சிறுகதைத்
தோற்றம்
தமிழில் சிறுகதை இலக்கியமானது மேலைநாட்டாரின் வருகைக்குப்
பின்பு தோற்றம் கொண்டது எனலாம். தமிழ் இலக்கியத்தில் கதை கூறும் மரபானது காலந்தோறும்
பின்பற்று வந்தாலும் அதற்கென தனிப்பட்ட வடிவம் என்ற ஒரு அமைப்பு உருவாகவில்லை. சிறுகதை
அமைப்பானது வெளிநாட்டவரின் இலக்கியங்களின் வழி 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோற்றம்
கொண்டுள்ளது. இன்றளவில் தமிழ் இலக்கியத்தில் சிறுகதை இலக்கியம் சிறப்பிடம் பெற்று விளங்குகின்றது.
சிறுகதையினை வரையறுக்கின்ற பொழுது அது மரபு சார்ந்த கதையமைப்பிலிருந்து விலகி நவீனத்
தன்மை பெற்று விளங்குகின்றது. நொடிப்பொழுதில் தோன்றும் நினைவுகள் கூட சிறுகதையாகலாம்.
சமூகம் சார்ந்த தனிமனிதன் சார்ந்த எதுவும் கதையாகலாம் என்ற தன்மையிலேயே சிறுகதை தோற்றம்
கொண்டுள்ளது. எனவே சிறுகதைக்கான எல்லைகளை ஒரு சட்டகத்திற்குள்ளாக அடக்குவது இயலாத ஒன்றாகும்.
இருப்பினும் சிறுகதைக்கான சில பொதுப் பண்புகளைக் கொண்டு சிறுகதை குறித்த சில விளக்கங்களை
அறிஞர்கள் கூறியுள்ளனர். அவை பின்வருமாறு.
மேலைநாட்டு
அறிஞர்களின் விளக்கம்
எட்கர்
ஆலன்போ
“சிறுகதை அரைமணியிலிருந்து ஒருமணி அல்லது இரண்டு மணி அவகாசத்திற்குள்,
ஒரே மூச்சில் படித்து முடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். தன்னளவில் முழுமை பெற்றிருக்க
வேண்டும். அது தரும் விளைவு ஒரு தனி மெய்ப்பாடாக இருக்க வேண்டும். கதையைப் படித்து
முடிப்பதற்குள் புறத்தேயிருந்து எவ்விதக் குறுக்கீடுகளும் பாதிக்காமல், வாசகனின் புலன்
முழுவதும் கதாசிரியனின் ஆதிக்கத்தில் கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும்.”
ஹெச்.ஜி.வெல்ஸ்
“சிறுகதை என்பது எடுத்த எடுப்பிலேயே படிப்போரின் கவனத்தை
ஈர்த்துப் பிடித்தல் வேண்டும். நெகிழ்ச்சியின்றி இயங்கி உச்சநிலை முடியும் வரை வாசகரின்
முழுக்கவனத்தையும் ஒருமுகப்படுத்தி, இடையீடோ, சோர்வோ நேரும் முன்பாகவே சிறுகதை முற்றுப்
பெறுதல் வேண்டும்.”
”சிறுகதை என்பது குதிரைப்பந்தயம் போல, தொடக்கமும் முடிவும்
சுவைமிக்கதாக இருக்க வேண்டும்” என்று ’எல்லரி செட்ஜ்விக்’ என்பவரும் “சிறுகதைகள் எளிய
கருப்பொருளைக் கருவாகக் கொள்ளுதலே சிறப்புடையது” என்று ’செகாவ்’ என்பாரும் விளக்குகின்றனர்.
தமிழ்
அறிஞர்களின் விளக்கம்
புதுமைப்பித்தன்
“சிறுகதை என்பது வாழ்க்கையின் சாளரம், சிறுகதை ஒரு தொடக்கம்,
மையச் சம்பவம், அதன் வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்ற மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது.
சிறுகதை, வாழ்க்கையின் ஒரு பகுதியை, கவலையை மறந்து விட்டுக் கவனிப்பதாக உள்ளது. சிறுகதையின்
வடிவம் கதை எழுதுபவரின் மனோதர்மத்தைப் பொறுத்தது.”
க.நா.
