ஈனப்பிறவி
மணம்
கமழும் மலர்கள். எத்தனையோ மலர்கள் இங்கே பூத்துக் கிடக்கின்றன. ஒவ்வொன்றுக்கும்
ஒவ்வொரு நிறம்,
வித்தியாசமான
மணம். தாவரமாகப் பிறந்துவிட்டால் மலர்கள் இல்லாமல் எப்படி சாத்தியப்படும்?
புல்,
செடி,
கொடி,
மரம் என அனைத்திற்கும் மலர்கள் உண்டு. மலருக்கு மகரந்தம் உண்டு,
தேன் உண்டு. இனப்பெருக்கம் உண்டு. இத்தகைய மலர்களை ரசிக்காதவர்கள் யாரேனும் உண்டா?
அதற்காகத்தானே இலட்சக்கணக்கான மக்கள் இங்கே வந்து கூடியிருக்கிறார்கள். அத்தனை
மலர்களையும் ஒன்றாகப் பார்க்கும் வாய்ப்பு வேறு எங்குக் கிடைக்கும்?
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மலர் பிடிக்கும் என்பார்கள். என்றாலும்
மற்ற மலர்களை வெறுக்கவா செய்கிறார்கள்? அத்தனைக்கும்
முன்னாள் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு அதைக் காலத்திற்கும் ரசித்துக்
கொண்டல்லவா இருக்கிறார்கள். சொர்க்கம்! சொர்க்கம்! என்று கற்பனையில் எதை எதையோ
சொல்லிக் கொள்கிறார்களே தவிர யார் பார்த்தது, எது
சொர்க்கம் என்று? இப்போதைக்கு இங்கு வந்திருக்கும்
அனைவருக்கும் இந்த மலர்க் கண்காட்சிதான் சொர்க்கம். இத்தனை மலர்களையும் எப்படி
வளர்த்தார்கள்?
என்றைக்கு வந்து பார்த்தாலும் இவை எல்லாம் நம்மைப் பார்த்து சிரித்துக் கொண்டே
இருக்கின்றனவே. குழந்தைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பார்கள். இல்லை,
இல்லை குழந்தைகளின் சிரிப்பில் மலர்களைக் காணலாம் என்றே இங்கு வந்த அனைவருக்கும்
தோன்றும். இரண்டும் சிரிக்கின்ற வரையில் சந்தோஷம்தான். முகம் சுருங்கிப் போனால்
அதைவிட தர்மசங்கடம் வேறொன்றுமில்லை.
இத்தனைப்
பெரிய மாநகரில் ஒவ்வொரு நாளும் இயந்திரங்களாக ஓடுபவர்கள் மத்தியில் என்னையும்
கண்டு மன அமைதி கொள்ளுங்கள் என்றே மலர்கள் மனம் வீசி அழைக்கின்றன. மலர்கள்
இருக்குமிடத்தில் வண்டுகளுக்குக் குறைவில்லை. ஏனோ தெரியவில்லை,
வண்டுகள் தேன் குடிப்பதை புகைப்படம் எடுத்து ரசிப்பதற்கு ஒவ்வொருவரும்
துடிக்கின்றனர். அப்படியான முயற்சியில் வண்டுகளை விரட்டி,
விரட்டி புகைப்படம் எடுக்க முனைகையில்
தேனீக்களின் வசை பாடல்களுக்கு ஆளாவது சகஜம்தானே. தேன் குடிக்க விடாமல்
விரட்டுகின்றவர்களை வண்டுகள் வசைபாடிக் கொண்டு ரீங்காரமிடுகின்றன. அந்த ரீங்கார
ஒலிகளை மட்டும் ரசித்துக் கொண்டு மலர்க்கண்காட்சி என்று வந்துவிட்டு,
ஏதோ காகித அட்டைகளைப் போல காட்சி தருகின்ற மலர்களை சரிவரப் பார்க்கவும் முடியாமல்,
பார்க்கும் திறன் பெற்றாலும் பார்ப்பதற்கான மனமில்லாமலும் மலர்களை ரசிப்பதாக
வெளிக்காட்டிக் கொண்டு பூந்தொட்டிகளை இடித்துத் தள்ளி விடக் கூடாதே என்பதற்காக
அண்ணன் கணபதியின் கைகளைப் பற்றியும் பற்றாமலும் மலர்களைக் கடந்து செல்கிறாள்
காவியா.
இங்கு என்னை ஏன் அழைத்து வந்தான்?
இந்த மலர்களைப் போல் என் வாழ்க்கையும் மலரட்டும் என்பதற்காகவா?
இல்லை இவையெல்லாம் சுதந்திரமாகக் காட்டில் வளர்கின்ற மலர்கள் அல்ல.
சிறைப்படுத்தப்பட்ட மலர்கள். இவைகள் காட்சிக்கு உதவுமே ஒழிய,
இவைகளால் வேறு எவ்விதப் பயனும் இல்லை. அது
போலத்தான் உன் வாழ்க்கையும் என்று புத்திமதி கூறுவதற்காகவா?
என
தனக்குள்ளாகக் குழம்பிக் கொண்டு கணபதியைத் தொடர்ந்து சென்றாள் காவியா.
“இந்த
மலர்க் கண்காட்சியை பார்த்துவிட்டு வெளியேற எவ்வளவு மணி நேரம் ஆகும்?”
எனக் கேட்டாள் காவியா. காவியாவின் குரல் கேட்டு சட்டென திரும்பிய கணபதி என்ன
சொல்கிறாய். நாம் பார்த்தாலும் பார்க்கா விட்டாலும் இன்னும் ஒரு மணி நேரத்திற்குள்
காவலாளி வெளியே விரட்டி விடுவான். அதற்குள் சுற்றிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.”
என்று பதிலுரைத்தான் கணபதி. இதுதான் சரியான நேரம். இந்த நேரத்தில் நம்முடைய மனக்
குமுறல்களை எப்படியாவது அண்ணனிடம் கூறிவிட வேண்டும். என்ன சொல்வானோ என்ற பதற்றம்
காவியாவின் மனதில் குடியேறியது. எப்படிச் சொல்வது?
முதலில் எப்படி ஆரம்பிப்பது என்ற குழப்பத்தில் அவளின் நடையின் வேகம் குறைய
ஆரம்பித்தது. “ஏன் இவ்வளவு மெதுவாக நடக்கிறாய்?”
என்னவாயிற்று உனக்கு? இப்படி நடந்தால் இந்த மலர்களை
எல்லாம் பார்ப்பதற்கு ஒரு நாள் கூட போதாது.” என்று சினந்து கொள்வது போல் பேசினான்
கணபதி. இதுதான் சந்தர்ப்பம், பட்டென
தேங்காய் உடைப்பதைப் போன்று போட்டு உடைத்துவிட வேண்டியதுதான் என நினைத்துக் கொண்டு
தன்னைத் தயார்ப் படுத்திக் கொண்டாள் காவியா. “அண்ணா” என்று மெதுவாக நடுக்கத்துடன்
பயம் கலந்த குரலில் அவனை அழைத்து, அவன்
திரும்பிப் பார்ப்பதற்குள் பதற்றத்துடன், “நான்
ஒருத்தரைக் காதலிக்கிறேன் என்றாள்.” சரியாகக் காதில் விழாதவன் போல தெளிவுபடுத்திக்
கொள்வதற்காக அதட்டும் தொனியில் சத்தமாக “என்ன சொன்னாய்?
என்று கேட்டான். அவனின் சத்தமான குரல் அவளுக்கு,
“நீ சொன்னது எனக்குக் கேட்டு விட்டது. அப்படி
ஒருமுறையேனும் மீண்டும் என் காதில் விழும்படி கூறிவிடாதே அதை என் மனது ஏற்றுக்
கொள்ளாது” என்பது போல இருந்தது. இருந்தாலும் அவன் கேட்டதற்கு பதில் கூறவேண்டுமே
என்பதற்காக குரல் நடுக்கத்துடன் “நான் ஒருத்தரைக் காதலிக்கிறேன்” என்று மீண்டும்
ஒருமுறை சத்தமாகக் கூறினாள்.
இதைக் கேட்டுவிடு இதற்காகவே
காத்திருந்தவன் போல் மெதுவாக காவியாவின் முகம் பார்த்து “ம்... தெரியும்,
கேள்விப்பட்டேன். அதுக்கான நேரம் வரும்பொழுது,
என்றாவது ஒரு நாள் நீயே என்னிடம் வந்து சொல்லித்தான் ஆகவேண்டும் என்பதனால்
அமைதியாக இருந்தேன்.” என்றான்.
அப்படியானால் உனக்கு ஏற்கனவே
இதைப்பற்றித் தெரியுமா? நான்தான்
இத்தனை நாட்களாக ஒன்றும் அறியாத பேதையாக இருந்துவிட்டேனா?
என்பது போன்ற எந்தவித சலனமுமின்றி “உனக்குத் தெரியும் என்று எனக்கும் தெரியும். உனக்குத்
தெரியப்படுத்த விரும்பியவள் நான்தானே, இருந்தாலும் இதற்கான சந்தர்ப்பம் சரிவர அமையாது
போனதால் இதைப்பற்றி உன்னிடம் பேசுவதற்கு நேரமில்லாமலும் போனது. இப்பொழுதுதான்
அதற்கான நேரம் சரியாக அமைந்திருப்பதாகக் கருதுகிறேன்.” என்று மனதில் நினைத்துக்
கொண்டு முகத்தை வியப்பாக வைக்கும் தோரணையில் “என்ன சொல்கிறாய் அண்ணா?
ஏற்கனவே இது பற்றி உனக்குத் தெரியுமா? அப்புறம்
ஏன் இத்தனை நாட்களாக அமைதியாக இருந்தாய்? என்பதாக
கேட்டு அவனது பதிலுக்காகக் காத்திருந்தாள் காவியா.
“சென்ற வாரம் என்
நண்பன் இதைப் பற்றிச் சொன்னான். அவனுக்குத் தெரிந்த பிறகுதான் எனக்குத் தெரியும்
என்று அறிந்த பொழுது எனக்கு கோபம் என்னையும் மீறி வந்தது. அதற்கு அவன் என்ன
செய்வான்?
அவன் சொன்னால் நான் கேட்பேன் என்று நீ நினைத்திருந்தாய். அதனால்தான் உனக்காக
வக்காலத்து வாங்குவதற்கு அன்று அவன் வந்தான். இந்த விஷயத்தில் மற்றவர்கள் சொல்லி
கேட்குமளவிற்கு நான் ஒன்றும் முட்டாளில்லை. இதைப் பற்றியெல்லாம் ஏன் மூன்றாவது மனிதர்களிடத்தில்
தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறாய்?” என்றான்
கணபதி.
“சரி அப்படி அவரிடம் முதலில் கூறியது
தவறு என்றால் என்னை மன்னித்து விடு. அதற்கும் உன் மீதான பயம்தான் காரணம். நீ
எதுவும் மறுப்பு செய்து விடுவாயோ என்று பயம் வந்ததானால் அவ்வாறு செய்து விட்டேன்.
சரி அவர் அப்படி என்ன சொன்னார் உன்னிடம்.” என தன்னுடைய ஆர்வத்தின் மிகுதியால்
அண்ணனின் ஒப்புதல் எளிதாகக் கிடைத்துவிடும் போல இருக்கிறதே என்கிற எதிர்பார்ப்பில்
முக மலர்ச்சியுடன் கேட்டாள்.
“உன் தங்கை ஒருவனைக் காதலிக்கிறாள்.
அவன் சமூகப் பார்வையில் தாழ்த்தப் பட்டவனாகக் கருதப்பட்டாலும் மனதளவில்
உயர்வானவனாகத்தான் தெரிகிறான். படித்தும் இருக்கிறான். உங்கள் அளவிற்கு செல்வச்
செழிப்பு இல்லை என்றாலும் உன் தங்கையை வைத்து காப்பாற்றும் அளவிற்கு
வருமானத்தையும் செல்வத்தையும் உடையவனாகத்தான் இருக்கிறான். சாதி ஒரு விஷயமே இல்லை.
