திங்கள், மே 18, 2020

இயல் 3 சிறுகதைத் தோற்றமும் அமைப்பும் முறையும்

3.1 சிறுகதைத் தோற்றமும் அமைப்பும் முறையும் 
தமிழில் சிறுகதை இலக்கியமானது 19 ஆம் நூற்றாண்டில் தோன்றினாலும் 20 ஆம் நூற்றாண்டில்தான் வளர்ச்சியடைந்தது எனலாம். முதன் முதலில் மங்கையர்க்கரசியின் காதல் என்னும் தொகுப்பில் (1912) வ.வே.சு ஐய்யர் எழுதிய குளத்தங்கரை அரசமரம் என்னும் கதையே முதல் கதையாக குறிப்பிடப்படுகின்றது. எனவே இதிலிருந்தே தமிழில் சிறுகதை இலக்கியத்தின் வளர்ச்சி தொடங்குவதாகக் கொள்ளலாம். புதுமைபித்தன் காலக்கட்டத்தில் சிறுகதை இலக்கியத்தின் வளச்சிப்போக்கு மிகவும் சிறப்பிடம் பெற்று விளங்கியது. அவரைத் தொடர்ந்து சுஜாதா, ஜெயகாந்தன், கு.ப.ரா, கு.அழகிரிசாமி போன்றோர் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தில் முக்கியப் பங்காற்றினர். இவர்களின் பங்களிப்பு தமிழில் சிறுகதை இலக்கியம் வளர்ச்சி பெற உறுதுணையாக இருந்தது. இக்காலகட்டத்தில் சிறுகதை குறித்த வரையறைகளை அறிஞர்கள் பலர் கூறியுள்ளனர். இதனடிப்படையில் சிறுகதையின் அமைப்பு குறித்து விளக்கப்படுகின்றது. அத்துடன் இவ்வாய்விற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளை ஒப்பிட்டுப் பார்ப்பதாக இவ்வியல் அமைகின்றது. மேலும் அச்சிறுகதைகளைப் பெண்ணியம் மற்றும் தலித் பெண்ணியம் எனும் அடிப்படையில் திறனாய்வு செய்யப்படுகின்றது.
சிறுகதையின் தன்மை
சிறுகதையின் தன்மை பற்றிக் கூறும் ‘எட்கர் ஆலன்போ’ “அரைமணியிலிருந்து ஒரு மணி அல்லது இரண்டு மணி அவகாசத்திற்குள் ஒரே மூச்சில் படித்து முடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். தன்னளவில் முழுமை பெற்றிருக்க வேண்டும். அது தரும் விளைவு ஒரு தனி மெய்ப்பாடாக இருக்க வேண்டும். கதையைப் படித்து முடிப்பதற்குள் புறத்தேயிருந்து எவ்விதக் குறுக்கீடுகளும் பாதிக்காமல் வாசகனின் புலன் முழுவதும் கதாசிரியனின் ஆதிக்கத்தில் கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும்”[1] என்கிறார். மேலும் சிறுகதையின் தன்மையினை ‘ஹெச்.ஜி.வெல்ஸ்’ கூறுகையில் “சிறுகதை என்பது எடுத்த எடுப்பிலேயே படிப்போரின் கவனத்தை ஈர்த்துப் பிடித்தல் வேண்டும். நெகிழ்ச்சியின்றி இயங்கி உச்சநிலை முடியும் வரை வாசகரின் முழுக்கவனத்தையும் ஒருமுகப்படுத்தி இடையீடோ சோர்வோ நேரும் முன்பாகவே சிறுகதை முற்றுப் பெறுதல் வேண்டும்”[2] என்கிறார். இவர்களைத் தொடர்ந்து ‘எல்லரி செட்ஜ்விக்’ “சிறுகதை என்பது குதிரைப்பந்தயம் போல தொடக்கமும் முடிவும் சுவைமிக்கதாக இருக்க வேண்டும்”.[3] என்கிறார்.
சிறுகதையின் எல்லை குறித்து தி.ஜானகிராமன் சிறுகதையில் வரும் கதையோ நிகழ்ச்சியோ ஒரு க்ஷணத்திலோ, ஒரு நிமிஷத்திலோ, ஒரு நாளிலோ, அல்லது பல வருடங்களாகவோ நடக்கக்கூடியதாக இருக்கலாம். அதே போல காலையில் தொடங்கி இரவிலோ மறுநாள் காலையிலோ அல்லது ஒரு குறுகிய காலத்திலோ முடிந்துவிட வேண்டும் என்று அவசியமில்லை. சொல்லவேண்டிய பொருளின் ஒருமைதான் முக்கியமானது. எட்டு நாளில் நடந்த சங்கதியை முதல் நாளிலிருந்து வரிசையாகச் சொல்லிக்கொண்டு போகலாம். இரண்டாவது, மூன்றாவது, நான்காவது நாளிலிருந்தோ அல்லது கடைசிக் கணத்திலிருந்தோ ஆரம்பித்து பின் பார்வையாகப் பார்த்துச் சொல்லிக் கொண்டு போகலாம். நடந்தது நடக்கப்போவது இரண்டுக்கும் இடையே ஒரு வசதியான காலகட்டத்தில் நின்றுகொண்டு நிகழ்ச்சியைக் கூறலாம். எப்படிக் கூறினாலும் ஒரு பிரச்னை, ஒரு பொருள், ஓர் உணர்வு, ஒரு கருத்துதான் ஓங்கியிருக்கிறது என்ற நிலைதான் சிறுகதைக்கு உயிர்”[4] என விளக்குகின்றார். “சிறுகதை என்பது ஒரு நிகழ்ச்சியாக இருக்கலாம் அல்லது உள்ளப் போராட்டமாக இருக்கலாம். அது ஏதாவது ஒன்றாக இருக்கும் வகையில் சிறுகதை பிறக்கும். இரண்டாகவோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருந்தால் சிறுகதை பிறக்காது”[5]. என்கிறார் க.நா.சுப்ரமணியன். தமிழ்ச் சிறுகதை உலகில் சிறந்த எழுத்தாளராக விளங்கிய புதுமைப்பித்தன் “சிறுகதை என்பது வாழ்க்கையின் சாளரம் என்றும் சிறுகதையானது தொடக்கம், மையச் சம்பவம், வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்ற மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது”[6] என சிறுகதையின் அமைப்பினைப் பற்றி விளக்குகின்றார். நொடிப்பொழுதில் தோன்றும் நினைவுகள் கூட சிறுகதையாகலாம். சமூகம் சார்ந்த தனிமனிதன் சார்ந்த எதுவும் சிறுகதையாகலாம்.
