திங்கள், மே 18, 2020

காத்திருத்தல் - கதை அமைப்பு


காத்திருத்தல் (Prathikshaa)
கதை அமைப்பு
            சிறுகதையின் அமைப்பானது கதையில் காணப்படுகின்ற கதைமாந்தர்கள், தொடக்கம், மையம், முடிவு, இடப்பின்னணி, காலப்பின்னணி, உத்திமுறை, ஆசிரியரின் உளவியல் பின்புலம் என பல்வேறுபட்ட கூறுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றது.
            பொதுவாக சிறுகதையினைப் பற்றிக் குறிப்பிடுகின்ற பொழுது அமர்ந்த அமர்விலே அரை மணி நேரத்திற்குள் வாசித்து முடிக்கக் கூடியதாகவும் நாவலைப் போன்று பலவகையான மையக்கருத்தினைக் கொண்டு கதைப்பின்னல்களோடு சொல்லப்படாமல், ஒரே ஒரு சிக்கலை அதாவது கருத்தினை அல்லது சம்பவத்தினை எடுத்துக்கொண்டு அதனை விளக்குவதாக அமைதல் வேண்டும் என்பர். அவ்வகையில் நாம் காணவிருக்கும் சிறுகதையும் இத்தகைய அமைப்பிற்குள் இயங்குவதாகவே உள்ளது.
கதை ஓர் சுருக்க அறிமுகம்
            காத்திருத்தல் எனும் இக்கதையில் சுமன் எனும் பெண், சுமாராக நாற்பது அல்லது நாற்பத்தைந்து வயதுப் பெண். திருமணம் ஆகாதவள். தன்னுடைய இளம்வயதில் பிரகாஷ் எனும் ஒருவரால் காதலித்து கைவிடப்பட்ட நிலையில் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளாது, அவருக்காக காத்திருப்பதாக் கதை கூறப்படுகிறது. இதுவே கதையின் மையக் கருத்தாகவும் அமைகின்றது. அவள் பணி புரிகின்ற அலுவலகத்தில் வினய் எனும் ஒருவன் புதிதாக வேலைக்குச் சேருகின்றான்.  அவனுக்கு இருபத்தியொரு வயது ஆகிறது. அவனைக் கண்டதும்  சுமனின் முன்னால் காதலன் நினைவிற்கு வருகின்றான். ஒரு  நாள் வினய் சுமனை வீட்டிற்கு அழைக்க, சுமனும் அங்கு செல்கிறாள். வினயின் வீட்டில் ஒரு புகைப் படத்தினைக் கண்டு திடுக்கிடுகிறாள். அப்புகைப்படத்தில் இருப்பது பிரகாஷ். எனவே பிரகாஷிற்கு திருமணம் ஆகிவிட்டது, அவருடைய மகன்தான் வினய். நாம் இத்தனை ஆண்டுகள் காத்திருந்தது வீனாகி விட்டது என்ற மன வருத்ததுடன் வீடு திரும்புகிறாள். நாக்பூரிலிருந்து டெல்லி செல்ல தீர்மானிக்கிறாள். ஆனால் இவ்வாறு செல்வது கோழைத்தனம் என்பதால் யாருடனும் சேர்ந்து வாழ விரும்பாது சமூகத்திற்கு தொண்டாற்றுவது என்ற எண்ணத்துடன் வீடு திரும்புகின்றாள்.
கதைமாந்தர்கள்
            சுமன், வினய் என இருவர் மட்டுமே கதைமாந்தர்கள். இளம் வயதில் காதல் செய்த காதலனுக்காக காத்திருந்த நிலையில் அவனுக்கு வேறு திருமணம் ஆகிவிட்டது, என்பதை அறிந்து சமூக சேவை செய்வதற்காக தன்னை அற்பணிப்பதாக கதை அமைகின்றது. வினய் என்பவருக்கு குறைந்த உடையாடல்களே கதையில் அமைகின்றன. இக்கதையின் திருப்பத்திற்கு வினய் ஒரு முக்கிய கதாப்பாத்திரமாகக் காட்டப்படுகிறார்.