அது ஒரு தடையும் இல்லை என்பது உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும். நாம் என்றுமே
சாதிக்கு எதிரானவர்கள்தான். உன் தங்கை இதைப் பற்றி என்னிடம் கூறிய பொழுது நான்
அவளிடம் வருத்தப் பட்டுக்கொண்டேன். நீ காதலிக்கிறாய் என்றால் முதலில் உன் உடன்பிறப்பான
கணபதியிடம் தானே இதைப் பற்றிச் சொல்லியிருக்க வேண்டும் என்று. நம்மைப் பொறுத்தவரை
இதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது. எத்தனையோ பேர் நம்மிடம் வந்து சாதி பற்றி
விவாதித்த போதிலும் இறுதியாக அவர்கள் நம்மிடம் மொக்கை வாங்கியதுதான் மிச்சம்.
சாதியம் பற்றியும் நிறையப் படித்தும் விவாதித்தும்தான் நாம் வந்திருக்கின்றோம்.
நாம் இருவரும் என்ன ஒரே சாதியினரா? இத்தனை
ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாகத் தானே இருந்து வந்திருக்கிறோம். இதற்கிடையில்
சாதிக்கென்ன வேலை? நாம் இப்படி சிந்தித்தாலும்,
உன் பெற்றோர்கள் அவ்வாறு சிந்திப்பதற்கு வாய்ப்புகள் குறைவுதான். அதனால் நீ மனது
வைத்தால்தான் இது சாத்தியப்படும். உன் பெற்றோரிடம் இதைப் பற்றிப் பேசி சம்மதம்
வங்க வேண்டியது உன் பொறுப்புதான். உன்னுடைய சாமர்த்தியம் எனக்குத் தெரியாதா?
எதைப் பற்றியும் பேசி சமாளிக்கும் திறன் உனக்கு உள்ளது. ஆரம்பத்தில் சற்று முகம்
சுழிக்கத்தான் செய்வார்கள். அதையெல்லாம் சமாளிப்பது உனக்குப் பெரிய விஷயம் இல்லை.
உன் வாதத் திறமையை பல இடங்களில் கண்டு வியந்தவன் நான். கூடிய விரைவில் பெற்றோரின்
சம்மதத்தினைப் பெற்று எனக்குத் தெரியப்படுத்து.” என்று அவன் பேசியதை இங்கு
ஆதங்கத்தோடு நினைவு படுத்திக் கொண்டான் கணபதி.
அண்ணனின் சம்மதம் நமக்குக் கிடைத்துவிடும்
என்கிற மகிழ்ச்சி மொட்டு போல சற்றே அரும்பவே செய்தது. இருப்பினும் அண்ணன் என்ன
பதில் சொல்லியிருப்பான் என்ற ஆவலில் சற்று அமைதியான குரலில் “நீ என்ன சொன்னாய்?
அண்ணா என்று கேட்டாள் காவியா. அவளின் எதிர்பார்ப்பு இன்னும் கூடியது. உலகக் கோப்பை
கிரிக்கெட்டில் இறுதிச் சுற்றில் இந்தியா வெற்றிகொள்ள வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு
இளைஞனின் மனநிலையின் துடிப்பும் ஒன்று பட்டுத் துடித்தால் எப்படியிருக்கும் என்பது
அவளுக்கு இப்போது புரிந்திருக்கும்.
“அவனிடம் நான் எண்ணத்தைச் சொல்ல?
வீட்டில் பெரியவர்கள் சாதிய வரம்புகளை மீற முடியாதவர்கள். பழமையை விரும்புபவர்கள்.
அவர்களைச் சம்மதிக்க வைப்பது சற்று சிரமமான வேலைதான். என்றாலும் நான் அவர்களை
சம்மதிக்க வைத்து விடுவேன் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. ஆகையால் சம்மதத்தைப்
பெற்ற பிறகு மேற்கொண்டு திருமணத்தைப் பற்றி நாம் பேசுவோம் என்று சமாதானம் கூறி
அனுப்பினேன்.” என்றான் கணபதி.
இவன் சொல்வது உண்மைதானா?
இல்லை நம்மிடம் எதுவும் நாடகம் போடுகிறானா?
உண்மையாக இருந்தால் அதைவிட சந்தோஷம் எனக்கு வேறு என்ன இருக்கப் போகிறது. என்கிற
மகிழ்ச்சியில் அண்ணா! அண்ணா! பிளீஸ்ணா எப்படியாவது அம்மாவிடமும் அப்பாவிடமும்
சம்மதம் வாங்கிவிடு அண்ணா. என்று குழந்தை ஐஸ்கிரீம் கேட்டு கெஞ்சுவது போல
கெஞ்சலானாள்.
“நான் சொல்ல வேண்டியது எல்லாம்
ஒன்றுதான். நீ காதலிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு திரிகிறாயே அவனை மட்டுமல்ல.
உனக்காக வக்காலத்து வாங்கி விட்டுச் சென்றானே. அவனை நீ காதலிக்கிறேன் என்று
சொல்லியிருந்தால் கூட இதற்குச் சம்மதம் தெரிவிக்க மாட்டேன். ஏனெனில் அவனும் அந்த
சமூகத்தைச் சேர்ந்தவன் என்பது உனக்கும் நன்றாகவேத் தெரியும். உனக்கு பார்வை
குறைபாடு இருக்கிறது என்பதற்காக நம்முடைய சாதி குறைபாடுடையதாக ஆகிவிடாது.
கண்டவனெல்லாம் காதல் செய்வதற்கு. நமக்கு இருக்கும் சொத்திற்கு உன்னை நம்முடைய
சாதியிலேயே உயர்வான இடத்தில் கட்டிக் கொடுத்து கௌரவிக்க வேண்டும் என்கிற
நினைப்பில் நம்முடைய பெற்றோர்கள் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். தேவையில்லாமல்
மனதைப் போட்டுக் குளப்பிக் கொள்ளாமல் பெற்றவர்களை மதித்து நடக்கக் கற்றுக்கொள்.
என்று தன்னுடைய முடிவைத் தெரிவித்தான் கணபதி. தன்னுடைய முடிவைக் கூறிவிட்ட
கணபதிக்கு உள்ளூர ஒரு நிம்மதி. இப்பொழுதாவது இதைப் பற்றிப் பேசுவதற்கு நேரம்
கிடைத்ததே என்பதற்காக. இத்தனை நாட்களாக மனதில் வைத்துக் கொண்டு வெளிப்படையாக
பேசுவதற்கு நேரம் கிடைக்காமல் இருந்து, தற்போது
ஒரு முடிவுக்கு வந்து விட்டதை எண்ணி மனதில் தெளிவு கொண்டான் கணபதி. தன்னுடைய
சாதிப் பெருமையைக் காப்பாற்றி விட்டதாகவும் தங்கையின் மனதில் படர்ந்திருந்த
முட்புதர்களை அகற்றி விட்டதாகவும் எண்ணிக் கொண்டிருந்தான்.
தன்னுடைய அண்ணனுக்குள் உறங்கிக்
கொண்டிருந்த சாதிய மிருகம் எழுந்து வந்து மிரட்டிச் சென்ற மிரட்சியிலிருந்து மீள
முடியாமல் திகைப்புடன் இருந்தாள் காவியா. அவனை சிறு வயதிலிருந்து பார்த்து
வளர்ந்தவள் அவள். அவனுக்குள்ளும் சாதிய மிருகம் இருக்கும் என்பதை அரிவாள். ஆயினும்
அதை நேரடியாக இப்பொழுதுதான் பார்க்கிறாள். இப்படிப்பட்ட மிருகத்தை நல்லவன் என்று
நம்பும் அவனது நண்பனின் மடத்தனத்தை நினைத்து வருந்திக் கொண்டாள். “உன் அண்ணன்
மிகவும் நல்லவன். அவனைப் போல நண்பன் கிடைப்பதற்கு நான் கொடுத்து வைத்திருக்க
வேண்டும். அவன் இளகிய மனமும் பாரபட்சமில்லாத பண்பும் கொண்டவன். மற்றவர்கள் சாதி வேற்றுமை
பார்க்கிறார்கள் என்றாலே அவர்களிடம் கடிந்து கொள்ளுவான். நான் மனித குலத்தில் எந்த
சாதிக்கும் உரியவன் அல்ல. நான் ஒரு கலைஞன். கலைஞனுக்கே உரிய சாதி எதுவோ!
அதுவே எனது சாதியும் என்று பெருமையோடு கூறிக் கொள்வான். சாதி பார்த்துப் பழகும் குணமுடையவன்
என்றால்,
எப்படி என்னிடம் இத்தனையாண்டுகள் நண்பனாக அவனால் இருந்திருக்க முடியும்?”
என்றெல்லாம் இவனைப் பற்றிப் பெருமையாகப் பேசி,
வெளுத்ததெல்லாம் பால் ஆகிவிடாது என்பது கூட தெரியாமல் இத்தனையாண்டுகள்
பழகியிருக்கிறாரே என்று இப்போது நினைத்தால் கூட சங்கடமாக இருக்கிறது. உலகம் ஒரு
நாடக மேடை அதில் ஒவ்வொருவரும் நடிகர்கள். அதில் இவன் ஒரு மகாநடிகன். அதனாலோ என்னவோ
இவன் நடிப்புக் கலையில் கைதேர்ந்தவனாகிறான். நாடக மேடையில் ஏறி வசனங்கள் பேசி,
பாட்டுக்களைப் பாடி எல்லோரும் வியக்கும்படி நடிப்பது மட்டும்தானா நடிப்பு?
நடைமுறை வாழ்க்கையில் தன்னுடைய உண்மையான முகத்தை மறைத்து போலி வேடமணிந்து
அனைவரையும் நம்பும்படி செய்து நடிப்பைத் தவிர வேறொன்றும் அறியாமல் தனது சுயம்,
தனது குடும்பம்,
தன்னுடைய சாதி இவற்றிற்கு பாதிப்பு வருகிறதென்றால் மட்டும் வேடம் களைத்து,
உண்மை
உருவம் காட்டும் இத்தகைய ச(சா)தித் திட்டம் தீட்டும் எத்தனையோ பேர் நடித்துக்
கொண்டும் நடமாடிக் கொண்டும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதில் இவன் மட்டும்
விதிவிலக்கா என்ன? இவர்களையெல்லாம் நல்லவர்கள் என்று
நட்பு கொண்டாடுபவர்கள்தான் பாவம்.” என அண்ணனைப் போன்றவர்களையும் அவர்களுக்கு
நண்பர்களாக இருப்பவர்களையும் பற்றி மனம் வருந்திக் கொண்டிருந்தாள் காவியா.
சாதியமைப்பு வலுவாக தனது அதிகாரத்தை
நிலை நாட்டிய காலத்தில், இது
எக்காலத்திலும் மாறாது. உலகம் அழியும் வரை இதுவே நிலையானது என்று எண்ணிய மக்கள்
அவ்வாறே நினைத்து வாழ்ந்தும் இறந்தும் போய்விட்டார்கள். சாதியத்தின் இருக்கத்தை
மாற்ற முடியும் என்று சொல்லுவதற்குக்கூட வெளியிலிருந்து யாரோ ஒருவன் வந்துதான்
சொல்லியாக வேண்டியிருக்கிறது. அப்பொழுதெல்லாம் ஒவ்வொருவரும் தன்னுடைய சாதியை
வெளிப்படையாக கூறிக் கொள்வதும், பெயரோடு
சேர்த்து வைத்துக் கொண்டும், பெயரை
விடுத்து சாதியை வைத்து அழைத்துக் கொண்டும் தங்களுக்கு மேலானவர்கள் என்று
கருதப்படுபவர்களைக் கண்டு பணிந்தும்,
தங்களுக்குக் கீழானவர்கள் என்று கருதப்படுபவர்களைக் கண்டு நெஞ்சை நிமிர்த்தியும்
வெளிப்படையாக நடந்து கொண்டிருந்த காலத்தில் இவ்வாறு நடிக்க வேண்டிய அவசியமில்லாமல்
போனது.
