2.1 பெண்ணியம் - ஓர்
அறிமுகம்
ஃபெமினிஸம்
(Feminism) என்னும் ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கமாகவே பெண்ணியம் என்னும் சொல் தமிழ்
இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இச்சொல் ஃபெமினே (Famine) என்ற
இலத்தீன் சொல்லிலிருந்து தோன்றியது என்பர். பெண்ணியம் என்ற சொல் முதன்முதலில் 1895
ஆம் ஆண்டு ‘அதீனியம்’ என்ற இதழில்
பயன்படுத்தப்பட்டது. அது 20 ஆம் நூற்றாண்டில்தான் பெருவழக்காக இலக்கியங்களிலும் சமூகத்
தளங்களிலும் பயன்படுத்தப்பட்டது என பெண்ணியச் சொல்லின் தோற்றம் குறித்து ராஜ்கௌதமன்
கூறியுள்ளார்.[1] பெண்ணியச் சிந்தனைகள் ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு
நாட்டிற்கும் ஏற்ப மாறுபட்டு வந்துள்ளன. அப்பெண்ணியச் சிந்தனைகள் தோற்றம் பெற்ற காலத்தில்
ஆண்களுக்கு நிகரான உரிமைகளைப் பெறுவதே பெண்ணியம் என்னும் கருத்து முன்னிறுத்தப்பட்டுள்ளது.
அதனை அடுத்து இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து பெண் விடுதலை குறித்த பெண்ணியப்
படைப்புகள் மிகுதியாகத் தோற்றம் பெற்று வருகின்றன.
ஆணாதிக்கச்
சமூகத்தில் பெண்ணியச் சிந்தனைகள் தோன்றுவதற்கு முன் பெண் குறித்தான கட்டமைப்பு என்பது
இயற்கையில் ஆண், பெண் இருவரும் வேறுபட்டவர்கள் என்றும் ஆணைவிட பெண் தாழ்வானவள் என்றும்
உருவாக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து முதன் முதலில் ஆங்கிலப் பெண்மணியான ‘மேரி உல்ஸ்டோன் கிராஃப்ட்’ (Mary
Wollstonecraft) பெண்களின் உரிமைகளை நியாயப்படுத்துதல்
(Vindication of the Rights of women) (1792)
என்ற நூலை வெளியிட்டார். அந்நூலில் சமூகம் என்பது ஆண் - பெண் இருபாலரையும் கொண்டதாகும்.
எனவே உரிமையானது ஆணிற்கும் பெண்ணிற்கும் சமமாகப் பகிர்தல் வேண்டும் என்ற வாதத்தினை
முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து பிரான்சு நாட்டைச் சார்ந்த ‘சீமோன்
தி பௌவோ’ (Simon De Beauvoir) இரண்டாவது
பாலினம் (The Second Sex) (1949) என்ற நூலை வெளியிட்டார். இதனை முன்னோடியாகக் கொண்டு
பெண்ணியம் மேலை நாடுகளில் தோற்றம் பெற்றது எனலாம்.[2]
பெண்ணியம் விளக்கம்
பெண்ணியம்
என்னும் சொல் அது தோன்றிய காலத்திற்கு ஏற்பப் பல்வேறு அறிஞர்களால் விளக்கங்கள் கொடுக்கப்பட்டு
வந்துள்ளது. யுனிவெர்ஸல் டீலக்ஸ் அகராதியில் பெண்ணியம் என்ற சொல், “பெண்களின் உரிமையை வற்புறுத்தும் ஓர் இயக்கம்”[3]
என்றும் ஆக்ஸ்போர்டு அகராதியில் “பெண்களின் தேவையை நிறைவேற்ற
அவர்கள் சார்பாக வாதாடுவது, போராடுவது”[4]
என்றும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏனெனில் பெண்ணியம் காலத்திற்கேற்பத் தான்
ஏற்றுக்கொண்ட கொள்கைகளின் அடிப்படையில் பல வகைகளாகப் பிரிந்து வந்துள்ளது. முனைவர் இரா.செல்வி பெண்ணியம் குறித்து கூறுகையில்
“பெண்ணியம் என்பது உலகளவில் அரசியல், பொருளாதாரம், பண்பாடு,
வரலாறு, பரிணாமம் ஆகியவற்றில் காணலாகும் ஆணாதிக்கத்தைக் கண்டுரைப்பதாகும். அனைத்துத்
துறைகளிலும் நிலவும் ஆணாதிக்கக் கருத்தியல்களை அகற்றி ஆண் - பெண் சமத்துவத்திற்கு வழிகாண்பதாகும்.”[5] என்கிறார். எனவே பெண்ணியம் என்பது ஆண் - பெண் ஆகிய
இருவருக்கான சமத்துவத்தைப் பேசுகின்ற ஒரு கோட்பாடு என்பதாகப் புரிந்து கோள்ளலாம்.
பெண்ணியம் குறித்து முனைவர் வாசுகி ஜெயரத்தினம்
கூறுகையில் “பெண்ணியம் என்பது பெண் சமத்துவம் வேண்டிப் போராடும்
பெண் இயக்கங்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் குறிப்பிடுகிறது”[6]
என்கிறார். இதனடிப்படையில் சமூகத்தில் காலந்தோறும் பின்பற்றப்பட்டு வந்த ஆணாதிக்கச்
சிந்தனைகளைக் கண்டறிந்து அதனைக் களைவதுடன் பெண்களுக்கான சம உரிமையினை மீட்டெடுப்பதுவே
பெண்ணியம் என்னும் புரிதலுக்கு வரலாம். இருப்பினும் பெண்ணியம் என்னும் தத்துவப் போக்கு
ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டின் சூழ்நிலைகளுக்கேற்ப வேறுபட்டுக் காணப்படுகின்றது.
உதாரணமாக மேலைநாட்டில் பெண்கள் நிறத்தின் அடிப்படையில் ஒடுக்கப்பட்டதால் கருப்புப்
பெண்ணியத்தின் தேவையும் அதனுடைய கருத்துக்களும் தோற்றம் பெற்றன. அதே போல இந்தியச் சமூகத்தில்
சாதிய ஏற்றத்தாழ்வின் காரணமாக பெண்கள் ஒடுக்கப்படுவதால் தலித் பெண்ணியத்தின் தேவையும்
அதனுடைய கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றன.
பெண்ணியக் கோட்பாடுகள்
பெண்ணியத்தை நிலத்தின் அடிப்படையில் வகைப்படுத்துகின்ற
பொழுது 1) மேற்கத்தியப் பெண்ணியம் 2) ஆசியப் பெண்ணியம் என இருவகைப்படுத்தலாம். இதில்
பிரெஞ்சுப் பெண்ணியமும் ஆங்கிலோ அமெரிக்கப் பெண்ணியமும் மேற்கத்தியப் பெண்ணிய வகைக்குள்
அடங்கும். அடுத்ததாக இந்தியப் பெண்ணிய மரபானது ஆசியப் பெண்ணிய வகைக்குள் அடங்கும்.[7]
பெண்ணிய வகைப்பாட்டினை கோட்பாட்டளவில் வகைப் படுத்துகின்ற பொழுது சமூக விடுதலை குறித்துத்
தோற்றம் பெற்ற கோட்பாடுகள் ஒவ்வொன்றையும் பெண்ணியம் தன்னுள் இணைத்து கொண்டு தனித்தனி
வகைகளாகப் பிரிந்துள்ளது எனலாம். இன்று பெண்ணிய
வகைகள் பலவாகப் பிரிந்து கிடப்பினும் அதனை மிதவாதப் பெண்ணியம், மார்க்சியப் பெண்ணியம்,
தீவிரவாதப் பெண்ணியம் மற்றும் தலித் பெண்னியம் என நான்கு வகைகளுக்குள் குறிப்பிடலாம்.
