குடி குடியை கெடுக்கும்,
குடிப்பழக்கம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு, குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள்,
அப்படின்னு கவர்மெண்டு வெளம்பரப் படுத்தனுமுனா காசு எங்கயிருந்து வரும்? இந்த மாதிரி
அன்றாடங்காச்சிக குடிச்சு குடிச்சு சாவுறதுனாலதான் முடியுது. குடி குடியை கெடுக்கும், நாட்டை வாழவைக்கும்,
அப்படித்தான் இன்னைக்கு நிலைமை போய்க்கிட்டு இருக்கு. ஒரு பொண்ணு விபச்சாரியா போயிட்டா
மட்டும் சம்பாதிக்கிறதுக்கு ஆயிரம் வழி இருக்கு, உடம்ப வித்து பொழைக்கிறது ஒரு பொழப்பா?னு
கேப்பாங்க. அதுமாதிறி இது எவ்வளவு கேவலமான திட்டம்? நாட்டோட வருமானத்தை கூட்டுவதற்கு
மட்டும் ஒவ்வொரு குடிமகனும் குட்டிச்சாத்தான் கூடும் போல இருக்கு என அவர் நிலைமையை
யோசித்துக்கொண்டே கோடீஸ்வரனின் டீக்கடைக்கு வந்து சேர்ந்தார் மணி. மணி வர்றதுக்கு முன்னமே
அவரது நண்பன் சங்கர் டீ குடித்துக்கொண்டு இருந்தார். கோடி எனக்கு ஒன்னு போடப்பா என்று
கூறிக்கொண்டே, மணி அவரோட நண்பன் பக்கத்துல ஒக்காந்தாரு. என்ன மணி இன்னைக்கு கொஞ்சம்
சீக்கிரமாகவே வந்துட்டது மாதிரி தெரியுது, என்று சங்கர் கேட்டார். அட ஆமாம்பா நைட்டு
பூரா தூக்கம் வரல. கொசுக்கடி வேற, தாங்க முடியல, அப்புறம் எப்படி தூக்கம் வருமுங்குறேன்.
அப்படின்னு சொல்லிட்டு கோடீஸ்வரன் போட்டு டீயை வாங்கி குடிக்கத் துவங்கினார் மணி.
டீயை குடித்துக் கொண்டிருந்த
மணி, கோடியை நோக்கி என்ன கோடி? இன்னைக்கு தண்ணீ கொஞ்சம் தூக்கலாகவே இருக்கு. இப்படியே
போச்சுனா கடைக்கு வர்ற கொஞ்சநஞ்ச பேரும் வரமாட்டாங்க பாத்துக்க. ஏற்கனவே அந்த ராம பையன்
வேற உன் கடைக்குப் போட்டியா டீக்கடை போடப் போறதா சொல்லிகிட்டு திரியிறான். அவன் ஏதோ
கொஞ்ச நாளா சென்னையில ஒரு டீக்கடையில் வேலை செஞ்சானாமே. அப்பனா உன்ன விட அவன் கொஞ்சம்
டீ நல்லா தான் போடுவான் தோணுது. என நக்கலா, பாலில் அதிகம் தண்ணீ கலக்காதனு எச்சரித்தார்
மணி. கோடீஸ்வரனுக்கு சும்மாவே கடை ஆட்டம் கானுது. அதுல இது வேறயா. அந்த ராமப்பையன்
சின்ன வயசுல என் கடையில எச்ச கிளாஸ் கழுவிக்கிட்டு இருந்தவன் தானப்பா, இன்னைக்கு என்னமோ
டவுனுக்கு போயி கொஞ்ச நாளு டீ போட்டுட்டா ரொம்ப பெரிய ஆளாகி விடுவானா, என்று திமிரிக்கொண்டு
ராமனை அசிங்கப்படுத்தி தன்னை உயர்வாக காட்டிக் கொண்டதாக பெருமைப்பட்டுக் கொண்டார் கோடி.
