ஆய்வு அறிமுகம்
தொடக்ககால மனிதர்கள் உருவத்தில் விலங்குகளிலிருந்து
வேறுபட்டுத் தோன்றினாலும் அவர்கள் விலங்குகளைப் போல வேட்டையாடியும் மரக்கிளைகள், குகைகள்
போன்ற இடங்களில் உறங்கியும் ஒரு நிரந்தரமற்ற
நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர். பொருட்களைச் சேமிப்பது குறித்துச் சிந்திக்காத,
எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாத ஒரு மேம்பட்ட விலங்கினமாகவே வாழ்ந்து வந்தனர். இச்சமூகத்தினரை
வேட்டைச் சமூகம் என்கிறோம். இச்சமூக மக்களின் முதன்மையான தொழில் வேட்டையாடுதல் ஆகும்.
இவர்களிடம் எவ்வித பாலின ஏற்றத்தாழ்வுகளும் கிடையாது. இத்தகைய வேறுபாடற்ற ஒரு சமத்துவச்
சமூகத்தினையே தாய்வழிச் சமூகம் என்கிறோம். பெண் என்பவள் உற்பத்திக்கு உரியவள். அவள்
இனத்தின் எண்ணிக்கையை வலுவடையச் செய்பவள். அத்தகையப் பெண்ணின் வழிகாட்டுதலில் தாய்வழிச்சமூகம்
செயல்பட்டது. அங்கு கட்டற்ற பாலுறவு பண்பாடாகப் போற்றப்பட்டது.
காலப்போக்கில்
நாகரிக வாழ்வில் அடியெடுத்து வைத்த சமூகம்
ஓரிடத்தில் நிலையான குடியிருப்புகளை உருவாக்கி உழவுத்தொழிலை மேற்கொள்ளத் தொடங்கியது.
இந்நிலையில் நிலம், பொருள் அவற்றின் சேமிப்பு மற்றும் தேவை குறித்து சிந்திக்கத் தொடங்கினர்.
இவ்வாறு நிலையான வாழ்வினை மேற்கொண்ட சமூகம் பொருளை உற்பத்தி செய்யத் தொடங்கியது. இச்சமூகத்தில்
வேட்டையாடுவதன் அவசியமும் குறையைத் தொடங்கியது. உற்பத்தி செய்ததில் மிஞ்சிய பொருட்களைச்
சேமித்து வைக்க நாகரிகச் சமூகம் கற்றுக்கொண்டது. இந்நிலையில் பெண் குறிப்பிட்ட (கர்ப்பம்
தரிக்கின்ற) காலகட்டத்தில் உணவு உற்பத்திப் பணிகளில் முழுவதுமாக ஈடுபட முடியாத சூழல்
உருவானது. ஆண் உற்பத்திக்கு உரியவனாகக் கருதப்பட்டான். எனவே பொருளாதாரம் (பொருள்+ஆதாரம்) சார்ந்து இயங்குபவன் ஆண் எனவும் அவனுடைய செயல்பாடுகளுக்குக்
கட்டுப்பட்டவள் பெண் எனவும் சமூகம் கட்டமைக்கத்
தொடங்கியது.
இங்குதான் பெண் உழைப்பிற்கான ஊதியச் சுரண்டல் முதலில் தோன்றியது எனலாம். இந்நிலையில் ஆணாதிக்கச் சிந்தனைக்குரிய சமூகம் தோற்றம் பெறத்
தொடங்கியது.
பெண்களுக்கான வேலைகள், அவர்களின் குணநலன்கள் குறித்து
ஆணாதிக்கச்
சமூகம் வரையறுக்கத் தொடங்கியது. பொருள் ஈட்டுபவன் ஆண் என்ற நிலை உருவான பிறகு தன் பாதுகாப்புக் கருதி பெண் தனக்கென ஓர் ஆணைத் தேர்ந்தெடுக்க
வேண்டிய சூழலில் சிக்கிக்கொண்டாள். ஆண் தனக்கு விருப்பமானவளைத் தேர்ந்தெடுக்கவும் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை உரிமையாக்கும் அதிகாரத்தையும் உடையவன் ஆனான்.
தனக்குப் பிறகு தன்னுடைய சொத்துக்கள் ஆண் வாரிசுகளுக்குச் சென்றடையுமாறு செய்த உத்திமுறையே
ஆணாதிக்கத்தினைக் காலந்தோறும் நீடிக்கச் செய்துகொண்டுள்ளது. மேலும் ஆணாதிக்கச் சிந்தனையில் உருவான மதம், சாதி, கடவுள் குறித்த நம்பிக்கைகள் அனைத்தும் பெண்களுக்கு எதிராகச் செயல்படத் தொடங்கின. இலக்கியங்கள் பெண்ணை ஆணின் நுகர்வுப் பொருளாகக் கட்டமைத்தன. பொருளால் கட்டுப்படுத்தப்பட்டு
பின்னர் பொருளாகவே கட்டமைக்கப்பட்ட பெண்ணின் அடிமை வரலாறுதான் இன்றைய உலக வரலாறு ஆகும்.
