தமிழ் இலக்கியத்தில் பெண்ணியம்
பெண்விடுதலை, பெண்ணுரிமைகள், பெண்ணுணர்வுகள் என பல நிலைகளில் பெண்ணியமானது தன்னுடைய வாசிப்புத்தளத்தினை விரித்துச் சென்று இலக்கியத்தில் மட்டுமல்லாது அது சார்ந்த உளவியல், தத்துவவியல், அரசியல், சமூகவியல், என பல்வேறு துறைகளின் வாயிலாக அறிவியல்கண் கொண்டு ஆணதிக்கச் சமூகத்திணை ஆராயத் தொடங்கிவிட்ட்து.
ஆண்களின் ஆதிக்கத்தில் ஜடப்பொருளாக கட்டமைக்கப் பட்ட பெண் உலகத்தை வெறுத்து தனக்கென இலக்கியத்தையும் அரசியலையும் உருவாக்க வீறு கொண்டுள்ளது பெண்ணியம். பெண் விடுதலை இன்றி சமூக விடுதலை சாத்தியமில்லை என்ற கருத்தினை ஆணாதிக்க சிந்தனை கொண்ட சமூகத்திற்கு எடுத்துக் கூறவே எழுந்துள்ளது.
1980 களுக்குப் பிறகுதான் தமிழ் இலக்கியங்களில் ஆங்காங்கே பெண்ணியச் சிந்தனை கொண்ட இலக்கியங்கள் தொற்றம் பெற்றுள்ளதைக் காண முடிகின்றது. இருப்பினும் 1990 களுக்குப் பிறகுதான் முழுவதுமான கோட்பாடுகளைக் கொண்டு தனித்த இயக்கங்களாக இயங்கத் துவங்கி உள்ளன.
தமிழ் இலக்கியத்தில் நவீன இலக்கியங்கள் என அழைக்கப்படும் தற்கால இலக்கியங்கள் மேலை நட்டாரின் கோட்பாடுகளை உள்வாங்கி உருவம் பெற்றிருப்பது போலவே, பெண்ணியமும் மேலை நாட்டுப் பெண்ணியக் கோட்பாடுகளி முன்மாதிரியாக்க் கொண்டு தமிழ் இலக்கிய ஆணாதிக்கச் சிந்தனைப் போக்கினை கேள்விக்குட்படுத்துகின்றது. இதனைப் பிரிந்து (எதிர்த்து) உருவான தனித்துவமான மற்றொரு பெண்ணியச் சிந்தனைதான் தலித் பெண்ணியம். ஏனெனில் இந்திய சமூகத்தின் வரலாற்றை திரும்பிப் பார்க்க வேண்டுமெனில் மக்களை ஏற்றத்தாழ்வுள்ளவர்க்ளாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்திருக்கின்ற சாதியத்தை நீக்கி விட்டு பார்ப்பது இயலாத ஒன்றாகும்.
வறுமையை விட தீண்டாமை கொடியது என்று என்னும்பொழுதுதான் மர்க்ஸியம், சாதியத்தின் முன்பாக தோற்று விடுகின்ற சுழல் உருவாகின்றது. எனவேதான் தமிழ் இலக்கியத்தில் பெண்ணியம் என பேச வந்த பிறகு தலித் பெண்ணியத்தின் தீவிரத் தன்மையைனையும் பேச வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.
பெண் என்பவள் ஆண்களால் ஒடுக்கப் படுகின்றாள் என்பதையும் தாண்டி, சாதியால் ஒடுக்கப்படுகிறாள் என்னும்பொழுதுதான் தலித் பெண்ணியத்தின் தேவையை உணர முடிகின்றது. இக்கட்டுரையில் காலந்தோறும் தொன்றிய இலக்கியங்களில் அவ்வக்காலங்களுக்கு ஏற்ப பெண்கள் எவ்வாறு சித்தரிக்கப் பட்டு வருகின்றனர். அவ்வகையான சித்தரிப்பு பெண்களை எவ்வாறு இழிவுபடுத்துகின்றது என்பதினை காணலாம்.