அடியே! நீ இப்படியே தண்ணிய கலந்துக்கிட்டு இரு, இந்த ஜென்மத்தில் இல்ல, எந்த ஜென்மத்திலும்
நீ கோடீஸ்வரனாகிக்கிற மாட்ட. உன் பொழப்பு தெருக்கோடி தாண்டி. என காரசாரமாக பேசலானார்
மணி. நீ என்னப்பா காலங்காத்தால சாபமிட்டுக்கிட்டு இருக்கிற வெள்ளிக்கிழமை அதுவுமா பளிச்சுத்
தொலைக்கப் போவுது. இந்தாப்பா தண்ணி, முதல்ல உன் வாய கழுவு. எங்க அப்பன் கடைசி வரைக்கும்
பிச்சைக்கார பொழப்பு பொலச்சதுனாலதான் என்னை பேரளவாச்சும் கோடீஸ்வரனா இருக்கட்டுமேனு
இந்தப் பெயரை வச்சுட்டுப் போய்ட்டான். நானும் எப்பவாச்சும் கடவுள் கண்ணை திறக்க மாட்டாரா?
என் காட்டுலயும் மழை பெய்யாதானு ஏங்கிகிட்டு கிடக்கிறேன். நீ வேற எடுத்தவுடனே எதையாச்சும்
பேசிக்கிட்டு இருக்கிறனு லேசா இளிச்சுப் பாத்தாரு. கோடீஸ்வரன். கழுதைக்கு கடையை பத்தி பேசினா உடனே கோபத்தை
பாத்தியானு மணி சங்கரிடம் கூறியவாறு டீயையும் குடிச்சு முடிச்சாரு. ஏய் இங்க பாருங்கப்பா
புதுசா எவனாச்சும் கடை தொறக்குறானு பல்ல காட்டிகிட்டு அங்க போயிராதீங்கப்பா. நாமெல்லாம்
இன்னைக்கு நேத்தா பழகிட்டு இருக்கோம். பழக்கம் ரொம்ப முக்கியமப்பா. என்று வாடிக்கையாளர்களை
தக்க வைக்கின்ற முயற்சியில் பேசிக்கிட்டிருந்தாரு கோடி. ஆமா இவன் கடையில டீ குடிக்க
யாரு வந்தா? ஏதோ காலங்காத்தால ஏதாச்சும் சேதி தெரிஞ்சுக்கலாம்னு பேப்பர் பாக்க வர்ரோம்.
அவ்வளவுதான் சும்மா பேப்பர் பார்த்தா நல்லா இருக்காதுனுட்டு கடமைக்கு உன்கிட்ட வேற
குடிச்சு தொலைய வேண்டியிருக்கு. என்று மார்க்ஸ் ஒருபுறம் நக்கலடிக்க துவங்கினார். யோவ்
மார்சு உனக்கு பல்லு போனாலும் இந்த நக்களுக்கு ஒன்னும் கொறச்சல் இல்லை. இளிக்காதீங்க,
வந்தமா படிச்சமானு இருக்கிறத விட்டுட்டு வியாக்கியானம் மட்டும் நல்லா பேசுறியேனு மார்க்சின்
வாயை அடக்க முயன்றார் கோடீஸ்வரன். டேய் நான் எல்லாம் என் வயசுல தெருத்தெருவா கொடி பிடுச்சு,
கோஷம் போட்டதுனாலதான், நீங்க எல்லாம் இன்னைக்கு வாய்கிழிய பேசுறீங்க. காந்தி மட்டுமா
தனியா போராடி இந்தியாவுக்கு விடுதல வாங்கி கொடுத்தாராக்கும். நானும் தாண்டா போராடினேன்.
