வியாழன், ஜூன் 24, 2021

கடைசிக் கண்ணீர் பாகம் 6

 

எல்லோரும் வந்துட்டாங்க. மணிக்கு மனசுக்குள்ள சந்தோசம். இந்த வருசமாச்சும் வெள்ளாம போட்டு ரேசன் அரிசியிலயிருந்து விடுதல கெடச்சிருமுனு நம்பிக்க வந்துச்சு. நாலு பசங்க நமக்கு ஒத்தாசயா வளந்துட்டாங்கனு நெனைக்கும் போது இன்னும் அவருக்குச் சந்தோசம் தாங்க முடியல. மணியும் சரசும் தோண்டியிருந்தா மூனு நாளு ஆகும். இப்ப பசங்க நாளு பேரு சேர்ந்ததால மூனுநாளு வேல, ஒரு நாளுலயே நெருக்கி முடிஞ்சிரும். இப்ப வெளியில இருந்து ஆறு ஆளுகல வேலைக்கு விட்டா ஒரு ஆளுக்கு ஒரு ஏக்கருல உள்ள கருவ முள்ளுகள வெட்டி எரிய அதுவும் ஏனொதானோனு வேல செய்வாய்ங்க. நமக்கு நாமலே செஞ்சுக்கிறதுனால வேலைக்குக் காசும் மிச்சம். வேலையும் கொஞ்சம் சுத்தமா இருக்கும். இந்தமாதிரி சனி ஞாயிரு லீவு கணக்குப் பன்னித்தான் பயலுகல வய வேலைக்கு இழுக்க முடியும் . மூத்தவன் மட்டுந்தான் படிச்சுப்புட்டு வேலைக்காக வீட்டுல இருக்கான். இளையவன் போட்டோ கடைய வச்சிக்கிட்டு பக்கத்துலயே இருக்கான். அடுத்த ரெண்டும் பள்ளிக்கூடம் போகுது. சனி, ஞாயிறு லீவ விட்டுப்புட்டா, சரசும் மணியுந்தான் கஷ்டப்படனும். இன்னைக்கே நெருக்கி வேல முடிஞ்சிரும். மிச்சம் மீதாரி கெடந்துச்சுனா நாளைக்கு நாம தனியா வந்து தோண்டீரலாமுங்குற பெருமையோட, தோண்டுங்கப்பா, தோண்டுங்கப்பா, இன்னைக்குள்ள எப்படியாச்சும் வேலைய முடிச்சுப்புடனும். இன்னும் கொஞ்ச நேரந்தான் தோண்டீட்டு அப்பறமா சாப்பிட்டுட்டு தோண்டுவோமுனு சொல்லிக்கிட்டே கருவ முள்ளின் வேரை நோக்கிக் கடப்பாரையை குத்தினார். நமக்காக வேலை செய்யுறோம் யாருகிட்டேயும் கூலிக்காக வேல செய்யல.

இந்த வெள்ளாம முடிஞ்சிருச்சுனா நம்ம வீட்டுல கொரஞ்சது ஒரு முப்பது மூட்டை நெல்லாவது அடஞ்சு இருக்கும். நம்ம புள்ளைக இனிமேலும் ரேசன் அரிசி சாப்பிட வேண்டிய அவசியம் இருக்காது. நாமலே அறுத்து, நாமலே அவிச்சு, நாமலே அரச்சு, நல்ல சோறு சாப்பிடப் போறோம். இதுவே நம்ம வாழ்க்கையில கெடச்ச பெரிய வெற்றி. இனி போற காலங்கல்லயாச்சும் கூலிக்குனு இல்லாம நமக்குனு வேல செய்யுற காலம் வருதேனு நெனைக்கும்போது சந்தோசமாதான் இருக்குதுங்கிற பெருயோட ணி கருவமுள்ளு செடிகளை வெட்டுவதில் ஆட்வம் காட்டினார். வெயிலு கொஞ்சம் கொஞ்சமா ஏறிக்கிட்டு இருக்கு. இதுக்கு மேலயும் தொடர்ந்து வெட்டச் சொன்னோமுனா பிள்ளைக பாவம் ரொம்ப அசந்து போயிருவாய்ங்கனு நெனச்ச மணி தலையில கட்டியிருந்த உருமாவ அவுத்து வியர்வையைத் தொடச்சிக்கிட்டு, அப்பா! ஐயா! கரைக்குப் போங்க, சாப்பிட்டு வந்து வெட்டிக்கலாம். வேப்பமரத்து நெழலுக்குப் போங்க. சரசு கெளம்புமா. பிள்ளைக சாப்பிட்டு வந்து வேலைய பாக்கட்டுமுனு சொல்லிக்கிட்டு மரநெழலை நோக்கி சோத்துச் சட்டியத் தூக்கிக்கிட்டு நடக்க ஆரம்பிச்சார்.