தொல்காப்பியத்தில் பெண்ணியம்
எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களைக் கொண்டு 1610 நூற்பாக்களால் இயற்றப்பட்டது. இவற்றில் முதலிரண்டும் தமிழ் மொழிக்கு இலக்கணம் கூறுவன. மூன்றாவதான பொருளதிகாரம்தான் தமிழ் இலக்கியத்திற்கு இலக்கணம் கூறுகின்றது. இதனை ஒன்பது இயல்களில் விளக்குகின்றார் தொல்காப்பியர். பொருளதிகாரத்தில் அகம், புறம், களவு, கற்பு என இந்நான்கும் தமிழர் மரபினை இலக்கிய வழி எடுத்துரைக்கின்றன. இவற்றினைப் பெண்ணியக் கண் கொண்டு பார்க்கும்போது தொல்கப்பியரின் இயல் பிரிக்கும் விதத்தில் அகம் பெண்ணியத்திற்குரியதாகவும், புறம் ஆணிற்குரியதாகவும் பிரிக்கபட்டிருப்பதை உணரலாம்.
அகத்தில் தொன்றும் இரு நிலைகளை நோக்குவோமேயானால் திருமணத்திற்கு முந்தியது களவு, திருமணத்திற்கு பிந்தையது கற்பு. இங்கு திருமணத்தை மையமிட்டு நடத்தப்பட்டிருக்கும் இயல் பிரிப்பானது, திருமணத்திற்கு முன்பு தந்தை, அண்ணன், தம்பி இவர்களின் அடிமைத்தளத்திலிருந்து திருமணத்தின் மூலம் கணவன், கொழுநன், மாமனார் என வேறொரு அடிமைத்தளத்திற்கு மற்றப்படும் செயல்பட்டை முதன்மைப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
கற்பு எனப்படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே
தொல்-கற்பியல்(01)
இங்கு “கற்பு என்ற வார்த்தையை பகுபதமாக்கிப் பார்ப்போமேயானால் கல் என்பதிலிருந்து வந்த்தாகவும், அதாவது படி-படிப்பு என்பது போல் கல்-கற்பு என்ற இலக்கணம் சொல்லப்பட்டு வறுகிறது. என்ற்யும் ”கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை”! என்கிற வக்கியப்படிப் பார்த்தால் கற்பு என்பது சொல் தவறாமை அதாவது நாணயம், சத்தியம், ஒப்பந்த்திற்கு விரோதமில்லமல் என்கிறதான கருத்துக்கள் கொண்ட்தாக இருக்கிறது.” (பெண் ஏன் அடிமையானாள் ? தந்தை பெரியார். பக் – 7)
பெறுவதற்கு உரியவன் தலைவன், கொடுப்பதற்கு உரியவர்கள் தலைவியில் பெற்றோர், ஒருவர் கொடுக்க ஒருவர் கொள்வது வியாபாரத்தைத்தான் குறிக்கும். திருமணம் வியாபாரம் என்றால் தலைவி வியாபாரப் பொருளாகத்தான் கருத வேண்டியுள்ளது. ஆண் என்பவன் வீரத்திற்கும், பெருமைக்கும் உரியவன். பெண் என்பவள் அச்சத்திற்கும் கற்பிற்கும் உரியவள் என்பது இலக்கியம் நமக்கு கற்றுத்தந்த ஆணாதிக்கப் பாடம். இப்பண்பினைத் தோற்றுவித்தப் பெருமை தொல்காப்பியத்தினையேச் சாரும்.
”பெருமையும் உரனும் ஆடூஉ மேன”
தொல்-களவியல்
”அச்சமும் நாணமும் மடனும் முந்துறுத்த
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப”
தொல்-களவியல்
”உயிரினும் சிறந்தன்று நானே நாணினும்
செய்தீர் காட்சித் கற்புச் சிறந்தன்று”
தொல்- பொருளதிகாரம் -111
மேலும் பெண்ணிற்கு கற்பொழுக்கம் பற்றிக் கூறுகையில் உயிர் சிறந்தது அதைவிட சிறந்தது நாணம், அதையும் விட உயர்வானது கற்பு. எனவே ஒரு பெண் தனது கற்பை இழக்க நேரிடும் சூழல் ஏற்படின் கற்பினை விட தாழ்வான, மதிப்பற்ற உயிரினை விட்டுவிடுவது சாலச்சிறந்தது என்று கூறுவது எந்த அளவிற்குக் கொடுமையான ஆணாதிக்க உணர்வு என்பதினை நம்மால் உணரமுடிகின்றது.