இந்தியில் புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளர் ‘பீஷ்ம ஸஹானி’ சிறுகதை குறித்துக் கூறுகையில் “சிறுகதை என்பது முன்கூட்டியே யோசித்து சிந்தித்துப் பார்த்து எழுதப்படும் படைப்பு அல்ல. ஒரு படைப்பாளியின் உணர்ச்சிப் பூர்வமான வெளிப்பாடுதான் சிறுகதை. அவனுடைய உணர்ச்சிகள், பாவங்கள்தான் அவனுடைய படைப்பின் நோக்கத்தை அவனுடைய இலட்சியத்தை நிர்ணயம் செய்கிறது. ஒரு சிறுகதை எதைப்பற்றியது அது எதை உணர்த்த விரும்புகிறது என்பதை அவனது உணர்ச்சிகளே தீர்மானிக்கின்றன.”[7] என்கிறார். சிறுகதைக்கான எல்லையினை ஒரு வரையறைக்குள் அடக்குவது இயலாத ஒன்றாக இருந்தாலும் சிறுகதையினை அவற்றின் தன்மையின் அடிப்படையில் சில வரையறைகள் மூலம் விளக்க முற்படலாம்.
சிறுகதை அமைப்பு முறை
சிறுகதையின் அமைப்பு ஒரு மலையின் அடிவாரத்தில் தொடங்கி உச்ச நிலையினை அடைந்து மீண்டும் அடிவாரத்தினை நோக்கி வருவதாக அமைதல் வேண்டும். சிறுகதையானது தொடக்கம், உச்சம், முடிவு என மூன்று பகுதிகளாகச் சிறுகதை பிரிக்கப்படுகின்றது. இம்மூன்று நிலைகளும் சிறுகதியில் முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும் சிறுகதையின் தலைப்பு, தொடக்கம், பத்திரப் படைப்பு, கூற்று முறை, கதைக்கரு, கதை முடிவு போன்ற பல்வேறு கூறுகளைக் கொண்டு சிறுகதையின் அமைப்பு விளக்கப்படுகின்றது.
கதைத் தலைப்பு
ஒரு படைப்பினை அடையாளப்படுத்துவது அதன் தலைப்பே ஆகும். தலைப்பு கதையின் தன்மையினை வெளிப்படுத்தும். கதை மாந்தரின் பெயரிலோ, ஏதேனும் ஒரு இடத்தின் பெயரிலோ, கருத்தின் அடிப்படையிலோ  கதையின் மையத்துடன் நெருங்கிய தொடர்புடையதாகவோ கதைக்குத் தலைப்பு இடுவது சிறப்புக்குரியதாக இருக்கும். சில நேரங்களில் கதை எழுதுவதற்கு முன்பாக தலைப்பினைத் தேர்ந்தெடுத்து விட்டு அதனைத் தொடர்ந்து கதை எழுதுவது ஒருவகை மரபு சில நேரங்களில் மனதில் தோன்றிய கதையினை எழுதிவிட்டு பின்னர் எழுதப்பட்ட கதைக்குரிய தலைப்பினை இடுவது இன்னொருவகை மரபு ஆகும். எடுத்துக்காட்டாக இந்த ஆய்வில் எடுத்துக் கொண்ட சிறுகதைகளான ‘சுசீலா டாக்பௌரே’ எழுதிய ‘மேரா சமாஜ்’ (எனது சமூகம்) எனும் சிறுகதையின் தலைப்பு கதையின் மையத்தினை வெளிப்படுத்துகின்றது. இக்கதை இந்து மதத்தின் சில பழமைவாதப் போக்குகளினால் துன்பப்படுகின்ற தலித் மக்களின் அவலநிலையினை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது. ஆசிரியர் தலித் சமூகத்தினை மையமிட்டு இக்கதைக்கு ‘எனது சமூகம்’ என தலைப்பிட்டிருப்பது மிகவும் பொருத்தமுடையதாக இருக்கின்றது.    
புராணக் கதையின்படி உடலுடன் விண்ணுலகம் செல்ல வேண்டும் என விரும்பிய திரிசங்கு என்ற மன்னனை விசுவாமித்திர முனிவர் தன் தவ வலிமையால் விண்ணுலகிற்கு அனுப்ப தேவர்கள் திரிசங்குவை கீழே தள்ளிவிட அதைக் கண்ட விசுவாமித்திர முனிவர் அந்த மன்னனை அந்தரத்திலேயே நிறுத்திவிடுகிறார். இவ்வாறு விண்ணிலும் இல்லாமல் மண்ணிலும் இல்லாமல் அந்தரத்தில் நிற்கின்ற இரண்டும் கெட்டான் நிலையைத் திரிசங்கு என்று அடையாளப்படுத்துகின்றார் ஆசிரியர். இக்கருத்தினை திரிசங்கு கதையுடன் ஆசிரியர் ஒப்பிட்டு விளக்குகின்றார். கதையில் தனுவின் அம்மா இயல்பான நேரங்களில் தனுவிற்கு அம்மாவாகவும் தனு சேகருடன் பழகுவதைக் கண்டு சந்தேகம் கொள்கின்ற போது தனுவிற்குத் தாத்தாவாகவும் இரு மனநிலையுடன் பேசுகின்றாள் என்பதனை விளக்குவதற்காக ஆசிரியர் திரிசங்கு என தலைப்பிட்டிருப்பது கதைக்கு மிகவும் பொருத்தமுடையதாக அமைந்திருக்கின்றது.   

தொடக்கம்
 சிறுகதையின் தொடக்கம் விருவிருப்பாக படிக்கின்ற வாசகனின் மனதில் ஆர்வத்தினை ஏற்படுத்தும் விதமாக இருக்க வேண்டும். எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கலாம். இடம், காலம், பொருள் என எதுவும் கதைத் தொடக்கத்திற்குக் காரணமாக இருக்கலாம். நிகழ்காலத்தில் தொடங்கி பின்னோக்கு உத்தியில் இறந்த காலத்தைக் கூறுவதாக அமையலாம். அல்லது எதிர்காலத்தில் நடக்கப் போவதாகக் கூறலாம். காலத்தைக் குறிப்பிடாமல் ஏதேனும் ஒரு பொருளையோ அல்லது எதேனும் ஒரு நிகழ்வினையோ விளக்குவதாக இருக்கலாம். இந்நிலையில் திரிசங்குக் கதையின் தொடக்கம் ஒரு முரண்பாட்டைப் பற்றிப் பேசுவதாக அமைந்துள்ளது. “வீட்டின் நான்கு சுவர்கள் கொண்ட அமைப்பானது மனிதனுக்கு பாதுகப்பினைத் தருகின்றது. ஆனால் அத்துடன் அவனை ஓர் எல்லைக்குள் கட்டுப்படுத்தவும் செய்கிறது. பள்ளியும் கல்லுரியும் எங்கே அறிவை, ஆற்றலை வளம்பெறச் செய்கின்றனவோ, அங்கேயே நிபந்தனை, கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கு எனும் பெயரால் அவனது ஆளுமையினைக் குன்றும்படியும் செய்கின்றன. விஷயம் இதுதான் நண்பா! ஒவ்வொரு விஷயத்திற்குமான முரண் அதனுள்ளேயே இருக்கின்றது.”[8] எனத் தொடங்கும் கதை இக்கதையின் மையப்பொருளை அறிமுகப்படுத்துவதாக அமைந்துள்ளது.
