ஒப்பியல் நோக்கில் திரிசங்குக் கதைகளும் மொழிபெயர்ப்புகளும்
முன்னுரை
இராமாயணம் குறித்தக் கதைகள் காலந்தோறும் இந்தியாவின் ஒவ்வொரு கிராமங்களிலும் பல்வேறு வடிவங்களில் வளர்ந்து வந்துள்ளன. இவை நாட்டுப்புறக் கதை வடிவங்களாகவும் பாடல்களாகவும் பலமொழிகளாகவும் இருந்து வருகின்றன. அதே போல இராமாயணக் கதையின் எச்சங்களும் மக்களின் புழக்கத்தில் உள்ளன. எனவே இக்கட்டுரை வால்மீகி இராமாயணத்தில் உள்ள திரிசங்கு மன்னரைப் பற்றிய கதையின் எச்சம் இன்றும் மக்களிடையே புழக்கத்தில் இருந்து வருவகின்றது என்பதனை அறிய இந்தியில் மன்னு பண்டாரி அவர்களால் எழுதப்பட்ட திரிசங்கு என்னும் கதையினை தமிழில் எழுதப்பட்ட திரிசங்குக் கதைகளுடன் ஒப்பியல் நோக்கில் ஆய்வதாக அமைகின்றது. மேலும் திரிசங்கு எனும் இந்திச் சிறுகதை சரசுவதி ராமநாத் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அச்சிறுகதை தற்பொழுது இளநிலை ஆய்விற்காக மறுமொழிபெயர்ப்பும் செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் முதல் மொழிபெயர்ப்பிலிருந்து மறுமொழிபெயர்ப்பானது எவ்வாறு வேறுபடுகின்றது என்பதையும்
அவற்றின் தேவைகளும் குறித்து பின்வருமாறு காணலாம்.
திரிசங்கு கதைச் சுருக்கம் (வால்மீகி இராமாயணம் - பால காண்டம்)
புராணக் கதையின்படி உடலுடன் விண்ணுலகம் செல்ல வேண்டும் என விரும்பிய திரிசங்கு மன்னனை விசுவாமித்திர முனிவர் தன் தவ வலிமையால் விண்ணுலகிற்கு அனுப்ப உடலுடன் விண்ணுலகம் வரும் திரிசங்குவைக் கண்ட தேவர்கள் திரிசங்குவைக் கீழே தள்ளிவிட, அதைக் கண்ட விசுவாமித்திர முனிவர் மன்னனை அந்தரத்திலேயே நிறுத்தி அங்கேயே திரிசங்குவிற்கென தனி சொர்க்கம் படைக்கின்றார். இவ்வாறு விண்ணிலும் இல்லாமல் மண்ணிலும் இல்லாமல் அந்தரத்தில் நிற்கின்ற இரண்டும் கெட்டான் நிலையேத் திரிசங்கு எனப்படும். இக்கதையின் எச்சம் இன்றும் பல்வேறு நிலைகளில் இரண்டும் கெட்டான் நிலையினைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இக்கருத்தினை மையமிட்டு எழுதப்பட்ட ஐந்து கதைகள் இங்கு ஒப்பு நோக்கப்படுகின்றன.
திரிசங்கு
மன்னு பண்டாரி இந்தி தஸ் பிரதிநிதி கஹானியா~ 2010
அம்பை தமிழ் பிரக்ஞை (டிசம்பம்) 1975
வாஸந்தி தமிழ் கல்கி தீபாவளி மலர் 1990
ஜெயந்தி சங்கர் தமிழ் சிங்கைச் சுடர் (செப்டம்பர்) 2002
தங்கமணி தமிழ் தமிழ் மணம் (அக்டோபர்)
2011
திரிசங்கு (மன்னு பண்டாரி)
தனுவின் குடும்பம் நடுத்தர வர்க்கக் குடும்பம். தனுவின் பெற்றோர் காதல் திருமணம் புரிந்தவர்கள். தனு எதிர் வீட்டில் குடியிருக்கும் சேகரை காதலிக்கின்ற நிலையில் தனுவின் அம்மா, காதலை எதிர்க்கவும் முடியாமல் ஆதரவு தெரிவிக்கவும் முடியாமல் இரெண்டாங்கெட்ட மனநிலையில் இருப்பதை ஆசிரியர் திரிசங்கு நிலையுடன் ஒப்பிடுகின்றார். இக்கதையில் தனுவின் அம்மா இயல்பான நேரங்களில் தனுவிற்கு அம்மாவாகவும் தனு சேகருடன் பழகுவதைக் கண்டு சந்தேகம் கொள்கின்ற போது தனுவிற்குத் தாத்தாவாகவும் இரு மனநிலையுடன் பேசுகின்றாள் என்பதனை ஆசிரியர் விளக்குகிறார்.
