பப்படி இருக்க அனுமதித்தேன். ஆனால்
அதனுடைய அர்த்தம், நீ அந்த சுதந்திரத்தை அனுசிதமாகப் பயன்படுத்துவதில் அர்த்தமில்லை.
நான் மறுபடியும் அமைதியாக
இருந்தேன்.
முழுசா மொலச்சு மூனு இலை
விடாத பொன்னு நீ, எங்கிட்டயே கண்கட்டு வித்தைய காட்டுகிறாய். எவ்வளவு சுதந்திரம் கொடுத்தேனோ!
அவ்வளவுக்கும் மேலே போய்க் கொண்டிருக்கிறாய். ஒரு அறை விட்டேன். ஒரு நொடியில் காதல்
கீதலெல்லாம் பொல பொல வென உதிர்ந்து போகும்.
இந்த வாக்கியம் கேட்டு நான் உள்ளுக்குள்ளாகவே எரிச்சலடைந்தேன். ஆவேசத்துடன் எழுந்து அம்மாவின் பக்கம் பார்த்தேன்.
ஆனால் என்ன இது? இவள் என்னுடைய அம்மா இல்லை. இந்தக் கோபமானப் பார்வையும் இந்தப் பேச்சும்
அம்மாவுடையது இல்லை. இருப்பினும் இவ்வாக்கியங்களெல்லாம் மிகவும் பரிச்சையமானதாகவே இருந்தது.
இது எல்லாவற்றையும் நான் எங்கேயோ கேட்டிருக்கிறேன். திடீரென என்னுடைய மனதில் பளிச்சிட்டது. தாத்தா!
ஆனால் தாத்தா இறந்து எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர் எப்படி மீண்டும் உயிர் பெற்றார்.
அதுவும் அம்மாவுக்குள்ளே.! எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து எப்பொழுதும் அவருடன் சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறாள்.
அவர் சொல்லுகின்ற ஒவ்வொன்றிற்கும் எதிர்வினையாற்றியிருக்கிறாள்.
அம்மா தாத்தாவின் பேச்சில்
நீண்ட நேரம் சொற்பொழிவு நடத்தினாள். ஆனால் அவள் சொன்ன எந்த வார்த்தையும் என் உள்ளத்தைத்
தொடவில்லை. போதும் எல்லாவற்றையும் உதறித்தள்ளி விட்டேன். இங்கே அம்மாவிற்குள் தாத்தா
எப்படி வந்து உட்கார்ந்து கொண்டார்?
அதன் பின்பு வீட்டில் ஒரு
வித்தியாசமான இருக்கமான மௌனம் சூழ்ந்து கொண்டது. குறிப்பாக எனக்கும் அம்மாவிற்கும்
இடையே, இல்லை அம்மா வீட்டில் இல்லை. எனக்கும் தாத்தாவிற்குமிடையே, அம்மாவிடம் நான்
சொல்வதைப் புரிய வைக்க முடியும். அவள் சொல்வதைப் புரிந்து கொள்ளவும் முடியும். ஆனால்
தாத்தா? எனக்கு இந்தப் பேச்சு பரிச்சயமற்றதாகவே இருந்தது. மேலும் இந்தக் கோபமான நிலமையுடன்
பேசுவது என்ற கேள்வியே இல்லை. அப்பா நிச்சியமாக
என் நண்பர்தான். ஆனால் முற்றிலும் வேறுமாதிரி. சதுரங்கம் ஆடுவது, சீட்டு விளையாடுவது, என நான் கேட்பதை அம்மா வாங்கித் தராத போது அப்பா மூலமாக
நிறைவேற்றிக் கொள்வேன். குழந்தைப் பருவத்தில் அவருடைய முதுகில் ஏறிக்கொள்வேன். இன்றும்
கூச்சமில்லாது அவரின் முதுகின் மேல் ஏறிக் கொள்வேன். தன்னுடைய எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக்
கொள்வேன். ஆனால் இந்த அளவிற்கு நண்பராக இருந்தாலும் என்னுடைய தனிப்பட்ட விஷயங்களைப்
பற்றிப் பேச நான் அம்மாவிடமே வருவேன். அங்கே ஒரேயடியாக மௌனம். அம்மாவை கேழே தள்ளிவிட்டு
தாத்தா முழுவதுமாக அவளின் மீது குடிகொண்டுள்ளார்.
சேகருக்கு நான் கண் ஜாடையில்
சிவப்புக் கொடி காட்டிவிட்டதால் அவனும் வருவதை நிறுத்தி விட்டான். பிறகு மாலை நேரத்தில்
எனக்குப் பொழுதே போவதில்லை.
