பெண்ணிலைவாதச் சிந்தனை
முன்னுரை
தொழில்நுட்ப வளர்ச்சியின் வெளிப்பாடாக உலகமையமாதல் சூழலில்
உலகம் ஒரு குடைக்குக் கீழ் சுருங்கி நிற்கின்றது. தகவல் தொடர்பும் போக்குவரத்தும் உலகத்தினர்
அனைவரையும் அருகருகே அமரச் செய்துவிட்டன. என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த இருபத்தி
ஒன்றாம் நூற்றாண்டிலும் பாலின சமத்துவம் என்பது முழுமை பெறாமல் இருக்கின்றது என்பதைப்
பெண்ணியம் குறித்துத் தொடர்ந்து நடைபெறும் விவாதங்களின் வழி அறியலாம். பெண்ணிற்கு மறுக்கப்பட்ட
உரிமைகள் அனைத்தும் முழுமையாக மீட்டெடுக்கின்ற வரையில் பெண்ணியம் குறித்த விவாதங்கள்
நின்றுவிடாது.
எவ்வளவுதான் படித்தாலும் விவாதித்தாலும்
மேடைகளில் முழங்கினாலும் பக்கம் பக்கமாக எழுதினாலும் நடைமுறையில் எந்த அளவிற்குச் சாத்தியப்பட்டிருக்கிறது
என்பதை வைத்துத்தான் பெண்ணியத்தின் வெற்றியைத் தீர்மானிக்க முடியும். நடைமுறை எதார்த்தங்களை
வைத்துப் பார்க்கின்ற பொழுது ஆணாதிக்க வன்கொடுமைகளினால் அன்றாடம் அல்லல்படுவோருக்கும்
எது பெண்ணியம்? என்கிற புரிதல் சென்று சேர்ந்துவிட்டதா என்பது கேள்விக் குறியாகவே இருக்கின்றது.
ஆகவே எது பெண்ணியம்? என்பது குறித்துப் புரிந்துகொள்வதற்கே நாம் இன்னும் பல தூரங்களைக்
கடக்க வேண்டியிருக்கின்றது என்பதை உணரமுடிகின்றது. அதன் வெளிப்பாடாக பெண்ணியத்தை எளிமையாகப்
புரிந்துகொள்ளும் வகையில் எது பெண்ணியம்? என்கிற கேள்விக்கான பதிலை இக்கட்டுரையின்
வழி நாம் தேடுகின்றோம்.
அதோடு மட்டும் நின்றுவிடாமல் எது பெண்ணியம்?
என்று புரிந்துகொண்டால் மட்டும் போதாது, யார் பெண்ணியவாதி என்கிற கேள்வியும் பெண்ணியம்
பேசுகின்ற இலக்கியவாதிகளிடையேயும் சமுகவியலாலர்களிடையேயும் தொடர்ந்து விவாதப் பொருளாகி
வருகின்றது. அதற்கான விடையையும் தேடிச் செல்கின்ற தன்மையில் இக்கட்டுரையின் போக்கு
எது பெண்ணியம்? யார் பெண்ணியவாதி? என்கிற இரு கேள்விகளை முன்வைத்து பெண்ணிலைவாதச் சிந்தனை
எனும் தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.
பெண்ணியத் தோற்றம்
ஃபெமினிஸம்
(Feminism) என்னும் ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கமாகவே பெண்ணியம் என்னும்
சொல் தமிழ் இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இச்சொல் ஃபெமினே (Famine) என்ற இலத்தீன் சொல்லிலிருந்து தோன்றியது என்பர். பெண்ணியம்
என்ற சொல் முதன்முதலில் 1895ஆம் ஆண்டு ‘அதீனியம்’ என்ற இதழில் பயன்படுத்தப்பட்டது.