மிதவாதப் பெண்ணியம்
பெண்ணியச் சிந்தனைகள் தோற்றம் பெற்ற ஆரம்பக் காலக்கட்டத்தில் மிதவாதப் பெண்ணியம் தோற்றம் பெற்றது. இதனைத் தாராளவாதப்
பெண்ணியம் என்றும் கூறுவர். பெண்ணியம் தோற்றம் பெற்ற காலத்தில் ஆண்களுக்கு நிகரான சம
உரிமையினைப் பற்றிப் பேசுவதையினையே நோக்கமாகக் கொண்டு மிதவாதப் பெண்ணியம் தோன்றியது.
இப்பெண்ணியம் குறித்துத் தமிழ் இலக்கிய பெண்ணியச் சிந்தனையாளர் இரா.பிரேமா “பெண் சுதந்திரம் என்பது பாலியல் சுதந்திரத்தைப் பேசுவதுதான். அதற்காக
பெண் விபச்சாரத்தில் ஈடுபடவும் திருமணம் ஆன பெண் இன்னொரு ஆணுடன் தொடர்பு கொள்ளவும்
தூண்டுவது அன்று பெண்ணியம்”.[8]
என்னும் விளக்கத்தினை முன்வைக்கின்றார். ஆணும் பெண்ணும் சமம். ஆணுக்கான உரிமைகள்
பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டது மிதவாதப் பெண்ணியமாகும்.
இது குடும்ப அமைப்பையும் தாய்மைப் பண்பையும் போற்றியது. பெண்கல்வி, ஓட்டுரிமை, வேலைவாய்ப்பு,
சமஊதியம், சொத்துரிமை, எனப் பெண்களுக்குரிய உரிமைகளை மீட்டுத் தருவதற்காகப் போராடியது.
மார்க்சியப் பெண்ணியம்
மிதவாதப் பெண்ணியத்தில் முன்வைக்கப்பட்ட பெண்களின் உரிமைகளுக்கான
கோரிக்கைகள் அடித்தட்டு மக்களை அதாவது உழைக்கும் வர்க்க மக்களைச் சென்றடையவில்லை. பொருளாதார
அடிப்படையில் மேல்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கப் பெண்கள் மட்டும்தான் பயனடைகின்றனர்.
எனவே கார்ல்மார்க்சும் ஏங்கல்சும் தோற்றுவித்த மார்க்சியக் கோட்பாட்டை முன்வைத்து ஐரோப்பாவில்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் மார்க்ஸியப் பெண்ணியம் தோற்றம் பெற்றது. மார்க்சியம் அடிப்படையில்
சமூகத்தை 1.மேல்தட்டு வர்க்கம் 2. நடுத்தர வர்க்கம் 3. அடித்தட்டு வர்க்கம் என மூன்று
வகைகளாகப் பிரிக்கின்றது. இம்மூன்று தளத்திலும் பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற
வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு தோற்றம் கொண்டதே மார்க்சியப் பெண்ணியம் ஆகும். பெண்ணடிமைத்தனத்திற்கு
முக்கியக் காரணமாக விளங்குவது பொருளாதார ரீதியாகப் பெண்கள் ஆண்களைச் சார்ந்திருப்பது
ஆகும் என்பதை மார்க்சியப் பெண்ணியம் முன் வைக்கின்றது. எனவே பெற்றோரின் சொத்து ஆண்
வாரிசுகளுக்கு மட்டுமல்லாது பெண் வாரிசுகளுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்
என்பதைப் பற்றி மார்க்சியப் பெண்ணியம் விவாதித்தது. இதனடிப்படையில் 1956 ஜுலை 14 வகுக்கப்பட்ட
இந்து வாரிசுச் சட்டத்தின்படி பெற்றோரின் சொத்துக்கள் அவர்களின் பிள்ளைகளில் இருபாலருக்கும்
சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும் எனச் சட்டம் இயற்றப்பட்டது.
தீவிரவாதப் பெண்ணியம்
பின்நவீனத்துவம் தோன்றி வளர்ந்த காலப் பிண்ணனியில்
தீவிரவாதப் பெண்ணியம் தோற்றம் பெற்றது எனலாம்.
தீவிரவாதப் பெண்ணியம் குறித்து இரா. பிரேமா “ஆண், பெண்
இருவருக்கும் உடற்கூற்றில் அமைந்த வேறுபாடு சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்ட இயற்கையாக அமைந்த
ஒன்று என்றும் உடல் கூற்றின் அடிப்படையில் பாலியலில் ஆண் அதிக ஈடுபாடும் பெண்களை அடக்கி
ஆளும் தன்மையும் கொண்டுள்ளான். ஆகவே பெண்கள் பாலுறவு கொள்வதையும் பிள்ளை பெற்றுக் கொள்வதையும்
விட்டுவிடுதல் வேண்டும்”[9]
என்கிறார். எனவே தீவிரவாதப் பெண்ணியம் என்பது இதுவரை ஆண்களால் சித்திரிக்கப்பட்டு வந்த
பெண்களின் பிம்பத்தினை உடைத்தெரிகின்றது. மரபுகளைக் கட்டுடைப்பதோடு கட்டற்ற பாலியல்,
ஒரினச் சேர்க்கை, தாய்மை மறுப்பு என பெண்களின் முழுமையான விடுதலையை தீவிரவாதப் பெண்ணியம்
வலியுறுத்துகின்றது எனலாம்.
தலித் பெண்ணியம்
சாதிய அடிப்படையில் பிரிந்து கிடக்கின்ற இந்தியச்
சமூகத்தில் தலித் பெண்கள் ஆணாதிக்கக் கொடுமையினாலும் தீண்டாமையினாலும் ஒடுக்கப்படுகின்ற
நிலையிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு தோன்றியதே தலித் பெண்ணியமாகும்.
எனவே “இந்தியாவில் அழித்து ஒழிக்க வேண்டிய கொடுமைகளை வரிசைப்படுத்தினால்
முதலில் சாதிக்கொடுமையும் இரண்டாவது பெண் மீதான ஒடுக்குமுறையும் நினைவுக்கு வரும்.”[10]
என அரங்க மல்லிகாவின் கூற்று தலித் பெண்ணியத்தின் இன்றையத் தேவையினை உணர்த்துகின்றது. இவ்விரண்டு
கொடுமைகளையும் ஒன்றாக அனுபவித்துக் கொண்டிருப்பவள்தான் தலித் பெண் ஆவாள். மேலை நாடுகளில்
தோன்றிய கருப்புப் பெண்ணியமே தலித் பெண்ணியத்தின் தோற்றத்திற்குக் காரணமாக இருந்துள்ளது.
கருப்புப் பெண்ணியத்திற்கு நிறம் ஒரு தடையாக இருப்பது போல தலித் பெண்ணியத்திற்குச்
சாதியம் ஓர் ஒடுக்குமுறைக்கான சாதனமாகச் செயல்பட்டு வருகின்றது. மேலும் “தலித் பெண்ணியம் என்பது சாதி – மத – வர்க்கக் கட்டமைப்பை ஒட்டிய ஆணாதிக்கத்தை முறியடிப்பதாகும்.”[11]
என சிவகாமி விளக்கம் அளிக்கின்றார். எனவே தாழ்த்தப்பட்ட
பெண்களின் விடுதலையைப் பற்றிப் பேசுவதுதான் தலித் பெண்ணியம் ஆகும்.