அம்மாவிடம் நேருக்கு நேராக
பேச வேண்டும். வெளிப்படையாகவே கேட்க வேண்டும் என்று தோன்றும். நீ ஏன் இவ்வளவு கோபமாக
இருக்கிறாய் என்று? எனக்கும் சேகருக்கும் இடையே உள்ள நட்பைப் பற்றி உனக்கு நன்றாகவேத்
தெரியும். நான் எப்பொழுதும் எதையும் மறைத்தது கிடையாது. இருப்பினும் நண்பர்களாக இருந்தால்
இதெல்லாம் இருக்கத்தானே செய்யும். நீ என்ன புரிந்து கொண்டிருக்கிறாய். நாங்கள் அண்ணனும்
தங்கச்சியுமாக இருக்கிறோம் என்றா? எல்லாவற்றையும் அவளிடம் எடுத்துரைக்க, இவற்றையெல்லாம் மனம் திறந்துப் பேச அம்மா எங்கே
இருக்கிறாள்?
சேகரைப் பார்த்து நான்கு
நாட்கள் ஆகிவிட்டன. நான் கண் ஜாடை காட்டியதிலிருந்து அவன் வீட்டுப்பக்கம் வருவதில்லை.
மொட்டை மாடிப்பக்கம் வருவதையும் நிறுத்தி விட்டான். விடுதியில் உள்ள மாணவர்கள் கூட
மொட்டை மாடிக்கு வருவதை நிறுத்திவிட்டனர். வீட்டிற்கும் வருவதில்லை. யாரேனும் வந்தாலாவது,
அவனைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அவன் முட்டாள் தனமாக உணர்ச்சி வசப்படுகிறவன்
என்று எனக்குத் தெரியும். இங்கு என்ன நடந்ததுனு கூட அவனுக்குத் தெரியாது. அம்மாவிற்கு
கோபம் வந்து விட்டதாக எண்ணி அவர்கள் அனைவரின் உற்சாகமும் குறைந்து விட்டதோ என்னவோ?
இங்கு நேற்றிலிருந்து அம்மாவின்
முகத்தில் இருக்கம் சற்றே குறைந்துள்ளது. கடந்த மூன்று நாட்களாகவே இருந்த இருக்கம்
சற்றே குறைந்துள்ளதாகவே தோன்றுகிறது. நான் முடிவு செய்து விட்டேன். அம்மா பேசினால்தான்
பேசுவது என்று, காலையில் குளியலை முடித்து விட்டு நான் கதவிற்குப் பின்புறமாக நின்று
கொண்டு நான் எனது சீருடையை தேய்த்து வைத்துக் கொண்டிருந்தேன். மேஜையின் மீது அம்மா
தேநீர் வைத்துக் கொண்டிருந்தாள். அப்பா செய்தித்தாளில் மூழ்கியிருந்தார். அம்மாவிற்கு
ஒரு வேளை தெரியாமிலிருந்திருக்கலாம். நான் குளித்துவிட்டு வெளியே வந்தது. அவள் அப்பாவிடம்
சொன்னாள். நேற்று இரவு என்ன நடந்தது தெரியுமா? ஏனோ தெரியவில்லை. அப்பொழுது மனதிற்கு
ஒரே பாரமாக இருந்தது. அதற்குப் பிறகு நான் சரியாகத் தூங்கவே இல்லை.
அம்மாவின் குரலிலிருந்த அந்த இளக்கத்தைக் கேட்டதும் என்னுடைய
கை அப்படியே நின்று விட்டது. காது வெளியே நடப்பதை கூர்ந்து கவனிக்கத் தொடங்கியது.
நடுச்சாமத்தில் நான் கழிவறை
செல்வதற்காக எழுந்தேன். அப்பொழுது எதிர்வீட்டு மாடியில் கும்மென்ற இருட்டு நிலவியது.
திடீரென சிவப்பு நட்சத்திரம் போல ஒன்று உதயமானது. நான் அதிர்ந்து போனேன். உற்றுப்பார்த்ததும்
மெல்ல மெல்ல ஒரு உருவம் தெரிய வந்தது. சேகர் மொட்டை மாடியில் நின்று கொண்டு புகை பிடித்துக்
கொண்டு இருந்தான். நான் சத்தமின்றி திரும்பி வந்து விட்டேன். சுமார் இரண்டு மணி நேரத்திற்குப்
பிறகு சென்று பார்த்தேன். பாவம் அவன் அங்கேயே உலாவிக் கொண்டிருந்தான். என் மனதிற்கு
என்னவோ! ஒரு மாதிரியாகிவிட்டது. தனுவும் அதுபோலவே உற்சாகமற்றவளாக இருக்கிறாள். பிறகு
அம்மா தன்னையே அவமதிப்பது போல பேசினாள். “முதலில் தன் போக்கில் விட்டுவிடுவது பின்னர்
முன்னே போனால் இழுத்துப் பிடிப்பது. இதெல்லாம் சரியில்லை.”