சுப்ரமணியன்
“சிறுகதை என்பது ஒரு நிகழ்ச்சியாக இருக்கலாம், உள்ளப் போராட்டமாக
இருக்கலாம். அது ஏதாவது ஒன்றாக இருக்கும் வகையில் சிறுகதை பிறக்கும். இரண்டாகவோ அல்லது
அதற்கு அதிகமாகவோ இருந்தால் சிறுகதை பிறக்காது.”
தி.ஜானகிராமன்
“சிறுகதையில் வரும் கதையோ நிகழ்ச்சியோ ஒரு க்ஷணத்திலோ, நிமிஷத்திலோ, ஒரு நாளிலோ,
பல வருடங்களிலோ நடக்கக்கூடியதாக இருக்கலாம். காலையில் தொடங்கி இரவிலோ, மறுநாள் காலையிலோ
அல்லது அந்த மாதிரி ஒரு குறுகிய காலத்திலோ முடிந்துவிட வேண்டும் என்று அவசியமில்லை.
சொல்லப்படவேண்டிய பொருளின் ஒருமைதான் முக்கியமானது. எட்டு நாளில் நடந்த சங்கதியை முதல் நாளிலிருந்து வரிசையாகச்
சொல்லிக்கொண்டு போகலாம். இரண்டாவது, மூன்றாவது, நாலாவது நாளிலிருந்தோ அல்லது கடைசிக்
கணத்திலிருந்தோ ஆரம்பித்து, பின் பார்வையாகப் பார்த்துச் சொல்லிக் கொண்டு போகலாம்.
நடந்தது, நடக்கப் போவது இரண்டுக்கும் இடையே ஒரு வசதியான காலகட்டத்தில் நின்றுகொண்டு
நிகழ்ச்சியைச் சித்திரித்துக்கொண்டு போகலாம். எப்படிச் சொன்னாலும் ஒரு பிரச்னை, ஒரு
பொருள், ஓர் உணர்வு, ஒரு கருத்துதான் “ஓங்கியிருக்கிறது’ என்ற நிலைதான் சிறுகதைக்கு
உயிர்.” (சிறுகதை எழுதுவது எப்படி? – தி.ஜானகிராமன் http://thoguppukal.wordpress.com
POSTED BY SINGAMANI ⋅ திசெம்பர் 4,
2011)
சுஜாதா
“சிறுகதை என்பது தந்தத்தில்
பொம்மையைக் கூர்மையாய்ச் செதுக்குவது போன்றது. நல்ல நடையினால் நடையினால் சிறுகதை செதுக்கப்பட
வேண்டும். சொல்லுகின்ற செய்தியை, கூர்மையாகத் தெளிவாய்ச் சொல்ல வேண்டும்.” (http://skavithaikal.blogspot.in சிறுகதைப் பகுதி, Posred
by n.nirosh september 7, 2011.)
“மனித உணர்ச்சிகளில் ஏதாவது ஒன்றைத் தொட்டு உலுக்குவதுதான்
சிறுகதை” என்கிறார், ’விந்தன்.’
சிறுகதை
அமைப்பு
சிறுகதையின் அமைப்பானது ஒரு மலையின் அடிவாரத்திலிருந்து தொடங்கி
உச்ச நிலையினை அடைந்து மீண்டும் அடிவாரத்தினை நோக்கி வருவதாக அமைய வேண்டும்.
சிறுகதையின் அமைப்பினை பொதுவாக மூன்று வகைகளாகப் பிரிப்பர்.
அவை தொடக்கம், உச்சம், முடிவு எனப்படும். இவை மூன்றும் சரியாக அமைகின்ற நிலையில் சிறுகதை
சிறப்பு
பெருகின்றது. அத்துடன் சிறுகதைக்குரிய தலைப்பும் முக்கியத்துவம் பெறுகின்றது.
கதைத்
தலைப்பு
ஒரு படைப்பினை அடையாளப்படுத்துவது அதன் தலைப்பே ஆகும். தலைப்பு
சிறப்பாக அமைகின்ற பொழுதுதான் அது வாசகர்களால்
கவரப்பட்டு வாசிக்கப் படுகின்றது. தலைப்பானது கதைக்குறிய கருவினை வெளிப்படுத்துவதாக
இருக்க வேண்டும். கதை மாந்தரின் பெயரிலோ, ஏதேனும் இடத்தின் பெயரிலோ, கருத்தின் பெயரிலோ
கதையின் மைய்யத்தோடு நெருங்கிய தொடர்புடையதா தலைப்பு அமைப்பது சிறப்புக்குரியதாக இருக்கும்.
