சனி, டிசம்பர் 17, 2022

நாவலர் சோமசுந்தர பாரதியார்

 

நாவலர் சோமசுந்தர பாரதியார்

 

நாவலர் குறித்து அறிஞர்கள்

தந்தை பெரியார் : (கடிதம்)  “தயவு செய்து தங்களது அபிப்பிராயத்தையும் யோசனையையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.”

பேரறிஞர் அண்ணா: “குகை விட்டுக் கிளம்பிய புலியென போர்க்கோலம் கொண்டு ஊரை நாடி, மக்களைக் கூட்டி உரத்த குரலில், உறங்கிடுவோருக்கும் உணர்ச்சிவரும் வகையில் தமிழின் தன்மையை, அதன் சிறப்பை, அதனை அழிக்க வரும் பகையை அந்தப் பகையை வெல்ல வேண்டிய இன்றியமையாமையை எடுத்துச் சொன்னார். மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்றினார். தமிழ் கற்றதன் கடனைத் தீர்த்தார்.”

சாம்பசிவனார்:

“தாய்ப்பாலை இகழ்ந்துரைப்பார் உலகில் உண்டோ?

தமிழ்ப்பாலை வெறுக்கின்றார் தமிழர் இங்கே!

நாய்ப்பாலை நச்சுகின்றார் நாள்தோறுந்தான்!

நாமெல்லாம் வாய்புதைத்து நிற்கலானோம்!

தாய்நலமே காப்பதற்கு எழுந்தார் அன்று!

தன்மானப் போருக்குத் தலைமை ஏற்றார்!

பாய்புலியாய் வீறுகொண்டு எழுந்த தாலே

பார்புகழ நாவலர் தாம் வாழ்கின்றாரே!

 

1. வாழ்க்கைக் குறிப்பு 1. பிறப்பு, 2. கல்வி, 3. குடும்பம், 4. தொழில், 4. பட்டங்கள்,                                                      5. பொறுப்புகள், 6. சொற்பொழிவுகள், 7. எழுதிய நூல்கள்,                                                      8. சமூக சீர்திருத்தப் பணிகள், 9. மறைவு.

2. இந்தி மொழி எதிர்ப்பு         1. இந்தி எதிர்ப்பு இயக்கம் (1937)

3. திராவிட மறுப்பு       1. திராவிட மறுப்பு

4. ஆரிய மறுப்பும் தமிழ்ப் பற்றும் –1. தமிழும் வடமொழியும், தமிழரும் ஆரியரும்,                                                                        2. தமிழ் இலக்கியம், 3. தமிழர் கடவுள் கொள்கை,                                                  4. அறமும் தருமமும், 5. தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு, 

                      6. திருக்குறள், 7. மணிமேகலை,                                                                                      8. தமிழரும் ஆரியரும், 9. தமிழக எல்லை,                                                                             10. தமிழரின் அவல நிலை.

1. வாழ்க்கைக் குறிப்பு:

பிறப்பு

பிறப்பு -                      27 சூலை 1879 – எட்டயபுரம், திருநல்வேலி.

இயற்பெயர் -            சத்தித்யானந்த சோமசுந்தரன் 

தந்தை –                     சுப்பிரமணிய நாயகர் (எட்டப்ப பிள்ளை)

தாயார் –                    முத்தம்மாள்

நண்பர் –                    சுப்பிரமணிய பாரதி

(மகாகவி பாரதியை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் நாவலர் பாரதி.)

கல்வி

தொடக்க கல்வி –                 எட்டயபுரம்

இடைநிலைக் கல்வி –          சி.எம்.எஸ் கல்லூரி, நெல்லை

கலை இளவர் -          (இளங்கலை - ஆங்கிலம்)  – சென்னை கிருத்துவக் கல்லூரி

சட்ட இளவர் –                      சட்டப்படிப்பு (பி.எல்.) - 1905

கலை முதுவர்                        (முதுகலை) - 1913

குடும்பம்

துணைவியர் –           1) மீனாட்சி, 2) வசுமதி

பிள்ளைகள் -             1. இராசாராம் பாரதி, 2. இலக்குமிரதன் பாரதி,                                                                          3. இலக்குமி பாரதி,

1. மீனாட்சி, 2. லலிதா

தொழில்

வழக்குரைஞர்           -           (1905 - 1920) - தூத்துக்குடி

வழக்கறிஞர்              -           (1920 – 1933) – மதுரை

தமிழ்த்துறைத் தலைவர் -    (1933 – 1938) – அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.