தொடக்கம்
            சமூகத்தில் பெண்கள் ஒடுக்கப்படுவதற்குக் காரணமாக ஆணுக்கும் பெண்ணுக்குமான  பாலியல் வேறுபாடு அமைகின்றது. பாலியலை மையமிட்டே சமூகம் பெண்களை ஆணாதிக்க மனோபாவத்தில் அடிமைப்படுத்தி வருகின்றது. இக்கதையில் தொடக்கக் காட்சியாக அமைவது, சுமன் எனும் பெண் தன்னுடைய வீட்டில் உள்ள கண்ணாடியின் முன்பாக நின்று கொண்டு தற்பொழுது உள்ள உடல் தோற்றத்தினைக் கண்டு, சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக எவ்வளவு இளமையுடன் இருந்தேன் எனவும் அதே போன்ற தோற்றமும் வேகமும் தற்பொழுது இருந்தால் எவ்வாறு இருக்கும் என தனக்குள்ளாகவே நினைத்துக் கொள்வதாக அமைகின்றது. இது ஒவ்வொரு மனிதருக்கும் வயது முதிர்ந்த நிலையில் தனது இளமை குறித்த ஏக்கம் அது தற்பொழுது இல்லையே என்ற கவலையும் இயல்பானதுதான்.
            இக்கதையின் அடிப்படையில் சுமன் என்பவளை திருமணம் ஆகாதப் பெண்ணாக ஆசிரியர் காட்டுகின்றார். ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது வாழ்வியல் சூழலை மையமிட்டே சிந்தனைகளும் தோற்றம் கொள்கின்றன, என்பதை ஆசிரியர் சுமன் என்பவள் இன்னும் தனது பாலியல் இன்பத்தினைப் பெறாத ஒரு கன்னியாகவே வாழ்ந்து வருகின்றாள். அவ்வாறு வாழுமாறு ஆணாதிக்கச் சமூகம் அவளை நிர்பந்தித்துள்ளது. என்பதை உளவியல் பார்வையில் மிகவும் எளிமையாக ஆசிரியர் விளக்கிச் செல்கிறார்.
கதையின் கூற்று முறை
            சுமன் என்னும் பெண்ணின் மனவோட்டமாகவே கதை செல்கிறது. சுமன் தன்னைப் பற்றியும் தன்னுடைய கடந்த காலத்தைப் பற்றியுமான நினைவலைகளாகவே கதை செல்கிறது. இங்கு படைப்பின் பின்னால் ஒழிந்திருக்கும் அதாவது சுமன் என்னும் பெண்ணாக உருவெடுத்திருக்கும் ஆசிரியர் சுசீல டாக்பௌரே என்பவர் கூறுவதாகத்தான் கதை அமைகிறது. ஏனெனில் ஆசிரியரின் வாழ்வியலைப் பார்க்கின்ற பொழுது கதை உருவான காலகட்டத்தில் கதையில் சுமனின் வயதும் கதையாசிரியரின் வயதும் ஒன்றினைவதைக் காணலாம். 1954 ல் பிறந்த ஆசிரியர் 2000 க்குப் பிறகு இக்கதையினைப் படைக்கின்றார். இக்கதையில் கதைமாந்தரின் வயது குறிப்பிடவில்லை எனினும் அதனைக் குறிப்பால் உணருகின்ற விதமாக விவரிக்கின்றார். சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக நான் இளமையாக இருந்தேன் என சுமன் கூறுவதைக் கொண்டு அவரின் தற்போதைய வயது ஆசிரியரின் வயதுடன் ஒத்துள்ளதைக் காணலாம்.
