வெள்ளி, ஜூன் 04, 2021

கடைசிக் கண்ணீர் - பகுதி 1


எப்பத்தான் விடியுமோங்குற நெனப்புல தூக்கம் வராம பொரண்டு பொரண்டு படுத்துக்கிட்டிருந்தாரு மணி. கொசுக்கடி தாங்க முடியல, வீட்டுக்குள்ள தூங்குறது இடநெருக்கடி. நாலு பசங்க. அதுல கடைசி பையன் சரவணன் உருண்டு பொரள்ரதுக்கே பெரிய ஹால் வேணும். இதுக்குள்ள ஒருத்தனுக்கு ஒருத்தன் கட்டிப்பிடிச்சுகிட்டுதான் தூங்க முடியும். மணி எப்பவுமே வாசப்படில தலைய வச்சிக்கிட்டு தாவாரத்துல கால நீட்டிக்கிட்டு படுத்துகிடுவாரு. அதனால்தான் என்னவோ பசங்க நைட்ல ஆத்திர அவசரத்துக்கு போகும்போது தெரியாம தட்டி விழுறதும் உண்டு. பிள்ளைகள நல்லா வளத்து ஆளாக்குறத தவிர அவருக்கு வேறு என்ன கனவு இருந்திட போகுது. இருந்தாலும் இந்த பாழாப்போன மழை வந்து தொலைய மாட்டேங்குது. ஒரு காலத்துலயெல்லாம் வருஷத்துக்கு ரெண்டு போகம் வெள்ளாம போட்ட ஊரு இது. அதுபோக வெயில் காலங்கள்ல கம்மா தண்ணிய வச்சுக்கிட்டு காய்கறி தோட்டம் போட்டு வித்த ஊரு. இது ஊர் இல்லையா! இது இங்க வாழ்ற மனுஷங்களோட உசுரு. மணியோட தாத்தா காலத்துல வேற எங்கேயோ இருந்து இந்த ஊருக்கு பஞ்சம் பொழைக்க வந்தாங்கன்னு மணிக்கே அவுங்க அப்பா சொல்லித்தான் தெரியும். வந்தாரை வாழவைக்கும் ஊரு இது அப்படின்னு மணியோடு அப்பா அடிக்கடி சொல்லுவாரு. இப்பவும் மணிக்கு அந்த நினைப்பு உண்டு. அப்பேற்பட்ட ஊரு இன்னைக்கு என்னடானா கொஞ்சங்கூட மழை தண்ணிய காணோம். கொஞ்சமாச்சும் மழை பேஞ்சாதானே ஆத்துல தண்ணி வரும். கம்மாகர கொஞ்சமாச்சும் ரொம்பும். இப்படி சதி பண்ணுதே! மழை மட்டுமா சதி பன்னுது? மனுஷங்களுந்தான் சதி பன்றாய்ங்க. வந்தாரை வாழவச்ச ஊருன்னுதான் இல்லனு சொல்லலீங்க. வாழ வந்தவிங்க எவனாச்சும் வாழ்க்கைல முன்னேற வச்சுச்சா? அப்படின்னு பார்த்தா அதுதான் இல்லை. இதுக்கு மண்ணை குறை சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்ல. மனுஷங்களத்தான் சொல்லணும். எங்கேயோ வானம் பார்த்த பூமியில் கடந்த மனுஷங்கள, இங்க பண்ண வேலை பாக்குறதுக்கு கூட்டீட்டு வந்தாய்ங்க. மூனு தலமொற கடந்திருச்சு. இப்பதான் ஏதோ பண்ண வேலை பாக்குற நிலைமை இல்லாம, அன்றாடம் கூலிப் பொழப்பா ஓடுது. அதுக்குக் காரணம் டவுனுக்குள்ள போயி வெளி வேலைகள கத்துக்கிட்டதுதான் காரணம். அப்பன் தாத்தா எல்லாம் டவுன் பக்கம் தல வச்சுக்கூட படுத்ததில்ல. எப்பயாவது ஒரு தடவ ஒரு கவர்மெண்ட் பஸ் வரும். அதுல ஒரு தடவை கூட அவங்க ஏரி போனதில்லை. எங்க போனாலும் நடராசா வண்டிதான். ஏதோ தெரிஞ்சோ தெரியாமலோ, அப்பப்ப படம் பாக்க போற சாக்கில பஸ்ல ஏறி டவுனுக்கு போனதால கொஞ்சம் விவரம் தெரிஞ்சது. அதுக்கு அப்புறந்தானே இந்த பண்ண வேலையை விட்டுப்புட்டு கொஞ்சமாச்சும் கவுரவமாக வாழ முடிஞ்சது.  என்னதான் டவுனுல வேலை பார்த்தாலும் கஷ்டம் ஒன்னும் கொறஞ்சபாடில்ல. கிராமமுனா என்ன? டவுனுனா என்ன? முதலாளி முதலாளிதானே! சுரண்டுரவன் சுரண்டிகிட்டுதான் இருப்பான் ஒழைக்கிறவன் ஒழச்சுகிட்டுதான் இருப்பான்.