நவீனமாகச் சிந்திக்கும் அம்மாவிற்குள்தான் பழய மரபுகளைப் போற்றும் தாத்தாவும் இருக்கிறார். இது இரு நபர்களுக்கும் இடையே ஏற்படும் கருத்து முரண்பாடு இல்லை. பழைய மரபுகளைப் பின்பற்றி வந்த சமூகத்திற்கும் நவீனத்தை ஏற்றுக்கொண்டு வாழும் சமூகத்திற்கும் இடையே ஏற்படுகின்ற கருத்து முரண்பாடு என்பதினைக் கதையின் தொடக்கத்தில் கூறப்பட்டுள்ளது.   எனது சமூகம் என்னும் கதையின் தொடக்கம் “அம்மா அப்பாவுடன் நான் எனது சமூக மக்களின் வீட்டில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வழக்கம். சிலநேரம் திருமண விழாக்களில் சிலநேரம் ஏதாவது பிறந்தநாள் விழாக்களில் சிலநேரம் பண்டிகைகளுக்கும் நான் அடிக்கடி செல்வது வழக்கம்.”[9]  என ஒரு சமூகம் சார்ந்த பார்வையினைத் தொடக்கமாகக் கொண்டு அமைந்துள்ளது. எனது சமூகம் என தலைப்பிற்கு ஏற்ப ஒரு சமூகம் குறித்த நிலையினை முன் வைப்பதாகத் தொடங்குவது கதையின் சிறப்பம்சமாக அமைந்துள்ளது.      
பாத்திரப்படைப்பு
தொடக்கக் காலகட்டங்களில் புராணக்கதைகளில் தலைமை கதைமாந்தர், துணைமைக் கதைமாந்தர் என உருவாக்கப்பட்ட கதைமாந்தர்கள் அனைவருக்கும் பண்புநலன்கள் வரையறுக்கப்பட்டிருந்தன. தன்னிகரற்றத் தலைவன், கற்புடைய தலைவி, நேர்மை, வலிமை, உயர்குடிப்பிறப்பு என சில வரையறைகளை உருவாக்கி வைத்திருந்தனர். ஆனால் தற்கால நவீனச் சிறுகதைகள் பழைய வரைமுறைகளைக் கடந்து அனைத்தையும் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறது. யாரும் கதைமாந்தர் ஆகலாம். எதுவும் கதைமாந்தருக்குரிய பண்பாக இருக்கலாம் என்னும் புதிய பார்வையினை முன்வைக்கின்றது. மொழிபெயர்ப்பிற்காக எடுத்துக் கொண்டுள்ள இரண்டு சிறுகதைகளும் கதைமாந்தர்களின் உளவியல் சிக்கல்களை விவாதிப்பதாகவே அமைந்துள்ளன. திரிசங்கு’ கதையின் முக்கிய பாத்திரமான தனுவின் பெயர் மட்டும் கதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவளுடைய அம்மா, அப்பா இவ்விருவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. இவர்களைத் தவிர எதிர் விட்டு மாடியில் தங்கியிருக்கும் சேகர் மற்றும் நண்பர்கள் இக்கதையின் மற்ற கதாப்பாத்திரங்களாவர். தனுவின் அம்மா கல்லூரிப் பேரசிரியராகப் பணியாற்றுகின்றாள். எதிர் வீட்டில் தங்கி இருக்கும் மாணவர்களில் முக்கியக் கதாப்பாத்திரம் சேகர். அது போல ‘எனது சமூகம்’ எனும் கதையில் கதைமாந்தர்கள் என்று யாருக்கும் பெயர் சூட்டப்படவில்லை. தலித் சமூகத்தில் உள்ள ஒரு பள்ளிச் சிறுமியின் மனதில் ஏற்படுகின்ற சமூகம் குறித்த சிந்தனைகள் கதையாக விவரிக்கப்பட்டுள்ளன. சாதியக் கட்டமைப்புகளாலும் மதம் தொடர்பான பண்டிகைகளாலும் தாழ்த்தப்பட்டவர்கள் சீரழிக்கின்ற விதத்தினைப் பற்றி கதையில் கூறப்பட்டுள்ளது.   
கூற்று
எந்தவொரு படைப்பினையும் வாசிக்கின்ற பொழுது படைப்பின் கூற்றை உணர்ந்து வாசிப்பது அவசியம் ஆகும். கதைக் கூறுவதில் 1) ஆசிரியரின் பார்வையில் கதை கூறுவது 2) கதாப்பாத்திரங்களின் பார்வையில் கதை கூறுவது என்ற இருவகை உத்திகள் கையாளப்படுகின்றன. தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர் ‘சுஜாதா’ கதைமாந்தர்களின் கூற்று வழியாக அமைகின்ற கதையே வெற்றி பெறும் என்கிறார். மேலும் கதையில் அமைந்துள்ள கூற்றுக்களை “1)தன் கூற்று 2) அயல் கூற்று 3) பிறர் நினைப்பதை உள்வாங்கிக் கூறல் 4) தன் அனுபவங்களைச் செய்திகளாகக் கூறல் 5) உரைநடை வடிவிலான கூற்று 6)கடிதங்கள் வாயிலான கூற்று 7) காட்சிகளின் வழியான கூற்று 8) இயல்பான கூற்று 9) கருத்துக்களின் வெளிப்படான கூற்று”[10] என கூற்றுக்களை வகைப்படுத்துகின்றார். இதனடிப்படையில் ஆய்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் அயல் கூற்றாக அமைந்துள்ளன. அதாவது தன்னுடைய கருத்தினை கூறுவதற்கு ஒரு கதை மாந்தரை உருவாக்கிக் கதைமாந்தரின் கருத்தாகக் கூறுவது ஆகும். இதனை ஆசிரியரின் பின்புலத்தோடு கதையினை வாசிக்கின்ற பொழுது தன் அனுபவங்களைச் செய்திகளாகக் கூறல் எனும் கூற்றாகவும் உணர முடிகின்றது.  திரிசங்கு, எனது சமூகம் எனும் இரண்டு கதைகளும் கதையாசிரியர்கள் தங்களுடைய இளமைக்கால அனுபவங்களை நினைவு கூறுவதாக அமைந்திருக்கின்றன.