அது 20ஆம் நூற்றாண்டில்தான் பெருவழக்காக இலக்கியங்களிலும் சமூகத் தளங்களிலும் பயன்படுத்தப்பட்டது
என பெண்ணியச் சொல்லின் தோற்றம் குறித்து ராஜ்கௌதமன் கூறியுள்ளார்.[1] பெண்ணியச் சிந்தனைகள் ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு
நாட்டிற்கும் ஏற்ப மாறுபட்டு வந்துள்ளன. அப்பெண்ணியச் சிந்தனைகள் தோற்றம் பெற்ற காலத்தில்
ஆண்களுக்கு நிகரான உரிமைகளைப் பெறுவதே பெண்ணியம் என்னும் கருத்து முன்னிறுத்தப்பட்டுள்ளது.
அதனை அடுத்து இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து பெண் விடுதலை குறித்த பெண்ணியப்
படைப்புகள் மிகுதியாகத் தோற்றம் பெற்று வருகின்றன.
ஆணாதிக்கச்
சமூகத்தில் பெண்ணியச் சிந்தனைகள் தோன்றுவதற்கு முன் பெண் குறித்தான கட்டமைப்பு என்பது
இயற்கையில் ஆண், பெண் இருவரும் வேறுபட்டவர்கள் என்றும் ஆணைவிட பெண் தாழ்வானவள் என்றும்
உருவாக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து முதன் முதலில் ஆங்கிலப் பெண்மணியான ‘மேரி உல்ஸ்டோன்
கிராஃப்ட்’ (Mary Wollstonecraft) பெண்களின் உரிமைகளை நியாயப்படுத்துதல் (Vindication of the Rights of women) (1792) என்ற நூலை
வெளியிட்டார். அந்நூலில் சமூகம் என்பது ஆண் - பெண் இருபாலரையும் கொண்டதாகும். எனவே
உரிமையானது ஆணிற்கும் பெண்ணிற்கும் சமமாகப் பகிர்தல் வேண்டும் என்ற வாதத்தினை முன்வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பிரான்சு நாட்டைச் சார்ந்த ‘சீமோன் தி பௌவோ’ (Simon De
Beauvoir) இரண்டாவது பாலினம் (The Second Sex) (1949) என்ற நூலை வெளியிட்டார். இதனை முன்னோடியாகக் கொண்டு பெண்ணியம் மேலை நாடுகளில்
தோற்றம் பெற்றது எனலாம்.[2]
பெண்ணியம் விளக்கம்
பெண்ணியம்
என்னும் சொல் அது தோன்றிய காலத்திற்கு ஏற்பப் பல்வேறு அறிஞர்களால் விளக்கங்கள் கொடுக்கப்பட்டு
வந்துள்ளது. யுனிவெர்ஸல் டீலக்ஸ் அகராதியில் பெண்ணியம் என்ற சொல், “பெண்களின் உரிமையை
வற்புறுத்தும் ஓர் இயக்கம்”[3]
என்றும் ஆக்ஸ்போர்டு அகராதியில் “பெண்களின் தேவையை நிறைவேற்ற அவர்கள் சார்பாக வாதாடுவது,
போராடுவது”[4]
என்றும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏனெனில் பெண்ணியம் காலத்திற்கேற்பத் தான்
ஏற்றுக்கொண்ட கொள்கைகளின் அடிப்படையில் பல வகைகளாகப் பிரிந்து வந்துள்ளது. முனைவர் இரா.செல்வி பெண்ணியம் குறித்து கூறுகையில்
“பெண்ணியம் என்பது உலகளவில் அரசியல், பொருளாதாரம், பண்பாடு, வரலாறு, பரிணாமம் ஆகியவற்றில்
காணலாகும் ஆணாதிக்கத்தைக் கண்டுரைப்பதாகும். அனைத்துத் துறைகளிலும் நிலவும் ஆணாதிக்கக்
கருத்தியல்களை அகற்றி ஆண் - பெண் சமத்துவத்திற்கு வழிகாண்பதாகும்.”[5] என்கிறார். எனவே பெண்ணியம் என்பது ஆண் - பெண் ஆகிய
இருவருக்கான சமத்துவத்தைப் பேசுகின்ற ஒரு கோட்பாடு என்பதாகப் புரிந்து கோள்ளலாம்.
