வெள்ளி, ஜூன் 04, 2021

காப்பியத்தில் புதின உத்திகள் - ஆய்வுச் சுருக்கம்

 

Title of Thesis: Novel Techniques in Epic Poems

காப்பியத்தில் புதின உத்திகள்

அறிமுகம் (Introduction)

                        கதை கூறும் மரபானது தமிழரின் பண்பாடுகளில் ஒன்றாக காலந்தோறும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றது. கதை கூறுவதின் வாயிலாகத்தான் தமிழரின் வாழ்க்கைமுறை ஒரு காலத்திலிருந்து அடுத்த காலத்திற்கு நகர்த்தப்பட்டு வருகின்றது எனலாம். இப்பணியை இலக்கியம் காலந்தோறும் செவ்வனே செய்து வருகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இலக்கியங்களின் வடிவங்கள் மாறிக்கொண்டே வந்தாலும் அவை கூறுகின்ற கருத்துக்கள் கதைகளாக இன்றளவும் தொடர்ந்து நம்மிடையே பயணிக்கின்றன.

            சங்க இலக்கியப் பாடல்கள் ஒவ்வொன்றும் கதை சொல்லும் தன்மையினைப் பெற்று விளங்குகின்றன. அவற்றில் குறிப்பாக அகநானூறு, கலித்தொகை போன்றவற்றில் உள்ள பாடல்கள் சிறுகதைக்குரிய தன்மையினைப் பெற்று விளங்குகின்றன. மேலும் ஆற்றுப்படை நூல்கள் யாவும் குறும்புதினங்களைப் போன்று கதைத் தன்மையினைப் பெற்றுள்ளன. அதனைத் தொடர்ந்து நீண்ட நெடிய கதை கூறும் மரபு வளர்த்தெடுக்கப்பட்ட நிலையில் காப்பியங்கள் தோற்றம் பெற்றன. காலமாற்றத்தின் காரணமாக காப்பிய இலக்கியப் படைப்பாக்கத்தில் மிகநீண்ட கதை கூறும் மரபு உருப்பெற்று அதன் தொடர்ச்சியல் இன்றைய காலம்வரை வளர்ந்து புதின இலக்கிய வடிவத்தின் தன்மையைக்கொண்டு விளங்குகிறது எனலாம்.

              கதை கூறும் முறையில் காப்பியமும் புதினமும் பலநிலைகளில் ஒத்த தன்மை உடையவனாக விளங்குகின்றன. மக்களின் வாழ்க்கை முறையில் மொழி தன் நிலையினை மாற்றிக்கொள்கின்ற பொழுது இலக்கியமும் தனக்கான மொழிவடிவத்தினை ஏற்று மாறி வந்திருக்கின்றது. அதனைத் தொடர்ந்து கதை கூறும் முறைகளில் இன்றைய இலக்கிய வடிவமாக புதினம் விளங்குகின்றது.

            தற்காலத்திய புதின ஆராய்ச்சியாளர்கள் புதினப் படைப்பாக்கம் குறித்த ஆராய்ச்சியின் விளைவாக உத்திமுறைகளை வகைப்படுத்தியுள்ளனர். காப்பியமும் புதினமும் கதை கூறும் தன்மையில் ஒத்த தன்மையைக் கொண்டிருக்கின்றன. அதனடிப்படையில் புதின உத்திகள் காப்பியத்திற்கும் பொருந்தக் கூடியன என்பதை மனதிற்கொண்டு இவ்வாயு மேற்கொள்ளப்படுகின்றது.

இரட்டைக் காப்பியங்கள் (Double Epic Poems)

          தமிழில் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படும் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் வேறுவேறு சமயப் (சமணம், பௌத்தம்) பின்னணியை உடையதாக இருப்பினும் ஒரே கதைப்போக்கினைக் கொண்டிருக்கின்றன.