சில நேரங்களில் கதை எழுதுவதற்கு முன்பாக தலைப்பினைத் தேர்ந்தடுத்து விட்டு அதனைத் தொடர்ந்து
கதை எழுதுவது ஒருவகை மரபு, மனதில் தோன்றிய கதையினை எழுதிவிட்டு பின்னை எழுதப்பட்ட கதைக்குரிய
தலைப்பினை இடுவது ஒருவகை மரபு. எப்படியிருப்பினும் கதையின் தலைப்பு மிகவும் இன்றியமையாதது
என்பதினை அரியலாம். இங்கு ’எனது சமூகம்’
எனும் சிறுகதையின் தலைப்பானது முன்னரே குறிப்பிட்டது போல கதையின் மையத்தினை வெளிப்படுத்துகின்றது.
ஏனெனில் கதையானது இந்து மதத்தில் சிக்கிக்
கொண்ட தலித் மக்கள் அடைகின்ற அவலநிலையினை வெளிப்படுத்துவதாக அமைகின்றது. ஆசிரியர் தலித்
சமூகத்திலிருந்து தோற்றம் கொண்டுள்ளதால் இக்கதைக்கு ‘எனது சமூகம்’ என தலைப்பிட்டிருப்பது
மிகவும் பொருத்தமுடையதாகவே இருக்கின்றது. திரிசங்கு
தலைப்புப் பொருத்தம் ’திரிசங்கு’ எனும் தலைப்பானது புராணக் கதையின் கருத்தினோடு இக்கதையின் கருத்தினையும்
இணைக்கும் விதமாக தலைப்பு அமைத்துள்ளார் ஆசிரியர். திரிசங்கு மன்னன் உடலுடன் விண்ணுலகம்
செல்ல வேண்டும் என விரும்புகின்றார். அது இயலாது என்பதனை உணர்ந்த விசுவாமித்திர முனிவர்
யாகம் நடத்துவதாகக் கூறி குழிக்குள் திரிசங்கு மன்னனைப் புதைத்து விடுகின்றார். ஆனால்
மக்கள் பார்வையில் திரிசங்கு மன்னனை விண்ணுலகிற்கு அனுப்பப் பட்டதாகவும் இந்திரன் மன்னனை
விண்ணிலிருந்து கீழேதள்ளிவிட்டதாகவும் அதைக் கண்ட விசுவாமித்திர முனிவர் தன்னுடைய தவவலிமையால்
விண்ணிலேயே மன்னனை நிறுத்திவிட்டதாகவும் இன்றும் மன்னன் நட்சத்திரமாய் ஒளிர்ந்து கொண்டிருப்பதாகவும்
கதை கட்டிவிடப்பட்டது. இக்கதைப்படி மண்ணன் விண்ணிலுமல்லாது மண்ணிலுமல்லாது இரண்டிக்கும்
இடையினில் இருக்கும் ஒரு நிலை, இக்கருத்தினை
திரிசங்குக் கதையுடன் ஆசிரியர் ஒப்பிட்டு விளக்குகின்றார். கதையில் தனுவின் அம்மா இயல்பான
நேரங்களில் தனுவிற்கு அம்மாவாகவும் தனு சேகருடன் பழகுவதைக் கண்டு சந்தேகம் கொள்கின்ற
போது தனுவிற்குத் தாத்தாவாகவும் மாறி, இரு மனநிலையுடன் பேசுகின்றாள் என்பதனை விளக்குவதற்காகவே
ஆசிரியர் திரிசங்கு என தலைப்பிட்டிருப்பது கதைக்கு மிகவும் பொருந்தி வருகின்றது.
