ஞாயிறு, ஜூன் 20, 2021

கடைசிக் கண்ணீர் பாகம் 5

 

ஏம்பா, வருசா வருசம் இப்படித்தான் கஷ்டப்படனும் போலிருக்கே. இம்புட்டு கருவமுல்லையும் என்னைக்குத் தோண்டி முடிக்குறது என முட்புதர்கள் வளர்திருப்பதைப் பார்த்த வேந்தன் மலைப்புடன் கேட்டான். இதுக்கே இப்படி சொல்றியெ. இதுக்கு முன்னெயெல்லாம், கூலிக்குத்தான் கருவ முள்ளு தோண்டிக்கிட்டு இருந்தோம். நானும் உங்க அம்மாவும் காலையிலயிருந்து சாய்ந்தரம் வர மணிக்கனக்கா தோண்டுவோம். ஆளுக்கு இரநூறு ரூவா தருவாய்ங்க. வயலு ஒத்திக்கு எடுத்து ரெண்டு வருசத்துல இப்பத்தான் மொதன்மொதல்ல நமக்குனு தோண்டப்போறோம். அதுவே ரொம்ப பெருமதானப்பா. என ஏதோ பதவி கெடச்சதுமாதிரி சந்தோடப்பட்டாரு மணி. வேல செஞ்சே வாழ்ந்துக்கிட்டிருந்தவரு மொதன்மொதலா கூலிக்கினு இல்லாம தனக்குனு பார்க்கும் போது பெரும வரத்தானே செய்யுமுங்குறத உணர்ந்தபடி வேந்தனும் மௌனமாக சிரித்துக்கொண்டே சட்டையைக் கழட்டி வரப்புல வச்சுப்புட்டு வேலை செய்யத் தயாரானான். அதற்குள்ளாக மணியும் சட்டயக் கழட்டிப்புட்டு கையிலயிருந்த துண்ட தலையில உருமா கட்டிக்கிட்டு கைலியையும் கொஞ்சம் ஒசத்திக் கட்டிக்கிட்டாரு. வேந்தன் கடப்பாறையை எடுத்துக் கொண்டு வயலுல எறங்கினான். மணியும் ம்பெட்டிய எடுத்துக்கிட்டு எறங்கினான். “இந்தப்பக்கமா சனிமூலையிலிருந்து வேலையத் தொடங்கிருவோம்பா. இப்படியே ஒரு பக்கமா வெட்ட ஆரம்பிச்சோமுனா கொஞ்சம் ஈசியா வெட்டி முடிச்சிரலாமுனு ணி சொன்னாரு. இதக் கேட்ட வேந்தன் அதென்னப்பா சனி மூல. சரி அதுதான் சனி மூலயினு யாருப்பா சொன்னா? ஏன் மத்த மூலையில ஒன்னும் சனினூலையா இருக்கக் கூடாதா? அப்படியே இது சனி மூலையினாலும் இங்க இருந்துதான் வேலையத் தொடங்கனுமுனு யாருப்பா சொன்னது?னு கேட்டான். அது என்னமோப்பா எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் இதுதான். சனிமூலைல இங்க இருந்துதான் வேலையத் தொடங்கனும். ஏன் எதுக்கெல்லாம் கேட்டா எனக்குப் பதில் சொல்லத் தெரியாதுப்பா. தாத்தன் பூட்டன் காலத்துலயிருந்து இப்படித்தான் சொல்லிக்கிட்டு இருக்காங்க. இப்படியெல்லாம் கேள்வி கேக்கனுமுங்குற புத்தி எங்களுக்கில்ல. நாலெழுத்து படிச்ச உங்களுக்குத்தான் இந்த மாதிரியெல்லாம் வெதண்டா வாதமா கேக்கத் தோனுதுனு சொல்லிக்கிட்டே கருவமுள்ளின் வேர்ப்பகுதியைச் சுத்தியிருக்கிற மண்ணை வெட்டி ஒதுக்குனாரு.இதுக்கெல்லாம் நாலெழுத்து படிக்கனுமுங்குறது இல்லப்பா சுயமா சிந்திச்சாலே போதும்பா. படிக்காத மேதையெல்லாம் நாட்டுல இருக்கத்தானே செய்யுறாங்க. படிச்சா அறிவு வளருமுங்குறது உண்மதான். னா இன்னக்கி நிலமைக்கு படிச்சவுங்கனு சொல்ற பெரும்பாலானவுங்க அறிவாளிகளா இல்லப்பா. சுயமா சிந்திக்கிறது இல்லப்பா. சனிங்கிறது சூரிய குடும்பத்துல இருக்குற கோள்கள் ஒரு கோள். சனிக்கோளுக்கும் வயக்காட்டுல நீங்க சொல்ற சனி மூலைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இதெல்லாம் நாமா ருவாக்கிக்கிட்டதுதான். நல்லது கெட்டது எதுனாலும் நமக்குத் தேவைக்கேற்ப மாத்திக்கிறதுதான். ஆனா