தலித்
பெண்ணின் வாழ்வியல் நிலை குறித்து மார்க்ரெட் கலைச் செல்வி “பொருளாதார
ரீதியாக உழைப்புச் சுரண்டலில் சிக்குண்டு உழைப்போடு மட்டுமே உறவாடி தங்களின் முகவரிகளை
இழந்து கடைநிலை ஊழியர்களாக ஆக்கப்பட்டவர்கள் தலித் பெண்கள் ஆவர். அரசியல் ரீதியாக மனிதர்களாகக்
கருதப்படாமல் தங்களின் மீதும் தங்களின் உடல் மீதும் அதிகாரம் இழந்தவர்கள். தங்களின்
நிலை குறித்து முடிவெடுக்க இயலாதபடிக்கு மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள். கலாச்சார ரீதியாக
நீ தீண்டத்தாகவள், கிராமத்துவாசி என்றெல்லாம் முத்திரை குத்தித் தள்ளி வைக்கப்பட்டவள்.”[12] என தலித் பெண் மீதான சாதியத்தின் கொடூரத் தன்மை
சமூகத்தில் கட்டமைப்பு செய்யப்பட்ட நிலையினை விளக்குகின்றார். இதனடிப்படையில் தமிழ்
இலக்கியத்தில் 1990 களில் தான் தலித் பெண்ணியம் தோற்றம் பெற்று வளரத் தொடங்குகியது
எனலாம். இந்தி இலக்கியத்தில் கிருஷ்ணா சோப்தி, சுசீலா டாக்பௌரே, விமல் தோரட், அனிதா
பாரதி… போன்ற பலரும் இந்தி தலித் பெண்ணியத்திற்கு வளமை சேர்க்கின்றனர்.
அதே போல தமிழ் இலக்கியத்திலும் சிவகாமி, பாமா, அரங்கமல்லிகா, சுகிர்தராணி போன்ற பலரும்
தலித் பெண்ணியம் குறித்த படைப்புக்களைப் படைக்கின்றனர்.
பெண்ணியவாதி
பெண்ணியச் சிந்தனைகளையும் இலக்கியங்களையும் வரையறுக்கின்ற
பொழுது படைப்புகளை மட்டுமல்லாது படைப்பாளர்களையும் வரையறைக்கு உட்படுத்த வேண்டிய சூழல்
ஏற்படுகின்றது. ஆரம்ப காலக்கட்டத்தில் பெண்களை விட ஆண்களே அதிக அளவில் பெண் விடுதலை
குறித்த சிந்தனைகளையும் படைப்புக்களையும் படைத்து வந்துள்ளனர். எனவே பெண்கள் விடுதலை
பெற வேண்டும் என்ற சிந்தனை உடைய அனைவருமே பெண்ணியவாதிகள் தான் என்னும் போக்கு நிலவி
வந்துள்ளது. இதனை மொலினாதேன்மொழி விளக்குகையில் “சமூகம், வேலைத்தளம்,
குடும்பம் ஆகிய நிறுவனங்களில் நிலவும் பெண் ஒடுக்குமுறை பற்றிய உணர்வுகளும் இந்நிலையை
மாற்ற ஆண் - பெண் இருபாலரும் எடுக்கும் உணர்வுப்பூர்வ நடவடிக்கைகளும் பெண்ணியமாகக்
கருதப்படுகின்றன. இதன்படி பாலியல் ரீதியான ஒடுக்குமுறைகளையும் ஆணாதிக்கத்தையும் இனங்காணும்
எவரும் பெண்ணியவாதியாவார்கள்”[13] என்கிறார்.
இக்கூற்றிற்கு வலுச் சேர்க்கும் விதமாக முனைவர் வாசுகி ஜெயரத்தினம் “பாலியல் ரீதியிலான ஒடுக்குமுறை வடிவங்களையும் ஆண் மேலாதிக்கத்தையும்
தந்தை வழிச் சமூக அமைப்பையும் இனம் காணும் எவரும் ஒரு பெண்ணியவாதியாகிறார்.”[14] என்கிறார். எனவே இங்கு
பெண் விடுதலை குறித்துச் சிந்திக்கும் எவரும் பெண்ணியவாதியாகக் கருதப்படுவர்.
தமிழ் இலக்கியப் பெண் படைப்பாளரான அரங்க மல்லிகா பெண்ணியம்
குறித்து அளித்த பேட்டியில் “பெண்ணியம் என்பது ஆணைத் தவிர்த்துப்
பேச இயலாது. ஆணினுடைய அரவணைப்பும் பெண்ணினுடைய ஒத்துழைப்பும் அதே போல பெண்ணினுடைய அரவணைப்பும்
ஆணினுடைய ஒத்துழைப்பும் சமமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது பெண்ணியம். எனவே
பெண்ணியத்தை ஆண்களும் பேச முடியும். ஆணுக்குள் பெண்ணும் பெண்ணுக்குள் ஆணுமாய் இருக்க
வேண்டுமென்ற சித்தாந்தமே பெண்ணியம்.[15] என விளக்கமளிக்கின்றார்.
இதனை அடுத்துப் பெண்ணியத்தின் வளர்ச்சியில் இக்கருத்திற்கு
மாற்றுக்கருத்துக்கள் தோற்றம் பெற்றன. அதாவது காலந்தோறும் ஆண்களே பெண்களை அடிமைப்படுத்தி
வந்துள்ளனர். பெண்களைப் பாலியலுக்கான நுகர்வுப் பொருளாகச் சித்தரித்து வந்துள்ளனர்.
ஆகையால் ஆண்களால் படைக்கப்படும் எதுவும் பெண்ணிய இலக்கியம் ஆகாது. எனவே ஆண்கள் பெண்ணியவாதி
ஆக முடியாது என்னும் மாற்றுக் கருத்து உருவாக்கப்பட்டது. ஒரு பெண்ணுக்கான வலிகளை, தேவைகளை
ஒரு பெண்ணால் மட்டும்தான் உணரவும் அதனை இலக்கியமாக எழுதவும் முடியும். அவ்வாறு உருவாகும்
படைப்புக்களே பெண்ணிய இலக்கியம் ஆகும். இத்தகையப் பெண் படைப்பாளர்களே பெண்ணியவாதியாகக்
கருதப்படுவர் என்னும் கருத்து முன் மொழியப்பட்டது. இதனடிப்படையில் பிரேம் – ரமேஷ் “தலித்துக்களும் பெண்களும் தமக்கு
மறுக்கப்பட்ட மொழியில் தமது எதிர்ப்பையும் தமது உள்ளார்ந்த புலன்களையும் பதிவு செய்ய
வேண்டியிருக்கிறது. அந்தப் பதிவுதான் இப்போது தொடங்கப்பட்டிருக்கிறது. தலித்திலக்கியத்தை
தலித் எழுத்தாளர்களும் பெண்ணிய எழுத்துக்களைப் பெண்களும் எழுதுதல் என்பதுதான் அறிவியல்
அடிப்படையில் சாத்தியமாகும்”[16] எனவே
பெண்களைப் பற்றிப் பெண்களும் தலித்துக்களைப் பற்றி தலித்துக்களும் எழுதுவதுதான் பொருத்தமானது
என விவாதிக்கின்றார்.
மேற்கண்ட கருத்துக்களை
ஒருங்கிணைக்கும் விதமாக பெண் மையத் திறனாய்வு தோன்றியுள்ளது. இக்கருத்து குறித்து விளக்கும்
இரா.செல்வி “பெண்ணியத் திறனாய்வு (Feminist Criticism) என்பது ஆண் பெண் பாகுபாடு கருதாது இருபால்
படைப்புக்களையும் பெண்ணிய நோக்கில் ஆய்வதைக் குறிக்கும். இத்தகைய ஆய்வைப் பெண் ஆய்வாளர்களே
அன்றி ஆண் ஆய்வாளர்களும் மேற்கொள்கின்றனர். பெண்மையத் திறனாய்வு (Gynocentric
Criticism) என்பது பெண் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பெண் வாசகர்கள் மற்றும் பெண்
திறனாய்வாளர்கள் ஆராய்வதை மட்டும் குறிக்கும்”[17] என்கிறார்.