            சிலப்பதிகாரத்தில் கோவலனும் கண்ணகியும் செல்வம் நிறைந்த வணிகக் குடியைச் சேர்ந்தவர்கள். கோவலன், ஆடல்மங்கை மாதவியுடன் ஏற்பட்ட தவறான நடத்தையின் காரணமாக செல்வங்களையெல்லாம் இழக்கிறான். இழந்த செல்வங்களை மீண்டும் பெருக்குவதற்காக கோவலன் தன் மனைவி கண்ணகியுடன் மதுரைக்குப் புறப்பட்டுச் செல்கிறான்.

            மதுரையில் கண்ணகியின் ஒருகால் சிலம்பை விற்று அதில் கிடைக்கின்ற பணத்தை வைத்து வணிகம் செய்வது என திட்டமிட்டு மதுரை மாநகருக்குள் செல்கிறான். ஆனால் அவன் மீது அரசியின் சிலம்பைத் திருடிவிட்டதாக குற்றம் சுமத்தப்படுகிறது. அதற்காக கோவலனுக்குக் கொலை தண்டனையும் வழங்கப்படுகின்றது. தன் கணவன் இறந்துவிட்டான் என்பதறிந்த கண்ணகி பாண்டிய மன்னனுடன் முறையிட்டு கோவலன் குற்றமற்றவன் என நிரூபிக்கின்றாள். பாண்டியன் தான் செய்த குற்றத்தை உணர்ந்து இறந்துவிடுகிறான். கண்ணகி மதுரையைத் தீயிட்டு அழிக்கிறாள்.

  இதோடு கதை நிறைவுருகிறது. ஆனால் வஞ்சிக் காண்டம் எனும் பகுதியில் மதுரையை எரித்த கண்ணகி மலைநாடு (இன்றைய கேரளம்) சென்று தெய்வமானாள் எனவும் அவளுக்கு சேரன்செங்குட்டுவன் வடநாட்டிலிருந்து கல் கொண்டு வந்து சிலை வடித்தான் என்பது கதையாக்கப்பட்டுள்ளது.

            மணிமேகலையில் கோவலனால் பெண் பிள்ளையைப் பெற்றெடுத்த மாதவி தன்னுடைய மகள் மணிமேகலையைத் தனது குலத் தொழிலிருந்து விடுவிக்க வேண்டும் என துறவறம் மேற்கொள்ளச் செய்கிறாள்.  சோழநாட்டு இளவரசன் (உதயண குமாரன்) மணிமேகலையின் மீது கைக்கிளை (ஒருதலை) காதல் கொள்கிறான். மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மணிபல்லவத் தீவிற்கு அழைத்துச் சென்று முற்பிறவியை உணரச் செய்ததுடன் அக்‌ஷய பாத்திரத்தினை வழங்கி அனைவரின் பசிப்பிணி போக்கும்படிச் செய்கிறது. உதயணனின் தொல்லை தாங்க முடியாமல் காயசண்டிகையின் உருவம் ஏற்கிறாள் மணிமேகலை. காயசண்டிகையின் கணவன் காஞ்சனன் உதயகுமாரனைக் கொன்றுவிட அதற்குக் காரணமான மணிமேகலை கைதுசெய்யப்படுகிறாள். சிறைக் கோட்டத்தை அறக் கோட்டமாக மாற்றிய மணிமேகலை வஞ்சிமாநகர் சென்று கண்ணகியின் அருள் பெற்று அறவணடிகளின் கீழ் முழுமையான புத்த துறவியாக மாறுகிறாள்.

புதின உத்திகள் (Novel Techniques)

            புதினப் படைப்பாக்க முறையை வரையறுப்பதற்காக உருவாக்கப்பட்ட விதிமுறைகளே உத்திகள். அவை உத்திகளை வரையறை செய்பவரைப் பொருத்து பல பிரிவுகளாகப் பகுத்து கூறப்பட்டு வருகின்றன. இருப்பினும் புதினங்களை வரையறை செய்யும் உத்திகளைப் பின்வருமாறு பகுத்துப் பார்க்கலாம்.