நாமதான் ட்ரெடிசனுங்குற பேருல ஏதோ ஒரு காரணத்துக்காக ஏதோ ஒரு காலத்துல செஞ்சத வச்சிக்கிட்டு ஏன் எதுக்குனுகூட கேள்வி கேட்காம லாஜிக்கா யோசிக்காம நடந்துக்கிட்டிருக்கோம். இதெல்லாம் சாதாரண ஒன்னுதான். இதுமாதிரி கோடானகோடி மூடப்பழக்க வழக்கம் நம்ம மூளைக்குள்ள மண்டிக்கெடக்கு. இதெல்லாம் தனியா ஒருத்தரு வானத்துல் ருந்து குதிச்சு வந்து மாத்தமுடியாது. அங்க அங்க அவுங்கவுங்க சொந்தமா சுயமா யோசிச்சாதான் மாத்தமுடியுமுனு சொல்லிக்கிட்டே கருவமுள்ளின் வேர்ப்பகுதியை நோக்கி கடப்பாறையை வச்சுக் குத்தினான். குத்து சரியா விழல, நாலஞ்சு குத்து குத்தியும் வேர்ப்பர்த்து குத்தி கருவைய வெளிய பிடுங்க முடியல. வேந்தன் பேசுவதை கேட்டுக்கிட்டு இருந்த மணி அவனால சரியா ஒரே குத்துல கருவ முள்ள குத்தி வெளிய எடுக்க முடியாம இருக்குறதையும் பார்த்தாரு. உடனே வேந்தனிடமிருந்து கடப்பாறையை வாங்கி ஒரே குத்தில் செடியை வெளியே எடுத்தாரு. எந்த ஒன்னுமே எடுத்த எடுப்புல வந்துராதுப்பா. ஒரு கருத்த சிந்திச்சவுடனேயே அதப்பத்திப் பேசுனவுடனேயே எல்லாமே மாறிடுமுனு நெனச்சா அது தப்புப்பா. நம்ம தலமுறையிலெயே மொதல்முறையா இம்புட்டு பெரிய படிப்பு படிச்சது நீ மட்டுந்தான். எங்க வாழ்க்கையெல்லாம் இந்த காட்டுலயும் மேட்டுலயும் கிடந்து ஒழச்சு ஒழச்சு காணாம போச்சு. நீ யோசிக்கிற அளவுக்கு யோசிக்கிறதுக்கே ஒரு பயிற்சி வேணும்பா. நீயுந்தான் அப்பயிருந்து இந்த முள்ள தோண்டுறதுக்கு முயற்சி பன்ற. இருந்தாலும் உடனே செய்ய முடியலேல. எல்லாத்துக்கும் காலமும் பக்குவமும் வரனும் அதுக்கப்பறமாத்தான் நீ நெனைக்கிறமாதிரி எல்லாரும் சுயமா சிந்திக்கத் தொடங்குவாங்க. நாம சிந்திக்குறமுங்குறதுனால நம்மல சுத்தி இருக்குறவுங்களும் நம்மல மாதிரி சிந்திக்கனுமுனு எதிர்பார்க்கமுடியாது. எல்லாராலையும் எல்லாத்தையும் தெரிஞ்சுக்க முடியாது.   அப்படி இருக்கும்போது இந்த மூடப்பழக்க வழக்கங்களும் சமூகத்துல வளர்ந்துக்கிட்டேதான் இருக்குமே தவிர, கொரஞ்சிருமுனு எதிர்பார்க்க முடியாதுப்பானு சொன்னாரு.

வேந்தனுக்கு அப்பா சொன்ன விசயம் ரொம்ப பிடிச்சிருந்துச்சு. எதுக்குமே பயிற்சியும் பக்குவமும் வர்ரதுக்கு கொஞ்ச காலம் ஆகத்தான் செய்யும். இருந்தாலும் இத்தனை நூற்றாண்டுகள் ஆன பின்னாலும்கூட இந்தக் கருவமுள்ளு மாதிரி மூடப்பழக்கங்கள் வளர்ந்துக்கிட்டேதான் போகுதே ஒழிய, கொரஞ்சபாடில்ல. அவனவன் தேவைக்கு ஏற்ப ஏதாவது ஒரு புரலிய கெளப்பி விட்டுருரானுங்க. ஏன் எதுக்குனு சிந்திக்காம ஜனங்களும் அத செஞ்சிக்கிட்டு இருக்குறாங்க. இதெல்லாம் பத்திப் பேசினா, இவனுக்கு வேற வேல இல்ல. எதையாச்சும் பத்திக் கிண்டல் செய்யுறதே வேலையா போச்சுனு சொல்லுவாங்க. ஆனா அப்பா மத்தவங்கள்ல இருந்து கொஞ்சம் வேறுபட்டவரு. அவரு சொல்ற எந்த விசயமானாலும் அதுல இது தப்பு இது சரினு சொல்லீட்டமுனா அத சரியா புரிஞ்சிக்கிருவாரு. புரிஞ்சிக்கவும் செய்வாரு. புரிஞ்சிக்கிட்ட விசயத்தப் பத்தி மத்தவங்ககிட்ட பேசவும் செய்வாரு. மணியப் பத்தி யோசிக்கும்போது வேந்தனுக்கு