”ஆரிய பாஷையில் பார்க்கும்போது மாத்திரம் கற்பு என்கிற வார்த்தைக்கு அடிமை என்கிற கருத்து நிழைக்கப்பட்டிருக்கின்றது என்பது எனதபிப்பிராயம், அதாவது பதியைக் கடவுளாக்க் கொண்டவள், பதிக்கு அடிமையாய் இருப்பதையே விரதமாக்க் கொண்டவள், பதியைத்தவிர யாரையும் கருதாதவள் எனப் பொருள் கொடுத்திருப்பதுடன் பதி (கணவன்) என்கிற வார்த்தைக்கு அதிகாரி, எஜமான், தலைவன் என்கிற பொருள் இருப்பதால் அடிமைதன்மையை இவ்வார்த்தை புலப்படுத்துகின்றது.” (பெண் ஏன் அடிமையானாள் ? தந்தை பெரியார் பக்-08)
”தன்னுறு வேட்கை கிழவன் முன் கிளத்தல்
என்னுங் காலைக் கிழத்திக்கு இல்லை”
தொல்- பொருளதிகாரம் 116
பெண்ணானவள் தன்னுடைய பாலியல் வெட்கையை கணவனிடம் கூட கூறாமல் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும் என்கிறது தமிழர் பண்பாடு, பிறரிடம் சொல்லக்கூடாது, தலைவனிடமும் சொல்லக்கூடாது என்றால் அவள் யாரிடம் கூறுவாள் ? என்ற கேள்வி எழுகிறது.
பொருளை ஈட்டுபவன் தலைவன், அதனை செலவிடுவனும் தலைவன், நிலத்திற்கு உரிமையாளன், நட்டிற்கு உரிமையாளன், பெற்றோரின் சொத்துக்களுக்கு உரிமையாளன். என பொருளாதாரம் சார்ந்து இயங்குபவன் ஆண். தலைவியின் தேவை எதுவாயினும் அது தலைவனின்று நடைபெறாதவாறு கட்டமைக்கப்பட்டு இறுகிக் கிடந்த ஆணாதிக்கச் சமூகத்தில் பெண் ஒரு நுகர்வுப் பொருளாக, மக்களை ஈன்றெடுக்கின்ற உற்பத்திப் பொருளாக உருவகப்படுத்தப் பட்டிருந்தாள். போரில் வென்ற அரசன், தோற்ற அரசனின் நிலத்தை சேதப்படுத்துவது என்பது அங்குள்ள பெண்களை சேதப்படுத்துவதற்குச் சமமாக கருதப்பட்ட்து. இத்தகைய சிந்தனைகளைக் கொண்ட இலக்கியங்களை பெண்ணியப் பார்வையில் நோக்குகின்ற பொழுதுதான் ஆணாதிக்கத்தின் கோர உருவம் தெரியவருகின்றது.
பெண்ணியப் பார்வையில் திருக்குறள்
பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ்மறை, பொதுமறை என புகழப்படுகின்ற திருக்குறள் தமிழில் தொன்றிய வேத நூலாகக் கருத்தப்படுகின்றது. இந்நூல் சாதி, மதம், இனம், நாடு, மொழி முதலியவற்றை எல்லாம் கடந்து உலகத்தில் உள்ள எல்லோரும் திருக்குறள் எங்கள் நூல் என போற்றுமளவிற்கு உலகப் பொதுமறையாக விளங்கும், இந்நூல் பெண்ணியப் பார்வையில் அநீதியிலக்கியமாக தோன்றியதர்க்குக் காரணம் தேடுகையில், திருக்குறளை எழுதியது பெண்ணியாயிருந்தாள் பெண்களை அடிமைக் கண் கொண்டு பார்த்திருபாரா ? என்று பெரியார் எழுப்பிய வினாவினை நாமும் ஒரு முறை கேட்டுப் பார்ப்போம்.