சாதியம் எவ்வாறு ஒவ்வொருவரின் உள்ளத்திலும் தனது கோர முகத்தினைக் காட்டுகின்றதோ அவ்வாறுதான் ஆண்களால் எழுதப்பட்ட
வரலாற்றில் பெண்கள் சித்தரிக்கப்பட்டு வந்திருக்கின்றனர்.
எனவே பெண் விடுதலை பற்றி அறிய வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வது அவசியமாகிறது.
பண்பாட்டைக்
கட்டுடைப்புச் செய்து ஆண்–பெண்ணிற்கு இடையேயான உரிமைகளைச் சரிசமமாக்க வேண்டும். ஆண்–பெண்ணிற்கு ஊதியம் என்ற நிலை மாறி உழைப்பிற்கு ஊதியம் என்ற நிலை உருவாக வேண்டும்.
இது போன்ற சிந்தனைகளை முன்வைத்து உருவான சமூக மறுமலர்ச்சிச் சித்தாந்தமே பெண்ணியம் ஆகும்.
இத்தகைய பெண்ணியக் கருத்துக்களை
மனதிற்கொண்டு இந்திப் பெண்ணிய எழுத்தாளர் ‘மன்னு பண்டாரி’ எழுதிய ‘திரிசங்கு’ மற்றும் சுசீலா டாக்பௌரே எழுதிய ‘எனது சமூகம்’ என்னும் இரு சிறுகதைகளையும் தமிழில் மொழிபெயர்த்து அச்சிறுகதைகளைப் பெண்ணியம் மற்றும்
தலித் பெண்ணியம் என்னும் அடிப்படையில் திறனாய்வு செய்வதாக இவ்வாய்வு
அமைக்கப்படுகின்றது.
மேலும் இச்சிறுகதைகளை இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதன் வழி ஏற்படும் சிக்கல்களைக் குறித்து
விளக்குவதுமாகவும் இவ்வாய்வு அமைகின்றது.
ஆய்வு நோக்கம்
பெண்ணியக் கோட்பாடானது தனிப்பட்ட மொழிக்கானது என்றோ
நாட்டிற்கானது
என்றோ சுருக்கி விட இயலாது. அது
மனித இனத்தின் சம உரிமைக்கானது. இவ்வுரிமை சார்ந்த செய்திகள் உலக இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டு வந்துள்ளன. அதேபோல
இந்திய அளவிலும்
பெண்ணியத்திற்கென தனித்த வரலாறு உண்டு. இந்நிலையில் இந்தி மொழியில் உள்ள இரு பெண்ணியச்
சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து அச்சிறுகதைகளை பென்ணிய நோக்கில் திறனாய்வு செய்து
பெண்ணியத்திலிருந்து தலித் பெண்ணியம் வேறுபடுகின்ற தன்மையினைக் கூறுவதையும் இந்தித்
தமிழ் மொழிபெயர்ப்பின் வழி ஏற்படுகின்ற மொழிபெயர்ப்புச் சிக்கல்களைக் கண்டறிவதையும் நோக்கமாகக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது.
கருதுகோள்
இந்திய மொழிக் குடும்பத்திற்குள் திராவிட மொழிக்குடும்பத்தில் உள்ள தமிழ், இந்தோ ஆரிய மொழிக்குடும்பத்தில் உள்ள இந்தி ஆகிய இருமொழிகளும் இலக்கண அடிப்படையில் பல்வேறு ஒற்றுமை வேற்றுமைகளைக் கொண்டுள்ளன. எனவே இரு மொழிகளிலும் உள்ள இலக்கியங்களை மொழிபெயர்க்கையில் இலக்கண ரீதியாக சிக்கல்கள் ஏற்படுகின்றன என்பதினைக் கருதுகோளாகக் கொண்டு இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கையில் ஏற்படுகின்ற சிக்கல்களைக் கண்டறிவதுடன் அவற்றினைக் களைந்து சிறந்த மொழிபெயர்ப்பினைக் கொடுக்கும் வழிமுறைகளை விளக்குகின்ற விதமாக இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது.
மேலும் சாதிய ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட இந்தியச் சமூகத்தில்
பெண் இரண்டு வகைகளில்
தாழ்த்தப்படுகின்றாள். ஒன்று பெண்ணாகப் பிறப்பது. மற்றொன்று தலித் பெண்ணாகப் பிறப்பது.
எனவே பெண்ணியத்திலிருந்து மாறுபட்டுத் தலித் பெண்ணியம் எனும் ஒருபிரிவு தோற்றம் பெற்றுள்ளது.