எனவே இதனடிப்படையில் எது பெண்ணிய
இலக்கியம்? யார் பெண்ணிய வாதிகள்? என சில முடிவுகளுக்கு வரலாம். இதுவும் முற்றும் முடிந்த
முடிவு என்று கூற இயலாது. இதன் பின்னர் தோன்றும் கருத்துக்கள் காலத்தின் தேவைக்கேற்ப
மாறுபடலாம். தமிழ் இலக்கியத்தில் பெண்ணியம் தோற்றம் கொண்ட காலகட்டத்தில் ஆண் படைப்பாளர்கள்
பெண்களை உயர்த்திப் படைப்புகள் படைத்திருந்தாலும் ஒவ்வொருவருக்குமான அனுபவங்கள், வேதனைகள்,
உளவியல் சிக்கல்கள் என்பது தனித்துவம் வாய்ந்தது என்னும் அடிப்படையில் ஆண்களுடைய படைப்புகள்
பெண்ணியம் சார்ந்த படைப்புகளாகக் கருதப்படும். மேலும் இப்படைப்பாளர்கள் பெண்ணியச் சார்பாளர்கள்
ஆவர். பெண்களைப் பற்றி பெண்களே படைக்கும் படைப்புகளே பெண்ணியப் படைப்புகள் எனலாம்.
மேற்கண்ட கருத்துக்களின் வழி ஒரு பெண்ணியச் சார்பாளர் என்னும் அடிப்படையில் இவ்வாய்வு
மேற்கொள்ளப்படுகின்றது.
2.2 தற்காலத் தமிழ் - இந்தி பெண் படைப்பளர்கள்
காலம் காலமாக ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்கள் மட்டும் புறக்கணிக்கப்பட்டு
வரவில்லை. அவர்களின் வரலாறும் புறக்கணிக்கப்பட்டு
வந்துள்ளது. ஆண்களின் கட்டுப்பாட்டில் ஆண்களைப்
பற்றிய வரலாறாகவே உலக வரலாறு அமைக்கப்பட்டுள்ளது.
சாதிக் கொடுமைகளையும் பெண்ணிய ஒடுக்குமுறைகளையும் காலங்காலமாகப் பின்பற்றி வந்த
இந்தியச் சமூகத்திற்கு இது மிகவும் பொருந்தும். காலந்தோறும் உருவாக்கப்பட்ட ஆணாதிக்க
இலக்கிய வரலாறு ஆண்களை உயர்த்தியும் பெண்களைத் தாழ்த்தியும் வந்துள்ளது. சில இடங்களில் பெண்களின் படைப்புகள்
தோன்றினாலும் அவை பெண் குறித்த பார்வையினை முன்வைக்காமல் ஆண்களால் சித்தரிக்கப்பட்ட உலகத்தையே காட்டுவதாக படைக்கப்பட்டு வந்துள்ளன.
முதலில் வெளிநாடுகளில் தோன்றிய பெண்ணியச்
சிந்தனைகள் இந்திய இலக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின. அதன் விளைவாக இந்தியாவில்
பெண்ணியச் சிந்தனைகளோடு கூடிய படைப்பாளர்கள் தோற்றம் பெற்றனர். இருப்பினும் இன்றுவரை பெண்களின் படைப்புகள் இலக்கிய
வரலாற்றில் முழுமை பெறாத நிலையிலேயே இருந்து வருகின்றன. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்
கழகத்தார் வெளியிடப்பட்ட ‘இந்தியாவில் பெண் படைப்புகள்’ (Women Writing in India) என்னும் நூலில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள
இருபதாம் நூற்றாண்டுப் பெண் படைப்பாளர்களில் தமிழ் - இந்தி இலக்கியங்களில் தோற்றம்
பெற்ற முக்கியமான பெண் படைப்பாளர்களை மட்டும் அறிமுகப்படுத்துவதாக பின்வரும் பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் பெண் படைப்பளர்கள்
தமிழ் இலக்கியத்தில் சங்க காலத்திலிருந்தே பெண் படைப்பாளர்கள்
மிகவும் அரிதாகத் தோற்றம் பெற்றுள்ளனர். அவ்வாறு தோன்றிய ஒரு சில படைப்பாளர்களும் ஆணாதிக்கத்திற்குக்
கட்டுப்பட்டவர்களாகவே தங்களது படைப்புக்களைப் படைத்து வந்துள்ளனர். வெளிநாடுகளில் தோன்றிய
பெண்ணியக் கருத்தாக்கங்கள் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் தமிழ் இலக்கியங்களில்
தமிழர் பண்பாட்டிற்கு ஏற்ப உருமாற்றம் பெற்றுத் தோன்றத் தொடங்கின. இதனை அடிப்படையாகக்கொண்டு
தமிழிலக்கியத்தில் தோன்றிய புகழ்பெற்ற பெண் படைப்பாளர்கள் குறித்து அறிமுகப்படுத்துவதாக
இப்பகுதி அமைந்துள்ளது.
செங்கல்பட்டில் பிறந்த ‘வை.மு. கோதைநாயகி அம்மாள்’
(1901) இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய முதல்
பெண் எழுத்தாளர் ஆவார். தனது பெற்றோரால் ஆறு வயதிலேயே பால்ய விவாகம் செய்து வைக்கப்பட்டவர்.
115 நாவல்களை எழுதியவர். இவருடைய படைப்புகள் பெரும்பாலும் துப்பறியும் படைப்புகளாக
அமைந்திருக்கின்றன. மேலும் இவர் கள்ளுக்கடை மறியலில் (1931) ஈடுபட்டதோடு அன்னியத் துணி
எதிர்ப்புப் போராட்டத்திற்காகவும் (1932) சிறை சென்ற விடுதலைப் போராளியாகத் திகழ்ந்தவர்.
நாவல், நாடகம், சிறுகதை, என இலக்கியத்தில் பன்முகம் கொண்ட படைப்பாளியாகவும் விளங்கியவர்.
கு.ப.சேது
அம்மாள் (1908). கும்பகோணத்தில் பிறந்தவர். தனது பதினொரு
வயதிலேயே பெற்றோரால் பால்ய விவாகம் செய்து வைக்கப்பட்டவர். மணிக்கொடி எழுத்தாளராக விளங்கியவர்.
ஐந்நூறு சிறுகதைகளையும் ஒன்பது நாவல்களையும் எழுதியவர். இலக்கியத்துறை மட்டுமல்லாது
திரைப்படத்துறையிலும் பங்களிப்புச் செய்தவர். இவர் சிறந்த தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்
கு.ப.ராஜகோபலனின் தங்கை ஆவார். இவரது ‘செவ்வாய் தோசம்’ (1939) எனும் முதல் சிறுகதையானது ‘காந்தி’ இதழில் வெளியானது. இவரின் மைதிலி, கல்பனா, அம்பிகா போன்ற நாவல்களும்
தெய்வத்தின் பரிசு, உயிரின் அழைப்பு, போன்ற சிறுகதைகளும் வாசகர்கள் மத்தியில் மிகுந்த
வரவேற்பைப் பெற்று விளங்கின.[18]
அநுத்தமாவின் (1922)
இயர்பெயர் ராஜேஸ்வரி பத்பநாபன் ஆகும். இவர் சுமார் 300 சிறுகதைகள், 22 நாவலகள்
15 க்கும் மேற்பட்ட நாடகங்கள் முதலியவற்றை எழுதியுள்ளார். நடுத்தர வர்க்கப் பெண்களின்
வாழ்க்கையினை சித்திரிக்கும் படைப்புகளை அதிகமாக எழுதியிருக்கிறார். மணல்வீடு, ஒரே
வார்த்தை, கேட்டவரம் போன்ற நாவல்கள் இவருடைய முக்கியப் படைப்புக்களாகும். மேலும் இவர்
படைப்பாளராக விளங்கியதோடு மொழி பெயர்ப்பாளராகவும் விளங்கியவர்.
இந்திய
விடுதலை குறித்து ‘இராஜம் கிருஷ்ணன்’ (1925) சுதந்திர ஜோதி என்னும் முதல் நாவலை 1948 இல் வெளியிட்டார்.