பிறந்து விட்டதினாலேயே தங்கம்,
வெள்ளி,
வெண்கலம்... என வரிசையாகப் பதக்கங்கள் வழங்கப்பட்டும்,
முத்திரைகள் குத்தப்பட்டும், யாரைக்
கண்டு பணிய வேண்டும். யாரைக் கண்டு திமிர வேண்டும் என்கிற
பாடங்களெல்லாம் படிக்காத பாமரர்களுக்கும் கற்பிக்கப் பட்டிருந்தது. ஏதோ
இந்தியாவின் சாதி அமைப்பு என்னவென்று அறியாத யாரோ ஒருவன் வந்து,
இதைக் காரித் துப்பும் அளவிற்கு ஈனப்பட்டுப் போயிருந்தது இந்த சமூகம். தங்கம்
வாங்கியதாகச் சொல்லப்படுபவன் போராடுகிறான் என்றாலும் பிதற்றுகிறான் என்கிறது
சமூகம். சரி ஈயம், பித்தளை,
இரும்பு... போன்றவற்றில் எதையாவது ஒன்றை வாங்கியவன் என்று சொல்லப் படுகிறவன்
போராடுகிறான் என்றாலும் தனது கோர முகத்தைக் காட்டி அரற்றுகிறது இந்த சமூகம். சாதிய
விடுதலைக்கான துளிர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தோன்றினாலும் பொருளாதார வறட்சி
அவர்களைப் பின்னுக்குத் தள்ளுகிறது. இதையெல்லாம் தாண்டிய போராட்டத்தின் விளைவாக சாதியத்திற்கு
எதிரான சட்டச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்த பிறகு ஆமை ஒட்டிற்குள் ஒழிந்து கொண்ட
தலையினைப் போன்று சாதியத் தலைகள் செயல்படத் துவங்கி விட்டிருக்கின்றன.
சாதியத்தை நிலைநாட்ட அவ்வப்போது
வெளியே வந்து வாக்குகளைக் கூறிவிட்டு, வெளி
உலகிற்கு வெள்ளந்தியாய் முகம் காட்டும் கடலாமையாய் மாறிப் போயிருக்கிறார்கள்.
நம்பிக்கை என்ற நீரோட்டதிற்கே இடமில்லாமல் போய்விடுகிறது இந்த ஈனப் பிறவிகளால்.
வெட்டி வீழ்த்துவதால் பயனில்லை. வேரோடு பிடுங்கி எரிய வேண்டும். எப்படி இது
சாத்தியமாகப் போகிறது? அடற்புதராய் இருந்தால் கூட
பரவாயில்லை. செல்வம் கொளிக்கும் பயிர்களைப் போலவே வளர்ந்து விட்டிருப்பதால்
பயிரைப் போலவே தோற்றமளிக்கும் இவர்களை கழைவது சிரமமான ஒன்றாகத்தான் இருக்கின்றது.
இதையும் கண்டறிய சமூக அறிவு ஜீவிகள் கண்டிப்பாக தோன்றுவார்கள். களைகளை அகற்ற
பூச்சிக் கொல்லி மருந்திணைக் கண்டறிவார்கள்.
என்னுடைய பார்வைக் குறைபாட்டினால்
இங்குள்ள பூக்கள் உண்மையானதாகவும் பொய்யானதாகவும் மாறி மாறி தோற்றமளிக்கின்றன.
நான் ஏன் வருத்தப்பட வேண்டும். நல்ல கண்களை உடையவர்கள் என்று சொல்லிக்
கொள்கிறவர்கள்கூட சாதிய மனநிலையில் குருடர்களாகத்தான் தங்களை மாற்றிக் கொள்கிறார்கள்.
அந்த வகையில் சாதியின் பழமை பேசும் என் அண்ணனுக்குக் கூட பார்வை குறைபாடு
இருப்பதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. அப்படியாக எனக்கு ‘உள்ளம்
நல்லாயிருந்தால் ஊனம் ஒரு குறையில்லை.’ என்ற
பாடல் வரிகள்தான் ஞாபகம் வருகின்றன.” என்று காவியாவின் மனதில் தோன்றிய சிந்தனைகளின்
ஊடாக கணபதி கூறிய வார்த்தைகளும் மனதில் அங்கும் இங்குமாக முட்டி மோதிக்
கொண்டிருக்கின்றன. .
“நமக்கிருக்கும்
பணத்திற்கு உன்னை நம்ம சாதியில் யார் வேண்டுமானாலும் திருமணம் செய்வார்கள்.” என்ற
அவனது பேச்சு அவளை அவனிடம் தொடர்ந்து பேச வைத்தது. “நான் என்னைத் திருமணம்
செய்துகொள்ள விரும்பும் ஒருவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன்.
ஆனால்
நீயோ உங்கள் பணத்தைத் திருமணம் செய்து கொள்ள விரும்பும் யாரோ ஒருத்தரைப் பற்றிப்
பேசிக் கொண்டிருக்கிறாய். என்றாள் காவியா. “எனக்கு அதெல்லாம் முக்கியம் இல்லை.
நமக்கென்று ஒரு கௌரவம் இருக்கிறது. எதற்காகவும்
அதை விட்டுக் கொடுக்க முடியாது.” என்று நெஞ்சை நிமிர்த்தி,
வாழ்க என் சாதி என்பது போன்று குரல் உயர்த்திப் பேசினான். “எதை வேண்டுமானாலும்
விலைக்கு வாங்கி விடலாம். கௌரவத்தை இழந்துவிட்டால் உயிரை விடுவதைத் தவிர வேறு
வழியில்லை. உனக்காக நாங்கள் உயிரை விட வேண்டுமென்கிற அவசியமுமில்லை. கௌரவம்
ஒன்றும் எளிதாகக் கடையில் வாங்கி வைத்துக் கொள்வதல்ல. காலங்காலமாக முன்னோர்களால் காப்பாற்றப்பட்டு
வருவது. இது போன்ற சல்லித் தனமான தனிநபர் விருப்பத்திற்காக அதனை விட்டுக்
கொடுத்துவிட முடியாது.” என்று தீர்க்கமாக, முகத்தைக்
கடுகடுத்தவாறு கூறினான் கணபதி. “அவரவர்களின் சுதந்திரமான வாழ்க்கைக்குத் தடையாக
இருக்கும் கௌரவம், எப்படி ஒரு சாதிக்குக் கௌருவம்
ஆகும்? காதலைப் பிரிப்பதற்கு உன் கௌரவம்
பிறந்திருக்கிறது என்றால், உன்
கௌரவத்தைச் சிதைப்பதற்காகத்தான் என் காதல்
பிறந்திருக்கிறது என்று வைத்துக் கொள்!” என்று தன்னுடைய எதிர் வாதத்தையும்
முன்வைத்தாள். கணபதிக்கு ஓடும் ரத்த ஓட்டத்தின் வேகம் காவியாவிற்கு என்ன குறைவாகவா
இருக்கும்?
இதுவரை அண்ணா! அண்ணா! என்று தன்னையே
சுற்றி வந்த சிறு பெண், என்று
நினைத்த இவள்,
இப்படி யாரோ ஒருத்தனுக்காக என்னுடனேயே
மல்லுக்கு நிற்கிறாளே என்ற வியப்பு கணபதிக்கு மேலிடவே செய்தது. என்ன செய்வது,
காதலுக்குக் கண் இல்லை என்பார்களே! ஆனால் ஏனோ தெரியவில்லை. காதல் என்று
வந்துவிட்டால் மட்டும் பெண்களுக்கு பெற்றோர்களையும் உறவினர்களையும் எதிர்க்கும்
வீரம் எங்கிருந்துதான் வருமோ என்ற ஆச்சரியம் வியப்படையச் செய்தது. “வீட்டில்
பேசி சம்மதம் வாங்கப் போகிறேன் என்று உன் நண்பனிடம் சொன்னாயே! அதற்கு என்ன பதில்
வைத்திருக்கிறாய்?” என்று காவியா கேட்டாள். அதற்கு
சற்றும் தாமதிக்காமல் “நான் ஏன்
வீட்டில் சம்மதம் கேட்க வேண்டும்?” என
முகத்தில் அடித்தது போல கேட்டான் கணபதி. “சரி உன் நண்பனுக்கு என்ன பதில் கூறுவதாக
உத்தேசம்.” என்றாள் காவியா. “அவனிடம்
என்ன சொல்லப் போகிறேனோ! அதைத்தான் உன்னிடம் கூறிவிட்டேனே. இதைக் கேள்விப்பட்டாலே
போதும் அவனுக்கு. அதைவிட பெரிய அவமானம் ஒன்றுமில்லை. வெளியிலே நட்பாகப் பழகினால்
அதற்காக சொந்தம் கொண்டாடும் அளவிற்கு நடந்து கொள்வார்களா?
அதற்கெல்லாம் ஒரு தராதரம் வேண்டும்.” என்று கூறிய கணபதியின் பேச்சைக் கேட்டு
காவியா பதிலுரைக்கலானாள். “இப்படியெல்லாம் நடந்து கொள்வது உன் நண்பர்களுக்கான
அவமானமல்ல. உனக்கான அவமானம். உனக்குத் தங்கையாகப் பிறந்ததால்தான் இப்படிப்
புலம்பிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. கௌரவம்,
கருவாடு,
சாதி,
சாக்கடை என்றெல்லாம் பேசிக் கொண்டு இருக்கிற உனக்குத் தங்கையாகப் பிறந்தது
நினைத்து வெட்கப்பட வேண்டியிருக்கிறது.”என்றாள் காவியா.
“நானுந்தான் வெட்கப்படுகிறேன். நம்ம
சாதியில் பிறந்த உனக்கு இருந்திருந்தும் இப்படி ஒரு ஈனப்புத்தி எப்படி வந்தது?
என்று,
எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஊர் பெருமையும் சாதிப் பெருமையும் புரியாத உனக்கு
எப்படி நான் அண்ணனாகப் பிறந்தேன்? என்று.
இதையெல்லாம் அப்பா கேள்விப்பட்டார் என்றால்,
அவர் மனம் நொந்து இறந்துவிடுவார். அம்மாவைப் பற்றிச் சொல்லவா வேண்டும். இப்படி
எல்லாரையும் பலி கொடுத்துவிட்டு, நீ
மட்டும் யாரோ ஒரு சாதிக்காரப் பயலோட எப்படி குதூகலமாக இருக்க முடியுமுணு
நினைக்கிற. அதுக்கு என்னால ஒருபோதும் ஒத்துக்கொள்ள முடியாது. இப்ப ஒன்னும் கெட்டுப்
போயிரல. மனுசனுக்கு நினைக்குறதும்,
மறக்குறதும் இயல்புதான். அந்தப் பயல மறந்திடு. அவன் யாரா இருந்தாலும் நம்ம ஆட்களை
வைத்து ஒரு மிரட்டு மிரட்டி விட்டுடோமுனா சரியாய்ப் போய்விடும். அதுக்கப்புறம் உன்
பக்கம் தலைவச்சுக்கூட படுக்க மாட்டான். உனக்கும் கலியான வயது வந்துட்டாதால,
இது மாதிரியான எண்ணமெல்லாம் தோன்றுவது சகஜம்தான். அதனால எப்பையும் போல நல்ல
பிள்ளையா நடந்துக்கக் கத்துக்கோ! தேவையில்லாம வீட்டுல இதப் பத்தியெல்லாம் சொல்லி,
அவங்களை கஷ்டப்படுத்த நினைக்காத! அப்புறம் நான் உன் அண்ணனா நடந்துக்க வேண்டிய அவசியம்
இல்லாமப் போயிரும். இந்த மாதிரி பயலுகல நம்பி மோசம் போயிடாத! நீ சொல்லும் போதே
தெரியுது அவன் எதுலேயும் நம்ம அந்தஸ்துக்கும் கௌரவத்துக்கும் ஏத்தவன் இல்லை என்று.
