கதை அமைப்பு முறை
கதைத் தலைப்பு : திரிசங்கு, ஆசிரியரின் பெயர்: மனு பண்டாரி.
கதை மாந்தர்கள் அறிமுகம்
கதையின் தலைமைக் கதை மாந்தர் ‘தனு’, தனுவின் அம்மா, அப்பா இவ்விருவர்களின் பெயர்கள் குறிப்பிடப் படவில்லை. வீட்டு வேலைக்காரன். எதிர் விட்டு மாடியில் தங்கியிருக்கும் சேகர் மற்றும் நண்பர்கள். தனுவின் அம்மா கல்லூரிப் பேரசிரியை, தனுவின் தந்தை ஆற்றுகின்ற வேலை குறிப்பிட வில்லை. வேலைக்காரன் பற்றிய எந்த விவரனைகளோ, உரையாடல்களோ கதையில் காணப்படவில்லை. “வெலைக்காரனை அனுப்பி அவர்களை அழைத்ததும் அடுத்த நிமிடமே எல்லோரும் ஆஜர்”. என்ற ஒரு வரி வீட்டில் வேலைக்காரன் உள்ளான் என்பதற்கான சான்றாகிறது. தனுவைப் பற்றிக் குறிப்பிட வேண்டுமெனில் பள்ளி மாணவி, அதைத்தவிர படிக்கும் வகுப்பு, பள்ளிக்கூடம் பற்றிய தகவல்கள் எதுவுமில்லை. எதிர் வீட்டில் தங்கி இருக்கும் மாணவர்களில் முதன்மைக் கதை மாந்தர் சேகர். மற்ற அனைவரும் தனுவின் நண்பர்கள் என்ற பொதுவான வார்த்தைகுள்ளாகவே குறிப்பிடப்படுகின்றனர்.
கூற்று
தனுவின் கூற்றில் கதை சொல்லப்படிகின்றது. கதையில் காட்சிப்படுத்தும் ஒவொவொரு காட்சிகளிலும் தனுவைப் பற்றிய விவரணைகளும் தனுவின் பள்ளிப்பருவத்தில் முதன்முதலில் ஏற்பட்ட காதல் அனுபவத்தையும் அதனை கல்வியாளர்களான பெற்றோர்கள் அனுகிய வித்திதினையும் சமூகம் காட்டிய எதிர்ப்பினையும் இவர்களின் உளவியல் தன்மை மாறாது இவ்வாறு நடந்தது என தனது முதிர்ந்த நிலையில் கதை சொல்வது போன்று அமைந்துள்ளது. எந்தவொரு ஆசிரியனும் கதை கூறுகையில் தன்னுடைய கதைக்குள் ஏதேனும் ஒரு கதாப்பாத்திரத்தில் முக்கியமாக தலைமைக் கதாப்பாத்திரத்தில் ஒழிந்திருப்பார். எனவே மனு என்னும் ஆசிரியர் தனு எனும் கதாப்பாத்திரமாக உருவெடுத்திருப்பது நம்மால் எளிதில் உணரமுடிகின்றது.
தொடக்கம்
கூற்றின் அடிப்படையில் மனு எனும் ஆசிரியர் தனுவாக உருவெடுத்திருப்பதைக் கண்டோம். அதன்படி கதைப்போக்கினை ஆசிரியரின் மனநிலையில் காண்பது சிறப்பு. “ஒரு வீட்டின் நான்கு சுவர்கள் ஒரு மனிதனுக்கு பாதுகாப்பு உணர்வைத் தருகின்றன. கூடவே ஒரு வரைகோட்டிற்குள் அவனைக் கட்டுப்படுத்தி விடுகின்றன. பள்ளிகளும், கல்லூரிகளும் மனிதனுடைய அறிவை, ஆற்றலை வளம்பெறச் செய்கின்றன. கூடவே ஒழுங்கு கட்டுப்பாடு, நியமங்கள், சட்டம் என்ற பெயரில் அவனது ஆளுமையை குன்றச்செய்தும் விடுகின்றன – நண்பர்களே! விஷயம் இதுதான். ஒவ்வொன்றிலும் அதற்கு எதிர்மறையான வித்துக்களும் அடங்கியுள்ளன”. என ஒருவகையான பெரும் தத்துவதினை இங்கு பள்ளிமாணவி தனுவின் கூற்றில் குறிப்பிடுகின்றார். இம்முதல் பத்தியினை படிக்கும் அனைவரும் கதை ஆசிரியன் கூற்றாகவே தொடங்குகிறது என்று எண்ணுவது இயல்பு. ஆனால் கதையினைத் தொடர்ந்து வாசிக்கின்ற நிலையிலேதான் இதனை அனைவராலும் உணர முடிகின்றது.