1.    பாத்திரப்படைப்பு

2.    கதைப் பின்னணி

3.    கதைக் கரு

4.    எடுத்துரைக்கும் முறை

            மேற்கூறிய இந்நான்கு முறைகளும் புதினப் படைப்பாக்கத்தை விளக்குகின்ற அடிப்படை உத்திமுறைகளாகும். இவற்றினைத் தொடர்ந்து பல துணைப் பிரிவுகளின் வழி புதினப் படைப்பாக்கம் ஆய்விற்கு உட்படுத்தப்படுவது போல காப்பியங்களும் ஆய்விற்குரிய களங்களாக எடுத்துக்கொள்ளப் படுகின்றன.

ஆய்வு நோக்கம் (Aim of the Research)

Ø  இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றைத் தற்காலப் புதின உத்திகளைக் கொண்டு வகைப்படுத்தி ஆய்வு மேற்கொள்ளல். 

Ø  பதின உத்திகளைக் கொண்டு ஆய்வு செய்கையில் ஏற்படுகின்ற சிக்கல்களைக் கண்டறிந்து அதற்கான தீர்வுகளை எடுத்துரைத்தல்.

Ø  சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டு காப்பியங்களையும் புதின வடிவத்தில் உருப்பெறச் செய்தல். 

ஆய்வு வினா (Research Question)

Ø  தற்கால இலக்கிய வடிவமாக விளங்கும் புதினத்திற்கான உத்திமுறைகளைக் காப்பியத்தில் எவ்வாறு பொருத்திப் பார்த்து ஆய்வு செய்வது?

Ø  காப்பியத்தில் புதின உத்திகளைக் கொண்டு ஆய்வு செய்கையில் ஏற்படுகின்ற சிக்கல்களுக்கு எவ்வாறு தீர்வு காண்பது.

Ø  காப்பியத்தை அதன் வடிவத்திலிருந்து மாற்றி புதினமாக எவ்வாறு எழுதுவது?  

கருதுகோள் (Hypothesis)

Ø  காப்பியத்தின் தன்மையும் புதினத்தின் தன்மையும் பெரும்பாலும் ஒத்திருப்பதனால் புதின உத்திகள் காப்பியத்தின் தன்மையை ஆய்வு செய்வதற்கும் பயன்படுத்தலாம். 

Ø  காப்பியத்தைப் புதினமாக மாற்றிப் படைக்கவும் முடியும். 

ஆய்வு எல்லை (Area of Research)

          காப்பியத்தில் புதின உத்திகள் எனும் இவ்வாய்வினை மேற்கொள்வதற்காக இரட்டைக் காப்பியம் என்று அழைக்கப்பெறும் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டு காப்பியங்களும் ஆய்வு எல்லைகளாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

            சிலப்பதிகாரத்தின் நீட்சியாக மணிமேகலையின் கதை தொடர்கிறது. இரண்டும் தனித்தனிக் காப்பியங்களாக அழைக்கப்பட்டாலும் கதை ஒன்றுதான் என்பதைக் கருத்தில் கொண்டு இவ்விரு காப்பியங்களும் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

            ஐம்பெருங் காப்பியங்களில் மீதமுள்ள மூன்று காப்பியங்களில் வளையாபதியும் குண்டலகேசியும் முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை. முழுமையாகக் கிடைக்கப் பெறாத காப்பியத்தில் உத்திகளைக்கொண்டு ஆய்வு மேற்கொள்வது பொருத்தமற்றதாகிறது. மீதமுள்ள சீவக சிந்தாமணி எனும் காப்பியம் முழுமையாகக் கிடைக்கப்பெற்றாலும் தமிழகமல்லாத வடபுலத்தைக் (ஏமாங்கத நாடு) கதைக் களமாகக் கொண்டு விளங்குகின்றது. வடமொழியிலிருந்து தமிழிற்குக் கொண்டுவரப்பட்டது.

            சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தமிழரின் கற்புக் கோட்பட்டை வலியுறுத்தி நிற்கின்ற நிலையில் சீவக சிந்தாமணி மட்டும் தமிழரின் பண்பாட்டைக் கடந்த பலதார மணத்தை ஆதரிக்கின்ற விதமாக கதைப் பின்னணியைக் கொண்டுள்ளது. இத்தகையக் காரணங்களால் சீவக சிந்தாமணியும் ஆய்வு மேற்கொள்வதற்கு எடுத்துக்கொள்ளப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதன்மை ஆதாரங்கள் (Primary Resources)

            இரட்டைக் காப்பியங்களாகக் கூறப்படுகின்ற சிலப்பதிகாரமும் மணிமேகலையும் முதன்மை ஆதார நூற்களாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

துணைமை ஆதாரங்கள் (Secondary Resources)

          சிலப்பதிகாரம், மணிமேகலை குறித்து ஆய்வு செய்யப்பட்ட நூற்கள், கட்டுரைகள், ஆய்வேடுகள், நிகழ்த்தப்பட்ட கருத்தரங்குகள் மற்றும் இணையதளப் பதிவுகள் என பல நிலைகளிலிருந்து துணைமைத் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. மேலும் புதின உத்திகள் தொடர்பான தகவல்கள் அனைத்தும் இவ்வாய்வின் துணைமைத் தரவாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

தற்காலிக இயல் பகுப்புகள் (Tentative Chapter Divisions)

அறிமுகம் (Introduction)

            காப்பியத்தில் புதின உத்திகள் எனும் இவ்வாய்வில் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டு காப்பியங்கள் ஆய்விற்கு உட்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் புதினப் படைப்பாக்கத்திற்கான உத்திமுறைகளின் அடிப்படையில் இயல் பகுப்பு முறைகள் பின்வருமாறு.

1.    பாத்திரப் படைப்பு

2.    கதைப் பின்னணி

3.    கதைக் கரு

4.    காட்சிப்படுத்தல்

5.    புதின உத்தி பொருத்துதலில் சிக்கல்களும் தீர்வுகளும்

இயல் 1: பாத்திரப்படைப்பு (Chapter 1: Characteristics)

          சிலப்பதிகாரத்தில் கண்ணகியும் மணிமேகலையில் மணிமேகலையும் முதன்மைக் கதைமாந்தர்களாக விளங்குகின்றனர். அவர்களைத் தொடர்ந்து கதைப்போக்கிற்கு உறுதுணையாக இருக்கின்ற துணை முதன்மைக் கதைமாந்தர்கள் மேலும் கிளைக்கதைகளில் வருகின்ற துணைமைக் கதைமாந்தர்கள் எனவும் பல உட்பிரிவுகளின் கீழ் காப்பியங்களில் உள்ள கதைமாந்தர்கள் வகைதொகைப்படுத்தி ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

இயல் 2: கதைப் பின்னணி (Chapter 2: Plot)

            சிலப்பதிகாரமானது தமிழ் மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்த பாண்டிய நாடு, சேர நாடு, சோழநாடு எனும் மூன்று பகுதிகளையும் உள்ளடக்கி உள்ளது. புகார் காண்டமும் மதுரைக் காண்டமும் கண்ணகியின் கதையினை விளக்குகின்றன. சோழ நாட்டையும் பாண்டிய நாட்டையும் மட்டுமே கொண்டு கதை விளக்கப்பெற்றுள்ளது. சிலப்பதிகாரத்தைப் படைத்த இளங்கோவடிகள் சேரநாட்டிற்கு உரியவர் என்பதாலும் மூவேந்தர் காப்பியம் என்று குறிப்பிடப்படுவதற்காகவும் வஞ்சிக் காண்டம் பின்நாட்களில் இணைக்கப்பட்டது என்று கூறப்படுவதும் உண்டு.