திரிசங்கு (அம்பை)
பேராசிரியர் பசுவய்யாவின் கீழ் ஒரு மாணவி
(பெயர் குறிப்பிடப்படவில்லை) இந்தியாவுடனான வெளிநாட்டு உறவுகளின் பிரிவில் முனைவர் பட்டத்திற்காக விண்ணப்பிக்கின்றாள். நுழைவுத் தேர்விலும் வாய்மொழித்தேர்விலும் தேர்ச்சி பெறாத நிலையிலும் கூட, பேராசிரியர் அவளின் அழகைக் கண்டு மாணவியாகத் தேர்ந்தெடுக்கின்றார். இந்நிலையில் அவள் அனைவரின் முன்பாகவும் அறிவற்றவளாகக் கருதப்படுகின்றாள். இதனைக் காரணம் காட்டி பசுவய்யா ஒரு முறை நூலகத்தில் அவளிடம் தவறுதலாக நடக்க முயற்சிக்கின்றார். இவற்றையெல்லாம் உணர்ந்த அப்பெண் கடினமாகப் படிக்கின்றாள். ஒரு நாள் வெளிநாட்டு அறிஞர் உரையாற்றிய கருத்தரங்கில் அப்பெண் எழுந்து நின்று அவரின் கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதற்கான தக்க சான்றுகளை நிறுவி மிகவும் காரசாரமாக விவாதம் செய்கின்றாள். அதனைக் கண்ட பசுவைய்யா உட்பட அனைவரும் அவளின் அறிவுத் திறன் கண்டு வியக்கின்றனர். இதுவரை அவளைப் பற்றிய பிம்பம் உடைய அவள் உண்மையிலேயே நன்கு படிக்கும் திறனுடையவளா? என்ற இரண்டாங்கெட்ட மனநிலையில் பசுவையா திகைத்து நிற்கின்றார்.
திரிசங்கு (வாஸந்தி)
டில்லியில் உள்ள பத்திரிக்கை அலுவலகத்தில் பணியாற்றி வருபவர் அனுராதா,
அவளின் கணவன் அருண். பத்திரிக்கை வேலை என்றாலே மற்ற வேலைகளைப் போல குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டிற்குச் சென்று விடலாம் என்பதில்லை. இந்நிலையில் அனுராதாவிற்குக் குழந்தை பிறந்துவிட, குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக வேலையினை விட்டுவிடும் படி அருண் கூறுகின்றார். அதன்படி வேலையினை விட்டு நீங்கி வீட்டில் இருந்த வண்ணம் குழந்தையினைப் பராமரிக்கின்றாள் அனுராதா.
இவ்வாறு வீட்டிலேயே இருப்பது அனுராதாவிற்கு மனச் சோர்வையும் வெறுப்பையும் தந்தது.
அதே நிலையில் வீட்டின் வருமானம் குறையத் தொடங்கியதால் மீண்டும் வேலைக்குப் போக வேண்டிய நிலை உருவானது. இவ்வாறு ஊதியமும் வேண்டும் குழந்தையையும் கவனிக்க வேண்டும் என்ற இரு மனநிலையில் அனுராதா இருப்பதினை இக்கதை திரிசங்கு நிலை என விளக்குகின்றது.