அப்பாடா என்று எனக்குள்ளே
ஒரு நிம்மதி நிலவியது. மனதில் உணர்ச்சி வேகம் ஏற்பட்டது என்னவென்றால், ஓடிப்போய் அம்மாவைக் கட்டிக் கொள்ள வேண்டும் போல
தோன்றியது. வெகு நாட்களுக்குப் பிறகு அம்மா திரும்பி வந்தது போல தோன்றியது. ஆனாலும்
நான் ஒன்றும் பேசவில்லை. போதும் இனிமேலாவது மனம் திறந்து பேசலாம் என்று தோன்றியது.
நான்கு நாட்களாகவே மனதில் எவ்வளவு அழுத்தம் இனிமேல் என்ன! இனி என் அம்மா இருக்கிறாள்.
அவளிடம் கொஞ்சமாவது மனம் விட்டுப் பேசலாம்.
ஆனால் வீடு திரும்பியதும்
கண்ட காட்சி என்னைத் திகைக்க வைத்தது. சேகர் கைகளில் தலையைத் தாங்கிய வண்ணம் நாற்காலியில்
உட்கார்ந்திருந்தான். அம்மாவும் அதே நாற்காலியில் கைப்பிடியில் அமர்ந்து அவனது முதுகையும்
தலையையும் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் என்னைப் பார்த்ததும் தனது இயல்பான குரலில்
சொன்னாள். பார்த்தாயா இந்தப் பைத்தியக்காரனை, நான்கு நார்களாகவே இவன் கல்லூரிக்குப்
போகவில்லையாம். கொஞ்சம் கூட அண்ணம் தண்ணி குடிக்காம கிடக்கிறான். உன்னோடு இவனுக்கும்
சாப்பாடு போட்டு வை என்றாள்.
அம்மாவும் அருகே அமர்ந்து
மிகுந்த பாசத்துடன் அவனை உணவு உண்ணுமாறு செய்தாள். சாப்பிட்ட பிறகு எவ்வளவு சொல்லியும்
சேகர் நிற்கவே இல்லை. அம்மாவின் அன்பின் மிகுதியால் சுமை மிகுந்த பணிவுடன் திரும்பிச் சென்றான். எனக்குள் ஏற்பட்ட
மகிழ்ச்சியானது சுனாமி போல் பொங்கி எழுந்தது. அதுவரை நினைத்துக் கொண்டிருந்த எல்லாம்
அதிலேயே கரைந்து விட்டன.
நிலைமை முற்றிலும் மாறுவதற்கு
சற்று காலம் கடந்து விட்டது. ஆனால் வந்து விட்டது.
சேகரும் இப்பொழுது இரண்டொரு நாளுக்கு ஒரு முறை வர ஆரம்பித்தான். அப்படியே வரும்பொழுது
பெரும்பாலும் எங்களுடைய பேச்சு எழுதுவதையும் பேசுவதைப் பற்றியுமாகத்தான் இருக்கும்.
தன்னுடைய செயலுக்காக வருந்தி வெட்கப்பட்ட அவன் அம்மாவிடம் “நீங்கள் குறைகூறும் படியாக நடந்து கொள்ள மாட்டேன்”. என உறுதி கூறியிருந்தான்.
அவன் வராத நாட்களிலெல்லாம் நான் மூன்று முறை எங்கள் தாழ்வாரத்தில் நின்று பேசிக்கொள்வோம். வீட்டாரின் அனுமதியுடன் அனைவருக்கும் தெரியும்
படியாக நடந்த இந்தக் காதல் விஷயம் பற்றி வட்டாரத்தில்
உள்ளவர்களுக்கு பேசுவதற்கு ஒன்றுமே இல்லாமல்
போய்விட்டது. அவர்கள் இந்தக் காலத்தைப் பற்றி இகழ்வாக இரண்டு நான்கு வார்த்தைகள் பேசிவிட்டு
ஏதாவது நடக்கும் வரை தங்களின் ஆர்வத்தினை ஒத்திப்போட்டு விட்டனர்.