கதைக்கரு
கதைக்கரு என்பது கதையின் வாயிலாக ஆசிரியர் வாசகனுக்கு  எடுத்துக்கூற விரும்பும் கருத்து அல்லது சிக்கல் என்கிறோம். எனவே கதைக்கருவும் கூற்றுமுறையும் சிறப்பு பெறுகின்ற பொழுது இயல்பாகவே கதை வெற்றி பெறுகின்றது. கதைக்கான உயிரோட்டத்தினைக் கொடுப்பது கதைக்கரு எனலாம். இந்திச் சிறுகதை எழுத்தாளரான பீஷ்ம ஸஹானி கதைக் கருவின் தன்மைகள் குறித்துக் குறிப்பிடுகையில் “மனித உறவுகளில் காணப்படும் முரண்கள், மாறிவரும் சூழலில் பிரச்சனைகள், அதனால் ஏற்படும் மனக்குழப்பங்கள், கதைமாந்தர்களின் உள்மன உணர்வுத்தளத்தில் எழும் இறுக்கம், மன அழுத்தங்கள், புதிய பிரச்சனைகள் ஆகிய பலவும் சிறுகதைக்குரிய கதைக் கருக்களாகலாம்”[11] என்கிறார். கதைக்கருவானது கதையாசிரியரின் அனுபவமாகவோ கண்ட காட்சிகளாகவோ அல்லது கற்பனைத்திறனாகவோ இருக்கலாம்.
கதைக்கருவினை ஒரு சிக்கல் என்ற பார்வையில் நோக்கினால் அச்சிக்கலை 1) தனிமனிதச் சிக்கல் 2) குடும்பச் சிக்கல் 3) சமூகச் சிக்கல் என மூன்று வகைப்படுத்தலாம். இவற்றில் திரிசங்கு எனும் சிறுகதை தனிமனிதச் சிக்கலை எடுத்துரைக்கின்றது. தனுவின் காதலுக்கு தனுவின் அம்மா தடையாக இருக்கின்றாள். இச்சிக்கலை தனு எதிர்கொள்கின்ற விதம் கதையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இங்கு தாய்க்கும் மகளுக்குமான உளவியல் சிக்கல்களை விளக்கும் விதமாக கதை அமைக்கப்பட்டுள்ளது.   ‘எனது சமூகம்’ எனும் சிறுகதையில் தலித் சமூகத்தின் நிலை கதையில் மையக்கருத்தாக அமைந்துள்ளது. தலித் சமூகத்தில் பிறந்த ஒரு பெண் தன்னுடைய சமூக மக்களின் இழிவான நிலையினைக் கண்டு அவற்றிற்கான காரணத்தினை அறிந்து விளக்கும் விதமாகக் கதை அமைக்கப்படுகின்றது. அதோடு தலித் சமூகத்திற்கான விடுதலை என்ன என்பது பற்றியும் சிந்திக்கின்றாள்.  சமூகச் சிக்கலைக் கூறுவது மட்டுமல்லாமல் குடும்பச் சிக்கல்களும் கதையில் கூறப்பட்டுள்ளன. தலித் மக்களின் குடும்பத்தில் பெண்கள் அடைகின்ற துன்பத்தினையும் கதை விவாதிக்கின்றது.
கதை முடிவு
சிறுகதையின் முடிவானது கதையின் தொடக்கத்தை விட முக்கியமானது. முடிவு நன்மையானதாகவோ தீமையானதாகவோ இருக்கலாம். கதையின் முடிவானது கதைக் கருவினை விளக்குவதாக அமைவது நலம். கதை முடிவு வாசகனின் மனதில் நிறைவை அல்லது சிந்தனையினை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும்.  இவ்வடிப்படையில் எடுத்துக் கொண்ட இரு சிறுகதைகளும் பொருந்தியே வருகின்றன. “நான் மட்டும் இவையெல்லாவற்றிலிருந்தும் ஒரேயடியாக விலகி சிந்தித்துக் கொண்டிருந்தேன். தாத்தா என்றுமே தாத்தாதான். இதனால்தான் அம்மாவிற்கு சண்டையிடுவது மிகவும் எளிமையானதாக இருக்கின்றது. ஆனால் ஒரு நேரம் தாத்தாவாக மாறுவதும் ஒரு நேரம் அம்மாவாக இருப்பதுமாக உள்ள இந்த அம்மாவிடம் எப்படிச் சண்டையிடுவது?”[12] என முடிவடையும் ‘திரிசங்கு’ தலைப்பிற்கு ஏற்ப தாத்தாவாகவும் இருக்க முடியாமல் அம்மாவாகவும் இருக்க முடியாமல் போராடிக்கொண்டிருக்கும் தனுவினுடைய அம்மாவின் மனநிலையினைத் தனு புரிந்து கொண்டதாகக் கதை முடிவடைகின்றது. 
காலந்தோறும் மரபு சார்ந்த சிந்தனைகளும் நவீனச் சிந்தனைகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டுக் கொண்டதாகவே வருகின்றன என்பதைக் கதை உணர்த்துகின்றது. “தலித் சமூகத்தில் ஒன்றும் அறியாப் பெண்களுக்கு குழந்தைப் பருவத்திலிருந்தே விழிப்புணர்வினை உருவாக்கச் செய்து   கல்வியின் தேவையினை அறிந்தவர்களாக மாற்றுவதற்கும் அவர்களை தன்னம்பிக்கை உள்ளவர்களாக ஆக்குவதற்கும் ஊக்கப்படுத்துவதுவே எனது ஆசையாகும்”[13] என ‘எனது சமூகம்’ எனும் சிறுகதை முடிவடைகின்றது. இக்கதையின் முடிவு தலித் சமூகத்தில் பிறந்த ஒரு பெண் தன்னுடைய சமூக மக்களின் அவல நிலையினைக் காண்கிறாள். இம்மக்களின் அறியாமை கண்டு மனம் வெதும்புகிறாள். அதன் பிறகு சமூகத்தினைப் புரிந்து கொண்டு இம்மக்களின் வாழ்வியலை முன்னேற்ற வேண்டும் என நினைக்கிறள் என்பதாகக் கதை அமைக்கப்பட்டுள்ளது. இக்கதையின் முடிவானது தலித் சமூகத்தினை முன்னேற்ற வேண்டும் என்ற ஒரு புரட்சிகர சிந்தனையினை உருவாக்குவதாக அமைந்திருப்பது கதையின் சிறப்பம்சமாக இருக்கின்றது.
3.2 பெண்ணிய நோக்கில் திரிசங்கு
              காலங்காலமாகச் சமூகம் ஆணாதிக்கச் சிந்தனையில் செயல்பட்டு வந்துள்ளது. ஆண்கள் ஆதிக்கமிக்கவர்களாக இயங்குவதைத் தடுக்க இன்றையச் சூழலில் பெண்ணியத்தினைத் தீவிரமாகப் பேசுவது அவசியமாகின்றது. ‘திரிசங்கு’ எனும் கதையில் தனுவின் குடும்பம் நடுத்தர வர்க்கக் குடும்பம். பொருளாதாரச்  சிக்கல்  இல்லை. சாதி, மதம் போன்ற கட்டுப்பாடுகள் குறித்த பதிவுகளோ காணப்படவில்லை. இவற்றையெல்லாம் கடந்த பிறகும் சமூகத்தில் மரபு ரீதியான பழமையானக் கருத்துக்களைக் கொண்ட ஆணாதிக்கச் சமூகம் பெண்களின் மீது ஒடுக்குமுறைகளை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது என்பதினை இச்சிறுகதை வெளிப்படுத்துவதாக அமைக்கப்பட்டுள்ளது.       