திரிசங்கு (ஜெயந்தி சங்கர்)
திருமணமான தம்பதியினர், முதல் குழந்தை பிறந்த சில ஆண்டுகளிலேயே பிரிந்து வெவ்வேறு திருமணம் செய்துகொள்கின்றனர். இந்நிலையில் அச்சிறுவன் பாட்டி வீட்டில் வளர்ந்து வருகின்றான். சிறுவனின் பெற்றோர் மறுதிருமணம் செய்து குழந்தை பிறப்பதற்கு முன்பு வரை போட்டி போட்டுக்கொண்டு அவன் மீது அன்பு செலுத்தி வருகின்றனர். தற்பொழுது தங்களுக்கென குழந்தைகள் பிறந்த பிறகு இரு குடும்பத்தாரும் கண்டுகொள்வதில்லை. அச்சிறுவன் தனது நண்பன் ராஜுவிடம் எனக்கு இரண்டு அம்மா இரண்டு அப்பா என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டாலும் இருவரிடமும் சேர்ந்து வாழ முடியாத இரண்டாங்கெட்ட நிலையில்தான் இருக்கின்றான் என்பதை திரிசங்கு நிலையுடன் ஒப்பிடுகின்றார் ஆசிரியர்.
திரிசங்கு (தங்கமணி)
காதலித்துத் திருமணம் செய்து கொண்டு பத்து ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் வாழ்ந்து வரும் தமிழ் குடும்பத் தம்பதிகள் ஸ்ரீதர், வைஸ்ணவி. இக்கதை மிகவும் சுருக்கமாக இவ்விருவருக்கும் இடையே நடைபெறுகின்ற பத்து நிமிட அலைபேசி உரையாடலை மட்டும் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இவ்வுரையாடலின் போது “அங்க போனா இங்க வரலாம்னு இருக்கு,
இங்க வந்தா அங்க போலாம்னு இருக்கு”,
“இங்கயும் முழுசா மனசு ஒட்டுரதில்லை. அங்கயும் சௌகரியப்படுரதில்லை. “இக்கரைக்கு அக்கரை பச்சைதான்” என என்னதான் அமெரிக்கவுல டாலர் டாலரா சம்பாதித்தாலும் நம்ம சொந்த பந்தத்தோட இருக்குற சுகமே வேற, ஆனால் அங்கேயும் நிரந்தரமா இருக்க முடியுறதில்ல. எனவே அமெரிக்காவிலும் இருக்க மனமில்லாமல் தமிழகத்திலும் இருக்க மனமில்லாமல் ரெண்டுங்கெட்டான் மனநிலையில் வைஸ்ணவி இருக்கிறாள் என்பதாகக் கதை முடிவுருகின்றது.
திரிசங்கு
•மன்னு பண்டாரி - காதல்
•அம்பை - கல்வி
•வாஸந்தி - வேலை
•ஜெயந்தி சங்கர் - அன்பு
•தங்கமணி - வாழ்விடம்
மேற்கண்ட ஐந்து கதைகளும் வெவ்வேறு சூழலைப் பற்றிப் பேசினாலும் கதைக்கான கரு ஒரே தன்மையில் ஒரே தலைப்பினைக் கொண்டு அமைந்திருக்கின்றது. திரிசங்கு என்னும் கதையின் அடிப்படையில் காதல், கல்வி, வேலை, பெற்றோரின் அன்பு,
வாழ்விடம் என ஐந்து மையப் பொருள்களைக் கொண்டு ஏற்படுகின்ற இரண்டுங்கெட்டான் நிலையினை மேற்கண்ட வரைபடம் விளக்குகின்றது. மேலும் திரிசங்குக் கதையின் எச்சத்தினை வெளிப்படுத்தும் விதமாக மக்களிடையே பழமொழிகளும் உருவாகி வந்துள்ளமையினைக் காணலாம்.
‘ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்’, என்று கூறுவதும் ‘இக்கரைக்கு அக்கரை பச்சை’ போன்றவையும் திரிசங்கு நிலையினை உணர்த்துவனவாக உள்ளன. இந்நிலை இலக்கியங்கள் மட்டுமல்லாது வாழ்வின் ஒவ்வொரு சூழலிலும் ஏற்படக்கூடும். இங்கு நாம் உற்று நோக்க வேண்டிய ஒன்று அன்றாட வாழ்வில் ஏற்படுகின்ற நிகழ்வுகளை புராண இதிகாசங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கின்ற மனநிலைதான். இது இன்றளவும் கிராமம் நகரம் என அனைத்துப் பகுதிகளிலும் நிலைகொண்டுள்ளதினை உணரலாம்.