            மணிமேகலையின் பெரும்பான்மையான கதைப்பகுதி சோழநாட்டைக் கொண்டிருப்பினும் மற்ற பகுதிகள் குறித்த கதைகளும் விவரிக்கப்பட்டுள்ளன. இவ்விரு காப்பியங்களும் தமிழகத்தின் மூன்று பகுதிகளைக் குறித்தும் விளக்குகின்றன. இவ்விரண்டும் பெண்களை முதன்மைக் கதைமாந்தர்களாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

            சிலப்பதிகாரம் வணிகக் குலப் பெண்ணின் கற்பினை எடுத்துரைத்து கற்பினில் சிறந்தவள் கண்ணகி என்பதை எடுத்துரைக்கின்றது. மணிமேகலையில் வேசியர் குலப் பெண்ணான மாதவியின் மகளாக இருந்தாலும் அறவழியில் சென்று துறவரம் மேற்கொண்டு கற்பின் புனிதத் தன்மையைத் தற்காத்துக்கொள்ள முடியும் என்பதை எடுத்துரைக்கின்றது.

இயல் 3: கதைக் கரு (Chapter 3: Theme)

          சிலப்பதிகாரத்தின் மையக் கருவானது பின்வரும் மூன்று செய்திகளாகும் அவை பின்வருமாறு. “ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்”. என்பது கோவலனின் ஊழ்வினைப் பயனால் அவன் இறந்துவிட்ட செய்தியை எடுத்துரைக்கின்றது. “அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்”. என்பது அரசியல் பிழை செய்த பாண்டிய மன்னன் தனது குற்றத்தை உணர்ந்து இறந்து போவதைக் குறிக்கின்றது. “உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்”. என்பது கற்புக்கரசியாக விளங்கிய கண்ணகியை எல்லோரும் வாழ்த்துவர் என்பதை உணர்த்தும் விதமாக கதைக்கரு அமைக்கப்பட்டுள்ளது.

            மணிமேகலையில் முதன்மைக் கருவாக அறம் போற்றப்படுகின்றது. அதிலும் குறிப்பாக பசித்திருப்பவர்களுக்கு உணவளித்தலை முதன்மை அறமாகப் போற்றுகிறது. அதுவே மணிமேகலையின் முதன்மைக் கடமையாகவும் கூறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நிலையாமையும் வலியுறுத்தப்படுகின்றது.

            “அறம் எனப்படுவது யாதென கேடிபின்

            மறவாது இதுகேள் மண்ணுயிர்க்கெல்லாம்

            உண்டியும் உடையும் உறையுள்ளும் அல்லது

            கண்டது இல்.”

என பசிப்பிணி நீக்குவதே முதன்மை அறம் என்பதாக விளக்கப்பட்டுள்ளது. இது கதைகளினூடாக எவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

            “இளைமையும் நில்லா யாக்கையும் நில்லா

            வளவிய வான்பொருள் செல்வமும் நில்லா”.

எனும் நிலையாமைக் கருத்தும் மணிமேகலையில் முதன்மைக் கருவாக அமைக்கப்பட்டுள்ளது.

இயல் 4: எடுத்துரைக்கும் முறை (Chapter 4: Way of Presentation)

          எடுத்துரைக்கும் முறையில் கூற்று முதன்மை பெறுகிறது. கூற்று என்பது நேர்கூற்று என்றும் அயற்கூற்று என்றும் வகைப்படுத்தப்படுகின்றது. இதில் நேர்கூற்று என்பது கதைமாந்தர் பேசுவது போல கதை அமைக்கப்படுவது ஆகும். அயற்கூற்று என்பது மற்றவர்களின் பார்வையில் கதையினைக் கூறுவது. அதாவது ஆசிரியர் கதையைக் கூறும் முறையாக விளக்கப்படுகிறது. மேலும் காட்சி, வர்ணனை, கிளைக்கதை, கூற்று, உரையாடல் என பல நிலைகளில் எடுத்துரைக்கும் முறை விளக்கப்படுகிறது.