சமூக முரண்
இரு தலைமுறையினருக்கும் இடையே காலத்தின் அடிப்படையில் பழக்க வழக்கங்களும் அது சார்ந்த எண்ணங்களும் மாற்றம் பெருகின்ற பொழுது ஏற்படுகின்ற கருத்து முரண்பாடுகளையே சமூக முரண் என்கிறோம். திரிசங்கு என்னும் இக்கதையில் இவ்வகையான முரண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  இவை முக்கியமாக பெண்களைப் பாதிப்பவைகளாக இருக்கின்றன. முதல் தலைமுறையினர் இரண்டாம் தலைமுறையினரை நல்வழிப்படுத்துதல் எனும் பெயரில் தன்னுடைய அதிகாரத்தினை நிலைநாட்ட நினைப்பர். தனுவின் அம்மா தன்னுடைய காதலை  தந்தையிடம் (தனுவின் தாத்தாவிடம்) கூறியதும்  அவர் தான் ஒரு ஆண் எனும் அதிகாரத்தில் தன்னுடைய எதிர்ப்பினைத் தெரிவிக்கின்றார். அதனை எதிர்த்து தான் காதலித்த ஆணையே தனுவின் அம்மா காதல் திருமணம் செய்து கொள்கிறாள். தனுவின் பெற்றோர் தனிக்குடித்தனமாக வசிப்பதற்கு அதுவே காரணமாக இருக்கின்றது. ஆனால் இவ்வாறு காதல் திருமணம் செய்துகொண்ட தனுவின் அம்மா தன்னுடைய மகள் ஒருவனைக் காதலிக்கிறாள்  என்பதை அறிந்ததும் அவளின் காதலை எதிர்ப்பது என்னும் மனநிலைக்குத் தயாராகிறாள். இது இருவேறுபட்ட தலைமுறையினருக்கு இடையே தோன்றும் பழமைக்கும் புதுமைக்குமான முரண்பாடாக அமைந்துள்ளது. “இந்த முறை நான் தயாராகத்தானிருந்தேன். இந்த விஷயத்தில் அம்மா, தாத்தாவிடம் நடந்து கொண்டது போல்தான் நடந்து கொள்வேன். நானும் பிறகு அம்மாவைப்போல் எதிர்த்துப் போராடி உன்னுடைய மகள்தான் என்று நிருபித்துக்கட்டுவேன். நானும் உன்னைப் போன்றுதான் நடந்து கொள்வேன்”[14]என தன்னுடைய காதலை எதிர்க்கும் அம்மாவுடன் முரண்பட்டு தனு தன் எண்ணங்களை வெளிப்படுத்துகிறாள்.
திருமணச் சடங்கு
ஆணாதிக்கச் சமூகக் கட்டமைப்பின்படி பெண்களின் வாழ்வியலைத்   திருமணத்திற்கு முன்பு, திருமணத்திற்குப் பின்பு என இருவகைப்படுத்தலாம். இவ்விரு நிலைகளிலும் பெண் ஆணைச் சார்ந்து வாழ வேண்டியிருப்பதால்     திருமணம் என்பது சமூகத்தில் இன்றியமையாத ஒரு சடங்காக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆணாதிக்கத் தந்தை வழிச் சமூகத்தில் சொத்துக்களுக்கு உடமையாளனாக ஆண் விளங்குகின்றான். எனவே பெண்ணை ஒரு பொருளாகப் பாவித்து அவளை ஒடுக்குவதற்காக ஆண்களால் உருவாக்கப்பட்ட சடங்கு முறையாகவே திருமணம் நடைபெற்று வருகின்றது. பெண்ணியச் சிந்தனைகள் தோற்றம் பெற்ற பிறகு மரபு சார்ந்த திருமணச் சடங்கு முறையினை கேள்வி கேட்பதுடன் அதற்கான அர்த்தத்தை இழக்கும்படியும் செய்கின்றன. இது திரிசங்கு கதையில் “திருமணம் அதாவது அழிவு லேசாக ஆரம்பிக்கும் பேச்சானது திடீரென அறிவுத்தளத்திற்குச் சென்றுவிடுகின்றது. திருமண அமைப்பானது ஒரேயடியாக தனது அர்த்தங்களை இழந்துவிட்டது. கணவன் மனைவியின் உறவு செயற்கையாக மேலிருந்து சுமத்தப்பட்டுள்ளது. இதன்பிறகு கோரமான விதத்தில் திருமணம் தூள்தூளாக பறக்கவிடப்படுகின்றது.”[15]என குறிப்பிடப்படுகின்றது. எனவே இங்கு திருமணம் என்பது ஓர் அர்த்தமற்ற செயல் என்னும் கருத்து முதன்மைப் படுத்தப்பட்டுள்ளது.
பெண்களின் மீதான சமூகக் கட்டுப்பாடுகள்
பெண்கள் காலம் காலமாகத் தங்களுக்கென உருவாக்கப்பட்ட சமூகக் கட்டுப்பாடுகளைச் சுமந்த வண்ணம் உள்ளனர். சாதி, மதம், பண்பாடு என ஒவ்வொன்றிற்குள்ளும் பெண்களுக்கான கட்டுப்பாடுகள் பொதிந்து கிடக்கின்றன. இக்கட்டுப்பாடுகள் பெரும்பாலும் பொருளாதாரத்தை மையமிட்டதாகவே அமைந்திருக்கின்றன. ஆகவே குடும்பம் என்னும் நிறுவனத்திற்குள் பெண்கள் ஒடுக்கப்படுவதற்கு முக்கியக் காரணமாக விளங்குவது பொருளாதாரம் ஆகும். அறியாமையும் வறுமையுமே அடிமைத்தனத்திற்கு முதற்காரணமாகின்றன.  திரிசங்கு என்னும் கதையில் தாய் மகளுக்கான உறவு நிலை இருவரும் பரஸ்பரம் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் தோழியராகவே காட்சிப்படுத்தப்படுகின்றது. “நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது – இதைச் செய்யாதே! அதைச் செய்யாதே! அங்கே போகாதே! இதைப் பார்க்காதே! என்று ஒரே கெடுபிடி! சட்டதிட்டம்! நம் குழந்தைகளையாவது குறைந்தபட்சம் இந்த கெடுபிடிகளுக்கெல்லாம் பலியாகக் கூடாது”[16]  என்று  சுதந்திரமாய்க் குழந்தையினை வளர்க்க நினைக்கும் தனுவின் அம்மா ஆரம்பத்தில் தன்னுடைய மகளுக்கு ஆண் நண்பர்களை அறிமுகப்படுத்தி வைக்கின்றாள். ஆனால் தன்னுடைய மகள் அவர்களில் ஒருவனான சேகருடன் பழகுவதை அறிந்த பிறகு அவர்களின் நட்பினை எதிர்க்கின்றாள். தனது கல்வியின் வழி பெற்ற அறிவை விட்டு மீண்டும் மூத்த தலைமுறையினரான தனுவினுடைய தாத்தாவின் மனநிலையில்  சிந்திக்கிறாள்.