டவுனுக்குள்ள வேலைக்கும் போய்க்கிட்டு ஊருக்குள்ள விவசாய வேலையும் செஞ்சுகிட்டு எப்படியோ வாழ்ந்தோம் தொலச்சோமுங்குற சலிப்புடன் முகம் சுளிப்பாரு மணி. இப்படி முகச்சுளிப்பு ஏற்படுற நேரத்தில் எல்லாம் மணிக்கு ஆறுதலா வர்ற ஒரு விஷயம் என்னனா அவருடைய நாலு பசங்கதான். வீட்ல ஒரு பொம்பள பிள்ளை இருந்திருந்தா நல்லா இருந்திருக்குமுனு நெனப்பாரு. அதே நேரத்துல நல்ல வேல பொம்பள பிள்ள பொறந்துதிருந்தா, அதுக்கு பணம் காசு சேர்த்து வைக்கணும். அதுக்கு பசங்களே பரவாயில்லை. அப்படின்னு பெருமூச்சு விடுவாரு. அவரோட பொண்டாட்டிதான் பாவம் வீட்டுல எல்லா வேலையும் செய்யணும். அஞ்சு ஆம்பளைங்க இருக்குற வீட்டுல ஒரு பொம்பள இருந்து வேலை செய்யுறது கஷ்டந்தான், அப்படினு அவருக்கும் தோணும். அதனால சரசு வீட்டு வேலய செய்யும் போதெல்லாம் கூட ஒத்தாசையா இருப்பாரு. அவரால முடிஞ்சவரைக்கும் எதுனாலும் செய்வாரு. பசங்களையும் ஒன்னும் கொற சொல்ல முடியாது. அம்மாவுக்கு உதவி செய்கிறதுனா சலிக்காம செய்வாய்ங்க. ஆனா சரசுக்குத்தான் கொஞ்சம் வாய்துடுக்கு. அவளுக்கு எந்த வேலையா இருந்தாலும் படக்குனு செஞ்சு முடிக்கனும். பூனான் பூனான்னு மெதுவா செஞ்சா பிடிக்காது. அதனால அப்பப்ப பிள்ளைகளுக்கு பேச்சு விழும். அவ்வளவுதான் பசங்களுக்கு சொல்லவா வேணும். திட்டுனதுக்கு அப்புறம் வேணுமுன்னே எதாச்சும் எடக்கு மடக்கா செய்வாய்ங்க.  அதனாலேயே சரசுக்கு அதிகமா கோவம் வரும். கோபம் எதுவானாலும் அவ புருஷன்கிட்டதான் காட்டுவா. நீயெல்லாம் என்ன மனுசனோ? உன்ன மாதிரிதானே நீ பெத்ததுகளும் இருக்குமுனு சண்டைக்கு வந்துருவா. உன்னையெல்லாம் எப்படித்தான் பெத்தாங்களோ அப்படின்னு சகட்டுமேனிக்கு பேச தொவங்கீருவா. ஒரு வழக்கம் புழக்கம் தெரியாமயா இருப்பீங்க அப்பனும் புள்ளைகளுமுனு திட்டித் தீத்துருவா. திட்டுறத பொறுமையா கேட்டுட்டு அவ திட்டி முடிச்சதும், மெதுவாக பக்கத்துல வந்து நின்னு,  உன்ன எப்படி பெத்து வளத்தாய்ங்களோ அப்படித்தான் என்னையும் பெத்து வளத்தாய்ங்கனு சொல்லிப்புட்டு மெதுவா அங்க இருந்து நகந்துருவாரு மணி. இப்பெல்லாம் காலங்காத்தால கோழி கூவி எழுந்திரிக்கிறவிய்ங்களவிட கொசுக்கடி தாங்க முடியாம எழுந்திரிக்குறவிய்ங்கதான் ஜாஸ்தி. கொசுக்கடியினால தூக்கம் வராம எப்பதான் விடியுமோங்குற நெனப்புல, விடிஞ்சாகூட எந்திரிச்சு டீ குடிக்கலாமுனு  நெனச்சுக்கிட்டே கொசுவ விரட்டிட்டிருந்தாரு மணி. கொஞ்ச நேரத்திற்குள்ள சேவ சத்தம்போட, இருட்டுல லேசான வெளிச்சம் பரவ தொடங்கீருச்சு. எந்திரிச்சு உட்காந்திருந்த மணி போர்வையை சுருட்டி சரசுவின் தலைமாட்டில் வச்சுப்புட்டு மெல்ல டீக்கடையை நோக்கி நடக்க ஆரம்புச்சாரு. டீ கடைக்கு போகணும் அவர் வீட்டுல இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து போகணும் தெனமும் காலையில எழுந்து டீ குடிக்க போறதால அது ஒரு தூரமாக அவருக்கு தோனல.  அதிகமா பழகிடுச்சுனா கஷ்டமான வேலை கூட இஷ்டமான வேலையா போய்விடுமோ என்னமோ! வேகமா போகணும் இன்னியாரம் கோடீஸ்வரன் கடையை திறந்துப்பாரு. கூட்டம் வந்து மோதுறதுக்குள்ள போகணும். இவ்வளவு கூட்டம் கூடுதுனா, அப்ப அவரு கோடீஸ்வரனாதான் இருப்பார் என்று நெனச்சா அதான் தப்பு. காலங்காத்தால 5 மணீலருந்து 7 மணிக்குள்ளதான் அவ்வளவும். அதுக்கப்பறம் டீக்கடையில ஈ ஓட்டக்கூட ஆளு இருக்காது. சிட்டுக்குருவி கூட்ட விட்டு எற தேட போற மாதிரி, அதுஅது சோத்துக்கள கட்டிக்கிட்டு வேலைக்குத் தேவையான சாமாய்ங்கள எடுத்துக்கிட்டு டவுன் பஸ்ல ஏறி பறந்து போயிரும். அப்புறம் ராத்திரிலதான் வீட்டுப்பக்கமே வருவாங்க.

