”ஐயா வணக்கம். என்னோட பேரு நம்பி. ஒங்க வீடு வாடகைக்கு விடுறதா போர்டு போட்டிருந்துச்சு. அதான் சரி பாத்துட்டுப் போகலாமேனு வந்தேன். இது என்னோட மனைவி கொற்றவை.” னு சொல்லீட்டு அவனப் போலவே ஒல்லியா அவன விட கொஞ்சம் செவப்பா இருந்த ஒரு வயசான தாத்தாவ பார்த்தான் நம்பி. அவனப் பார்த்த அந்த வயசானவர். அவங்கள வீட்டுக்குள்ள கூப்பிடாம வாசப்படியிலயே நிக்க வச்சுகிட்டு அவருடைய விசாரனய தொடங்குனாரு. “சரிப்பா நல்லது. அப்பறம் என்ன வேல பாக்குறீங்க? நம்மளுக்கு எந்த பக்கம்? னு விசாரிக்க ஆரம்பிச்சுட்டாரு. அதுக்கு அவனும் ”ஐயா, நானு வாத்தியாரு வேல பாக்குறேங்க. இங்கதான் டவுனுக்குள்ளதாங்க. எனக்கு இங்கயிருந்து போறதுக்கு தோதா இருக்குறதுனால இந்தப்பக்கம் ஏதாச்சும் வீடு வாடகைக்கு கெடைக்குமானு தேடி வந்தேங்க. அப்பத்தான் உங்க வீட்டுல போர்டு இருந்ததப் பார்த்தேங்க. சரி என்ன ஏதுனு விசாரிச்சுட்டுப் போகலாமுனு வந்தேங்க. நானு ஒன்னும் வெள்ளக்காரன் மாதிரி வெளியூருக்காரன் இல்லீங்க. எனக்கு இங்கயிருந்து ஒரு அன்சு கிலோமீட்டரு தூரந்தான் சொந்த ஊரு. நான் கலியாணம் பன்னியிருக்குறது இங்கதாங்க. மாமனார் வீடு இங்கயிருந்து நடந்து போற தூரந்தாங்க. எனக்கு ஒரு கைக்குழந்த இருக்குதுங்க” னு அவனப் பத்தி சொல்லிக்கிட்டிருந்தான்.
“ஓஹோ அப்படியா சங்கதி. உன் பொண்டாட்டிக்குத்
தோதாவும் இருக்கனும் உனக்கும் வேலைக்குப் போறதுக்கு ஏதுவா இருக்கனுமுனு பாக்குற. நல்லது,
தப்பு ஒன்னுமில்ல. ஆமாம், அப்பத்தானே நீ வேலைக்கு
இதுக போயிட்டேனா போரடிக்குறப்ப உன் பொண்டாட்டி அவங்க வீட்டுக்கு அடிக்கடி போயிட்டு
வந்துக்குருவா. கைகுழந்த வேற இருக்குங்குற. பையனா? பொட்டப்பிள்ளையா?” னு கேட்க ஆரம்பிச்சாரு
பெரியவர். ஐயா பையந்தாங்க. பொன்னா இருந்தா நல்லா இருந்துருக்குமேனுதான் பார்த்தேன்.
இதெல்லாம் நம்ம கையிலயாங்க இருக்கு. கெடச்சத சந்தோசமா வச்சுக்குற வேண்டியதுதான். இதுல
என்னங்க இருக்கு. யாரா இருந்தாலும் நமக்குக் கொழந்ததாங்க.” என்றான். அட என்னப்பா நீ
சொல்லுற சிங்கக் குட்டியாட்டம் ஆம்பளப் பிள்ளைனு சொல்லி காலர தூக்கி விடுவியா? அத விட்டுப்புட்டு
ஏதோ சலிச்சுக்கிறியே! எனக்கு வயசு 80 ஆச்சு. ஒரே ஒரு பொம்பளப் புள்ளதான். என்ன புரயோஜனம்?
நல்லா அமெரிக்க மாப்பிள்ளைய கட்டிகிட்டு அங்க போயி செட்டிலாயிட்டா. நானும் இவளும் யாருமில்லாத
அனாதையா இங்க கெடக்குறம். நாளைக்குச் செத்துகித்துப் போயிட்டாகூட அவ அமெரிக்காவுல இருந்து
வந்து தூக்கிப் போடுறாளோ இல்ல யாருக்கிட்டயாச்சும் சொல்லி இந்த பொணத்த தூக்கி பொதச்சுருங்கனு
டாலருல பணம் அனுப்புறாளோ தெரியல.” னு வயசான காலத்துல அவரோட நெலமயா சொல்லி வருத்தப்பட்டாரு.