மேலும் ‘வெள்ளி டம்ளர்’ இவரின் முதல்
சிறுகதையாகும். சிறுகதை, வாழ்க்கை வரலாறு, வானொலி நாடகங்கள், மொழிபெயர்ப்பு, சிறுவர்
இலக்கியம் போன்ற பல்துறைப் புலமை உடையவராகத் திகழ்ந்தார். கதைக்கான மையப்பொருளை முன்பாகவே திட்டமிட்டு அதற்கான
இடத்திற்குச் சென்று கள ஆய்வு செய்து சமூகப் பிரச்சனைகளைக் கண்டறிந்து எழுதுவது இவருடைய
தனித்தன்மையாகும். சாகித்திய அகாடெமி விருது உள்பட பல இலக்கிய விருதுகளை ஒருங்கே பெற்றவர்.
‘சிவசங்கரி’ (1942) நாவல், பயணக்கட்டுரை,
இலக்கியக்கட்டுரை, நேர்காணல், மொழிபெயர்ப்பு என பல்துறை வல்லுநராக விளங்குபவர். இவர்
இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு எனும் பணியினை மிகவும் நேர்த்தியாகச் செய்துள்ளார்.
இந்நூல் இந்தியாவில் உள்ள பல மொழிகளில் உள்ள படைப்பாளர்களையும் மொழிப்பிரதேசத்தையும்
அவர்களது படைப்புகளையும் பற்றிக் கூறுகின்றது. 36 நாவல்கள், 48 குறுநாவல், 150 சிறுகதைகள்,
15 பயணக் கட்டுரைகள் என இலக்கியத்திற்கு அருந்தொண்டாற்றி வருகின்றார்.[19]
அம்பை 1944 இல் பிறந்தார். இவர் பெண்கள் குறித்தான
வாழ்வியலை எதார்த்தமாக எழுதுவதில் வல்லமை கொண்டவர். அதோடு சுய சிந்தனைகள் கொண்ட பெண்
பாத்திரங்களை இவருடைய படைப்புகள் அதிகமாகக் கொண்டிருக்கும். 1970 இல் ஜவஹர்லால் நேரு
பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சமூகப் பணிகள் செய்வதற்குக் குழந்தைகளைக்
கொண்டுள்ள குடும்பம் தடையாக இருக்கும் என குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை. தற்பொழுது
மும்பையில் ‘ஸ்பாரோ’ (SPARROW – Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பை
நுறுவி அதன் இயக்குநராக இயங்கி வருகின்றார். இவருடைய படைப்புகளான சிறகுகள் முறியும்
(1976), வீட்டின் மூலையில் ஓர் சமையல் அறை (1988), காட்டில் ஒரு மான் (2000), போன்றவை
தமிழ் இலக்கியத்தில் இன்றும் மிகவும் முக்கியமானவைகளாகப் பேசப்பட்டு வருகின்றன.
‘சிவகாமி’ 1980 களில் எழுதத் தொடங்கியவர். தலித் பெண்ணியம் சார்ந்து இயங்குபவர்.
பழையன கழிதலும், ஆனந்தாயி போன்ற நாவல்களையும் குறுக்குவெட்டு, சிவகாமியின் சிறுகதைகள்
என்னும் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். தலித் இயக்கங்கள் பலவற்றிலும் பங்காற்றி
வருபவர். தென்னிந்திய தலித் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் பேரவையை ஏற்படுத்தியவர்.
தலித் பெண்ணியம் திறனாய்வு குறித்து உடலரசியல் என்னும் நூலை எழுதியவர். இந்திய ஆட்சிப்
பணியிலிருந்து விலகி தற்பொழுது சமூக சேவை செய்து வருகின்றார்.[20]
பாமா
1958 இல் பிறந்தார். தலித் இலக்கியம் குறித்த படைப்புக்களைக் குறிப்பாகத் தலித் பெண்கள்
குறித்த படைப்புக்களைப் படைத்துள்ளார். இவருடைய கருக்கு (1992) என்னும் நாவலில் தலித்
சமூகத்தினரின் நிலையை தன்னுடைய அனுபவங்களுடன் சேர்த்து எழுதியுள்ளார். அதோடு சங்கதி
(1994), வன்மம் (2002) போன்ற நாவல்களும் கிசும்புக்காரன் (1996) என்ற சிறுகதைத் தொகுதியையும்
படைத்துள்ளார்.
திருநெல்வேலியில்
உள்ள பாளையங்கோட்டையில் ஆண்டாள் பிரியதர்ஷினி (1962) பிறந்தார். தற்காலப் பெண் படைப்பாளர்களில்
குறிப்பிடத்தக்கவர். நாவல், குறுநாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை என படைப்புக்களைப் படைத்தவர். தகனம், கனவுகள் கைப்பிடிக்குள்,
போன்ற நாவல்களும் சாருலதா, வேடிக்கை மனிதர்கள் போன்ற குறு நாவல்களும் தோஷம், தலைமுறைதாகம்
போன்ற சிறுகதைகளும் மிகவும் குறிப்பிடத் தக்கவைகளாக விளங்குகின்றன. மேலும் பெண் எழுத்து,
விடிவைத் தேடி, தேசம் மிச்சமிருக்கும் போன்ற பெண்ணியம் குறித்த கட்டுரைகளையும் படைத்துள்ளார்.
இவர் கவிதைகளுக்காக வைரமுத்து விருதுவும் (2000) தோஷம் என்னும் சிறுகதைக்காக லில்லி
தேவசிகாமணி விருதும் பெற்றவர்.
இந்திப் பெண் படைப்பாளர்கள்
இந்தி இலக்கியத்தைப் பொறுத்தவரை அதனுடைய வரலாறு 11 ஆம் நூற்றாண்டிலிருந்தே
தொடங்குகிறது எனலாம். ஆண் படைப்பாளர்களை ஒப்பிடுகையில் தமிழ் இலக்கியத்தைப் போன்றே
இந்தி இலக்கியத்திலும் பெண் படைப்பாளர்கள் மிகவும் குறைவாகத் தோன்றியுள்ளனர். 20 ஆம்
நூற்றாண்டில் தோன்றிய இந்திப் பெண் படைப்பாளர்களைப் பற்றிக் காணுகையில் இந்தி மொழி
பரவிக் கிடப்பதற்கு ஏற்ப படைப்பாளர்களும் மாநிலங்கள் தோறும் பரவலாகத் தோற்றம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் அவர்களில் பலர் இரு மொழி அல்லது மும்மொழிப் புலமையுடையவர்களாக விளங்குகின்றனர்.
பெரும்பாலான இந்திப் பெண் படைப்பாளர்களுக்கு
தாய்மொழி வேறாக இருக்கின்றது. முதலில் தங்களுடைய தாய் மொழியில் படைப்புகளைப் படைக்கத்
தொடங்கிய பின்னர் இந்தி மொழியில் படைப்புக்களைப் படைக்கின்றனர். இந்தி மொழி தில்லி
மாநகரத்தை மையமிட்டு இயங்குவதால் சில பெண் படைப்பாளர்கள் இந்தி மொழியைப் போல ஆங்கிலப்
புலமையும் பெற்று விளங்குகின்றனர். எனவே இப்படைப்பாளர்களில் ஒரு சிலர் தங்களது படைப்புக்களை
ஆங்கிலத்திலும் இந்தியிலும் எழுதி வருகின்றனர்.
இதனால் இந்தி மொழியில் தோன்றி இந்தி
மொழியில் மட்டும் படைப்புகளைப் படைக்கின்ற பெண் படைப்பாளர்கள் மிகவும் குறிப்பிடும்
படியாகவே உள்ளனர்.
‘சுபத்ரா குமாரி சௌகான்’ (1904) உத்திரப்பிரதேசத்தில்
பிறந்த சிறந்த கவிஞர். இவரது படைப்புகள் இந்திய
விடுதலைப் போராட்டக் காலக்கட்டத்தினை வெளிப்படுத்துபவைகளாக அமைந்துள்ளன. மேலும் இவருடைய
‘ஜான்சி கி ராணி’ எனும் கவிதை நூல்
‘ராணி இலெட்சுமி பாய்’ அவர்களைப்
பற்றி எழுதப்பட்டது. இவருடைய படைப்புகள் குழந்தைகளைப் பற்றியும் நடுத்தர வர்க்கத்தினரைப்
பற்றியும் விவாதிப்பவைகளாக அமைந்துள்ளன. 1921 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு எதிரான காந்தி
மேற்கண்ட ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்து இரண்டுமுறை சிறைக்குச் சென்ற விடுதலைப்
போராளியாவார்.
