மார்க்ஸியமும் பெண்ணியமும்
மனித சமூகம் தோன்றிய காலக்கட்டத்தில் உருவத்தில் விலங்குகளிலிருந்து வேறுபட்டவனாகத் தோன்றினாலும், செயல்பாடுகள் அனைத்தும் விலங்குகளைப்போல வேட்டையாடி உண்ணுதல் மரக்கிளைகளிலும், குகைகளிலும் உரங்குதல், நிரந்தரமற்ற நாடோடி வாழ்வினையே மேற்கொண்டிருந்தான். அப்பொழுது பொருளை செமிப்பது குறித்து சிந்திக்காத நிலை, எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாத நிலை, என ஒரு வகை மேம்பட்ட விலங்கினமாகவே வாழ்ந்து வந்தான். இத்தகைய காலக்கட்டத்தைத்தான் வேட்டைச் சமூகம் என்கிறோம்.
இச்சமூகத்தின் முதன்மையான தொழில் வேட்டையாடுதல் இதில் பால்பாகுபாடு கிடையாது. இத்தகைய ஆண் – பெண் வேறுபாடற்ற ஒரு சமத்துவச் சமூகமே தாய்வழிச் சமூகம் என்கிறோம். பெண் உற்பத்திக்கு உரியவள், அவளே இனத்தின் எண்ணிக்கையை வலுவடையச் செய்பவள், எனவே அவளின் வழிகட்டுதலில் தாய்வழிச்சமூகம் செயல்பட்டது. அங்கு கட்டற்ற பாலுறவு பண்பாடாகியது.
காலப்போக்கில் நாகரிக நரக வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த சமூகம் ஓரிட்த்தில் நிலையான குடியிருப்புகளை உருவாக்கி உழவுத்தொழில் மேற்கொண்டது. இக்காலக்கட்ட்த்திலேயே நிலம், பொருள், சேமிப்பு குறித்தும் இவற்றின் தேவை குறித்தும் மனிதன் சிந்திக்கத் தொடங்கினான். அவற்றின் விளைவாகவே கிராமம், நகரம் உருவாவதற்குக் காரணமாயின. இவ்வாறு நிலையான வாழ்வினை மேற்கொண்ட சமூகம் பொருளை உற்பத்தி செய்யத் தொடங்கிய பின்னர் வேட்டையாடுவதின் அவசியமும் குறையைத் தொடங்கியது. உற்பத்தி செய்ததில் மிஞ்சிய பொருட்களை சேமித்து வைக்க நாகரிகச் சமூகம் கற்றுக்கொண்ட்து. இந்நிலையில் பெண்ணானவள் குறிப்பிட்ட (கற்பம் தரித்த) கால்கட்டத்தில் உணவு உற்பத்திப் பணிகளில் முழுவதுமாக ஈடுபட முடியாத சூழல் உருவானது. இங்குதான் முதல் வர்க்க ஏற்றத்தாழ்வு உருவானது.
ஆண் உற்பத்திக்கு முதன்மையானவனாகவும் இவனுக்கு பெண் ஆணிற்கு உதவிபுரிபவளாகவும் கருதப்பட்டது. எனவே காட்டு வேலைக்கு ஆண், வீட்டு வேலைக்குப் பெண் என்ற நிலை உருவானது. எனவே பொருளாதாரம் (பொருள் + ஆதாரம்) சார்ந்து இயங்குபவன் ஆண் எனவும் அவனுடைய செயல்பாடுகளுகுக் கட்டுப்பட்டவள் பெண் எனவும் ஆணாதிக்கச் சமூகம் கட்டமைக்க தொடங்கிவிட்டது. இங்குதான் பெண் உழைப்பிற்கான ஊதியச் சுரண்டல் தொடங்கியது.
பெண்களுக்கான வேலைகள், குணநலன்களை ஆணாதிக்க சமூகம் வரையறுக்கத் தொடங்கியது. பொருள் ஈட்டுபவன் ஆண் என்ற நிலை உருவான பிறகு தன் பாதுகாப்புக் கருதி பெண் தனக்கென ஒரு ஆணைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழலில் சிக்கிக்கொண்டாள். ஆண் தனக்கு விருப்பமானவளை தேர்ந்தெடுக்கவும் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை உரிமையாக்கும் அதிகாரத்தையும் உடையவன் ஆனான், தனக்குப் பிறகு தன்னுடைய சொத்துக்கள் அனைத்தும் பெண்களுக்குச் சேராமல் ஆண் வாரிசுகளுக்குச் சென்றடையுமாறு செய்த உத்திமுறையே ஆணாதிக்கத்தினை காலம் காலமாக கட்டிக்காப்பத்தி வந்துள்ளது. இதனை மேலும் வலுவுள்ளதாக மாற்ற ஆணின் சிந்தனையில் உருவான மதம், சதி, கடவுள், நம்பிக்கைகள் அனைத்தும் பெண்களுக்கு எதிராகச் செயல்பட்த் தொடங்கிவிட்டன. பெண் ஆணின் நுகர்வுப் பொருளாக, ஜடப்பொருளாக, இலக்கியங்களின் வழி கட்டமைக்கப்பட்டாள். அதுவே இன்றைய பண்பாடாக உருவெடுத்துள்ளது. பொருளால் கட்டுப்படுத்தப்பட்டு, பின்னர் பொருளாகவே கட்டமைக்கப்பட்ட பெண்ணின் அடிமை வரலாறுதான் உலக வரலாறு, சாதியம் எவ்வாறு ஒவ்வொருவரின் உள்ளத்திலும் தனது கோர முகத்தினைக் கட்டுகின்றதோ, அவ்வாறுதான் ஆண்கள் எழுதிய வரலாற்றில் பெண்கள் சித்தரிக்கப்பட்டு வந்தாள். எனவே பெண் விடுதலை பற்றி அறிய வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். பண்பாட்டை கட்டுடைப்பு செய்ய வேண்டும். ஆண் – பெண்களுக்கிடையேயான பணிப்பகிர்வு சரி சமமாக்கப்பட வேண்டும். ஆண் – பெண்ணிற்கு ஊதியம் என்ற நிலை மாறி உழைப்பிற்கு ஊதியம் என்ற நிலை உருவாக வேண்டும்.