அதனால உன் நல்லதுக்குத்தான் சொல்லுறேன். கண்டதையும் மனசுல போட்டுக் குழப்பிக்
கொண்டு,
உன் படிப்ப கோட்ட விட்டுடாத, புரியுதா?”
என்று ஒரு அரற்றலுடன் தன்னுடைய அறிவுரைகளை கூறி முடித்தான் கணபதி.
இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்
இவனிடம்,
தனது காதலை எப்படிப் பேசிப் புரியவைப்பது?
என்ற குழப்பத்துடன் அவனை வெறித்துப் பார்ப்பது போல கண்ணீர் வந்து விடுமோ என்ற
நிலையில்,
மனக் குமுறல்களை அடக்கிக் கொண்டு நின்றாள் காவியா. சற்று நிதானத்துடன் கணபதியைப் பார்த்துப்
பேசலானாள். “நான் மட்டும் சாதி மாறித் திருமணம் செய்து கொண்டால் உங்களுடைய கௌரவம்
போய்விடும் என்கிறாய். நீ மட்டும் வேறு மதத்துப் பெண்ணைக் காதலிக்கிறாயே! அதனால்
உங்களுடைய கௌரவத்தில் கரை படிந்து விடாதா?
உங்கள் சாதிக்கு இழுக்கு வந்துவிடாதா?” என காவியா
கேட்டதும். கணபதி சற்று தயக்கத்துடன் “இது எப்படி இவளுக்குத் தெரியும்?
தெரியாது என்றல்லவா நினைத்திருந்தேன் என்ற வியப்புடன் அவளை முறைத்துப் பார்த்துக்
கொண்டிருந்தான். காவியாவை ஏற இறங்கப் பார்த்துவிட்டு சற்றே பொறுமலுடன்,
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தன்னுடைய கருத்தைக் கூறத் துவங்கினான். “இதோ
பார்,
இதைப் பற்றி நான் ஏற்கனவே வீட்டுல பேசிவிட்டேன். அவர்களும் இதற்குச் சம்மதம்
தெரிவித்து விட்டார்கள். உனக்கே தெரியும் என்று நினைக்கிறேன். நம்ம வீட்டுல நான்
என்ன சொன்னாலும் யாரும் தட்டமாட்டார்கள் என்று. அப்படித் தட்டிக் கழித்தால் அதைப்
பற்றிக் கவலைப் பாடுபவன் நான் அல்ல என்பதும் அவர்களுக்குத் தெரியும். அதனால் உன்
விசயத்தையும் என் விசயத்தையும் சேர்த்து முடிச்சுப் போட நினைக்காத. அவள் வேறு மதத்தைச்
சார்ந்தவளாக இருந்தாலும் நம் சாதிக்காரர்களால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு
சிவப்பாக இருக்கிறாள். அதை நான் எப்படியும் சமாளித்துக் கொள்வேன். அதைப் பற்றி நீ
ஒன்றும் கவலைப் பட வேண்டிய அவசியமில்லை. அதுவும் நான் என்ன பொம்பளப் பிள்ளையா?
அடுத்தவங்க வீட்டுல போய் வாழ்வதற்கு. வேறு சாதியோ மதமோ சார்ந்து பெண் எடுக்கிறதவிட,
பெண் கொடுக்குறது எவ்வளவு அசிங்கமுணு உனக்கு எங்க தெரியப் போகுது?
அந்த அசிங்கத்த செஞ்சு நம்ம குடும்பத்தோட கௌரவத்த கெடுத்துடாத. புரிஞ்சுதா?
என தனக்கு ஞாயம் கற்பிக்கும் விதமாக பேசினான் கணபதி.
அப்படியாக பேசிக் கொண்டு சென்றவர்கள்
மலர்களுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்தனர். “ஆக ஆம்பளப்
பிள்ளை என்றால்,
எது செய்தாலும் தவறில்லை. பொம்பளப் பிள்ளை என்றால் எது செய்தாலும் தவறு. உனக்கு
ஒரு ஞாயமும் எனக்கு ஒரு ஞாயாயமும் வகுப்பதற்கு உங்களின் சாதியும் குடும்பக்
கௌரவமும் எப்படி இடம் கொடுக்கின்றன? அப்படி
உன் விஷயத்தில் சமாதானமானவர்கள் என் விஷயத்தில் மட்டும் ஏன் பிடிவாதம் பிடிக்கப்
போகிறார்கள்?”
என்ற கேள்விகளை முன்வைத்தாள் காவியா. “இரண்டையும் ஒன்றுடன் ஒன்று முடிச்சுப்
போடாதே என்று ஏற்கனவே கூறிவிட்டேனே. எப்படிப் பார்த்தாலும் நீயும் நானும் செய்தது
ஒன்றாகிவிடாது. இருந்திருந்தும் ஒரு ஈனத் தனமான ஒரு செயலை செய்துவிட்டு என்னோடு
போட்டிக்கு நிற்கிறாயா? நான் என்ன
உன்னை மாதிரி தாழ்ந்து போன சாதிக்காரக் கூட்டத்திடமா சொந்தம் கொண்டாட ஆசைப்படுகிறேன்?
அதுவுமில்லாமல் உண்ண படிக்க வச்சதுதான் ரொம்பத் தப்பாப் போச்சு. நான்தான்,
எல்லாம் என்னைச் சொல்லணும். நம்ம சாதி சனங்களுக்குள்ள நம்ம ரெண்டு பேரும்
படிக்குறதுனால,
நம்ம
பெத்தவங்களுக்கு ஊருக்குள்ள ஒரு மரியாத இருக்கு. அதுக்காகத்தான்,
சரி கழுத படிக்கட்டுமேனு படிக்க வச்சேன். நீ என்னடானா நம்ம கௌரவத்த உயிரோட குழி தோண்டி
போதச்சுடலாமுணு முடிவு கட்டீட்ட. இதோ பார்! அப்படி ஏதாச்சும் அவன்தான் வேணும்,
அவனத்தான் கட்டுவேணு, படிச்ச திமிருள ஏதாவது பேசுன,
அப்புறம் தங்கச்சினு கூட பார்க்க மாட்டேன். ஏதோ உன்மேல உள்ள பாசத்துல உன்னை இவ்வளவு
தூரம் கூட்டி வந்து பணத்தைக் கட்டி ராணிமாதிரி பார்த்துக்குரேனு நினச்சுராத. கண்ணையா
குடும்பமுனா அதுக்கு ஒரு மரியாதை இருக்கு. நாம் இந்த அளவுக்கு கஷ்டமில்லாம
படிச்சுக்கிட்டு இருக்கோமுனா, அதுக்காக
நம்மள பெத்தவுங்க கஷ்டப்பட்டு உழச்சிருக்காங்க. ஏதோ போன போக்குள நோகாம
உக்காந்துக்கிட்டு சேர்த்ததில்லை இந்த சொத்து. அப்படியெல்லாம் உழச்சவங்ககிட்ட போய்
எந்த முகத்த வச்சிக்கிட்டு சொல்லச் சொல்லுற?
உங்க பொண்ணு தாழ்ந்த சாதிக்காரண விரும்பிக்கிட்டு இருக்கா. அவங்க ரெண்டு பேரையும்
சேத்து வையுங்கணு, என்னை சொல்லச் சொல்லுறியா?
அவுங்க பாவம் உடம்பு சரியில்லாம இருக்காங்க. இந்த நேரத்துல இதச் சொல்லி அவுங்களா
ஒரேயடியா அனுப்பீரலாமுனு பார்க்குரியா? நடக்காது
ஒரு போதும் நடக்காது. ஒழுங்கா நல்லபடியா நாங்க பார்க்குர மாப்பிள்ளைய
கட்டிக்கிட்டு இருக்குறதுனா இரு. இல்லையா ஒரு பாட்டீல் விசத்த வாங்கித் தரேன்.
குடிச்சுப்பூட்டு செத்துப் போ. இரண்டு நாளைக்கு அழுதுட்டு,
மூன்றாவது நாள் நாங்களாச்சும் நிம்மதியா இருப்போம். அப்படி இல்லையா வீட்டுக்கு போற
வழியிலுல ரோட்டுல ஏதாச்சும் வண்டிக்குள்ள விழுந்து செத்துரு. மிச்சத்த நான் பார்த்துக்குறேன்.
நீ பாட்டுக்க உன் இஷ்டத்துக்கு எவனையாச்சும் கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போறதுக்கா,
மாங்கு மாங்குனு உழச்சு சொத்து சேர்த்து
வச்சுருக்காங்க?
என்ன அப்படிப் பார்க்குர? இவ்வளவு
பெரிய படிப்பு படிக்கிறானே இவனா இப்படி பேசுராணு பார்க்குறியா?
எனக்கும் அந்த சாதி ரத்தம்தான் ஓடுது. உனக்குத்தான் அந்த அளவுக்கு சூடு,
சொரண,
வெட்கம்,
மானம் இதுல இதுவுமே கிடையாதுணு நிரூபிச்சுட்டியே. இதெல்லாம் ஒரு ஈனப் பொலப்புனு உனக்குத்
தெரியலயா?
நம்ம சாதிப் பெருமைய கெடுக்கணுமுணு நெனச்சா,
நானே சங்க அறுத்துப் போட்டுட்டு போயிருவேன். அதுக்காக ஜெயிலுக்குப் போரதக்கூட
கவுரவமா நினைக்கிறவன் நான். படிப்பு போனா போகுது. அது என்னோட மயிருக்குச் சமம்.
கையும் காலும் இருக்குது. அப்பா சேர்த்து வச்ச சொத்து இருக்குது.
அது
பத்தாதா?
இதுக்கு மேல அவங்கிட்ட பேசுனேன். இவங்கிட்ட பேசுனேன். அவன் லவ் பண்றேனு சொன்னான்.
இவன் லவ் பன்றேனு சொன்னணு ஏதாவது சொல்லிக்கிட்டு இருந்தேனா! இருக்குற கொரக் கண்ணையும் குருடாக்கி,
வீட்டுல போட்டுடுவேன். உனக்குக் கலியாணம் ஆகலாட்டியும் பரவா இல்ல. நீ அவன மறந்திடு.
அவன் யாரு?
எப்படிப்பட்டவன்? அதெல்லாம் எனக்குத் தேவையில்லாத
விஷயம். அவன் யாராயிருந்தாலும் அவனோட சாதி ஒன்னு போதாதா?
அவனப் பத்தித் தெரிஞ்சுக்குறதுக்கு. அதவிட வேறு என்ன வேணும்?