கம்மா கரையை ஒட்டி இருக்குற வய இது. மேக்குப் பக்கம் கம்மா இருக்குக, மத்த மூனு பக்கமும் வயலிருக்க, இதுவும் ஒரு தீபகற்ப வயல்தானே. எல்லோரும் கம்மா கறையிலுள்ள வேப்பமர நெழலை நோக்கிப் போனாங்க. கம்மா கரையில நின்னுக்கிட்டு   வயலைத் திரும்பிப் பாத்தா இமயத்திலிருந்து இந்தியாவைப் பாக்குறது மாதிரிதான் இருந்துச்சு மணிக்கு. கரை நல்ல யரம். மலையினு ஒன்னு இருந்தா அதுலயிருந்து நாட்டுக்குள்ள ஆறுனு ஒன்னு ஓடுமு. அப்பனா இந்தக் கம்மாயிலயிருந்து தண்ணி வெளியே வர வாமட எங்கயாச்சும் இருக்கத்தானே செய்யுமுங்குற எண்ணம் வேந்தனுக்குள்ள வந்துச்சு. கம்மாய திரும்பிப் பார்த்தா வரண்டு போயி கெடக்கு. கரை ஓரமா கிளேரியா செடிதான் மண்டிக்கெடக்கு. மத்தபடி அங்கொன்னும் இங்கொன்னுமா கருவ முள்ளு மரமாட்டம் வளந்துகெடக்கு. வாமட எங்க இருக்குனு ஒன்னும் மட்டுப்படல. அப்பாவைப் பாக்குறான் வேந்தன். ஏம்ப்பா இந்தக் கம்மாய்க்கு வாமட எங்க இருக்குனு கேக்க, சாப்பிட ஒக்காந்த மணி வேகவேகமா வேந்தன நோக்கி நடந்து வந்தாரு. இந்த கம்மாய்க்கி தண்ணி வெளியேறதுக்கு ரெண்டு வாமட இருக்குப்பா. ஒன்னு தெக்கிப்பக்கம் இருக்குப்பா, அது வழியா ………பட்டி காரனுங்களுக்கு இன்னும் தன்னி போயிக்கிட்டுதாம்ப்பா இருக்கு. இன்னொன்னு நாம நிக்கிர இடந்தான். நம்ம ஊரு பாசனத்துக்கு வாமட இங்கதான் இருந்துச்சு. கம்மா நெரஞ்சா நம்ம வயக்காட்டு வழியாத்தான் தண்ணி நம்ம ஊரு பக்கம் போகும். பத்து வருசத்துக்கு முன்னாடி வரைக்கும் அப்படித்தான் இருந்துச்சு. இந்த வயகாட்டுக்கு ஆத்துப் பாசானம் தண்ணி வர்ரதுக்கு வழி கிடையாது. ஆத்துத் தண்ணி பாய்ச்சனுமுனா வடக்க ரெண்டு வயக்காட்டுக்கு மேல ஆத்துத் தண்ணி வர்ர வாய்க்கா ஓடுது. அதுலயிருந்து மேவயக்காட்டுக்கு பாச்சி அதுலயிருந்துதான் நம்ம வயக்காட்டுக்குப் பாச்சனும். இந்த வாமட மட்டும் தொறந்திருந்துச்சினா நமக்கு மேவயக்காரன்கிட்ட கெஞ்சனுமுங்குற அவசியமே இருக்காது. …….பட்டி ஆளுக கொஞ்சம் அடாவடித் தனம் பன்னுவாய்ங்க.  