பெண்ணியம் குறித்து முனைவர் வாசுகி ஜெயரத்தினம்
கூறுகையில் “பெண்ணியம் என்பது பெண் சமத்துவம் வேண்டிப் போராடும் பெண் இயக்கங்களையும்
அவற்றின் செயல்பாடுகளையும் குறிப்பிடுகிறது.”[6]
என்கிறார். இதனடிப்படையில் சமூகத்தில் காலந்தோறும் பின்பற்றப்பட்டு வந்த ஆணாதிக்கச்
சிந்தனைகளைக் கண்டறிந்து அதனைக் களைவதுடன் பெண்களுக்கான சம உரிமையினை மீட்டெடுப்பதுவே
பெண்ணியம் என்னும் புரிதலுக்கு வரலாம். இருப்பினும் பெண்ணியம் என்னும் தத்துவப் போக்கு
ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டின் சூழ்நிலைகளுக்கேற்ப வேறுபட்டுக் காணப்படுகின்றது.
உதாரணமாக மேலைநாட்டில் பெண்கள் நிறத்தின் அடிப்படையில் ஒடுக்கப்பட்டதால் கருப்புப்
பெண்ணியத்தின் தேவையும் அதனுடைய கருத்துக்களும் தோற்றம் பெற்றன. அதே போல இந்தியச் சமூகத்தில்
சாதிய ஏற்றத்தாழ்வின் காரணமாக பெண்கள் ஒடுக்கப்படுவதால் தலித் பெண்ணியத்தின் தேவையும்
அதனுடைய கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றன.
பெண்ணிய வகைமை
பெண்ணியத்தை நிலத்தின் அடிப்படையில் வகைப்படுத்துகின்ற
பொழுது 1) மேற்கத்தியப் பெண்ணியம் 2) ஆசியப் பெண்ணியம் என இருவகைப்படுத்தலாம். இதில்
பிரெஞ்சுப் பெண்ணியமும் ஆங்கிலோ அமெரிக்கப் பெண்ணியமும் மேற்கத்தியப் பெண்ணிய வகைக்குள்
அடங்கும். அடுத்ததாக இந்தியப் பெண்ணிய மரபானது ஆசியப் பெண்ணிய வகைக்குள் அடங்கும்.[7]
பெண்ணிய வகைப்பாட்டினை கோட்பாட்டளவில் வகைப் படுத்துகின்ற பொழுது சமூக விடுதலை குறித்துத்
தோற்றம் பெற்ற கோட்பாடுகள் ஒவ்வொன்றையும் பெண்ணியம் தன்னுள் இணைத்து கொண்டு தனித்தனி
வகைகளாகப் பிரிந்துள்ளது எனலாம். இன்று பெண்ணிய
வகைகள் பலவாகப் பிரிந்து கிடப்பினும் அதனை மிதவாதப் பெண்ணியம், மார்க்சியப் பெண்ணியம்,
தீவிரவாதப் பெண்ணியம் மற்றும் தலித் பெண்னியம் என நான்கு வகைகளுக்குள் குறிப்பிடலாம்.
மிதவாதப் பெண்ணியம்
பெண்ணியச் சிந்தனைகள் தோற்றம் பெற்ற ஆரம்பக் காலக்கட்டத்தில் மிதவாதப் பெண்ணியம் தோற்றம் பெற்றது. இதனைத் தாராளவாதப்
பெண்ணியம் என்றும் கூறுவர். பெண்ணியம் தோற்றம் பெற்ற காலத்தில் ஆண்களுக்கு நிகரான சம
உரிமையினைப் பற்றிப் பேசுவதையினையே நோக்கமாகக் கொண்டு மிதவாதப் பெண்ணியம் தோன்றியது.