மனசுக்குள்ள ஒரு பெரும ஏற்படும். அப்பா மட்டும் படிச்சிருந்தாருனா எப்படியிருக்குமுனு அவனுக்குள்ள எப்பயாவது நெனக்கிது உண்டு. அப்பெல்லாம் அப்பா அவரபத்தி சொன்ன விசயங்கள் அவனுக்கு ஞாபகம் வரும். அஞ்சாப்பு படிக்கிற வரைக்கும் பள்ளிக்கூடம் போனதாகவும்நான் படிச்சப்பயெல்லாம் நான் தான் லீடர். என் கிளாஸ் பசங்க படிக்கலேனா வாத்தியாரு என்னதான் அடிக்கச் சொல்லுவாரு. இந்த ஊருல என் வயசுக்கு இருக்குற நெறய பசங்க எங்கிட்ட அடிவாங்குனவிங்கதான். வேற சாதிக்காரப் பயலுககூட ஏங்கிட்ட அடி வாங்கியிருக்காய்ங்க. அஞ்சாப்பு படிக்கிறப்பதான் நோட்டு புஸ்தகம் கொண்டு வரலனு வாத்தியாரு வீட்டுக்கு வெரட்டி விட்டுட்டாரு. வீட்டுல தாத்தா ஒடம்புக்கு முடியாதவரு. உங்க அபத்தா ஒரு ஆளுதான் வேல பாத்து, பிள்ளைகளுக்குக் கஞ்சி ஊத்தனும். அதோட தாத்தா பண்ணைக்கு இருந்த வீட்டுல என்னையையும் கொண்டு போயி விட்டாங்க. பள்ளிக்குடத்துல ஏங்கிட்ட அடிவாங்குனவந்தான் அங்க எனக்கு முதலாளி. அன்னையோட பள்ளிக்கூடம் பக்கம்கூட போகமுடியாம போச்சு. அப்பயெல்லாம் கஞ்சிக்கே வழியிருக்காது. ஒத்த பொம்பள வேள பாத்து எம்புட்டு பேருக்குத்தான் கஞ்சி ஊத்த முடியும். அப்ப நான் சின்னப்புள்ள எனக்கே கஞ்சி ஊத்த முடியாமத்தான் பண்ணைக்கு விட்டாங்க. இன்னக்கி நீ இந்த அளவுக்குப் படிச்சிருக்கேனா அதுவே எனக்குப் பெரிய விசயம். அப்பா சொன்னத நெனச்சுப் பார்த்துக்கிடுவான் வேந்தன். தம்பிக வர்ராய்ங்களானு பாருப்பா. சீக்கிரமா வந்தாத்தானே ஆளும் பேருமா கொத்திப் போட்டுட்டு போயிடலாமுனு சொல்லிக் கொண்டே வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தார் மணி. ஆமாம்பா, வர்ராய்ங்க, அம்மாவும் சோத்துச் சட்டிய தலையில வச்சிக்கிட்டு பின்னாடியே வர்ராங்கனு தூரத்துல வர்ரவுங்கள கண்டு கூறினான் வேந்தன். இருவரும் கருவ முள்ளத் தோண்டுவதில் மும்மரம் காட்டினர். வரப்புல தெக்கிப் பக்கம் நாணல் மண்டிக் கெடக்கு அதெல்லாம் வெட்டனுமாப்பா? எப்படிப்பா இம்புட்டையும் வெட்டுறதுனு கேட்டான் வேந்தன். இவ்வளவு அடர்த்தியா கெடக்கு, பாம்பு, பூச்சி இருக்குமுள்ளப்பா என்றான். அதைக் கேட்ட மணி நானே இதுக்கு முன்னால ரெண்டு மூனுதடவ நல்ல பாம்பு நானல் பக்கம் பாத்திருக்கேம்பா என்றார். அப்பறம் எப்படித்தான் அந்த நானல வெட்டுறதாம் என அச்சத்துடன் கேட்டான் வேந்தன். ஏம்பா அதெல்லாம் பார்த்தா முடியுமா? இத்தன வருசமா காடு மேடுனுதான் திரியுரோம். பாம்பு பூரான் தேளுனு எத்தனையோ பாத்திருக்கோம். இது ஒரு விசியமாப்பா? இதுக்கெல்லாம் பயந்தோமுனா வய பக்கமே வரமுடியாதுப்பா. எந்த உசிரும் நாம ஒன்னும் செய்யாத வரைக்கும் அது நம்மள ஒன்னும் செய்யாதுப்பா. நாணல ஒரு பக்கமா இருந்து தீய பத்த வச்சிட்டோமுனா எரிஞ்சிடும். தோகையெல்லாம் எரிஞ்ச பின்னாடி மிச்சம் குச்சி மட்டும் நீட்டிக்கிட்டு இருக்கும். அப்புறமா கொஞ்சம் கொஞ்சமா தோண்டி எடுக்கனும்பானு சொன்ன பின்னாடி, அப்படியும் செய்யலாமா? பரவாயில்லயே என்று நினைத்துக் கொண்டு வேலையைத் துவங்கினான் வேந்தன்.