திரிசங்கு நிலை மேற்கண்ட கதைத் தளத்தினை மட்டும் கொண்டு இயங்குவதில்லை. வாழ்வின் ஒவ்வொரு சூழலிலும் நடைபெறுகின்றது. ஏதேனும் ஒரு நிலையான முடிவு எடுக்க முடியாத தடுமாற்ற நிலையினையே திரிசங்கு நிலை உணர்த்துகின்றது. இத்தகைய நிலையானது சிறுகதைகளில் மட்டுமல்லாது நாவல்,
கவிதை, நாடகம் போன்ற நவீன இலக்கியங்களிலும் சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியம் போன்ற இலக்கிய வகைகளிலும் இருப்பதினை நன்கு உற்று நோக்குகையில் நம்மால் அதனை உணர முடியும். இவ்வாறு வரலாற்று எச்சங்கள் இலக்கியங்களாக்கப்படுவதும் இலக்கியங்கள் வாழ்வியலோடு பொருத்திப் பார்க்கப்படுவதும் காலந்தோறும் நடந்து கொண்டே இருக்கின்றன.
மறுமொழிபெயர்ப்பு
பொதுவாக ஒரு மொழிக்குள்ளாகவே பல்வேறு கிளைமொழிகள் வழக்கில் இருந்து வருகின்றன. வெவ்வேறு வட்டார மொழிகளை உடைய ஒரு மொழி பேசும் மக்களுக்கே சிலநேரங்களில் சொல் வழக்குகளில் தடுமாற்றம் ஏற்படுகின்றது. அப்படியிருக்க வெவ்வேறு மொழிக் குடும்பங்களுக்கு இடையே உள்ள இரு மொழிகளை ஒப்பிடுகையில் சிக்கல்கள் ஏற்படுவது இயல்பான ஒன்று. இதனடிப்படையில் தமிழ் – இந்தி ஆகிய இரு மொழிகளும் எழுத்து முறை, இலக்கண அமைப்பு,
பண்பாடு, உணவுப் பழக்க வழக்கங்கள் எனப் பல்வேறு நிலைகளில் வேற்றுமை உடையவைகளாக விளங்குகின்றன. மன்னு பண்டாரி எழுதிய திரிசங்கு என்னும் கதை சரஸ்வதி ராமநாத் அவர்களால் ஏற்கனவே மொழிபெயர்க்கப்பட்டுள்ள
நிலையில் தற்பொழுது இளநிலை ஆய்விற்காக மறுமொழிபெயர்ப்பும் செய்யப்பட்டுள்ளது. இம்மொழிபெயர்ப்பு சில இடங்களில் தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப மொழிபெயர்த்தும் பிற மொழிச்சொற்களை இன்றியமையாத இடங்கள் தவிர்த்து ஏனைய இடங்கள் அனைத்திலும் சரியான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தியும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் மொழிபெயர்ப்பிலிருந்து மறுமொழிபெயர்ப்பு வேறுபடுகின்ற தன்மையினையும் அவற்றின் தேவையினையும் விளக்குவதாக இப்பகுதி அமைகின்றது.
பெயர், வினை வேறுபடும் விதம்
சாதாரணமாக பேசுகின்ற பொழுதே ஒரு சொல் பயன்படுத்த வேண்டிய இடத்தில்
அதற்கு இனமான வேறொரு சொல்லினை பயன்படுத்திப் பேசுவது இயல்பு. இதேபோன்று மொழிபெயர்க்கின்ற
பொழுதும் மூல மொழியில் உள்ள ஒரு சொல்லிற்கு இனமான சொற்கள் பெறுமொழியில் இருப்பின் வாசிப்புத்
தன்மைக்கு ஏற்ப வெவ்வேறு சொற்களைப் பயன்படுத்துவது இயல்பான ஒன்று. அதனடிப்படையில் பின்வருமாறு முதல் மொழிபெயர்ப்பிலிருந்து மறுமொழிபெயர்ப்பானது
சில இடங்களில் மாறுபட்டு அமைவதினைப் பின்வருமாறு காணலாம்.