ஆனால் ஒரு விஷயம், நான்
நிச்சயமாகப் பார்த்தேன். சேகர் மாலை நேரங்களில்
சற்று நேரம் அதிக நேரம் அமர்ந்திருந்தாலும் பகலில் வந்தாலும் அம்மாவிற்குள் இருக்கும்
தாத்தா சற்றே. குழப்பமடைந்து விடுவார். அவரின் இந்த எதிர் விளைவு அம்மாவின் முகத்தில்
தெளிவாகவே வெளிப்பட்டது. அம்மா முடிந்த அளவிற்கு தாத்தாவைப் பேசவிடாமல் பார்த்துக்
கொண்டிருந்தாள். அவரை முழுவதுமாக வெளியேற்றுவது என்பது அம்மாவிற்கு சற்று கடினமான விஷயமாகவே
இருந்து வந்தது.
ஆம், எனக்கும் அம்மாவிற்கும்
இடையேயான அந்தப் பேச்சு வார்த்தையானது. தினசரி பேசுகின்ற விஷயமாகிவிட்டது. சில சமயம்
அவள் கிண்டலாக சொல்லுவாள். உன்னுடைய சேகர் இருக்கிறானே! ஒரு திடமில்லாதவன். இந்த வயசுல
பசங்கனா நால்லா ஊறு சுற்ற வேண்டும். அதுதான் நல்லது. இவன் என்னடானா கதையில் வரும் மஜ்னு
போல மொட்டைமாடியவே சுற்றிக் கொண்டு எப்பொழுது
பார்த்தாலும் இங்கேயே பார்த்துக்கிட்டு இருக்கானே.
நான் வெறுமனேன் சிரித்து
விடுவேன்.
சில சமயம் மிகவும் உணர்வுப்பூர்வமாக
பேசுவாள். “நீ ஏன் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறாய் மகளே! உன்னைப்பற்றி எவ்வளவு உயர்ந்த
லட்சியங்கள் என் மனதில் உள்ளன தெரியுமா? உன்னுடைய எதிர்காலத்தைப் பற்றி நான் எத்தனை
எத்தனை கனவுகள் கண்டு கொண்டிருகிறேன்.
நான் சிரித்துக் கொண்டே
சொன்னேன். அம்மா நீயும் திறமையாகத்தான் பேசுகிறாய். என்னுடைய வாழ்க்கையைப் பற்றியும்
நீயே கனவுகளைக் கண்டுவிடு. என்னுடைய வாழ்க்கைப் பற்றிய கனவுகளை கொஞ்சமாவது நானும் காண்பதற்காக
விட்டு வையேன் என்றேன்.
சில சமயம் அவள் எனக்கு அறிவுரை
செய்வது போல நினைத்துச் சொல்லுவதுண்டு பாருமா தனு, இப்ப நீ மிகவும் சிறியவள். உன்னுடைய கவனமெல்லாம் படிப்பதும் எழுதுவதுமாகத்தான் இருக்க
வேண்டும். தேவையில்லாத எண்ணங்களை முற்றிலுமாக உள்ளத்திலிருந்து மாற்றிவிடு. பெரியவளானதும்
காதலிக்கலாம் கலியாணமும் செய்து கொள்ளலாம். நான் உனக்காக மப்பிள்ளை தேடப்போவதில்லை.
உனக்கு நீயே தேடிக்கொள் ஆனால் அதற்குப் போதுமான அறிவு வந்த பிறகு நீயே தேர்ந்தெடுத்துக்
கொள்ளலாம்.
நான் தேர்ந்தெடுத்திருப்பதை
மறுக்கிறாள் என்பதை நான் புரிந்து கொண்டு அவளிடம் சொன்னேன். அப்படியென்றால் அம்மா!
நீ அப்பாவைத் தேர்ந்தெடுத்த பொழுது அது தாத்தாவிற்குப் பிடித்திருந்ததா? சொல்லு என்றேன்.
நான் தேர்ந்தெடுத்தது என்பது
படிப்பு எல்லாவற்றையும் முடித்துவிட்டு என்னுடைய இருப்பத்தைந்து வயதில்தான் தேர்ந்தெடுத்தேன்.
நன்றாகச் சிந்தித்துவிட்டு அறிவுப்பூர்வமாக…
புரிந்ததா? என்றாள்.