நம்பிக்கு ஒரே வருத்தமா போச்சு. அட என்னங்கயா
இப்படிச் சொல்லீட்டிங்க. நாங்கல்லாம் இருக்கும் போது உங்க வாயில இருந்து இப்படி வரலாமா?
உங்களுக்கு ஒன்னுனா நாங்க வந்து நிக்கமாட்டமா? னு நம்பி சொன்னவுடனேயே. அந்தப் பெரியவரு
அழுகவே ஆரம்பிச்சுட்டாரு. அவரு அழுகுறதக் கேட்டு, வீட்டுக்குள்ள இருந்து வயசான அம்மா
ஒருத்தவுங்க வந்தாங்க. “தப்பா எடுத்துக்காதீங்க தம்பி! எங்களுக்கு ஒரு பொன்னு மட்டுமில்லப்பா.
ஒரு பையனும் இருந்தான். ஆனா அன்சு வயசா இருக்கும் போது அவன் இறந்துட்டான். அதுக்கப்பறம்
எங்களுக்கு குழந்த பாக்கியம் இல்ல. ஒரு பொம்பளப்புள்ளய பையனா நெனச்சு வளத்தோம். இப்ப
அதுவும் பாக்க முடியாத தூரத்துல இருக்கு. எங்களுக்கு பூர்வீகச் சொத்து ஏக்கருக் கணக்குல,
எங்க சொந்த ஊருல கெடக்கு. இங்கயே அன்சு குடும்பம் தங்குறது மாதிரி பெரிய வீடு இருக்கு.
இவருக்கு பென்சன் பணம் நெறயவே வருது. வயசான காலத்துல காசு பணம் இருந்து என்னப்பா பன்றது?
மனுச மக்கனு ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா வாழாம வாழ்ந்து என்னப்பா புரயோஜனம்? அதாம்பா
நீ இப்படி சொன்னவுடனேயே அவருக்கு அவரோட மயன் யாவகம் வந்துருச்சு. நீ சொன்னதே போதும்யா.
இந்தா சாவி. மேலதான் ரூமு இருக்கு. போங்க, போயி பாருங்க. பாத்துட்டு வாங்க மத்தத அப்பறம்
பேசுவோம்.” னு ரெண்டுபேரையும் அனுப்பிவைத்தாள் அந்த மூதாட்டி. சரிங்கம்மா னு சாவிய
வாங்கிகிட்டு ரூமைப் பாத்துட்டு வந்து “அம்மா ரூமெல்லாம் எங்களுக்குப் பிடிச்சிருக்கு,
வாடக என்னனு சொன்னீங்கனா அடுத்து பேசுறதுக்கு வசதியா இருக்கும்னு கேட்டான் நம்பி.
பெரியவர் வாடக என்னப்பா வாடக பெருசா வந்துரப்போது.
நீ வர்ரேனு சொல்லுப்பா அது போதும். உன்னய பாத்தா என் புள்ளயே திரும்பி வந்தமாதிரி இருக்கு.
அவன் இருந்திருந்தாகூட உன் வயசுதான் இருந்திருக்கும். நாங்களும் அவனுக்கு ஒரு கலியாணத்தப்
பன்னி வச்சு பேரக்குழந்தைய கொஞ்சிக்கிட்டு
இருந்திருப்போம். கடவுளாப் பாத்து உண்ண அனுப்பி வச்சிருக்குறாரு.” னு சொன்னாரு பெரியவரு.
”மாசம் 4000 ரூபா வாடக, பத்துமாச வாடக அட்வான்ஸ் அவ்வளவுதான். வேற ஒன்னும் உங்கிட்ட
கேட்க மாட்டோம். கரண்டு பில்லுக்கு தனி மீட்டர் இருக்கு. மாசம் மாசம் தண்ணிக்கு மட்டும்
தனியா 100 ரூவா கொடுத்துரனும். அப்பறம் செப்டிங்க் டேங்க் சுத்தம் பன்றப்ப கொஞ்சம்
பணம் கொடுக்குற மாதிரி இருக்கும்.”னு விவரத்த சொல்லிமுடிச்சாரு. நம்பிக்கு வேர்க்க
ஆரம்பிச்சிருச்சு. ஏன்னா அவனோட சம்பளத்துக்கு இது கொஞ்சம் அதிகம். வாத்தியாருனா லட்சக்
கணக்குல சம்பாதிப்பாங்கனு பெரியவரு கணக்குப் போட்டுட்டாரு போலயிருக்கு. இருந்தாலும்
பரவாயில்ல ஒருவார்த்த கொறைக்கச் சொல்லிக் கேட்டுப் பார்ப்போம். னு மெதுவாக ஐயானு இழுத்தான்.