“உனக்கு சுதந்திரம் கொடுத்தேன். உன் விருப்பப்படி இருக்க அனுமதித்தேன். ஆனால் அதனுடைய அர்த்தம் நீ அந்த சுதந்திரத்தை அனுசிதமாகப் பயன்படுத்துவதில் அர்த்தமில்லை.”[17] என மகளைக் கண்டிக்கிறாள். மகளை சந்தேகம் கொள்கிறாள். சேகரும் தனுவும் காதலர்கள் ஆகிவிடுவார்களோ என அஞ்சுகிறாள். அதனைத் தடுக்க தன்னால் இயன்றளவு தனுவிற்குக் கட்டுப்பாடுகளை விதிக்கிறாள். தனக்காகத் தந்தையை எதிர்த்துக் காதல் திருமணம் செய்து கொண்ட அதே பெண் தன் மகளுக்கு என்றதும்  மீண்டும் தன்னுடைய அப்பாவாக மாறுவது என்கிற மரபு வழிப்பட்ட கட்டுப்படு தலைமுறை தலைமுறையாக அறிவுத்தளத்தில் பின்பற்றப்பட்டு   வருவதை ஆசிரியர் சுட்டிக்காட்டுகின்றார்.    
சமூகக் கட்டமைப்பில் பெண்கள்
கதையில் தனுவிற்கும் தனுவின் அம்மாவிற்கும் இடையேயான    உரையாடல்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன. எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றி இயல்பாகத் தன் மகளை வளர்க்க வேண்டும் என நினைக்கும் தனுவின்  அம்மா தனுவிற்கு ஆண் நண்பர்களை உருவாக்கிக் கொடுப்பதுடன் அவர்கள் பழகுவதற்கு ஏற்ற சூழலையும் உருவாக்குகின்றாள். நாட்கள் செல்லச் செல்ல தனுவின் நடத்தைகளில் சந்தேகம் கொண்ட தனுவின் அம்மா அவளைக் கண்டிக்கின்றாள். “முழுசா மொளச்சு மூனு இலை விடாத பொண்ணு நீ, எங்கிட்டயே கண்கட்டு வித்தைய காட்டுகிறாய். எவ்வளவு சுதந்திரம் கொடுத்தேனோ! அவ்வளவுக்கும் மேலே போய்க் கொண்டிருக்கிறாய். ஒரு அறை விட்டேன். ஒரு நொடியில் காதல் கீதலெல்லாம் பொல பொலவென உதிர்ந்து விடும்.”[18] என தன்னுடைய அதிகாரத்தினை வெளிப்படுத்துகிறாள். 
தனுவிற்கு சேகர் எழுதிக் கொடுத்த சில துண்டுக் காகிதங்களைப் பர்த்ததும் தனுவின் அம்மா கோபம் கொள்கிறாள். “ஓகோ! சேகருக்கும் உனக்கும் நட்பு இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறதா? இந்தப் படிப்புதான் நடந்து கொண்டிருக்கிறதா? இதைப் பன்றதுக்குத்தான் அவன் இங்கே வருகிறானா?”[19] என தனுவின் அம்மா கேட்பது தனுவிற்கு அவளின் தாத்தா மீண்டும் வந்து விட்டதாகத் தோன்றுகின்றது. இவ்வாறு பெண்களைக் குடும்பம், சாதி, மதம் பொருளாதாரம் எனப் பல்வேறு அதிகாரப் போக்குகள் இலக்கியங்களின் வழியாகவும் பிற ஊடகத் துறையின் வழியாகவும் கட்டுப்படுத்தும் சமூகக் கருத்தியல்களை திரிசங்கு சிறுகதை தெளிவாக விவாதிக்கின்றது.   
3.3 தலித் பெண்ணிய நோக்கில் எனது சமூகம்
  எனது சமூகம் என்னும் சிறுகதை ஒரு நிகழ்வையோ அல்லது ஒரு பொருளையோ பற்றிய கதை அமைப்பு இல்லை. இக்கதை தலித் சமூகம் மக்களின் நிலை குறித்துக் கூறுவதாக அமைந்துள்ளது. கதாப்பாத்திரங்களின் பெயர்கள் சுட்டப்படவில்லை. உரையாடல்கள் எதுவும் இன்றி தலித் சமூகம் குறித்தப் பார்வையினை விமர்சனத்திற்கு உட்படுத்தும் சொற்பொழிவு போன்று அமைந்துள்ளது. இக்கதையில் தலித் சமூகத்தைச் சார்ந்த ஒரு சிறுமி அச்சமூகத்தில் உள்ள மக்களுக்கு ஏற்படுகின்ற துன்பங்களைத் தனது இயல்பான நடையில் விவரித்துக் கூறுவதாக அமைந்திருக்கின்றது. கதையின் தலைப்பு கதை பற்றிய முழுமையான கருத்துக்களைக் கொண்டுள்ளது. தலித் மக்கள் பெறுகின்ற துன்பங்கள் கதைக்கருவாகவும் அதனை நீக்கத் தேவையான வழிமுறைகளைக் கண்டறிதல் கதையின் முடிவாகவும் கொண்டு கதை எழுதப்பட்டுள்ளது. இக்கதையினைத் தலித் சமூக மக்கள் அடைகின்ற இன்னல்கள் என்றும் தலித் பெண்கள் அடைகின்ற இன்னல்கள் என்றும் இருவகைப்படுத்தலாம். 
தலித் சமூகம்
          தீண்டத்தகாதவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் என்று இழிவுபடுத்தப்பட்டு வருகின்ற தலித் மக்கள் உயர்சாதியினர் என்றழைக்கப்படும் மக்களால் சாதிய அடிப்படையில் ஒடுக்கப்படுகின்றனர். உயர்சாதி எனப்படும் சமூகம் மதத்தின் பேரில் கொண்டாடி வருகின்ற விழாக்களையும் சடங்கு முறைகளையும் அறியாமையினால் தலித் சமூகத்தினரும் பின்பற்றி வருகின்றனர் என்பதனை ஆசிரியர் கதையில் சுட்டிக்காட்டியுள்ளார். “எனது சமூக மக்கள் தங்களுடைய குழந்தைகளின் கல்வியறிவுக் குறித்து அதிகம் சிந்திப்பதே இல்லை. அவர்கள் மதம் மற்றும் சடங்குகளைப் பற்றியும்தான் சிந்திக்கின்றனர். ஹோலிப் பண்டிகையின் அர்த்தம் பற்றி இவர்களுக்குத் தெரியாது. குலால் (ஹோலிப்பண்டிகையில் பயன்படுத்தப்படும் சிவப்புப் பொடி) கொண்டு ஹோலிப் பண்டிகையினைக் கொண்டாடுவர். உயர்சாதியினர் என்பவர்களைப் பார்த்து அப்படியே பின்பற்றுகின்றனர். அவர்கள் ஹோலிகாவை எரிப்பதைப் பார்த்து தாங்களும் அதே போல எரித்து, அதனை பூஜை செய்து, குருட்டுத் தனமாக அவர்களைப் பின்பற்றுகின்றனர். நம்முடைய பழங்குடி மூதாதையர்களின் கதைதான் இந்த ஹோலிப் பண்டிகையின் கதையாகும். உயர்சாதியினர் சதி செய்து ஹோலிகாவை எரிக்கும் கதையை உருவாக்கினர். இது போன்ற திருவிழாவினைக் கொண்டாடுவது நம்முடைய வேலை இல்லை என்பது என் மக்களுக்குத் தெரியாது”[20] என்கிறார்.