இது பெண்ணியத்திலிருந்து கோட்பாட்டளவில் வேறுபடுகின்றது என்பதினை உணர்த்தும் விதமாக
ஒரே மொழியினை, ஒரே ஊரினைச் சார்ந்த இருவேறு சமூகத்தில் தோன்றிய இந்திப் பெண்ணிய எழுத்தாளர்களான
மன்னு பண்டாரி மற்றும் சுசீலா டாக்பௌரே அவர்களின் சிறுகதைகள் இரண்டினை ஒப்பீடு செய்வதாகவும்
இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது.
ஆய்வு அணுகுமுறை
தமிழ் - இந்தி இரு மொழிகளிலும் 20 ஆம் நூற்றாண்டில் தோன்றிய
பெண்ணியப் படைப்பாளர்கள்
குறித்த பதிவுகளைக் கூறுவதில் வரலாற்று அணுகுமுறை, மொழிபெயர்ப்பில் ஏற்படுகின்ற மொழிபெயர்ப்புச்
சிக்கல்களை ஆராய்வதிலும் பெண்ணியத்திலிருந்து தலித் பெண்ணியம் வேறுபடுகின்ற தன்மையினைக் கூறுவதிலும் ஒப்பீட்டு அணுகுமுறை என இவ்விரண்டும்
ஆய்வு அணுகுமுறைகளாகப் பின்பற்றப்படுகின்றன.
ஆய்வுப்
பயன்
இவ்வாய்வில் இந்தி - தமிழ் இலக்கியங்களில் 20 ஆம் நூற்றாண்டில் தோன்றிய முக்கியமான பெண் படைப்பாளர்களை வரலாற்று நோக்கில் அறிமுகப்படுத்துவதால்
இரு
மொழிகளிலும்
தோன்றிய
பெண்
படைப்பளர்களை
அவர்களின்
காலப்
பின்னணியோடு
ஒப்பிட்டு
அறிந்துகொள்ள
முடிகின்றது.
மேலும்
பெண்ணியத்திலிருந்து
தலித்
பெண்ணியம்
வேறுபடும்
விதத்தினை
விளக்குவதால்
இன்றைய
சமூகத்தில்
தலித்
பெண்ணியத்தின்
தேவையினை
உணர
முடிகின்றது.
சிறுகதையின்
அமைப்பு
முறையினைத்
தேர்ந்தெடுத்த
சிறுகதைகளுடன்
பொருத்திப்
பார்ப்பதும்
பெண்ணிய
நோக்கில்
சிறுகதைகளைத்
திறனாய்வு
செய்வதும்
சிறுகதைகளை
அமைப்பு
ரீதியாகவும்
கருத்து
ரீதியாகவும்
வாசித்துப்
புரிந்து
கொள்வதற்குப்
பயனுள்ளதாக
அமைகின்றது.
இந்தியில்
உள்ள
இரு
சிறுகதைகளை
மொழிபெயர்த்து
அதில்
எழுகின்ற
மொழிபெயர்ப்புச்
சிக்கல்களை
விளக்குவதன்
மூலம்
இந்தி
- தமிழ்
மொழிகளுக்கிடையே
சிறந்த
மொழிபெயர்ப்புத்
தோன்றுவதற்குத்
தேவையான
வழிமுறைகளைக்
கண்டறிய
முடிகின்றது.
ஆய்வு ஆதாரங்கள்
மன்னு பண்டாரியின் ‘திரிசங்கு’ எனும் சிறுகதையும் சுசீலா டாக்பௌரேயின் ‘எனது சமூகம்’ எனும் சிறுகதையும் முதன்மை ஆதாரங்களாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. மேலும் ஆய்விற்குத் தொடர்பான கட்டுரைகள்,
நூல்கள்,
முன் ஆய்வுகள்,
இதழ்கள்,
மற்றும் இணையதள
இடுகைகள் என பல்வேறு நிலைகளில் சேகரிக்கப்படுகின்ற தரவுகள் ஆய்வின் துணைமை ஆதாரங்களாக
எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
ஆய்வு எல்லை
இந்தி - தமிழ் இலக்கியங்களில் வரலாற்று நோக்கில் தற்காலப் பெண்
படைப்பாளர்களின் இலக்கியப் பதிவுகள் குறித்த அறிமுகப்படுத்துவதும் மொழிபெயர்த்த சிறுகதைகளைத்
திறனாய்வு செய்வதும் அதிலுள்ள மொழிபெயர்ப்புச் சிக்கல்களைக் கூறுவதும் ஆய்வு எல்லையாக
அமைகின்றது.
இயல் பகுப்பு
இயல்
- 1: முன்னுரை
இவ்வியல் ஆய்வு
நோக்கம்,
கருதுகோள்,
ஆய்வு
அணுகுமுறை,
ஆய்வுப்பயன்,
ஆதாரங்கள்,
எல்லை,
என
ஆய்வு
குறித்த அறிமுகம் கொடுக்கப்பட்டுள்ளது.