            மேலும் தற்பொழுது ஆசிரியர் மஹாராஷ்ராவில் உள்ள நாக்பூரில் தங்கி உள்ளார். தலித் பெண்ணியம் குறித்தான இயக்கங்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றார். அதே நாக்பூரில் உள்ள சேசரிமல் போர்வால் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றிய காலகட்டத்தில் இக்கதை உருவாகியுள்ளது. இவ்வாறு கதையில் கூறப்படுகின்ற சுமன் என்பவர் அலுவலகத்தில் வேலை பார்ப்பதாகக் கூறப்படுகின்றது. இங்கே கல்லூரி அலுவலமாக உருவெடுதிருப்பதினை உணர முடிகின்றது. மேலும் கதை முழுமையும் பார்க்கின்ற போது வினய் என்பவரின் வீட்டிற்குச் சென்ற சுமன் பிரகாஷின் புகைப்படத்தினைக் கண்டு தன்னுடைய முன்னால் காதலன் என்பதை உணர்ந்து ஊரைவிட்டு செல்ல முடிவெடுக்கின்றாள். தற்பொழுது தங்கியிருக்கின்ற நாக்பூரிலிருந்து டில்லி செல்லப் போவதாக கூறுவதும், பின்னர் மனம் மாறிய சுமன் தன்னுடைய வாழ்வியல் இலட்சியமானது குறுகிப் போகாமல் தன்னுடைய வாழ்வு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்றெண்ணி சமூக மக்களுக்கு உழைக்கப் போவதாக தீர்மானிக்கின்றார். என அமைகின்ற கதைப்போக்கானது ஆசிரியரின் வாழ்வியலோடு பொருந்துவதால் சுமனாக சுசீலா எனும் ஆசிரியர் இருப்பதைக் காணலாம்.
            ஒரு படைப்பு தோன்றுகிறது என்றால் அது படைப்பாளனின் மன நிலையில் ஏதோ ஒரு வகையாக உளவியல் சிக்கலை ஏற்படுத்தியிருக்க வேண்டும் . தன்னுடைய வாழ்வியல் அணுபவங்களோ! அல்லது சமூகத்தில் நடைபெறுகின்ற பதிவுகளோ!  அல்லது சமூகம் குறித்தான படைப்பாளனின் எதிர்பார்ப்புகளோ படைப்பின் வழியாக வெளிப்படுகின்றன. அவை ஓவியம், கதை, கவிதை, திரைப்படம் என எந்த வடிவம் வேண்டுமானாலும் மாற்றம் பெரும்.


கதையின் மையம்
            ஒரு படைப்பு உருவாவதற்கு முன்பாக படைப்பாளனின் மனதில் தோன்றுகின்ற படைப்பு குறித்த, சிந்தனையே கதைக்கு மையக்கருத்தாகின்றது. அதுவே தலைப்பாகவும் வடிவமெடுக்கின்றது. என்பதனை இலக்கியத்தளத்தில் காணுகின்ற போது நம்மால் உணரமுடிகின்றது. காத்திருத்தல் எனும் இக்கதையின் தலைப்பானது கதையினை முழுவதுமாக படிக்கின்ற பொழுது மையக் கருத்தினை பிரதிபலிப்பதாக அமைவதை உணரலாம். சுமன் எனும் பெண் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறாள். தன்னுடைய இருபத்தைந்து வயதில் இளமையும் அழகும் நிரம்பியிருந்த பொழுது தன்னைக் காதலித்து கைவிட்டுச் சென்ற பிரகாஷ் என்பவருக்காக காத்திருப்பதைக் கதை மையக்கருத்தாகக் கொண்டுள்ளது. தற்பொழுது பிரகாஷிற்குத் திருமணமாகிவிட்டது. குடும்பம் என்ற அமைப்பு உருவாகிவிட்ட்து என்பதை அறிந்த சுமன் தன்னை சமூக சேவை செய்வதில் அர்ப்பணித்துக் கொள்வதாக கதை அமைகின்றது.