இப்பெண்ணியம் குறித்துத் தமிழ் இலக்கிய பெண்ணியச் சிந்தனையாளர் இரா.பிரேமா “பெண் சுதந்திரம்
என்பது பாலியல் சுதந்திரத்தைப் பேசுவதுதான். அதற்காக பெண் விபச்சாரத்தில் ஈடுபடவும்
திருமணம் ஆன பெண் இன்னொரு ஆணுடன் தொடர்பு கொள்ளவும் தூண்டுவது அன்று பெண்ணியம்”.[8]
என்னும் விளக்கத்தினை முன்வைக்கின்றார். ஆணும் பெண்ணும் சமம். ஆணுக்கான உரிமைகள்
பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டது மிதவாதப் பெண்ணியமாகும்.
இது குடும்ப அமைப்பையும் தாய்மைப் பண்பையும் போற்றியது. பெண்கல்வி, ஓட்டுரிமை, வேலைவாய்ப்பு,
சமஊதியம், சொத்துரிமை, எனப் பெண்களுக்குரிய உரிமைகளை மீட்டுத் தருவதற்காகப் போராடியது.
மார்க்சியப் பெண்ணியம்
மிதவாதப் பெண்ணியத்தில் முன்வைக்கப்பட்ட பெண்களின் உரிமைகளுக்கான
கோரிக்கைகள் அடித்தட்டு மக்களை அதாவது உழைக்கும் வர்க்க மக்களைச் சென்றடையவில்லை. பொருளாதார
அடிப்படையில் மேல்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கப் பெண்கள் மட்டும்தான் பயனடைகின்றனர்.
எனவே கார்ல்மார்க்சும் ஏங்கல்சும் தோற்றுவித்த மார்க்சியக் கோட்பாட்டை முன்வைத்து ஐரோப்பாவில்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் மார்க்ஸியப் பெண்ணியம் தோற்றம் பெற்றது. மார்க்சியம் அடிப்படையில்
சமூகத்தை 1.மேல்தட்டு வர்க்கம் 2. நடுத்தர வர்க்கம் 3. அடித்தட்டு வர்க்கம் என மூன்று
வகைகளாகப் பிரிக்கின்றது. இம்மூன்று தளத்திலும் பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற
வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு தோற்றம் கொண்டதே மார்க்சியப் பெண்ணியம் ஆகும்.
பெண்ணடிமைத்தனத்திற்கு முக்கியக் காரணமாக
விளங்குவது பொருளாதார ரீதியாகப் பெண்கள் ஆண்களைச் சார்ந்திருப்பது ஆகும் என்பதை மார்க்சியப்
பெண்ணியம் முன் வைக்கின்றது. எனவே பெற்றோரின் சொத்து ஆண் வாரிசுகளுக்கு மட்டுமல்லாது
பெண் வாரிசுகளுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றி மார்க்சியப்
பெண்ணியம் விவாதித்தது. இதனடிப்படையில் 1956 ஜுலை 14 வகுக்கப்பட்ட இந்து வாரிசுச் சட்டத்தின்படி
பெற்றோரின் சொத்துக்கள் அவர்களின் பிள்ளைகளில் இருபாலருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும்
எனச் சட்டம் இயற்றப்பட்டது.
தீவிரவாதப் பெண்ணியம்
பின்நவீனத்துவம் தோன்றி வளர்ந்த காலப் பிண்ணனியில்
தீவிரவாதப் பெண்ணியம் தோற்றம் பெற்றது எனலாம்.
தீவிரவாதப் பெண்ணியம் குறித்து இரா. பிரேமா “ஆண், பெண் இருவருக்கும் உடற்கூற்றில்
அமைந்த வேறுபாடு சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்ட இயற்கையாக அமைந்த ஒன்று என்றும் உடல் கூற்றின்
அடிப்படையில் பாலியலில் ஆண் அதிக ஈடுபாடும் பெண்களை அடக்கி ஆளும் தன்மையும் கொண்டுள்ளான்.