வெள்ளைக்காரன் கிட்ட அடி வாங்கியிருக்கேன். ஜெயிலுக்குப் போயிருக்கேன். தொண்டைத் தண்ணி
போக கத்தி இருக்கேன். என்ன ஒரு வித்தியாசம் நான் தொண்டனாய் இருந்தேன். அவர் தலைவரா
இருந்தார். இந்த இடம் தான் டா வேற. மத்தபடி நானும் காந்தி தாண்டா. காந்தி மட்டுமா காந்தி.
அவரை போல கோடான கோடி காந்தி இந்திய விடுதலைக்காக போராடி செத்து இருக்காங்க. அவங்க எல்லாம்
போராடாமல் அவன் அவன் வேலையை பாத்துக்கிட்டு இருந்திருந்தா, இந்தியாவுக்கு விடுதலை என்னக்கி
கிடைக்கிறது? காந்திதான் விடுதலை வாங்கித் தந்தாருனு நீங்களும் சொல்லிக்கிட்டு இருக்க
மாட்டீங்க. நீயும் இந்த டீ கடை வச்சு இருக்க முடியாது தெரிஞ்சுக்கோ.
விடுதலைப் போராட்டத்தை
முன்ன பின்ன பார்த்து இருந்தாதானே தெரியும். உங்களுக்கு சுதந்திரம் கிடைத்த பின்னாடி
பிறந்ததால சுதந்திரமா இருக்குமுன்னு நெனச்சுக்கிட்டு இருக்கீங்க. வெள்ளைக்காரன் நம்ம
நாட்டை விட்டு போன அப்பவே சுதந்திரமும் நம்ம நாட்டை விட்டு போயிருச்சுடா. இன்னைக்கு
மட்டும் உள்ள என்னைக்குமேதான். நீ பேரில் மட்டும் தாண்டா கோடீஸ்வரனா இருக்க முடியும்.
உண்மையில் கோடீஸ்வரனா ஆகணும்னா கற்பனையில்கூட நெனச்சுப் பாக்க முடியாதுடா. அந்த அளவுக்கு
நாட்டை கூறு போட்டு வித்துக்கிட்டு இருக்காய்ங்க. இன்னைக்கு இருக்கிற உங்க… என கொந்தளிக்க
துவங்கிவிட்டார் மார்க்ஸ். காந்தியோட தீவிர தொண்டராக இருந்தவர். விடுதலைக்கு பிறகு
காங்கிரஸ் கட்சியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துக் கொண்டு உண்மையான விடுதலை என்கிறது
கம்யூனிசம்தான் அப்படின்னு தெரிஞ்சுகிட்டு
பின்னாடி கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து பல போராட்டங்களில் கலந்து இருக்காரு. வயசு
ஆக ஆக வாழ்க்கையும் ஓடிருச்சு. ஊருக்குள்ள சிமெண்ட் ரோடு வந்ததும், வாட்டர் டேங்க்
வந்ததும், பள்ளிக்கூடத்துக்கு புது கட்டிடம் வந்ததும், அவர் பங்கெடுத்துக் கொண்ட போராட்டத்தினால்தான்
என்கிற நினைப்பு மட்டும் அவருக்கு இன்னும் மனசுக்கு கொஞ்சம் நிம்மதிய தந்துகிட்டு இருக்கு.