இயல்
- 2 : பெண்ணியம்
மற்றும்
பெண்
படைப்பாளர்கள் ஓர் அறிமுகம்
இவ்வியலில் பெண்ணியம் விளக்கம், தோற்றம், வளர்ச்சி, மற்றும் கோட்பாடு எனப் பெண்ணியம் குறித்த ஓர் அறிமுகம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் - இந்தி இலக்கியங்களில் தோற்றம் பெற்ற முக்கியமான பெண்படைப்பாளர்கள் மற்றும் அவர்களின் படைப்புகள் குறித்த அறிமுகம் கொடுக்கப்பட்டுள்ளது.
இயல்
- 3 : மொழிபெயர்த்த சிறுகதைகளின் அமைப்பும் திறனாய்வும்
சிறுகதை இலக்கியம் மரபிலக்கியங்களிலிருந்து மாறுபட்டுப் புதுமையைத் தோற்றுவிக்கும் விதமாகத் தோற்றம் பெற்றுள்ளது. இத்தகையச் சிறுகதை இலக்கிய அமைப்பு குறித்து அறிஞர்களால் விவாதிக்கப்பட்ட கருத்துக்களை ஆய்விற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதாகவும் அச்சிறுகதைகளில் காணப்படும் பெண்ணியக் கருத்துக்களைத் திறனாய்வு செய்வதாகவும் இவ்வியல் அமைக்கப்பட்டுள்ளது.
இயல்
- 4 : மொழிபெயர்ப்பும் மொழிபெயர்ப்புச் சிக்கல்களும்
இவ்வியலின் முதல் பகுதி மொழிபெயர்ப்பு விளக்கம் மற்றும் கோட்பாடு குறித்து அறிமுகப்படுத்துவதாக அமைகின்றது. மேலும் இந்தியிலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட சிறுகதைகளில் உள்ள மொழிபெயர்ப்புச் சிக்கல்களை ஒலியனியல், உருபனியல், தொடரணியல் என வகைப்படுத்தி ஆய்வு செய்யப்படுகின்றது.
இயல்
- 5 : முடிவுரை
மேற்கண்ட மூன்று இயல்களிலும் விவாதிக்கப்பட்ட செய்திகளின் வழிக் கண்டறிந்த முடிவுகள் இவ்வியலில் கூறப்படுகின்றன.
பின்னிணைப்பு
இந்தி மொழியில் உள்ள உயிரெழுத்துக்கள் மற்றும் மெய்யெழுத்துக்கள் தமிழ் உச்சரிப்புடனும் மொழியியல் உச்சரிப்புடனும் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன. இந்த அட்டவணையின் அடிப்படையில் சிறுகதைகள் ஒலிபெயர்க்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து சொல்லடைவில் பயின்று வந்துள்ள இலக்கணச் சொற்களுக்குச் சுருக்கக் குறியீட்டு விளக்க அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைகளின் சொற்களைச் சொல்லடைவு செய்யும் முறையினையும் அச்சொல்லடைவின் பயன்பாடுகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளன. சொல்லடைவினை அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக இந்தி மொழிச் சொல், ஒலிபெயர்ப்பு, இலக்கணக் குறிப்பு, மற்றும் சொல் கதையில் பயின்று வருகின்ற இடம் என வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளை இந்தி மொழி வடிவம், தமிழ் மொழியில் ஒலிபெயர்ப்பு வடிவம், தமிழின் மொழிபெயர்ப்பு வடிவம் என வரிசைப்ப்டுத்தப்பட்டு
பின்னிணைப்பில்
சேர்க்கப்பட்டுள்ளன.
இவ்வாய்வின்
நான்காவது
இயலாக
அமைக்கப்பட்டுள்ள
மொழிபெயர்ப்பும்
மொழிபெயர்ப்புச்
சிக்கல்களும்
என்னும்
தலைப்பில்
இந்தி
– தமிழ் மொழிகளுக்கு இடையே ஏற்படுகின்ற மொழிபெயர்ப்புச் சிக்கல்களைப் பற்றி விவாதிப்பதற்கு தேவையான முதன்மைத் தரவுகளாகப் பின்னிணைப்பில் உள்ள செய்திகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. மொழிபெயர்ப்புப் பயிற்சிக்காகவும் இலக்கண அடிப்படையில் மொழிபெயர்த்தல் வேண்டும் என்பதற்காகவும் சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைகள் பின்னிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் இப்பின்னிணைப்புப் பகுதிகள் முனைவர்பட்ட ஆய்விற்கு முன்மாதிரியாகச் செய்யப்பட்ட மொழிபெயர்ப்புப் பயிற்சியாக அமைந்துள்ளன.