தொடக்கம்
பொதுவாக சிறுகதையின் தொடக்கமானது விருவிருப்பாக படிக்கின்ற
வாசகனின் மனதில் ஆர்வத்தினை ஏற்படுத்தும் விதமாக இருக்க வேண்டும் என்பர். ஆனால் எங்கிருந்து
வேண்டுமானாலும் தொடங்கலாம். இடம், காலம், பொருள் என எதுவும் கதைத் தொடக்கத்திற்குக்
காரணமாகலாம். நிகழ்காலத்தில் தொடங்கி பின்னோக்கு உத்தியின் வழியாக இறந்த காலத்திக்
கூறுவதாக அமையலாம். அல்லது எதிர்காலத்தில் நடக்கப் போவதாகக் கூறலாம். காலத்தையினையே
குறிப்பிடாமல் ஏதேனும் ஒரு பொருளையோ அல்லது எதேனும் ஒர் நிகழ்வினையோ விளக்குவதாக இருக்கலாம்.
இங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளான ’திரிசங்கு’, ’எனது சமூகம்’ எனும் இரு சிறுகதைகளின்
தொடக்கம் குறித்துக் காணலாம். ”வீட்டின் நான்கு சுவர்கள் கொண்ட அமைப்பானது மனிதனுக்கு பாதுகப்பினைத் தருகின்றது. ஆனால் அத்துடன் அவனை ஒரு எல்லைக்குள் கட்டுப்படுத்தவும் செய்கிறது. பள்ளியும் கல்லுரியும் எங்கே அறிவை, ஆற்றலை வளம்பெறச் செய்கின்றனவோ, அங்கேயே நிபந்தனை, கட்டுப்பாடு, மற்றும் ஒழுங்கு எனும் பெயரால் அவனது ஆளுமையினைக் குன்றும்படியும் செய்கின்றன. விஷயம் இதுதான் நண்பா! ஒவ்வொரு விஷயத்திற்குமான முரண் அதனுள்ளேயே இருக்கிறது.” என திரிசங்கு
எனும் கதையின் தொடக்கமானது, ஒவ்வொரு விஷயத்திலும் உள்ள முரண்பாடான ஒரு தத்துவார்த்த
சிந்தனையினை விளக்குவதாக அமைகின்றது. “அம்மா அப்பாவுடன் நான் எனது சமூக மக்களின் வீட்டில்
நடைபெறுகின்ற சமூகம் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வழக்கம். சிலநேரம் திருமண
விழாக்களில் சிலநேரம் ஏதாவது பிறந்தநாள் விழாக்களில் சிலநேரம் முஸ்லீம்,
இந்துக்களின் ஈமச்சடங்குகளுக்கும் நான் அடிக்கடி செல்வது உண்டு. நான் பார்த்த வரையில்,
மக்கள் மிகவும் மரியாதையுடனும் அன்புடனும் ஒன்றிணைகின்றனர்.” என ’எனது சமூகம்’ எனும்
சிறுகதையானது ஒரு சமூகம் சார்ந்த நிகழ்ச்சிகள் தொடர்பான பார்வையினை தொடக்கமாகக் கொண்டு
அமைந்துள்ளது. கதைத் தொடக்கம் குறித்து முன்னரே குறிப்பிட்டது போல வாசகனின் மனதில்
ஒரு ஆர்வத்தினை ஏற்படுத்துவதாக இருக்கின்றது. அடுத்தது என்ன எனும் கேள்வியினை எழுப்புவதாகவே தொடங்குகின்றது.