ஆகவே பெண்கள் பாலுறவு கொள்வதையும் பிள்ளை பெற்றுக் கொள்வதையும் விட்டுவிடுதல் வேண்டும்”[9]
என்கிறார். எனவே தீவிரவாதப் பெண்ணியம் என்பது இதுவரை ஆண்களால் சித்திரிக்கப்பட்டு வந்த
பெண்களின் பிம்பத்தினை உடைத்தெரிகின்றது. மரபுகளைக் கட்டுடைப்பதோடு கட்டற்ற பாலியல்,
ஒரினச் சேர்க்கை, தாய்மை மறுப்பு என பெண்களின் முழுமையான விடுதலையை தீவிரவாதப் பெண்ணியம்
வலியுறுத்துகின்றது எனலாம்.
தலித் பெண்ணியம்
சாதிய அடிப்படையில் பிரிந்து கிடக்கின்ற இந்தியச்
சமூகத்தில் தலித் பெண்கள் ஆணாதிக்கக் கொடுமையினாலும் தீண்டாமையினாலும் ஒடுக்கப்படுகின்ற
நிலையிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு தோன்றியதே தலித் பெண்ணியமாகும்.
எனவே “இந்தியாவில் அழித்து ஒழிக்க வேண்டிய கொடுமைகளை வரிசைப்படுத்தினால் முதலில் சாதிக்கொடுமையும்
இரண்டாவது பெண் மீதான ஒடுக்குமுறையும் நினைவுக்கு வரும்.”[10]
என அரங்க மல்லிகாவின் கூற்று தலித் பெண்ணியத்தின் இன்றையத் தேவையினை உணர்த்துகின்றது. இவ்விரண்டு
கொடுமைகளையும் ஒன்றாக அனுபவித்துக் கொண்டிருப்பவள்தான் தலித் பெண் ஆவாள். மேலை நாடுகளில்
தோன்றிய கருப்புப் பெண்ணியமே தலித் பெண்ணியத்தின் தோற்றத்திற்குக் காரணமாக இருந்துள்ளது.
கருப்புப் பெண்ணியத்திற்கு நிறம் ஒரு தடையாக இருப்பது போல தலித் பெண்ணியத்திற்குச்
சாதியம் ஓர் ஒடுக்குமுறைக்கான சாதனமாகச் செயல்பட்டு வருகின்றது. மேலும் “தலித் பெண்ணியம்
என்பது சாதி – மத – வர்க்கக் கட்டமைப்பை ஒட்டிய ஆணாதிக்கத்தை முறியடிப்பதாகும்.”[11]
என சிவகாமி விளக்கம் அளிக்கின்றார். எனவே தாழ்த்தப்பட்ட
பெண்களின் விடுதலையைப் பற்றிப் பேசுவதுதான் தலித் பெண்ணியம் ஆகும்.
தலித்
பெண்ணின் வாழ்வியல் நிலை குறித்து மார்க்ரெட் கலைச் செல்வி “பொருளாதார ரீதியாக உழைப்புச்
சுரண்டலில் சிக்குண்டு உழைப்போடு மட்டுமே உறவாடி தங்களின் முகவரிகளை இழந்து கடைநிலை
ஊழியர்களாக ஆக்கப்பட்டவர்கள் தலித் பெண்கள் ஆவர். அரசியல் ரீதியாக மனிதர்களாகக் கருதப்படாமல்
தங்களின் மீதும் தங்களின் உடல் மீதும் அதிகாரம் இழந்தவர்கள். தங்களின் நிலை குறித்து
முடிவெடுக்க இயலாதபடிக்கு மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள். கலாச்சார ரீதியாக நீ தீண்டத்தகாதவள்,
கிராமத்துவாசி என்றெல்லாம் முத்திரை குத்தித் தள்ளி வைக்கப்பட்டவள்.”[12] என தலித் பெண் மீதான சாதியத்தின் கொடூரத் தன்மை
சமூகத்தில் கட்டமைப்பு செய்யப்பட்ட நிலையினை விளக்குகின்றார். இதனடிப்படையில் தமிழ்
இலக்கியத்தில் 1990களில் தான் தலித் பெண்ணியம் தோற்றம் பெற்று வளரத் தொடங்குகியது எனலாம்.