திருவள்ளுவர் எழுதியது எவ்வளவோ ? ஆனால் தொகுக்கப்பட்ட்து 1330 குறட்பாக்கள் என்பதனைக் கொண்டு ஆராய்வோமானால் ஆண் அதிகாரத்தை விரும்புகின்ற ஒரு ஆண் பெண்களை அடிமைப்படுத்த எழுதிய ஒன்றாகவேதான் எமக்குப் புலப்படுகின்றது. அறம், பொருள், இன்பம் என இயல் பிரிக்கப்பட்டு அறமும் பொருளும் ஆணுக்கு என ஒதுக்கிவிட்டு இன்பத்தினை களவு, கற்பு என இரண்டாக்கினர். இவ்வியல் பிரிப்பு திருக்குறள் தொகுக்கப்பட்ட காலத்தில் நடந்தேரியது என்ற கருத்தும் உள்ளது. அவ்வாறு இருப்பின் அதுவும் ஆணாதிக்கவாதிகளால் நடந்த ஒன்றாகத்தான் கருத முடிகின்றது.
இங்கு களவு கற்பு என்பது தொல்காப்பியத்தில் நாம் கண்ட்து போல திருமணத்திற்கு முந்திய வாழ்வு, திருமணத்திற்கு பிந்தைய வாழ்வு என்று எடுத்துக்கொண்டால் இதுவும் பெண்ணை மையமிட்டுத்தான் வரையறை செய்யப்பட்டுள்ளது. பொதுவாக களவு, கற்பு என இவ்விரண்டு பதங்களை எடுத்துக் கொள்வோமேயானால், யாரும் அறியாது கள்ளத்தனமாக ஆணும் பெண்ணும் சேர்ந்து காதல் செய்வது களவு என்றும், ஊரறிய கணவன் மனைவியாக வாழ்வது கற்பும் என பொருள் கொள்ளலாம். அப்படியிருக்க பெண்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த உலகம் போற்றும் அற்ஞர்களுக்கு எங்கிருந்து வந்தது ? எனும் கேள்வி அனைவரின் மனதிலும் தோற்றம் கொள்ளும்.
திருக்குரளின் அதிகாரங்கள் வகைப்படுத்துவதின் அடிப்படையில் நோக்குவோமேயானல் முதன்மை இடத்தில் வகிப்பன, வாழ்க்கைதுணை, பெண்வழிச்சேறல் இவை கூறும் பெண்ணியக் குண நலன்களைப் பற்றிக் காண்போம்.
”தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய் எனப் பெய்யும் மழை”
திருக்குறள் - வாழ்க்கைத்துணை
பெண்ணானவள் தெய்வத்தினைத் தொழாமல் இருப்பாலேயானாலும் தினந்தோறும் கணவனைத் தொழுவாளேயானால் அப்படிப்பட்ட பத்தினித் தன்மை கொண்ட பெண், மழை வரும் என்று சொன்னால் இயற்கையானது (கடவுள்) அவளது சொல்லிற்குக் கட்டுப்பட்டு உடனடியாக மழையினைப் பெய்விக்கும் என்பதாக்க் கூறப்பட்டுள்ளது.
அன்றாட ஆணாதிக்க சமூக வாழ்வில் நாம் கணவனை தெய்வத்திற்கு நிகரானவன் என்கிற சொல்லாடல்களைக் கேட்டிருக்கின்றோம், ஆனால் இவ்வறிஞர், முத்தமிழ் வித்தகர், கடவுளுக்கும் மேலனவன் கணவன் என்று பொருள்பட உரைத்திருப்பது ஆணாதிக்க மனோபாவத்தைச் சிந்தனையைத்தான் காட்டுகின்றது.
”சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை”
திருக்குறள்-வாழ்க்கைத்துணை
காவலினால் பெண்கள் கற்பாயிருப்பதால் எந்தப் பயனுமில்லை. பெண்கள் தாங்களாகவே கற்புடையவர்களாக இருக்க வேண்டும் என்பதாகத்தான் பொருள் தோன்றுகிறது. மனித சமூகத்திற்கு விலங்குகளை தனக்கான வேலைகளை செய்வதற்கு கட்டுப்படுத்தி வளர்ப்பது என்ற ஒரு பழக்கம் உண்டு. அதில் பல்வேறு முறைகள் உண்டு. வலிமை மிக்க விலங்குகளை மூக்கனாங்கயிறு குத்துவதன் மூலமாகவோ, கடிவாளம் இடுவதன் மூலமாகவோ தன் கட்டளைகளை கேட்கும்படி அடிமைபடுத்துவது. மற்றொரு வகை வலிமை குறைந்த விலங்குகளை அவைகளுக்கு ஏற்று சிறு இருப்பிடங்களை தங்களது வீட்டின் அருகினில் ஏற்படுத்திக் கொடுத்து, அல்லது வீட்டிலேயே தங்க வைத்துக் கொள்வது, பின்னர் அதற்குத் தேவையான உணவுகளை (தான் உண்ட மீத உணவை) வழங்கி தனக்கு விசுவாசமாக நடக்கும்படியும், தான் இடும் கட்டளைகளை தானே விரும்பி ஏற்று செய்யும்படியாக மாற்றிவிடுவது. பின்னர் அதனைப் பின்பற்றி வருகின்ற மற்ற விலங்கினச் சந்ததியினங்கள் மனித சமூகத்தால் கற்பிக்கப்படாமலேயே தன்னுடைய பெற்றோர்களிடமிருந்து கற்றுக்கொண்டு எஜமானர்களுக்கு பணிவிடைகள் புரிவது போன்றதாகத்தான் ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்களின் நிலை உள்ளது என்பதனை அனைவராலும் உணர முடியும்.
பெண்கள் இயல்பாகவே மற்றவரின் காவலின்றி தன்னை எத்தகையச் சூழலிலும் கற்புடையவளாக தற்காத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளுவர். ஆனால் பாரதியார் கூறும்போது கற்பென்று சொல்லவந்தால் அதை இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம். என புரட்சிகரமான சிந்தனையை கூறுகின்றார். இதைத்தான் பெரியார் அவர்கள் “புருஷர்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது பாஷைகளில் தனி வார்த்தைகளே காணாமல் மறைபட்டுக் கிடப்பதற்குக் காரணம் ஆண்களின் ஆதிக்கமே தவிர வேறில்லை” ( பெண் ஏன் அடிமையானாள் ? பெரியார் பக் – 9)
ஆணாதிக்கச் சமூகம் சொர்க்கம், நரகம் என இரண்டு கற்பனை இடங்களை விண்ணில் கட்டி வைத்துள்ளது. இப்பூவுலகில் நன்மைகளைச் செய்து இறந்தவர்களுக்கு சொர்க்கமும், தீமை செய்துவிட்டு இறப்பவர்களுக்கு நரகமும் என வகுத்துள்ளது. இதனை வள்ளுவரும் நம்பியிருக்கிறார் என்பதுதான் எனக்காக வியப்பாக இருக்கின்றது.
”பெற்றான் பெறின்பெறுவர் பெண்டீர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு”
திருக்குறள் – வாழ்க்கைத் துணை
பெண்கள் தன்னைத் திருமணம் செய்து கொண்ட கணவனை தினமும் வழிபட்டு வருவாரயின் அவர்கள் புத்தேளிர் (தேவர்கள்) வாழும் உலகில் அதாவது தேவலோகமாகிய சொற்கலோகத்தில் இவ்வுலகைவிட்டு மறைந்த பிறகு அங்கு இன்பமாக வாழ்வர் என்பதாகத்தான் பொருள்படுகின்றது. இங்கு மீண்டும் பெரியார் வினவும் வினாவே நினைவிற்கு வருகின்றது. திருக்குறளைப் பெண் எழுதியிருந்தாள் இது போன்ற குறளை எழுதிருப்பாரா ? என்பதுதான் இதனை ஆனாதிக்காமில்லாமல் வேறு என்னவென்று உரைப்பது ?.
ஆண்களை வழிபடும் பெண்களுக்கு, ஆண்களில் சொற்படி நடக்கும் பெண்களுக்கு எத்தனை எத்தனை நன்மைகளை வள்ளுவர் வகுக்கின்றார். அவளின் சொல்லிற்கு இயற்கைக் கட்டுப்படுகின்றது. சொர்க்கலோக எளிதில் கிடைக்கிறது. பெண் இறந்த பின்பு உலகம் போற்றும் பத்தினி என்ற வாழ்நாள் விருது வழங்கப்படுகின்றது. என முற்றும் அறிந்த முனிவர் கண்டு சொல்லியது என்று நினைக்கும் பொழுதுதான் வருத்தமாக இருக்கின்றது. அதே வள்ளுவர்தான் கூறுகின்றார், பெண்களின் சொற்படி நடக்கும் ஆண்கள், பெறுகின்ற பலன்களைப் பற்றி
”மனைவிழைவார் மாண்பய னெய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளு மது”
திருவள்ளுவர்- பெண்வழிச்சேறல் 901
மனைவியின் சொல் கேட்பவன் எந்தக் காரியத்தையும் செய்ய இயலாது. அதனால் அவன் எந்தப் பயனையும் அடைவதில்லை.
”இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்”
திருக்குறள் – பெண்வழிச்சேறல்
தன் மனைவிக்குத் தாழ்ந்து நடக்கும் பண்புடையவன், நல்லவர்கள் (ஆண்கள்) முன்பாக தலைகுணிந்து நடக்க வேண்டும்.
”அறவினையு மான்ற பொருளும் பிறவினையும்
பெண்ணேவல் செய்வார்கண் இல்”
திருக்குறள் – பெண்வழிச்சேறல் 909
மனைவியின் சொற்படி கேட்டு நடப்பவன். தர்ம காரியங்கள் செய்யவோ, பிற காரியங்கள் செய்யவோ இயலாதவனாகின்றான். இது போன்ற கருத்துக்கள் வள்ளுவன் தன்னை உலகினுக்குத் தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாட்டில் பெண்களின் சொற்படி நடப்பவர்கள் பெறுகின்ற இழிநிலையை வள்ளுவன் வகுத்துள்ளார் என்பது திருக்குறள் ஆணாதிக்கத்தை ஆதரிக்க வந்த அடுத்த மனு என்றுதான் கூறத்தோன்றுகிறது.
பெண்ணிய நோக்கில் சங்க இலக்கியம்
காலந்தோறும் படைக்கப்பட்ட இலக்கியங்களில் பெண் படைப்பாளர்களின் எண்ணிக்கையினை நோக்குவோமேயானால் அது கேள்விக்குரியதாகவே உள்ளது. பெண்ணியம் பேசுகின்ற இக்காலக்கட்ட்த்தில் கூட ஆண்களுக்கு நிகரான எண்ணிக்கை கொண்ட பெண் படைப்பாளிகள் உருவாகவில்லை என்பது வருத்த்திற்குரிய செய்தியாகிறது. குறிப்பிட்ட காலகட்ட்த்தை மனதிற்கொண்டு தொகுக்கப்பட்ட இலக்கியங்களே சங்க இலக்கியங்கள். இக்காலக்கட்டத்தில் படைத்தைவைகளில் கிடைத்தவைகளைக் கொண்டு தொகுத்தவை மிகக்குறைவு இவற்றின் மூலமே இலக்கிய வரலாறு வரையறுக்கப்படுகின்றது.
காதல் ஒழுக்கம் ஏற்பட்ட காலம் சங்க காலம், உடன்போக்கு மேற்கொண்ட காலம், பார்ப்பனியத்தின் சூட்சும ஆதிக்கம் நிலை கொள்ளாத காலம். சாதிய வெறி தோன்றாத காலம். எந்நில ஆடவனும், எந்நில பெண்ணுடனும் இணைந்து காதல் செய்வதினை ஏற்றுக்கொண்ட சமத்துவக் காலம் என்று போற்றி வருகின்ற நிலையில் பரத்தையர் ஒழுக்கத்தையும் ஏற்றுக்கொண்ட காலமாகத்தான் இருந்தது. பாலியல் உறவில் ஆண்கள் எல்லையற்ற உரிமை பெற்றிருந்தனர்.
தலைவன் தலைவியை பிரிதல் என்பது ஓதல் பிரிவு, பகை காரணமான பிரிவு, தூது காரணமான பிரிவு, மற்றுமொரு வகைப் பிரிவுதான் பரத்தையர் பிரிவு, இதனை மையமாக வைத்துத்தான் மருத நிலத்தின் உரிப்பொருள் ஊடலும் ஊடல் நிமித்தமும் என வகுக்கப்பட்ட்து எனலாம். பரத்தையிடம் சென்று வரும் தலைவனிடம் தலைவி ஊடல் கொள்ளலாமே தவிர, சண்டை போடுதல் கூடாது, நீ ஒரு பெண்ணைத் தேடினாள் ! நான் ஒரு ஆடவனைத் தேடிச் செல்வேன் என்று சொல்லுதல் கூடாது, கணவனை ஏற்றுக் கொண்டு, மீண்டும் அவனுக்குப் பணிவிடைகள் செய்ய வேண்டும் என்றுதானே இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன.