பாத்திரப்படைப்பு
தொடக்க காலகட்டங்களில்
புராணக்கதைகளில் தலைமை கதைமாந்தர், துணைமைக் கதைமாந்தர் என உருவாக்கப்பட்ட
கதைமாந்தர்கள் அனைவருக்கும் பண்புநலன்கள் வரையறுக்கப் பட்டிருந்தன. தன்னிகரற்றத்
தலைவன், கற்புடைய தலைவி, நேர்மை வலிமை, உயர்குடிப்பிறப்பு என சில வரையறைகளை
உருவாக்கி வைத்திருந்தனர். ஆனால் தற்கால நவீன சிறுகதைகள் பழைய வரைமுறைகளை
உடைத்தெரிந்து அனைத்தையும் விமர்சனத்திற்கு உட்படுத்தி கதைக்கான எல்லையினை
விரிவடையச் செய்துள்ளது. யாரும் கதைமாந்தர் ஆகலாம். எதுவும் கதைமாந்தருக்குரிய
பண்பாக இருக்கலாம். எனும் புதிய பார்வையினை முன் வைத்துள்ளது. எனவே இங்கு
எடுத்துக் கொண்டுள்ள சிறுகதைகளும் கதைமாந்தர்களின் உளவியல் சிக்கல்களை
விவாதிப்பதாகவே அமைந்துள்ளன. கதையின் தலைமைக் கதை மாந்தர் ‘தனு’, தனுவின் அம்மா, அப்பா இவ்விருவர்களின் பெயர்கள் குறிப்பிடப் படவில்லை. வீட்டு வேலைக்காரன். எதிர் விட்டு மாடியில் தங்கியிருக்கும் சேகர் மற்றும் நண்பர்கள். தனுவின் அம்மா கல்லூரிப் பேரசிரியை, தனுவின் தந்தை ஆற்றுகின்ற வேலை குறிப்பிட வில்லை. வேலைக்காரன் பற்றிய எந்த விவரனைகளோ, உரையாடல்களோ கதையில் காணப்படவில்லை. “வெலைக்காரனை அனுப்பி அவர்களை அழைத்ததும் அடுத்த நிமிடமே எல்லோரும் ஆஜர்”. என்ற ஒரு வரி வீட்டில் வேலைக்காரன் உள்ளான் என்பதற்கான சான்றாகிறது. தனுவைப் பற்றிக் குறிப்பிட வேண்டுமெனில் பள்ளி மாணவி, அதைத்தவிர படிக்கும் வகுப்பு, பள்ளிக்கூடம் பற்றிய தகவல்கள் எதுவுமில்லை. எதிர் வீட்டில் தங்கி இருக்கும் மாணவர்களில் முதன்மைக் கதை மாந்தர் சேகர். மற்ற அனைவரும் தனுவின் நண்பர்கள் என்ற பொதுவான வார்த்தைகுள்ளாகவே குறிப்பிடப்படுகின்றனர். ’எனது சமூகம்’ எனும் கதையில் கதைமாந்தர்கள் என்று யாருக்கும்
பெயர் சூட்டப்படவில்லை. இக்கதையில் கதையாசிரியரே கதைமாந்தராகின்றார். ஆசிரியரின் மனதில்,
பள்ளிப் பருவத்தில் ஏற்பட்ட சமூகம் குறித்த சிந்தனைகளான சாதியக் கட்டமைப்பு, இந்து
மதங்களும் பண்டிகைகளும் தாழ்த்தப் பட்டவர்களை சீரழிக்கின்ற விதத்தினை குறித்து கதையில் விவரிக்கப் படுகின்றது. அதனாலேயே கதைக்கு
எனது சமூகம் என பெயர் சூட்டப் பெற்றுள்ளது.
கூற்று
எந்தவொரு படைப்பினையும் வாசிக்கின்ற பொழுத்தும் படைப்பின்
கூற்றை உணர்ந்து வாசிப்பது அவசியம். ஆசிரியரின்
பார்வையில் கதை கூறுவது, கதாப்பாத்திரங்களின்
பார்வையில் கதை கூறுவது, பெரும்பாலும் கதைமாந்தர்கள் வழியாக அமைகின்ற கதை அமைப்பே வெற்றி
பெரும் என்கிறார் சுஜாதா அவர்கள். மேலும் கூற்றுக்களை சில வகைக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றார்.
- தன் கூற்று
- அயல் கூற்று
- பிறர் நினைப்பதை வங்கிக் கூறல்
- தன் அனுபவங்களைச் செய்திகளாகக் கூறல்
- உரைநடை வடிவிலான கூற்று
- கடிதங்கள் வாயிலான கூற்று
- காட்சிகளின் வழியான கூற்று
- இயல்பான கூற்று
- கருத்துக்களின் வெளிப்படான கூற்று
மேற்கண்டவற்றில் நாம் தேர்ந்தெடுத்துக் கொண்ட சிறுகதைகளை நோக்குவோமேயானால் அயல் கூற்றாக அமைகின்றது அதாவது
தன்னுடைய கருத்தினை கூறுவதற்கு ஒரு கதை மாந்தரை உருவாக்கி கதைமாந்தரின் கருத்தாகக்
கூறுவது. ஆனால் இதனையே ஆசிரியரின் பின்புலத்தையும்
உணர்ந்து கொண்டு கதையினை வாசிக்கின்ற பொழுது தன் அனுபவங்களை செய்திகளாகக் கூறல் எனும்
கூற்றாகவும் உணர முடிகின்றது. ஏனெனில் திரிசங்கு, எனது சமூகம் எனும் இரண்டு கதைகளும்
கதையாசிரியர்கள் தங்களுடைய இளமைக்கால அனுபவங்களை நினைவு கூறுவதாக அமைகின்றன.