பெண்ணியப் படைப்பாளர்
பெண்ணியச் சிந்தனைகளையும் இலக்கியங்களையும் வரையறுக்கின்ற
பொழுது படைப்புகளை மட்டுமல்லாது படைப்பாளர்களையும் வரையறைக்கு உட்படுத்த வேண்டிய சூழல்
ஏற்படுகின்றது. ஆரம்ப காலக்கட்டத்தில் பெண்களைவிட ஆண்களே அதிக அளவில் பெண் விடுதலை
குறித்த சிந்தனைகளையும் படைப்புக்களையும் படைத்து வந்துள்ளனர். எனவே பெண்கள் விடுதலை
பெற வேண்டும் என்ற சிந்தனை உடைய அனைவருமே பெண்ணியவாதிகள்தான் என்னும் போக்கு நிலவி
வந்துள்ளது. இதனை மொலினாதேன்மொழி விளக்குகையில் “சமூகம், வேலைத்தளம், குடும்பம் ஆகிய
நிறுவனங்களில் நிலவும் பெண் ஒடுக்குமுறை பற்றிய உணர்வுகளும் இந்நிலையை மாற்ற ஆண் -
பெண் இருபாலரும் எடுக்கும் உணர்வுப்பூர்வ நடவடிக்கைகளும் பெண்ணியமாகக் கருதப்படுகின்றன.
இதன்படி பாலியல் ரீதியான ஒடுக்குமுறைகளையும் ஆணாதிக்கத்தையும் இனங்காணும் எவரும் பெண்ணியவாதியாவார்கள்”[13] என்கிறார்.
இக்கூற்றிற்கு வலுச் சேர்க்கும் விதமாக முனைவர் வாசுகி ஜெயரத்தினம் “பாலியல் ரீதியிலான
ஒடுக்குமுறை வடிவங்களையும் ஆண் மேலாதிக்கத்தையும் தந்தை வழிச் சமூக அமைப்பையும் இனம்
காணும் எவரும் ஒரு பெண்ணியவாதியாகிறார்.”[14] என்கிறார்.
எனவே இங்கு பெண் விடுதலை குறித்துச் சிந்திக்கும் எவரும் பெண்ணியவாதியாகக் கருதப்படுவர்.
தமிழ் இலக்கியப் பெண் படைப்பாளரான அரங்க மல்லிகா பெண்ணியம்
குறித்து விளக்குகையில் “பெண்ணியம் என்பது ஆணைத் தவிர்த்துப் பேச இயலாது. ஆணினுடைய
அரவணைப்பும் பெண்ணினுடைய ஒத்துழைப்பும் அதே போல பெண்ணினுடைய அரவணைப்பும் ஆணினுடைய ஒத்துழைப்பும்
சமமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது பெண்ணியம். எனவே பெண்ணியத்தை ஆண்களும்
பேச முடியும். ஆணுக்குள் பெண்ணும் பெண்ணுக்குள் ஆணுமாய் இருக்க வேண்டுமென்ற சித்தாந்தமே
பெண்ணியம்.”[15] என விளக்கமளிக்கின்றார்.
இதனை அடுத்துப் பெண்ணியத்தின் வளர்ச்சியில் இக்கருத்திற்கு
மாற்றுக்கருத்துக்கள் தோற்றம் பெற்றன. அதாவது காலந்தோறும் ஆண்களே பெண்களை அடிமைப்படுத்தி
வந்துள்ளனர். பெண்களைப் பாலியலுக்கான நுகர்வுப் பொருளாகச் சித்தரித்து வந்துள்ளனர்.