என்னப்பா சரிதானே. இதவிட இங்க கம்மியா வீடு கிடைக்காதுப்பா. இதுவே நாளைக்கு நீ வந்திருந்தேனா
இந்த வீடு இருந்திருகாது. ஏற்கனவே ரெண்டு குடும்பம் உன்னமாதிரி வந்து பாத்துட்டுப்
போயிருக்காங்க. யாருக்கும் கொடுத்துராதீங்க நாங்க கண்டிப்பா வந்துருவோமுனு சொல்லியிருக்காங்க.
இப்ப நீ வந்திருக்க. நான்தான் உனக்குக் கொடுக்கனுமுனு முடிவு எடுத்துட்டேன். அவங்ககிட்ட
சொல்லிக்கிறலாம். நீ இப்பவே பணத்தக் கட்டீட்டு நாளைக்கே வந்து பால காச்சீரு. என்ன சொல்ற?
எனக்கு யாரையும் அவளவு சீக்கிறம் மனசுக்குப் பிடிக்காது. அது என்னமோ தெரியல உன்னப்
பார்த்தவுடனேயே எனக்குப் பிடிச்சிருச்சு. நீ என்ன சொல்லுற” னு கேட்டார் பெரியவர்.
”ஐயா வாடக மட்டும் கொஞ்சம் கொரச்சுக்கிட்டீங்கனா
நல்லா இருக்குமுனு தோனுது. நான் வாங்குற சம்பளத்துக்கு இது கொஞ்சம் அதிகம்.”னு இழுத்தான்
நம்பி. அட என்னப்பா இப்படி சொல்லிப்புட்ட. உனக்குக் கொரச்சா, இங்க ஏற்கனவே மூனு குடும்பம்
இதே வாடகைக்குத்தான் இருக்காங்க. அவங்க என்னப்பா நெனப்பாங்க. வாத்தியாரு இப்படி கஞ்சத்தனமா
இருக்கலாமா? அதெல்லாம் முடியும். நம்பிக்கையோட போ. உடனே வேணாம். சாயங்காலமா காசக் கொண்டுக்கிட்டு
வந்தா போதும். நான் வீட்ட வாடகைக்கு விட்டுட்டேனு, மத்தவங்ககிட்ட நான் சொல்லீருரேன்.
நீ கவலப்படாத உனக்குத்தான் இந்த வீடு. சாயங்காலம் வரும்போது என்னோட சிங்கக்குட்டி பேரப்புள்ளைய
தூக்கிகிட்டு வா. அவனப் பாக்கனும் போல ஆச வந்துருச்சு. இங்க இருந்தேனா, நீ வேலைக்குப்
போயிட்டேனாகூட, ஒன்னோட பொண்டாட்டிக்கு ஒத்தாசையா பேரன நாங்க பாத்துக்குருவோமுல. எங்களுக்கும்
ஒரு ஆருதலா இருக்கும். உனக்கும் ஒரு ஆதரவா இருக்குமுல. அப்பறம் என்ன யோசிக்குற. நீ
கண்டிப்பா வர்ர. சரியா? நான் உன் அப்பாவா சொல்றேன். அப்பா சொல்றத கேப்பியா மாட்டியா?
ஏம்மா பேசாம சும்மாவே நிக்குறியே. ஒன் புருசன்கிட்ட சொல்லுமா. இவ்வளவு அப்புறானியா
இருக்கியேமா. நல்லது கெட்டதுனா வீட்டுல பெரியவங்க வேணாமா?னு பெரியவர் கேட்டதும் கொற்றவை
“எனக்கும் இங்க தங்குறதுதான் சரினு தோனுதுங்க, காச பாக்காம இங்கயே இருப்போங்கனு சொன்னாள்.
நம்பியும் சம்மதம் தெரிவித்தான்.
உடனே பெரியவர் மகிழ்ச்சியடைந்தார். “அப்பறம்
ஒரு முக்கியமான விசயம், நாங்க கொஞ்சம் ஆச்சாரமான குடும்பம். எந்தப் பண்டிகையினாலும்
எங்களுக்குப் பலகாரம் வந்துரனும் சொல்லிப்புட்டேன். ஆமா. எனக்குக் கெட்டக் கோவம் வரும்.