பட்டம், விருது

பாரதி பட்டம் –                     யாழ்ப்பாணப் புலவர்

நாவலர் பட்டம் –                  ஈழ நாட்டுத் தமிழ்ப்புலவர் மன்றம் –ஈழநாட்டில். 1944

கணக்காயர் விருது            மதுரைத் திருவள்ளுவர் கழகம் – 1954

மதிப்புறு முனைவர் பட்டம் (Honorary Doctor) – அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.

பொறுப்புகள்

சொற்பொழிவாளர் -            இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கம்.

செயலர் -                                வ.உ.சி யின் சுதேசிக் கப்பல் கம்பெனி.

செயலர் -                                தமிழ் மாநிலக் காங்கிரஸ் – மதுரை.

தலைவர் -                              தீண்டாமை ஒழிப்பு இயக்கம் – மதுரை.

சொற்பொழிவுகள்

தசரதன் குறையும் கைகேயி நிறையும் – கரந்தைத் தமிழ்ச் சங்கம்

திருவள்ளுவர் – மதுரைத் தமிழ்ச் சங்கம்

துணைத்தலைவர் – முத்தமிழ் மாநாடு – மதுரை, 1942

தலைவர் – தமிழாசிரியர் மாநாடு – சிதம்பரம், 1954

தலைவர் – தமிழகப் புழவர் குழு – பசுமலை, மதுரை. 1958

ஆய்வு நூல்கள்

1.    தசரதன் குறையும் கைகேயி நிறையும் (1926), 2. திருவள்ளுவர் (1929), 3. சேரர் தாயமுறை (1960), 4. சேரர் பேரூர் (1917), 5. தமிழும் தமிழரும், 6. அழகு, 7. பழந்தமிழ் நாடு (1955), 8. நற்றமிழ் (1957)

2.    நாவலர் பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள் (6 தொகுதி)

படைப்பு நூல்கள்

1.    மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி (1947), 2. மாரி வாயில் (1936)

உரை நூல்கள்

1.    தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை (மறைவிற்குப் பிறகு)

அரசியல் நூல்

1.    இந்தி கட்டாய பாடமா?

வாழ்க்கை வரலாற்று நூல்

1.    நான் கண்ட சுப்பிரமணிய பாரதி

சமூக சீர்திருத்தப் பணி

பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் பங்கேற்றல்.

சடங்குகள் நீக்கிய திருமணங்களை நடத்துதல்.

தீண்டாமையை ஒழிக்கப் போராடுதல்.

மதுரை, உசிலங்குளம் - தாழ்த்தப்பட்டோர் தொடக்கப்பள்ளி நிறுவினார். 1933

 

மறைவு

இறப்பு :  14 திசம்பர் 1959 பசுமலை, மதுரை. (வயது 80)

 

2. இந்தி மொழி எதிர்ப்பு         1. இந்தி எதிர்ப்பு இயக்கம்

தலைவர் - இராஜகோபாலசாரியார் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த போது இந்தி எதிர்ப்பு இயக்கம் – சென்னை. 1937இல் ‘தமிழர் கழகம்’ எனும் அமைப்பை நிறுவினார்.