ஆகையால் ஆண்களால் படைக்கப்படும் எதுவும் பெண்ணிய இலக்கியம் ஆகாது. எனவே ஆண்கள் பெண்ணியவாதி
ஆக முடியாது என்னும் மாற்றுக் கருத்து உருவாக்கப்பட்டது. ஒரு பெண்ணுக்கான வலிகளை, தேவைகளை
ஒரு பெண்ணால் மட்டும்தான் உணரவும் அதனை இலக்கியமாக எழுதவும் முடியும். அவ்வாறு உருவாகும்
படைப்புக்களே பெண்ணிய இலக்கியம் ஆகும். இத்தகையப் பெண் படைப்பாளர்களே பெண்ணியவாதியாகக்
கருதப்படுவர் என்னும் கருத்து முன் மொழியப்பட்டது. இதனடிப்படையில் பிரேம் – ரமேஷ்
“தலித்துக்களும் பெண்களும் தமக்கு மறுக்கப்பட்ட மொழியில் தமது எதிர்ப்பையும் தமது உள்ளார்ந்த
புலன்களையும் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. அந்தப் பதிவுதான் இப்போது தொடங்கப்பட்டிருக்கிறது.
தலித்திலக்கியத்தை தலித் எழுத்தாளர்களும் பெண்ணிய எழுத்துக்களைப் பெண்களும் எழுதுதல்
என்பதுதான் அறிவியல் அடிப்படையில் சாத்தியமாகும்”[16] எனவே பெண்களைப்
பற்றிப் பெண்களும் தலித்துக்களைப் பற்றித் தலித்துக்களும் எழுதுவதுதான் பொருத்தமானது
என விவாதிக்கின்றார்.
மேற்கண்ட கருத்துக்களை
ஒருங்கிணைக்கும் விதமாக பெண் மையத் திறனாய்வு தோன்றியுள்ளது. இக்கருத்து குறித்து விளக்கும்
இரா.செல்வி “பெண்ணியத் திறனாய்வு (Feminist
Criticism) என்பது ஆண் பெண் பாகுபாடு கருதாது இருபால் படைப்புக்களையும் பெண்ணிய நோக்கில்
ஆய்வதைக் குறிக்கும். இத்தகைய ஆய்வைப் பெண் ஆய்வாளர்களே அன்றி ஆண் ஆய்வாளர்களும் மேற்கொள்கின்றனர்.
பெண்மையத் திறனாய்வு (Gynocentric Criticism) என்பது பெண் எழுத்தாளர்களின்
படைப்புகளைப் பெண் வாசகர்கள் மற்றும் பெண் திறனாய்வாளர்கள் ஆராய்வதை மட்டும் குறிக்கும்.”[17] என்கிறார்.
எனவே இதனடிப்படையில் எது பெண்ணிய
இலக்கியம்? யார் பெண்ணிய வாதிகள்? என சில முடிவுகளுக்கு வரலாம். இதுவும் முற்றும் முடிந்த
முடிவு என்று கூற இயலாது. இதன் பின்னர் தோன்றும் கருத்துக்கள் காலத்தின் தேவைக்கேற்ப
மாறுபடலாம்.
தமிழ்
இலக்கியத்தில் பெண்ணியம் தோற்றம் கொண்ட காலகட்டத்தில் ஆண் படைப்பாளர்கள் பெண்களை உயர்த்திப்
படைப்புகள் படைத்திருந்தாலும் ஒவ்வொருவருக்குமான அனுபவங்கள், வேதனைகள், உளவியல் சிக்கல்கள்
என்பது தனித்துவம் வாய்ந்தது என்னும் அடிப்படையில் ஆண்களுடைய படைப்புகள் பெண்ணியம்
சார்ந்த படைப்புகளாகக் கருதப்படும். மேலும் இப்படைப்பாளர்கள் பெண்ணியச் சார்பாளர்கள்
ஆவர். பெண்களைப் பற்றிப் பெண்களே படைக்கும் படைப்புகளே பெண்ணியப் படைப்புகள் ஆகும்.