கதைக்கரு
கதையின் மையம், கதையாசிரியர் கதையின் வாயிலாக வாசகனுக்கு
விளக்குவதற்காக எடுத்துக் கொண்ட கருத்து அல்லது சிக்கல், எனவே கதைக்கருவும் கூற்றுமுறையும் சிறப்பு பெருகின்ற பொழுது
இயல்பாகவே கதை வெற்றி பெருகின்றது. கதைக்கான உயிரோட்டத்தினை கொடுப்பது கதைக்கரு எனலாம்.
அதிலிருந்தே கதை உருவாகின்றது. கதைக்கருவானது கதையாசிரியரின் அனுபவமாகவோ, கண்ட காட்சிகளாகவோ
அல்லது கற்பனைத்திறனாகவோ இருக்கலாம். கதைக்கருவினை ஒரு சிக்கல் என்று எடுத்துக் கொள்வோமேயானால்
அச்சிக்கலை பல வகைகளாகப் பிரிக்கலாம். அவை
தனிமனிதச் சிக்கல், குடும்பச் சிக்கல், சமூகச் சிக்கல். இவற்றில் திரிசங்கு எனும் சிறுகதை
தனிமனிதச் சிக்கலை எடுத்துரைக்கின்றது. தனுவின் இளமை வயதில் ஏற்படுகின்ற காதலுக்கு
தனுவின் அம்மா தடையாக இருக்கின்றாள். இந்தச் சிக்கலை தனு எதிர்கொள்கின்ற விதமாக கதை
அமைகின்றது. அடுத்ததாக எனது சமூகம் எனும் சிறுகதை கதையின் மையக் கருத்தாக சமூகச் சிக்கலை
எடுத்துக் கொண்டு விவாதிக்கின்றது. தாழ்த்தப்பட்ட தலித் சமூகத்தில் பிறந்த ஒரு பெண்
தன்னுடைய சமூக மக்களின் இழிவான நிலையினைக் கண்டு அவற்றிற்கான காரணத்தினை அறிந்து, தலித்
சமூகத்திற்கான விடுதலை என்ன என்பதைனைப் பற்றி சிந்திப்பதாக கதை அமைகின்றது.
முடிவு
சிறுகதையின் முடிவானது கதையின் தொடக்கத்தை விட முக்கியமானது.
முடிவு நன்மையானதாகவோ, தீமையானதாகவோ இருக்கலாம். கதையின் முடிவானது கதைக் கருவினை விளக்குவதாக,
கதை எழுதுவதற்கான காரணத்தை உரைப்பதாக இருக்கும். கதைகள் கதையின் தலைப்பினை உணர்த்துவதாக
இருக்கும். கதை முடிவு வாசகனின் மனதில் நிறைவை அல்லது சிந்தனையினை ஏற்படுத்துவதாக இருக்க
வேண்டும். இவ்வடிப்படையில் எடுத்துக் கொண்ட
இரு சிறுகதைகளும் பொருந்தியே வருகின்றன. “நான் மட்டும் இவையெல்லாவற்றிலிருந்தும் ஒரேயடியாக
விலகி சிந்தித்துக் கொண்டிருந்தேன். தாத்தா என்றுமே தாத்தாதான். இதனால்தான் அம்மாவிற்கு
சண்டையிடுவது மிகவும் எளிமையானதாக இருந்துள்ளது. ஆனால் ஒரு நேரம் தாத்தாவாக மாறுவதும்,
ஒரு நேரம் அம்மாவாக இருப்பதுமாக உள்ள, இந்த அம்மாவிடம் எப்படிச் சண்டையிடுவது? ” என
முடிவடையும் சிறுகதையானது சிறுகதை முடிவு பற்றிக் குறிப்பிட்டது போல ’திரிசங்கு’ எனும்
தலைப்பிற்கு ஏற்ப தாத்தாவாகவும் இருக்க முடியாமல் அம்மாவாகவும் இருக்க முடியாமல் போராடிக்கொண்டிருக்கும்
தனுவின் அம்மாவின் மனநிலையினைக் காட்டுவதாக முடிகின்றது.