இயல் 5:  புதின உத்தி பொருத்துதலில் சிக்கல்களும் தீர்வுகளும்

(Chapter 5: Problems and Solutions in applicable of novel Techniques)

          செய்யுள் நடையில் விளக்கப்பட்டுள்ள காப்பியத்துடன் தற்கால உரைநடை வடிவில் விளக்கப்பட்டுள்ள புதினத்தின் உத்திகளைக் கொண்டு பொருத்திப் பார்க்கின்ற பொழுது எல்லா நிலைகளிலும் அவை முற்றிலுமாகப் பொருந்திப் போவதில்லை. காப்பியங்களுக்கு என்று சில வரைமுறைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டது புதினம். எதைப்பற்றி வேண்டுமானாலும் கதைகூறும் முறை புதினத்திற்கு உண்டு. ஆனால் காப்பியம் இத்தகையப் பண்பை ஏற்பதில்லை. தலைவன் தலைவிக்குரிய உயர்ந்த பண்புகளை காப்பியங்கள் வரையறை செய்கின்றன. ஆனால் புதினத்திற்கு அத்தகைய வரைமுறைகள் எதுவும் வகுக்கப்படவில்லை. ஆகையால் வேறுமைகளும் நிறைந்த காப்பியம் மற்றும் புதினத்தின் படைப்பாக்கத்தில் உத்திகளைப் பொருத்திப் பார்க்கின்ற பொழுது ஏற்படுகின்ற சிக்கல்களும் தீர்வுகளும் இப்பகுதியில் விளக்கப்படுகின்றன.

முடிவுரை (Conclusion)

          மேற்கண்டவாறு புதின உத்திகளைக் கொண்டு காப்பியத்தைப் பகுத்துப் பார்க்கின்ற பொழுது அதற்கான சாதகமான மற்றும் பாதகமான சூழல்கள் உருவாகும் நிலைகள் தோன்றும். அவற்றினை ஆய்விற்குரிய சிக்கல்களாக எடுத்துக் கொண்டு அவைகளுக்குத் தீர்வுகளை விளக்குகின்ற வகையில் எடுக்கப்பட்ட முடிவுகள் யாவும் தொகுக்கப்பெற்று முடிவுரையாக விளக்கப்படுகின்றன.

 

 

 

 

 

 

 

 

 

(B) WHAT IS THE SIGNIFICANCE OF YOUR PROPOSED RESEARCH PROJECT?

 

            பழந்தமிழ் இலக்கித்தின் தாக்கத்தினை தற்காலத்திய இலக்கியத்தினோடு ஒப்பிட்டு ஆய்வதும், உதாரணத்திற்கு புதினங்களில் ஐந்திணைக் கோட்பாடுகள், புதுக்கவிதைகளில் அக உணர்வுகள், தமிழ்ச் சிறுகதைகளில் அறச் சிந்தனைகள் என இதுபோன்ற தலைப்புகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு நேர்மாறாக தற்கால இலக்கியத்தின் கோட்பாடுகளை பழந்தமிழ் இலக்கியத்தினோடு ஒப்பிட்டு அணுகுவதும் வழக்கமாகி வருகின்றது. உதாரணத்திற்கு உளவியல் நோக்கில் சங்க இலக்கியம். பெண்ணிய நோக்கில் சங்க இலக்கியம் என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   

            இவ்வாய்வும் தற்கால இலக்கிய வடிவமான புதின உத்திகளைக் காப்பியத்தில் பொருத்திக் காட்டுவதாக “காப்பியத்தில் புதின உத்திகள்” எனும் தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது. ஆய்வின் முடிவில் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டினையும் தற்கால பேச்சுவழக்கு நடையில் புதினங்களாக உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.