இதற்கு உதாரணமாகப் பல சான்றுகளைக் கூற முடியும், அதில் முதன்மையாக இருப்பது பெண்கள்
குழந்தை பெற்றுக்கொள்வது. என்னதான், பெண் தனது குழந்தையைப் பெற்றெடுப்பதன் வலியையும் வேதனையும் ஒரு ஆண் எழுதினாலும் அதை அனுபவித்த
பெண், அந்த வலியை உணர்ந்து எழுதுவதற்கு ஈடாகாது. ஆகையால்தான் அனுபவத்தின் வழி உணர்ந்து
எழுதுவது என்பது வேறு, மற்றவரின் வலியை அறிந்து எழுதுவது என்பது வேறு என்கிற முடிவிற்கு
வருகின்றோம். இதனடிப்படையில் பெண்களின் உரிமைகள் குறித்து ஆண்களால் எழுதப்படும் படைப்புகள்
அனைத்தும் பெண்ணியம் சார்ந்த படைப்புகள் எனவும் பெண்கள் குறித்து பெண்களே படைக்கும்
படைப்புக்களே பெண்ணியப் படைப்புகள் எனும் கருத்து முன்னிறுத்தப்படுகின்றது.
துணை ஆவணங்கள்
1. ராஜ்கௌதமன், (2011). பெண்ணியம் வரலாறும் கோட்பாடுகளும். கோயம்புத்தூர்: விடியல் பதிப்பகம்.
2. முத்துச் சிதம்பரம், ச. (ஏழாம் பதிப்பு 2010) பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும். திருநெல்வேலி:
முத்துப்பதிப்பகம்.
3. செல்வி, இரா. (2010) பெண்மையச் சிந்தனைகள். சென்னை: காவ்யா பதிப்பகம்.
4. வாசுகி ஜெயரத்தினம், (2009) பெண்ணியச் சுவடுகள். சென்னை: அறிவுப் பதிப்பகம்.
5. பிரேமா, இரா.
(2006) பெண் – மரபிலும் இலக்கியத்திலும்.
சென்னை: தமிழ்ப் புத்தகாலயம்.
6. பிரேமா, இரா. (1994) பெண்ணியம். சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
7.
அரங்க மல்லிகா, (2008) தலித் பெண்ணிய அழகியல். சென்னை: அறிவுப் பதிப்பகம்.
8. சிவகாமி, (2007) உடலரசியல்.
சென்னை: பனிக்குடம் பதிப்பகம்.
9.
மொலினா தேன்மொழி, (1989) பெண்ணிலைவாதம் சில கேள்விகள்.
10.
புதிய
காற்று (Pdf) – மாத இதழ், பிப்
– 2007
11. அணங்கு பெண்ணிய வெளி,(Pdf)
– இணைய இதழ், ஆகஸ்ட் – 2006.
[1] பெண்ணியம் வரலாறும் கோட்பாடுகளும் – ராஜ்கௌதமன் பக் -22
[2] பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும் – ச. முத்துச் சிதம்பரம்
[3] யுனிவெர்சல் டீலக்ஸ் அகராதி பக் – 628
[4] ஆக்ஸ்போர்டு அகராதி பக் – 610
[5] பெண்மையச் சிந்தனைகள் –முனைவர் இரா. செல்வி பக் – 09
[6] பெண்ணியச் சுவடுகள் – முனைவர். வாசுகி ஜெயரத்தினம்,
2009, பக் – 02.
[7] பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும் – ச. முத்துச் சிதம்பரம்,
பக் – 75
[8] பெண்
– மரபிலும் இலக்கியத்திலும், இரா. பிரேமா, பக் -127
[9] பெண்ணியம் – இரா. பிரேமா, 1994, பக் -54.
[10] தலித் பெண்ணிய அழகியல், அரங்க மல்லிகா பக் – 45
[11] உடலரசியல் சிவகாமி, பக் – 145
[12] தலித் பெண்ணியம், தலித் பெண்களின் உளவியல் – மார்க்ரெட் கலைச்செல்வி,
பக் – 63
[13] பெண்நிலை வாதம் சில கேள்விகள்,
மொலினா தேன்மொழி, பக் – 12)
[14] பெண்ணியச் சுவடுகள் – முனைவர்.
வாசுகி ஜெயரத்னம், 2009, பக் – 06.
[15] புதிய காற்று – மாத இதழ், பிப் -2007
[16] அணங்கு பெண்ணிய வெளி, ஆகஸ்ட் – 2006.
[17] பெண்மையச் சிந்தனைகள், முனைவர் இரா. செல்வி. பக் – 26