அம்மா தன்னுடைய எரிச்சலை
கோபத்தில் மறைத்துக் கொண்டு சொன்னாள். வயது, படிப்பு இவை இரண்டையும்தான் காட்டி அவ்வப்போது
அம்மா என்னை அதட்டிக் கொண்டிருந்தாள். படிப்பு விஷயத்தில் நான் தேர்ச்சி பெற்றவளாகவே
இருந்தேன். என்னுடைய வயதுதான் சிக்கலாக இருந்தது. அது ஒன்றிற்காக மட்டும் தான் அம்மா
என்னை அதட்ட முடியும். அம்மா! உன்னுடைய காலத்தில் இருபத்தைந்து வயதில் செயத வேலையினை
எங்களுடைய தலைமுறையினர் பதினைந்து வயதிலேயே செய்கின்றனர். இது ஏன் உனக்குப் புரியவில்லை.
எனத் தோன்றும் ஆனாலும் அமைதியாகவே இருந்துவிடுவேன். அம்மாவிற்குள் இருகின்ற தாத்தாவை
தூண்டிவிடுமளவிற்கு எனக்கு தைரியமில்லை.
அரையாண்டுத் தேர்வானது மிகவும்
அருகில் வந்து விட்டது. என்னுடைய கவனமெல்லாவற்றையும் படிப்பிலேயே செலுத்தினேன். ஆட்டம்
பாட்டம் என அரட்டையடிப்பதையெல்லாம் ஒரேயடியாக நிறுத்திவிட்டேன். இந்த நாட்களில் நான்
இவ்வளவு ஆர்வத்துடன் படிப்பதைக் கண்டு அம்மாவின் மனதிற்குள் ஒரே மகிழ்ச்சி மனதிற்கு
சற்று அமைதியாகவும் இருந்தது. கடைசியாக இருந்தத் தேர்வு முடிந்ததும் அமைதியாகவும் ஒரு
பெரிய சுமையினை இறக்கி வைத்தது போலவும் இருந்தது. ஒரு தலைவலி நீங்கியது. மனது மிகவும்
லேசாகி விட்டது. இதைக் கொண்டாட வேண்டும் போலிருந்தது.
நான் அம்மாவிடம் கேட்டேன்.
சேகரும் தீபக்கும் படத்திற்குப் போகிறார்கள். நானும் போகட்டுமா? இன்று வரை நான் இவர்களுடன்
சேர்ந்து வெளியே எங்கும் சென்றதில்லை. ஆனால் இவ்வளவும் படித்த பிறகு எனக்கு இந்த சுதந்திரம்
கிடைக்க வேண்டும்.
அம்மா ஒரு நிமிடம் என் முகத்தையேப்
பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு சொன்னாள். இங்கே வா! இங்கு வந்து உட்காரு உங்கிட்ட
கொஞ்சம் பேச வேண்டியிருக்கிறது.
நான் போய் உட்கார்ந்தேன். இதில் பேசுவதற்கு என்ன இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. ஆம்
அல்லது இல்லை என்று சொல்லனும். ஆனால் அம்மாவிற்கு
ஒரு வியாதி அவள் அதிகம் பேசுவாள். அவள் இருக்கு இல்லை என்பதைச் சொல்வதற்கே ஐம்பது
அறுபது வாக்கியங்களில்தான் சொல்லுவாள். அப்படிச் சொல்லாமல் அவளால் இருக்க முடியாது.
“உன் தேர்வுகள் முடிந்து
விட்டன. நானும் படத்திற்குச் செல்லலாமென நினைத்துக்கொண்டுதான் இருந்தேன். சொல், எந்தப் படம் பார்க்கப் விரும்புகிறாய்?”
ஏன்? அவர்களுடன் போனால்
என்ன? என்னுடைய குரலில் இத்தனை எரிச்சல் இருந்ததைக் கண்ட, அம்மா தொடர்ந்து என்னுடைய முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“தனு, உனக்கு முழு சுதந்திரம்
கொடுத்திருக்கிறேன். ஆனால் இத்தனை வேகம் கூடாது. நானும் உன்னுடன் சேர்ந்து நடக்கும்
வேகத்திற்கு நட” !
நீ வெளிப்படையாகவே சொல்லி
விடு. போக விடுவாயா இல்லை மாட்டாயா? தேவியில்லாமல் பேசாதே! நானும் உன் கூட சேர்ந்து
நடக்கனும் என்னுடன் நீ நடக்கனும் என்ற பேச்செல்லாம் எங்கிருந்து வந்தது?