”பரத்தமை மறுத்தல் வேண்டியுங் கிழத்தி
மடத்தகு கிழமை உடமையானும்
அன்பிலை கொடியை என்றலும் உரியவள்”
பரிபாடல் திரட்டு 18-21
திணைகள் தோறும் ஆண்கள் பரத்தைகளிடம் செல்வதைப் பெருமையாகக் கருதுகின்ற இலக்கியம், பெண்களுக்கு மட்டும் கற்பினை வலியுறுத்தியுள்ளது என்றால் இதனை ஆண்களால் ஆண்களுக்கு எழுதப்பட்ட ஆணாதிக்க இலக்கியம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை இருக்கும், அதனடிப்படையில் எழுதப்பட்ட புறனானூற்றுப் பாடலைக் காண்போமேயானால்
”ஈன்று புறந்தருதல் எந்தலைக்கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக்கடனே
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
தண்ணடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறு வாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே”
புறநானூறு 312
என ஒரு தாய் (பெண்) கூறுவதாகப் பாடல் அமைந்துள்ளது. மனித சமூகத்தில் பெண்ணின் பங்கு என்பது பிள்ளை பெற்றுத் தருவதோடு முடிந்து விட்ட்தாகவும், அதுவும் இங்கு குறிப்பாக நோக்க வேண்டியது ஆண்மகனைப் பெற்றுத் தருவதுதான் பெருமை என்பதை உணர்த்துகின்றது. வீரத்திற்குரிய அனைத்து சமூகச் செயல்பாடுகளையும் ஆண் செய்கிறான். அவனால்தான் செய்யமுடியும், அவந்தான் செய்ய வேண்டும் என்பதாகத்தான் இலக்கியங்கள் ஆணாதிக்கச் சிந்தனைகளைக் கட்டமைக்கின்றன.
இன்றைய சமூகத்திலும் நாம் சந்திகின்ற பிரச்சினையாக இருக்கின்ற ஒன்று, தம்பதியர்கள் இருவரில் ஆண் குழந்தை பெறுவதற்குத் தகுதியற்றவனாக இருப்பினும் சமூகத்தினரால் ’மலடி’ என்கிற கடுஞ்சொல் பெண்கள் மீதுதானே பிரயோகிக்கப்படுகின்றது. இக்கொடிய வார்த்தைக்குப் பலியானவர்களின் முகத்தில் விழிப்பது என்பதை சமூகம் தவறாகதானே பார்த்து வருகின்றது. கணவன் இருந்தும் கணவனை இழந்தவள் படும் துன்பத்திற்கு இணையான துன்பத்தைப் பெறுகின்றாள். அதிலும் கொடுமை என்னவென்றால் அவளின் தலைமையிலேயே தன் கணவனுக்கு வேறு பெண்ணைத் திருமணம் செய்து வைக்க ஆணாதிக்கச் சமூகம் ஆணையிடுகின்றது.
”நின்னினுஞ் சிறந்தவல் எமக்கு நீநயந்து
நன்மன அருங்கடி அயர
எம்நனம் சிறப்பயாம் இனிப் பெற்றோளே”
ஐங்குறுநூறு 292
பொருளாதார அடிப்படையில் ஆணைச் சார்ந்து வாழ வேண்டிய நிலையில் பெண்ணானவள் தன்னுடைய பொருள் சார்ந்த தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்ள ஆனையே சார்ந்து வாழ வேண்டியிருந்து வருகின்றது. இதுவே பெண்ணடிமைத் தனத்திற்கு முக்கியக் காரணமாயிற்று. கணவன் உண்ட பிறகு அவன் வைத்து விட்டுச் சென்ற எச்சில் உணவை உண்டு தன் அடிமைத்தனத்தை, பத்தினித்தன்மையை, நிரூபிக்க வேண்டும் என்கிறது ஆணாதிக்கச் சமுதாயம்.