காலப்பின்னணி
கதையில் குறிப்பிடும்படியான நூற்றாண்டு, ஆண்டு என எந்தக் குறிப்புகளும் காணப்படவில்லை. ஆசிரியரின் காலக்கட்டதினை நோக்குவோமோனால் 1931 ல் பிறந்துள்ளார். 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்த இவர், 1980 க்குப் பிறகே இக்கதையினை உருவாக்கியுள்ளார். ஏறத்தால 50 ஆண்டுகால வாழ்க்கையின் முதிர்வில் ஓர் இளம் பெண்ணின் அதாவது பள்ளிச் சிறுமியின் உளவியலை, மிகவும் இயல்பாக படைத்திருக்கின்றார். பெண்ணியச் சிந்தனைகள் முழுமையாக தோற்றம் கொள்ளாத காலக்கட்டத்திலேயே ஆசிரியர் தனது பெண்ணியக் கருத்தாக்கம் கொண்ட படைப்புகளை உருவாக்கியது என்பது ஹிந்தி இலக்கியத்தில் பெண்ணியச் சிந்தனைகள் தோன்றுவதற்கு முக்கியக் காரணமாயிருக்கின்றது.
சமூகப்பின்னனி
சூழல்தான் ஒவ்வொரு படைப்பின் உருவாக்கத்திற்கும் காரணமாகின்றது. இங்கு இடம் என்பது சமூகம் என்ற அடிப்படையில் பொருள்படுகின்றது. சமூகமானது இருப்பிடம், கல்வி, மதம், சாதி, பொருளாதாரம் இவற்றை சார்ந்து இயங்குகின்றது. கதையின் அடிப்படையில் நோக்குகையில் நடுத்தர நகர்ப்புரத்தில் வாழும் குடும்ப நிலை குறித்து கதை விவாதிக்கின்றது. சாதி, மதம் குறித்து எந்தவிதப் பதிவிகளும் இல்லை. வேண்டுமெனில் கதையாசிரியரின் சமூகப் பின்னனியை பொருத்திப்பார்க்க கதை இடமளிக்கின்றது. இந்தியத் தலைநகரம் டெல்லியை மையமாகக் கொண்டுள்ளது.
”எங்களுடைய வட்டாரத்தில் ஹாத்ரஸ், குர்ஜாவிலிருந்து வந்திருந்த வியாபாரிகள், பிஸினெஸ்கார்ர்கள் தான் அதிகம்.” எனும் வரிகள் கதை நிகழும் இடத்தினைப் பற்றிக் கூறுகின்றன. இதனைக் காலப்பின்னணியோடு பொருத்தி சிறு ஆய்வினை மேற்கொள்வோமெனில் தற்பொழுது டெல்லியில் கதை நிகழ்ந்த இடத்தினை எளிதில் கண்டறியலாம்.
மையம்
ஒரு படைப்பு உருவாகிறது என்றால் அது படைக்கப்படுவதற்கு முன்பாக, படைப்பாளியின் மனதில் படைப்பிற்குக் காரணமாகத் தோன்றும் உணர்வே ஒவ்வொரு படைப்பிற்கும் மையமாக அமைகின்றது. இம்மையக்கருத்தினை சார்ந்து. கதைமாந்தர்களும் கதைபின்னணியும் படைப்பாளியால் தீர்மானிக்கப்படுகின்றன. உளவியல் அடிப்படையில் பெரும்பாலான படைப்புகளில் உள்ள தலைப்பே கதைக்கருவாவதை உணரலாம். அவ்வாறு இக்கதையில் கதைத் தலைப்பு மையமாகிறது.
இக்கதையில் குடும்பச் சூழல், கல்வியறிவு பெற்ற காதல் திருமணம் செய்து கொண்ட நடுத்தர வர்க்கத்தினைச் சார்ந்த தம்பதியருக்குப் பிறந்த ஒரு பெண்ணின் உளச்சிக்கல்கள் கதையாக உருவெடுக்கின்றது. தனுவின் வீட்டிற்கு எதிரே இருந்த மாடியில் தங்கியிருக்கும் மாணவர்கள் தனு மொட்டை மாடிக்கு வருவதைக் கண்டு கிண்டல் செய்வதை அம்மாவிடம் கூறுகின்ற பொழுது அம்மா அவர்களை அழைத்து உபசரித்து, தனுவிற்கு நண்பர்களாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளுகையில் தனுவின் தோழியாகவும், சில நாட்களுக்குப் பிறகு தனுவின் நண்பர்களில் ஒருவனாகிய சேகர் என்பவனிடம் மட்டும் நீண்ட நேரம் பேசுவதை உணர்ந்து தனுவின் அம்மா, அவளைக் கண்டிக்கவும் செய்கிறாள். தனுவின் அப்பாவை தனுவின் அம்மா காதலிக்கின்ற பொழுது, தனுவின் தாத்தா காட்டிய எதிர்ப்பினை அதே போன்று மரபுநிலை மாறாமல் தனது மகளைக் கண்டித்து வளர்க்க வேண்டிய அம்மாவாகவும் எதிர் வீட்டினர் தனுவைப் பற்றி தனுவின் அம்மாவிடம் தவறான தகவல்களைக் கொடுத்த பிறகு ஆணாதிக்க சமூகத்தில் ஒரு பெண்ணைக் கட்டுப்படுத்தி ஒடுக்கி வளர்க்க வேண்டிய சமூகப் பிரதிநிதியாகவும், தனுவின் அம்மா மூன்று முகங்களை மூன்று கோணங்களில் காலத்திற்கு ஏற்ப காட்டுபவளாக இருக்கின்றாள் என்பதனையே தரிசங்கு எனும் தலைப்பு குறிப்பிடுகிறது. இதுவே கதைக்குக் கருப்பொருளாகவும் அமைகின்றது.