நான் ஒன்னும் காதலுக்கு எதிரி கிடையாது. நம்ம சாதிக்குள்ளேயே ஒரு பையனா கைய
காட்டு,
அவன் நொண்டியோ,
குருடோ,
படிச்சவனோ படிக்காதவனோ எப்படி இருந்தாலும் பரவாயில்லை. நான் அப்பாக்கிட்டையும்,
அம்மாக்கிட்டையும் பேசி சம்மதம் வாங்கித் தாரேன். அப்படி இல்லையா,
ஒழுங்கு மரியாதியா படிப்ப முடிச்சுட்டு வீட்டுல போயி இரு. அவுங்களா பார்த்து ஒரு
நல்ல மாப்பிள்ளைக்கு சீறும் சிறப்புமா கல்யாணம் செஞ்சு வைப்பாங்க. அதுதான் நீ
எங்களுக்குக் கொடுக்குற மரியாத. நான் சொல்லுறத சொல்லீட்டேன். இதுக்கும் மேல உன்
இஷ்டப் படிதான் இருப்பேனு நீ சொன்னா? அதுக்கப்புறம்
நான் மனுசனா நடந்துக்க மாட்டேன். பார்த்து பத்திரமா நடந்துக்கோ!” என்று
எச்சரிக்கையுடன் தன்னுடைய பேச்சை நிறுத்திய கணபதியின் முகத்தில் தற்பொழுது
சாதிக்கான மிருகப் பரம்பரையே வந்து மிரட்டி விட்டுச் சென்றதாக உணர்ந்த காவியா
எதுவும் பேசாமல் உறைந்து போயிருந்தாள். ஒரு சாதியத் துளிக்கே இவ்வளவு
கொந்தளிப்பும் வேகமும் இருக்கிறது என்றால்,
சாதிய விஷமேரிய விதைகளைத் தாங்கிய எத்தனைத் துளிகள் இந்த மண்ணில் விழுந்திருக்கின்றன.
அத்தனையும் சேர்ந்து வெள்ளமாக பாய்கின்ற இந்த சமூகத்தின் எதிர்காலத்தை எப்படிக்
காப்பாற்றுவது?
சாதி பேதமற்ற சமூகத்தை எங்கு சென்று தேடுவது?
அதே ரத்தத்தில் பிறந்த எனக்கு மட்டும் ஏன் இப்படியொரு சாதியப் பித்து
பிடித்திருக்கவில்லை. பொதுவாக ஆண்களுக்கு மட்டுமல்லாமல் பெண்களுக்கும் சாதியப்
பித்து பிடிக்குமாமே! அப்படியிருக்க எனக்கு மட்டும் இல்லாது போனது எவ்வாறு?
ஒரு வேலை பள்ளி செல்லுகிற காலம் துவங்கி, இன்று வரை
ரத்த உறவுகளுடன் ஒட்டாமல் வெளியே விடுதிகளில் தங்கி அவர்களுடனே பழகி வாழ்ந்ததால்
வந்திருக்குமோ?
ஒரு வேலை நானும் இவர்களுடன் சேர்ந்து இவர்களில் ஒருத்தியாக வாழ்ந்திருந்தால் என்
அண்ணனைப் போலத்தான் நடந்து கொண்டிருப்பேனோ?
ச்சீ,
ச்சீ அப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு நாண்டுக்கிட்டு இறந்திருப்பேன். நல்ல வேலையாக
யார் செய்த புண்ணியமோ இந்த ஈனப் புத்தி எனக்குள்ளும் வளராமல் இருந்திவிட்டது.” என
பலவாறு சிந்தனையில் மூழ்கிப் போனாள் காவியா.
இவர்களுடன் போராட முடியாமல்தான்
எத்தனையோ காதலர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படியானால் அவ்வாறு
செய்துகொள்ளும் தற்கொலைகள் எல்லாம் தற்கொலைகளாகிவிடுமா?
அவைகள் கொலைகளாகி விடாதா? எப்படியாவது
போராடி சமூகத்தில் வாழ்ந்து விடலாம் என்று நினைக்கிறவர்களை,
கௌரவத்தைக் கட்டிக் காப்பாற்றுகிறோம் என்கிற பெயரில் கொலை செய்து கொண்டுதான்
இருக்கிறது இந்த சமூகம். அது எப்படி கொலை எனப்படுகிறதோ. அதுபோல சாதிய மிருகங்களின்
அச்சுறுத்தல்களினால் செய்யப்படும் தற்கொலைகளும் கொலைகள்தான். சாகடிப்பதும்
சாகும்படிச் செய்வதுமாகிய இரண்டும் கொலைகளேயாகும்.
மக்களின் வரிப்பணத்தைப் பிடுங்கி,
தொழிலார்களை வாட்டி வதக்கி கட்டப்படுவது மட்டுமல்ல கோட்டை. இரண்டு மனங்கள் இணைந்து
எதிர்காலத்தில் எவ்வாறெல்லாம் வாழப் போகிறோம்?
என்று திட்டமிட்டு அவர்களுக்கான வாழ்க்கை
ஒவ்வொரு நாளும் தங்களது கற்பனையில் கோட்டைகளைக் கட்டிக் கொண்டு,
அந்த நாள் எப்பொழுது வரும் எப்பொழுது வரும் என்று நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும்
காதலர்களின் மனங்களில் தோன்றிய கோட்டைகளை என்னவென்று சொல்லுவது?
பகை நாட்டுப் படையெடுப்பு போல காதலர்களின் கோட்டைகளைச் சிதைத்து அவர்களின் வாழ்வை
நிர்மூலமாக்கினால் அது வன்முறையாகாதா? என
பலவாறான கேள்விகளும் சிந்தனைகளும் காவியாவின் மனதில் எழவே செய்திருக்கக் கூடும்.
தன்னை எச்சரித்துவிட்டு,
அவன் மட்டும் மலர்க் கண்காட்சிக்கு வந்திருக்கும் அவனுடைய காதலியுடன் பேசி
மகிழ்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தாள் காவியா. இவனுக்கு ஒரு நியதி,
எனக்கு ஒரு நியதி பேசுகிறானே! எங்கோ ஒரு மூலையில் படிப்பில் வாசனை அறியாத ஒருவன்
இப்படியெல்லாம் பேசியிருந்தால் கூட பாவம் உலகறிவு இல்லாதவன்,
படிக்காத பாமரன் என்று நினைத்துவிட்டுப் போய்விடலாம். இத்தனை ஆண்டுகளாக இந்தச்
சமூகத்தைப் பற்றிய கொள்கைகளையும் கோட்பாடுகளையும் படித்து வந்தவன் என்றெல்லாம்
சொல்கிறானே! இதிலெல்லாம் இல்லாத இந்த சாதிவெறி எந்தக் கோட்பாட்டில் இவ்வளவு கோரமாக
சித்தரிக்கப்பட்டுள்ளதோ?
இதையெல்லாம் பற்றிச் சிந்திக்கின்ற பொழுது இவனுக்கும் பாமரனுக்கும் என்ன
வித்தியாசம்?
இத்தனையாண்டுகளாக எதைக் கற்றுக் கொண்டிருக்கிறான்?
சாதியை எப்படிக் கட்டிக் காப்பாற்ற வேண்டும் என்பதையா?
சாதியைப் பற்றிக்கொண்டு தலைகீழாகத் தொங்கும் வௌவாளின் வாழ்க்கை வாழத்தான் இவனுடைய
படிப்பு பயன்பட்டிருக்கும் போல. கல்வி சமூகத்தை மாற்றும்,
சிந்தனையை விரிவடையச் செய்யும் விசாலமான பார்வையத் தரும். கல்வி மனிதனை
மேன்மையடையச் செய்யும் என்றுதானே நான் அறிந்திருக்கிறேன். அவையெல்லாம் இவன்
விஷயத்தில் பொய்யாகப் போய்விட்டதே. தடுக்கி விழுகின்ற இடங்களிலெல்லாம் சாதியின்
பெயராலும் மதத்தின் பெயராலும் செயல்பட்டு வருகின்ற கல்விக் கூடங்களின் பெயர்ப்
பலகைகள் பல்லை இழித்துக் காட்டுகின்றன. அப்படிபட்ட சமூகத்தில் படித்து வந்த
இவனுக்கு எவ்வளவுதான் படித்தாலும் உலக ஞானம் என்பது கிணற்றுத் தவளையின்
கதையாகத்தான் போய் விடுகிறது போலும்.
கௌரவம் கௌரவம் என்று சாதியின் பெயரால் பிதற்றிக் கொண்டிருக்கும் இவர்கள்
அந்த கௌரவத்தை எங்கிருந்து தோண்டி எடுத்தார்களோ தெரியவில்லை. அவர்கள் தோண்டி
எடுத்தது அழுகிப் போன பிணங்கள் என்பது அறியாமல் அவற்றுடன் கட்டித் தழுவி அந்த
நாற்றத்தில் அவர்களும் நாற்றமடித்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்படிப் பட்டவர்களுக்கு,
இந்த மலர்களின் மணம் மூக்கைப் பொத்திக் கொள்வதைப் போன்றுதான் இருக்கும்
போலிருக்கிறது.
நாங்கள் படித்தவர்கள்,
மேதாவிகள் என்று சொல்லிக் கொள்கிற எத்தனையோ பேர் இவ்வாறு ஆமை ஒட்டிற்குள் தலைகளை
மறைத்து வைத்துக் கொண்டு, எங்கோ
தூரத்தில் நடக்கின்ற காதல் கதைகளை விமர்சித்துக் கொண்டும்,
ரச பாவங்களோடு அதைப் பற்றி சிலாகித்துக் கொண்டும் இருப்பார்கள். அதுவே தங்களுடைய
வீட்டில் என்று வந்து விட்டால், பேனா
எடுக்கும் கைகள் அரிவாள் எடுக்கவும் தயங்குவதில்லை. மற்றவர்களின் மீதும் சாதிய
விஷத்தை ஊற்றி அவர்களையும் அழுகடித்து விடுவார்கள்.” என சிந்தனையில் ஆழ்ந்து
கொண்டிருந்தாள் காவியா.
தன்னுடைய காதலியை அனுப்பி வைத்துவிட்டு
காவியாவின் முன் இருக்கின்ற நாற்காலியில் வந்து அமர்ந்தான் கணபதி. அவன் வருவதையும்
கவனிக்காது எதையோ சிந்தித்துக் கொண்டிருக்கும் காவியாவின் கவனத்தைத் தன் பக்கம்
இழுப்பதற்காக சிறு குமுறலுடன் இரண்டு கைகளையும் மேலும் கீழுமாக நீட்டி மடக்கினான்.
அவனைப் பார்த்து, “நான் இங்கு இருக்கின்ற பொழுது நீ உன்
காதலியிடம் பேசிவிட்டு வருவது போல, நீ இங்கு
இருக்கும் பொழுது நான் என் காதலுடன் பேசிவிட்டு வந்தால் என்ன செய்வாய்?”
என்றாள் காவியா. “வெட்டிக் கொன்னுபுடுவேன். ரெண்டு பேரையும் பார்த்த இடத்துலேயே
வெட்டிக் கொன்னுபுடுவேன்.” என சாதிய வெறியோடு கூடிய குரலில் மிகவும் அழுத்தமாகக்
கூறினான் கணபதி. “உனக்கொரு நியாயம், எனக்கொரு
நியாயம் பேசுவது எந்த விதத்தில் பொருந்தும்?
என தானும் சற்றே குரலை உயர்த்திப் பேசலானாள் காவியா. “மீண்டும் மீண்டும் உனக்குக்
கிளிப்பிள்ளைக்குக் கூறுவது போல சொல்லிக் கொண்டே இருக்க முடியாது. புரிஞ்சுக்கோ!
அப்படி ஒரு சூழ்நிலையில், நான்
இவளைக் காதலிப்பதனால் நமது குடும்பத்திற்குக் கௌரவம் பாதிக்கப்படும் என்பதை
உணர்ந்தால் அன்றே நான் அவளை விட்டுவிடுவேன். அதனால நம்ம அந்தஸ்துக்கு ஏற்ப நடந்து
கொள்ளக் கற்றுக்கொள். அதை விட்டுவிட்டு விதண்டாவாதம் பேசி என்னைக் கோபமூட்டாதே.”
என்றான் கனபதி.
“அப்படியானால் உன்னையே
நம்பியிருக்கும் அந்த பெண்ணின் நிலை என்னவாகும்?
“அகற்கு நான் என்ன செய்வது? வேண்டுமென்றால்
திருமணம் செய்துகொள். எக்காரணத்தைக் கொண்டும் மதம் மட்டும் மாறிவிடாதே
என்கிறார்கள்?