இந்தி
|
1. முதல் மொழிபெயர்ப்பு
|
2. மறுமொழிபெயர்ப்பு
|
सीमा சீமா
|
வரைகோடு
|
எல்லை
|
धुआँधार து⁴ஆ~தா⁴ர்
|
காரசாரமாக
|
கோரமான
|
धज्ज्याँ த⁴ஜ்ஜியா~
|
நார்நாராக
|
தூள்தூளாக
|
उड़ाई जाती हैं
உடா³ஈ ஜாதீ ஹை~
|
கிழிக்கப்படுகிறது.
|
பறக்கவிடப்படுகின்றது
|
धुआँधार ढंग से विवाह की धज्ज्याँ उड़ाई जाती हैं
து⁴ஆ~தா⁴ர் ட⁴ங்க3 ஸே விவாஹ கீ த⁴ஜ்ஜியா~ உடா³ஈ ஜாதீ ஹை~
1. காரசாரமாக திருமண உறவு நார்நாராகக் கிழிக்கப்படுகிறது.
2. கோரமான விதத்தில் திருமணம் தூள்தூளாகப் பறக்கவிடப்படுகின்றது.
மேற்கண்ட வாக்கியத்தில் முதல் மொழிபெயர்ப்பில் உள்ள காரசாரமாக என்பது கோரமான எனவும் நார்நாராக என்பது தூள்தூளாக எனவும் கிழிக்கப்படுகின்றது என்பது பறக்கவிடப்படுகின்றது என்பதாகவும் மறுமொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்வாக்கியத்தில் பொருளலளவில் மாற்றங்கள் ஏற்படவில்லையெனினும் பயின்று வருகின்ற சொற்கள் வேறுபட்டு வந்துள்ளன. இதுபோன்ற மாறுபாடுகள் கதையில் பல்வேறு இடங்களில் பயின்று வருகின்றன. இவ்வேறுபாடுகள் ஒரு மூலப்பிரதியினை இரு மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்ப்பதன் வழி மட்டும் ஏற்படுவதில்லை. ஒரு மொழிபெயர்ப்பாளரே இரு முறை மொழிபெயர்க்க நேரிடினும் மேற்கண்ட மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
இடைச் சொல்
திரிசங்கு மூலப்பிரதியில் ஆசிரியர் இடைச்சொல்லினைப் பயன்படுத்த வேண்டிய ஒரு சில இடங்களில் (-) என்னும் குறியீட்டினைப் பயன்படுத்தியுள்ளார். இதனை மொழிபெயர்ப்பு செய்த முதல் மொழிபெயர்ப்பு ஆசிரியர் (சரஸ்வதி ராமநாத்) மூலப்பிரதியில் இருப்பது போன்றும் சில இடங்களில் காற்புள்ளி (,) பயன்படுத்தியும் மொழிபெயர்த்திருக்கின்றார். ஆனால் மறுமொழிபெயர்ப்பில் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு இடங்களிலும் இடைச்சொற்கள் பயன்படுத்தப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
உதாரணமாக
मैं नयी हो उठी.....नयी और बड़ी । மை~ நயீ ஹோ உடீ2 …. நயீ ஔர் ப3டீ3 |
1. நான் புதிய உருவமெடுத்து விட்டேன். புதியவள் – பெரியவளாகி விட்டவள்.
2. நான் புதியவள் மற்றும் பெரியவளாகிவிட்டேன்.
बातों और बहसों के टुकड़े हैं பா³தோ~ ஔர் ப³ஹஸோ~ கே டுகடே³ ஹை~
1. பேச்சுக்கள், விவாதங்களிலிருந்து எடுக்கப்பட்ட துணுக்குகள்.
2. பேச்சுக்களிலிருந்தும் விவாதங்களிலிருந்தும் எடுக்கப்பட்ட துணுக்குகள்.