 

ஊருக்குள்ள வெவசாய வேல செய்யறதுக்கு இப்பெல்லாம் ஆளுங்க கெடைக்குறது ரொம்ப கஷ்டம். பேருக்குத்தான் கிராமம், ஆனா அவஅவனுக்கு சிங்கப்பூர், மலேசியாவுல வாழ்கிறதா நெனைப்பு. கால்ல ரெக்கய கட்டிகிட்டு பறக்குற மாதிரிதான் திரியுதுக. ஊரு  ஒன்னும் பெருசா மாறல. கடந்த ஐம்பது வருஷத்துல நாலஞ்சு கார வீடு, கொஞ்சம் கரண்டு, சிமெண்டு ரோடு, பள்ளிக்கூடத்துக்கு புதுசா ஒரு கட்டடம், அப்புறம் ஒரே ஒரு வாட்டர் டேங்க் அவளவுதான். ஆனா மனுஷங்கதான் ரொம்ப மாறி போயிட்டாய்ங்க காலேஜுக்கு போறாய்ங்களா இல்ல கட்டட வேலைக்கு போறாய்ங்களானு வித்தியாசமே தெரியாது. சில நேரத்துல காலேஜ்க்கு போறவய்ங்ககூட அந்த அளவுக்கு மேக்கப் போட்டுப் போக மாட்டாய்ங்கனு தோணும். வயசுப் பசங்க படிப்பு பாதீலேயே நின்னு போச்சுங்கிற எந்த நெனப்பும் இல்லாம சித்தன் போக்கு சிவன் போக்குங்கிற மாதிரி அவனவன் தனிக்காட்டு ராஜா தான். வாரம் பூரா ஒழைக்கிறது. வாரத்துல ஞாயத்துகெழம ஒரு நாள் லீவு. சனிக்கெழமை சாயங்காலம் வேலை முடிஞ்சதும் எவ்வளவு சம்பளம் கெடச்சாலும் ஞாயித்துக்கெழம அந்த சம்பளத்துக்கு நாந்தான் முதலாளிங்கிற நினைப்பு கூடிகிட்டுப் போயிரும். வாரத்தில் ஆறு நாள் வேலக்காரனா இருந்துட்டோம் ஒரு நாளாச்சும் முதலாளியா இருப்போங்குற நினைப்புல கூத்தும் கும்மாளமுந்தான்.  என்னத்த பெருசா கூத்தடிச்சுற போறாய்ங்க. பஸ்ல போம்போது அவன்அவன் தனக்குனு ஒரு பொன்ன தேவதையா நெனச்சு வச்சிருப்பான். அந்தப் புள்ள போட்டுக்கிட்டு வர்ற டிரஸோட கலர வச்சுக்கிட்டு அதுக்கு ஏத்தாப்புல, டிரஸ் எடுப்பாய்ங்க. அப்பறம் ஆளுக்கு ஒரு ஹீரோவ தலைவரா வச்சுக்கிட்டு, அவரு படம் வந்தவொடனேயே படத்துக்குப் போவாய்ங்க. ஞாயத்துக்கிழம அன்னெக்குமட்டும் ஒரு நாள் புல்லா, சரக்குல தான் இருப்பாய்ங்க. அப்பனா அன்னெய்க்கு மட்டுந்தான் சரக்கா? அப்படின்னு கேட்டா அதான் தப்பு. அன்னெய்க்கு ஒரு நாள் மட்டும் ராப்பகலா போதை ஏறும். மத்த நாளெல்லாம் ராத்திரி மட்டும் போதை ஏறும்.