தற்பொழுது பாகிஸ்தானில் உள்ள குஜ்ரன்வாலாவில் பிறந்த
‘அம்ரிதா ப்ரிதம்’ (1919) ‘சுனெஹுரே’ (Sunehure) என்னும் கவிதைப் படைப்பிற்காக 1956 இல் சாகித்திய அகாடமி
விருது பெற்ற முதல் இந்திப் பெண் படைப்பாளர் ஆவார். அதனைத் தொடர்ந்து 1969 இல் பத்ம
ஸ்ரீ விருதினையும் 1973 இல் ஞானபீட விருதினையும் பெற்றவர். இவர் 1947 க்குப் பிறகுதான்
இந்தி மொழியில் தனது படைப்புகளை வெளியிடத் தொடங்கினார். அதற்கு முன் தனது தாய்மொழியான
பஞ்சாபி மொழியில் படைப்புகளை வெளியிட்டார். 25 நாவல்களையும் 15 சிறுகதைத் தொகுதிகளையும்
வெளியிட்டுள்ளார். இவருடைய கதைகள் கணவன் மனைவிக்குமான பிரச்சனைகள், திருமணமாகிக் கணவனைப்
பிரிந்திருக்கும் பெண்களின் தனிமைத் துயர் பற்றிய அவலங்களைப் பேசுவதாகவும் விவாதிப்பதுமாக
அமைந்துள்ளன.
இந்தியப் பெண் எழுத்தாளர்களில்
சிறந்த எழுத்தாளராக விளங்கும் ‘சிவானி’
(1923) பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, சமஸ்க்ருதம்,
ஆங்கிலம் என பன்மொழி புலமை உடையவர். 13 நாவல்களும் 11 சிறுகதைத் தொகுப்புகளும் என நூல்கள்
பல எழுதியவர். சிவானி பெண்களின் வாழ்வியலுக்கான புதிய வழிமுறைகளை இலக்கிய வழி உருவாக்கியவர்.
பெண்கள் தெய்வங்களாகப் போற்றப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வந்தாலும் நடைமுறை வாழ்வில்
அவர்கள் வேலைக்காரர்களாகவே நடத்தப்படுகின்றனர் என்பதை வெளிப்படுத்துவதாக இவருடைய படைப்புகள்
அமைந்திருக்கின்றன. சிவானியின் ‘கைஞ்சா’ (Kainja) என்னும் சிறுகதையில் ‘நந்தி திவாரி’ எனும் பெண் தான் விரும்பும் ஆணைத் திருமணம் செய்ய அவளது தந்தை
தடை விதிக்கின்றார். நந்தி திவாரியின் சாதகப்படி அவளைத் திருமணம் செய்பவர் இறந்துவிடுவார்
எனக் காரணம் சொல்லப்படுகின்றது. ஆனால் உண்மையான காரணம் அவளுக்கு வரதட்சணைக் கொடுக்க
இயலாது என்பதுதான். வரதட்சனைக் கொடுமை இன்றளவிலும் பெண்களுக்கு ஒரு பெரிய சுமையாக இருக்கின்றது
என்பதை இவர் தனது படைப்புகளில் வெளிப்படுத்தியுள்ளார்.
தற்பொழுது
பாகிஸ்தான் பகுதிக்குள் இருக்கும் குஜராத்தின் ஒரு பகுதியில் ‘கிருஷாணா
ஸோப்தி’ (1925) பிறந்தார். இந்தி இலக்கியத்தின் தலித் பெண்ணியப்
படைப்பாளர்களின் முன்னோடியாக விளங்குகின்றார்.
‘ஜிந்தகினாமா’ (Zindaginama)
எனும் நாவலிற்காக 1980 இல் சாகித்திய அகாடமி விருது
பெற்றுள்ளார். அதோடு 1999 இல் ‘கதா சூடாமணி’ (Katha Chudamani Award) என்னும் விருதினைப் பெற்றவர். வாழ்நாள் இலக்கிய சாதனையாளர்
விருதினையும் பெற்ற பெருமைக்குரியவர். இவர் எழுதிய ‘மித்ரோ மர்ஜானி’ (Mithro marjani) என்னும் குறுநாவல் ஒரு செவ்விலக்கியமாகக்
கருதப்படுகின்றது. ‘வர்த்தமான சாகித்ய’ என்னும்
இவரது நாவல் இலக்கியப் பத்திரிக்கையின் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருபதாம்
நூற்றாண்டின் சிறந்த பத்து இந்திப் புதினங்களில் ஒன்று என்னும் தகுதியைப் பெற்று விளங்கியது.
பெண்ணின் உடல் எப்போதுமே பாலுணர்வுக்கான குறியீடாக இருந்து வந்துள்ளது என்பதை வெளிப்படுத்துவதாக
இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. இந்நாவல் குறித்து ஆசிரியர் “தன்
சுயத்தை தேடும் முயற்சியில் மித்ரோ அந்த அடையாளத்தை மாற்றுகிறாள். படிப்பறிவற்ற ஒரு பெண்ணாக தனக்குச் சரி என்று பட்டதைத்
தீர்மானத்துடன் விளக்க முனைகையில் மித்ரோ உபயோகிக்கும் மொழி பொதுவான ஒன்றாக வடிவெடுக்கின்றது.
மித்ரோ தன் உடைகளைக் களைந்து மார்பகங்களை வெளிப்படையாக ரசிக்கும் அந்தக் கணம் இந்தியப்
பெண்களின் வாழ்வில் சரித்திரம் படைக்கும் கணம். பெண்ணின் உடலை அதுவரை ஆண்தான் ரசித்து
வந்திருக்கிறான். இப்போது ஒரு பெண்ணே தன் உடலை, தன் உடைமையை, கவனிக்கிறாள். அதுவும்
பெருமிதத்துடன். இதர மனிதர்களாலோ அல்லது விஷயங்களாலோ பாதிக்கப்படாமல் தன் விருப்பத்தை
நிறைவேற்ற முனையும் பெண்ணின் திறமையையும் மனோதிடத்தையும் சித்தரிக்கிறது”.[21] எனக் குறிப்பிடுகின்றார்.
‘சூரஜ் முகி அந்தேரே
கி’ (Suraj muki anthere ki) இக்கதையில் உள்ள கதாநாயகி ‘ரத்தி’ (Raththi) குழந்தைப்பருவத்தில் மானபங்கம்
செய்யப்பட்டு அதன் காரணமாக தனித்து வாழுகின்ற ஒரு கல்வியறிவற்றப் பெண்ணாக சித்தரிக்கப்பட்டுள்ளாள். இது போன்ற பெண் கதைமாந்தர்கள் வாழ்வில் படுகின்ற
துன்பங்களை இவரது படைப்புகள் விவரிக்கின்றன.
மத்தியப்பிரதேச
மாநிலத்தில் உள்ள பானபுராவில் பிறந்த ‘மன்னு பண்டாரி’ (1931) சிறந்த இந்தி எழுத்தாளரான ராஜேந்திர யாதவின் மனைவியாவார்.
இவருடைய தந்தை ‘சுக்சம்பத் பண்டாரி’ இந்தி
மொழியில் அகராதி உருவாக்கத்திற்காகப் பாடுபட்டவர். மன்னு பண்டாரி தன்னுடைய இளமைப் பருவத்திலேயே
எழுதும் ஆற்றலைப் பெற்றிருந்தார். இவருடைய முதல் சிறுகதை ‘மே~ ஹார் கயி’ (main haar gayi)
‘நான் தோற்றுவிட்டேன்’ என்பது ஆகும். நாவல்,
சிறுகதை, நாடகம் என இவருடைய படைப்புகள் நடுத்தர வர்க்க பெண்களின் உளவியல் சிக்கல்களை
ஆராய்வதாக அமைகின்றன. குறிப்பாக குழந்தைகளின் உளவியலை விளக்குவதில் வல்லமை பெற்றவராக
விளங்குகின்றார்.