பிறமொழிச்சொற்கள்
இன்றைய
சூழலில் இந்திய மொழிகள் பலவற்றிலும் ஆங்கிலச் சொற்கள் பெருவழக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலை தற்கால இலக்கியங்களிலும் காணப்படுகின்றது. திரிசங்கு கதையின் பின்னணி நகரத்தில் வாழுகின்ற நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்து அமைந்துள்ளது. எனவே தற்கால மக்களின் மொழி வழக்கத்திற்கு ஏற்ப கதையில் ஆங்கிலச் சொற்களை ஆசிரியர் பரவலாகப் பயன்படுத்தியுள்ளார். இதனை முதல் மொழிபெயர்ப்பாசிரியர் தமிழில் மொழிபெயர்க்கையில்
கதைத் தன்மைக்கேற்ப ஆங்கிலச் சொற்களை மூலக் கதையில் உள்ளபடியே கையாண்டுள்ளார். ஆனால் மறுமொழிபெயர்ப்பில் பிறமொழிச் சொற்களை இயன்ற அளவிற்குத் தவிர்த்து தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இந்தி
|
1. முதல் மொழிபெயர்ப்பு
|
2. மறுமொழிபெயர்ப்பு
|
स्कूल - कॉलेज
|
ஸ்கூல் – காலேஜ்
|
பள்ளியும் கல்லுரியும்
|
ममी
|
மம்மீ
|
அம்மா
|
जस्ट फ़ॉर फन
|
ஜஸ்ட் பா~2ர் ப2ன்
|
வேடிக்கைக்காக
|
फ्री - लव, फ्री - सेक्स
|
ப்2ரீ–லவ், ப்2ரீ – ஸெக்ஷ்
|
கட்டுப்பாடற்ற காதல், கட்டுப்பாடற்ற உடலுறவு
|
மேற்கண்ட வாக்கியங்களில் உள்ள ஸ்கூல்,
காலேஜ், ஃப்ரீ செக்ஸ், ஃப்ரீ லவ், போன்ற ஆங்கிலச் சொற்கள் மறுமொழிபெயர்ப்பில் தமிழ் சூழலுக்கு ஏற்ப மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளன. இது போன்ற மேலும் பல சொற்கள் கதையில் ஆங்காங்கே பயின்று வந்துள்ளன. அவையும் தமிழ் மொழிக்கேற்ப தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.
சொல் வழக்குகள்
மூலமொழியினை மொழிபெயர்கின்ற பொழுது சில நேரங்களில் மூலமொழியில் வெறும் பேச்சாக இருப்பது
பெறுமொழியில் அனைவரும் பயன்படுத்துகின்ற அன்றாட சொல்வழக்காக இருக்கும். அதனை சரியான சூழலில் பயன்படுத்துவது மொழிபெயர்ப்பினை மேலும் வலுப்படுத்தும்.
இந்நிலையில் முதல் மொழிபெயர்ப்பு ஆசிரியர் கீழ்காணும் வாக்கியத்தினை ஆங்கிலச் சொல் மாறாது மொழிபெயர்த்துள்ளார்.
மறுமொழிபெயர்ப்பில் ஆங்கிலச் சொல் தமிழாக்கம் செய்யப்பட்டு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
உதாரணமாக
एक झापड़ दूँगी तो सारा रोमांस झड़ जाएगा दो मिनट में ....”
ஏக் ஜா2பட்3 தூ~3ங்கீ3 தோ ஸாரா ரோமா~ன்ஸ் ஜா2ட்3 ஜாஏகா3 தோ3 மினட் மே~ ….”
1. இரண்டு அறை கொடுத்தால் ரொமான்ஸ் எல்லாம் பொலபொலவென
உதிர்ந்து போகும் இரண்டே நிமிடத்தில்.”
2. ஒரு அறை விட்டேன் ஒரு நொடியில் காதல் கீதலெல்லாம் உதிர்ந்து போகும்.
बित्ते-भर की लड़की और करतब देखो इनके
பி3த்தே – ப4ர் கீ லட்3கீ ஔர் கர்தப்3 தே3கோ2 இன்கே!
1. இத்தனை சிறிய பெண், நேற்றுப் பிறந்தவள், என்ன காரியம் செய்திருக்கிறாள்.
2. முழுசா மொலச்சு மூனு இலை விடாத பொன்னு நீ, எங்கிட்டயே கண்கட்டு வித்தைய காட்டுகிறாய்.