அம்மா என் முதுகைத் தடவிக்கொடுத்தவாறே
சொன்னாள். “நானும் உன்னுடன் நடக்க வேண்டும். நீ கவிழ்ந்து விழும் பொழுது உன்னைத் தூக்கி
விட ஒருவர் வேண்டும் இல்லையே? ”
அம்மா என்னைப் போக விடமாட்டாள்
என்று எனக்குப் புரிந்து விட்டது. ஆனால் இந்த அளவிற்கு அன்பு காட்டித் தடுக்கிறால்
என்றால் என்னுடன் அவளால் சண்டை போடவும் முடியாது. அதனால்தான் விவாதம் செய்வதற்கு முன்பாக
அவள் பேசுகின்ற தத்துவங்களை எல்லாம் கேட்க அதாவது ஐம்பது நிமிடங்கள் கொண்ட ஒரு வகுப்பு நடைபெறும்.
அவர்களுடன் நான் செல்வதினால் என்ன குற்றம் இருக்கிறது என்று எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.
ஒவ்வொரு விஷயத்திலும் இல்லை வேண்டாம். எங்களையெல்லாம்
குழந்தைப் பருவத்தில் இதைச் செய்யாதே, இங்கே போகாதே என்று கண்டிப்பார்கள். என்று தன்னைப்
பற்றி சொல்லிவிட்டு இப்பொழுது அவளும் அதையேதான் செய்து கொண்டிருக்கிறாள். இதுமாதிரி
பெரிய பெரிய பேச்சுகளையெல்லாம் பார்த்துவிட்டேன். நான் எழுந்ததும் விருவிருவென என்னுடைய
அறைக்குள் வந்து விட்டேன். ஆம் வரும்பொழுது ஒரு சில வாக்கியத்தைப் பதித்து விட்டுத்தான்
வந்தேன். அம்மா! நடக்கின்றவன் விழவும் செய்வான், விழுபவன் எழவும் செய்வான். அவன் தானே
எழுவான். அவனுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை.
நான் சொன்னது அவனின் மனதில்
எதிர்விளைவை ஏற்படுத்தியிருக்குமோ என்னவோ! தெரியவில்லை. அன்று மாலையில் சேகர் மற்றும் அவனுடைய அறைக்கு வந்திருந்த
மூன்று-நான்கு பையன்களை அழைத்து என்னுடைய அறையில் கூட்டம் கூட்டி விட்டாள். சுடச்சுட
பந்தி பரிமாறப்பட்டது. இவர்களுடன் அன்றைய பொழுது வண்ணமையமாக கழிந்தது. என்னுடைய கோபமும்
இல்லாமல் போய்விட்டது.
தேர்வுகள் முடிந்துவிட்டன.
பருவ நிலையும் நன்றாகவே இருந்தது. அம்மாவின் அனுகுமுறையும் எனக்குச் சாதகமாகவே இருந்தது.
ஒத்திவைக்கப்பட்ட நண்பர்களின் நட்பு மீண்டும் தொடர்ந்தது. ஆனால் மீண்டும் ஓர் அதிர்ச்சி,
அந்த நாள் நான் என்னுடைய
தோழியின் வீட்டிலிருந்து திரும்பியதும் அம்மாவின் கடுமையான குரல் கேட்டது. “தனு இங்கே வா.”
அந்தக் குரலிலிருந்து அபாயத்திற்கான அறிகுறி தெரிந்தது.
ஒரு நிமிடம் நான் அதிர்ச்சியில் நின்று விட்டேன். அருகில் சென்றதும் முகத்தில் முன்பிருந்தது
போலவே கடுமை இருந்தது.
நீ சேகரின் அறைக்குப் போகிறாயா?
அம்மா குண்டால் துளைத்தாள். பின்னாடித் தெருவிலிருக்கும் யாரோ தன்னுடைய கை வரிசையினைக்
காட்டியுள்ளார்கள் என்பது மட்டும் புரிந்தது.
எப்போதிலிருந்து போகிறாய்?
தகவல் யார் கொடுத்தார்களோ!
அவர்களே மீதமுள்ள செய்திகளையும் கொடுத்திருப்பார்களே என்று நினைத்தேன். கொஞ்சம் இல்லாதது
பொல்லாதது எல்லாம் செர்த்து சொல்லியிருப்பார்கள். அம்மா கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தாள்.
எனவே அங்கே அமைதியாக இருப்பதுவே நல்லது என்பதைப் புரிந்து கொண்டேன். இவ்வாறு அம்மா
கோபம் கொள்வதற்கான காரணம் பற்றி எனக்கு ஒன்றும் புரியவில்லை. இரண்டு மூன்று முறை நான்
கொஞ்ச நேரம் சேகரின் அறைக்குச் செல்வதனால் என்ன ஆகப் போகிறது. ஆனால் அம்மாவின் ஒவ்வொரு
செயல்பாடுகளும் காரணத்தோடு இருப்பதில்லை. அவளின் என்னம் போல செயல்படுகிறாள்.