எதுக்கெடுத்தாலும் அவனுக சாதித்திமிர காட்டுவாய்ங்க. வருசா வருசம் அவிய்ங்கதான் இந்த கம்மாய குத்தகைக்கு எடுப்பாய்ங்க. ஆத்துல தண்ணி வந்தா போதும் வயலுல உழுகிறதுக்கு தண்ணி வருதோ இல்லையோ. இவிய்ங்க இந்த ஆத்துப்பாசனத்து ஆபீசருக்கு கொடுக்க வேண்டியத கொடுத்து ஒரு வாரத்துக்குள்ள இந்த கம்மாய ரொப்பிடுவாய்ங்க. அதுக்கப்புறம் மீனு குஞ்சு விட்டிருக்கேன். ஒரு மாசம் போனாத்தான் தண்ணி தொரக்க விடுவேண்ணு சொல்லுவாய்ங்க. மீனு வெளிய வராம இருக்குறதுக்கு வலைய கட்டிக்கீங்க, வாமடையில தண்ணிய மட்டும் விடுங்கனு சொன்னா. என்னதான் வலைய கட்டினாலும் மீனு குஞ்சு வெளிய வந்துரும் மீனு குஞ்சு எல்லாம் பெருசா ஆனப்புறம் வேனுமுனா தன்னிய விடுறேன். அதுவரைக்கும் தண்ணி விடமாட்டேனு அடாவடித்தனம் பன்னுவாய்ங்க. கம்மாய குத்தகை எடுக்குரதுக்கு யாருக்கிட்ட எப்படி காசு கொடுப்பாய்ங்கன்னே தெரியாது. ஏலத்துக்கு வராமலே வருசா வருசம் இவய்ங்களுக்கு கம்மா கைக்கு வந்துரும். அப்படி ஒரு தடவ நம்ம ஊரு காரவுங்க அவிய்ங்க இல்லாத நேரத்துல வாமடயில தண்ணிய தொரந்து விட்டுப்புட்டாய்ங்கனு சொல்லிப்புட்டு. அடுத்த வருசமே கம்மாய சுத்தம் செய்யுறோமுங்குற பேருல ஜே.சி.பிய வச்சு மண்ண தோண்டி இந்த வாமடையவே இருந்த இடம் தெரியாம மூடிப்பிட்டாய்ங்க. அன்னையிலயிருந்து இன்னவரைக்கும் இந்த வாமட தொரக்கலப்பா. உள்ள வச்ச தூம்புகூட உள்ளதான் இருக்கும். யாரும் எதுத்துக் கேக்கமுடியல. கேட்டா அடாவடித்தனம் பன்னுவாய்ங்க. நிலம்புலம் வச்சிருக்கோமுங்குற திமிரு. அவிய்ங்க காலங்காலமா சொந்தநிலம் வச்சு வேல வாங்குவிய்ங்க. நாம அன்னாடம் கூலிக்குப் போறவுங்க. இத்தன வருசத்துக்கப்புறம் ஏதோ இந்த வயல ஒத்தி வாங்கி நமக்குனு வேலை செய்ய ஆரம்பிச்சிருக்கோம். நாம அவியிங்ககிட்ட போயி சரிக்குசரி நிக்கமுடியாதுப்பா. மேவயக்காரன்கிட்ட நைசா பேசித்தான் தண்ணிய பாச்சிக்கிறனும். இந்த மடை தொறந்திருந்தா நல்லாதான் இருக்கும். அவிய்ங்க கூடெல்லாம் எதித்து மல்லுக்கு நிக்கனுமுன்னா நாம இன்னும் பெரிய ஆளா வரனும்பானு மணி வாமட அடச்சுக் கெடக்குற வரலா சொல்லிக்கிட்டிருந்தாரு. நம்ம வயலுக்கு வாமட இருக்கும்போது, நாம எதுக்குப்பா அடுத்தவங்ககிட்ட