சமூகப் பின்புலம்
            இந்தியச் சமூகமானது ஏற்றத்தாழ்வுள்ள சாதியக் கட்டமைப்புகளால் இயங்கிவருகின்றது. வர்ணாசிரமத்தை காலந்தோறும் பின்பற்றி வருகின்றது. இக்கதையில் தலைமைப்பாத்திரம் கதாசிரியரின் வாழ்வியல் பின்புலத்துடன் ஒன்றினைந்து செல்வதனைக் காண்போம். அவ்வாறு இருக்க, கதையின் சமூகப் பின்புலமானது ஆசிரியரின் சமூகப் பின்புலமாகத்தான் எடுத்துக் கொள்ளப்படுகின்ற்து. எனவே இந்திய சமூகத்தில் தாழ்த்தப்பட்ட பெண்கள் மீதான சாதிய வன்கொடுமைகள் காலந்தோறும் நடைபெற்று வந்துள்ளன. அவை இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. உயர்சாதிகளாகக் கருதப்படுகின்ற ஆண்கள் சாதிய அதிகாரத்தாலும் ஆண் எனும் அதிகாரத்தாலும் தாழ்த்தப்பட்டப் பெண்களை காதலிப்பதும் கருவுறச் செய்வதும் பின்னர் திருமணம் செய்ய மறுப்பதும் அதற்குச் சமூகம், சாதியெனும் பெயரில் ஒத்துழைப்புத் தருவதும் இந்தியச் சமூகத்தில் இயல்பாகவே நடந்தேறியுள்ளது. இக்கதைப் போக்கினை சற்று ஆழமாக நோக்குகின்ற பொழுது இது போன்ற சமூகப் பின்புலம் காட்டப்படுவதினை உணரமுடிகின்றது. இதுவரை உருவாக்கப்பட்ட வரலாற்றுப் பதிவுகள் அனைத்திலும் ஒரு பெண்ணினால் கைவிடப்பட்ட ஆண் இந்நிலைக்கு தள்ளப்பட்டதாக வரலாறு இல்லை. இதற்கு முக்கியக் காரணம் சமூக அமைப்பில் சாதியக் கட்டமைப்புடன் ஆணாதிக்க மனோபாவம் இணைந்து செயல்படுவதாலே பெண்கள் காலந்தோறும் இச்சமூகப் பின்புலத்தில் அடிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
கதை முடிவு
            சமூகம் பெண்களுக்கென விதிமுறைகளை வகுத்துள்ளது. ஒவ்வொருவருக்கும் எவ்வாறு வாழவேண்டும் என வரையறைகளை பண்பாடு எனும் பெயரில் வகுத்துள்ளது. இவ்வகையான வரையரைகளை மீறுபவர்கள் சமூகத்திலிருந்து புறந்தள்ளப்பட்டவர்களாக கருதப்படுவர். இத்தகைய வரையறைகளையே சமூக மதிப்பீடுகள் என்கிறோம். இக்கதையில் தன்னுடைய இளம் வயதில் காதலனாக இருந்த ப்ரகாஷுக்குத் திருமணம் நடந்து விட்டது  என்பதை அறிந்த பிறகு ஊரை விட்டு செல்ல சுமன் முடிவெடுக்கின்றார். பிரகாஷை சந்தித்தால் என்னவாகும், ஒரு வேலை அவர் என்னுடன் வந்து விட்டால், சமூகம் என்னைப் பற்றி என்ன பேசும்? என்னால் ஒரு குடும்பம் சீரலிந்து விட்டதாகத்தானே  பழி தூற்றும் என ஊரை விட்டு செல்லவும் இயலாமல், ப்ரகாஷுடன் சேர்ந்து வாழவும் இயலாமல் சமூகத்திற்குப் பயந்து வாழ வேண்டிய நிலை உருவாகின்றது. இந்நிலையில் சுமன் தன்னை சமூகத்திற்கு அற்பணித்துக் கொண்டதாகக் கூறுவது அந்தப் பெண்ணிற்கு வேறொருவகையான வாழ்க்கையினை இத்தகைய ஆணாதிக்க மனோபாவமுள்ள சமூகத்தில் ஏற்படுத்தித் தர இயலாத நிலையினையே ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.