பெரும் கஷ்டமாக இருந்தது.
கோபத்திலிருக்கும் அம்மாவிடம் பேசுவது என்பது அர்த்தமற்றது. மேலும் என்னுடைய மௌனம்
அம்மாவின் கோபத்தைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தது.
ஞாபகமில்லையா? நான் ஆரம்பத்திலேயே
உன்னை எச்சரித்தேன். அவனுடைய அறைக்குச் செல்லக் கூடாது என்று தொடர்ந்து மூன்று மணி
நேரம் அவன் இங்கேயே எப்பொழுதும் உட்கார்ந்து கொள்கிறான். அது உனக்கு போதுமானதாக இல்லையா?
துக்கம், கோபம் மற்றும்
பயம் இவற்றின் அடுக்குகள் அவளின் முகத்தில் மிகுதியாக வெளிப்பட்டுக்கொண்டிருந்தன. எனக்கு
ஒன்றும் புரியவில்லை. நடந்தது எல்லாவற்றையும் அவளிடம் எவ்வாறு புரியவைப்பது என்று.
பாவம்! அந்த எதிர்வீட்டில்
இருப்பவள் என்னைக் கூப்பிட்டு எச்சரிக்கை செய்தாள். தெரியும்தானே. இந்தத் தலை இதுவரை
யார் முன்பாகவும் குனிந்ததில்லை. ஆனால் அங்கே என் தலை நிமிரவே இல்லை. எங்களின் முகத்தை
வெளியே காட்டமுடியாதபடி செய்துவிடாதே!. தெருவெல்லாம் தூ, தூ, என்று துப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
மூக்கை அறுத்து விட்டாய்.
பயங்கரமாகிவிட்டது!.
இந்த முறை வட்டாரம் முழுமையும்
அம்மாவிற்குள்ளிருந்து பேச ஆரம்பித்துவிட்டது. ஆச்சரியமாக இருக்கிறது. அம்மா! இதுவரை
தன்னுடைய அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடமிருந்து விலகி இருந்தாள். இவர்களை கேலி, கிண்டல்
செய்தாள். இன்று எவ்வாறு அவர்களின் குரலில் குரல் கலந்து பேசிக் கொண்டிருக்கிறாள்.
அம்மாவின் சொற்பொழிவு வழக்கம்போல்
நடந்தது. ஆனால் நான் அதனைக் காதுகொடுத்துக் கேட்கவில்லை. சற்று கோபம் தணிந்த பின்பு,
அம்மா தன்னைப் புரிந்து கொண்டு சுயநிலைக்குத் திரும்பி வருவாள். அம்மா இந்த சின்ன விஷயத்தையா
நீ தேவையில்லாமல் இத்தனைப் பெரிதாக்கிவிட்டய் ? என்று சொல்லுவேன்.
ஆனால் எப்படிப்பட்ட மருந்து
கொண்டுவந்தும், இந்த முறை அவளுடைய கோபம் தனியவே இல்லை. அவளின் கோபத்தால் எனக்கும் கோபம்
தலைக்கேறியது.
பிறகு வீட்டில் ஒரு வகையான
இறுக்கமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்தமுறை அம்மா எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் அப்பாவிடம்
சொல்லிவிட்டாள் என்று நினைத்தேன். சொல்வதற்கென்று அவருக்கு ஒன்றுமில்லாமல் போய்விட்டது.
அவர் ஆரம்பத்திலிருந்தே இந்த விஷயத்தில் கண்டும் காணாததுமாக இருந்துவிட்டார். ஆனால்
இந்த முறை அவருடைய முகத்திலும் ஒரு வகையான சொல்லமுடியாத இறுக்கம் நிலவியது.
இரண்டு மாதத்திற்கு முன்பாக
இது போன்ற நிகழ்ச்சி ஏற்பட்ட போது எனக்கு உள்ளுக்குள்ளே ஒரு வகையான பயம் ஏற்பட்டது.
ஆனால் இந்த முறை நான் தயாராகத்தானிருந்தேன். இந்த விஷயத்தில் அம்மா தாத்தாவிடம் நடந்து
கொண்டது போல்தான் நடந்து கொள்வேன். நானும் பிறகு அம்மாவைப்போல் எதிர்த்துப் போராடி
உன்னுடைய மகள்தான் என்று நிருபித்துக்கட்டுவேன். நானும் உன்னைப் போன்றுதான் நடந்து
கொள்வேன். வாழ்க்கை முழுவதும் புதுமைக் கருத்துக்களை ஊட்டி வளர்த்திருக்கிறாள். ஆனால்
நான் என்னுடைய முதல் அடியை எடுத்து வைத்ததுமே இழுத்து என்னை தான் கிழித்த கோட்டில்
செல்லும்படி இழுபறி ஆரம்பமாகிவிட்டது.