மேலும் தசராத் திருவிழாவின் போது இராவணன் கொல்லப்படுவதினையும் எதிர்க்கின்றார். தசராத் திருவிழாவின் அர்த்தம் புரியாமல் தலித் மக்கள் அதனைக் கொண்டாடுவதைக் கண்டிக்கின்றார். இராவணன் நம்முடைய பூர்வீகக் குடிகளின் தலைவன் என்னும் வாதத்தினை முன்வைக்கின்றார். தீபாவளி குறித்தும் லட்சுமி வழிபாடு குறித்தும் விவாதிக்கும் ஆசிரியர் அவைகள் எல்லாம் உயர்சாதியினரின் சூழ்ச்சிகள் எனவும் அவை தலித் மக்களை ஒருபோதும் உயர்த்தப்போவது இல்லை என்றும் கூறுகின்றார்.
தலித் மக்கள் ஆவி குறித்த மூட நம்பிக்கைகள் உடையவர்களாக உள்ளனர் என்றும் உயர்சாதி எனப்படும் மக்கள் பின்பற்றுகின்ற தீய சகுணம், நல்ல சகுணம் போன்ற அனைத்தையும் தலித் மக்களும் எவ்விதப் பகுத்தறிவுச் சிந்தனையும் இன்றிப் பின்பற்றுவதினை மூடப்பழக்கம் என்கின்றார். தலித் மக்கள் எதிர்காலம் குறித்த எவ்விதத் திட்டமும் இல்லாமல் தினந்தோறும் வாங்குகின்ற ஊதியத்தை அன்றைய பொழுதே செலவழித்து விடுகின்றனர். எனவே இம்மக்களின் குழந்தைகள் படிக்க முடிவதில்லை. பரம்பரை பரம்பரையாக பெற்றோரின் தொழிலையே குழந்தைகளும் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
“ஆசிரியர்கள் அவர்களை அடித்தும் அவமானப்படுத்தியும் கடுமையாக நடந்து கொள்வதாலும் அவர்களை பள்ளியில் நீடிக்க முடியாதபடி செய்து விடுகின்றனர். வீட்டின் சூழ்நிலை கருதியும் படிப்பதற்கு புத்தகம் நோட்டு வாங்க இயலாததாலும் தந்தையின் இயலாமையும் தாயின் வேறு வழியின்மையும் அவர்களை மேலும் படிக்க விடுவதில்லை. வீட்டின் தேவைகளையும் செலவுகளையும் பார்த்து அவர்களின் படிப்பு நிறுத்தப்படுகின்றது. மேலும் இக்குழந்தைகள் தங்களுடைய தாய் தந்தையர்களின் வேலையில் ஈடுபடத் தொடங்குகின்றனர். இவ்வாறு தலைமுறை தலைமுறையாக முன்னோர்களின் தொழில் பின்பற்றப்பட்டு வந்து கொண்டிருக்கின்றது.”[21] என்கிறார். மலம் அள்ளுதல், சாலைகளை சுத்தம் செய்தல், துணிகளை துவைத்தல், போன்ற வேலைகளை காலம் காலமாக தலித் மக்களே செய்து வருகின்றனர் என்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டுகின்றார். பகுத்தறிவினைக் கற்றுக்கொடுக்கின்ற பள்ளிக்கூடங்களில் தீண்டாமை வன்கொடுமை நடைபெறுவதால் தலித் குழந்தைகள் பள்ளிப்படிப்பைப் பாதியிலே நிறுத்திவிட்டு பெற்றோர்களின் தொழிலையே மேற்கொள்கின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றார்.
தலித் பெண் கொடுமைகள்
           தலித் சமூகத்தில் ஆண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகின்றனர். ஆனால் அக்குழந்தைகள் பள்ளிகளில் பின்பற்றப்படும் தீண்டாமைக் கொடுமைகளினால் படிக்க முடியாமல் பாதியிலேயே படிப்பை நிறுத்தி விடுகின்றனர். பெரும்பாலும் பெண் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதில்லை. வீட்டு வேலைகள் செய்யவும் தங்களுக்கு ஒத்தாசையாக இருக்கும் என்பதற்காகவும் பெண் பிள்ளை படித்து என்ன ஆகப்போகிறது? என்ற அலட்சியப் போக்கினாலும் தலித் சமூகப் பெண்கள் கல்வி கற்க இயலாத நிலை உருவாகின்றது. வருமையினால் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொடுக்கும் பால்ய விவாக முறையும் பின்பற்றப்பட்டு வருகின்றது. “எங்களுடைய சாதி சமூதாயத்தில் உள்ள பெண்களுக்கு 14-15 வயதிற்குள்ளாகவே திருமணம் நடத்துவது வழக்கமாக இருந்தது”.[22] என பால்ய விவாகம் குறித்து ஆசிரியர் சுட்டிக்காட்டுகின்றார். சில நேரங்களில் வரதட்சணை கொடுக்க இயலாத காரணத்தால் இரண்டாம் தாரமாக வயதான ஆண்களுக்கு தலித் பெண்களை மணம் முடிக்கின்ற கொடுமைகள் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
குழந்தையிலிருந்து திருமணம் ஆகும் வரை இத்தகைய கொடுமைகள் நடைபெறுகின்றன என்றால் திருமணமான பிறகு இன்னும் கொடுமைகள் அதிகரித்த வண்ணமே உள்ளன. “சமைத்தல், பாரிமாறுதல், பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல் என வீட்டினுடைய அனைத்து வேலைகளையும் செய்து குழந்தை குட்டிகளைப் பராமரிக்கும் பொறுப்பையும் செய்து முடிக்கிறாள்.  இத்தனை வேலைகளையும் செய்தும் கூட பெரும்பாலான கணவனின் அடி உதையும் மாமியாரின் வசவு மொழிகளும் நாத்தனார்களின் குத்தலான மொழிகளும்தான் அவளுக்குக் கிடைக்கின்றன.”[23] மேலும் தலித் பெண் தன்னுடைய வாழ்வின் விடுதலையினை எதிர்பார்த்துக் கொண்டே தன்னுடைய வாழ்நாட்களை கழிக்கின்றாள் என்கிறார் ஆசிரியர். “தனக்கு ஒரு விடிவு காலம் வரும் என்று ஏங்கிக் கொண்டேயிருக்கிறாள். ஒன்றிரெண்டு ஆண்டுகளில் தன்னுடைய நிலைமை மாறிவிடும் என்றும் அல்லது ஒன்றிரெண்டு குழந்தைகள் பிறந்த பிறகு நிலைமை மாறிவிடும் என்றும் அல்லது குழந்தைகள் பெரியவர்களானதும் மாறிவிடும் என்றும் நினைப்பாள். மேலும் மருமகள்கள் வந்த பிறகாவது இந்நிலைமை மாறும் என்று நினைப்பாள். இதே எதிர்பார்ப்பில் அவளின் வாழ்நாள் முடிந்து விடுகின்றது”[24] 