‘ஆப்கா பண்டி’ (Aapka Panti) எனும் இந்நாவல் குழந்தையின் உளவியலைப் பற்றிப் பேசுகின்றது. தாய்க்கும் மகனுக்குமான
மனநிலையினை விவரிக்கின்றது. ஷகுந்த் கல்லூரி
ஆசிரியை, ஷகுந்தின் கணவன் அஜய், இவர்களின் மகன் பண்டி. பெற்றோர் பிரிந்து வாழுகின்ற
நிலையில் சட்டத்தின்படி அம்மாவிடமே பண்டி இருக்கின்றான். அவனுள் எழுகின்ற கேள்விகளும்
அவனுடைய எதிர்பார்ப்புகளும் தாய் தந்தையர் பிரிவினால் தனிமைப்படுத்தப்பட்ட ஒவ்வொரு
குழந்தைக்கும் உரியது ஆகும். ‘திரிசங்கு’ (Thirisangu) பள்ளிச் சிறுமியான தனுவிற்கும் அவளது தாய்க்குமான மனநிலையினை
விவரிக்கின்றது. தனு இயல்பாக இருக்கின்ற நேரத்தில் சாதாரணமாக இருக்கும் தனுவின் அம்மா
தனு சேகரைக் காதலிக்கிறாள் என்று தெரிந்ததும் தனுவின் தாத்தாவைப் போல எதிர்ப்புக் குரல்
கொடுக்கிறாள். ஒரு நேரம் தாத்தாவாக மாறுவதும் ஒரு நேரம் அம்மாவாக இருப்பதுமாக உள்ள
இந்த அம்மாவிடம் எப்படிச் சண்டையிடுவது? என்பதாக கதை முடிகின்றது. ‘மன்னு பண்டாரி’ மெல்லிய மனவோட்டங்களைச்
சித்திரிப்பதில் அவற்றினை விவாதிப்பதில் வல்லமை உடையவர்.
‘ம்ருதுளா கர்க்’ (1938) கல்கத்தாவில்
பிறந்தார். 1970 க்குப் பிறகு இந்தி இலக்கியத்தில்
தன்னுடைய படைப்புகளைப் படைத்துள்ளார். இவர் பத்து சிறுகதைத் தொகுதிகள், ஆறு புதினங்கள்,
இரண்டு நாடகங்கள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள், ஒரு பயணக் கட்டுரை என பலதுறைகளிலும்
தன்னுடைய பங்களிப்பினைக் கொடுத்துள்ளார். இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு என்னும் நூலில்
அளித்த பேட்டியில் தன்னுடைய படைப்புகள் குறித்து கருத்துக்கள் தெறிவித்துள்ளார். “அவகாஷ் எனும் சிறுகதையே
பின்னர் ‘உஸ்கே ஹிஸ்ஸே
கி தூப்’ என்ற நாவலாக விரிந்திருக்கிறது.
மணமான ஒரு பெண் இன்னொருவரைக் காதலித்து கணவனிடமிருந்து விவாகரத்துப் பெற்றுப் பிரிகிறாள்.
ஆனால் அவனிடமும் அவள் எதிர்பார்க்கும் நிறைவு கிட்டுவதில்லை. எதார்த்தமாய் முதல் கணவனைச்
சந்திக்கும்போது உன்னிடமிருந்து நான் விரும்பியது நிரந்தரமான பிரிவை அல்ல. சின்ன விடுமுறையைத்தான்.
ஆனால் அதை எப்படிக் கேட்டிருக்க முடியும்? எனக் கூறுவதாகக் கதை நிறைவு பெறுகிறது. 1980 இல் ‘அநித்யா’ எனும்
நாவல் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த புதினம். காந்தியக் கொள்கைகள் குறித்துப் பல
கேள்விகளை எழுப்பியிருந்தது. இந்நாவல் பலத்த சர்ச்சையைக் கிளப்பியது. ஒரு பெண்ணானவள்
அரசியலை மையப்படுத்தி சுதந்திரத்தின் அடிப்படை குறித்து வினாக்களை எழுப்பியதைச் சிலரால்
ஏற்க முடியவில்லை”[22]
எனப் பெண்படைப்பு என்பதால் சமூகத்தில் நிராகரிக்கப்பட்ட நிலையினை விளக்குகிறார்.
‘மெஹருனிசா பர்வேஸ்’ (1944) மத்தியப்
பிரதேச மாநிலத்தில் பிறந்தார். இவருடைய முதல் சிறுகதை ‘ஜங்கலி ஹிரானி’
(Jangali hirani) 1963 இல் தர்மயுக் இதழில் வெளியானது. இளம் வயதிலேயே கதை எழுதும் ஆற்றல்
பெற்றிருந்தார். இக்கதையில் காட்டில் வாழ்கின்ற மழைவாழ் மக்களின் பண்பாட்டினைப் பற்றியும்
அவர்களின் பிரச்சனைகளையும் பேசியுள்ளார். அதோடு மலைவாழ்ப் பெண்கள் அடைகின்ற துன்பத்தினையும்
சுட்டிக் காட்டியுள்ளார். அதனை அடுத்து 1972 இல் ‘உஸ்கா கர்’ (Uska gar) எனும் சிறுகதையானது சட்டப்படி திருமணம் செய்து கொள்ளாமல் ஆண்களுடன் வாழுகின்ற
பெண்கள் அடைகின்ற சிக்கல்களைக் குறித்துப் பேசுகின்றது. இவர் 6 நாவல்களையும் 12 சிறுகதைத்
தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். சமூகத்தின்
இயல்பிலிருந்து விலகிய கதை அமைப்பினை இவருடைய கதைகள் கருப்பொருளாகக் கொண்டிருக்கின்றன.[23]
‘மிருனால்பாண்டே’ (1946) மத்திய பிரதேசத்தில்
உள்ள திகம்கர் (Tikamgarh) எனும் ஊரில் பிறந்தார். இவர் அலகாபாத்தில் பல்கலைக் கழகத்தில் பயின்றார். ஆங்கிலம்,
சமஸ்கிருதம், இந்தி எனப் பன்மொழிப் புலமை உடையவர். இந்தியத் தொலைக்காட்சி நிறுவனராகவும் 1984 முதல் 1987 வரை ‘வாமா’ எனும் பெண்ணிய இதழிலும் ஹிந்துஸ்தான் பத்திரிக்கையின் பதிப்பாசிரியராகவும்
பணியாற்றியவர். இவர் ஆங்கிலத்திலும் இந்தியிலும் தனது படைப்புகளைப் படைத்திருக்கின்றார்.
தற்பொழுது பிரசார் பாரதியின் தலைவராகப் பணியாற்றி வருகின்றார். ‘பிப்போ’ (Bibbo) ‘பிட்ச்’ (Bitch) ஆகிய சிறுகதைகளை ஆசிரியரே
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். “மிருணால் பாண்டேவின் ‘ஹம் ஸஃபர்’ எனும் கதையானது வரதட்சணைக் கொடுமை
பற்றி விவாதிக்கின்றது. நிர்மலா இளம் வயதிலேயே விதவையானவள். நிர்மலா இரயில் பயணத்தில்
செல்கையில் தன்கணவன் இறப்பதற்கு முன்பு உள்ள வாழ்வைப் பற்றி நினைத்துப் பார்க்கிறாள்.