·         இந்தி திணிப்பிற்கு எதிரான கூட்டத்தில் சோமசுந்தர பாரதி பேசியதாவது “இந்தி மொழி இலக்கண இலக்கியச் சிறப்பில்லாத வெறு மொழி, அம்மொழி பயிலுவதால் தமிழ் மொழியும், தமிழர் நாகரிகமும் கெட்டுவிடும். தமிழ்ப் பள்ளிக் கூடங்களில் இந்தியைக் கட்டாயப்ப் பாடமாக்குவதைத் தமிழ் மக்கள் முழு வன்மையோடு கண்டித்து ஒழிக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் உடனே தீவிரமாய்ச் செய்திடல் வேண்டும். அதுவே தமிழர் வீரமுடையவர் என்பதைக் காட்டும். அவ்வெதிர்ப்பினால் ஏதாவது கேடு வருமானால் அதனைப் பெறத் தாம் முன்னணியில் இருப்பேன்.” என்று இரத்தம் துடிதுடிக்கப் பேசினார்.

·         “இனி தமிழ்நாடு தமிழனுக்கேக்கே ஒழிய. தமிழ்நாட்டில் ஒரு நேருக்கோ, போசுக்கோ, காந்திக்கோ அதிகாரம் செலுத்த இடமில்லை, எனவே நீங்கள் அடுத்தத் தேர்தலில் மஞ்சள் பெட்டியை (காங்கிரசு) மறந்து, தமிழ்நாட்டுக்கு உழைக்கும் தமிழர்கட்கே உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டுகிறேன்.” (11.9.1938இல் ஒன்னரை இலட்சம் தமிழர்கள் கூடிய இந்தி எதிர்ப்புப் பொதுக் கூட்டத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியார் பேசியது.)

3. திராவிட மறுப்பு  

·         1942இல் பெரியாரின் திட்டமிட்ட தமிழின அழிப்பாக மாறிப்போன திராவிட நாடு திராவிடர்க்கே எனும் முழக்கம் காதைப் பிளந்து வந்த நிலையில் சி. பா. ஆதித்தனார் ‘தமிழ் இராச்சியக் கட்சி’ யை உருவாக்கினார். அதனை ஏற்று தொடங்கி வைத்தவர் நாவலர் பாரதி ஆவார்.

·         செயலாளர் – மதுரைத் தமிழ்ச் சங்கம் – 1932 – 1933

“தமிழன் தன்னைத் தமிழன் என்று கூறிக் கொள்ளவும் வெட்கப்பட்டுத் திராவிடன், திராவிடன் என்று தோள் குலுக்குவதா? திராவிடன் என்ற பெயர் சங்க நூலிலே ஏது?” (பக்.391) ஒவ்வொரு தமிழனும் சிந்திக்கத் தகுவது. திராவிடன் என்று கூறுவதனால்தான் தமிழனுக்குத் தமிழ் இன உணர்வு அடியோடு அற்றுப் போயிற்றோ என்றுகூட எண்ணத் தோன்றுகின்றது! எனும் கருத்து நம்மை சிந்திக்க வைக்கிறது.

“1950 ஆம் ஆண்டு கோவையில் தி.மு.க சார்பில் நடைபெற்ற முத்தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய நாவலர் பாரதி “இந்நாளில் பலர் திராவிடர், திராவிடர் என்றே சொல்லி வருகிறார்கள். தமிழ், தமிழர் என்று சொல்ல வெட்கப்படுகிறவன் தமிழனாயிருக்க முடியுமா? அவன் இரத்தத்திலே எப்படி தமிழ் இரத்தம் ஓடும்? இனியாவது தமிழ், தமிழர் என்று சொல்லுங்கள். தமிழருக்குத் தமிழரே பகைவர்” என்று பேசினார்.

“1953 இல் தமிழக எல்லைத் தற்காப்பு மாநாட்டில் தலைமை தாங்கி பேசிய போது “நாம் தமிழர், நமது இனம் தமிழினம், நமது நாடு தமிழ் நாடு, தமிழ்நாடுதான் நமது குறிக்கோள்! மொழிவழியாகப் பிரிந்துவிட்ட போது திராவிடம் என்பதில் பொருள் இல்லை. திராவிடம் என்பது தமிழ்ச் சொல்லே அன்று” என்று ஆவேசமாகப் பேசினார்.