தலித் சமூக விடுதலை
“தீண்டத்தகாதார் விடுதலை என்பது பெண் விடுதலை பெறாதவரை சாத்தியமில்லை”[25] என்னும் அம்பேத்கர் கூறிய கருத்தில் எவ்வித மாற்றமும் இன்றி சமூகம் தொடர்கின்றது. “திருமணம் செய்வது, குழந்தைகள் பெற்றுக் கொள்வது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றனர். இந்த விதத்தில் சமூகத்தினை முன்னேற்ற முடியாது. இத்தகைய மரபார்ந்த சிந்தனைகள் அவர்களிடமிருந்து நீக்கினால்தான் புதிய எண்ணங்களை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியும். நான் சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக முடிந்த வரை முயற்சி செய்தவது என்பது எனது கனவாக இருந்தது. சமூகத்தில் ஒன்றுமறியாப் பெண்களுக்கு குழந்தைப் பருவத்திலிருந்தே விழிப்புணர்வினை உருவாக்கச் செய்து கல்வியின் தேவையினை அறிந்தவர்களாக மாற்றுவதற்கும் அவர்களை தன்னம்பிக்கை   உள்ளவர்களாக ஆக்குவதற்கும் ஊக்கப்படுத்துவதான் எனது ஆசையாகும்.”[26]  என கதையின் முடிவில் ஆசிரியர் தன்னுடைய விருப்பத்தினைக் கூறுவது சாதியத்திற்கு எதிரான ஒவ்வொருவருக்கும் உரிய கடமையாகும். குழந்தைப் பருவத்திலிருந்தே பெண்கள் கல்வி கற்று விழிப்புணர்வு அடைய வேண்டும். அதுவே பெண் விடுதலைக்கு வழிவகுக்கும் என்கிறார் ஆசிரியர். 
திரிசங்கு, எனது சமூகம் ஓர் ஒப்பீடு
            ஆசிரியர்கள் குறித்து முன்பே குறிப்பிட்டது போல இந்தி இலக்கியத்தில் பெண் படைப்பாளர்களாக விளங்கும் மன்னு பண்டாரி மற்றும் சுசீலா டாக்பௌரே ஆகிய இருவரும் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள பானபுரா என்னும் பகுதியைச் சார்ந்தவர்கள். ஏறத்தாழ ஒரே காலத்தைச் சார்ந்தவர்கள். ஆனால் சாதியக் கட்டமைப்பில் இரு வேறுபட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள். இவ்விருவர்களின் சிந்தனைகள் படைப்புகளில் வெளிப்படுகின்ற விதத்தினை கண்டறிவதற்காக இவர்களின் படைப்புகளான திரிசங்கு மற்றும் எனது சமூகம் என்னும் இரு கதைகள் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திரிசங்கு என்னும் கதை நகரத்தை மையமிட்டு எழுதப்பட்டுள்ளது. நகர்ப்புறத்தில் வாழ்கின்ற நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணின் மனநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. எனது சமூகம் கிராமப்புறத்தை மையமிட்டு எழுதப்பட்டுள்ளது. கிராமத்தில் வாழ்கின்ற தலித் மக்களைப் பற்றி ஒரு பெண் சிந்திப்பதாக கதை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் திரிசங்கு என்னும் சிறுகதையில் தனி மனிதனின் உளவியல் சிக்கல்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் எனது சமூகம் என்னும் சிறுகதை ஒரு சமூகத்தின் வாழ்வியல் சிக்கல்களைப் பற்றி விவாதிக்கின்றது. மேலும் தலித் சமூகத்திற்கான விடுதலையை முன்வைக்கின்றது. இதனடிப்படையில் இவ்விரு கதைகளும் இரு வேறுபட்ட சிந்தனைகளைக் கொண்டு எழுதப்பட்டுள்ளன என்பதை  உணர முடிகின்றது.  



[1] தமிழ் இணையக் கல்விக்கழகம் (http://www.tamilvu.org/courses/couindex.htm)
[2] மேலது
[3] மேலது
[4] சிறுகதை எழுதுவது எப்படி? –  தி.ஜானகிராமன் http://thoguppukal.wordpress.com  POSTED
    BY SINGAMANI ⋅ திசெம்பர் 4, 2011
[5] தமிழ் இணையக் கல்விக்கழகம் (http://www.tamilvu.org/courses/couindex.htm)
[6] மேலது
[7]  இந்திச் சிறுகதைத் தொகுப்பு – பீஷ்ம ஸஹானி, தமிழில் – சரஸ்வதி ராமநாத். பக் – 11
[8]  திரிசங்கு - மன்னுபண்டாரி, (தமிழ் மொழிபெயர்ப்பு)  பக்கம் – 1
[9]  எனது சமூகம் - சுசீலா டாக்பௌரே, ( மொழிபெயர்ப்பு) பக் – 1

[10] (http://skavithaikal.blogspot.in சிறுகதைப் பகுதி, by n.nirosh. 
[11]  இந்திச் சிறுகதைத் தொகுப்பு பீஷ்ம சகானி பக் – 20
[12] திரிசங்கு,(மொழிபெயர்ப்பு) மன்னுபண்டாரி, பக் – 32
[13] எனது சமூகம்,( மொழிபெயர்ப்பு) சுசீலா டாக்பௌரே, பக் – 10
[14] திரிசங்கு,(மொழிபெயர்ப்பு) மன்னுபண்டாரி, பக் – 32
[15] மேலது, பக் - 2
[16] மேலது, பக் – 19
[17] மேலது, பக் - 19
[18]  மேலது, பக் - 19
[19]  மேலது, பக் – 19
[20] எனது சமூகம்,( மொழிபெயர்ப்பு) சுசீலா டாக்பௌரே பக் – 5
[21] மேலது, பக் – 2
[22]  மேலது, பக் – 8
[23]  மேலது, பக் – 3
[24] மேலது, பக் – 4
[25] தலித் பெண்ணிய அழகியல்  – அரங்க மல்லிகா, பக் – 67
[26] எனது சமூகம்,( மொழிபெயர்ப்பு) சுசீலா டாக்பௌரே பக் – 10