என்னதான் கம்யூனிஸ்ட் அப்படின்னு சொல்லி கொடுத்தாலும் நிறைய பேரு மத்த கட்சிய பாக்குற
மாதிரிதான் இந்த கட்சியையும் பணம் சம்பாதிக்குற ஆயுதமா பயன்படுத்துறாங்கங்கிற நெனப்பு
அவருக்கு. அவரால அதை ஏத்துக்க முடியல அங்கொன்றும் இங்கொன்றுமாய் உண்மையா பாடுபட்டு
முன்னேர நினைக்கிறவன், கடைசில ஏமாளியாத்தான் போறான். அதனாலேயே வாழ்க்கை அவருக்கு கற்றுக்கொடுத்த
பாடம் உண்மைக்கு இந்த உலகத்தில இடமில்லை. பொய்யும் புரட்டும் பேசுறவன், போலித்தனமா
நடிக்கிறவன், மக்களை ஏமாத்த மட்டுந்தான் நல்லவர்கள மாதிரி திரியுறாய்ங்கனு தனக்குள்ளாவே
எப்போதும் புழுங்கிக் கொள்வார். மார்க்சுக்கு இருக்கிறதோ ஒரே பையன். அவனுக்கும் இப்ப
கல்யாண வயசு வந்துருச்சு. கொஞ்சம் புத்தி சுவாதீனமில்லாத பையன். அதனாலேயே அவனுக்கு
திருமணம் செய்து வைக்க முடியல. அவனை ஒரு உசுரா நெனச்சு, அவன நடமாட வைக்கிறதுக்கு மார்ச்
அவரோட சொத்தை எல்லாம் இழந்துட்டாரு. மிச்சமிருக்கிறது 50 சென்ட் நிலம்தான். அந்த நிலத்தில்
வேலை செய்யறதுக்கு யாரையும் கூப்பிட மாட்டாரு. தனியாத்தான் வேலை செய்வார். எப்படியாச்சும்
அவர் மகனை தொனைக்கு வச்சிக்கிறுவாரு. தனியாவே விதை விதைப்பதில் இருந்து நாத்து புடிங்கி
நட்டு, களை எடுத்து உரம் போட்டு, தண்ணி பாச்சி கருது களம் கொண்டு வந்து, அடிச்சு நெல்
ஆகி, வீடு கொண்டு போய் சேர்கிற வரைக்கும் மனுஷன் தனியாத்தான் எல்லாம் செய்வார். கூலிக்கு
ஆள் வச்சுக்கமாட்டாரு. இப்ப வயசு ஆகி விட்டதுனால, கருது அறுக்கிறதுக்கு மட்டும் மெஷின்
அறுக்க விடுவாரு. சராசரியா ஏக்கருக்கு 30 மூட்டை கணக்கு வச்சாகூட கருது அருப்பவனே அஞ்சு
மூட்டய புடுங்கிட்டு போயிடுறான். உழுகுறவன் அவன் பங்குக்கு கொஞ்சம் புடுங்கிட்டு போயிடுறான்.
அப்புறம் வெத நெல்லுகாரன், உரக் கடைக்காரன்னு சொல்லிக்கிட்டு ஆளாளுக்கு புடுங்கிட்டு
போயிடுறாய்ங்க. கடைசியில அறுவடை செஞ்சு மூட்டை கட்டி வச்சா நெல்வியாபாரி வந்து அடிமாட்டு
ரேட்டுக்கு கேட்கிறான். இம்புட்டு பேரும் புடுங்கிட்டு போனப்புறம் 50 சென்ட் நிலத்துல
என்ன மயிரா மிஞ்சும்? உழைப்பவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு சொல்லுவாங்க
அது சரியாத்தான் இருக்கு. கடைசியில, உழைச்சவன் உழைப்பு என்னைக்கும் மண்ணோட மண்ணாதான்
போகுது. வருஷந்தோறும் நெல்லு போட்டு நஷ்டப்பட்டதப் பத்தி நினைக்கும் போது ஒக்காளி இனிமே
விவசாயமே செய்யக்கூடாதுனு சொல்லுவாரு. ஆனா அடுத்த வருஷம் ஆத்துல தண்ணி வந்துருச்சுன்னு
சொன்னவுடனே மொத ஆளா வயக்காட்டுல நிப்பாரு. செக்குல சுத்துற மாடு மாதிரி தான் மனுசனோட
நிலைமை. லாபம் கிடைச்சாதான் வேலை செய்கிறதுனு முடிவு எடுத்துட்டா அன்னைக்கே விவசாயம்
அழிஞ்சு போயிடும்.