எல்லாம் போயி கெஞ்சிக்கிட்டு இருக்கனும். எவ்வளவு மண்ணுப்பா அள்ளிப் போட்டிருப்பாய்ங்க. நாலுபேரு கடப்பாறையும் வம்பட்டியுமா இரங்குனோமுனா மண்ணெல்லாம் தோண்டிப் போட்டுட்டு வாமட இருக்க எடத்த கண்டு பிடிச்சுரமாட்டோமா? அதுக்கப்புறம் அவிய்ங்க வந்தாய்ங்கன்னா பாத்துக்கிறலாம்பா. கேட்டா கவரமெண்டுல இருந்து ஏற்கனவே இருந்தது இந்த மட ஒன்னும் யாருக்கும் சொந்தமில்லனு சொல்லீருவோம்பானு மடையை திறக்கும் எண்ணத்தைச் சொன்னான் வேந்தன். வேந்தனுக்கு மனசுக்குள்ள இந்த மடைய எப்படியாவது தொறந்தே ஆகனுமுங்குற எண்ணம் வளர ஆரம்பிச்சிருச்சு. எப்படியாச்சும் ஆத்துல தண்ணி வர்ரதுக்குள்ள இந்த மடைய தொறந்தே ஆகனும்பா, நாங்க நாலு பேரு இருக்கோம். நீங்க ஒரு ஆளு இருக்கீங்க. அப்பறம் வேற ஆளு, கீ வயக்காரங்க யாராச்சும் ரெண்டு மூனு பேத்த கூப்பிட்டுக்கிறுவோம். ஆளும் பேருமா தோண்டிப்புடுவோம்பா, இந்த மடைய தொரந்தா இந்தப்பக்கம் இருக்குற எல்லாருக்குந்தானப்பா தண்ணி பாயுமுனு சொல்லி அப்பாவோட சம்மதத்த எதிர்பார்த்துக்கிட்டிருந்தான் வேந்தன். அவன் அவன் சொந்த வயக்காடு வச்சிருக்கவனுங்களே அவிய்ங்கள பகச்சுக்கிறதுக்குப் பயந்துக்கிட்டு கம்முனு கெடக்குறாய்ங்க. நாம ஒத்திக்கு எடுத்துக்கிட்டு அவிய்ங்ககூட மல்லுக்கு நிக்கிறது அவ்வளவு ஒன்னும் நல்லது இல்லப்பா. எதுவா இருந்தாலும் யோசிச்சுத்தான் செய்யனும். எடுத்தோம் கவுத்தோமுனு நாமபாட்டுக்க ஏதாவது செய்யுறோமுனு செஞ்சு, ஏதாவது வம்புல போயி முடிஞ்சிரும்பானு தயங்கினாரு மணி. இதைக்கேட்ட வேந்தன் நாம மட்டும் செஞ்சாதானப்பா பிரச்சன நமக்கு வரும். இந்த வாமடத் தண்ணி யாருக்கெல்லாம் பாயுதோ அவங்களையெல்லாம் கூப்பிடுவோம். எல்லோரும் சேர்ந்து செய்யும்போது அவிய்ங்க வந்து என்ன பன்ன முடியும்? அதுக்கு மீறி வந்தா போலீசுல கம்ப்ளைண்டு பன்னுவோமுனு சொல்லுவோம். அதுக்கு மீறியுமா அவிய்ங்க பிரச்சன பன்னுவாய்ங்க. ஆளும் பேருமா சேர்ந்து பன்னுனா நாமலும் பலசாலிதானப்பா. ஏம்பா பயப்புடுறீங்க என்று மணியை கொஞ்சம் கொஞ்சமாக தன் வாதத் திறமையினால் தன் பக்கம் இழுக்க முயன்றான் வேந்தன்.