மதம்
மாறினால்தான் அவர்கள் குடும்பத்திலிருந்து எந்தப் பிரச்சனையும் வராது என்று அவள்
கூறிக் கொண்டிருக்கிறாள். இதற்கிடையில் நீ வேறு. ஒரு புதுப் பிரச்சனையை
உருவாக்கிக் கொண்டிருக்கிறாய். ரொம்ப சிம்பிள். மதமெல்லாம் மாறுவதாக இல்லை. அதற்கு
உடன்பட்டு வந்தால் வரட்டும். இல்லையென்றால் இருக்கும் வரைக்கும் பழகிவிட்டு
பிரிந்து செல்லும் போது அவரவர்கள் திசையை நோக்கி சென்றுவிட வேண்டியதுதான்.”
அதற்காக குடும்பத்தைத் தரம் தாழ்த்திவிடும்படி செய்துவிடக்கூடாது. என்றான் கனபதி.
“சரி அது உன் விசியம். ஒருவேளை நான் அவரைத் திருமணம் செய்து கொண்டால் என்ன
செய்வாய்?
என்று சற்று குரலை உயர்த்தி என்னாளும் பேசமுடியும் என்பதாகப் பேசினாள் காவியா.
“காவியா என்னை மீண்டும் மீண்டும்
கோபமூட்டாதே! என்னைக் கொலைக்காரனாக்கிப் பார்க்க வேண்டும் என்கிற ஆசையா உனக்கு?”
என ஆவேசத்துடன் நாற்காலியைத் தள்ளிவிட்டு எழுந்தான் கனபதி. நல்ல வேலையாக அங்கு
இருவரைத் தவிர,
அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் சிலரைத் தவிர மற்றபடி அவர்களின் பாஷையைப்
புரிந்து கொள்பவர்கள் யாரும் இல்லை. அதனால் இவ்விருவருக்கும் இடையே என்ன நடக்கிறது
என்று தெரியாமல் ஏதோ காதலர்கள் விவாதித்துக் கொள்கிறார்கள் போல என்று
மற்றவர்வர்கள் பார்த்தும் பார்க்காமலும் பூக்களை ரசித்துக் கொண்டும் புகைப்படம்
எடுத்துக் கொண்டும் கடந்து சென்று கொண்டிருக்கின்றனர்.
அவன் கோபப்பட்டால் படட்டும். அவனுக்கு
ரத்தம் கொதிப்பது போலத்தான் எனக்கும் ரத்தம் கொதிக்கும். அத்தனை பேர் சுற்றி
இருக்கிறார்கள் என்கிற தைரியமும் காவியாவின் மனதில் இருக்கவே செய்தது. “நான்தான்
சொல்றேனே எனக்கு உன்னுடைய சொத்தில் ஒரு சல்லிக் காசுகூட வேண்டாம் என்று.
வேண்டுமானால் கையெழுத்துப் போட்டுத் தருகிறேன். என்னை வெறுமனே கண்டுகொள்ளாமல்
விட்டு விட்டால் போதும். உங்களுடைய ஒத்துழைப்பில் என்னுடைய திருமணம் நடைபெறாது
என்பது தெளிவாகிவிட்டது. என்னையாவது விட்டுவிடுங்களேன். நான் என் காதலனோடு எங்கோ
ஒரு மூலையில் இந்த சமுதாயத்தின் ஒரு அங்கத்தினராக வாழ்ந்துவிட்டுப் போகிறேன்.
அதில் உனக்கு என்ன நஷ்டம் வந்துவிடப் போகிறது?
இருக்கும் சொத்தையெல்லாம் நீ ஒருவனே வைத்து கட்டி ஆள வேண்டியதுதானே. நாங்கள்
இருவரும் படித்திருக்கிறோம். ஏதாவது வேலை செய்துகூட பிழைத்துக் கொள்வோம். கையாலாகாதவன்தான்
பெத்தவங்க சொத்த வச்சு பிழைப்பு நடத்துவான். எங்களைப் பற்றி நீங்கள் யாரும் கவலைப்படத்
தேவை இல்லை. எங்களுடைய பிள்ளைகளாவது இந்த சாதியக் கருமாந்தரத்தை எல்லாம்
பார்க்காமல் ஒற்றுமை மனோபாவத்துடன் வாழ்ந்துவிட்டுப் போகட்டுமே.
அது பொறுக்க வில்லையா உனக்கு? நீ
வேண்டுமானால் அந்த சாதிப் புளுதியைத் தலையில் வாரிப் போட்டுக் கொண்டு நாங்கள்
எல்லாம் தூய்மையானவர்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொள். அதன் குளிருலேயே
காலத்துக்கும் காய்ந்துவிட்ட பிறகு, அந்தத்
தீயிலேயே விழுந்து எரிந்து போனால்தான் நீயும் உன்னைப் போன்றவர்களும் இந்தப்
பிறவிப் பயனை அடைந்ததாக உணருவீர்கள். அதைவிட்டு உங்களைப் போன்ற கழுகுகளுக்கு
எங்களைப் போன்ற காதலால் மரணித்தவர்களின் பிணங்களைத் தவிர உண்பதற்கு வேறு என்ன
இருக்கிறது?
சாதிக் கௌரவம் எனும் சுடுகாட்டில் காதலர்களைப் பிணங்களாக்கி அதன் மேல் அமர்ந்து
அவற்றினைக் கொத்தித் திண்பதற்காகத்தானே நீங்கள் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
என்றைக்கும் மறந்து விடாதீர்கள்! நீங்கள் கொத்தித் தின்னும் பிணங்களின்
உறுப்புக்கள் உங்களின் அக்கா தங்ககைகளுடையதாகவோ அல்லது பெற்ற மகளினுடையதாகவோதான்
இருக்கும். அதில்தான் உங்களுடைய கௌரவம் கொடிகட்டிப் பறக்கிறது என்றால்,
அதில்தான் உங்களுடைய சாதி நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறது என்றால்,
அதில்தான் உங்களுடைய குடும்பம் வேரூன்றி
கிளைகள் பரப்பி தழைத்தோங்குகிறது என்றால்,
நான் உனக்கும் உன்னைப் போன்றவர்களுக்கும் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
நீங்கள் எவ்வளவு உயரத்தில் கொடிகட்டிப் பறந்தாலும் சாதிக் கிரீடம் தரித்து
நின்றாலும் எங்களைப் போன்றவர்களின் இளந்தலைமுறையினரும் வருங்கால சந்ததிகளும்
என்றுமே எதிரிகள்தான். நான் இருப்பேனோ, இறப்பேனோ என்பது
பற்றி எனக்குக் கவலை இல்லை. எங்களைப் போன்ற சிந்தனைப் போக்கு கொண்ட
இளந்தலைமுறையினர். உங்களைப் போன்றவர்களை புளுவினும் கேவலமாக நசுக்கி விளையாடத்தான்
போகிறார்கள் என்பதை என்றும் மறந்து விட வேண்டாம். மாறவே மாறாது என்று நினைத்த
எத்தனையோ சமூக அமைப்புகளும் கட்டுப்பாடுகளும் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் மாற்றம்
பெற்றுத்தான் ஆகவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். சாதியத்தின் இருக்கத்தை
மேலும் மேலும் வளப்படுத்திக் கொள்வதன் பேர்தானா படிப்பு? உங்களைப்
போன்றவர்கள்,
படித்தவர்கள் என்று வெளியே பெருமை பீத்திக் கொள்ளுகிறபொழுது,
த்தூஉ என்று காரித் துப்ப வேண்டும் போலிருக்கிறது. என்று முகத்தில் உமிழ்ந்து
விடுவது போல கையை நீட்டி ஆவேசமாக மற்றவர்கள் அதைக் கண்டு எதுவும் நினைத்துவிடக்
கூடாது என்பதாகவும் தன்னுடைய எதிரிப்பு வாதத்தை முன்வைத்தாள் காவியா. இத்தனை
ஆவேசத்திற்குள்ளும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடத் துவங்கியது. தனிமனிதனின்
சுதந்திரமான வாழ்க்கைக்கு கௌரவம் என்கிற பெயரில் இத்தனைக் கட்டுப்பாடுகளா?
மனிதனாகப் பிறப்பதற்குப் பதிலாக விலங்காகப் பிறந்திருக்கலாம் போலிருக்கிறது.
இவர்கள் பேசுவது அப்படியொன்றும்
யாருக்கும் தொந்தரவாக இருக்காது என்பது இவர்களுக்குத் தெரிந்தே இருந்தது. ஏனெனில்
பூக்களைச் சுற்றி வண்டுகள் ரீங்காரம் இடுவதும். எரும்புக் கூட்டங்களைப் போன்று
வரிசையாக அதற்கான பாதையில் ஒவ்வொரு பூச்செடிகளுக்கும் அருகில் உட்கார்ந்து கொன்று
மலர்களோடு தங்களையும் ஒரு மலராகப் பாவித்துக் கொண்டு அவற்றைப் புகைப்படம்
எடுத்துக் கொண்டும் அவர்களுக்குள்ளாக வெளிப்படும் ரசனைகளை வாய்விட்டு சிரித்தும்,
மகிழ்ந்தும் சென்று கொண்டிருக்கிற இவர்களுக்கு மத்தியில் ஒதுக்குப் புறமாக
வைக்கபட்டுள்ள நாற்காலியில் அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கும் இவ்விருவரின்
பேச்சு அவ்வளவு ஒன்றும் தொந்தரவாக இருக்கவில்லை. பூக்களைப் பார்க்க வரும் பலரும்
வெகுதூரம் நடந்துவிட்டதால் களைப்படைபவர்களையும்,
மலர்கள் மட்டும் எப்படியோ தொடர்ந்து புன்னைகை வீசி உற்சாகப் படுத்திக் கொண்டே
இருக்கின்றன. காதலர்களுக்கு இவை இன்னும் அதிகமான சந்தோசத்தைக் கொடுத்துக்
கொண்டிருக்கின்றன. அவர்களின் வருங்கால மலரும் நினைவுகளுக்காக தற்போதைய சந்தோசங்களை
மலர்களுக்கிடையே தேனீக்களைப் போல சேகரித்துக் கொண்டிருக்கின்றனர். மக்கள்
கூட்டங்களுக்கு நடுவே தேனை சேகரிக்க முடியாமல் போராடும் வண்டுகளின் நிலைதான்
பரிதாபமாக உள்ளது. அவர்களின் கூட்டத்திற்குள் நசுங்கிவிடாமல் எப்படியாவது தேனை
சேகரிக்க வேண்டுமே என்கிற போராட்டம்தான் காவியாவின் போராட்டமாக நீங்கள்
உணருவீர்களேயானால் நீங்களும் காதலின் மேன்மையை உணர்ந்தவராவீர்கள்.
பொதுவாக வேப்பம் பூவிலிருந்து
எடுக்கப்பட்ட தேனிற்கும் இனிப்புச் சுவை உண்டு. அரளிப் பூவிலிருந்து எடுக்கப்பட்ட
தேனிற்கும் மருத்துவ குணம் உண்டு. இயற்கை யாரையும் பிரித்து வைப்பதுமில்லை. ஆள்
பார்த்து,
சாதி பார்த்து பிரித்துக் கொடுப்பதுமில்லை. எல்லாம் இந்த மனிதப் பயலுகளின்
லீலைகள்தான். காலும் கையும் ஒழுங்காக இருப்பவர்கள் இல்லாதவர்களைப் பார்த்து ஊனம்
என்றும்,
பார்வை உடையவர்கள் இல்லாதவர்களைப் பார்த்து குருடு என்றும் கூறுபவர்களுக்கு ஒன்று
மட்டும் ஏனோ புரியவில்லை. இன்றைய நெருக்கடியான சமூகத்தில் நிரந்தரமற்ற
வாழ்க்கையில் இவை எப்பொழுது வேண்டுமானாலும் பரிக்கப் படலாம் என்று. சாதிய அழுக்கு மூட்டையை
தூக்கிக் கொண்டு கௌரவம் பேசுவது கூட ஒரு வகையில் ஊனத்தின் வெளிப்பாடுதானே. அந்த
ஊனத்தை வைத்துக் கொண்டு எவ்வளவுதான் உயர உயரப் பறந்தாலும் இறக்கையும்,
கால்களும் வலுவிழந்து ஒடிந்து, என்றேனும்
ஒரு நாள் பார்வையும் கெட்டு, அழைகின்ற
பொழுது அவர்களின் இயலாமையினால் தலையில் சுமந்திருக்கின்ற சாதிய அழுக்கு
மூட்டையிலிருந்து அழுகிப்போன சாதியத்தின் சீழ் வடிந்து கொண்டுதானிருக்கும். அதன்
நாற்றமே அவர்களின் உயிரைக் கொல்லும்.