4. ஆரிய மறுப்பும் தமிழ்ப் பற்றும்  

தமிழும் வடமொழியும்  

“சென்ற 1500 ஆண்டுகளாக ஊறியேறிய புதிய ஆரியக் களியால் தமிழர், தமிழையும் மறந்து, முன்னோர் பெருமையும் உரனும் துறந்து, பிறர் நகைப்புக்கு ஆளாயினர்!” என்கிறார். (பக். 142)

தமிழரும் ஆரியரும்  

“சாதி பேதம் பிறப்பளவில் வேதியர்க்கு விருப்பமானால் அவரளவில் அதை ஆள உரிமையுண்டு, வேறுபடும் வருண வகையும் வாரிசு உரிமை வேறுபாடும், முன்பு ஆரியருக்கு அவசியமும் அறிவும் தந்த அறமாகலாம். அத்துறையில் இகழ்வார் யாருமில்லை எனில் அவர் வருண, வகுப்பைத் தமிழ் மொழியிற் கூறும் தொல்காப்பியர் சூத்திரத்திற்கும், அனைவருக்கும் ஒத்த பொது அறம் கூறும் வள்ளுவர் குறளுள்ளும் புகுத்தி உரை வகுக்க முயலும் மனப்பான்மை அறவோர்க்கு வெறுப்பை ஊட்டும்.” என்கிறார். தமிழரிடம் சாதிய முறை இல்லை. தொழில் சார்ந்த குடி முறையே இருந்தது. அதில் ஏற்றத் தாழ்வு என்பது இல்லை. ஆரியர்கள்தான் ஏற்றத்தாழ்வு கொண்ட சாதிமுறையை தமிழர்களிடம் புகுத்தினர்.

 தமிழ் இலக்கியம்

          வடமொழியில் இலட்சிய என்பதே தமிழில் இலக்கியம் என வழங்கப்பட்டது என்பதை மறுக்கின்றார். வடமொழியில் இலக்குகளை முன்னரே தீர்மானித்துத் தன்னுடைய கருத்துக்களை நால்வகைப் பொருளிலே மக்களிடம் திணிப்பதை இலக்கியம் என்பர். ஆனால் அது தமிழ் மரபன்று. வடவர் போல ‘பொருள்’ என்றால் நான்கு வகைப்பட்டது மட்டுமே என்று தமிழர் குறுகிய நோக்கில் இலக்கியம் படைக்கவில்லை. பொருள் என்பது அனைத்தையும் குறிக்கக் கூடியது. இலக்கியம் என்பது அனைத்தையும் உணர்த்தக் கூடியது ஆகும். வடமொழி வழக்கிழந்த மொழி எந்த நிலத்திற்கும் உரியது என்று சொல்ல இயலாதது. தமிழ் வழக்கில் உள்ள மொழி. தமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்ற மொழி ஆகும்.

தமிழர் கடவுள் கொள்கை

          தமிழர்கள் ஆரம்பத்தில் உருவமற்ற முன்னோர் வழிபாட்டையே மேற்கொண்டு வந்தனர். ஆரியர்கள் பிரம்மன், விஷ்ணு, உருத்திரன் வழிபாட்டை உருவாக்கி பின்னர் உருத்திரனை தமிழரின் சிவனோடு பொருத்தினர். ஆரியத்தின் உருத்திரன் அழிக்கும் கடவுள். ஆனால் தமிழரின் சிவனோ இயல்பில் காக்கும் தன்மை வாய்ந்தவர் ஆவார்.

அறமும் தருமமும்

          தருமம் என்பது மனுவில் கூறியதை செய்தலும் கூறாதனவற்றை செய்யாது விடுதலும் ஆகும். இது அரசியலாளர்களால் வலியுறுத்தப்படுவது. ஆகையால் தருமம் என்பது பாகுபாடு காட்டுவது, சமத்துவமற்றது. தமிழரின் அறம் என்பது இயற்கையோடு இயைந்தது. மாறாத தன்மையை உடையது. எடுத்துக்காட்டாக நெருப்பு சுடும் என்றால் அது யாராக இருந்தாலும் சுடும். அது எக்காலத்தும் மாறாது. அதுபோல தமிழரின் அறம் பாகுபாடு காட்டாது. அனைவருக்கும் சமமானது. பேத சமயவாத நோய்கள் பிணியாமல் அறவொழுக்கம் பிரிந்தோம்பிக் காக்கப்படல் வேண்டும்.

தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு

          வர்ணாச்சிரமக் கோட்பாடு என்பது ஆரியர்களின் செருகல். தமிழர்களின் வாழ்வியல் முறை திணை அடிப்படையிலானது. அதில் மக்கள் நிலத்தினையும் தொழில் முறையினையும் அடிப்படையாகக் கொண்டு அழைக்கப்படுவர். எடுத்துக்காட்டாக முல்லை நில மக்கள் நிலத்தின் பெயரால் ஆயர்கள் என்றும் தொழிலின் அடிப்படையில் வேட்டுவர்கள் என்றும் அழைக்கப்படுவதைக் காணலாம். ஒவ்வொரு சமூகத்தவரும் பண்டமாற்று முறையில் தங்களுக்குள் நல்லுறவை வளப்படுத்தி வந்தனர்.

            “ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன”                       (பொருள் 28)

இதில் உயர்ந்தோர் என்போர் நால்வகை வர்ணத்தாரில் அந்தணரும் அரசரும் ஆவர் என்கின்றனர் இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும். ஆனால் உயர்ந்தோர் என்போர் அடியோர், வினைவலர், ஏவல் மரபினர் போன்ற நானிலத் தமிழ்க்குடி மேன்மக்களே ஆவர்.

            “மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே”                   (பொருள் 31)

இதற்கு இளம்பூரனர், நால்வர் என்போர் தேவரது முறைமையை நிறுத்துதற்குப் பிரியும் பிரிவு நான்கு வர்ணத்தார் ஆவர் என்றும். நச்சினார்க்கினியர், நால்வர் என்போர் அந்தணர், அரசர் மற்றும் இருவகை வேளாளர்களும் ஆவர் என்றும் கூறுகிறார். ஆனால் நாவலர் கூறுகையில் வேந்தனோடு கூடிய நானிலத் தலைக் குடிமக்கள் ஆவர் என்கிறார்.

திருக்குறள்

திருக்குறளில் பின்பற்றிய தமிழர் நெறி  

“வள்ளுவர், நல்ல தமிழர்; தமிழ் நூல் மரபில் புல நெறி வழக்கின் நலம் நன்கறிந்தவர். அதனால் வடநூல் வழியில் அறமுதல் நாற்பால் வகுத்து நூலியற்றும் கருத்து அவருக்கு இல்லை. அகமும் புறமுமாய் இருவகைப்படும் பொருளை விரித்துத் தமிழ் நூல் செய்தார். அதன் தனிப்பெருமை அறிந்து, அதைப் பின்னோர் நாற்பாற் பொருளும் வடநூல் முறையில் வகுக்கும் வழி நூலாக ஆக்க முயன்றோர் தங்கள் வழிக்கு அமையாத தடைகளை விலக்க இல்லவும் பொல்லவும் பலவாராக விரித்தும் விலக்கியும் திரித்தும் உரைத்தார்கள். (பக்.256,57)

 “திருவள்ளுவர் மயிலையில் பிறந்தவர் அல்லர். மதுரையில் அருந்தமிழ் வேளிர் குடியில் பிறந்தவர். பண்டைப் பாண்டியரிடம் உள்படு கருமத் தலைவராக இருந்தவர். குறளடியால் அறக்கருத்துக்களைப் பாடி உலகுக்களித்தவர். நீதி நூல்களின் தோற்றத்துக்கு அடிப்படை வடமொழி நூல்களே என்றும், வள்ளுவரும் பிரமதேவர் எழுதிய திரிவர்க்கம் எனும் நூலைச் சுருக்கியே முப்பாலாக மொழிந்தார் என்றும்; அதனாற்றான் அவரை நான்முகன் அவதாரம் என்றும் கூறுவதுண்டு என்று மொழிந்த  தமிழறிஞர் மு. இராகவையங்காரின் கருத்தை  முற்றிலும் மறுத்தவர் சோமசுந்தர பாரதியார்.