உறவுநிலை
கதையில் வளம் வருகின்ற கதைமாந்தர்களுக்கு இடையேயான உறவானது எத்தகையது, அதைதாண்டி கதையில் அவர்களுக்கிடையேயான உறவுநிலை எவ்வாறு சித்தரிக்கப்படுகின்றது என்பதை பற்றிக் காண்பதாக அமைகின்றது.
”ஒரு நாள் அம்மாவிடம் சொன்னேன். “மம்மீ! எதிர் வீட்டு மாடிக்கு பையன்கள் – குடி வந்திருக்கிறார்களே! எப்பொழுது பார்த்தாலும் என் மீது ரிமார்க் பாஸ் செய்து கொண்டே இருக்கிறார்கள். நான் சும்மா இருக்கப் போவதில்லை. நான் இங்கிருந்தே பதில் கூறப்போகிறேன்” “எந்தப் பையன்கள்?” அம்மா வியப்புடன் வினவினாள்.
அம்மா சொன்னாள் – “நாளை சாயந்தரம் இவர்களை ….. தேநீர் விருந்துக்கு அழைக்கலாம். அப்பொழுது உனக்கு இவர்களை நண்பர்களாக்கி விடுகிறேன்.” நான் திகைத்துப் போனேன்.” என காட்டப்படுகிற கதைக் காட்சிகள் தாய் – மகள் என்கிற உறவு நிலையினைக் கடந்து ஒரே வயதினையுடைய தோழியர்களுக்கிடையேயான உறவு நிலையினைக் காட்டுகின்றது. மேலும் தந்தை – மகள் உறவு நிலை பற்றிக் காணுகிற பொழுது, ”அப்பா மட்டுமென்ன? இதிலெல்லாம் குறைந்தவரா? அம்மா கூறியதெல்லாம் கேட்டதும் அவரும் மகிழ்ச்சியடைந்தார்.”
”அப்பா அவர்களை உற்சாகப்படுத்தினார். “அரே இந்த வயதில் எல்லாம் இப்படிதானிருக்கும் இப்பொழுது இப்படி இல்லாவிடில் பின் எப்பொழுது மஜாவாக இருக்கப் போகிறீர்கள்?” என்றார்.” ”எனக்கு இப்பொழுது அப்படியொரு சந்தர்ப்பம் கிடைத்தால் விடமாட்டேன்”. என தனுவின் தந்தை பற்றிய விவரனைகள் தந்தை – மகளுக்கான இயல்பு நிலை கடந்து நண்பர்கள் என்ற உறவுநிலை இருப்பதை உணரலாம்.
மேலும் ”தங்களுடைய இளம் வயதுப் பெண்ணை டீஸ் செய்யும் இளைஞர்களை வீட்டிற்கு அழைத்து தேநீர் வழங்குவதும், தங்களுடைய பெண்ணிற்கு நண்பர்களாக்குவதும், ரொம்பவும் த்ரிலிங்கான, பரவசமான விஷயமாக இருந்தது.”என்று கூறுவது ஒரு குடும்பத்திற்குள் தாய், தந்தை மகள் இவர்களுக்கு இடையேயான நட்புரீதியான உறவு நிலையினை வெளிப்படுத்துகின்றது.
கதை முடிவு
தனு தன்னுடைய மனதில் தோன்றிய முதலில் தோன்றிய காதல் உணர்வை இயல்பான நிலையில் எவ்வித எதிர்ப்புமின்றி பெற்றோருக்காக விட்டுக்கொடுப்பது போன்ற காட்சி அமைகின்றது. ஒரு கணம் தாத்தாவாக, ஒரு கணம் அம்மாவாக வாழ்பவளுடன் எப்படிச் சண்டை போடுவது? என்பதாகவே கதை முடிவடைகின்றது.