”வினையே
ஆடவர்க்குயிரே வாள்நுதல்
மனையுறை
மகளிர்க்கு ஆடவர் உயிர்”
குறுந்தொகை
135
ஆண்களுக்கு
பொருளாதாரம் சார்ந்த செயல் உயிர் போன்றது. ஆனால் பெண்களுக்கு ஆண்கள் உயர்வானவர்கள்
என்ற கருத்தாக்கம் கட்டமைக்கப்பட்டுள்ளது. தன் உயிரினும் மேலாக ஆடவனை போற்றுவதைத்தான்
இச்சமூகம் விரும்புகின்றது. என்பதனை நாம் பெண்ணிய நோக்கில் அணுகுகின்ற போதுதான் ஆணாதிக்கக்
கருத்துக்களை வகை பிரித்துப் பார்க்க இயலுகின்றது. எனவே பொருளாதாரம் சார்ந்து பெண்கள்
செயல்படுகின்ற போதுதான் பெண் விடுதலை சாத்தியப்படும் என்பதை நாம் உணர வேண்டும்.
சமூகத்தில்
விதவை, மலடி போன்ற பெண்களைக் குறிக்கின்ற சொற்களுக்கு இணையாக ஆண்களைக் குறிக்கின்ற
சொற்கள் இல்லை. ஏனெனில் மனைவியை இழந்த ஆணும் குழந்தைப் பேறு இல்லாத ஆணும் புதுமாப்பிள்ளை
ஆவதுதானே இச்சமூக வழக்கமாகி வருகின்றது.
பெண்களுக்குக்
கற்புக் கோட்பாடு பற்றிக் கூறும் இலக்கியம் அதனை மூன்று நிலைகளாக வகைப்படுத்துகின்றது.
1) தலைக் கற்பு 2) இடைக் கற்பு 3) கடைக் கற்பு
கணவன் (ஆண்) இறந்தவுடன் எவ்வித தூண்டுதலுமின்றி இயற்கையாகவே
மனைவி (பெண்) இறந்து விடுவது என்பது தலைக் கற்பு எனவும்,
கணவன் இறந்த பின்பு அவனை எரிக்கின்ற நெருப்பில் மனைவி வீழ்ந்து
இறந்து விடுவதை இடைக் கற்பு என்றும் ( உடன்கட்டை ஏறுதல்)
கணவன் இறந்த பின்பு விதவைக் கோலத்தில் நோன்பு மேற்கொண்டு
நரக வாழ்க்கை வாழ்வது என்பது கடைக் கற்பு என்றும் இலக்கியம் கூறி வந்துள்ளது.
தலைக்
கற்பிற்குச் சான்றாக நாம் இன்று வரை சிலப்பதிகாரப் பாண்டிமாதேவியைக் கூறிக்கொண்டு வருகின்றோம்.
கணவன் இறந்தவுடன் இயல்பாக மனைவியும் இயற்கை மரணம் எய்த வேண்டும் என்பது கற்பனைக்கு
வேண்டுமானால் பொருந்துவதாக அமையலாம். நடைமுறை வாழ்வில் எவ்வாறு பொருந்தும் ? என்று
நாம் சிந்திக்க வேண்டும். அதைவிடக் கொடுமை உடன்கட்டை என்ற பெயரில் உயிருடன் தீயிட்டுக்
கொழுத்துவது. இதைவிட பெரிய கொலைகாரக் கூட்டத்தினை வேறு எங்கு சென்று தேடுவது. பண்பாடு
என்ற பெயரில் சமூகம் கொலையாளிகளாக அல்லவா ! வாழ்ந்து வந்திருக்கின்றது. மேலும் கொடுமை
வாய்ந்தது ‘கைமை நோன்பு’ நினைத்துப் பார்க்கவே சற்று அச்சத்தினை ஏற்படுத்துகின்றது.
அனுபவிப்பவர்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும் !.
மகளிருக்கு
ஆடவர் உயிர் என்றால் உயிர் (ஆடவர்) நீங்கிய பின்பு பெண் என்பவள் பிணத்திற்கு நிகராகதான்
நடத்தப்படுகின்றாள். பிறப்பிலிருந்து இறப்பு வரை பெண்கள் ஆணாதிக்கச் சிறையினில் வாழ்வதால்தான்
இலக்கியம் பெண்களுக்கு எதிராக எதையும் சொல்லிவிட்த் துணிகிறது, இந்த ஆணாதிக்கிய இலக்கியம்.