நாங்க கண்ட கண்ட சாதிக் காரப் பயலுகலயெல்லாம்
வீட்டுக்குள்ள சேத்துக்கிறதில்ல. ஏன் சொல்றேனா? அது அதுக்குக் கொடுக்க வேண்டியத கடவுளா
பாத்துத்தானே கொடுக்குறான். என்ன? நான் சொல்றது. இப்ப நீங்க வாத்தியாரு. எல்லா சாதிக்காரனும்
வாத்தியாரா ஆயிரமுடியுமா என்ன? பகவானுக்குத் தெரியாதா? அமாம், நம்பி நீ பக்கத்துக்
கிராமமுனு சொன்னியே அது எங்க இருக்கு?”னு கேட்டார். அவருடைய நோக்கம் நம்பிக்குப் புரிந்துவிட்டது
எண்ணி. “ஐயா அந்தா தெரியுது பாருங்க ஒரு மல. அதுக்குப் பக்கத்துல ஒரு கிராமமுங்க.”னு
சொன்னான்.
“அப்படியா நானும் பல சோலியா அந்தப் பக்கம்
போயிருக்கேன். அங்க மேல இருக்குறதுல நம்ம ஆளுகதானப்பா. அங்க கீழ இருக்குற ஊருக்காரய்ங்களுக்கும்
நமக்கும் அடிக்கடி சண்ட வருமுனு என்கூட வேல பாத்தவரு சொல்லுவாரு. அவரும் நம்மாளுதான்.
அந்த ஊருல இருந்து இங்க வந்து வேல பாத்தவரு. அந்த வீனாப் போனவிங்கதான் எதுக்கெடுத்தாலும்
உரிமை உரிமையினு கத்திக்கிட்டே இருப்பாய்ங்க. அதனாலேயே நம்மாளுகளுக்கும் அவிங்களுக்கும்
ஆகாது. அமாம், நமக்கு எந்த ஊரு மேலயா? கீழயா? நான் ஏன் கேட்கிறேனா? அந்த ஊருக் காரய்ங்ககூட
சாவகாசம் வச்சுக்கிட்டா, நம்மாளுக நாலுபேறு நம்மள தப்பா பேசிப்புடக் கூடாது பாரு. காலம்போன
காலத்துல இந்த அசிங்கம் நமக்குத் தேவையா? அது அது அப்படித்தான் இருக்கனுமுனு ஒரு மொற
இருக்குல. படிச்ச ஒனக்கு நான் சொல்லித்தான் தெரியனுமா என்ன? என்ன நான் சொல்றது? உன்
மொகத்துலயே நம்ம ஆளுகளுக்கான கல இருக்குதப்பா. நீ ஒன்னும் கவலப்படாத. அப்பா நான் இருக்கேன்.
காச எடுத்துக்கிட்டு சாயங்காலம் வா. முடியலேனா காலேலகூட வா. நேரா வந்து பால காச்சிப்புட்டு
அப்பறம்கூட பணத்தக் குடு. அப்பறம் கொஞ்ச நேரத்துலயே சாமான் சட்டுகள கொண்டாந்து எறக்கு.”னு
பெரியவர் சொன்னதும் அவரப்பத்தி தெரிஞ்சுக்கிட்ட நம்பிக்கு என்ன சொல்றதுனு புரியல.
இந்த மண்ணுக்குப் பூர்வீகக் குடியினு வரலாறு
பேசுது, ஆனா இந்த மண்ணுல வாடகைக்குக் குடியிருக்கக்கூட தகுதியில்லாத நெலைக்குப் போயிட்டோம்.
பார்த்தவுடனேயே உறவு கொண்டாட முடிஞ்சாலும் சேர்ந்து வாழ முடியாதபடிதான் இந்த சமூகம்
இருக்குங்குறது இன்னும் பூர்வீகப் புதிராத்தான் இருக்கு. பெரியவரு ஏன் கேக்கிறாருனு
தெரிஞ்சிக்கிட்டு என்னத்த சொல்றது? ஊரு பேர எப்படிச் சொல்றது? பாப்போம் அடுத்து வர்ற
வீடாச்சும் நல்லபடியா இருக்குமானு, நெனச்சுக்கிட்டு தலையசைத்தபடியே அந்த இடத்தை விட்டு
மனைவியையும் கூட்டிக்கிட்டு கிளம்பீட்டான் நம்பி.