நான் மனதில் ஆயிரமாயிரம்
தர்க்கங்களை நினைத்திருந்தேன். நிச்சயம் ஒரு நாள் தனி ஆளாக நின்று அம்மாவிடம் விவாதம்
செய்வேன். வெளிப்படையாகவே சொல்வேன். அம்மா! இத்தனை தடைகளை விதிக்கிக்றாய் என்றால் ஆரம்பத்திலேயே
அப்படி வளர்த்திருக்க வேண்டும். ஏன் பொய்யாக சுதந்திரம் கொடுப்பதாகப் பேசினாய் சொல்லியும்
கொடுத்தாய்! இந்தமுறை என்னுடைய மனது கொழுந்துவிட்டு
எறியத்துவங்கி சாம்பலாகிவிட்டிருந்தது. நான் ஒன்றும் பேசாமல் என் அறையில் படுத்திருந்தேன்.
நெஞ்சு மிகவும் கனத்திருந்தது. விட்டில் எல்லா நாளும் சிரித்துக் கொண்டு கலகலப்பாக
இருந்த நான் ஒரேயடியாக அமைதியாகியிருந்தேன். எனக்குள்ளாகவே கூனிக் குறுகியிருந்தேன்.
ஆம். ஒரே வாக்கியத்தை திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தேன். அம்மா நீ ஒன்றை மட்டும்
நன்றாகப் புரிந்து கொள். நானும் என்னுடைய மனதிற்குப் பட்டதைத்தான் செய்வேன். இருந்தபோதிலும்
என் மனதில் என்ன இருக்கிறதென்று எனக்கே ஒன்றும் தெரியவில்லை. எந்தவொரு திட்டமும் எனக்கு
முன்பாக இல்லை.
எனக்குத் தெரியாது. இந்த
மூன்று நான்கு நாட்களாக என்ன நடந்தது என்று வீடு, வெளி உலகத்திலிருந்து விலகி என்னுடைய
அறையிலேயே இருந்து விட்டேன். நான் அம்மாவை எதிர்ப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் இன்று பகலில் என்னால்
முழுமையாக எனது காதுகளையே நம்ப முடியவில்லை. நான், அம்மா எங்களுடைய வராந்தாவிலிருந்து
உரக்கப் பேசிக்கொண்டிருப்பதைக் கவனித்தேன். சேகர் நாளைக்கு நீங்கள் எல்லோரும் விடுமுறைக்கு
உங்களுடைய வீட்டிற்குச் சென்று விடுவீர்கள். எனவே இன்று மாலை உன் நண்பர்களுடன் இங்கே
சாப்பிட வாருங்கள் என்றாள்.
எந்த மனப் போராட்டத்திற்குப்
பிறகு அம்மா இந்த நிலையை அம்மா அடைந்திருக்கிறாள் என்று தெரியவில்லை.
இரவு வேலையில் சேகர், தீபக்
மற்றும் ரவி மூவரும் சாப்பாட்டு மேஜையின் முன்பாக அமர்ந்திருந்தனர். அம்மா மிகவும்
அன்போடு சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்தாள்.
அப்பா இடையில் எதுவும் நடக்காதது போன்று முன்பு போல இயல்பாக வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருந்தார்.
நடுவே சிறிதாக மேகக் கூட்டம் விலகியது போல அக்கம் பக்கத்து வீட்டு சன்னல்களில் இரண்டு,
நான்கு தலைகள் எட்டிப்பார்த்தன. எல்லாமே முன்பு போலவே மிகவும் இயல்பான முறையில் நடைபெற்றது.
நான் மட்டும் இவையெல்லாவற்றிலிருந்தும்
ஒரேயடியாக விலகி சிந்தித்துக் கொண்டிருந்தேன். தாத்தா என்றுமே தாத்தாதான். இதனால்தான்
அம்மாவிற்கு சண்டையிடுவது மிகவும் எளிமையானதாக இருந்துள்ளது. ஆனால் ஒரு நேரம் தாத்தாவாக
மாறுவதும் ஒரு நேரம் அம்மாவாக இருப்பதுமாக உள்ள, இந்த அம்மாவிடம் எப்படிச் சண்டையிடுவது?.