“ஒரு வேளை நான் யாருக்கும் தெரியாமல்
ஓடிவிட்டால்,
உன்னால் என்ன செய்ய முடியும்?” என்ற
காவியாவின் கேள்வி கணபதியின் ஈகோவைத் தொட்டுவிட்டது போலும். யானையின் துதிக்கையில்
மாட்டிய புலி,
காலின் இடுக்கில் சிக்கிக் கொண்டு போராடுவது போன்று ஆக்ரோசத்தோடு காவியாவைப்
பார்த்த கணபதி. “முதலில் தனியாக ஒரு இடத்திற்கு நடந்து சென்று வருவதைப் பற்றி யோசி,
அப்புறம் ஓடுவதையும் ஆடுவதையும் அப்புறம் யோசிக்கலாம்.” என அவளின் குறையை குத்திக்
காட்டுவதாகப் பேசினான். “நீ என்னை எப்படி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் என்
காதலனுக்கு அப்படி ஒரு குறை இல்லை என்பதை மறந்துவிட்டு பேசுகிறாய்! என்பதாகப்
பதிலுரைத்தாள் காவியா. “முதலில் அப்படியொரு ஈனத்தனமான காரியத்தை நீ செய்து பார்.
அப்புறம் தெரியும் உன் அண்ணனின் சுயரூபம்.” என்றான் கணபதி.
“அப்படியொரு காரியத்தை நான்
செய்யுமளவிற்கு நீ நடந்து கொள்ள மாட்டாய் என நம்புகிறேன். அப்படி நடந்து கொண்டால்,
என்னுடைய செயலுக்காக நீ இல்லை,
உன்னுடைய சாதிக் கௌரவம் வருத்தப்பட
வேண்டியிருக்கும். வேண்டுமானால் அதற்காக இப்பொழுதே மன்னிப்புக் கேட்டுக்
கொள்கிறேன். அப்படியாவது உன் சாதிக் கௌரவம் அமைதி கொள்ளுமா என்று பார்க்கிறேன்.”
என அவனை எச்சரிக்கும் விதமாக பேசினாள் காவியா. மேலும் தொடர்ந்தாள். “உன்னைப் பற்றி
மட்டும் வீட்டில் உள்ளவர்கள் எது பேசினாலும் உங்களுக்கென்ன இன்னும் கொஞ்சகாலம்தான்
அதுக்கப்புறம் காலத்துக்கும் கிடந்து கஷ்டப்படப் போகிறவன் நான்தானே என்ற
சித்தாந்தம் எல்லாம் பேசுகிறாய். என் விஷயம் என்றாள் மட்டும் அப்பா பாவம்,
அம்மா பாவம் என்று வருந்துவது போல் நடிக்கின்றாய். உன்னைவிட அதிக பாசமும் பற்றும்
அவர்கள் மீது எனக்கு உண்டு. என் மீது அவர்களுக்கும் உண்டு. ஆகவே உன்னிடம் பேசிப்
புரிய வைப்பதை விட வயதில் முதிர்ச்சி பெற்றாலும் அவர்கள் என் விஷயத்தில் பக்குவமாக
நடந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இதைப் பற்றி நானே நேரடியாக
அவர்களிடம் பேசிக் கொள்கிறேன்.” என்ற காவியாவின் பேச்சு கணபதியிடமிருந்து வேறொரு
உண்மையை வரவழைத்தது. “ஏற்கனவே இது பற்றி அம்மாவிற்குத் தெரியும்.” என்றான் கணபதி.
எப்படி?
எப்பொழுது?
என்ற வியப்புடன் கேட்டாள் காவியா. “நான்
விஷயத்தைச் சொன்னதும் அவர்களுக்கு மயக்கமே வந்து விட்டது. அம்மாவிற்கே இப்படி
என்றால் அப்பாவின் நிலைமை பற்றி சொல்லவே வேண்டாம். அதனால் அப்பாவிடம் இது பற்றி
தற்பொழுது எதுவும் தெரிவிக்க வேண்டாம் என்றும்,
இந்தத் தேர்வு முடிந்தவுடன் பத்திரமாக உன்னை வீட்டிற்கு அனுப்பி வைக்கும்படியும்
கூறிவிட்டார்கள். இதில் ஏதாவது குளறுபடி ஏற்படுமேயானால் அவர்களே நேரில் வந்து
அழைத்துச் செல்வதாகவும் கூறிவிட்டார்கள்.” என்று கணபதியின் வார்த்தைகள் காவியவை
அழவே செய்துவிட்டன. என் காதலைக் குழிதோண்டிப் புதைப்பதற்கு குடும்பமே திட்டம்
தீட்டிவிட்டது போல. ஒரு வேளை, பணம்
இல்லாத,
இதுபோன்ற சாதிக் கௌரவம் பார்க்காத, இல்லாத
வீட்டில் பிறந்திருந்தால் நான் விரும்பிய வாழ்க்கை கிடைத்திருக்குமோ! என்கிற
ஏக்கத்தில் காவியா தனது அழுகையை நிறுத்த முடியாமல் அழுதே விட்டாள். “அம்மா இது
பற்றி என்னிடம் ஒன்றும் பேசவில்லையே. நேற்றுக்கூட அவர்களிடம் பேசினேனே.
எப்பவும்போல அன்பாகத்தான் பேசினார்கள் என்று ஆதங்கப்பட்டுக் கொண்டாள் காவியா. “உன்
வாயிலிருந்து இந்த விசயம் வரும் வரை நான்தான் அமைதியாக இருக்கும்படி கூறினேன்.”
என்றான் கணபதி. நடிப்பில் புலி என்று உன்னைத்தானே நினைத்தேன். என் அம்மாவும்
என்னுடன் நடிக்கக் கற்றுக் கொண்டார்களா? என்று
வேதனையுடன் என்ன செய்வதென்று புரியாமல் அமர்ந்திருந்தாள் காவியா. மகளின் மீதான
அன்பைவிட,
மகளின் விருப்பத்தைவிட,
அவர்களுக்கு வரட்டுக் கௌரவம் பெரிதாகப் போய்விட்டதா?
அம்மாவின் மீதுதான் ஓரளவேணும் நம்பிக்கை இருந்தது. அவர்களே இப்படி என்றால்,
சமூகத்தோடு ஒட்டி உறவாடுகின்ற பொழுதெலாம் சாதியக் கிரீடத்தை மிளிரச் செய்து
பெருமைப்பட்டுக் கொள்கின்ற அப்பாவைப் பற்றி என்ன சொல்வது? எதெல்லாம்
நடக்குமென்று யூகித்தேனோ அதெல்லாம் என் முன்னே
நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. அப்போதிருந்த நம்பிக்கையாகிய அங்கொன்றும்
இங்கொன்றுமான ஊற்றுக் கண்கள் கூட தூர்ந்து போய்விடுகின்றனவே. இப்பொழுது
அவர்களுக்கு என்னை விடவும் சாதிக் கௌரவம்தான் முக்கியமானதாகவும் மூத்த
பிள்ளையாகவும் மாறிப் போயிருக்கிறது. சரி அப்படியாக அவர்களின் கடைசி கால
வாழ்க்கையை அதுவே பார்த்துக் கொள்ளட்டும்.
ஆடுகளையும் மாடுகளையும் வளர்ப்பவனின் குறி
அதன் சதைகளில்தான் இருக்கும். எந்த அளவிற்கு ஊட்டமாக எடை போடுகிறதோ அந்த அளவிற்கு
விலைக்குப் போகும். அடித்துத் திண்பதற்கு ஆவலோடு இருப்பார்கள். வளர்த்து விட்டோமே
என்கிற பாச உணர்வு பற்றி எப்படி அவர்களிடம்
எதிர்பார்க்க முடியும்?
அதுபோலத்தான் சாதியக் கௌரவத்தைக் குறிவைத்து பிள்ளைகளை வளர்க்கும் இவர்களுக்கும்
கௌரவம் பாதிக்கப்படும் என்ற நிலை வந்துவிட்டால் அன்பிற்கு இடம்தர மாட்டார்கள்.” என
நினைத்துக் கொண்டிருந்த காவியா, “நானும்
ஒன்றை உங்களுக்குக் கூற விரும்புகிறேன். உங்களின் சுய உருவம் தெரிந்துவிட்ட பின்பு
நானும் ஏன் மறைத்துக் கொண்டும் மறைந்து
கொண்டும் வாழ வேண்டும்.” எனக்கும் அவருக்கும் ஏற்கனவே பதிவுத்
திருமணம் நடந்து விட்டது.” என்ற உண்மையை பட்டென உடைத்த காவியா இனிமேல் என்னிடம்
சொல்வதற்கென்று என்ன இருக்கிறது என்பதாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
இடிவந்து விழுந்துவிட்டதால் மலர்க்கண்காட்சி
மயானக் காட்சியாய் தோன்றியது அவனுக்கு. இவளுக்கு இத்தனை தைரியம் எங்கிருந்து
வந்தது?
யார் தந்தார்கள்? என்னுடைய தங்கையா இவ்வாறு
பேசுகிறாள்?
ஒரு நிமிடம் நிதானித்துக் கொண்டு என்ன சொல்கிறாய்?
என ஏதும் அறியாதவன் போல் மீண்டும் கேட்டான் கணபதி. “அதுதான் சொன்னேனே காதில்
விழவில்லையா?
நான் இப்போது உன்னுடைய தங்கை என்று கூறிக் கொள்வதை விட என் கணவருக்கு மனைவி என்று
கூறிக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. நீ எனக்கு ஒரு அண்ணனாக நடந்து கொள்வாய்
என்கிற நம்பிக்கையில்தான் உன் தங்கையாகக் கடைசிவரை போராடிப் பார்த்தேன். குறைந்தபட்சம்
அம்மாவாவது என் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பார்கள் என்று நினைத்திருந்தேன். இனிமேல்
அதற்கு அர்த்தமே இல்லை என்று புரிந்து விட்டது. உங்களின் கௌரவக் கப்பல் கவிழ்ந்து
விடக்கூடாது என்பதற்காக தங்கையாக இருந்தாலும்,
மகளாக இருந்தாலும் கடலுக்குள் தூக்கி எரியக் கூடத் தயங்காத உங்களைப் போன்றவர்கள்
மத்தியில் வாழ்வதை விட கடலுக்குள் மூழ்கி இறப்பதே மேல்.” என பகிரங்கமாக இதற்குமேல்
ஒழிவு மறைவு எதற்கு என தைரியமாகப் பேசினாள் காவியா. “இப்படிச் சொல்லுவதற்கு உனக்கு
நாக்குக் கூச வில்லையா? அட ச்சீ,
தள்ளி நில்லு ஈனப் பிறவியே. என் வீட்டில் வளரும் நாய்கூட நன்றியுடன் நடந்து
கொள்ளுகிறது. ஒரே மகள், செல்ல
மகள் என்று கொஞ்சிக் கொஞ்சி வளர்த்ததற்கு நீ காட்டும் விசுவாசமா இது?