மேற்கண்ட இரண்டு உதாரணங்களுமே தமிழில் பெரும்பாலும் கோபத்தில் இருக்கின்ற பொழுது பயன்படுத்துகின்ற வழக்கம் உள்ளது. முதல் மொழிபெயர்ப்பில் மூலப்பிரதியினை சொல்லுக்குச் சொல் நேரடியாக மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளது மறுமொழிபெயர்ப்பில் வாக்கியத்தின் பொருள் மாறாத நிலையில் தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
வாக்கிய அமைப்பு
ஒரு மொழி முழுமை பெற வாக்கிய அமைப்பு மிகவும் முக்கியமானதாக
விளங்குகின்றது. அவ்வாக்கிய அமைப்பினை ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்கின்ற பொழுது அவை எல்லா மொழிகளிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மேலும் ஒன்றுக்கு மேற்பட்டு மொழிபெயர்க்கப்படுகின்ற
பொழுது பொருள் மாறாவிட்டாலும் வாக்கிய அமைப்பு மாற்றம் பெறுகின்றது.
உதாரணமாக
बात यह है बंधु, பா³த்
யஹ் ஹை ப³ந்து⁴
1. நண்பர்களே! விஷயம் இதுதான்.
2. விஷயம் இதுதான் நண்பா!
कमाल है, ममी को कुछ पता ही नहीं ।
கமால் ஹை, மமீ கோ குச்2 பதா ஹீ நஹீ~ |
1. ஓ… காட்! அம்மாவிற்கு ஒன்றுமே தெரியாதா!
2. அம்மாவிற்கு ஒன்றுமே தெரியாதா! அதிசியமா இருக்கே!
कौन लड़के ? கோன்
லட்3கே
?
1.
இந்தப்
பையன்கள் யாராம்?
2.
யாரு
இந்தப் பையன்கள்?
மேற்கண்ட
உதாரணங்கள் ஒரு வாக்கியத்தினை மொழிபெயர்க்கின்ற பொழுது அவ்வாக்கியத்தின் பொருள் மாறாமல்
சொற்களை முன் பின் மாற்றியமைப்பதன் வழி மொழிபெயர்ப்பு சில இடங்களில் வலுப்பெறும்.
எனவே
மூலப்பிரதியில் உள்ள வாக்கியம் பெறுமொழிகளுக்கு ஏற்ப மொழிபெயர்க்கப்படும்.
உறவு முறைப் பெயர்
திரிசங்குக்
கதையில் உறவு முறைப் பெயர் பற்றிக் குறிப்பிடுகின்ற பொழுது முதல் மொழிபெயர்ப்பில்
தனுவின்
தாத்தா என்று குறிப்பிடுவதற்கு தனுவின்
அம்மைவினைக் குறிப்பிட்டு அவளின் அப்பா என்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால்
இக்கதையானது தனுவின் கூற்றில் அமைந்திருப்பதால் மறுமொழிபெயர்ப்பில் தனுவின் தாத்தா
என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
உதாரணமாக
विवाह के पहले अपने इस निर्णय
पर
ममी को नाना से भी बहुत बहस करनी पड़ी थी
விவாஹ்
கே பஹலே அபனே இஸ் நிர்ணய பர் மமீ கோ நானா ஸே பீ4
ப3ஹுத்
ப3ஹஸ்
கர்னீ படீ3
தீ2
1. தனது
திருமணத்திற்கு முன் அம்மா அப்பாவிடம் நிறையவே தர்க்கம் செய்து வாதிட வேண்டி இருந்ததாம்.
2. தன்னுடைய
திருமணத்திற்கு முன்பு இதைத் தீர்மானிப்பதில் அம்மாவிற்கு தாத்தாவிடம்
நிறைய விவாதம் செய்ய வேண்டியிருந்தது.
மேற்கண்ட
வேறுபாடுகள் கட்டுரையின் அளவு கருதி கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன என்றாலும் இத்தகைய
மொழிபெயர்ப்பு வேறுபாடுகள் இந்தித் தமிழ் மொழிபெயர்ப்புகளுக்கு இடையே மட்டுமல்லாது
வேறு இரு மொழிகளுக்குமிடையேயும் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகளை ஒப்பிடுவதற்கு
ஓர் அடிப்படைத்
தகவல்களைக் கொண்டிருக்கும் எனலாம். அதோடு
இங்கு ஒப்பீடு செய்யப்பட்ட மறுமொழிபெயர்ப்பானது ஒரு மொழிபெயர்ப்பு முயற்சியே தவிர முற்றும்
மொழியறிந்த முழு மொழிபெயர்ப்பன்று.