“ஆரிய தரும சாத்திர மரபு வேறு; தமிழ் அற நூன்மரபு வேறு. இரண்டையும் நன்குணர்ந்த வள்ளுவர் தமிழ் மரபு வழுவாது, பொருளின் பகுதிகளான அகப்புறத்துறை அறங்களை மக்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு வடித்தெடுத்துத் தந்திருக்குக் அரிய தமிழ் நூல் வள்ளுவம். தமிழிற் பெருமையுடைய அனைத்தும், ஆரிய நூல்களினின்று திரட்டடப்பட்டிருப்பதாகக் காட்டி மகிழ்வார் சிலர்க்கு அன்றி, நடுநிலையாளருக்கு வள்ளுவர் குறள் தமிழில் தனி முதல் அற நூலேயாகும். என்றார்.

மணிமேகலையை இயற்றிய சாத்தனார்  

“காவிரிப் பூம்பட்டினம் கடல் கோளால் அழியா முன்னே இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் இயற்றினார். பின்னர் அந்நகர், முந்நீர் விழுங்கி முடிந்த காலத்தில் மணிமேகலைக் கதையை ஒரு சாத்தனார் பாடினார்.” மணிமேகலை கதைபாடிய புலவன் மதுரைக் கூலவாணிகன் சாத்தன், அவன் காவிரிப்பட்டினம் கடலால் கெட்டு அழிந்த பின் இருந்த பாவலன். பிந்திய காலப் பௌத்தக் கொள்கையன். என்கிறார். (பக். 280, 282)

தமிழரும் ஆரியரும்

தமிழக எல்லை  

“முதற் கடல்கோளுக்கு முன்னிருந்த பழந்தமிழ் நாட்டின் தெற்கெல்லை குமரியாறு; அதுவே பிற தென்னாட்டைத் தமிழ்நாட்டிலிருந்து பிரித்த பேரெல்லை; பஃறுளி முதலிய பிறவும் தமிழ் நிலத்திலடங்கிய பகுதியனைத்தும் அழிந்த குமரியாற்றின் வடக்கேயிருந்தனவேயாம்.” என்கிறார். (பக்.207)

தமிழரின் அவல நிலை

“தமிழர்கள் தம்மை மறந்து, தம்மொழி வளர்ச்சியையும் கைவிட்டமையான், தமிழ் உணர்ச்சி நெகிழ்வதாயிற்று! கி.பி. ஐந்தாம் நூற்றாண்டாகிய புராண காலத்துக்கு முன்பு, தனித்தமிழில் இனிமை நலத்தைச் சுவைத்தறிந்த தமிழ் மக்கள், இருசாதிப் பொருள்களைத் தழுவிக் கொண்டு, கூட்டத்தோடு செல்வாரைப் போலக் கலப்பு நூற்பொருள்களைக் கைப்பற்றிச் செந்தமிழின் சிறப்புக்குக் கேடு செய்கின்றனர்.” என்கின்றார்.

“நமது தமிழர்கள் ஏமாந்தால் அதற்கு ஆரியனை மாத்திரம் குறை கூறி என்ன பயன்? தமிழனுக்கல்லவா? உணர்ச்சி வரவேண்டும்? 40 ஆண்டுகள் தமிழுக்காக உழைத்து உழைத்து, இனி என்றாவது தமிழனுக்கு விமோசனம் உண்டா என்று திகைக்கவும் என் உழைப்புக்குத் தோல்வியுற்றதே என்று கருதவுமான நிலைமையில் நான் இன்று இருக்கிறேன்!” என்று வேதனையோடு தெரிவிக்கின்றார்.