இப்படி செய்வதற்கு உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம்.
திமிரு பிடிச்ச நாயே! ஒட்டுமொத்தமாக எங்களோட கௌரவத்தையே காலி பண்ணலாமுணு
நினச்சுட்டியா?
கலியாணம் கட்டிக்கிட்டு வந்துட்டா, அவன்
வந்து என்னை என்ன மயிரப் பிடுங்கீருவானா? இந்த
விஷயத்தை எப்படி பண்ணணுமுணு எனக்குத்
தெரியும். நல்ல வேளை நீ இப்ப நம்ம ஊர்ல இல்லை. உன்னை கட்டிக்கிட்டானே அவன என்
கண்மூன்னால வந்துடக் கூடாதுணு சொல்லு. என்னைக்கு இருந்தாலும் அவனுக்கு நான்தான் எமன்.
ஒழுங்கா மரியாதையா அவன உயிர் பொலாச்சா போதுமுணு ஓடச்
சொல்லு. அத விட்டுப்புட்டு தேவையில்லாம வீரவசணம்
பேசிக்கிட்டு உயிர விட்டுரப் போறான். நீ பண்ணிக்கிட்டதுக்குப் பேரு கலியாணம் இல்ல.
புரிஞ்சதா?
ஆயிரந்தான் இருந்தாலும் நம்ம சாதிசனங்க மத்தியில பெத்தவங்க ஆசீர்வாதத்தோட
செய்யுறதுதான் கல்யாணம். அவன் எப்படி உன்னைக் கூட்டிக்கிட்டு போராணு,
நானும் பார்க்கத்தானே போறேன். உன் இஷ்டத்துக்குக்
கல்யாணம் பன்னீட்டேனு சொல்லீட்டா,
பயந்துக்கிட்டு மகாராணிய சீறும் சிறப்புமா அனுப்பி விடுறதுக்கு நான் என்ன பொட்டைனு
நினச்சியா?
நம்ம சாதி சனத்தப் பத்தித் தெரியும்ல. இதையெல்லாம் கேட்டுக்கிட்ட பின்னாடியும்
பக்கத்துல உக்காந்து பாசம் காட்டுவாங்கணு நெனச்சியா?
பாய்சன கொடுத்தமா. பாடையில ஏத்துனமானு போய்கிட்டே இருபானுக. இப்பவும் கடைசியா
உன்னை ஒருதடவ எச்சரிக்கிறேன். இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும். வேற
யாருக்கும் தெரிய வேணாம். உன் பக்கம் திரும்பி பார்க்காம அவன ஓடிப்
போயிர சொல்லு. இந்த விசியம் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெரிஞ்சா உசிர
விட்டுருவாங்க. அவுங்கள சாவக் கொடுத்துப்புட்டு உன்னையும் அவன் கூட கூட்டிக்
கொடுத்துப்புட்டு நான் மட்டும் தனியா சிஞ்சா அடிச்சுக்கிட்டு நிக்கவா? உனக்கென்ன,
எவன் செத்தா என்ன? எவன் பொழச்சா என்னணு அவன் கூட
சேர்ந்து கும்மாளம் அடிக்கப் போயிடுவ. எங்கள ஊருக்காரங்க முன்னாடி மூஞ்சியத்
தொங்கப் போட்டுக்கிட்டு திரியச் சொல்லுரியா?
காலத்துக்கும் மீசைய முறுக்கிவீட்டுக்கிட்டு நெஞ்ச நிமித்திக்கிட்டு இருந்தவங்க.
வீட்டுக்கு ஒரே பொம்பளப் புள்ளையா போயிட்டயேனு இப்ப வரைக்கும் பொறுமையா பேசிக்கிட்டு
இருக்கேன். நீ என்னோட பொறுமைய ரொம்பத்தான் சீண்டிப் பார்க்குற.” என்று காவியாவை
நோக்கி சீறிப் பாய்ந்து கொண்டிருந்தான் கணபதி.
சாதியென்னும் கௌரவக் கயிற்றில்
தொங்கிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு அதுவே ஒரு நாள் தூக்குக் கயிராகவும் மாறும்.
அன்று இவர்களின் பிணங்கள் நாற்றமடித்துக் கொண்டிருக்கும். தெருவெல்லாம் பிணங்களின்
சுடுகாடாக இருப்பதைக் கண்டு எங்கள் இளைய சமுதாயம் அதை அப்புறப்படுத்தும்.
இதற்காகவா இந்தக் தேசத்தில் பெரியாரின் பெரியார் படாதபாடு பட்டார். அவர்கள் பிறந்த
இந்த தேசத்தில்,
இந்தக் கழிசடைகளும் பிறந்து இருக்கின்றனவே! அவர்களின் அடுத்த சமுதாயத்தினர் என்று
சொல்லி கொள்வதற்கு கொஞ்சம் கூட அருகதையற்றவர்களாக இருக்கிறார்களே. சாதியையும்
மதத்தையும் பற்றி எத்தனை மேடைப் பேச்சுக்கள். எத்தனை புத்தகங்கள். கொட்டிக்
கிடக்கின்றன. அவர்கள் எல்லாம் வாழ்ந்து விட்டுச் சென்றதற்கான சுவடுகள் இல்லாமல்
செய்துவிடுவார்கள் இந்த நாசக்காரக் கும்பல்கள். ஒரு சமூகம் ஒவ்வொரு காலக்
கட்டத்திலும் வளருகிறது என்பார்களே.
இதுதானா வளர்ச்சி. புரட்சியாளர்கள் தோன்றிய மண்ணில் அவர்களின் படங்களை
போஸ்டர்களிலும்,
சுவர்களிலும் தூக்கிட்டுத் தொங்க விட்டிருப்பதால் அவர்களின் கொள்கைகளும்
தூக்கிலிடப்பட்டு விட்டனவா? உலகமே
வியந்து பார்க்கின்ற அளவிற்கு சாதிய எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்திய தலைவர்கள்
வாழ்ந்த இந்த மண்ணில் இன்னும் இதுபோன்ற ஈனப்பிறவிகள் ஒட்டுண்ணிகளாய் ஒழிந்து
கொண்டிருக்கத்தான் செய்கின்றன. அன்று சாதிய அரசியல் வெளிப்படையானதாக இருந்ததால்
எதிரிகளை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. இன்று நாயின் மயிருக்குள் ஒழிந்துகொண்டு
ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டு சுகம் காணும் ஒட்டுண்ணிகளாக
இவர்கள்
இருக்கிறார்கள். வெளித் தோற்றத்தில் பார்ப்பவர்களுக்கு நாய் ஆரோக்கியமாக
இருப்பதாகத்தான் தெரியும். மயிர்களை விளக்கிப் பார்த்தால்தான் ஒட்டுண்ணிகளின்
இருப்பிடங்கள் தெரிய வருகின்றன.” அப்படியாக தனக்குள்ளாகவே பேசிக் கொண்டிருந்த காவியா
என்ன செய்வதென்று அறியாமல் பூக்களைப் பார்த்து ரசிக்கின்ற தோரணையில் வேறு
பக்கத்தில் தன் முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டிருந்தாள். இந்தப்
பூக்களையெல்லாம் இங்கு கொண்டு வருவதற்காகவும் அதனைப் பராமரிப்பதற்காகவும் எத்தனையோ
தொழிலாளர்கள் உழைத்திருப்பார்கள். அதற்கு பிரதிபலனாக பூக்கள் அனைத்தும்
தினந்தோறும் மலர்க்கண்காட்சி காண வருபவர்களை புன்னகையோடு வரவேற்றுக்
கொண்டிருக்கின்றன. அனைவரையும் ஆனந்தக் கடலில் ஆழ்த்துகின்றன.
இந்தச் சமூகத்தில் உள்ள களைகளை நீக்கி,
சிறந்த பூந்தோட்டமாக மாற்ற எத்தனையோ பெரியோர்கள் உழைத்தும் சட்டங்களை வகுத்தும்கூட
விசச் செடிகளை,
முட்புதர்களை அகற்றமுடியாமல் போயிருக்கிறதே. பல்கலைக் கழகங்களின் பட்டங்களுக்குள்
ஒழிந்து கொண்டிருக்கும் படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலரிடமும் உள்ள
விஷப் பற்களைப் பிடுங்கி எரிவதற்கு இன்னும் எத்தனைப் போராளிகள் வந்தால்
இச்சமுதாயம்,
இந்த மலர்க் கண்காட்சி போல பொழிவுபெறும்
என்று தெரியவில்லையே. எப்படியாயினும் எனது முடிவு இறுதியானது.” என்று தன்னுள்
உறுதி மொழி ஏற்றுக் கொண்டாள் காவியா.
நேரம் கடந்து விட்டதினை அறிவுறுத்தும்
விதமாக காவலாளிகள் விசில் அடித்துக்
கொண்டிருக்கிறார்கள். அதை அறிந்த பலரும் அவசர அவசரமாகப் புகைப் படங்களை
எடுத்துவிட்டு பூக்களுக்கு நன்றி சொல்லிவிட்டுச்
சென்று கொண்டிருக்கிறார்கள். கணபதியும் காவியாவும் மற்றவர்களைப் போல் வெளிப்புற
வாயிலை நோக்கி நடந்து கொண்டிருக்கிறார்கள். கணபதியின் மிரட்டலும் உருட்டலும்
காவியாவின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன என்றாலும் தான் ஏற்றுக் கொண்ட
முடிவிலிருந்து பின் வாங்குவதில்லை என்பதிலும் உறுதியாக இருக்கிறாள். தேர்வு
முடிந்தவுடன் யாருக்கும் தெரியாமல் தன் கணவருடன் சென்றுவிட வேண்டும் என்று அதற்கான
யோசனையில் என்ன செய்வதென்று யோசித்தவாறு தொடர்ந்து நடந்து சென்று கொண்டிருந்தாள்.
வயதிற்கு வந்துவிட்டால் எங்கே
தன்னுடைய துணையைத் தானே தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்று விடுவார்களோ என்று
பயந்து பால்ய விவாகம் என்ற ஒன்றினை உருவாக்கி,
சாதியைக் கட்டிக் காப்பதில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுவிட்ட இந்த
சமுதாயத்துக்கு கௌரவக் கொலைகள் ஒன்றும் பெரிய விசயம் அல்ல. இதையெல்லாம் இவர்கள்
செய்யாமல் இருந்தால்தான் அது பெரிய விஷயம் போலும். இத்தகைய ஈனச் செயல்களைச்
செய்பவர்களை எந்த வார்த்தை கொண்டு அழைப்பது?
என்ற வினாவுடன் மலர்க் கண்காட்சி வளாகத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தாள் காவியா.
தேர்வு முடிந்ததும் யாருக்கும்
தெரியாமல் அவள்,
தன் கணவனுடன் சென்றுவிட்டாள் என்பதும். அவர்களைத் தேடிக் கண்டறிந்து அவர்களிடம்
ஊழைக் கண்ணீர் வடித்து, இத்தனை
ஆண்டுகள் பயிற்சியில் பெற்ற நடிப்பை வெளிப்படுத்தி,
“காவியாவை ஊர் அறிய சீறும் சிறப்புமாக,
கௌரவத்தோடு திருமணம் செய்து தருகிறோம் எங்களுக்கு ஒருமாதம் அவகாசம் கொடுங்கள்
என்று நயவஞ்சமாகக் கூறி, அழைத்துக்
கொண்டு சென்றதோடு, கொடுத்த வாக்கை மீறக் கூடாது
என்பதற்காக ஆண்டுகள் கடந்தும் கௌரவத்தைத் தேடிக் கொண்டே இருக்கிறார்கள் காவியாவின்
குடும்பத்தினர். என்று கதை முடிவு பெறுவதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்றால்
அதுவும் உண்மையே.