அப்பொழுது இருந்தது போன்ற ஆடை அணிகலன்கள் தற்பொழுது உடுத்த முடியவில்லையே என வருந்துவதாக
அமைத்திருக்கின்றார். கதை முழுவதிலும் விதவைகளின் உலகத்தைச் சித்திரிக்கின்றார்.”[24]
சுசீலா
டாக்பௌரே (1954) மத்தியப்பிரதேசத்தில்
உள்ள பானபுராவில் பிறந்தார். இவர் ஒரு தலித் பெண்ணியப் படைப்பாளி ஆவார். இந்தி இலக்கியத்தில்
முனைவர் பட்டம் வரை படித்தவர். அம்பேத்கரியம் குறித்து ஆய்வு செய்தவர். இரண்டு விமர்சன
நூல்கள், ஒரு கட்டுரைத் தொகுப்பு, மூன்று கதைத்தொகுப்பு, நான்கு கவிதைத் தொகுப்பு,
ஒரு நாடகம், ஒரு சுயசரிதை எனப் பல்வேறு துறைகளிலும் தன்னுடைய படைப்புகளை உருவாக்கியவர்.
மத்தியப்பிரதேசம் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் உள்ள தலித் சாகித்ய
அகாடமி விருதினைப் பெற்றுள்ளார். ரமணிக்கா ஃபௌண்டேஷன் சாவித்திரி பாய் பூலே விருதினை
அவருடைய படைப்புக்காக வழங்கியது. முக்கியமாக அவரின் தலித் பெண்ணியப் பார்வைக்காக வழங்கியது.
மஹாராஸ்டிர
மாநிலத்தில் நாக்பூர் நகரில் உள்ள சேஸரிமல் போர்வால் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார்.
தற்பொழுது மஹாராஸ்டிர மாநிலத்தில் தலித் பெண்களுக்கான இயக்கத்தில் சமூக சேவகியாக சேவை
செய்து வருகின்றார். இவருடைய படைப்புகள் பெண்ணியத்திலிருந்து வேறுபட்டுத் தலித் பெண்ணியத்தின்
தேவையினை வலியுறுத்துவனவாக அமைந்துள்ளன. இவருடைய சுயசரிதையான ‘சிகஞ்சே கா தர்த்’ (Shikanje ka Dard) என்னும் நூலில் தலித்தாகப் பிறக்கின்ற பெண்கள் சாதிக் கொடுமைகளாலும் ஆணாதிக்கக்
கொடுமைகளாலும் சிரமப்படுகின்ற விதத்தினை விளக்கியுள்ளார். சாதியாலும் பாலியலாலும் பொருளாதாரத்தாலும்
ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை தொகுத்துக் கூறுவதாகப் படைத்திருக்கின்றார். சமூகத்தில்
பெண்ணாகப் பிறந்தவள் மூன்று வகையான சிக்கல்களுக்கு ஆளாகின்றாள் என்கிறார். 1) பெண்ணாகப்
பிறப்பது 2) தலித் பெண்ணாகப் பிறப்பது 3) இந்தியப் பெண்ணாகப் பிறப்பது ஏனெனில் இந்த
மூன்று வகைகளிலும் பாலியல் சிக்கல், சாதியச் சிக்கல், மதச் சிக்கல் என பெண் தனது வாழ்க்கை
முழுவதும் அவளை அடிமைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாள் என்பதை சுசீலா டாக்பௌரே தனது
படைப்புகளில் வெளிப்படுத்துகின்றார். கணவனைத் தொழுவது, கற்புக்குரியவளாக இருப்பது,
வீட்டு வேலைகளைச் செய்வது, இவையே நல்ல மனைவிக்கு உரிய பண்புகள் என இந்து மதம் கூறுகிறது.
இத்தகைய நிலையினை மாற்றி பெண்கள் தங்களுக்கான வேலையினைத் தாங்களே சுயமாகத் தேர்ந்தெடுக்கின்ற
பொழுதுதான் பெண் விடுதலை சாத்தியமாகும் என்கிறார்.
இவருடைய
‘ப்ரதிக்ஷா’ (prathiksha) (காத்திருத்தல்) எனும் கதையில் ஒரு தலித் பெண்
வேறு ஒரு சமூக ஆணால் கைவிடப்பட்டு அப்பெண் பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்கிறாள்.
ஆண் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வகிறார். இது தலித்
பெண்ணிற்கு சமூகத்தில் பொதுவாக நிகழ்கின்ற அநீதிகளுள் ஒன்றாக இன்றும் இருந்து வருகின்றது.
இளமையில் சாதிபார்க்காமல் காதலிப்பது திருமணம் என்று வந்ததும் சாதியைக் காரணம் காட்டி
ஒதுக்குவது என தலித் பெண்களின் வாழ்வில் துன்பத்தினை ஏற்படுத்துகின்றது என்பதைச் சுட்டிக்
காட்டியுள்ளார். ‘மேரா
சமாஜ்’ (Mera
Samaj) (எனது சமூகம்) எனும் கதையில் தலித் மக்களின் துன்பத்தினைக்
கூறுவதோடு இந்து மதத் திருவிழாக்கள் தலித் மக்களிடம் எவ்வாறு மூடநம்பிக்கையினை உருவாக்குகின்றன
என்பது குறித்தும் விளக்குகின்றார். மேலும் தலித் பெண்ணின் அவல நிலை குறித்தும் இவைகளையெல்லாம்
ஒழித்துச் சமூகச் சீர்திருத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதாகவும் ஆசிரியர் கதையினை
சித்தரித்துள்ளார்.
[1]
பெண்ணியம் வரலாறும் கோட்பாடுகளும் – ராஜ்கௌதமன்
பக் -22
[2] பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும் – ச. முத்துச் சிதம்பரம்
[3] யுனிவெர்சல்
டீலக்ஸ் அகராதி பக் – 628
[4] ஆக்ஸ்போர்டு
அகராதி பக் – 610
[5] பெண்மையச்
சிந்தனைகள் –முனைவர் இரா. செல்வி பக் – 09
[6] பெண்ணியச் சுவடுகள்
– முனைவர். வாசுகி ஜெயரத்தினம், 2009, பக் – 02.
[7]
பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும் – ச.
முத்துச் சிதம்பரம், பக் – 75
[8] பெண் – மரபிலும் இலக்கியத்திலும், இரா. பிரேமா, பக்
-127
[9] பெண்ணியம் – இரா. பிரேமா,
1994, பக் -54.
[10] தலித்
பெண்ணிய அழகியல், அரங்க மல்லிகா பக் – 45
[11] உடலரசியல்
சிவகாமி, பக் – 145
[12]
தலித் பெண்ணியம், தலித் பெண்களின் உளவியல் – மார்க்ரெட் கலைச்செல்வி, பக் – 63
[13]
பெண்நிலை வாதம் சில கேள்விகள்,
மொலினா தேன்மொழி, பக் – 12)
[14] பெண்ணியச் சுவடுகள்
– முனைவர். வாசுகி ஜெயரத்னம், 2009, பக் – 06.
[15] புதிய காற்று – மாத இதழ்,
பிப் -2007
[16] அணங்கு
பெண்ணிய வெளி, ஆகஸ்ட் – 2006.
[17] பெண்மையச் சிந்தனைகள், முனைவர் இரா. செல்வி. பக் – 26
[18] முனைவர் அ. பாலின் ஜெயசீலி - தஞ்சைப் பெண் படைப்பாளிகள்.
[19] முனைவர் அ. பாலின் ஜெயசீலி -
தஞ்சைப் பெண் படைப்பாளிகள்.
[20] காலச் சுவடு – சிவகாமியின்
நேர்காணல், சந்திப்பு – ஸ்டாலின் ராஜாங்கம்.
[21] ச. சிவசங்கரி - இலக்கியம்
மூலம் இந்திய இணைப்பு (கிருஷ்ணா சோப்தியின் பேட்டி)
[22] ச. சிவசங்கரி - இலக்கியம்
மூலம் இந்திய இணைப்பு
[23] Jayadipsinh Dodiya, k.And Surendran, k. v. (3rd Edition
2000). Indian Women Writters: Critical Perspectives.
[24]
Susie Tharu and K.Lalita.
(1993) Women Writing In India. Vol. 2 (The 20 th Century).